Oct 31, 2011

நாம் இப்போது 700 கோடி

Share Subscribe
பலப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அனேகமாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு சத்திரம் இருக்கும். வெளியூர் வாசிகள் இதில் இலவசமாகத் தங்கலாம். உணவும் இலவசமாக வழங்கப்படும்.இப்படியான ஒரு சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சத்திரத்தில் முந்தைய நாள் வந்த 30 பேர் இருக்கிறார்கள். விடிந்ததும் அவர்களில் 20 பேர் சென்றுவிடுகிறார்கள். புதிதாக 20 பேர் வருகிறார்கள். இப்படியாக இருக்குமானால் பிரச்சினை இல்லை. சத்திரத்தில் இருப்போர் எண்ணிக்கை நிலையாக 30 ஆக இருந்து வரும்.



 அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டும்

மாறாக சத்திரத்துக்கு வருவோர் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிற்து. சத்திரத்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைகிறது. அது மட்டுமல்லாமல் சத்திரத்துக்கு வருவோர் மேலும் மேலும் அதிக நாட்கள் தங்குகிறார்கள். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சத்திரத்தை மூட வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.

பூமியில் இப்போது இந்த நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பூமியிலிருந்து ‘மேலே’செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பூமியில் இருப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதால் பூமியில் தங்கியிருப்போரின் அதாவது மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து உலகின் மக்கள் தொகை 1804 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக 100 கோடியை எட்டியது. கடந்த சுமார் 117 ஆண்டுகளில் இது 700 கோடியை எட்டி விட்டது. இதற்கு எவ்வளவோ காரணங்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு. அடிக்கடி நடக்கின்ற போர்களில் எண்ணற்றவர்கள் மடிவர். அதல்லாமல் பிளேக், காலரா, பெரியம்மை, மலேரியா,  ஃபுளு போன்ற ஜுரம் முதலியவற்றால் மரண விகிதம் மிக அதிகமாக இருந்தது. பிரசவத்தின் போது தாய்மார்கள் உயிர் பிழைக்க கடவுளை வேண்டுவோர். பிறக்கின்ற குழந்தைகளில் பலவும் அல்பாயுசாக மரிக்கும். உலகில் ஆங்காங்கு பஞ்சம் ஏற்பட்டு பட்டினிச் சாவுகள் பல லட்சம் பேரின் உயிரைக் குடிக்கும்.

ஐரோப்பாவில் 1348 ஆம் ஆண்டு வாக்கில் தோன்றிய பிளேக் நோயினால் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதம் பேர் மரித்ததாக ஒரு தகவல் கூறுகிறது. மேற்காசிய நாடுகளிலும் இந்த நோய் எண்ணற்றவர்களின் உயிரைக் குடித்தது பிளேக் தாக்குதலால் அப்போது உலகின் மக்கள் தொகை 10 கோடி அளவுக்குக் குறைந்ததாகவும் ஒரு கணக்கு உண்டு.

பஞ்சத்தை எடுத்துக் கொண்டால் 1770 வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வங்கத்தில் (அப்போதைய வங்கம் பரப்பளவில் பெரியது)  ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர்.1943 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் 40 லட்சம் பேர் மடிந்தனர்.முதல் உலகப் போரில் 3 கோடிப் பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் 6 கோடிப் பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒரு கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை தொட்ர்ந்து குறைந்து வந்தது. 1900 ஆம் ஆண்டில் 27 கோடியே 13 லட்சமாக இருந்த மக்கள் தொகை1907 ஆம் ஆண்டு வாக்கில் 26 கோடியே 35 லட்சமாகக் குறைந்தது. 1923 ஆம் ஆண்டில் இது 25 கோடியே 76 ல்ட்சமாக மேலும் குறைந்தது.
 வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம்

இப்போது பிளேக், பெரியம்மை, மஞ்சள் ஜூரம் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்ட்ன. இந்தியா உட்பட உலகெங்கிலும் பொதுவில் மருத்துவ வசதிகள் அதிகரித்து வருகின்றன.ஓரிடத்தில் உணவுப் பற்றாக்குறை என்றால் பிறவிடங்களிலிருந்து உணவு விரைகிறது.பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பது பெரிதும் குறைந்து விட்டது. குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன். வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது.

உலகின் மொத்த மக்கள் தொகை அதிகரித்து வந்த போதிலும் உலகில் சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிற்து.பெலாரஸ்,பல்கேரியா, கிரீஸ்,ஹங்கேரி, ஜப்பான், ரஷியா, உக்ரேயின் முதலான நாடுகள் இதில் அடங்கும்.

மக்கள் தொகை சமாச்சாரத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் சதவிகிதம் அதிகமாகவும் உழைக்கும் வயதினரின்(20 முதல் 60 வயது ) சதவிகிதம் குறைவாகவும் இருந்தால் பிர்ச்சினையே. நல்ல வேளையாக இந்தியாவில் அப்படி இல்லை.  இன்னொரு பிரச்சினை மக்கள் அடர்த்தி.  ஒரு நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு உண்டு. அது தான மக்கள் அடர்த்தி.

இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 368 பேர் வீதம் வாழ்கிறார்கள். சீனாவில் இது 140. வங்க தேச்த்தில் இது 988. வங்கதேச்த்தின் வறுமை நிலைக்கு   இது தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிங்கப்பூரில் இது 7148.ஆனால் சிங்கப்பூர் செல்வம் கொழிக்கும் நாடாக உள்ளது.

ஒரு நாடு என்றால் அந்த நாட்டின் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. அவையல்லாமல் சுகாதார வசதி, போக்குவரத்து வசதி,தகவல் தொடர்பு வசதி, கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் தேவை

 நாம் இருவர் நமக்கு இருவர் 
. வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கின்ற நிலைமை இருக்க வேண்டும்.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகுமானால் எந்த அரசினாலும் அனைத்து வசதிகளையும் செய்து தர இயலாது.
இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளாக  குடும்பக் கட்டுப்பாடு இயக்கம் ந்டந்து வருகிறது. கருத்தடை செய்து கொள்ள அரசே பல வசதிகளை செய்துள்ளது.க்ருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. நல்லவேளையாக இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மிகவும் முற்போக்கானவர்கள்.
நல்ல விஷயங்களுக்கு மூடத்தனமான எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களும் அரசுடன் ஒத்துழைப்பதால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் (மக்கள் தொகை அல்ல) குறைந்துள்ளது. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பலன்கள் தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது.

வட மானிலங்கள் பலவற்றில் அப்படி இல்லை. ஆகவே தான் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஆண்டு தோறும் ஒரு கோடியே 70 பேர் இந்தியாவில் வந்து இறங்கினால் எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு என்ன?

’நாம் இருவர் நமக்கு இருவர்’ கோஷம் தான். நிபுணர்கள் இதை Total Fertility Rate (TFR) என்பார்கள். இந்தியாவில் தேசிய அளவில் தற்போது இது 2.6 ஆக உள்ளது. இதை 2.1 ஆகக் குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். தமிழகத்திலும் கேரளத்திலும் இது 1.7 ஆக இருக்கிற்து. ஆந்திரத்தில் 1.8 ஆனால் உத்தரப்பிரதேச்ம் (3..8) பிகார் (3.9) மத்தியப் பிரதேசம் (3.3) ஆகியவற்றில் மிக அதிகமாக உள்ளது.
 ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மாறுமா?

இவ்வித நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 2055-60 வாக்கில் 165 கோடியாக உயர்ந்து அதன் பிறகு ஸ்திர நிலைக்கு வரும் என்று கருதப்படுகிறது. ஸ்திர நிலை என்றால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்காமல் அதே நிலையில் இருந்து வரும் என்று பொருள்.

 உலகின் மக்கள் தொகை அக்டோபர் 31 ஆம் தேதி 700 கோடியை எட்டும் என்று ஐ. நா.சபையின்  மக்கள் தொகைப் பிரிவு கூறியுள்ளது.அன்றைய தினம் உலகில் ஏதோ ஒரு நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறக்கும்.ஒரு வேளை அக்குழந்தை இந்தியாவில் பிறக்கலாம்.

உலகின் மக்கள் தொகை 2050 வாக்கில் 930 கோடியாக உய்ர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிற்து. உலகின் மக்கள் தொகை எப்போது ஸ்திர நிலையை எட்டும்? அது ஆப்பிரிக்க நாடுகளின் கையில் உள்ளது. ஏனெனில் சுமார் 20 ஆப்பிரிக்க நாடுகளில் TFR  ஐந்துக்கும் அதிகமாக உள்ளது.எதிர்காலத்தில் இந்த நாடுகளிலும் இந்த விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

Oct 30, 2011

வியாழனை கிழக்கு வானில் காணலாம்

Share Subscribe
"வியாழன் கிரகத்தைப் பூமியிலிருந்து இன்று காணலாம்" என அண்மையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ’ பூமிக்கு அருகில் வியாழன் வந்துள்ளதாகக்’ கூறியது .இப்படியாக வியாழன் கிரகம் பத்திரிகைகளில் அடிபட்டது.

உள்ளபடி வியாழன் கிரகத்தை வருகிற நாட்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கிழக்குத் திசையில் காணலாம். அஸ்தமன சமயத்தில் மட்டுமே தெரியும் என்று நினைத்து விட வேண்டாம். இரவில் விடிய விடிய் எப்போது வேண்டுமானாலும் காணலாம். இரவு ஆக ஆக வியாழன் வானில் உச்சிக்குப் போய்விடும்.



வானில் வியாழன் பெரிய ஒளிப் புள்ளியாகத் தெரியும். ஆனால் நட்சத்திரம் போல ஜொலிக்காது. காரணம் வியாழனுக்கு சுய ஒளி கிடையாது.   அலுமினியத் தகட்டின் மீது ஒளி பட்டால் அந்த ஒளியை அலுமினியம் பிரதிப்பலிப்பதைப் போலவே கிரகங்கள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கின்றன். நட்சத்திரங்களுக்கு சுய ஒளி உள்ளதால் வானில் அவை ஜொலிக்கின்றன.

இரவு வானில் நாம் வெறும் கண்ணால பார்க்கக்கூடிய ஐந்து கிரகங்களில் வெள்ளி (சுக்கிரன்) மட்டுமே மிகப் பிரகாசமாகத் தெரியக்கூடியதாகும்.. வியாழன் அடுத்த இடத்தை வகிக்கிறது. செவ்வாய் மூன்றாவது இடம்.சனி கிரகத்தையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். புதன் கிரகம் எளிதில் தென்படாது. யுரேனஸ்,  நெப்டியூன் ஆகியவற்றை டெலஸ்கோப் மூலமே காண முடியும்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது.வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு.வியாழன் கிரகத்தைப் பெரிய பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதனுள் 1300 பூமிகளைப் போட்டு அடைத்து விடலாம். இதிலிருந்து வியாழன் எவ்வளவு பிரும்மாண்டமானது என்பதை உணரலாம்.

பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் உள்ளது.வியாழன் கிரகத்துக்கு 64 சந்திரன்கள் உள்ளன. இவற்றில் நான்கு தான் பெரியவை.மற்ற அனைத்தும் மிகவும் சிறியவை.
  இடது புறம் வியாழன் கிரகம். அருகே உள்ளது பூமி

வியாழன் கிரகம் ஒரு பெரிய பனி உருண்டை. வியாழன் சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதால் சூரியனின் வெயில் வியாழனில் உறைக்காது. ஆகவே தான் எல்லாமே உறைந்து வியாழன் பனிக்கட்டி உருண்டையாக இருக்கிறது. வியாழனை நெருங்கி ஆராய ஆளில்லா விண்கலங்கள் பலவும் அனுப்பப்பட்டு வியாழ்னைப் பற்றி நிறைய தகவலகள் பெறப்பட்டுள்ளன.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் உள்ளன். வானை நாம் 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துள்ளதால் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வருகையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசியாகக் கடந்து வரும். இதைத் தான் குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.   வியாழன் இப்போது மேஷ ராசியில் உள்ளது ( சூரியன் துலா ராசியில் உள்ளது)

அக்டோபர் 29 ஆம் தேதியன்று பூமி நடுவே இருக்க வியாழன், பூமி, சூரியன் ஆகியவை நேர்கோட்டில் அமைந்திருந்தன. அதாவது வியாழன் எதிர்மானத்தில் (Opposition) உள்ளது. இப்படி அமைந்துள்ள நிலைமைகளில் வியாழன் கிரகத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரம் மற்ற சமயங்களை விடக் குறைவாக இருக்கும்.
 படத்தில் பிற கிரகங்கள் காட்டப்படவில்லை
Not to scale


 மாறாக சூரியன் நடுவே அமைந்திருக்க பூமி, சூரியன், வியாழன் ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்குமானால் வியாழன் கிரகம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்.

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர். வியாழன் கிரகம் இப்போது பூமியிலிருந்து  இதைப் போல சுமார் 4 மட்ங்கு தொலைவில் உள்ளது. அதாவது பூமியிலிருந்து வியாழன் இப்போது சுமார் 60 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

நீங்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிற்கு கிழக்கு வானில் வியாழனைப் பார்த்து விட்டு மேற்குத் திசையை நோக்கினால் வெள்ளி கிரகம் தெரியலாம். அக் கிரகம் சுமார் 8 மணி வாக்கில் மேற்கே அஸ்தமித்து விடும் என்பதால் அதற்கு முனபாக மேற்கு வானைக் கவனிக்க வேண்டும். இப்போது மேற்கு வானில் மிகப் பிரகாசமாக இருப்பது அது ஒன்றுதான்.

Oct 29, 2011

ஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க

Share Subscribe
 எலெனின் சென்ற பாதை 
எலெனின் வால் நட்சத்திரம் அழிந்து தூள் தூளாகி விட்டது. இனி கவலையில்லை என்று அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பு அக்டோபர் 25 ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஒரு சிறிய வால நட்சத்திரம் அழிந்ததை ஒரு பெரிய விஷயமாகக் கருதி நாஸா ஏன் இப்படி அறிவிப்பை வெளியிட்டது? ’எலெனின்(Elenin) வால் நட்சத்திரத்தை இனி மறந்து விடுங்கள்’ என்றும் நாஸா(NASA) கூறியது ஏன்?

 இதே இந்த வால் நட்சத்திரம் பூமியைத் தாக்கி பெரு நாசத்தை உண்டாக்கப் போவதாகவும் இந்த வால் நட்சத்திரம் தாக்குவதால் மனித குலமே  அழியப்போவதாகவும் மேற்கத்திய நாடுகளில் ஒரு கும்பல் அபாயச் சங்கு ஊதி வந்தது. ‘மனித குலம் அழியப் போகும் தேதி வந்தாச்சு’ என்று அடிக்கடி பீதி கிளப்புகிற அதே கும்பல் தான் இப்படி ஒரு பெரும் புரளியைக் கிளப்பி விட்டது.

விஷயம் தெரியாத பலர் இப்புரளியை நம்பி வந்தனர் என்ற காரணத்தால் தான் நாஸா ‘இனி கவலையில்லை’ என அறிவிப்பு விட வேண்டி வந்தது.எலெனின் வால் நட்சத்திரம் ஆகஸ்ட் கடைசி வாக்கிலேயே உடையத் தொடங்கியது. வானில் அந்த வால் நட்சத்திரம் இருக்க வேண்டிய இடத்தை அண்மையில் படம் எடுத்த போது வால் ந்ட்சத்திரம் அழிந்ததால் ஏற்பட்ட நுண்ணிய துகள்கள் மெல்லிய புகைப்படலமாகக் காட்சியளித்தன்

எலெனின் அழியாமல் இருந்திருக்குமானால் அக்டோபர் 16 ஆம் தேதி அதற்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மூன்றரைக் கோடி கிலோ மீட்டராக இருந்திருக்கும். அந்த வால் நட்சத்திரம் அழிந்து போயிருந்தாலும் எதிர்காலத்தில் அதன் நுண்ணிய துணுக்குகள் தேனீக் கூட்டம் போல அதே பாதையில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும்.

எலெனின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி  
 சூரியனை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் இந்த வால் நட்சத்திரத்தின் அழிவு எப்படி நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து சூரியனில் அவ்வப்போது சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்விதமான ஒரு சீற்றத்தின் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அதி வேகத்தில் வெளிப்படும். இப்படியான ஒரு சீற்றத்தின் போது இந்த வால் நட்சத்திரம் அத்துகள்களால் தாக்கப்பட்டு அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வால் நட்சத்திரம் என்பது கல், மண் பாறை, பனிக்கட்டி உருண்டை போன்றவற்றால் ஆனது. பொதுவில் ஒரு வால் நட்சத்திரம் பனிக்கட்டி உருண்டையே. வால் நட்சத்திரம் ஒன்று சூரிய மண்டல எல்லைக்கு அப்பாலிருந்து சூரியனை நோக்கி வரும். அப்படி வரும் போது ‘சூரியக் காற்று’ என்று சொல்லப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் தாக்கி வால் நட்சத்திரத்திலிருந்து நுண்ணிய துகள்கள் பின்னோக்கி வெளியே தள்ளப்படும்.
 எலெனின் செப்டம்பர் முதல் தேதி

இந்த நுண்துகள்கள் மீது சூரிய ஒளி படும் போது அவை வால் போன்று காட்சி அளிக்கும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி முடித்த பின்னர் வந்த இடம் நோக்கி திரும்பிச் செல்லும். கடந்த காலத்தில் சூரியனை நெருங்குகையில் பல வால் நட்சத்திரங்கள் உடைந்துள்ளன; அல்லது ஏராளமான பொருளை இழந்து சிறுத்துப் போயுள்ளன.

அருகே வலது புறம் உள்ள படத்தை உற்று கவனித்தால் எலேனின் வால் நட்சத்திரம் மெல்லிய படலமாகத் தெரியும். எலெனின் சிதைந்து உருக்குலைந்து போனதை இது காட்டுவதாகச் சொல்லலாம்.

ஒரு வால் நட்சத்திரத்தை சிதைக்க சூரியன் கூடத் தேவையில்லை.சூரியனை நோக்கி வருகையில் வியாழன் கிரகத்தைத் தாண்டி வரும் போது அக்கிரகத்தின் ஈர்ப்பு சக்தி காரணமாக இரண்டாக உடைந்து போன வால் நட்சத்திரங்கள் உண்டு.

பூமியைத் ‘தாக்க வரும்’ எலெனின் வால் நட்சத்திரம் உண்மையில் வால் நட்சத்திரமே அல்ல என்றும் அது நிபுரு என்னும் பெயர் கொண்ட கிரகம் என்றும் மனித குலத்துக்கு மரணத் தேதி அறிவித்தவர்கள் கதை கூறி வந்தனர். கடைசியில் கட்டுகதை தகர்ந்து போய்விட்டது. 2012 ஆம் ஆண்டில் மனித குலம் அழிந்து விடும் என்று சொல்லப்படுவது இது முதல் தடவை அல்ல.

படத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரிவது ஒரு நட்சத்திரம்
அதற்கு மேலே மங்கலாகத் தெரிவது தான் எலெனின்
வால் நட்சத்திரம் இருந்த இடம்
கடந்த காலத்தில் இப்படியாகச் சொல்லப்பட்ட தேதிகள் எவ்வளவோ. இவ்விதமாக ஆண்டு அல்லது தேதி நிர்ணயிப்பவர்கள் அனைவருமே மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்தியப் புராணப்படியும் இப்போது நடக்கின்ற கலியுகம் முடிந்த பின்னர் உலகமே அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. ’பாம்பு’ பஞ்சாங்கப்படி கலியுகம் முடிய சரியாக இன்னும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 888 ஆண்டுகள் உள்ளன. ஆகவே கவலை வேண்டாம்.

Oct 28, 2011

அமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா

Share Subscribe


கிராமப்புறங்களில் ஆட்டுக் கிடா சண்டை நடத்துவது உண்டு. சண்டை போடுவதற்கென்றே பழக்கப்பட்ட ஆடுகள் பயங்கரமாக மோதும். விஞ்ஞானிகளும் இப்படியான மோதல்களை நடத்துகின்றனர்.

ஒரு பெரிய வித்தியாசம். இப்படி ஒன்றோடு ஒன்று மோதுவது கண்ணுக்கே தெரியாத -- அணுவையும் விடச் சிறியதான துகள்கள். 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் உருவான போது இருந்த நிலைமை என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த மோதல் ஆராய்ச்சி.

 பாதாள சுரங்கத்தின் ஒரு காட்சி
அணுத் துகள்களை விரட்டோ விரட்டு என்று விரட்டினால் அவை தானே எதிரும் புதிருமாக வந்து மோதும். இதற்கான யந்திரத்தை அமெரிக்காவில் எர்னஸ்ட் லாரன்ஸ் 1930 களில் உருவாக்கினார். இந்த யந்திரத்துக்கு துகள் விரட்டி, துகள் முடுக்கி, அணு உடைப்பான் என்றெல்லாம் பெயர் உண்டு.

லாரன்ஸ் துகள் விரட்டியை உருவாக்கியதற்குப் பிறகு மேலும் மேலும் சக்தி வாயந்த துகள் விரட்டிகள் நிறுவப்பட்டன. அவற்றில் முக்கியமானது தான் டெவாட்ரான் (Tevatron). ஒரு காலத்தில் இது உலகிலேயே சக்தி வாய்ந்த துகள் விரட்டியாகத் திகழ்ந்தது.அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகே பெர்மிலாப் என்று ஒரு பெரிய ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாக டெவாட்ரான் விளங்கியது.

துகள் விரட்டி விஷயத்தில் எல்லாமே பிரும்மாண்டம் தான். டெவாட்ரான் முழுக்க முழுக்க பாதாளத்தில் தான் அமைந்திருந்தது. படத்தில் வட்ட வடிவில் இரு வளையங்களைக் காணலாம். இதற்கு அடியில் நல்ல ஆழத்தில் வட்ட வடிவிலான சுரங்கப் பாதைகள் உள்ளன்.
துகள்கள் மோதலைப் பதிவு செய்து
ஆராய்வதற்கான யந்திரங்கள்

புரோட்டான் எனப்படும் அணுத் துகள் ,  எதிர் புரோட்டான் துகள் ஆகிய இரண்டையும் மோத விடுவதற்குத் தான் இந்த சுரங்கப்பாதைகள். புரோட்டான் நேர் மின்னேற்றம் கொண்டது. எதிர் புரோட்டான் எதிர் மின்னேற்றம் கொண்டது. இவற்றைத் தனித்தனியே உற்பத்தி செய்ய பெரிய கருவிகள் உண்டு.

 பின்னர் பாதாள சுரங்கத்தில் இவை பயங்கர வேகத்தில் எதிர் எதிராகச் சுற்றிச் சுற்றி வரும்படி செய்யப்படும். சுரங்கப்பாதையின் இரு புறங்களிலும் கடும் குளிர் நிலையில் உள்ள மின் காந்தங்கள் இத் துகளகளை விரட்டோ விரட்டு என்று விரட்டும். குறிப்பிட்ட கட்டத்தில இந்த இரு வகை அணுத் துகள்களும் பயங்கர வேகத்தில் மோதும். அப்போது மிகுந்த சக்தி வெளிப்படும்.

 துகள் மோதலின் போது
இவ்விதமான படங்களை
எடுத்து ஆராய்வர்
ஐன்ஸ்டைனின் தத்துவப்படி பொருள் என்பது சக்தியாக மாறும். அது போலவே சக்தி என்பது பொருளாக மாறும்.  துகள் மோதல்களின் போது தோன்றும் ச்க்தியானது மிக நுண்ணிய புதிது புதிதான துகள்களாக வடிவெடுக்கும். தோன்றிய சில கணங்களில் இத் துகள்கள் மறைந்து விடும். இத் துகள்களைப் படம் எடுத்து அவற்றை ஆராயும் பணியில் தான் டெவாட்ரா ன்விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். டாப் குவார்க் என்னும் அடிப்படைத் துகள் ஒன்றை டெவாட்ரான் 1995 ல் கண்டுபிடித்தது. இது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

துகள் மோதல்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றை மிக நவீன காமிராக்களைக் கொண்டு படம் எடுக்கவும் டெவாட்ரானில் பல ஆள் உயரம் கொண்ட ராட்சத யந்திரங்கள் இருந்தன.

சுமார் 25 ஆண்டுக்காலம் துகள் மோதல் ஆராய்ச்சியில் தலையாய இடம் பெற்றிருந்த டெவாட்ரான் செப்டம்பர் 30 ஆம் தேதி மூடப்பட்டு விட்டது. இதை மேலும் மூன்று ஆண்டுகள் இயக்கப் போதுமான பணம் ஒதுக்க இயலாது என அமெரிக்க அரசு கைவிரித்து விட்டது என்பது இதற்கான முக்கிய  காரணமாகும். டெவாட்ரானை விடப் பல மடங்கு சக்தி கொண்ட ஆராய்ச்சிக்கூடம் ஒன்று ஐரோப்பாவில் ஜெனீவா அருகே நிறுவப்பட்டு அது முதலிடத்தைப் பெற்று விட்டது என்பதும் ஒரு காரணமாகும்.

ஜெனீவாவில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய CERN  எனப்படும் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகும் டெவாட்ரான் வளையத்தின் சுற்றளவு 6.3 கிலோ மீட்டர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூட வளையத்தின் சுற்றளவு 27 கிலோ மீட்டர். அடிப்படைத் துகள்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இப்போது இங்கு பெரிய அளவில்  துகள் மோதல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

Oct 27, 2011

தியாகராஜாவில் விசித்திரப் பள்ளங்கள்

Share Subscribe
புதன் கிரகத்தில் ஓரிடத்தின் பெயர் தியாகராஜா.அங்கும் சரி, பிற இடங்களிலும் சரி, விசித்திரப் பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைக் கண்டுபிடித்தது. இவை எப்படித் தோன்றின என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிராக உள்ளது.

புதன் காய்ந்து வற்றலாகிப் போய்விட்ட கிரகம். பூமியுடன் ஒப்பிட்டால் அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதல்லாமல் புதன் கிரகத்தில் தொடர்ந்து 88 நாட்கள் பகல். ஆகவே பகலாக உள்ள இடத்தில் வெப்பம் அதிகபட்சம் 450 டிகிரி செண்டிகிரேட். இரவாக உள்ள இடத்தில் குளிர் மைனஸ் 170 டிகிரி செண்டிகிரேட்.
புதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர்.
ஓவியர் வரைந்த படம்

 புதன் காய்ந்து பொசுங்கிப் போன பொட்டல். ஏதோ ஒரு காலத்தில் எண்ணற்ற விண்கற்கள் வந்து தாக்கியதால் ஆங்காங்கு வட்ட வடிவில் பெரும் பள்ளங்கள் உள்ளன். கோடானு கோடி ஆண்டுகளாக புதன் கிரகம் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்து வருகிறது.

மாற்றம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட புதன் கிரகத்தின் பாறைகளில் இப்போது பள்ளங்கள் காணப்படுகின்றன என்பது தான் புது விஷயமாகும். இவை விண்கற்கள் தாக்கிய காலகட்டத்தில் ஏற்பட்டவை அல்ல. நிச்சயம் பின்னர் ஏற்பட்டவையே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புதன் கிரகத்தில் காற்று கிடையாது. மேகம் கிடையாது. மழை என்பதே இல்லை. ஆகவே நிச்சயம் நீர் அல்லது காற்றினால் இப்பள்ளங்கள் தோன்றியிருக்க முடியாது.

தியாகராஜாவில் உள்ள பள்ளங்கள் 
பொதுவில் இப்பள்ளங்கள் 18 மீட்டர் முதல் 1600 மீட்டர் குறுக்களவு கொண்டவையாக உள்ளன. ஆழம் சுமார் 20 மீட்டர் முதல் 36 மீட்டர் வரை உள்ளன. பாறைகளில் இப்படியான பள்ளங்கள் எப்படி ஏற்பட்டன என்பது தான் கேள்வி.விண்கற்கள் தாக்குவதால் ஏற்படும் வட்ட வடிவப் பள்ளங்களின் நட்ட நடுவே பொதுவில் குன்றுகள் காணப்படும் (சந்திரனில் இப்படி உண்டு).

 இக்குன்றுகள் விண்கல் தாக்கும் போது புதன் கிரகத்தின் உட்புறத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட பொருட்களால் ஆனவை. இவை மிக கெட்டியாக இருப்பதில்லை. அத்துடன் கந்தகம் போன்று எளிதில் ஆவியாகக் கூடிய பொருட்களால் ஆனவை.

புதனில் வீசும் கடும் வெப்பம், அத்துடன் சூரியலிருந்து வெளிப்படும் சூரியக் காற்றின் தாக்குதல் ஆகியவை காரணமாக அங்குள்ள பாறைகளிலிருந்து ஆவியாகும் பொருட்கள் வெளியேறி இருக்க வேண்டும். இதனால் புரையோடிப் போய் திடமிழந்த பாறைகள் தளர்ந்து உள்ளே இறங்கியிருக்க வேண்டும். இவ்விதமாகத் தான் பாறைகளில் பள்ளங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

புதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

  விசித்திரப் பள்ளங்களைக் காட்டும் இன்னொரு
படம். மெசஞர் எடுத்தது.
மெசஞ்சர் கடந்த மார்ச் மாதம் முதல் புதன் கிரகத்துக்கு மேலாக அமைந்தபடி சுற்றிச் சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய எண்ணற்ற விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ள அதே நேரத்தில் புதன் கிரகத்தை ஆராய ஒரு விண்கல்ம அனுப்பப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

புதன் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள எல்லா இடங்களுக்கும் நிபுணர்கள் பெயர் வைத்துள்ளனர்.அங்குள்ள வட்ட வடிவப் பள்ளங்கள் சிலவற்றுக்கு ஆண்டாள், தியாகராஜா, காளிதாசா, அசுவகோஷா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Oct 26, 2011

வானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’

Share Subscribe

 நீங்கள் மேலே காண்பது சூரியக் கப்பல் எனப்படும் அபூர்வமான விமானம் ஆகும்.  எந்த எரிபொருளும் இல்லாமல் பறந்து செல்லக்கூடியது. ஆனாலும் இது வழக்கமான விமானம் அல்ல. ஏனெனில் இதற்கு இறக்கைகள் கிடையாது. இறக்கைகள் இல்லாமல் எந்த விமானமும் பறக்க இயலாது. இது ஹெலிகாப்டரும் அல்ல - ஹெலிகாப்டருக்கு தலைக்கு மேலே சுழல் விசிறிகள் உண்டு.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு ஆகாயக் கப்பல் என்ற வான் வாகனம் இருந்தது. அது காற்றை விட லேசான வாயு நிரப்பப்பட்டது. சூரியக் கப்பலும் அந்த மாதிரியில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டதாகும். இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பலின் பெயரில் ’கப்பல்’என்ற சொல் ஒட்டிக்கொண்டுள்ளது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாக இருக்கிறது.
 சூரியக் கப்பலின் மேற்புறம்
   
சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவும் மோட்டார்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் பிரிட்ஜ் இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.

 சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று மாடல்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய மாடல் ஒரு டன் சரக்கு ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய மாடலில் 30 டன் அளவுக்கு சரக்கு ஏற்றிச் செல்லலாம்.


பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். தவிர, தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு - விமானமோ, ஹெலிகாப்டரோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் ஆப்பிரிக்காவில் மருந்து சப்ளை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.

சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது. சிறிய மாடல் இந்த ஆண்டுக் கடைசிக்குள்ளாகக் களத்தில் சோதிக்கப்படும்.

Oct 24, 2011

அது ஒரு பூகம்ப நாடு

Share Subscribe
இது துருக்கி நாட்டின் மேப்.  இப்ப்டத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் கடும் பூகம்ப ஆபத்து கொணடவை. 
துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் அக்டோபர் 23 ஆம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பூகம்பத்தின் ரிக்டர் அளவு 7.2. இக்கடும் பூகம்பத்துக்குப் பிறகு அந்த வட்டாரத்தில் அடுத்தடுத்து லேசான நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

உலகில் கடும் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்று. அதிலும் துருக்கியின் மலைப்பாங்கான கிழக்குத் துருக்கியில் கடந்த காலத்தில் எவ்வளோ பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

  அனடோலிய்ன் பிளேட் எனப்படும் சில்லு மீது துருக்கி அமைந்துள்ளது
துருக்கி நாடானது அனடோலியன் சில்லு மீது அமைந்துள்ளது. அனடோலியன் சில்லுக்கு வடக்கே யுரேசியன் சில்லும், தெற்கே அராபியன் சில்லும் உள்ளன. தெற்கே உள்ள அராபியன் சில்லு வடக்கு  நோக்கி நெருக்குவதால் அனடோலியன் சில்லு மேற்கு நோக்கி பிதுக்கப்படுகிறது.

அனடோலியன் சில்லுக்கு மேலேயும் கீழேயும் அடி நிலப் பாறைகளில் மிக நீண்ட விரிசல்கள்(Faults) உள்ளன. இவை கிழக்குக் கோடியில் கூடுகின்றன. இந்த இடத்தில் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்கின்றன் - 1903 முதல் 1998 வரையிலான ஆண்டுகளில் மட்டும் துருக்கியில் 65 பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை என்று சொல்வதுண்டு. இடிந்து விழும் கட்டடங்கள் தான் உயிர்ப்பலி வாங்குகின்றன என்பதை இவ்விதம் கூறுகிறார்கள். கடும் பூகம்பத்தையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டடங்களைக் கட்டுவதில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. துருக்கியில் பழங்காலப் பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்னும் நிறையவே உள்ளன.

 இப்படத்தில் புள்ளிகளாகக் காண்பவை கடந்த காலத்தில்
பூகம்பன் நிகழ்ந்த இடங்களாகும்

பூகம்ப ஆபத்தைக் கருதி துருக்கி அரசில் இதற்கென்றே தனி இலாகா உள்ளது. அண்மைக் காலமாக கட்டுமான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் நகராட்சிப் பிராந்தியங்களில் மட்டுமே அமலாகின்றன. கிராமப்புறங்களில் அப்படி இல்லை.வெயிலில் காய வைத்த செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் பலவும் உண்டு.

துருக்கியில் நிகழும் பூகம்பங்களில் பல சமயம் கடும் குளிர் பிரச்சினையும் சேர்ந்து மக்களை வாட்டும். வீடிழந்தவர்கள் திறந்த வெளியில், கடும் குளிரில் தவிக்க நேரிடும். இப்போது கிழக்குத் துருக்கியின் வான்(Van) மாகாணத்தில் கடும் பூகம்பம் நிகழ்ந்த எர்சிஸ் நகர் பகுதியில் குளிர் 4 அல்லது 5 டிகிரி செண்டிகிரேட் அளவில் உள்ளது.

துருக்கியின் மேற்குப் பகுதியிலும் கடந்த காலத்தில் கடும் பூகம்பங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன. 1999 ஆம் ஆண்டில் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் சுமார் 18,000 பேர் உயிரிழந்தனர்.

சில்லுப் பெயர்ச்சி பற்றி மேலும் படிக்க: சிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்

Oct 23, 2011

பூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்

Share Subscribe
அஸ்டிராய்ட் ஒன்று பூமி இருக்கின்ற திசையை நோக்கி இப்போது வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது பூமியின் மீது மோத வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் தெளிவுபடக் கூறியிருக்கிறார்க்ள.வருகிற நவம்பர் 9ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு அது பூமியை மிக அருகாமையில் கடந்து செல்லவிருக்கிறது.

  இபபடத்தின் மீது கிளிக் செய்தால் அஸ்டிராய்ட் YU55
எவ்விதமாகக் கடந்து செல்லும் என்கிற அனிமேஷன்
 படத்தைக் காணலாம். .படம்: நன்றி JPL/NASA

அக்கட்டத்தில் அந்த அஸ்டிராய்ட் பூமியிலிருந்து 3,25,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைக் காட்டிலும் குறைவு. அஸ்டிராய்ட் ஒன்று பூமிக்கு மிக அருகில் வருவது என்பது அபூர்வமே.

சூரிய மண்டலத்தில்அஸ்டிராய்டுகள்
சுற்றும் பாதை
அந்த அஸ்டிராய்டின் பெயர் 2005 YU55. அஸ்டிராய்டுகளுக்கு இப்போதெல்லாம் எண்களையும் எழுத்துக்களையும் பெயர்களாக வைக்கின்ற வழக்கப்படி அதற்கு YU55 என்று பெயர் வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் அதையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதன் குறுக்களவு வெறும் 400 மீட்டர். ஆகவே அளவை வைத்து இந்த அஸ்டிராய்டை ’பறக்கும் குன்று‘ என்று வர்ணிக்கலாம்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் நடுவே லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் கிரிவலம் வரும் பக்தர்களைப் போல கும்பல் கும்பலாக சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றைக் குட்டி கிரகங்கள் (Minor Planets)  என்றும் வர்ணிப்பதுண்டு. இந்த அஸ்டிராய்ட் கும்பலிலிருந்து வழி மாறி எண்ணற்ற அஸ்டிராய்டுகள் தனிப் பாதை அமைத்துக் கொண்டு சூரியனை சுற்றுகின்றன. அப்படி வழி மாறிய அஸ்டிராய்டுகளில் 2005 YU55 அஸ்டிராய்டும் ஒன்று.

அஸ்டிராய்ட் 2005 YU55
வழி மாறிய அஸ்டிராய்டுகள் செவ்வாய், பூமி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் குறுக்காக கடந்து சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன. இவ்விதம் பூமியின் சுற்றுப்பாதையைக் கடக்கும் போது தான் அவை பூமிக்கு அருகாமையில் வருகின்றன.இப்படிக் கடக்கும் போது இவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு வேளை பூமியில் மோத வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே தான் அமெரிக்காவின் நாஸா அமைப்பு இதே வேலையாக பூமிக்கு ஒரு வேளை ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அஸ்டிராய்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து சுற்றுப்பாதை உட்பட அவை பற்றிய விவரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய கணக்குப்படி 1256 அஸ்டிராய்டுகள் இவ்விதம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை 100 மீட்ட்ருக்கும் மேலான குறுக்களவைக் கொண்டவை.

   
 நீல நிறத்தில் உள்ளது YU55 அஸ்டிராய்டின்
சுற்றுப்பாதை
அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் (ரஷியா) இடையே 1990 வரை கடும் விரோதப் போக்கு நீடித்து வந்தது.

வானில் சோவியத் யூனியன் செலுத்தும் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக அப்போது அமெரிக்கா நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உருவாக்கியது.

அமெரிக்கா-ரஷியா இடையிலான விரோதம் நீங்கிய பின்னர் அஸ்டிராய்டுகளைக் கண்காணிக்க இவை உதவலாயின. அமெரிக்கா இத்துறையில் மேலும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

Oct 22, 2011

சூரியனின் முகத்தில் கரும்புள்ளிகள்

Share Subscribe
சூரியனின் முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.  அவ்வப்போது அது தனது சீற்றத்தைக் காட்டுகிறது. சூரியனுக்கு இது கோபாவேச சீசன். காரணம் சூரியனில் தோன்றியுள்ள கரும்புள்ளிகள்.

விஞ்ஞானிகள் பயன்படுத்தும் விசேஷக் கருவிகள் மூலம் பார்த்தால் சூரியனில் நிறையக் கரும்புள்ளிகள் (Sun Spots) தெரிகின்றன (சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முயலக்கூடாது. கண் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது).

 அக்டோபர் 4 ஆம் தேதி சூரியனில் 126 கரும்புள்ளிகள் காணப்பட்டன. இந்த மாதம் 21 ஆம் தேதி கரும்புள்ளிகளின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்தது. கரும்புள்ளிகள் அதிகரிக்கும் போது தான் சூரியனின் குணம் மாறுகிறது.

 கரும்புள்ளி என்றால் அது கருப்பான புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் நமக்குக் கரும் புள்ளியாகத் தெரிகிறது. கரும்புள்ளியைச் சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6000 டிகிரி செண்டிகிரேட் என்றால் கரும்புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4200 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம்.

சூரிய ஒளித் தட்டின் ஒரு பகுதியில்
கரும்புள்ளிகள்
 பூமியிலிருந்து பார்த்தால் சிறியதாகத் தெரிகிறதே தவிர, மற்றபடி ஒரு கரும் புள்ளிக்குள் பூமியைப் போட்டு நிரப்ப முடியும். சூரியனில் தென்படும் கரும் புள்ளிகள் நிரந்தரமானவை அல்ல. சில நாட்களில் மறைந்து விடலாம். சூரியனில் கரும்புள்ளிகளே இல்லாத கட்டம் ஏற்படுவது உண்டு. கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிற கட்டமும் உண்டு. இதில் ஒரு வகையான கால ஒழுங்கு உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து ஆரம்பித்தது. சுமார் ஐந்து ஆண்டுக் காலம் இவ்விதம் அதிகரித்துக் கொண்டே போகும்.பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே இராது. இப்படியாக ஒரு சுற்று முடிவடைவதற்கு சராசரியாக 11 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கரும்புள்ளிக் காலவட்டம் (SunSpot Cycle) என்று குறிப்பிடுகிறார்கள்.
கரும்புள்ளிகளின் எண்ணிக்கை
ஏறுவதையும் இறங்குவதையும் இந்த
வரிவடிவப் படம் காட்டுகிறது.

கரும்புள்ளிகள் அதிகரித்து வரும் காலத்தில் கூட கரும்புள்ளிகளின் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். கரும் புள்ளிகள் தனித்தனியே இருக்கின்ற அதே நேரத்தில் ஒரே இடத்தில் பல கரும்புள்ளிகள் அடை அடையாக இருக்கும். இவ்விதம் பல இடங்களில் இருக்கும்.

 கரும்புள்ளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் உலகில் இரு அமைப்புக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனி பார்முலா அடிப்படையில் கரும் புள்ளிகளைக் கணக்கிடுகின்றன. மேலே கரும்புள்ளிகள் பற்றி அளிக்கப்பட்ட தகவல் அமெரிக்க NOAA அமைப்பின் ஒரு பிரிவு தெரிவித்ததாகும்.

கரும்புள்ளிகள் அதிகரித்துக் காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் கிளர்வுகள் பூமியை-- மனிதனின் பல செயல்பாடுகளைப் பாதிக்கின்றன். ஆகவே தான் நிபுணர்கள் சூரியன் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.விசேஷ செயற்கைக்கோள்களும் சூரியனைத் தொடர்ந்து கவனித்து தகவல்களை அளிக்கின்றன.

Oct 21, 2011

சிட்டுகுருவி, சிட்டுக்குருவி...

Share Subscribe
”சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...” என்று பழைய சினிமாப் பாட்டு உண்டு. ஆனால் இப்போது சிட்டுக்குருவியே ஒரு சேதி (செய்தி ) ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, சிட்டுக்குருவி நம்மை விட்டு பிரிந்தே போய் விடுமோ என்றும் தோன்றுகிறது.

சென்னை, கோவை போன்ற தமிழக நகர்களில் சிட்டுக்குருவிகள் மிக அரிதாகி விட்டன. நாட்டின் இதர நகரங்களிலும் இதே நிலை தான்.  ஐரோப்பிய நாடுகளிலும் சிட்டுக்குருவிகள் மாயமாய் மறைந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்தில் 1970 களில் சிட்டுக்குருவி பேரெண்ணிக்கையில் காணப்பட்டது. இப்போது அவற்றில் 68 சதவிகிதம் மறைந்து விட்டது. லண்டன் நகரைப் பொருத்த வரை மத்திய பகுதியில் சிட்டுக்குருவிகள் மிக அபூர்வமாகவே தென்படுகின்றன எனறு கூறப்படுகிறது.


சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனம் என அறிவிக்க வேண்டியிருக்கும் என்ற அளவுக்கு நெதர்லாந்து நாட்டில் மறைந்து வருகின்றது. வட அமெரிக்காவிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

போதிய இரை கிடைக்காதது, கூடு கட்ட இடமின்மை போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் மறைந்து வரலாம் என ஆரம்பத்தில் பொதுப்படையாகக் கூறப்பட்டு வந்தது. எனினும் இது குறித்து  கடந்த சில ஆண்டுகளில் கனடா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் ஆய்வுகள் நடந்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் விரிவாக ஆய்வு நடத்திய இரு நிபுணர்கள் சிட்டுக்குருவிகள் மறைந்து வருவதற்கும் செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படுகின்ற சிக்னல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள் சிட்டுக்குருவிகளை மலடாக்கி விடுவதாகக் கூறப்படுகிறது. தவிர, கூடுகளில் சிட்டுக்குருவிகள் இடும் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படுவதில்லை. முட்டைகள் அப்ப்டியே அழுகிப் போய் விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய இந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. இக் குழுவினர் இந்தியாவில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த சிக்னல்களால் பறவைகள் பாதிக்கப்படுவதாக இக்குழுவினர் அண்மையில் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிட்டுக்குருவிகள் மறைந்து வரும் நிலையில் அவற்றைக் காக்கும் பொருட்டு உலக அளவில் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவி தினமாகப் பின்பற்றி வருகின்றனர். சிட்டுக்குருவிகள் அழிவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவிகளின் நினைவு தினமாக அனுஷ்டிக்க வேண்டி வரலாம்.

Oct 20, 2011

பாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி

Share Subscribe
படம் : Courtesy of British Antarctic Society
தென் துருவப் பகுதியில் உள்ள அண்டார்டிகா என்னும் கண்டம் கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். எங்கு நோக்கினாலும் உறைபனிதான் தென்படும். இது மனிதர் வாழ லாயக்கற்ற கண்டம். ஆனாலும் இந்தியா உட்பட பல நாடுகள் இங்கு ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. மேலே படத்தில் காண்பது பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழுவினரின் முகாம் ஆகும்.

அண்டார்டிகா உறைபனிக் கண்டம் என்றாலும் இங்கு மிக ஆழத்தில் பாதாள ஏரிகள் உள்ளன. மொத்தம் 387 பாதாள ஏரிகள். ரஷிய ஆராய்ச்சிக்கூடத்துக்கு கீழே உள்ள வோஸ்டாக் ஏரிதான் மிகப் பெரியது.இதன் நீளம் 250 கிலோ மீட்டர். அகலம் 50 கிலோ மீட்டர். இது உறைபனி மட்டத்திலிருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. அவ்வளவு ஆழத்துக்குத் துளை போட்டால் தான் ஏரி நீரை எட்ட முடியும்.

குழாய்களைப் பயன்படுத்தி தரையில்  துளையிட்டு நீண்ட உருளைகள் வடிவில் பனிக்கட்டி சாம்பிள்களை எடுப்பதில் பல நாடுகளும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளன.  ஆனால் ரஷிய நிபுணர்கள் வழக்கமான பாணியில் துளையிட்டு ஏரி நீர் சாம்பிளை எடுக்க முற்பட்டால் ஏரி நீர் பாதிக்கப்படலாம் என்று பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அண்டார்டிகாவின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படலாம் என்றும் ஆகவே இவ்வித முயற்சியில் ஈடுபடலாகாது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழுவினர் அண்டார்டிகாவில் எல்ஸ்வர்த் பகுதியில் துளையிட்டு அங்குள்ள பாதாள ஏரி நீரின் சாம்பிளை எடுக்கப் போகிறார்கள். பாதாள ஏரியிலிருந்து வண்டலையும் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவர். இங்கு பனிக்கட்டிக்கு அடியில் அந்த ஏரி சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது.
எல்ஸ்வர்த் பகுதியில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்

சூடான் வெந்நீரைப் பயன்படுத்தி துளையிடப் போவதாகவும் இதனால் ஏரி நீருக்கு அல்லது சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் பிரிட்டிஷ் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

 கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு இத்தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் அவர்கள் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.

முதலாவதாக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஹோஸ் பைப் தேவை. அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. துளையிட்டு முடிந்த பிறகு தான் கருவிகள் இறக்கப்படும். கடும் குளிர் பிரதேச்ம் என்பதால் வெந்நீரினால் ஏற்பட்ட ஆழமான துளையில் உள்ள நீர் விரைவில் குளிர்ந்து போக ஆரம்பிக்கும். இதனால் துளை குறுக ஆரம்பிக்கும். துளை முற்றிலுமாக மூடிப் போவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டும். பிரிட்டிஷ் குழுவினரின் கணக்குப்படி துளையிடுவது, சாம்பிள்களை எடுப்பது என எல்லா வேலைகளும் 24 மணி நேரத்துக்குள் முடிந்தாக வேண்டும்.

 இருட்டிப் போகிற பிரச்சினை இல்லை. அண்டார்டிகாவில் கிட்டத்தட்ட செப்டம்பர் கடைசியிலிருந்து ஆறு மாத காலம் தொடர்ந்து பகலாக இருக்கும். சூரியன் அடிவானில் தென்படுமே தவிர, மற்றபடி கடும் குளிர் வீசும். துளையிடப் போகும் இடத்தில் குளிர் மைனஸ் 20 டிகிரி அளவில் இருக்கும். பல் வேறு உலோகப் பொருட்களும் கடும் குளிரில் விசித்திரமாகச் செயல்படும்.

கடும் குளிரைத் தாங்கும் வகையில் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாலும் நடைமுறையில் அவை எப்படிச் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தவிர, எல்லாப் பணிகளுக்கும் மின்சாரம் தேவை. அண்டார்டிகாவில் மின்சார இணைப்புக்கு எங்கே போவது ? ஆகவே பாட்டரிகளை எடுத்துச் செல்கின்றனர்.

பாதாள ஏரியில் அபூர்வ்மான நுண்ணுயிர்கள் இருக்கலாம். தவிர அந்த நீரை எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் அண்டார்டிகாவின் வரலாறு பற்றி மேற்கொண்டு அறிய முடியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆயத்தக் குழுவினர் இந்த மாதம் 14 ந் தேதி அண்டார்டிகாவுக்குப் கிளம்பிவிட்டனர்.அவர்கள் சுமார் 70 டன் எடைக்குப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.  இபபோது போனால் ஆயத்தப் பணிகளை செய்வதற்கே நேரம் சரியாகி விடும். ஆகவே . 2012 ஆம் ஆண்டு அக்டோபர் வாக்கில் தான் பனிக்கட்டியில் துளையிடும் பணி தொடங்கும்.

Oct 19, 2011

விண்வெளியில் சந்திரா

Share Subscribe
இன்றைய தினம் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பிறந்த தினம். 1910 ஆண்டு அக்டோப்ர் 19 ந் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு விழா கடந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவர் காலமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.  இன்று அவரது பெயரைத் தாங்கிய செயற்கைக்கோள் - சந்திரா - அவரைப் போலவே அயராது உழைத்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு விண்வெளியில் எக்ஸ் கதிர்களை வெளியிடும் நட்சத்திரங்களை ஆராய  விரும்பியது. காமா கதிர், எக்ஸ் கதிர் ஆகியவற்றைப் பூமியைப் போர்த்துள்ள காற்று மண்டலம் தடுத்து விடுவதால் அவற்றை வழக்கமான டெலஸ்கோப் மூலம் தரையிலிருந்தபடி ஆராய முடியாது. ஆகவே இக்கதிர்களை ஆராய காற்று மண்டலத்துக்கு மேலாக அமைந்தபடி பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள் ஒன்றை மேலே அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்த செயற்கைக்கோளுக்கு ஏதாவது ஒரு பெயர் வைக்க நாஸா விரும்பியது. உலகில் யார் வேண்டுமானாலும் தகுந்த்தொரு பெயரைக் கூறலாம் என்று நாஸா அறிவித்தது. பல ஆயிரம் பேர் இதில் பங்கு கொண்டு பெயர்களைக் கூறினர். அவர்களில் பெரும்பாலோர் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரை வைக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவரது பெயரைச் சுருக்கி அந்த செயற்கைகோளுக்கு சந்திரா எக்ஸ்ரே ஆய்வுக்கூடம் என்று பெயர் வைத்தனர்.

எக்ஸ் கதிர்களை சாதாரண முறையில் படம் பிடிக்க இயலாது என்பதால் விசேஷ கருவிகள் உருவாக்கப்பட்டு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டன.சந்திரா செயற்கைக்கோள் 1999 ஆம் ஆண்டு கொலம்பியா ஷட்டில்(Columbia Shuttle) மூலம் உயரே செலுத்தப்பட்டது. ’சந்திரா’ 5 ஆண்டுகள் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

பூமியை இந்த செயற்கைக்கோள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஒரு சமயம் அது பூமியிலிருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. வேறு சமயம் 16 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதுவரை சந்திரா செயற்கைக்கோள் எண்ணற்ற அரிய தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது.
சந்திரா டெலஸ்கோப்
எடுத்து அனுப்பிய ஒரு படம்

விஞ்ஞானி சந்திரசேகர் நட்சத்திரங்களின் பரிமாண வளர்ச்சி தொட்ர்பாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் தமது இளம் வயதில் கண்டுபிடித்துக் கூறிய ஒரு கொள்கை விஞ்ஞான உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அதை ஏற்க முன்வரவில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னது தான் சரி என்பது நிரூபணமாகியது. அது சந்திரசேகர் வரம்பு ( Chandrasehkar Limit)  என்று குறிப்பிடப்படுகிறது. இக் கண்டுபிடிப்புக்காக சந்திரசேகருக்கு 1983 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சந்திரசேகர் 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறி கடைசி வரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

Oct 18, 2011

என்ன பெயர் வைக்கலாம்?

Share Subscribe


 மேலே நீங்கள் படத்தில் காண்பது அமெரிக்காவில் நியு மெக்சிகோ (New Mexico) மாகாணத்தில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் (Radio telescope).  இப்போது இதை  முற்றிலுமாகப் புதிப்பித்திருக்கிறார்கள். புதிப்பித்ததும், புதிய பெயர் வைத்தால் என்ன என்று நிர்வாகிகளுக்குத் தோன்றியது. யார் வேண்டுமானாலும் ஒரு நல்ல பெயரை எங்களுக்குக் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் கூட ஒரு பெயரைக் கூறலாம்.

சாதாரண டெலஸ்கோப் 
மேற்கூறிய ரேடியோ டெலஸ்கோப் சாதாரண டெலஸ்கோப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. சாதாரண டெலஸ்கோப் என்றால் அதைப் பய்ன்படுத்தி கிரகங்களை அல்லது நட்சத்திர மண்டலங்களை நேரடியாகக் கண்ணால் பார்க்கலாம். இந்த வகை டெலஸ்கோப்புகளில் நீண்ட குழாய் இருக்கும். டெலஸ்கோப், கூடாரம் போன்ற கட்டுமானத்துக்குள் இருக்கும். வானை ஆராய இக்கட்டுமானத்தின் மேற்புறத்தில் திறப்பு இருக்கும்.   மிக நீண்டகாலம் வான் ஆராய்ச்சியாளர்கள் இவ்விதமாக சாதாரண டெலஸ்கோப் மூலம் தான் வானை ஆராய்ந்தனர்.

வானவியல் விஞ்ஞானிகள் சாதாரண டெல்ஸ்கோப்பைப் பயன்படுத்தும் போது வானில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியைத் தான் காண்கிறார்கள். கிரகம் என்றால் பிரதிபலிக்கப்பட்ட ஒளி.

ஆனால் வானில் உள்ள நட்சத்திரங்களிலிருந்தும் மற்றும் கோடானு கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய அண்டங்களிலிருந்தும் ஒளி மட்டுமன்றி காமா கதிர், எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர், ரேடியோ அலைகள் என பல்வேறு அலைகள் வெளிப்படுவதாக சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிய வந்தது.

M 51  அண்டம் 
இவற்றில் காமா கதிர், எக்ஸ் கதிர் ஆகியவை பூமிக்கு வந்து சேராதபடி காற்று ம்ண்டலம் தடுத்து விடுகிறது. ஆனால் ரேடியோ அலைகள் தடுக்கப்படுவதில்லை. ஆகவே ரேடியோ அலைகள் மூலம் வானை ஆராய விஞ்ஞானிகள் முற்பட்டனர். இவ்விதமாக ரேடியோ டெலஸ்கோப் உருவாகியது.

அமெரிக்காவில் 1937 ல் முதலாவது ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது. இதன் மூலம் ரேடியோ வானவியல் ( Radio Astronomy )  என வானவியலில் புதிய பிரிவு தோன்றியது. இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் விதவிதமான ரேடியோ டெலஸ்கோப்புகள் உள்ளன்.

புனே அருகே உள்ள ரேடியோ டெலஸ்கோப் 
ரேடியோ டெலஸ்கோப் என்பது ரேடியோ அலைவரிசையிலான சிக்னலகளைத் திரட்டுவதாகும்  வீட்டு மாடிகளில் DTH  டிஷ் ஆண்டெனாக்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  இதே மாதிரியில் ரேடியோ டெலஸ்கோப்புகளில்  பெரிய கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் உண்டு. இவ்வித ஆண்டெனாக்களுக்குப் பதில் கம்பி வலை வடிவிலான ஆண்டெனாக்களையும் பயன்படுத்துவது உண்டு.

அமெரிக்காவுக்குத் தெற்கே உள்ள போர்ட்டோ ரிக்கோ(Puerto Rico) தீவில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் உலகிலேயே மிகப் பெரியது. அத்தீவில் இயற்கையாக மிக அகன்ற குழிவு இருந்த்து. அதையே ரேடியோ டெலஸ்கோப்பின் கிண்ணம் போல மாற்றி ரேடியோ டெலஸ்கோப்பை நிறுவினர். ரேடியோ டெலஸ்கோப்புகளில் பல வகைகள் உள்ளன்.

ஊட்டியில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் 
புனே அருகே உள்ள ரேடியோ டெலஸ்கோப் ஒரு வகையில் உலகிலேயே பெரியது. தமிழகத்தில் ஊட்டியிலும் ஒரு வகையான ரேடியோ டெலஸ்கோப் உள்ளது.

அடுத்தடுத்து நிறைய ஆண்டென்னாக்களைப் பெற்றுள்ள டெலஸ்கோப்புகளும் உண்டு. இவற்றைத் தொகுப்பு ரேடியோ டெலஸ்கோப் என்று வருணிக்கின்றனர்.

அமெரிக்காவில் நியூ மெக்சிகோ ரேடியோ டெலஸ்கோப்புக்கு மீண்டும் வருவோம். இங்கு மொத்தம் 27 டிஷ் ஆண்டென்னாக்கள் உள்ளன். ஒவ்வொன்றும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது. இந்த டிஷ அண்டென்னாக்கள் தண்டவாளங்கள் மீது அமைந்துள்ளன. வேண்டுமானால் இவற்றை நகர்த்தலாம்.

 இவ்ற்றைக் குறிப்பிட்ட வரிசையில் நிறுத்தினால் இவை அனைத்தும் சேர்ந்து 36 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு பெரிய ஆண்டென்னாவுக்குச் சமமாக இருக்கும். இவ்விதமான ரேடியோ டெலஸ்கோப்புகள் அண்டவெளியில் கோடானு கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்டங்களை ஆராயவும் படம் எடுக்கவும் உதவுகின்றன்.

 நியூ மெக்சிகோவில் 1980 ல் செயல்பட ஆரம்பித்த ரேடியோ டெலஸ்கோப் இப்போது VLA (Very Large Array)  டெலஸ்கோப் என்ற உப்புசப்பற்ற பெயரைப் பெற்றதாக உள்ளது. மனதில் நிற்கத்தக்க எடுப்பான பெயர் வேண்டும் என்று இதன் நிர்வாகிகள் விரும்புகின்ற்னர். ஆகவே தான் நல்லதொரு பெயரைக் கூறும்படி கோருகின்றனர். நீங்கள் விரும்பினால் இந்த இணையதளத்துக்குச் சென்று ஒரு பெயரைக் கூறலாம்namethearray.org

Oct 17, 2011

வெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...

Share Subscribe
வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருவதாகும். வெளிப்புறச் சுவர்களுக்கும் உட்புறச் சுவர்களுகும் சுண்ணாம்பு அடிப்பார்கள். சுண்ணாம்பு வெண்மை நிறம் என்பதால் சுவர்களுக்குப் பூச்சு அடிப்பதை வெள்ளையடிப்பது என்றே குறிப்பிட ஆரம்பித்தார்கள். அண்மைக் காலமாக கலர் கலரான வித விதமான பூச்சுப் பொருட்கள் வந்துள்ளன. எனினும் சுண்ணாம்பு அடிப்பது மறைந்து விடவில்லை.

 அந்த நாட்களில் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது வேறு மாற்று இல்லை என்ற காரணத்தாலோ சுண்ணாம்பைத் தேர்ந்தெடுத்தனர். அது சிறந்ததோர் ஏற்பாடாகத் தோன்றுகிறது. சுண்ணாம்பின் காரத்தன்மையாலும் நெடியாலும் சுவர்களின் இடுக்குகளில் உள்ள நுண்ணிய பூச்சிகள் மடிந்து விடும்.அதை விட முக்கியமாக சுண்ணாம்பின் வெண்மை நிறத்துக்கு ஒரு விசேஷத்தன்மையும் உண்டு.

அதாவது நிறத்துக்கும் வெப்பத்தை ஈர்க்கும் தன்மைக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக வெள்ளை நிறமானது வெப்பத்தை அனேகமாக ஈர்ப்பதே இல்லை. வெண்மையான பரப்பின் மீது வெயில் பட்டால் அது தன் மீது படுகின்ற வெப்பத்தை ( கிட்டத்தட்ட முற்றிலுமாக ) திருப்பிப் பிரதிபலித்து விடும். அந்த அளவில் வீட்டுக்குள் சூடு தாக்காது.   வெப்பத்தை ஈர்க்கும் தன்மை நிறத்துக்கு நிறம் மாறுபடும்.

 கருப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வீடுகளில் வெந்நீர்த் தவலை என்பது உண்டு. இதன் அடிப்புறம் கரி ஏறிக் கிடக்கும். கரித்தூள் அடை அடையாக ஒட்டிக் கொண்டிருக்கும்  இத் தவலையை சுத்தம் செய்யும் போது அடிப்புறத்தில் உள்ள கரியை அகற்ற மாட்டார்கள்.  .

 அடுப்புப் பற்ற வைத்தவுடன் தவலை சட்டென்று வெப்பத்தை ஈர்த்துக் கொள்ள ஆரம்பித்து தண்ணீர் விரைவில் சுடேறும்.  தவிர,  கரி ஏறிய இத் தவலை வெப்பத்தை எளிதில் வெளி விடாது. ஆகவே நீண்ட நேரம் சுடு தண்ணீர் ஆறாமல் இருக்கும். தோசைக் கல்லின் அடிப்புறமும் இதே போலக் கரியேறிக் கிடப்பதைக் கவனிக்கவும்.

கண்ணாடி ஒரு விஷய்த்தில் தனித்தன்மை கொண்டது. கண்ணாடி வழியே ஒளி எளிதில் ஊடுருவிச் செல்லும். ஆனால கண்ணாடி வழியே வெப்பம் அவ்வளவாக ஊடுருவிச் செல்லாது. கண்ணாடியின் இத் தன்மை கட்டடக் கட்டுமானங்களில் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

மேலை நாடுகளில் 50 மாடி 60 மாடிக் கட்டடங்களை வெளியிலிருந்து பார்த்தால் சுவர்களே இல்லை என்று தோன்றும்.  கட்டடம் முழுவதும் கீழிருந்து உச்சி வரை கண்ணாடிப் பலகைகளால் போர்த்தப்பட்டதாகக் காட்சி அளிக்கும். இவ்விதக் கட்டடங்கள் முற்றிலும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டவை.  வெளி வெப்பம் சிறிதளவு உள்ளே வந்தாலும் அந்த அளவுக்கு ஏர் கண்டிஷன் இயக்கச் செலவு அதிகரிக்கும்.

கட்டடங்களின் வெளிப்புறக் கண்ணாடிப் பலகைகளைத் தயாரிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விதக் கண்ணாடிப் பலகை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பலகைகளானது. இவற்றின் நடுவே உள்ள இடைவெளிகளில் கார்பன் டையாக்சைட், அல்லது வேறு வகை வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும். இது வெப்பம் உள்ளே வராதபடி தடுக்க உதவும். தவிர, இவ்விதக் கண்ணாடிகளின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியச் பூச்சு அளிப்பதும் உண்டு. சூரிய ஒளியைத் திருப்பி விடுவதற்கு இது உதவும்.

வெப்பம் ஈர்க்கப்படாமல் தடுக்கப் பூச்சு அளிப்பதற்கு மிகவும் ஏற்றது தங்கப் பூச்சாகும். கட்டடங்களின் வெளிப்புற கண்ணாடிகளுக்கு தங்கப் பூச்சு அளிப்பது கட்டுபடியாகாத ஒன்று. ஆனால் விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் முக்கிய உறுப்புகளின் வெளிப்புறத்தில் தங்கப் பூச்சு அளிக்கப்படுகிறது.

இன்னொரு விஷயம். புதிதாகக் கட்டடங்களில் அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு இப்போதெல்லாம் சுண்ணாம்பு அடிப்பதில்லை. பல வித கலர் பூச்சுகளை அளிக்கின்றனர். எஞ்சினியரைக் கேட்டால் வெளிர் நிறங்களே உகந்தது என்பார்.   அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு சிலர் தங்கள் இஷடத்துக்கு கலரைத் தேர்ந்தெடுப்பது உண்டு.

ஒளியை பிரதிபலிப்பதிலும் நிறத்துக்கு நிறம் வித்தியாசம் உண்டு. உட்புறச் சுவரில் ஐவரி, வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறத்தில் பூச்சு அளித்தால் அறை பெரிதாக இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். மாறாக அழுத்தமான கலர்கள் ஒளியை சாப்பிட்டு விடும். அவ்விதப் பூச்சு கொண்ட அறையில் நீங்கள் இர்ண்டு 60 வாட்ஸ் பல்பு மாட்டினாலும் இரவில் அந்த அறையின் உட்புறம் மங்கலாகக் காணப்படும்.

ஆனால் சுவர்ப் பூச்சு தொடர்பான டிவி விளம்பரங்களை நீங்கள் கவனித்தால்  அறையின் உட்புறத்தில் அழுத்தமான கலர்ப் பூச்சுகளை அடிப்பது போன்று காட்டுவார்கள். டிவி திரையில் கலர் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்கிறார்கள்.

Oct 16, 2011

வானில் தெரிந்த செயற்கைக்கோள்

Share Subscribe

படம் மார்கோ லாங்புரோக்
நன்றி:spaceweather.com
மேலே உள்ள படத்தில் மெல்லிய ஒளிக்கீறாகத் தெரிவது பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோளின் பாதையாகும். சூரிய ஒளி அந்த செயற்கைக்கோள் மீது விழ அது இவ்விதமாகக் காட்சியளித்தது. ரோசாட் (Rosat)  எனப்படும் இந்த செயற்கைக்கோளை   நெதர்லாந்தைச் சேர்ந்த மார்கோ லாங்புரோக் கடந்த 13 ஆம் தேதி இவ்விதம் படமாக்கினார். வெறும் கண்ணால் பார்த்தாலும் தெரிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.வெறும் கண்ணால் பார்த்தால் வேகமாக நகருகின்ற ஒளிப்புள்ளியாகவே தெரியும். காமிராவில் இது ஒளிக்கீற்றாகப் பதிவாகியுள்ளது.

பொதுவில் செயற்கைக்கோள்கள் பூமியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன..மாலையில் இருட்டும் நேரத்தில் ரோசாட் செயற்கைக்கோள்  கிழக்குத் திசையில் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது இப்படத்தை எடுத்ததாக அவர் சொன்னார். அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் மேற்கு வானை நோக்கினால் அடிவானிலிருந்து இது மேலே வருவதைக் காண இயலும்.

வருகிற நவம்பரில் பூமியில் வந்து விழலாம் என்று கருதப்பட்ட ரோசாட்  செயற்கைக்கோள் இந்த மாதமே வந்து விழலாம் என்று இப்போது சொல்லப்படுகிறது.

1990 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்ட போது 580 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வந்தது. கடந்த ஜூனில் 327 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது.  சூரியனின் சீற்றத்தால் அதன் சுற்றுப்பாதை பாதிக்கப்பட்டது. ஆகவே ரோசாட் இவ்விதம் மேலும் மேலும் பூமியை நோக்கி இறங்கி வருகிறது. இப்போது சுமார் 240 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றுகிறது.  

 பூமியிலிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற ஹப்புல் (Hubble) டெலஸ்கோப் பூமியிலிருந்து சுமார் 370 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றையும் சூரிய உதயத்துக்கு முன்னர் அல்லது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் வெறும் கண்ணால் ஒளிப் புள்ளியாகக் காண முடியும். அந்த ஒளிப்புள்ளி தொடர்ந்து நகருவதாகக் காட்சி அளிக்கும்.  வானில் எங்கே எப்போது தென்படும் என்பது அவற்றின் சுற்றுப்பாதையைப் பொருத்து மாறுபடும்.

Oct 15, 2011

சூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி

Share Subscribe

மாலையில் சூரியன் அஸ்தமித்து விடுகிறது. அதன் பிறகு இரவு முழுவதும் எப்படி சூரியனைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய இயலும்? அதற்கு கொதிக்கும் நிலையில் உள்ள உப்புகள் உதவுகின்றன. மேலே உள்ள படத்தைக் கவனிக்கவும். படத்தில் நட்ட நடுவே பெரிய டவர் உள்ளது. அதன் உச்சியில் ஒரு கொள்கலத்தில் தான் உப்புகள் உள்ளன. டவரைச் சுற்றிலும் தரையில் சுமார் 2500 கண்ணாடிப் பலகைகள் உள்ளன. இவை முக்ம் பார்க்கும் கண்ணாடி போன்றவை.

     பகல் நேரத்தில் நீங்க்ள திறந்த வெளியில் நின்றபடி முகம் பார்க்கும் கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு பக்கவாட்டில் அதைத் திருப்பினால் அக் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியானது குறிப்பிட்ட திசையில் ஏதாவது ஓரிடத்தில் போய் விழும். பிரதிபலிக்கப்பட்ட ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அது மாதிரியில் மேலே படத்தில் டவரைச் சுற்றியுள்ள கண்ணாடிகள் அனைத்தும் சூரிய ஒளியை டவரின் உச்சியை நோக்கித் திருப்பும்.

வானில் சூரியன் நகருவதற்கு ஏற்ப இக் கண்ணாடிகள் அனைத்தும் தொடர்ந்து மிக ஒழுங்காகத் தாமாக மெல்ல நகர்ந்து எப்போதும் டவரை நோக்கி ஒளியைப் திருப்பிக் கொண்டிருக்கும். இந்த வேலையைக் கம்ப்யூட்டர் கவனித்துக் கொள்கிறது.  எல்லாப் புறங்களிலிருந்து இவ்விதம் டவரின் உச்சியை நோக்கி சூரிய ஒளி தாக்கும் போது உச்சியில் இருக்கும் கொள்கலத்தில் உப்புகள் மிகுந்த அளவுக்குச் சூடேறிக் கொதிக்க ஆரம்பிக்கும். அவை அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழே தொட்ர்ந்து சென்று கொண்டிருக்கும்.

கொதிக்கும் உப்புக் குழம்பு, கீழே தண்ணீரை ப்ல நூறு டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு சூடேற்றும். இதன் விளைவாகத் தோன்றும் நீராவியானது ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சுருங்கச் சொன்னால் நீராவி உற்பத்திக்கு சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

டவருக்கு அருகே தரையில் கொதிக்கும் உப்புக் குழம்பைச் சேமித்து வைப்பதற்குத் தனி டாங்கி உள்ளது. சூரியன் அஸ்தமித்த பிறகு டாங்கியில் உள்ள கொதிக்கும் உப்புக் குழம்பானது நீராவியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பலனாக இரவிலும் தொடர்ந்து மின் உற்பத்தி சாத்தியமாகிறது. டாங்கியில் உள்ள  கொதிக்கும் உப்புக் குழம்பைக் கொண்டு மட்டும் 15 மணி நேரம் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலும்.

ஸ்பெயின் நாட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த சூரிய வெப்ப மின் உற்பத்தி நிலையம் இம் மாதம் 4 ந் தேதி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இது சுமார் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்கி வரும்.

சூரிய ஒளியை இவ்விதம் பயன்படுத்தும் திட்டத்தில் உள்ள் பிரச்சினை இது மிக நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதாகும். ஸ்பெயினில் உள்ள இந்த நிலையம் 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

தவிர, இது 17 மெகாவாட் மின்சாரத்தைத் தான் உற்பத்தி செய்கிறது.. ஜன அடர்த்தி குறைவாக உள்ள, நிறையக் காலி நிலம் இருக்கின்ற சிறிய நாடுகளுக்கு மட்டுமே இது உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தவிர, ஆண்டில் பெரும்பாலான நாட்கள் வெயில் அடிக்கின்ற இடத்தில் தான் இதை நிறுவ முடியும்.

Oct 14, 2011

ராக்கெட் வெற்றி தான். ஆனால்...

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பின் (ISRO) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 12 ஆம் தேதி புதன்கிழமையன்று சென்னைக்கு வடக்கே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து ஒரே பாய்ச்சலில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது .  இந்த நான்கில் மேக(ம்)-டிராபிக்ஸ் செயற்கைக்கோள் மட்டும் ஒரு டன் எடை கொண்டது. மற்ற மூன்றும் எடை குறைந்தவை. பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் இப்போதைய வெற்றி மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே என்றாலும் ராக்கெட் விஷய்த்தில் நாம் இன்னும் தன்னிறைவு பெற்றுவிடவில்லை என்ற கசப்பான உண்மை நம் முன்னே நிற்கிறது.

1993 ஆம் ஆண்டில் தொடங்கி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் (PSLV) இதுவரை 20 தடவை செலுத்தப்பட்டுளளது. இதில் ஒன்றரை தடவை தான் தோல்வி. 1993 ல் முதல் முயற்சியில் முழுத் தோல்வி. 1997 ல் பாதி வெற்றி. 1999 லிருந்து தொடர்ந்து 16  தடவைகளிலும் வெற்றி. ஆக இந்த ராக்கெட் மிக நம்பகமானது என்பது நிரூபணமாகி விட்டது.

ஆனால் நாம் தயாரிக்கின்ற அனைத்து செயற்கைக்கோள்களையும் இந்திய மணனிலிருந்தே செலுத்தும் திறனை நாம் பெற்றுவிட்டோமா என்றால் இல்லை. நாம் தயாரிக்கின்ற செயற்கைக்கோளின் எடை சுமார் ஒன்றரை டன் எடைக்குள்ளாக இருக்குமானால் அதை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்த முடியும். இந்த ராக்கெட்டின் திறன் அவ்வளவுதான்.

 PSLV ராக்கெட் உயரே பாய்கிறது
 நாமோ டிவி ஒளிபரப்பு உட்பட பல வகையான பணிகளுக்கென சுமார் 3 டன் எடை கொண்ட இன்சாட் வகை செயற்கைக்கோள்களையும் தயாரித்து வருகிறோம். இவற்றை உயரே செலுத்த இந்தியாவிடம் தகுந்த ராக்கெட் கிடையாது. ஆகவே இப்படியான எடை மிக்க செயற்கைக்கோளை நாம் பெரும் செலவில் தென் அமெரிக்காவில் கூரு என்னுமிடத்தில் உள்ள விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறோம்.

 அங்கு ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஏரியான் என்னும் தனது சக்திமிக்க ராக்கெட் மூலம் இந்திய செயற்கைக்கோளை செலுத்தித் தருகிறது. இதற்கு நாம் பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். இது பல ஆண்டுக்காலமாக நடைபெற்று வருகிறது.

எடை மிக்க செயற்கைக்கோளையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் நாம் தயாரிக்க முற்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் (GSLV) இன்னும் சிக்கல்களிலிருந்து விடுபடவில்லை. 2001 ல் தொடங்கி ஏழு தடவை செலுத்தியதில் இரண்டு தடவை தான் வெற்றி கண்டோம்.   இந்த ராக்கெட் 2 முதல் 2.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்தக்கூடியது.

.இதுவும் போதாது என்பதால் இஸ்ரோ அமைப்பானது ஜி.எஸ்.எல்.வி மார்க்- 3 என்னும் சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இது அடுத்த ஆண்டில் வெள்ளோட்டம் விடப்படும்.இந்த ராக்கெட் மூலம் 4.5 முதல் 5 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்த முடியும்.  இது அடுத்தடுத்து வெற்றி கண்டு மிக நம்பகமானது என நிரூபணமானால் தான் எடை மிக்க செயற்கைக்கோள்களையும் நாமே செலுத்துவதில் தன்னிறைவு நிலையைப் பெறுவோம்.

Oct 13, 2011

வீடு தேடி வந்த விண்கல்

Share Subscribe
 இரவில் வீட்டின் கூரை மீது திடீரென கல் வந்து விழுந்தால் யாரோ ஏவல் செய்து விட்டார்கள் என்று தமிழகத்தின் கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஆனால் யாரும் ஏதும் செய்யாமலேயே ஒரு வீட்டின் கூரை மீது கல் வந்து விழலாம். பிரான்ஸ் நாட்டில் பாரிஸின் புற நகர்ப் பகுதியில் அண்மையில் ஒரு பெண்மணியின் வீட்டின் கூரை மீது கல் விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த அம்மையார் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிருந்தார். மழை பெயத போது வீட்டில் ஓர் அறையில் மழை நீர் ஒழுகுவதைக் கண்டார். கூரையில் ஓடு உடைந்திருக்கலாம் என்று கருதி ஓடு மாற்றுவதற்கான ஊழியரை வரவழைத்தார்.   இந்த ஓடெல்லாம் லேசில் உடையாதவை. சூப்பர்மேன் தான் வரவேண்டும் என்று கூறியபடியே அவர் உயரே ஏறினார். ஆனால் ஓடு உடைந்திருந்த்து. வானிலிருந்து ஏதோ வேகமாக வந்து விழுந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது சரியாக இருந்தது.

குளிர் பிரதேச நாடுகளில் கடும் குளிர் உள்ளே தாக்காதப்டி தடுக்கக் கூரையில் ஓடுகளுக்கு அடியில் இன்சுலேஷன் போடுவது உண்டு. உடைந்த ஓட்டை அவர் அகற்றிவிட்டுப் பார்த்த போது அந்த இன்சுலேஷனில் ஒரு கல் தென்பட்டது. அது சாதாரணக் கல் போல இருக்கவில்லை.

A French family returned from holiday to discover a 4.5 billion year old egg-sized meteorite had smashed its way through the roof of their house in suburban Paris.

Photo: PHOTOPQR/LE PARISIEN
அந்த அம்மையார் விண்கல் நிபுணர் ஒருவரை வரவழைத்துக் காட்டினார்.  சுமார் 88 கிராம் எடை கொண்ட அது விண்கல் தான் என அவர் உறுதிப்படுத்தினார். அது மட்டுமல்ல அக் கல்லின் வயது 450 கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

விண்வெளியிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் பூமியில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.விண்கற்கள் அபூர்வமாக வீடுகள் மீது வந்து விழும். 2009 ஆம் ஆண்டில் 14 வயது ஜெர்மன் சிறுவனின் கை மீது பயங்க்ர சத்தத்துடன் ஒரு விண்கல் விழுந்து அவன் கையில் மூன்று அங்குல காயம்  ஏற்பட்டது. அந்த விண்கல் வெறும் பட்டாணி சைஸில் தான் இருந்தது.   தலையில் விண்கல் விழுந்து யாரும் செத்துப் போனதாக வரலாறு இல்லை.

விண்கற்களில் பல வகைகள் உள்ளன.  மிக அரியவை என்பதால் விண்கற்களுக்கு நல்ல விலை உண்டு. 60 கிராம் எடை கொண்ட ஒரு விண்கல்லின் விலை ரூ 5000 வரை இருக்கலாம். மேலை நாடுகளில் விண்கற்களை விலைக்கு வாங்குபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். இவற்றை ஏலம் விடுவதும் உண்டு. இவர்களுக்கென சங்கமும் உண்டு.தனது வீட்டின் கூரையில் வந்து விழுந்த விண்கல்லை அந்த அம்மையார் விலைக்கு விற்க விரும்பவில்லை.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் வெவ்வேறு சைஸ்களில் பல லட்சம் பாறைகளும் கற்களும் தனியே ஒரு சுற்றுப்பாதையில் அணிவகுத்து சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அஸ்டிராய்டுகள் என்று பெயர். சில சமயம் இவற்றில் சில ஒன்றோடு ஒன்று மோதி பல துண்டுகளாக உடையும். விண்கற்கள் இந்த அஸ்டிராய்ட் கூட்டத்திலிருந்து தான் வருவ்தாக நிபுணர்கள் கருதுகின்றனர். அஸ்டிராய்டுகள் சூரிய மண்டலத்து கிரகங்கள் தோன்றிய போதே உண்டானவை.

Oct 12, 2011

இளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்

Share Subscribe
இன்று பௌர்ணமி. ஆகவே இன்று இரவு சந்திரன் முழு நிலவாகக் காட்சி அளிக்கும். ஆனால் ஒரு வித்தியாசம்.  நீங்கள் காண்பது இளைத்துப் போன சந்திரனாக இருக்கும். இந்த ஆண்டின் மற்ற பௌர்ணமிகளை விட சந்திரன் இன்று சிறியதாகக் காணப்படும். இதற்குக் காரணம் இந்தப் பௌர்ணமியின் போது பூமியிலிருந்து சந்திரன் அதிகத் தொலைவில் இருக்கும் என்பதே.

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.   சந்திரனின் சுற்றுப்பாதை மட்டும் மிகச சரியான வட்டமாக இருக்குமானால் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை சற்றே நீள் வட்டமாக உள்ளது இதன் விளைவாக சந்திரன் ஒரு சமயம் பூமிக்கு அருகில் இருக்கும். அதை ஆங்கிலத்தில் Perigee என்பார்கள்.  வேறு ஒரு சமயம் பூமியிலிருந்து அதிகத் தொலைவில் இருக்கும். அது Apogee. அருகே படம் காண்க. இன்று இரவு பூமியிலிருந்து சந்திரன் 4,06,434 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
சந்திரனின் சுற்றுபாதை


இத்துடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பௌர்ணமியன்று பூமியிலிருந்து சந்திரன் மிக அருகில் --3,56,571 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஆகவே சந்திரன் பெரிதாகக் காட்சி அளித்தது. அன்று தெரிந்த முழு நிலவை ‘ மகா பௌர்ணமி’ (Super Moon) என்று வருணித்தார்கள்.


மகாபௌர்ணமி சந்திரனுடன் ஒப்பிட்டால் இன்றைய முழு நிலவு -- அளவில்-- 12.5 சதவிகிதம் சிறியதாகத் தெரியும். சற்றே தொலைவில் இருப்பதால் பௌர்ணமி நிலவின் ஒளியும் 20 சதவிகிதம் குறைவாக இருக்கும்.

மேலே உள்ள படத்தைக் காணவும் சந்திரன் அருகாமையில் இருந்த போது எடுத்த புகைப்படமும் அதிகத் தொலைவில் இருந்த போது எடுத்த புகைப்படமும் ஒரே படமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று இரவு சந்திரன் எந்த அளவு சிறியதாக இருக்கும் என்பதை இப்படத்தைப் பார்த்து அறியலாம்.

சந்திரன் இப்போது அதிகத் தொலைவில் உள்ளதால் பூமியில் விளைவுகள் உண்டா? கடல்களில் வேலை ஏற்றம், வேலை இறக்கம் (Tides)  ஆகிய இரண்டும் சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் ஏற்படுபவை. இன்று சந்திரன் தொலைவில் இருப்பதால் வேலை ஏற்றம் வேலை இறக்கம் இரண்டும் சற்றே குறைவாக இருக்கும்.