Dec 25, 2012

வியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா?

Share Subscribe
பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள்  பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக  எந்த இடத்தில்   எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது.

இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும்.
டிசம்பர் 25 ஆம் தேதி அஸ்தமித்ததும் கிழக்கு வானில் வியாழனும் சந்திரனும்
இவ்விதமாகத் தெரியும்   
இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத் தோப்பில் நின்றால் எந்த மரம் அருகே உள்ளது, எது தொலைவில் உள்ளது என்று எளிதில் அறிய முடியும். விண்வெளியில் அது சாத்தியமில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. வியாழன் கிரகத்தைப் பிரும்மாண்டமான பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதன் உள்ளே 1400 பூமியைப் போட்டு அடைக்கலாம. வியாழன் அவ்வளவு பெரியது.
பூமியை விட வியாழன் மிக மிகப் பெரியது . படம் நாஸா 
வானில் நீங்கள் பார்க்கும் போது சந்திரன் பெரியதாகவும் வியாழன் சிறிய ஒளிப்புள்ளியாகவும் தெரிகிறது. சந்திரன் அன்றைய தினம் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் இருக்கும். அருகில் இருப்பதால் வடிவில் பெரிதாகத் தெரிகிற்து..ஆனாலும் பௌர்ணமியன்று தெரியக்கூடிய  அளவுக்கு இராது. .( 28 ஆம் தேதி தான் பௌர்ணமி)

அன்றையத் தேதியில் வியாழன் கிரகம் பூமியிலிருந்து 60 கோடியே 90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆகவே தான் அது பிரும்மாண்டமான கிரகமாக இருந்தாலும் வடிவில் சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது,

மேலே உள்ள படத்தில் சந்திரனுக்கு அடியில் சிறிய நட்சத்திரம் உள்ளதைக் காணலாம். அது தான் ரோகிணி ( Aldebaran ) நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது.  ரோகிணி நட்சத்திரம்  பூமியிலிருந்து சுமார் 65 ஒளியாண்டு தொலைவில் உள்ளது ( ஓர் ஒளியாண்டு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர். அதை 65 ஆல் பெருக்கினால் வருகிற தொகையே ரோகிணி நட்சத்திரம் இருக்கின்ற தூரம்.).
சந்திரன், வியாழன், ரோகிணி ஆகிய மூன்றும் அருகருகே இருப்பது போலத் தோன்றினாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன Pic. Not to Scale
 வானில் நீங்கள் வியாழன் கிரகத்தைக் காணும் போது அதற்கு மேலே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் உள்ளதைப் பார்க்கலாம்.. உற்று நோக்கினால் இது தென்படும். இந்த நட்சத்திரக் கூட்டம் பூமியிலிருந்து சுமார் 440 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.இந்த நட்சத்திரக்கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளதாகச் சொல்வார்கள். ஏழாவது நட்சத்திரத்தையும் காண முடியும்.உண்மையில்  இந்த  நட்சத்திரக் கூட்டத்தில் பல நூறு நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.

 நீங்கள்  புதன்கிழமை மாலை பார்த்தாலும் வியாழன் வானில் அதே இடத்தில் இருக்கும். ஆனால் சந்திரன் இடம் மாறி விடும். பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன.ஆகவே   வானவியலின்படி வியாழன் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும். வியாழன் இப்போது ரிஷப ராசியில் உள்ளது. அடுத்து அது வானவியலின்படி  மிதுன ராசிக்கு மாறும்.அதாவது வானில் அது இடம் மாறும். அதையே ஜோசியர்கள்   குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.. ஆனால் ரோகிணி நட்சத்திரம் இடம் மாறாது. அதே போலவே கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் இடம் பெயராது.  நட்சத்திரங்கள் இடம் மாறுவது கிடையாது. ரோகிணி என்றும் ரிஷப ராசியிலேயே இருந்து வரும்.


Dec 16, 2012

பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்

Share Subscribe
பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.

 உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை

பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை.

உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள்  வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.

ஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.

உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.

மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக  எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக  வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது.  எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும்  டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.

தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன்  தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக்  கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர்  சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது

.
ஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.

 உலகம் எப்படி அழியப் போகிறதாம்?  நிபிரு என்ற ஒரு கிரகம்  பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது  எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது
.
பூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு  நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

சூரிய மண்டலத்துக்குள்ளாகப்  பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள்  இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன

 உதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன

எந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.

ஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.

நிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி  என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு  கிரகம் இது வரை ஏன்  தட்டுப்படவில்லை? நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.

அமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை

பூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.

சூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது

இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection  (CME) எனப்படுவதாகும்.

கடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து   பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள்,  நிலத்துக்கு  அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

சூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. இப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.

 சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.

பூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999,  என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால்  எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

 இப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.

சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.

சீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.

சீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.

பூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி  நிலவலாம்.

.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என  நாஸா உட்பட யார்  சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற  டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது

(Update: ஜ்னவரி முதல் தேதி 2013--  பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.
     எனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்)

 (குறிப்பு:  இந்த வலைப் பதிவுக்கு Link  கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில்  அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)

Dec 12, 2012

இந்த வாரம் இரவு வானில் ஒளி மழை

Share Subscribe
இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி  இரவில்  வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது.

சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில்  ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம்.
வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது  வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky 
ஆண்டில் குறிப்பிட்ட  சமயத்தில் இரவு வானில்  மணிக்குப் பல நூறு துணுக்குகள் வீதம் இப்படி  நெருப்புப் பொறிகளாகக் கீழே இறங்கினால் அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மாதம் மேற்படி இரு தேதிகளில் வானில் இக்காட்சியைக் காணலாம். வானவியலார் இதற்கு ஜெமினைட் ஒளிமழை (Geminid Meteor Shower ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தத் துணுக்குகள் எங்கிருந்து வந்தன?  சாலை வழியே வலை போட்டு மூடாமல் குப்பை லாரி போனால் அந்த லாரியிலிருந்து வழி நெடுக குப்பை கீழே விழுந்தபடி செல்லும். அல்லது மணல் லாரி போனால் வழி நெடுக மணல் சிந்திக் கிடக்கும்

இந்த மாதிரியில் ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்வதறகாக வரும் போதும் சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் வெளிப்படும். ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற  பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி இருக்கும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.

பூமியானது சூரியனைச் சுற்றி  வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும். அப்போது இந்த்த் துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும். அப்போது இந்த ஒளிமழை நிகழும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளிமழை (Perseid Meteor Shower )  நிகழும். அதே போல  நவம்பரில் Leonid Meteor Shower  நிகழும். டிசம்பர் மத்தி வாக்கில் ஜெமினைட் ஒளிமழை.தோன்றும். இந்த மாத மத்தியில்  இது காணப்படும் என்றாலும் 13 ஆம் 14 ஆம் தேதிகளில் தான் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினைட் ஒளிமழைக்குக் காரணமாகக் கருதப்படும் பேயிதான் அஸ்டிராய்டின் சுற்றுப்பாதை 
ஜெமினைட் ஒளிமழை உச்சம் இந்த ஆண்டு அமாவாசை தினத்தன்று நிகழ்வதால் வானவியல் ஆர்வலர்களுக்கு மிக வசதி. ஒளிமழைக் காட்சி இரவு வானில் நன்கு தெரியும். சில ஆண்டுகளில் இது  பௌர்ணமி வாக்கில் நிகழும். அப்படி ஏற்படும் போது ஒளிமழைக் காட்சி எடுப்பாக இராது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானவர்கள் கார் வைத்திருப்பர் என்பதால் ஒளிமழைக் காட்சியைக் காண்பதற்கு ஊருக்கு வெளியே -- சுற்றுவட்டாரத்தில் விளக்கு வெளிச்சமே இல்லாத பொருத்தமான திறந்த வெளிக்குப் போய் முகாமிட அவர்களால் இயலும்.ஜெமினைட் ஒளிமழையைக் காண்பதற்கு  இரவு ஒரு மணி முதல் மூன்று வரையிலான நேரம் உகந்தது என்று சொல்லப்படுகிறது.

எங்குமே வெளிச்சமில்லாத இடத்துக்கு சென்ற பின் அந்த இருட்டுக்கு உங்கள் கண்கள் பழகிக் கொள்ள சுமார் 20 நிமிஷம் ஆகும. அதன் பின்னரே உங்களால் வானிலிருந்து கீழ் நோக்கி இறங்குகின்ற ஒளிக்கீற்றுகளை நன்கு காண இயலும் என்று  இது தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். நகரில் வசிப்பவர்கள் நள்ளிரவில் எழுந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சில ஒளிக்கீற்றுகளைத் தான் காண இயலும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒளிமழைக்கு ஜெமினைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உண்டு. வானில் மிதுன ராசிக்கு ஆங்கிலத்தில் Gemini  என்று பெயர்.  அந்த ராசி உள்ள வான் பகுதியிலிருந்து இந்த ஒளிமழை வருவது போலத் தோன்றும். ஆகவே தான் இது Geminid  என அழைக்கப்படுகிறது

பெர்சைட் ஒளிமழை, லியோனிட் ஒளிமழை ஆகியவை  வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகளால் ஆனவை என்று அறியப்பட்டுள்ளது.
வானில் மிதுன Gemini ராசி உள்ள பகுதியிலிருந்து தான் ஒளிகீற்றுகள் கீழ் நோக்கிப் பாயும். 
ஆனால் ஜெமினைட் ஒளிமழைக்கான காரணம் அதாவது அந்த ஒளிமழையைத் தோற்றுவிக்கும் துணுக்குகள் எப்படித் தோன்றின என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

பொதுவில் ஒளிமழைக்கு வால் நட்சத்திரங்களின் துணுக்குகள் காரணமாக இருந்தாலும் ஜெமினிட் ஒளிமழைக்கு 3200 பேயிதான் என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த அஸ்டிராய்ட் சூரியனை நெருங்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த் அஸ்டிராய்ட் அவவப்போது சூரியனை சுற்றிவிட்டுச் செல்கின்றது.

Dec 4, 2012

பீதி கிளப்ப பிப்ரவரியில் வருகுது ஓர் அஸ்டிராய்ட்

Share Subscribe
முதலாவதாக மாயன் கேலண்டர், நிபுரு சமாச்சாரம், இரண்டாவதாக  பூமி மூன்று நாள் இருளில் மூழ்கும் என்ற சமாச்சாரம் ஆகியவை வெறும் புருடா என்பது இந்த மாதக் கடைசியில் நிரூபணமாகி விடும். ஆனால் புருடா ஆசாமிகள் சொல்லாத சமாச்சாரம் ஒன்று உள்ளது.

அதாவது வருகிற ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஓர் அஸ்டிராய்ட் பூமியின் மீது உராயாத குறையாக பூமியை மிக அருகில் கடந்து செல்ல இருக்கிறது.பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க  இந்த அஸ்டிராய்ட் நிச்ச்யம் பூமி மீது மோதாது என்று நாஸா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எனினும் ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்து செல்வது என்பது அபூர்வமே.அந்த வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டிராய்டும் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்தது கிடையாது என்று கூறப்படுகிறது
இது 6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓர்  அஸ்டிராய்ட்.
 பிப்ரவரியில் வருவது இதை விட மிகச் சிறியது.  
அஸ்டிராய்ட் ஒன்று பூமியைக் கடந்து செல்வது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும். ஒவ்வொரு மாதமும் பல அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. நடப்பு டிசம்பர் மாதத்தில் மூன்று அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்கின்றன.

சொல்லப்போனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இரண்டு அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்ல இருக்கின்றன ஒன்றின் பெயர்  1999 YK 15 என்பதாகும். சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட  அது பூமியை 2 கோடி கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

ஆனால் அதே தேதியில் 2012 DA 14 என்னும் பெயர் கொண்ட  இன்னொரு அஸ்டிராய்டும் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. அது தான் பீதி கிளப்பக்கூடியது. அதன் நீளம் 48 மீட்டர். . அந்த அஸ்டிராய்ட் பூமியைக் கடந்து செல்லும் போது ஒரு கட்டத்தில் பூமிக்கும் அஸ்டிராய்டுக்கும் இடையிலான தூரம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். விண்வெளி அலகில் இது ‘ மிக அருகில்’ என்று சொல்லக்கூடியதாகும்.
அஸ்டிராய்ட் 2012 DA 14  பூமியைக் கடந்து செல்லும் பாதை
பூமியைச் சுற்றியுள்ள வட்டம் செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை 
பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில்இந்தியாவின் இன்சாட் செயற்கைக்கோள்கள் உட்பட  எண்ணற்ற இணைசுற்று செயற்கைக்கோள்கள் (Geostationary satellites) பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் பூமிக்கும் இடையில் அஸ்டிராய்ட் பறந்து செல்லும். அப்போது அதன் வேகம் மணிக்கு சுமார் 22 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் இருக்கும்.

ஒரு வேளை இது பூமியின் மீது மோதினால் என்ன ஆகும்? இதை மோதல் என்றே சொல்ல முடியாது. உண்மையில் இந்த அஸ்டிராய்ட்    ஒரு போயிங் விமானத்தை விடச் சிறியது. ஆகவே  இந்த அஸ்டிராய்ட் பூமியில் விழுந்தால் என்ன ஆகும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் வானில் பறக்கின்ற விமானம் கீழே விழுவதற்கும் அஸ்டிராய்ட் பூமியில் வந்து விழுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு, போயிங் விமானத்தின் எடை சில நூறு டன். ஆனால்.2012 DA 14 அஸ்டிராய்டின் எடை 1,30,000 டன்.  தவிர, அது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும்.

பூமியின் பெரும் பகுதி கடல்களே. ஆக்வே அது கடலில் விழலாம். தவறி நிலப் பகுதியில் விழுந்தால் அணுகுண்டு வீசப்பட்ட அளவுக்கு விளைவு ஏற்படும். ஒரு நகரம் அழிந்து போகலாம். அவ்வளவு தான். பூமி மொத்த்ததுக்கும் அழிகிற வாய்ப்புக்கே இடமில்லை.

அவ்வப்போது பூமி உள்ள வட்டாரத்தில் தலை காட்டுகின்ற அஸ்டிராய்டுகளை நாஸா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை 1353 அஸ்டிராய்டுகள் பற்றியும் அவை செல்லக்கூடிய பாதை பற்றியும் விரிவான த்கவலகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை நாள் தட்டுப்படாமல்  இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இந்த அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்பெயின் நாட்டில் உள்ள வான் ஆய்வுக்கூடம் இதனைக் கண்டுபிடித்த்தது.

இவ்வளவு நாள் இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு 2012 DA 14 அஸ்டிராய்ட் பூமியை ஒட்டியபடி இருந்து வந்துள்ளதே காரணம். பூமியைப் போலவே இந்த அஸ்டிராய்டும் சூரியனை சுற்றுகிறது.
பச்சை நிறத்தில் இருப்பது சூரியனை பூமி சுற்றும் பாதை
மஞ்சள் நிறத்தில் இருப்பது 2012 DA 14 அஸ்டிராய்ட் சுற்றும் பாதை 
சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365.24 நாட்களை எடுத்துக் கொள்கிறது.இந்த அஸ்டிராய்டோ 366.24 நாட்களை எடுத்துக் கொள்கிற்து.  இரண்டின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ள்ன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த அஸ்டிராய்ட் பூமியை இரண்டு தடவை  கடந்து செல்கின்றது. இந்த ஆண்டுஅதாவது பத்து மாதங்களுக்கு முன்னர்  பிப்ரவரியில் அது பூமியை கடந்து சென்ற போது பூமிக்கும் அந்த அஸ்டிராய்டுக்கும் இடையிலான தொலைவு சுமார் இரண்டரை லட்சம் கிலோ மீட்டராக இருந்தது.

பன்னெடுங்காலமாக ஆண்டுக்கு இரு த்டவை பூமியைக் கடந்து செல்கின்ற ஓர் அஸ்டிராய்ட் இத்தனை நாள் கழித்து இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது தான். ஆகவே தான் இந்த அஸ்டிராய்டினால் ஆபத்து இல்லை என்று நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வருகிற பிப்ரவரியில் இது பூமியை ‘ மிக அருகில் ‘ கட்ந்து செல்லும் நாளன்று விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் கூடி அஸ்டிராய்ட் கடந்து செல்லும் காட்சியைக் காண்பர். இந்த அஸ்டிராய்டை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சக்திமிக்க பைனாகுலர்ஸ் அல்லது டெலஸ்கோப் மூலம் காண முடியும்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்படி உருவாகாமல் போனதாகவும் கருதப்படுகிறது. அப்படி அங்கு ஒரு கிரகம் உருவாகாமல் போனதால் பல லட்சம் துண்டுகள் அந்த கிரகம் இருந்திருக்க வேண்டிய சுற்றுப்பாதையில் அமைந்தபடி சூரியனை சுற்றி வருகின்றன.. அவையே அஸ்டிராய்டுகள் ஆகும். அஸ்டிராய்டுகள் அமைந்த பாதையிலிருந்து விலகி எவ்வளவோ துண்டுகள் தனிப்பாதை அமைந்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றில் சில ஆயிரம் அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகாமையில் வந்து செல்கின்றன.(காண்க: பூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்)http://www.ariviyal.in/2011/10/blog-post_23.html

Dec 3, 2012

புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்

Share Subscribe
புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்ற மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே   ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும்.

சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் ((Mercury) தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர,  அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம்.
புதன் கிரகம்
பகலாக உள்ள பகுதியில் வெயில் 427 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தின் வானில் 11 சூரியன் பிரகாசித்தால் எப்படி? அந்த அளவு வெயில். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரி. புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை.புதன் பொசுங்கிப் போன கிரகம்.

ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில் தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில்  இருப்பதாக  ராடார் மூலம் கணட்றியப்பட்டிருந்தது என்றாலும்  பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை.ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.

பூமியில்  வட தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர் காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழுபனி (Snowfall) உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை.
புதன் கிரகத்தின் வட துருவத்துக்கு மேலாக இருந்தபடி மெசஞ்சர் எடுத்த படம். சிவப்பு நிறத்தில் உள்ளவை  பனிக்கட்டி இருக்கும் இடங்கள்
மாறாக புதன் கிரகத்தில் வட துருவப் பகுதியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை பனிக்கட்டிகள் வெளியிலிருந்து ‘இறக்குமதி’ஆனவை. அதாவது வால் நட்சத்திரங்கள் கொண்டு வந்து சேர்த்தவை.

வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம்.அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமய்ங்களிலும் வால் நட்சத்திரங்கள் கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த  வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு.
மெசஞ்சர் விண்கலம். இதில். Sunshade என்ற பகுதியைக் கவனிக்கவும். சூரியனின் வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் தடுக்கவே இந்த கூரை போன்ற பகுதி. இதை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகின
புதன் கிரகத்தின் வட பகுதியில்  உள்ள ஆழமான பள்ளங்களில் இப்போது  காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள்  பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விதம் வால் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.

புதன் கிரக பனிக்கட்டி உருண்டைகள் வெண்மையாகக் காணப்படுவதற்குப் பதில் அவற்றின் மீது பல செண்டிமீட்டர் கனத்துக்கு கரும் பொடி காணப்படுகிறது. இக்கரிய பொடி  அஸ்டிராய்ட் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வந்தவையே.
புதன் கிரகத்துக்கு மேலாக மெசஞர் விண்கலம். இது ஒரு வரை படம் 
புதன் கிரகத்தில் வட துருவ்ப் பனிக்கட்டிகள் உருகாததற்கு முக்கிய காரணம் உண்டு. பூமியானது தனது அச்சில் 23 டிகிரி சாய்ந்து உள்ளது.ஆகவே தான் வட துருவத்தில் ஆறு மாதம் பகலும் ஆறு மாத இரவும் ஏற்படுகின்றன.  தென் துருவப்  பகுதியிலும் இது போன்று  ஆறு மாதப் பகல், ஆறு மாத இரவு உண்டு..

ஆனால் புதன் கிரகம் கிட்டத்தட்ட அடென்ஷனில் அதாவது சாய்மானம் இன்றி தனது அச்சில்  செங்குத்தாக அமைந்தபடி  சுழல்கிறது.  ஆகவே வட தென் துருவப் பகுதிகளில் என்றும் வெயிலே படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு தான் இந்த பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.

அமெரிக்க நாஸா 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சா விண்கலம்  2008 ஆம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது. அதில் பல வகையான கருவிகள் உள்ளன. அவை தான் புதன் கிரகத்தின் வட பகுதியில் தண்ணீரால் ஆன பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்துள்ளன.
புதன் கிரகத்தை மெசஞ்சர்  நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதைக் காட்டும்  வரை படம். கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது புதன் கிரகம்  
புதன் கிரகத்தின் தென் துருவத்திலும் இதே போல பனிக்கட்டிகள் இருக்கலாம். புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலத்தின்  நீள் வட்ட சுற்றுப்பாதை காரணமாக அதனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியை மட்டுமே ஆராய முடிந்துள்ளது.

புதன் கிரகம் வடிவில் சிறியது.அது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Nov 20, 2012

பூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்

Share Subscribe
’சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான்

பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை.

குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி  மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்க முடியும்.
சுமார் 4 லட்சம் கி.மீ. தொலவிலிருந்து பார்த்தால் பூமி. இது மாதிரி எங்கேனும் உள்ளதா/ 
சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் வேறு எந்த கிரகமும் பூமி மாதிரியில் இல்லை.  சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே எண்ணற்ற வகை வகையான உயிரினங்கள் இருக்கின்றன.

ஆகவே கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால்  எங்கோ இருக்கின்ற ந்ட்சத்திரங்களுக்கு  ( சூரியனும் ஒரு நட்சத்திரமே)  கிரகங்கள் இருக்கின்றனவா/ அப்படியான கிரகங்களில் பூமி மாதிரி கிரகம் இருக்குமா ? என்று அறிவதில் கெப்ளர் விண்கலம் ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது.

சரி, பூமி மாதிரி என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். சைஸில் பூமி மாதிரியாக மட்டும் இருந்தால் போதாது.  சொல்லப்போனால் சுக்கிரன்    (வெள்ளி கிரகம் ) பூமி சைஸில் உள்ளது. ஆனால் அது அக்கினிக் குண்டமாக --அத்துடன்  ”அமுக்கு பிசாசு “போல உள்ளது.

பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ளது. ஆகவே தான் பூமியில் புதனில் உள்ளது போல விபரீத வெப்பமும் விபரீதக் குளிரும் இல்லை. செவ்வாயில் உள்ளது போல கடும் குளிர் இல்லை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

பூமியில் காற்று மண்டலம் உள்ள்து. பூமியின் காற்று மண்டலமே சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துகிறது.இதன் பலனாகவே பூமியில் உயிரினம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

தவிர, பூமியின் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் தண்ணீர் உள்ளது. நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் தண்ணீர் உள்ளது. காற்றழுத்தம் அளவுக்கு மீறிப் போனதால் தான் வெள்ளி கிரகம் பாழாய்ப் போய் விட்டது. கடும் காற்றழுத்தம் உள்ளதால் வெள்ளி கிரகத்தில் போய் இறங்கும் எந்த (ஆளில்லா ) விண்கலமும் அப்பளம் போல நொறுங்கி விடுகிறது.

பூமியைப் போல சந்திரனும் சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ள்து தான். ஆனால் சந்திரனை ஆபத்தான கதிர்கள் தாக்குகின்றன.தகுந்த காப்பு உடை இல்லாமல் சந்திரனில் இருக்க முடியாது.
கெப்ளர் விண்கலம். பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம் 
தகுந்த தூரத்தில் இருந்தால் போதாது. தகுந்த காற்று மண்டலம் இருந்தாலும் போதாது. பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இல்லத்தரசிகள் வீடுகளில் நெருப்பில் அப்பளம் சுடும் போது ஒரே பக்கத்தில் அதிகம் வெப்பம் தாக்கினால் அப்பளம் தீய்ந்து விடும் என்பதை அறிந்து தக்கபடி திருப்பித் திருப்பிப் போடுவர். பூமியின் சுழற்சி வேகம் தக்க அளவில் உள்ளதால் நாம் பிழைத்தோம்.

சந்திரனைப் பாருங்கள். சந்திரனில் தொடர்ந்து 14 நாள் வெயில்.தொடர்ந்து  14 நாள் இரவு. சந்திரனில் ஒருவர் பகலாக உள்ள புறத்தில் 14 நாள் இருந்தால் பொசுங்கிப் போய்விடுவார்.. இரவாக உள்ள புறத்தில்14 நாள் இருந்தால் குளிரில் விறைத்து செத்துப் போய்விடுவார்.

கெப்ளர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன் மாதிரியில் பனிக்கட்டி உருண்டையாக உள்ள கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரத்திலிருந்து ( அந்த நட்சத்திர மண்டலத்தின் சூரியன் என வைத்துக்கொள்ளுங்களேன்) தகுந்த தூரத்தில் உள்ள ஓரிரு கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.

எனினும் கெப்ளர் கண்டுபிடித்துள்ள பல  கிரகங்கள் பற்றிய தகவலகள் இன்னும் பகுத்து ஆராயப்படவில்லை.அவற்றில் ஒரு வேளை பூமி போன்ற கிரகம் இருக்கலாம்.

கெப்ளர் விண்கலம்  எப்படி கிரகங்களைக் கண்டுபிடிக்கிறது?.இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வானில் மிக உயரத்தில் விமானம் போகிற சத்தமே கேட்காமல் இருக்க, அந்த விமானம் ஒரு கணம் அந்த நட்சத்திரத்தை மறைக்கிறது. அந்த நட்சத்திரத்தை ம்றைத்தது விமானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அது மாதிரியில தான் நட்சத்திரங்களின் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இதை வேறு விதமாகவும் வருணிக்கலாம். அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு  வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
கெப்ளர் கண்டுபிடித்த சிறிய கிரகம். இது ஓவியர் வ்ரைந்த படம் 
இதே விதமாக கெப்ளர் விண்கலம்  வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு  எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது. கெப்ளர் இப்படியாக அனுப்புகின்ற படங்கள், தகவல்கள் ஆகியவற்றை  நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ந்து வரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் நட்சத்திரங்கள் ஆராயப்பட்டுள்ளன.

வானில் தென்படுகின்ற நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்ற்னர். அந்த அளவில் நமது அண்டத்தில் (Galaxy) கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இந்த பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில் பூமி மாதிரி எங்குமே இருக்க வாய்ப்பில்லை  என்று கருதக்கூடாது என்று ஒரு நிபுணர் கூறினார். தவிர இப்பிரஞ்சத்தில் பூமி தான் நடுநாயகமாக இருப்பதாகவும் கருதலாகாது என்றார் அவர்.
.

Nov 14, 2012

கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

Share Subscribe
” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று  விமான  நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம்.

விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன.
 நூற்றுக்கு நூறு தாவர எண்ணெய் மூலம் பறக்கும் விமானம் முன்னே ( வலது புறம்) செல்ல மற்றொரு விமானம் பின் தொடர்ந்து செல்கிறது
அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது.  தாவர எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடியும் என்ப்தை அது நிரூபித்தது. உண்மையில் அது சமையல் எண்ணெயே. ஆப்பிரிக்க நாடுகளில் அந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

உலகில் நாடுகளிடையே பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற பயணி விமானங்கள் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டவை. இந்த விமானங்கள் ஒரு வகையான் உயர் ரக கெரசினைப் பயன்படுத்தி இயங்குகின்றன.இதில் ஜெட்-A, ஜெட் A 1  என இரு வகைகள் உண்டு ( ஆனால் முன்புறம் சுழலிகளைக் கொண்ட விமானங்கள் ஒரு வகை பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன).

காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் புவியின் ச்ராசரி வெப்ப நிலை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியில் காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானத்தைக் குறைப்பதில் தங்களது பங்காக விமான நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின்                   ( இவற்றில் பெட்ரோல், டீசல், கெரசின் முதலானவை அடங்கும்)  உபயோகத்தைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
எதியோப்பிய கடுகு வகைச் செடி பூத்த நிலையில்
இந்த நோக்கில் வழக்கமான விமான எரிபொருளுடன் தாவர எண்ணெயை ஓரளவு கலப்புச் செய்து விமானங்களில் பயன்படுத்தும் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

தேங்காய் எண்ணெய், காட்டாமணக்கு எண்ணெய், பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெய்  போன்றவற்றைத் தக்கபடி பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து தாவர எரிபொருளை  (bio-fuel) எடுத்து அந்த எரிபொருள் கெரசினுடன் சேர்த்து விமானங்களில் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்பட்டது.ஒரு வகைப் பாசியிலிருந்து பெறப்பட்ட தாவர எரிபொருளும் இவற்றில் அடங்கும்.

ஏர்பஸ், போயிங் ஆகிய விமானங்களிலும் இவ்விதம் வழக்கமான விமான எரிபொருளுடன் ஓரளவு தாவர எரிபொருட்கள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்துக்கும் இவ்விதம் பயன்படுத்தப்பட்டது உண்டு.

இப்போது முதல் தடவையாக முற்றிலும் தாவர எரிபொருளைப் பயன்படுத்தி விமானம் ஓட்டப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த விமான நிறுவனம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று  சுமார் 15 பயணிகள் ஏறிச் செல்லக்கூடிய பயணி விமானத்தில் இந்த தாவர எரிபொருளைப் பயன்படுத்தியது. அந்த விமானம் வானில் பறந்து சென்ற போது அதிலிருந்து வெளிப்படும் சூடான வாயுக்களில் தீங்கான பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று அறிவதற்காக இன்னொரு விமானம் ‘மோப்பம்” பிடித்தபடி பின்னால் பறந்து சென்றது. அதாவது வாயு சாம்பிள்களை சேகரித்தது.(மேலே  படம் காண்க)
எதியோப்பிய கடுகுச் செடி. இதைக் கீரையாகவும் உண்கின்றன
கனடா விமானம் பயன்படுத்திய இந்த தாவர எரிபொருள் Brassica Carinata எனப்ப்படும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாகும். இத்தாவரத்துக்கு எதியோப்பிய கடுகு என்ற பெயரும் உண்டு. அதாவது இது கடுகு வகையைச் சேர்ந்தது. ( இந்தியாவில் வட மானிலங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் Brassica Nigra வகையைச் சேர்ந்தது) தமிழகத்தில் சமையலுக்கு கடுகு பயன்படுத்தப்பட்டாலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை.

எதியோப்பியாவில் விளையும் கடுகு வகையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.எதியோப்பிய மக்கள் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தவிர, இச்செடிகளை கீரை போல ச்மைத்து உண்கின்றனர்

இக்கட்டுரையில் தொடக்கத்தில் விமானத்தின் எரிபொருள் டாங்கியில் கடுகு எண்ணெய அப்படியே ஊற்றப்படுவது போல வேடிக்கையாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அது அப்படி அல்ல. எதியோப்பிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆலைகளில்  பல வகைகளில் பக்குவப்படுத்தப்பட்டு அதன் பின்னரே விமானத்தில் தாவர எரிபொருளாகத் தயாரிக்கப்படுகிறது.

விமானத்துக்கான தாவர எரிபொருளாக மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் வழக்கமான விமான எரிபொருளுக்கும் ( விசேஷ கெரசின்) பார்வைக்கு வித்தியாசமே கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது

கனடாவின் தென் பகுதியிலும் அமெரிக்காவின் வட ப்குதியிலும் உள்ள வறண்ட நிலங்கள் எதியோப்பிய வகை சாகுபடிக்கு ஏற்றது என வருணிக்கப்பட்டுள்ளது.

 நூற்றுக்கு நூறு தாவர எரிபொருளைப் பயன்படுத்தும் கட்டம் விரைவில் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு 2500 ஹெக்டேர் நிலத்தில் எதியோப்பிய க்டுகு பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் விமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்கள் பக்கம் திரும்புவது நல்லதாகத் தோன்றவில்லை என்று சில வட்டாரங்களில் கருதப்படுகிறது..இவற்றை அடுத்து பெரும் பண பலம் கொண்ட பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களும் தங்களது பாரவையைத் திருப்பலாம்.அவ்வித நிலையில் விவசாய நிலங்கள் கபளீகரம் ஆகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.






http://library.thinkquest.org/C0126543/thesun.htm

Nov 12, 2012

சலிப்புத் தட்டாத அதிசயம்

Share Subscribe
பூரண சூரிய கிரகணம் நம்மை பிரமிக்க வைக்கிற இயற்கை அதிசயம். சில நிமிஷங்கள் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

வருகிற 14 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம்  நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியில் தெரியும். வட கோடியில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற நகரம் மிக வாய்ப்பான இடம் என்பதால் பூரண சூரிய கிரகணத்தைக் காண ஏராளமான பேர் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர்.
சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைத்து நிற்கிறது. மறைக்கப்பட்ட சூரியனைச் சுற்றி ஒளிர்வது தான் சூரிய ஜோதி.(corona)
சூரியன் உதயமாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் சூரியன் சுமார் 2 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படும். அந்த நேரத்தில் சூரியனை ஆராயவும் விரிவாகப் படங்களை எடுக்கவும் உலகின் பல ப்குதிகளிலிருந்து விஞ்ஞானிகள் ஏற்கெனவே கெய்ர்ன்ஸ் நகருக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

சர்வதேச வானவியல் சங்கத்தில் சூரிய கிரகண ஆராய்ச்சிக்கென தனி பிரிவு உள்ளது. அதன் தலைவரான ஜே பாசாஷோப் சூரிய கிரகண நிபுணர். எங்காவது சூரிய கிரகணம் என்றால் இவர் உடனே கிளம்பி விடுவார். இதுவரை அவர் 55 சூரிய கிரகணங்களை ஆராய்ந்துள்ளார். இப்போதைய சூரிய கிரகணத்தை ஆராய அவர் விசேஷக் கருவிகளுடன் முகாம் போட்டுள்ளார்.சூரிய கிரகணத்தை இப்படி விழுந்து விழுந்து ஆராய்வானேன்?
1988 ஆம் ஆண்டு பூரண் சூரிய கிரகணம். சூரிய ஜோதி வேறு விதமாக உள்ளதைக் கவனிக்கவும்.
சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி (செண்டிகிரேட்) தான். எனினும் சூரியனைச் சுற்றி அமைந்த சூரிய ஜோதி (Corona)  ஒரு மிலியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது. இது ஏன் என்பதை அறிவதற்காகத் தான் சூரிய கிரகணத்தின் போது ஆராய்ச்சி நடத்துகின்றனர். சூரிய ஜோதி இவ்வளவு வெப்பம் கொண்டதாக இருப்பதற்கான காரணம் இன்னும் முற்றிலுமாகக் கண்டறியப்படவில்லை.
1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம். சூரிய ஜோதியை கவனிக்கவும் 
தவிர, சூரிய ஜோதி எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. சூரியனில் கரும் புள்ளிகள் (Sunspots) அதிகமாக இருக்கும் காலத்தில் சூரிய ஜோதி சூரியனின் எல்லாப் புறங்களிலும் காணப்படுகிறது. சில சமயங்களில் இடது புறத்திலும் வலது புறத்திலும் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே தான் ஒவ்வொரு பூரண சூரிய கிரகணத்தின் போதும் எடுக்கப்படுகின்ற படங்கள் வெவ்வேறு விதமாக உள்ளன.

இந்த சூரிய ஜோதி பிரும்மாண்டமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து இது பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் வியாபித்து நிற்கிறது. இது சூரியனின் வளி மண்டலம் போன்றது.

சூரியன் தினமும் தலை காட்டுகிறது. தினமும் சூரிய ஜோதி தெரியாதா?    சூரிய கிரகணத்தின் போது மட்டும் என்ன புதிதாகத் தெரியப் போகிறது.என்று கேட்கலாம்.
இது  2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம்
சூரியனின் பிரகாசம் காரணமாக சூரிய ஜோதியை மற்ற நாட்களில்  காண முடியாது. சூரியனின் ஒளித் தட்டை முற்றிலுமாக மறைத்தால் தான் சூரியனைச் சுற்றியுள்ள சூரிய ஜோதி தென்படும். ஆகவே பூமியிலிருந்து சூரியனை ஆராய்கின்ற பல டெலஸ்கோப்புகளில் சூரிய ஒளித்தட்டை மறைக்கின்ற தகடு ஒன்றைப் பொருத்திக் கொண்டு சூரிய ஜோதியை ஆராய்கின்றனர்.
சோஹோ விண்கலம் சூரிய ஒளித் தட்டை மறைத்த்படி எடுத்த படம்
சூரியனை விரிவாக ஆராய விண்ணில் சோஹோ (SOHO) என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலமும் ஸ்டீரியோ என்னும் பெயர் கொண்ட இரு விண்கலங்களும் உள்ளன. சூரிய ஒளித் தட்டை மறைக்க இவற்றில் விசேஷ ஏற்பாடு உள்ளது. ஆகவே இவை சூரிய ஜோதியை அவ்வப்போது படம் எடுத்து அனுப்புகின்றன. ஆனால் சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு இவை எல்லாம் செயற்கை ஏற்பாடுகளே/

சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு மிகச் சிறந்த இயற்கை ஏற்பாடு உள்ளது. அது தான் பூரண சூரிய கிரகணம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்காக வந்து நிற்கிற சந்திரன் சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைத்து விடுகிறது.
சோஹோ விண்கலம்
இவ்விதம் சூரியன் மறைக்கப்படுகிற நேரம் சில நிமிஷங்களே. அந்த சில நிமிஷ வாய்ப்புக்காகத்தான் விஞ்ஞானிகள் எங்கெல்லாம் பூரண் சூரிய கிர்கணம் தெரியுமோ அந்த இடங்களுக்கு ஓடுகின்றனர்.

சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைக்கின்ற நேரம் இயற்கையின் விதிகளின்படி    ஒரு போதும் ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க் முடியாது. ஆஸ்திரேலியாவில் 14 ஆம் தேதி நிகழும் பூரண சூரிய கிரகண்த்தின் போது சூரியன் இரண்டு நிமிஷமே மறைக்கப்படும். அந்த இரண்டு நிமிஷ நேரத்தில் சூரிய ஜோதியை பல்வேறு கருவிகளைப் பய்னப்டுத்தி ஆராய்வர். புகைப்படங்களையும் எடுப்பர்.

இதில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ப்ல மாத காலம் திட்டமிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து ஓரிடத்துக்குச் சென்று திறந்த வெளியில் சூரியனை நோக்கி  எல்லாக் கருவிகளையும் ஆயத்தம் செய்து வானை நோக்கி சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த கண நேரத்துக்காகக் காத்திருக்கும் போது எங்கிருந்தோ வருகின்ற மேகங்கள் சூரியனை மறைத்து விடும்.  அத்தனை முயற்சியும் வீண். இவ்விதம் நிகழ்ந்து நொந்து போன விஞ்ஞானிகள் பலர் உண்டு.

அப்படி ஏற்படாமல் இருக்க ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள  விஞ்ஞானிகளுக்கு நமது வாழ்த்துகள்.


Nov 10, 2012

சூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;

Share Subscribe
ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார்.

பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும்   விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட  விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம்.

பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?

சூரியனிலிருந்து ’சூரியக் காற்று ’துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன
முதலில் சூரியனைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.சூரியனிலிருந்து ஓயாது ஒழியாது சக்தி மிக்க துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 14 லட்சம் கிலோ மீட்டர். இத்துகள்களின் வேகம் அவ்வப்போது மாறும். வெளிப்படும் துகள்களின் அளவும் அவ்வப்போது மாறும்.

இவை துகள்களே என்றாலும்  நிபுணர்கள் இவற்றுக்குப் பொருத்தமில்லாமல் ‘சூரியக் காற்று’(Solar Wind) என்று பெயர் வைத்து விட்டார்கள். நாமும் சூரியக் காற்று என்றே குறிப்பிடுவோம்.

இந்த சூரியக் காற்று சூரியனிலிருந்து கிளம்பி நாலா புறங்களிலும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனைச் சுற்றுகின்ற பூமி, செவ்வாய், வியாழன் சனி என எல்லாக் கிரகங்களையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்கிறது.. (உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத் துகள்கள் நம்மைத் தாக்காதபடி  பூமியின்  காந்த  மண்டலம் தடுத்து விடுகிறது.)

சூரிய மண்டலத்தின் எல்லையிலுள்ள புளூட்டோ கிரகத்தையும் தாண்டி இத்துகள்கள் சென்று கொண்டிருக்கின்றன.தடுப்ப்தற்கு எதுவும் இன்றி இவை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றன.  எனினும் பல நூறு கோடி கிலோ மீட்டரைக் கடந்த பிறகு   மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிலையில் அவை  இட்து புறமும் வலது புறமும் பிரிந்து செல்ல ஆரம்பிக்கின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான சூரியக் காற்றுத் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்துள்ளதைக் காட்டும் வரிவடிவப் படம்
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மறந்து விடலாகாது.  அந்த நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஆற்றல் மிக்க  நுண் துகள்கள் தான் சூரியக் காற்று மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து விடுகின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான நட்சத்திர மண்டல துகள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விண்வெளியின் அப்பகுதியில் அவற்றின் சக்தி தான் அதிகம். ஆகவே சூரியக் காற்று இவ்விதம் தடுக்கப்படுகின்ற விண்வெளிப் பகுதியை சூரிய மண்டலத்தின் எல்லை (Heliopause)  என்று சொல்லலாம்.  சூரியக் காற்று அத்தோடு நின்று விடுகிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?.
வாயேஜர் 1 விண்கலம்
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு  1977 ஆம் ஆண்டில் வாயேஜர் -1  என்னும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.  அந்த விண்கலம்  வியாழன், சனி ஆகிய கிரகங்கள நெருங்கி ஆராய்ந்து பல அரிய படங்களையும் அத்துடன் அந்த இரு கிரகங்கள் பற்றிய த்கவல்களையும் சேகரித்து அனுப்பியது. எந்த கிரகத்திலும் இற்ங்காமல் அவற்றைக் கடந்து சென்ற  அந்த் விண்கலம் அதன் பிறகு தொடர்ந்து விண்வெளியை நோக்கிப் ப்ய்ணத்தைத் தொடர்ந்தது.

வாயேஜரின் முக்கிய பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது இடைவிடாது விண்வெளி நிலைமைகள் பற்றித் தகவல் அனுப்பி வருகிற்து.. சூரியக் காற்றின் துகள்கள் பற்றியும் அது தெரிவித்து வருகிறது.  எனவே எவ்வளவு துகள்கள் வாயேஜரின் கருவியில் பதிவாகின்றன என்ற தகவல்  நாஸாவின் தலைமைக் கேந்திரத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது

வாயேஜரிலிருந்து  கடந்த செப்டம்பரில்  கிடைத்த தகவலகளை ஆராய்ந்த போது சூரியக் காற்றின் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்து விட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் அண்டவெளியிலிருந்து சூரிய மண்டலத்தைத் தாக்கும் ஆற்றல் மிக்க துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

இதிலிருந்து தான் வாயேஜர் சூரிய மண்டல எல்லையை எட்டி விட்டதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப் பகுதி அமைந்துள்ள தூரம் சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் ஆகும். இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு.

சூரிய மண்டலத்தின் எல்லை அவ்வளவு தொலைவில் உள்ளதாகச் சொல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பூமி முதலான கிரகங்கள் தெரியாது. சூரியன் பிரகாசமான ஒளி புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத் தெரியும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)

சூரிய மண்டலத்துக்கு குட்பை சொல்லி விட்டு வெளியேறும் வாயேஜர் 1 எங்கே செல்லும்? அண்டவெளி என்பது  எல்லையற்ற வெளி.    ஒபியுகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர மண்டலத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கும்.  இந்த நட்சத்திர மண்டலம் விருச்சிக ராசிக்கு அருகே உள்ளது. வாயேஜர் 1  எந்த நட்சத்திரத்தையும் நெருங்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாயேஜரில் வைக்கப்பட்டுள்ள CD
வாயேஜர் விண்கலத்தில் ஒரு CD  வைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய மணடலம்  மற்றும் பூமி முதலான கிரகங்கள் எங்கே உள்ளன என்ற தகவலகள் உள்ளன. ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் ப்டங்கள்  35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி, என பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.  உலகின் பல்வேறு வகையான இசைகளின் சாம்பிள்களும் இதில் இடம் பெற்றுள்ளன... இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகி கேசர்பாய் கேர்கரின் குரலும் இவற்றில் அடங்கும்.

ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) வாயேஜர் விண்கலத்தைக் கைப்பற்ற நேர்ந்தால் பூமி பற்றியும் மனித இனம் பற்றியும் தெரிவிக்கும் நோக்கில் தான் இந்த CD வைக்கப்பட்டுள்ளது.   அப்படி அன்னிய கிரகவாசிகள் இருக்க நேரிட்டு அவர்களின் கையில் இது கிடைப்பதற்கு அனேகமாக வாய்ப்பே இல்லை என்று பிரபல விஞ்ஞானி கார்ல் சாகன் கூறியுள்ளார்.
வாயேஜர் விண்கலங்கள், பயனீர் விண்கலங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகள்
நாஸா கடந்த பல ஆண்டுகளில் வாயேஜர் 1 விண்கலத்தை  மட்டுமன்றி வாயேஜர் 2,  ப்யனீர் 10,  பயனீர் 11 ஆகிய ஆளில்லா விண்கலங்களையும் அனுப்பியுள்ளது. ஒரு கால கட்டத்தில் இவையும் சூரிய மண்டல எல்லையை விட்டு வெளியேறும்.


Nov 3, 2012

சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி

Share Subscribe
 நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது  நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்

குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.

எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை   நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தால் தண்ணீர் மிகுந்த அளவுக்கு சூடேறும்.

அந்த சூடான தண்ணீரை மேலே கொண்டு வந்து அதிலிருந்து நீராவியைப் பிரித்து டர்பைன்களுக்கு அனுப்பலாம்.  நீராவியானது டர்பைன்களைச் சுழலச் செய்யும். அப்போது அவற்றுடன் இணைந்த ஜெனரேட்டர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ( அனல் மின் நிலையங்களில் இப்படித்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் நீரை சூடேற்றி  நீராவியைப் பெற நிலக்கரி எரிக்கப்படுகிறது.)

ஆரிகன் மாகாணத்தில் அமையும் புவி வெப்ப மின் நிலைய செயல்பாட்டை விளக்கும் படம் 
அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் அவிந்த எரிமலை அருகே இப்போது நிலத்தடிப் பாறைகளின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சார உறபத்திக்கென ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முன்னோடித் திட்டம் என வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உள்ளது.

இங்கு நிலத்தடிப் பாறைகளின் வெப்பம் சுமார் 300 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலை கக்கி 1300 ஆண்டுகள் ஆகின்றன.

இங்குள்ள பாறைகள் நீர் ஊடுருவாதவை. ஆகவே முதலில் அப்பாறைகளில் இயற்கையாக உள்ள வெடிப்புகளைப் பயன்படுத்தி பாறைகளூக்குள்ளே ஏராளமான நுண்ணிய பாதைகளை ஏற்படுத்துவர். இதற்கு விசேஷ முறைகள் உள்ளன்.

இவ்விதம் நுண்ணிய பாதைகளை ஏற்படுத்திய பின்னர் மேலிருந்து உள்ளே சாதாரணத் த்ண்ணீரைச் செலுத்தும் போது அத்தண்ணீர் 2.7 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள சூடான பாறைகளின் ஊடே சென்று சூடான நீராக மாறும். அத்தண்ணீர் மேலே மின் நிலையத்துக்கு கொண்டுவரப்படும். இவ்வித மின் நிலையமானது புவி வெப்ப  மின் நிலையம் (Geo-thermal power station) என்று குறிப்பிடப்படுகிறது.

உலகில் ஏற்கெனவே இந்த மாதிரியான மின் நிலையங்கள் பல உள்ளன. ஆனால் அவை நிலத்துக்கு அடியில் இயற்கையாக உள்ள வெப்ப நீரை எடுத்துப் பயன்படுத்துபவை. நியூசீலந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வித மின் நிலையங்கள் உள்ளன. ஐஸ்லாந்தின் மொத்த மின் உற்பத்தியில் 30 சதவிகிதம் இவ்வித மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. ஐஸ்லாந்தில் நிறைய எரிமலைகளும் வென்னீர் ஊற்றுகளும் உள்ளன.

அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் நிறுவப்பட உள்ள புவி வெப்ப  மின் நிலையமானது இவற்றிலிருந்து வேறுபட்டது. புதுமையானது. சாதாரண நீர் உள்ளே செலுத்தப்பட்டு சூடான பாறைகள் மூலம்  வெப்ப நீராக மாற்றப்படுகிறது. இது இங்கு அவிந்த எரிமலை அருகே நிறுவப்பட்டாலும் உலகில் எந்த இடத்திலும் இவ்வித மின் நிலையத்தை அமைக்க முடியும் இத்திட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Nov 1, 2012

பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

Share Subscribe
பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற  ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு  அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன்.

 அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த பதிலுடன் மேலும் சில விளக்கத்தையும் இங்கு சேர்த்திருக்கிறேன்.

”NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will seea entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, prayto God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.

இது உண்மையா?.....உங்களிடமிருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.”  -சுதாகர்

to Sudhakar
Dear Sir
   நான் அறிந்த வரையில் நாஸா  அப்ப்டி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. total blackout  என்பது என்ன என்று புரியவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

 அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது . மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை.  பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
 
பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.
 
சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல்.
 நாஸா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல. 
 
Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே.

 படித்தவர்களும் இந்த வதந்திகளை நம்ப முற்படுவது வேதனையைத் தருகிறது. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரப்ஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை.
 வீண் வதந்திகளை நம்பாதீர்கள். எனது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

ராமதுரை

இப்போது கூடுதல் விளக்கம்:

சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று ( பெரிய கிரகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.

அப்படி பிரும்மாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால் ,  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.

சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து கிளப்பும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி கிளம்பும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.

ஒரு வேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே ( சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும்.

ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரும்மாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.

ஆக்வே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும்.
(ப்டங்கள் இல்லை, மன்னிக்கவும்)



Oct 31, 2012

நிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வருமா?

Share Subscribe
பொதுவில் கூறுவதானால் அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுக்கப்படுமானால் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஐரோப்பாவில் தென் பகுதியில் அமைந்த ஸ்பெயின் நாட்டில் லார்கா (Lorca) என்னுடத்தில் 2011 மே மாதம் 12 ஆம் தேதி  பூகம்பம் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்.130 பேர் காயமடைந்தனர்.20 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த பூக்மபம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்தனர்

நிலத்துக்கு அடியிலிருந்து அளவுக்கு மீறி தண்ணீர் எடுத்ததே அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன்ர். அந்த இடம் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடம்.

விஞ்ஞானிகள் விசேஷ ராடார் பொருத்தப்ப்ட்ட செயற்கைக்கோள்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை விரிவாக ஆராய்ந்தனர். பூகம்பம் நிகழ்ந்த போது நிலத்தடிப் பாறைகள் எவ்விதம் எங்கு நோக்கி நகர்ந்தன என்பது இந்த ஆய்வுகளில் தெரிய வந்தது.. இப்படி நிலத்தடிப் பாறைகள் நகர்ந்த இடம் தான் அளவுக்கு மீறி நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட இடங்களாகும்.
இந்த ஆய்வுகள் மனித நடவடிக்கைகளால் நில நடுக்கம், பூகம்பம் போன்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளன என்று கனடாவில் உள்ள மேற்கு அண்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பாபியோ கொன்சால்ஸ் கூறியுள்ளார். அவரது தலைமையில் தான் இந்த ஆய்வுகள் நடைபெற்றன.

லார்கா நகருக்கு அருகே நிலத்தடியில் இயற்கையில் நிறையவே நீர் இருந்து வந்துள்ளது.  பாசனத்துக்காக இஷடத்துக்கு நீர் எடுக்கப்பட்டு வந்துள்ளதால் கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 250 மீட்டர் இறங்கி விட்டது. இவ்வித நிலையில் அதன் அருகே நிலத்துக்கு அடியில் பாறை விரிசல் இருந்த இடத்தில் பாறைகள் உட்தளர்ந்து கீழே இறங்கின.. இதுவே பூகம்பத்துக்கு வழி வகுத்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரிக்டர் அளவில் 5.1 என்பது கடும் பூகம்பம் அல்ல. ஆனால் நிலத்துக்கு அடியில் பாறைகளின் சரிவு மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்பதால் தான் பூகம்பத்தின் விளைவு கடுமையாகியது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.


Oct 18, 2012

39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .

Share Subscribe
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரியர் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் கீழே குதித்த காட்சி உலகம் முழுவதிலும் டிவியில் காட்டப்பட்டது.

அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து  கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட  அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய  சாதனை   விசேஷமாகத்  தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
உயரே கிளம்ப பலூன் ஆயத்தமாகிறது
அப்படியின்றி பலூனுக்கு அடியில் இணைக்கப்பட்ட  பெரிய பிரம்புக் கூடையில் உட்கார்ந்தபடி சென்றிருந்தால் 39 கிலோ மீட்டர் உயரத்தை எட்டுவதற்கு முன்னரே அவர்  ‘ மேல் லோகத்துக்கு ‘ போய்ச் சேர்ந்திருப்பார். அது ஏன்?

1862 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இருவரும்  ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட வாய் திறந்த பெரிய பிரம்புக் கூடைக்குள் அமர்ந்தபடி  உயரே கிளம்பினர்.அப்போதெல்லாம் உயரே செல்வதற்கு இந்த முறையே  பின்பற்றப்பட்டது. 11 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும் இருவரும் கடும் குளிரால் நடுங்கினர். அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 11 டிகிரி.

அந்த இருவருக்கும் கைகால்கள் உணர்விழந்தன. கண் இருண்டது. நினைவு தடுமாற ஆரம்பித்தது. கிளைஷர் நினைவிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக உணர்ந்த காக்ஸ்வெல் கைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க  ரெடி
உடனே பலூன் தொடர்ந்து  மேலே செல்வதற்குப் பதில் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர. அவர்கள் சென்ற உயரம் 11,887 மீட்டர்  காற்று மண்டல நிலைமைகள் பற்றி அவ்வளவாக அறியப்படாத காலத்தில் அவர்கள் இவ்வாறு உயரே சென்றனர்.

வானில் உயரே செல்லச் செல்ல காற்று அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். என்னதான் சுவாசித்தாலும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

ஒரு ஸ்பூன் மருந்தை அரைத் தம்ளர் தண்ணீருடன் சேர்த்து அருந்தினால் மருந்து உடலில் சேரும். அப்படியின்றி ஒரு ஸ்பூன் மருந்தை அண்டா தண்ணீரில் சேர்த்து அதிலிருந்து அரைத் தம்ளர் தண்ணீரை எடுத்து அருந்தினால் உடலில் மருந்து சேர வாய்ப்பே இல்லை.

அது மாதிரியில் அடர்த்தி குறைந்த காற்றை என்னதான் முழுக்க உள்ளே இழுத்து சுவாசித்தாலும் உடலுக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் மிக அற்ப அளவில் தான் இருக்கும்.  இதல்லாமல உயரே செல்லச் செல்ல பல ஆபத்துகள் உண்டு.
பலூனிலிருந்து கீழே குதிக்கிறார்
ஆகவே தான் நகரங்களுக்கு இடையில்,--- கண்டங்களுக்கு இடையில்   சுமார் 40,00 ஆயிரம் அடி (சுமார் 12 கிலோ மீட்டர் ) உயரத்தில் பறக்கின்ற பயணி விமானங்களில் பயணிகள் பிரச்சினையின்றி சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்..

தவிர, ஏதோ அவசர நிலைமை ஏற்பட்டால் பயணிகள் சுவாசிப்பதற்கென விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஆக்சிஜன் அளிக்கும் கருவி உள்ளது.  இந்த விமானங்கள் ஒரு வகையில் காற்று அடைத்த ’பலூன்களே ’ ’விமானத்தின் வெளிப்புற சுவர்களில் ஓட்டை விழுந்தால் விமானத்தில் உள்ள அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுவர்.

சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத நிலையில் சுமார் 9100 மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு நிமிஷ நேரம் இருந்தால்  நினைவு போய் விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில 15 வினாடியில் நினைவு இழப்பார்.
கீழ் நோக்கிப் பயணம்
வானில் 19.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலே சென்றால் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பிக்கும். உடலில் உள்ள ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும். உடல் பயங்கரமாக வீங்கும். மொததத்தில் மரணம் நிச்சய்ம்.

ஆகவே தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு  அடுக்குகளாக அமைந்த விண்வெளிக் காப்பு உடையை (Space suit) அணிந்திருந்தவராக உயரே சென்றார்.

 அடுக்கடுக்கான இந்த ஆடைகள் அவருக்குத் தகுந்த காற்றழுத்தத்தை அளித்தன. வெளியே நிலவிய குளிர் தாக்காமல் தடுத்தன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பு அளித்தன. இவ்விதமாக இந்த உடை அவரைப் பல வகைகளிலும் பாதுகாத்தது.

அவர் பலூன் மூலம் உயரே செல்லும் போதும்  பின்னர் கீழே குதிக்கும் போதும் அவரது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க அவரது உடலில் பல உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவரது உடையில் கம்ப்யூட்டர் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன.காமிராவும் பொருத்தப்பட்டிருந்தது.
பாராசூட் தரையைத் தொடுவதற்கு முன்
அவர் இவ்வித விசேஷ உடையை அணிந்திருந்தாலும் பலூன் உயரே சென்ற போது அவர்  பலூனின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கூட்டுக்குள் தான் இருந்தார். பலூன் உயரே கிளம்புவதற்கு முன்னர் ஒரு நிபுணர் கூறுகையில் பெலிக்ஸ் 16 வித ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்றார்.

பெலிக்ஸ் பாம்கார்ட்னர்  பலூனில் உயரே கிளம்பு முன்னர்  விசேஷ உணவை அருந்த வேண்டியிருந்தது. வயிறு, குடல் என உடலில் எங்கும் வாயுவே இருக்கக்கூடாது என்பதற்காக விசேஷ உணவு. உயரே கிளம்பும் நேரம் வரை சுமார் 2 மணி நேரம் அவர் சுத்த ஆக்சிஜனை சுவாசிக்கும்படி செய்யப்பட்டார்.

ரத்தத்தில் சிறிது கூட நைடரஜன் வாயு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ( நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் 78 சதவிகிதம் உள்ளது. ஆக்சிஜன் 21 சதவிகிதம் உள்ள்து)

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 9-30 மணிக்கு பெலிக்ஸ் பாம்கார்ட்னரை சுமந்தபடி ஹீலியம் வாயு நிரப்பப்ப்டட பலூன் உயரே கிளம்பியது.  ஹீலியம் வாயு காற்றை விட லேசானது என்பதால் அது மேலே செல்லத் தொடங்கியது.

பலூன் 1,28,000 அடி உயரத்தை ( 39 கிலோ மீட்டர் ) எட்டுவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அந்த உய்ரத்தை எட்டியதும் பெலிக்ஸ் தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கீழ் நோக்கிக் குதித்தார்.
அப்பாடி, வந்தாச்சு
மிக உயரத்திலிருந்து குதிப்பதிலும் ஆபத்துகள் உண்டு. தொடர்ந்து கரணம் அடித்தப்டி விழக்கூடாது. அப்படி ஏற்பட்டால் நினைவு போய் விடும். கண்கள், மூளை, இதயம் ஆகியவை பாதிக்கப்படும்.

 சில வினாடிகள் கரணம் அடித்தபடி விழுந்து கொண்டிருந்த பெலிக்ஸ் நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்டார். முறைப்படி அதாவது தலை கீழ் நோக்கி இருக்க, கைகள் உடலோடு ஒட்டியிருக்க -- ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற  நீச்சல் வீரர்களின்  பாணியில்--- கீழ் நோக்கி இறங்கலானார். அவர் நான்கு நிமிஷம் 20 வினாடி நேரம் வான் வழியே தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் கீழ் நோக்கி மணிக்கு 1340 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தார். இது ஒலி வேகத்தைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு வேகத்தை மனித உடல் தாங்குமா என்ற கேள்வி இருந்தது. நல்லவேளையாக பெலிக்ஸுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் இந்த அளவு வேகத்தில் ’ப்யணம்’ செய்த முதல் நபர் அவர் தான்.

தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் திட்டமிட்டபடி  விரிந்தது. பின்னர் அவர் பொத்தென்று தரையில் வந்து குதித்தார்.உயரே இருந்து கீழே வந்து சேர 10 நிமிஷங்களே ஆகின.

உலகில் வானில் மிக உயரத்திலிருந்து குதித்த சாதனை, அதி வேகமாகப் பாய்ந்த சாதனை. பலூன் மூலம் மிக உயரத்துக்குச் சென்ற சாதனை என அவர் மூன்று சாதனைகளைப் படைத்தவரானார்.

பெலிக்ஸ் 16 வயதிலேயே பாராசூட்டிலிருந்து குதிப்பதில் பயிற்சி பெற ஆரம்பித்தவர். மிக உயர்ந்த கட்டடங்கள் மிக உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றிலிருந்து குதித்து சாதனை படைத்தவர். அவருக்கு அதே வேலை.

.எனினும் மிக உயரத்திலிருந்து குதிக்க விசேஷ விண்வெளிக் காப்பு உடை அணிய வேண்டும் என்ற நிலைமை வந்த போது அதை அணிவதற்கு  பெலிக்ஸ் தயங்கினார். சிறு இடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அவரிடம் பயம் தோன்றியது. இதை Claustrophobia  என்று கூறுவர். மனோதத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவருக்கு இந்த பயம் நீங்கியது.

அதன் பிறகு தான் அவர் வானில் 21 கிலோ மீட்டர், 29 கிலோ மீட்டர்  என  மிக உய்ரத்திலிருந்து குதிப்பதில் அனுபவம் பெற்றார். அதன் முத்தாய்ப்பாகவே இப்போது 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.

 ஒருவர் ஒரு சாதனை படைத்தால் அதை மிஞ்ச மற்றவர்கள்  முனைவது உண்டு. ஆனால் பெலிக்ஸின் சாதனையை மற்றவர் பின்பற்றுவது எளிதல்ல. ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்கு ஆன செலவே இரண்டரை லட்சம் டாலர்.அவர் அணிந்திருந்த விசேஷ உடைக்கு ஆன செல்வும் மிக அதிகம். மொத்தத்தில் பல கோடி டாலர் செலவாகியிருக்கும். செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சாதித்து விட்டேன், வெற்றி, வெற்றி
பெலிக்ஸ் ப்த்திரமாக உயரே சென்று விட்டுத் திரும்புவதற்கு அவருக்கு பக்கபலமாக 100  பேர் அடங்கிய குழு செயல்பட்டது. அதில் எஞ்சினியர்கள், மருத்துவ் நிபுணர்கள் முத்லானோர் அடங்குவர்.

இது பெலிக்ஸின் தனிப்பட்ட முயற்சி அல்ல.இது உலகின் பல நாடுகளிலும்  Red Bull  எனப்படும்  எனர்ஜி பானத்தை விற்கும் பிரும்மாண்டமான ஆஸ்திரிய  நிறுவனம் தனது பானத்துக்கு விளம்பரம் செய்வதற்காகக் கையாண்ட  ஏற்பாடே.

ஆனாலும் நாஸா விஞ்ஞானிகள் இதில் அக்கறை காட்டினர். உடலியல் தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்கள் பெலிக்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

பெலிக்ஸின் அனுப்வம் எதிர்காலத்தில் தகுந்த விண்வெளி உடையை உருவாக்கவும் அவசர நிலைமைகளில் விண்வெளி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவற்கும் மேலும் சிறப்பான பலூன்களை உருவாக்கவும்  உதவும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது முற்றிலும் விளம்பர ஸ்டண்ட அல்ல.

காற்று மண்டல நிலைமைகளும் பெலிக்ஸ் போன்றோரின் அனுபவ்மும் காட்டுவது இது தான். அடிப்படையில் மனிதன் ஒரு நில வாழ் உயிரினம்.