Mar 24, 2012

மேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்

Share Subscribe
சுக்கிரனின் பார்வை இருந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று ஜோசியர்கள் கூறுவார்கள். அப்படியானால், நீங்கள் வருகிற நாட்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானைக் காண வேண்டும். மேற்கே தெரிகிற சுக்கிரன் கிரகத்தின் - அதாவது வெள்ளி(Venus) கிரகத்தின் - பார்வை உங்கள் மீது படும். ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்தின் பெயர் சுக்கிரன்.

மேற்கு வானை நீங்கள் தொடர்ந்து உற்று நோக்கினால் குரு பார்வையும் உங்கள் மீது விழும். இதன் மூலம் ஒரு வேளை குரு பலனும் கிடைக்கலாம். வியாழன்(Jupiter) கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் குரு என்று பெயர்.

சுருங்கச் சொன்னால் சூரிய மண்டலத்தின் இரு கிரகங்களை - அதாவது வெள்ளி, வியாழன் ஆகிய இரு கிரகங்களை - ஒரே சமயத்தில் வானில் வெறும் கண்ணால் காண்பதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த இரண்டில் வெள்ளி தான் அதிகப் பிரகாசம் கொண்டது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வியாழனைக் காட்டிலும் வெள்ளி நமக்கு அருகாமையில் உள்ளது. இரண்டாவதாக வெள்ளி கிரகத்தைப் போர்த்துள்ள மேகங்கள் சூரிய ஒளியை நன்கு பிரதிபலிப்பவை.

பலரும் தங்களை அறியாமலேயே வானில் பல தடவை வெள்ளி கிரகத்தைப் பார்த்திருக்கலாம். அதனுடைய பிரகாசம் காரணமாகப் பலரும் அதை நட்சத்திரம் என்றே கருதியிருப்பர். அக்கிரகத்துக்கு வெள்ளி என்று பெயர் ஏற்பட்டதற்கு அதன் பிரகாசமே காரணம்.

2012 மார்ச் 13 ஆம் தேதி. மேற்கு வானில் வெள்ளி, வியாழன்
கிரகங்கள் தென்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நன்றி: விக்கிபிடியா
மேற்கு வானில் அல்லது கிழக்கு வானில் இரண்டு அல்லது மூன்று கிரகங்களைக் காண்பது அப்படி ஒன்றும் அதிசயமல்ல. அந்த அளவில் இப்போது மேற்கே வெள்ளியும் வியாழனும் தெரிகின்றன. வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியன்று நீங்கள் இரவு ஏழு மணி வாக்கில் மேற்கு நோக்கி நின்று கழுத்தை சற்றே உயர்த்தினால் இந்த் இரண்டையும் காணலாம். மேற்புறம் பிரகாசமாகத் தெரிவது வெள்ளி. அதற்கு சற்று கீழே இடது புறத்தில் தெரிவது வியாழன்.

மார்ச் 24-25 தேதி இரவு 7 மணி.
மேற்கு நோக்கி நின்று கழுத்தை ச்ற்றே உயர்த்தினால்
வெள்ளி, வியாழன் கிரகங்களைக் காணலாம்.
(வரைபடம்)
கிரகங்களில் எதற்குமே சொந்த ஒளி கிடையாது. சூரிய ஒளி அவற்றின் மீது படும் போது அந்த ஒளியை அவை பிரதிபலிக்கின்றன. சிறுவர்கள் திறந்த வெளியில் வெயிலில் நின்று கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை வீட்டுக்குள்ளாகத் திருப்பி விளையாடுவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது,

பூமி உட்பட எல்லா கிரகங்களும் சூரியனை வெவ்வேறு வேகத்த்தில் சுற்றி வருகின்றன. இக்காரணத்தால் இவை வானில் வெவ்வேறு இடங்க்ளில் தென்படும். வசதியைக் கருதி நாம் வானை 12 ராசிகளாகப் பிரித்துள்ளோம். ஆகவே ஒவ்வொரு கிரகமும் பல சமயங்களிலும் வெவ்வேறு ராசியில் இருக்கும். எல்லா கிரகங்களுமே தினமும் வானில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நிலவு போலத் தெரிவது பூமியே.சந்திரனின் வானில் பூமி இவ்விதமாகத் தான் தெரியும். இது சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் எடுத்த படம். .இது மாதிரித் தான் கிரகங்கள் நமது வானில் (வடிவில் சிறியதாகத்) தெரிகின்றன
நாம் வெறும் கண்ணால் வெள்ளி(Venus), வியாழன்(Jupiter), செவ்வாய்(Mars), சனி(Saturn), புதன்(Mercury) ஆகிய ஐந்து கிரகங்களை மட்டுமே காண இயலும் (நன்றாகக் கண்ணுக்குத் தெரியும் வரிசைப்படி). வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியன்று நீங்கள் இரவு பத்து மணி அளவில் கிழக்குத் திசையில் வானை நோக்கினால் செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரங்களையும் பார்க்கலாம். அடிவானத்துக்கு சற்று மேலே சனி கிரகம் சற்றே மங்கலாகத் தெரியும். செவ்வாய் கிரகம் கிட்டத்தட்ட தலைக்கு மேலே சிவந்த நிறத்தில் காணப்படும்.

மார்ச் 24-25 தேதி இரவு 10 மணி.
கிழக்கு அடிவானத்துக்கு சற்று மேலே சனி கிரகம்.
கிட்டத்தட்ட தலைக்கு மேலே செவ்வாய் கிரகம்.
(வரைபடம்)
அதாவது ஒரே நாள் இரவில் மேற்கே இரு கிரகங்களையும் கிழக்கே இரண்டு கிரகங்களையும் பார்க்கின்ற வாய்ப்பு இப்போது உள்ளது. மேலே சொன்ன பட்டியலிலிருந்து விட்டுப் போனது புதன் கிரகம் மட்டுமே.

புதனைக் காண்பது என்பது மிக அரிது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம். புதன் கிரகம் சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்குத் திசையில் அடிவானில் சிறிது நேரமே தெரியும். அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கே அடிவானில் சிறிது நேரம் தெரியும். வருகிற 30 ஆம் தேதி வாக்கில் விடியற்காலையில் சூரிய உதயத்துக்கு சற்று முன்னதாக கிழக்கு வானில் புதன் தென்படலாம். அடிவானில் எப்போதும் மேகங்கள் இருக்கும் என்பதாலும் புதன் மிக மிக மங்கலாக இருக்கும் என்பதாலும் அது உங்கள் கண்ணில் படாமல் போனால் வியப்பில்லை.

டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஒரு பிரபல வானவியல் விஞ்ஞானி தமது மரணப் படுக்கையில் ”புதன் கிரகத்தை கடைசி வரை கண்ணால் பார்க்காமலே சாகிறேன்” என்று வருந்தினார்.

பொன் கிடைத்தாலும் புதன் (வானில்) கிடைக்காது என்ற பழமொழி ஏற்பட்டது ஏன் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

Mar 22, 2012

வென்றவர் ஐன்ஸ்டைன்

Share Subscribe
ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என 1905 ஆம் ஆண்டில் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தப்பாக இருக்குமோ என்று அண்மையில் ஐயம் கிளம்பியது. நியூட்ரினோ (Neutrino) என்னும் அணுத் துகள் தொடர்பாக ஐரோப்பாவில் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட பல பரிசோதனைகள் இவ்வித ஐயத்தை ஏற்படுத்தின. ஏனெனில் நியூட்ரினோ துகள் ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதாக அந்த பரிசோதனைகள் காட்டின. கடந்த டிசம்பரில் மறுபடி நடந்த பரிசோதனைகளும் அதே முடிவைக் காட்டின.

செப்டம்பர் 2011: நியூட்ரினோ பற்றி
பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி
கடைசியில் ’ஜெயிக்கப்போவது யாரு?’ என்ற கேள்விக்குறியோடு இந்த மாத மத்தியில் மறுபடி நடந்த பரிசோதனைகளில் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்பது தெரிய வந்தது. ஐன்ஸடைனின் கொள்கை தான் இறுதியில் ஜெயித்தது.

ஐன்ஸ்டைனின் கொள்கை மீது இததனை காலம் இலலாமல் திடீரென சந்தேகம் வந்தது ஏன்? நியூட்ரினோ என்பது என்ன?

நியூட்ரினோ என்பது மிகச் சிறிய அணுத் துகள். அண்மைக் காலம் வரை நிறைய பேருக்கு அப்படி ஒரு துகள் இருக்கிறது என்பதே தெரியாது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூட்ரினோ ஒளி வேகத்தை மிஞ்சி விட்டதாக செய்தி வெளியாகிய போது அது உலகப் பிரசித்தி பெற்றது.

பள்ளியில் இயற்பியல் பாடத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் ஆகியவை பற்றிப் படித்தது பலருக்கும் நினைவிருக்கும். அணுவுக்குள் இடம் பெற்றுள்ள நியூட்ரான் (Neutron) வேறு, நியூட்ரினோ வேறு.

நியூரினோ துகள்கள் சூரியனில் அணுச்சேர்க்கையின் (Nuclear Fusion) போது உண்டாகின்றன (பிற நட்சத்திரங்களிலும் இது நடக்கிறது). சூரியனிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை -- நமது உடலையும் -- துளைத்துக் கொண்டு ம்றுபுறம் வெளிப்பட்டு விண்வெளியை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கின்றன. எந்த சக்தியாலும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்தடுத்து ஐம்பது பூமிகளை வைத்தாலும் இவை அனைத்தையும் ஊடுருவிச் சென்று விடும்.

எலக்ட்ரான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ என மூன்று வகை உண்டு. எலக்ட்ரான் நியூட்ரினோவுக்கு சோலார் நியூட்ரினோ என்ற பெயரும் உண்டு (Electron/Solar, Tau, Muon). சூரியனில் நடக்கின்ற அணுச்சேர்க்கையின் விளைவாக சூரியனிலிருந்து இவ்வளவு சோலார் நியூட்ரினோக்கள் வர வேண்டும் என நிபுணர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.

ஆனால் அதை விடக் குறைவான நியூட்ரினோக்களே வந்து சேருகின்றன என்பதைப் பரிசோதனைகள் காட்டின. மீதி சோலார் நியூட்ரினோக்கள் எங்கே போயின என்ற கேள்வி எழுந்தது. சூரியனில் அணுச்சேர்க்கை நடைபெறுவது பற்றிய கொள்கையே தவறாக இருக்குமோ என விஞ்ஞானிகள் கவலை கொண்டனர்.

காணாமல் போகும் நியூட்ரினோக்கள் பற்றிய பிரச்சினை விஞ்ஞானிகளை சுமார் 30 ஆண்டுக்காலம் திண்டாட வைத்தது. கடைசியில் 2001 ஆம் ஆண்டில் கனடாவில் நடந்த ஒரு பரிசோதனையின் போது தான் சோலார் நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகிற வழியில் -- பச்சை சட்டையைக் கழற்றி விட்டு மஞ்சள் நிற சட்டையைப் போட்டுக் கொள்வது போல -- வேறு நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது தெரிய வந்தது. எல்லா நியூட்ரினோக்களையும் கூட்டிப் பார்த்தால் கணக்கு சரியாக இருந்தது.

பெரிய ஆராய்ச்சிக்கூடத்தில் மனிதனாலும் நியூட்ரினோக்களை உண்டாக்க முடியும். ஐரோப்பாவில் ஜெனீவா நகருக்கு அருகே CERN  எனப்படும் உலகப் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி அமைப்பானது பாதாளத்தில் பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி பல வகையான ஆராய்ச்சிகளைப் பல ஆண்டுக்காலமாக நடத்தி வருகிறது.

ஜெனீவாவில் பாதாளத்தில் அமைந்த
CERN ஆராய்ச்சிக்கூடத்தின் ஒரு பகுதி
அந்த ஆராய்ச்சிக்கூட நிபுணர்கள் நியூட்ரினோக்களை உண்டாக்கி அவற்றை பாதாளம் வழியே -- நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே -- இத்தாலியில் உள்ள வேறு ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்புவதில் ஈடுபட்டனர். பூமியைத் துளைத்துச் செல்லும் நியூட்ரினோக்களுக்கு நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே இத்தாலியின் ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்வதில் பிரச்சினை இருக்கவில்லை.எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் போகின்ற வழியில் வேறு நியூட்ரினோக்களாக மாறுவது பற்றி மேலும் அறிவதே இதன் நோக்கமாகும்.

இவை எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை அறிவது ஆராய்ச்சியின் பிரதான நோக்கம் இல்லை என்றாலும் நியூட்ரினோக்களின் வேகத்தைக் கண்டறிவதற்கு மிக நுணுக்கமான கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ஆராய்ச்சிகளின் போது தான் நியூட்ரினோக்கள் -- ஐன்ஸ்டைனின் கொள்கையை மீறி -- ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின. முதலில் நிபுணர்கள் இதை நம்பவில்லை. பல நூறு தடவை பரிசோதனைகளை நடத்திப் பார்த்தனர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக எல்லாப் பரிசோதனைகளும் காட்டவே தான் கடைசியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நியூட்ரினோக்கள் பற்றிய இத் தகவலை வெளியிட்டனர்.

ஐன்ஸ்டைன்: தப்புக்கு வாய்ப்பில்லை
ஐன்ஸ்டைனின் கொள்கை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தில் கடந்த டிசம்பரில் வேறு வகையில் பரிசோதனைகளை நடத்திய போதும் நியூட்ரினோக்கள் ஐன்ஸடைனின் கொள்கை தப்பு என்பது போல செயல்பட்டன. அதாவது நியூட்ரினோக்களின் வேகத்தை அளந்த கருவிகள் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை விட அதிக வேகத்தில் செல்வதாகவே காட்டின.

கடைசியில் இந்த மாதம் மறுபடி பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை வேறு குழுவினர் நடத்தினர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தில் தான் செல்கின்றன. அவை ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்று இப்போதைய பரிசோதனைகள் காட்டியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை ஆராய்ச்சிக்கூட சார்பில் டாக்டர் செண்ட்ரோ மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்டார். "இது விஷயத்தில் எனக்கு ஆரம்ப முதலே சந்தேகம் இருந்து வந்தது" என்றார் அவர்.

நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக முந்தைய பரிசோதனைகள் காட்டியதற்கு கருவிகளில் இருந்த கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ஒளி வேகத்தை எதுவும் மிஞ்ச முடியாது என ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. ஐன்ஸ்டைனா கொக்கா?

பிரச்சினை தீர்ந்து விட்டாலும் வருகிற மாதங்களில் நியூட்ரினோக்களின் வேகத்தை அளக்க அமெரிக்காவிலும், ஜப்பானிலும் இதே மாதிரி பரிசோதனைகள் நடத்தப்படலாம்.

எல்லாம் சரி, ஒளியின் வேகம் என்ன? ஒளியானது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் (முப்பது கோடி மீட்டர்) வேகத்தில் செல்கிறது. சரியாகச் சொன்னால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்.

கொசுறு: தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ 1300 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

Mar 17, 2012

சூரியன் உதிக்காமல் போனால்...

Share Subscribe
தமிழ் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் ஒருமுறை படித்தது :

கேள்வி: சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?
பதில்: ரொம்ப ஜாலி. படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை...

வேடிக்கையாக பதில் தரப்பட்டுள்ளது. சூரியன் உதிக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சூரியனிடமிருந்து வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வெப்பம் கிடைக்காமல் பல வார காலம் அல்லது பல மாத காலம் தூசு மண்டலம் சூரியனை மறைத்தபடி இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. அப்படியான நிலைமை ஏற்பட்டால். விபரீத விளைவுகள் ஏற்படும். பூமி ஒரேயடிகாகக் குளிர்ந்துவிடும். இதை எரிமலையால் ஏற்பட்ட குளிர் பருவம் (Volcanic winter) என்பர்.

கோடையில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய பருவத்தில் பனிப்பொழிவு (Snowfall) இருக்கும். பயிர்கள் பொய்த்து விடும். மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுக் கலவரங்கள் மூளும். மக்கள் பட்டினியால் சாவார்கள். குளிர் வாட்டும். நோய்கள் பெருகும். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெறும் ஊகம் அல்ல.

உண்மையில் இப்படியான நிலைமை 1816 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதாவது அப்போது சூரியன் மறைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள தம்போரா (Tambora) என்ற எரிமலையே அதற்குக் காரணம். அதற்கு முந்தைய ஆண்டில்(1815) தம்போரா எரிமலை பயங்கரமாக வெடித்தது. 5000 ஆண்டுகளில் காணப்படாத பிரம்மாண்டமான வெடிப்பு அது. அந்த எரிமலையிலிருந்து பெரும் புகை வெளிப்பட்டது. கோடானு கோடி டன் தூசு வெளிப்பட்டது.

தம்போரா எரிமலை, இந்தோனேசியா
இத்தூசு வானில் 40 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்றது. தூசு மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்தன. விரைவில் அவை பூமியைப் போர்த்துக் கொண்டன. சூரியன் பெரிதும் மறைக்கப்பட்டது. கருப்புக் கண்ணாடியால் பார்த்தால் தெரிவது போல சூரியன் மங்கலான வட்டமாகத் தெரிந்தது.

வானில் இருந்த தூசு காரணமாக சூரியன் வெவ்வேறு சமயங்களில் பச்சை நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் தெரிந்தது.

தூசு மண்டலத்தால் சூரியன் மறைக்கப்பட்டபோது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைக்காலம். ஆனால் நல்ல வெயில் அடிப்பதற்குப் பதில் கடும் குளிர் வீசியது. நியூயார்க் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் பனிப் பொழிவு (Snowfall) இருந்தது. பயிர்களை படர் பனி (Frost) தாக்கியது. பயிர்கள் பொய்த்தன. ஐரோப்பிய நாடுகளும் இதே போல கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் பல நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் கலவரங்கள் வெடித்தன. நோய்களால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.ஆகவே 1816 ஆம் ஆண்டை கோடையே இல்லாத ஆண்டு என்று கூறுவர்.

கிரகடோவா எரிமலை
தம்போரா எரிமலை வெடித்ததற்குப் பின்னர் அதே இந்தோனேசியாவில் 1883 ஆம் ஆண்டில் கிரகடோவா எரிமலை (Krakatoa) வெடித்தது. அப்போது ஏற்பட்ட தூசு முகில் பூமியை பல முறை சுற்றி வந்தது. கிரகடோவா வெடித்ததால் ஏற்பட்ட நிலைமைகள் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை.

அதே இந்தோனேசியாவில் உள்ள டோபா எரிமலை (Toba) இன்னும் மோசம். அந்த எரிமலை சுமார் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்தது. அப்போது தோன்றிய பிரம்மாண்டமான எரிமலை சாம்பல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவைக் கப்பியது.

டோபா எரிமலை, சுமத்ரா தீவு, இந்தோனேசியா.
இந்த எரிமலையின் வாய் இப்போது
பெரிய ஏரியாக உள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் நிலத்துக்கு அடியில் நிபுணர்கள் தோண்டிப் பார்த்த போது சுமார் 15 செண்டிமீட்டர் கனத்துக்கு எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. நிபுணர்கள் தோண்டிய இடங்களில் ஆந்திரத்தில் உள்ள ஜுவாலாபுரம் என்ற இடமும் ஒன்றாகும். . இங்கு காணப்பட்ட சாம்பல் படிவு டோபா எரிமலை வெடித்த போது வெளிப்பட்ட சாம்பலே என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திரத்தில் நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி.
வெள்ளையாக சாம்பல் படிந்தது தெரிகிறது.
டோபா எரிமலை வெடிப்பினால் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உலகின் மக்கள் தொகை வெறும் 10 ஆயிரத்துக்கு குறைந்தது என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றி சர்ச்சை உள்ளது என்றாலும் பெரும்பாலான மக்கள் அழிந்தனர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. டோபா வெடிப்பினால் ஐரோப்பா அருகே உள்ள ஐஸ்லாந்திலும் அமில மழை பெய்தது. இந்த பெரும் வெடிப்பைத் தொடர்ந்து பூமி குளிர்ந்தது. அதைத் தொடர்ந்து பனி யுகம் தோன்றியது.

கீழே உள்ள படம் டோபா எரிமலை வெடிப்பின் தாக்கத்தைக் காட்டுகிறது. வட்டமான சிவப்புப் புள்ளி டோபா எரிமலை. நீல நிறப் புள்ளிகள் டோபா எரிமலைச் சாம்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களைக் காட்டுகின்றன. சிவப்பு கோட்டுக்கு உள்பக்கம் வாழ்ந்த மக்களில் யாரும் மிஞ்சவில்லை என்று சில நிபுணர்க்ள் கூறியபோதிலும் பலர் அதை ஏற்கவில்லை.

டோபா எரிமலை வெடிப்பின் தாக்கம்
தம்போரா, கிரகடோவா மற்றூம் டோபா எரிமலைகள் பூமிக்குள் சில்லுகள்  புதையும் இடங்களில் அமைந்துள்ளவை. சில்லுப் பெயர்ச்சியால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய ஆபத்து எரிமலை வெடிப்பால் பூமியை தூசுப் படலம் சூழ்ந்து கொள்வதே ஆகும்.

இன்று தம்போரா எரிமலை அமைதியின் வடிவமாக இருக்கிறது. டோபா எரிமலை ஏரி வடிவில் அமைதியாக உள்ளது.

இவற்றை வைத்து எரிமலைகள் மனித குலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று முடிவு கட்டிவிடலாகாது. பூமியில் மனித குலம் தோன்றியதில் எரிமலைகளின் வாயுக்களும் மின்னல்களும் முக்கிய பங்களித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தவிர, எப்போதோ எரிமலைக் குழம்புகள் வழிந்தோடிய நிலங்கள் பயிர் விளைச்சலுக்கு மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன். பல சமயங்களிலும் பாதுகாப்பைக் கருதி எரிமலை அடிவாரங்களிலிருந்து மக்களை வெளியேற்ற முற்பட்டால் அவர்கள் வெளியேற மறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆகவே எரிமலைகளை மனித குலத்தின் எதிரி என்றும் சொல்லிவிட முடியாது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்.

சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?

பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் நமக்கு சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழ்கின்றன. பூமி தனது அச்சில் சுழல்வது நின்று விடுவதாக வைத்துக் கொண்டால், சூரிய உதயமே இருக்காது. பூமியின் ஒரு பாதியில் வானில் சூரியன் நிலை குத்தி நிற்கும் (பூமி உருண்டை என்பதால்). அங்கு என்றெனும் பகலாகவே இருக்கும். அப்படியான நிலையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.

பூமியின் மறுபாதியில் என்றென்றும் இரவாக இருக்கும். சூரிய வெப்பம் இல்லாமல் போய்விடுவதால் கடும் குளிர் வீசும். அனைத்தும் உறைந்து போய் விடும். பயிர்கள் வளராது. மக்கள் குளிரில் விறைத்து மடிந்து போவர். அல்லது பட்டினியால், நோய்களால் செத்து மடிவர். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இருக்காது. பூமி செத்து விடும். பூமி தனது அச்சில் சுழன்று, அதனால் சூரிய உதயமும் அஸ்தமனமும் இருந்தால் தான் பூமியில் உயிரினம் இருக்க முடியும். சூரியன் இல்லையேல் - அதாவது பகலும் இரவும் இல்லையேல் - உயிரினமே இராது. உயிர் வாழ்க்கையின் ஆதாரமே சூரியன் தான்.

”ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” - இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்.


தொடர்புடைய பதிவு: பூகம்பம் ஏன், எரிமலை ஏன், சுனாமி ஏன்

Mar 10, 2012

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

Share Subscribe
ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார்.

பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம்.

இமயமலை அடிவாரத்தில்
பூகம்பம் நிகழக்கூடிய இடங்கள்
இந்திய துணைக் கண்ட சில்லு ஆண்டுக்கு 5 செண்டி மீட்டர் விகிதம் வட கிழக்கு திசையில் நகருகிறது. யுரேசிய சில்லு மிக மெதுவாக வடக்கு நோக்கி நகருக்கிறது. எனவே இந்தியச் சில்லு யுரேசிய சில்லுவை மேலும் மேலும் நெருக்குகிறது. இதன் விளைவாகவே பாகிஸ்தானின் வட பகுதியில் தொடங்கி அஸ்ஸாம் வரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் அடிக்கடி பூகம்பம் நிகழ்கிறது. துருக்கியிலும் இவ்விதம் நிகழ்கிறது. ஆகவே துருக்கி நாட்டில் பூகம்பம் அதிகம்.

சில்லுகள் உரசும் இடங்களிலும் பூகம்பம் நிச்சயம். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் இரண்டு சில்லுகள் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. ஆகவே அங்கு பூகம்பங்கள் நிக்ழ்கின்றன.

ஒரு சில்லு மற்றொரு சில்லுக்கு அடியில் புதையும் இடங்களிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கு அடியிலும், ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியிலும் இவ்விதம் சில்லுகள் புதைகின்றன. நியூசிலந்திலும் இதே காரணத்தால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

நீங்கள் மாவு மில்லில் அரைபட்டு வந்து டின்னில் வந்து விழும் மாவைத் தொட்டால் மாவு மிகவும் சூடாக இருக்கும். சில்லுகளின் விளிம்புகள் புதையுண்டு போகும் போது பிரும்மாண்டமான பாறைப் பாளங்கள் இதே போல அரைபட்டு பூமிக்குள் செல்கின்றன. பாறைப் பாளங்கள் இப்படி அரைபடும் போது அவை பயங்கமாகச் சூடேறி நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. இந்த நெருப்புக் குழம்புதான் எரிமலை வாய் வழியே வெளியே வருகிறது.

இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகள்
பூமியில் மிக ஆழத்தில் நெருப்புக் குழம்பு உள்ளது. ஆனால் எரிமலைகள் வழியே வெளி வருவது பூமியில் ஆழத்தில் உள்ள குழம்பு அல்ல. சில்லுகள் அரைபடும் போது தோன்றும் நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப்படுகிறது. ஆகவே சில்லுகள் புதையுண்டு போகும் இடங்களில் எரிமலைகள் உண்டு.

சில்லுப் பெயர்ச்சி விஷயத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தோனேசியா என்று சொல்லலாம். இந்த நாட்டில் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றுமே உண்டு. இந்தோனேசியாவின் தென் பகுதியில்(இந்திய) ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் பசிபிக் சில்லு இதே போல யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. 17,600 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் 150 எரிமலைகள் உள்ளதில் வியப்பில்லை.ஜப்பானுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியிலும் இதே நிலைமை தான். ஆகவே ஜப்பானிலும் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றும் உள்ளன.

ஜப்பானில் மட்டுமன்றி அலாஸ்கா, வட அமெரிக்காவின் மேற்குக் கரை, தென் அமெரிக்காவின் மேற்குக் கரை, நியூசிலந்து ஆகியவற்றில் எரிமலைகள் உள்ளன. வேறு விதமாகச் சொல்வதானால் பசிபிக் கடலைச் சுற்றி உள்ள நிலப் பகுதிகளில் எரிமலைகள் உள்ளன. இதை நெருப்பு வளையம் (Ring of Fire)  என்று சொல்வதுண்டு (கீழே படம் காண்க).

பசிபிக் கடலைச் சுற்றி எரிமலைகள்
அமைந்துள்ளதைக் காட்டும் வரைபடம்
நிலப் பகுதியில் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உண்டு. இந்த கடலடி பூகம்பங்கள் தான் சுனாமியைத் தோற்றுவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்டதே.

2004 ஆம் ஆண்டில் தமிழகத்தைத் தாக்கிய
சுனாமியின் மையம்.
பூகம்பத்திலிருந்து மனிதன் ஓடி ஒளிய வாய்ப்பில்லை. ஆனால் கடும் பூகம்பத்தையும் தாங்குகின்ற கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில் நுட்பத்தை மனிதன் உருவாகியிருக்கிறான. ஆகவே உயிர்ச் சேதம் பொருட்சேதத்தைப் பெரிதும் குறைத்துக் கொள்ள இயலும்.

பூகம்பத்தை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய இதுவரை வழி கண்டுபிடிக்கப்படவில்லை. குறிபிட்ட பிராந்தியத்தில் தோராயமாக சில ஆண்டுகளில் பூகம்பம் ஏற்படலாம் என்று இப்போது அறிய முடிகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற அந்த பூகம்பம் சில ஆண்டுகளில் நிகழலாம் அல்லது 40 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம். இப்போதுள்ள தொழில்நுட்பத்தைக்கொண்டு என்றைக்கு, எப்போது, எந்த அளவுக்குக் கடுமையான பூகம்பம் தோன்றும் என்று அறிவதற்கு வாய்ப்பே இல்லை.

எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்பதும் தெரியாது. ஆனால் நோயாளியின் மார்பில் டாக்டர் ஸ்தெதாஸ்கோப் வைத்துப் பார்ப்பது போல எரிமலைச் சரிவுகளில் உணர் கருவிகளைப் பதித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எரிமலைகள் அனைத்தும் தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதில்லை.(இத்தாலியில் உள்ள ஸ்டிராம்போலி எரிமலை இதற்கு விதிவிலக்கு). எரிமலைகள் நீண்ட காலம் ஓய்ந்திருக்கும். பின்னர் உறுமல்களுடன் நெருப்பைக் கக்க ஆரம்பிக்கலாம். அப்படி நெருப்பைக் கக்கினாலும் அந்த நெருப்புக் குழம்பு மனிதன் நடக்கின்ற வேகத்தில் தான் வழிந்தோடும். தப்பி ஓட அவகாசம் உண்டு. மிக அபூர்வமாக எரிமலைகள் மிக பயங்கரமாக வெடித்து பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கும்.

சுனாமிக்களைப் பொருத்தவரையில் ஒரு விசித்திர நிலைமை உள்ளது. சுனாமி தாக்கலாம் என்று கண்டறிந்து கூற முடியும். கடலில் இதற்கான கருவிகளை நிறுவுகின்றனர். சுனாமிக்குக் காரணமான கடலடி பூகம்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளவர்கள் எளிதில் உயிர் தப்ப இயலும். அதாவது இந்தோனேசியா அருகில கடலடி பூகம்பம் ஏற்பட்டால் சுனாமி அலைகள் தமிழகத்தின் கரைக்கு வந்து சேர சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆகவே தக்க நேரத்தில் எச்சரிக்கை வந்தால் தமிழகத்தின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல போதுமான அவகாசம் கிடைக்கும். 2004 ஆம் ஆண்டில் இவ்வித எச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் கடலடி பூகம்பம் நிகழும் இடத்துக்கு மிக அருகில் வாழ்பவர்களைப் பொருத்த வரையில் எச்சரிக்கை விடப்பட்ட சில நிமிஷங்களில் சுனாமி அலைகள் வந்து தாக்கும் நிலை உள்ளது. மக்கள் தப்பிச் செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்காமல் போய் விடுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்தோனேசியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பம் ஏற்படுவதாகக் கூறினோம். ஆனால் ஒரு சில்லின் நடுவே பூகம்பங்கள் நிகழத்தான் செய்கின்றன. 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பம் இதற்கு உதாரணம். இந்த இடம் சில்லுகள் சந்திக்கும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளது. இவ்வித பூகம்பங்கள் Mid-Plate Earthquakes  எனப்படுகின்றன. நிபுணர்கள் இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை பூகம்பத்திற்கான திட்டவட்டமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில்லுகள் புதையுண்டு போகிற இடங்களில் எரிமலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டோம். ஆனால் சில்லுகள் சந்திக்காத, புதையுண்டு போகின்ற நிலைமை இல்லாத, இடங்களிலும் அபூர்வமாக எரிமலைகள் உண்டு. பசிபிக் சில்லின் நட்ட நடுவே அமைந்திருக்கும் ஹவாய் தீவுகளில் இப்படியான எரிமலைகள் உள்ளன.

ஹவாய் தீவு எரிமலை 
இவை Intra-plate volcanoes அல்லது Hot Spots  என வருணிக்கப்படுகின்றன. பூமியில் மிக ஆழத்திலிருந்து நெருப்புக் குழம்பு செங்குத்தாக மேலே வருவதால் இவை உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வித எரிமலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Yellowstone எரிமலையும் இந்த வகையைச் சேர்ந்ததே.

சில்லுப் பெயர்ச்சியின் விளைவாக ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிக்கள் ஆகியவை பூமியில் மனிதனை அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.அப்படி நடப்பதாக இருந்தால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்க வேண்டும். கால்ம காலமாக பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எரிமலைகளில் ஏதோ ஒன்று தான் எப்போதாவது பெரிய அளவில் பொங்கி நாசத்தை உண்டாக்குகிறது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற சுனாமிக்கள் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன

ஆனால் ஒரு பெரிய எரிமலை வெடிப்பதால் ஏற்படும் துணை விளைவுகள் மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.அடுத்த பதிவில் அதைக் கவனிப்போம்.