Jun 18, 2015

மேற்கு வானில் அருகருகே வியாழன், வெள்ளி

Share Subscribe
அடுத்த சில தினங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு  திசையில் நோக்கினால் வியாழன்(Jupiter), வெள்ளி(Venus) ஆகிய இரு கிரகங்களும் அருகருகே இருப்பதைக் காணலாம்.
ஜூன் 23 ஆம் தேதி இரவு 7-30 மணி வாக்கில் மேற்கு வானில் வியாழனும் வெள்ளியும் இவ்விதமாகத் தெரியும்.
வியாழன் சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.(Stellarium/NR)
இது ஒன்றும் அபூர்வமானது அல்ல. பல மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். எனினும் வியாழன், வெள்ளி கிரகங்களைப் பார்த்திராதவர்களுக்கு இவற்றைக் காண்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

வானில் வெறும் கண்ணால் பார்த்தால் அதிகப் பிரகாசத்துடன் தெரிவது வெள்ளி கிரகமே. வியாழன் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.


வருகிற 23 ஆம் தேதிக்குப் பிறகு இந்த இரு கிரகங்களும் மேலும் நெருக்கமாகத் தெரியும். ஜூன் 29 ஆம் தேதியன்றும் ஜூன் 30 ஆம் தேதியன்றும் அனேகமாக இந்த இரண்டும் சேர்ந்து ஒரே புள்ளியாகத் தெரியும். அதாவது வெள்ளி கிரகத்துக்கு நேர்  பின்னால் வியாழன் அமைந்ததாகி விடும்.  இது ஒருவரின் பின்னால் இன்னொருவர் நிற்பது போன்றது.
படத்தில் 1. சூரியன். 2. பூமி. 3. வெள்ளி. 4. வியாழன்..
சூரியனை வியாழனும் வெள்ளியும் தனித்தனிப் பாதைகளில் சுற்றுகின்றன.
ஆனாலும் பூமியிருந்து பார்க்கும் போது (ஆரஞ்சு நிறக் கோடு) இந்த இரண்டு கிரகங்களும்
அருகருகே இருப்பது போன்று காட்சி அளிக்கின்றன.(வரைபடம் NR)
  அப்போது வெள்ளி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 10 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார்  77 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும்.  பூமியைப் போலவே வியாழன், வெள்ளி ஆகிய இரண்டும் தனித்தனிப் பாதைகளில் சூரியனை சுற்றி வருபவை.

ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டும் தனித்தனியே தெரிய ஆரம்பிக்கும்.. அதுவரை வியாழன் மேலேயும் வெள்ளி கீழேயும் இருந்த நிலைமை மாறி வெள்ளி கிரகம் சற்று மேலேயும் வியாழன் சற்று கீழாகவும் தெரியும். வானில் வெள்ளி கிரகம் தனது சுற்றுப்பாதையில் வேகமாக நகருவது இதற்கு முக்கிய காரணமாகும்.
மேற்கு வானில் ஜூலை முதல் வாரத்தில் சுமார் 7-30 மணி வாக்கில்
வியாழனும் வெள்ளியும் இவ்விதம் தெரியும். வெள்ளி கிரகம்
சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.( Stellarium/NR)
வெள்ளி கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் மெதுவாக நகருகிறது.

 சூரியனை வியாழன் ஒரு முறை சுற்றி முடிக்க   சுமார் 12  ஆண்டுகள் ஆகின்றன. 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ராசியிலும் வியாழன் ஓராண்டு இருக்கும். வியாழன் இப்படி வானில் நகர்ந்து வருவதையே குருப் பெயர்ச்சி (வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு) என்கிறார்கள்.

வெள்ளியை விட வியாழன் கிரகம் குறுக்களவில் 11 மடங்கு பெரியது. எனினும் வெள்ளி ஒப்புநோக்குகையில் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக பிரகாசத்துடன் தெரிகிறது.

வியாழன், வெள்ளி ஆகிய இந்த இரண்டு கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது. அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் அவை நமக்குத் தெரிகின்றன.

Jun 12, 2015

அதென்ன வெள்ளைப் புள்ளி? நாஸா போடும் புதிர்

Share Subscribe
நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் விண்கலம் செரீஸ் (Ceres) என்னும் குட்டிக் கோளை   தொலைவிலிருந்து படம் எடுத்த போது இரண்டு வெள்ளைப் புள்ளிகள் தெரிந்தன. விண்கலம் மேலும் நெருங்கிய போது குட்டிக் கோளில் இரண்டல்ல, ஏராளமான வெள்ளைப் புள்ளிகள் தெரியலாயின. இவை என்ன என்பது ஒரு புதிராக உள்ளது.
செரீஸ் குட்டிக் கோள். சுமார்  13,600 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து
 2015 மே முதல் வாரம் எடுக்கப்பட்ட படம். இரு வெள்ளைப் புள்ளிகளை கவனிக்கவும்.
அதே வெள்ளிப் புள்ளிகள். 4,400 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து
2015 ஜூன் 10 ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.
நாஸா புதிதாக எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு இவை என்னவாக இருக்கலாம் என்று நீங்கள் ஊகித்துச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது.

இவை செரீஸ் குட்டிக் கோளில் உள்ள ஆழமான பள்ளங்களில் நீண்டகாலமாக இருந்து வரும் ஐஸ் கட்டிகளா?    ஒரு வேளை இவை உப்புப் படிவுகளா? எரிமலைகளின் வாய்களா? வெந்நீர் ஊற்றுகளா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா?

மிக உயரத்திலிருந்து செங்குத்தாகக் கீழே பார்க்கும் போது இவை சூரிய ஒளி பட்டு இந்த அளவில் தான் தெரியும்.
ஒப்புநோக்கும் படம்.  வலது புறம் பூமி.
இடது புறம் மேலே சந்திரன், கீழே செரீஸ்
டான் விண்கலம் அந்த குட்டிக் கோளை மேலும் நெருங்கி ஆராய இருக்கிறது. அப்போது ஏதாவது துப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.

செரீஸ் குட்டிக் கோள் அஸ்டிராய்ட்  வகையைச் சேர்ந்தது. சூரியனிலிருந்து சுமார் 41 கோடி கிலோ மீட்டரில் அமைந்தபடி அது (பூமியைப் போலவே) சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் நாலரை ஆண்டுகள் ஆகின்றன.

பெரும்பாலான அஸ்டிராய்டுகள் ஒழுங்கற்ற உருவம் கொண்டவையாக இருக்கும். ஆனால் செரீஸ் அப்படியின்றி உருண்டையாக உள்ளது. அதன் குறுக்களவு சுமார் 960 கிலோ மீட்டர் (பூமி சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர்) செரீஸ் சந்திரனை விடவும் சிறியது.

இத்தாலிய விஞ்ஞானி பியாஸி  1801 ஆம் ஆண்டில் செரீஸ் குட்டிக் கோளைக் கண்டுபிடித்தார். அப்போதிலிருந்து தொடர்ந்து அது டெலஸ்கோப்புகள் மூலம் ஆராயப்பட்டு வருகிறது.

நாஸா 2007 ஆம் ஆண்டில் டான் விண்கலத்தை செலுத்தியது. அது முதலில் வெஸ்டா (Vesta)  என்னும்  அஸ்டிராய்டை நெருங்கி ஆராய்ந்தது. சுமார் 14 மாத காலம் வெஸ்டாவை சுற்றிச் சுற்றி வந்து பல படங்களையும் தகவல்களையும் அனுப்பியது.
டான் விண்கலம். அத்துடன் வெஸ்டா. இது ஓவியர்
தீட்டிய படம்.
பின்னர் டான் விண்கலம் அங்கிருந்து கிளம்பி செரீஸ் குட்டிக் கோளை அடைந்து இப்போது அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. முதலில் டான் விண்கலம் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி சுற்றி வந்தது. அடுத்து இப்போது 4,400 கிலோ மீட்டர உயரத்தில் இருந்தபடி சுற்றுகிறது.

 பிறகு 1470 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி ஆராயும். இறுதியில் 375 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்க ஆரம்பிக்கும். இவ்விதம் அது செரீஸை மிகக் குறைந்த உயரத்தில் இருந்தபடி ஆராயும் போது வெள்ளைப் புள்ளிகள் பற்றிய மர்மம் துலங்கி விடலாம் என்று கருதப்படுகிறது.


Jun 9, 2015

மங்கள்யானின் இரண்டு வார மவுனம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலத்துடன் இந்த மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை தொடர்பு கொள்ள இயலாது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அது ஏன்?

பூமியிலிருந்து பார்க்கும் போது மங்கள்யான் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.
1. சூரியன். 2. பூமி. 3 செவ்வாய் ( இப்படத்தில் புதன்,
வெள்ளி ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் காட்டப்படவில்லை)
அதாவது செவ்வாய், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் உள்ளன. செவ்வாயைச் சுற்றுகின்ற மங்கள்யானிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வருவதாக இருந்தாலும் சரி, பூமியிலிருந்து நாம் மங்கள்யானுக்கு சிக்னல்களை அனுப்புவதாக இருந்தாலும் சரி, அவை  நேர்கோட்டில் தான் செல்லும்.

சிக்னல்கள் அவ்விதம் செல்லும் போது  பிரும்மாண்டமான சைஸில் உள்ள சூரியன் அந்த சிக்னல்களைத் தடுத்து விடும். அல்லது சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து சென்றாக வேண்டும். எப்படியாக இருந்தாலும் பிரச்சினைதான். சிக்னல்களோ பலவீனமானவை.சூரியனோ பயங்கர சக்தி கொண்டது.

 சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து செல்லும் போது அவை சிதைக்கப்பட்டு விடும். அந்த அளவில் மங்கள்யானுக்கு இஸ்ரோ அனுப்பும் சிக்னல்கள் உருப்படியாக மங்கள்யானுக்குப் போய்ச் சேராது. மங்கள்யானிலிருந்து வரும் சிக்னல்களின் கதியும் அதே தான். ஆகவே மங்கள்யானுடன் தொடர்பு கொள்ள மேற்படி கால கட்டத்தில் இஸ்ரோ முயற்சி மேற்கொள்ளாது.

 எனினும் மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டரில் ஏற்கெனவே ஆணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூமியிலிருந்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டிய அவசியமின்றி மங்கள்யான் பிரச்சினையின்றித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மங்கள்யான் விண்கலம்
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களுமே சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் பூமியானது செவ்வாயை விட அதிக வேகத்தில் செல்வதாகும்.

ஆகவே ஜூன் 22 ஆம் தேதிக்குப் பின்னர் சிக்னல்கள் சூரியனை மிக அருகில் கடந்து செல்கின்ற நிலைமை இராது. ஆகவே அப்போது சிக்னல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்படாது.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 2013 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. அது 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்தை இப்போது மங்கள்யான் மட்டுமன்றி, நாஸாவின் மார்ஸ் ஒடிசி விண்கலம் மார்ஸ் ரிக்கன்னைசன்ஸ்  ஆர்பிட்டர் விண்கலம், மாவென் விண்கலம் ஆகிய மூன்று விண்கலங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. இதல்லாமல் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் நாஸாவின் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்துடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சரி, செவ்வாய்க்கு ஆறு விண்வெளி வீரர்களை --ரஷியாவோ அமெரிக்காவோ--அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் போது இப்படி செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த 15 நாட்களில் அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வரும்.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஏட்டளவில் ஒரு தீர்வு உள்ளது. வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்காவோ ரஷியாவோ விண்வெளி வீரர்களுடன் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். எனவே அவ்வித நிலையில் செவ்வாயிலிருந்து வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். செவ்வாயில் உள்ளவர்கள் பற்றிய தகவலை வெள்ளியைச் சுற்றுகின்ற விண்கலம் பெற்றுக் கொண்டு அதை பூமிக்கு அனுப்பி வைக்கும். இதெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒரு முறை இவ்விதம் சூரியனுக்கு நேர் பின்னால் அமைந்திருக்கும். ஆகவே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதப் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

செவ்வாய் கிரகம் இப்போது சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் போது பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்.(பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிஞ்சிப் போனால் 4 லட்சம் கிலோ மீட்டர்)

Jun 4, 2015

நூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு

Share Subscribe
பிரபல நிறுவனம்  ஒன்று தயாரிக்கும் நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (Lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.

 நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா
இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.

உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.

அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 சினிமாத் துறை, விளையாட்டுத் துறை பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்கள் பற்றி ஒரு வார்த்தை. இவ்வித விளம்பரங்கள் பற்றி ஒரு தமிழ் டிவி சேனலில் விவாதம் நடந்தது. மாடல் அழகி ஒருவர் கலந்து கொண்டார். பிரபலங்கள் இவ்விதம் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வி எழுந்தது. அந்த மாடல் அழகி உடனே பத்திரிகைகளில் வருகின்ற பல விளம்பரங்களைக் குறிப்பிட்டு, பத்திரிகைகள் அந்த விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூற முடியுமா என்று பதிலுக்கு கேட்டார். நியாயமான கேள்வி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வித விள்ம்பரங்களில் தோன்றுகின்ற பிரபலங்கள் விளம்பரத்தில் தோன்றித்தான்  சம்பாதித்தாக வேண்டும் என்ற அவசியமில்லாத கோடீஸ்வரர்கள்.

மறுபடி நூடுஸ்ஸுக்கு வருவோம்.  நூடுல்ஸ் மாதிரி எவ்வளவோ உணவு சமாச்சாரங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மளிகைக் கடை வாசலில் தோரணங்கள் போல பாக்கெட்டுகள் தொங்கும். இவை அனைத்தும் கொரிப்பதற்கான உணவு வகைகள். இவை எல்லாம் எவ்விதக் கலப்படமும் இல்லாத தரமான தயாரிப்புகளா?

நூடுல்ஸ் போன்றவற்றைப் பலகாரமாக்கக் குறைந்தபட்சம் வெந்நீர் தயாரிக்க அடுப்பை மூட்டியாக வேண்டும். அப்படியின்றி கடையில் வாங்கியவுடன் சாப்பிடக்கூடிய கேக், ஐஸ் கிரீம் போன்று  பல வகைகள் உள்ளன. இவை அல்லாமல் ஓட்டல் பலகாரங்கள். இவற்றின் தரம் என்ன?

இவை எதுவும் வேண்டாம் என வீட்டிலேயே பலகாரம் பண்ணலாம் தான். அதற்கென மளிகைக் கடையில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி என பல பொருட்களை வாங்க வேண்டும். இவற்றின் தரம் என்ன? இவற்றில் கலப்படமே இல்லையா?

இந்தியாவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதற்கான பொருட்களைத் தயாரித்து அளிப்பதே பெரிய தொழிலாக மாறியுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது.

மொத்தத்தில் பிரச்சினை நூடுல்ஸோடு மட்டும் நிற்பதல்ல. பிரச்சினை நூடுல்ஸை விட அதிக சிக்கல் கொண்டது.

Jun 1, 2015

பசிபிக் கடல் மீதாக 5 நாள் தன்னந்தனியாக விமானப் பயணம்

Share Subscribe
பசிபிக் கடல் மீதாக விமானங்கள் பறந்து செல்வது சர்வ சாதாரண விஷயம். தினமும் பல நூறு விமானங்கள் ஒவ்வொன்றும் 200 அல்லது 300 பயணிகளை ஏற்றிக் கொண்டு பசிபிக் கடலைக் கடந்து அமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு அல்லது ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன. இவை அனைத்தும் ஏராளமான எரிபொருளைப் பயன்படுத்தும் விமான எஞ்சின்கள் பொருத்தப்பட்டவை.

ஆனால் இப்போது எந்த எரிபொருளும் இன்றி சூரிய ஒளியை மட்டும் நம்பி இயங்குகின்ற சோலார் இம்பல்ஸ் என்ற விமானம் சீனாவின் நாஞ்சிங் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. இது இந்திய நேரப்படி சனிக்கிழமை (மே 30 ஆம் தேதி) புறப்பட்டது. ஐந்து நாட்கள் கழித்து இது ஹவாய் தீவுகளில் போய் இறங்கும். இந்த ஐந்து நாட்களும் இரவு பகலாக பசிபிக் கடல் மீதாகப் பறந்தாக வேண்டும். வழியில் எங்கும் இறங்க இயலாது. சீனாவின் நாஞ்சிங் விமான நிலையத்திலிருந்து ஹவாய் தீவுகளுக்கு உள்ள தூரம் சுமார் 8200 கிலோ மீட்டர்.
சோலார் இம்பல்ஸ்  விமானம் சீனாவிலிருந்து கிளம்புகிறது
courtesy Feature China/Bancroft media
இந்த விமானம் மிக மெதுவாகப் பறக்கக்கூடியது. அதாவது மணிக்கு அதிகபட்சம் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ( கார் வேகத்தை விடவும் குறைவு) பறக்கும். ஆகவே தான் ஐந்து நாட்கள் ஆகும். இத்துடன் ஒப்பிட்டால் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட விமானங்கள் அதிக பட்சம் மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கின்றன.

சோலார் இம்பல்ஸ் விமானத்தின் மிக நீளமான இறக்கைகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும்  17 ஆயிரம் சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் பாட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகள் செயல்படும்.
.
 சூரிய விமானத்தில் அந்த விமானத்தை ஓட்டுகின்ற விமானி ஒருவர் மட்டும் தான் இருப்பார். அவர் பெயர் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ( வயது 62). பகல் இரவு என ஐந்து நாட்களும் அவரே விமானத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்.

விமானம் தானாகவே இயங்கும் ஏற்பாடு இருந்தாலும் அதை நீண்ட நேரம் நம்ப முடியாது. நடுநடுவே சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள் இயலும்.மற்றபடி அவர் தான் விமானத்தைக் கவனித்து வர வேண்டும். காலைக் கடன் மாலைக் கடன் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள வேண்டும்.
போர்ஷ்பெர்க் courtesy Feature China/Bancroft medea
ஐந்து நாட்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீர், மருந்து மாத்திரை எல்லாம் விமானத்தில் உண்டு. ஆனால் தூக்கம் தான் ஒரு பிரச்சினை.பகல் இரவு என 120 மணி நேரம் தொடர்ந்து வீழித்திருக்க முடியாது தான். ஆகவே அவர் அவ்வப்போது அதிகபட்சம் 20 நிமிஷம் உறங்குவார். இப்படி ஒரு நாளில் பத்து பனிரெண்டு தடவை உறங்கி சமாளித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தூங்குவது போதுமானது என்று சொல்ல முடியாது. நிதானம் தவறாமல் கவனச் சிதைவு ஏற்படாமல் இருக்க அவர் அவ்வப்போது யோகாசனத்தில் ஈடுபடுவார். இதில் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு.

 நடுவழியில் விமானம் மக்கர் செய்தால் என்ன ஆவது? விமானத்தைக் கடலில் இறக்குவது உசிதமல்ல. விமானத்தில் தயாராக மிதவை ஒன்று இருக்கிறது. அவர் அத்துடன் விமானத்திலிருந்து  பாரசூட் மூலம் கடலில் குதித்து அந்த மிதவைப் படகில் அமர்ந்தபடி உதவிக்காகக் காத்திருப்பார்.
சோலார் இம்பல்ஸ் சூரிய விமானம் செல்லும் பாதை
விமானம் எந்த நேரத்தில் பசிபிக் கடல் மீதாக எங்கு இருக்கிறது என்பது ஐரோப்பாவில் பிரான்ஸ் அருகே மோனாகோவில் உள்ள கண்ட்ரோல் அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்ட்ரேவுக்கு பிரச்சினை என்றால் தகவல் பறக்கும். அருகிலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்து செல்வர்.

பிரச்சினை எதுவும் இல்லை என்றால் ஐந்து நாட்கள் கழித்து அவரது விமானம் ஹவாய் தீவில் உள்ள விமான நிலையத்தில் போய் இறங்கும்.

எந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளியை மட்டுமே இயங்கும் விமான மூலம்  உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்ஸ் விமானம் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் மார்ச் 9 ஆம் தேதி அபு தாபியிலிருந்து கிளம்பியது. அங்கிருந்து இந்தியா வந்தது. பின்னர் மியான்மார் (பர்மா) வழியே ஏப்ரல் 21 ஆம் தேதி சீனாவின் நாஞ்சிங் நகருக்குப் போய்ச் சேர்ந்தது.

மேக மூட்டம் இல்லாமல் நல்ல வெயில் அடிக்கின்ற வானிலை இருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை நாள் காத்திருந்தது. நல்ல வெயில் பட்டால் நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்ஸ் விமானம் பகல் நேரங்களில் சுமார் 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். மின்சாரத்தை மிச்சப்படுத்த இரவு நேரங்களில் சுமார் 3000 அடி உயரத்தில் பறக்கும்.

ஹவாய் போய்ச் சேர்ந்த பிறகு அமெரிக்கா செல்லும். பிறகு அமெரிக்காவைக் கடந்த பின்னர் மறுபடி இன்னொரு சோதனை. அதாவது அட்லாண்டிக் கடலைக் கடந்தாக வேண்டும். இறுதியில் அது மறுபடி அபு தாபிக்கே வந்து சேரும்.

இப்போது சீனாவிலிருந்து கிளம்பியுள்ள போர்ஷ்பெர்க்கிடமிருந்து மொனாகோவுக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.

போர்ஷ்பெர்க்  வழியில் பிரச்சினை  எதுமின்றி ஹவாய்க்கு பத்திரமாக வந்து சேர வேண்டும் என்பதே உலகில் அனைவரின் பிரார்த்தனையாகும்.
----------------------

Update: சோலார் இம்பல்ஸ் விமானம் எதிர்பாராத காரணங்களால் ஜூன் முதல் தேதியன்று ஜப்பானின் நகோயா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. காற்றின் போக்கு சாதகமாக இல்லாததாலும் மோசமான வானிலை காரணமாகவும் அது இவ்விதம் ஜப்பானில் இறங்கியது. சீனாவிலிருந்து கிளம்பிய சுமார் 40 மணி நேரத்துக்குப் பிறகு இவ்விதம் எதிர்பாராத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து எப்போது கிளம்பும் என்பது தெரியவில்லை.