Feb 14, 2018

சூரியனை சுற்றி வரும் கார்

Share Subscribe
காரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும்.

அமெரிக்க கோடீசுவரர் ஒருவர் தாம் உருவாக்கியுள்ள மிக நவீன ராக்கெட்டில் ஒரு காரை வைத்து உயரே செலுத்தியுள்ளார். அது பூமியைப் போல சூரியனைச் சுற்றி வர ஆரம்பித்துள்ளது. அந்தக் காரும் அவர் உருவாக்கியதே.


பால்கன் ஹெவி ராக்கெட்
அந்த கோடீசுவரரின் பெயர் எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்த அவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலேயே ஆசை. அவர் ஆரம்பத்தில் பல கம்பெனிகளை நிறுவினார். அவற்றில் ஒன்று பேபால் (PayPal) என்பது.

கையில் ஓரளவு பணம் சேர்ந்ததும் அவர் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார். பல ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம். ஏராளமான எஞ்சினியர்க்ளையும் மற்றும் நிபுணர்களையும் அவர் அமர்த்திக் கொண்டார். தங்கள் நிறுவனத்துக்கென ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்தார். அந்த ராக்கெட்டுகளுக்கு பால்கன் (Falcon) என்று பெயர். அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய பால்கன் 9 என்ற ராக்கெட் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ராக்கெட் துறையில் அது புதிய சாதனையை ஏற்படுத்தியது.

பொதுவில் செயற்கைக்கோள்களை செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளே. உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் பணி முடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும்..

உலகில் ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளாக உயரே செல்கின்ற ராக்கெட்டுகளின் கதி இது தான். எலான் மஸ்க். கதையைப் புரட்டிப் போட்டு தனது இரண்டு அடுக்கு பால்கன் 9 ராக்கெட்டின் அடிப்புற ராக்கெட் தனியே கழன்று தரையில் குறிப்பிட்ட இலக்கில் மெல்ல வந்து உட்காரும்படி சாதித்துக் காட்டினார். பால்கன் 9 ராக்கெட் 20 க்கும் மேற்பட்ட தடவை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படி வந்து இறங்கிய ராக்கெட்டை எலான் மஸ்க் மீண்டும் பயன்படுத்தலானார்.

உயரே சென்ற ராக்கெட்டுகளில் இரண்டு கீழே வந்து இறங்குகின்றன
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகமில்லை. உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் செல்வு தான் அதிகம். எனவே அந்த வகையில் ராக்கெட்டைச் செலுத்த எலான் மஸ்கிற்கு குறைந்த செலவே ஆகிறது. .

மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதையே நோக்கமாகக் கொண்ட எலான் மஸ்க் அடுத்து மூன்று பால்கன் 9 ராக்கெட்டுகளை பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்றாக இணைத்தார்’. இதன் பெயர் பால்கன் ஹெவி என்பதாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது. உலகில் இப்படியான ராக்கெட்டே கிடையாது என்று கூறும் அளவுக்கு இது சக்திமிக்க பிரும்மாண்டமான ராக்கெட் ஆகும். இது சுமார் 64 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது.

1969 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய சாடர்ன் 5 ராக்கெட் தான் பால்கன் ஹெவி ராக்கெட்டை விட அதிக சக்தி கொண்டதாகும்.

பால்கன் ஹெவி உயரே செலுத்தப்படுவது இதுவே முதல் தடவை.

எனவே இதற்கென இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் முகப்பில் செயற்கைகோள் அல்லது விண்கலம் எதுவும் வைக்கப்படவில்லை. காரணம் இது தான். அந்த ராக்கெட் அழிந்தால் செயற்கைக்கோளும் அழிந்து தேவையற்ற வீண் செலவு ஏற்படும். ஒரு ராக்கெட்டை முதல் தடவையாக சோதிக்கும் போது அதன் முகப்பில் எடை மிக்க கான்கிரீட் பாளங்க்ள் அல்லது இரும்புத் தண்டுகளை வைத்து அனுப்புவது வழக்கம்.

ஆனால் எலான் மஸ்க் தனது பால்கன் ஹெவி ராக்கெட்டின் முகப்பில் சிவப்பு நிறக் காரை வைத்து அனுப்பினார். ராக்கெட் தயாரிக்கும் எலான் மஸ்க் மின்சார பாட்டரி மூலம் இயங்கும் கார்களையும் தயாரித்து வருகிறார். அந்தக் கம்பெனிக்கும் அவர் தான் தலைவர்.

மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான ரோட்ஸ்டர் காரை வைத்ததோடு நிற்கவில்லை. அந்த காரில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரியில் விண்வெளி வீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பினார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக் கொண்டிருந்த்து. இதெல்லாம் எலான் மஸ்கின் ஐடியா.

உயரே சீறிப்பாய்ந்த பால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டி சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது.

அந்தக் கார் பின்னர் சூரியனைச் சுற்ற ஆரம்பித்த்து. அது அப்படிச் சுற்றும் போது ஒரு சமயம் பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும். .பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

எலான் மஸ்க்
அந்தக் கார் என்ன ஆகும் என்று கேட்கலாம். அது பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்கு உட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்த காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.

எலான் மஸ்கின் அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை (பணம் பெற்றுக்கொண்டு) அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே குரூ டிராகன் என்ற விண்கல்த்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பி.எப்.ஆர் என்னும் ராட்சத ராக்கெட்டை உருவாக்குவதில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்ட காலத் திட்டமாகும்.

ஓரளவு வசதி உள்ளவர்களும் விண்வெளிக்குச் சென்று வருவதற்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ராக்கெட் தயாரிப்பு, விண்கலத் தயாரிப்பு, மின்சாரக் கார் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார். இவை போதாதென நகரங்களுக்கு இடையே சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் பயணம் செய்வதற்கான திட்டத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 46 வயதான எலான் மஸ்க் அசகாய சூர்ர்.

(எனது இக்கட்டுரை பிப்ரவரி 13 ந் தேதி தினத்தந்தி இதழில் வெளிவந்ததாகும்)

Feb 1, 2018

சந்திர கிரகணம்: 150 ஆண்டுகளாக இல்லாத பெரிய அதிசயமா?

Share Subscribe
இந்த மாதம் 31 ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சந்திரன் உதிக்கும் முன்னரே கிரகணம் தொடங்கி விடும்

இந்த கிரகணம் 152 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசய கிரகணம் என மேலை நாடுகளின் ஊடகங்களில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைக் காப்பியடித்து இந்தியாவிலும் பல பத்திரிகைகள், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், இதைப் பற்றி பிரமாதமாக எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய மக்களைப் பொருத்த வரையில் குறிப்பாகத் தமிழக மக்களைப் பொருத்தவரையில் இது வழக்கமாக வருகின்ற சந்திர கிரகணம் தான். இது அதிசய கிரகணம் அல்ல. இதில் எந்த விசேஷமும் இல்லை

சரி, மேலை நாட்டவர் இந்த சந்திர கிரகணத்தை அதிசய கிரகணம் என்று வருணிப்பானேன்?

பொதுவில் 29 நாட்களுக்கு ஒரு முறை பௌர்ணமி வருகிறது.அந்த வகையில் மாத்துக்கு ஒரு பௌர்ணமி வருவதாகக் கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரலாம். இப்படி ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமிக்கு மேலை நாட்டவர் புளூ மூன் (Blue Moon) என்று பெயர் வைத்துள்ளனர். பெயர் தான் புளூ மூனே தவிர, அந்த பௌர்ணமியன்று சந்திரன் நீல நிறத்தில் இராது, வழக்கமான வெண்மை நிற்த்தில் தான் இருக்கும்.

பௌர்ணமி நிலவு ஒரு போதும்
 நீல நிறத்தில் காட்சி அளிப்பது கிடையாது
தமிழ் மாதத்திலும் இப்படி இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது உண்டு. அதற்கெல்லாம் நாம் தனிப் பெயர் வைக்கவில்லை.

ஜனவர் 31 ந் தேதி நிகழும் பௌர்ணமியானது இந்த மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமியாகும். அந்த அளவில் மேலை நாட்டவரைப் பொருத்த வரையில் அது புளூ மூன்.

சந்திரன் பூமியை சுற்றிச் சுற்றி வருவதை நாம் அறிவோம். சந்திரனின் இந்த சுற்றுப்பாதை சற்று நீள் வட்டமாக அமைந்துள்ளது. ஆகவே பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரம் சில சமயம் வழக்கத்தை விட அதிகமாக அல்லது குறைவாக உள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று சந்திரன் வழக்கத்தை விடக் குறைவாக அதாவது மூன்று லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே அன்றைய தினம் சந்திரன் வழக்கத்தை விட 15 சதவிகித அளவுக்குப் பெரிதாகவும் வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும். சந்திரன் இப்படி பெரிதாகத் தெரிகின்ற பௌர்ணமியை மேலை நாட்டவர் சூப்பர் மூன் என்று குறிப்பிடுகின்றனர்.

சந்திரன் புளூ மூனாகவும் சூப்பர் மூனாகவும் இருக்கின்ற நாளில் நிகழும் கிரகணம் என்பதால் இந்த கிரகணத்தை மேலை நாட்டவர் ஓர் அதிசயம் என்கிறார்கள் .இதற்கு முன்னர் 1866 ஆம் ஆண்டில் தான் இப்படியான நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டதாம். அடுத்து 2028 ஆண்டில் தான் இப்படி நிகழுமாம்.

ஆனால் நமக்கு எல்லா பௌர்ணமிகளும் ஒன்று தான். சித்ரா பௌர்ணமியை வேண்டுமானால் விசேஷ பௌர்ணமி எனலாம். தவிர, நமக்கு சூப்பர் மூன் என்பதெல்லாம் இல்லை. புளூ மூனும் கிடையாது. மேலை நாட்டவர் அதிசயம் என்று கூறி குதிக்கிறார்கள் என்பதால் நாமும் சேர்ந்து குதிக்க வேண்டுமா? எனவே நம்மைப் பொருத்தவரையில் இது சாதாரண சந்திர கிரகணமே.

சூப்பர்மூன், என்ற வகைப்பாட்டுக்கு அறிவியல்பூர்வ ஆதாரமே இல்லை என்றும் இது ஒரு ஜோசியர் உருவாக்கியது என்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழக வானவியல் நிபுணர் ஜேம்ஸ் லாட்டிஸ் கூறுகிறார். புளூ மூன் என்பதும் அப்படிப்பட்டதே..

இவை ஒரு புறம் இருக்க, பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்றைய தினம் சூரியன் பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில்.அமைந்திருக்கும். ஆனால் இவை ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்ல முடியாது. அபூர்வமாக நேர் கோட்டில் இருக்க நேர்ந்தால் சூரியன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழலானது சந்திரன் மீது விழும். அப்போது பௌர்ணமி நிலவு பொலிவிழந்து கிரகணம் பிடிக்கப்பட்டதாக நமக்குக் காட்சி அளிக்கிற்து. எல்லா பௌர்ணமிகளிலும் கிரகணம நிகழ்வதில்லை என்பதற்குக் காரணம் உள்ளது.

நீங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறீர்கள். உங்களால் சூரியனைக் காண முடிகிறது. நீங்கள் சில படி இறங்கி வந்து முதல் மாடியின் பால்கனியில் நிற்கிறீர்கள். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகை மறைக்கிறது என்பதால் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மேலும் பல படிகள் இறங்கி தரையில் வந்து நிற்கிறீர்கள். இப்போது சூரியனைக் காண முடிகிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக உள்ளதால் அது பெரும்பாலான பௌர்ணமி நாட்களில் இவ்விதம் பூமியின் நிழலுக்கு மேலாக அல்லது கீழாக அமைந்து விடும்.. சந்திரன் மீது நிழல் படுவதில்லை என்பதால் கிரகணம் ஏற்படுவதில்லை.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது? சூரிய ஒளி என்பது உண்மையில் ஏழு நிறங்களின் சேர்க்கை ஆகும். சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியின் காற்று மண்டலத்தின் ஊடே செல்லும் போது தூசு காரணமாக சிதறடிக்கப்படுகிறது. அப்போது நீலம், வயலட், பச்சை முதலிய நிறங்கள் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிற ஒளிகள் மட்டும் வளைந்து சென்று சந்திரன் மீது விழுகின்றன. ஆகவே தான் கிரகணத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் சிவப்பாகத் தெரிகிறது.

சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போதெல்லாம் நிகழும் என்று முன் கூட்டியே கண்டறிய முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலும் கிரேக்கம் போன்ற நாடுகளிலும் பண்டைக்கால கணித நிபுணர்கள் இந்த கணக்கு முறையை அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கிரகணங்கள் குறித்து ஆதி நாட்களில் குறிப்பாக சூரிய கிரகணம் பற்றி பாமர மக்களிடையே பீதி நிலவி வந்துள்ளது. அவ்வளவு போவானேன்? சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ( 1980 பிப்ரவரி என்று ஞாபகம்) சென்னை நகரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னை நகர தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சைக்கிள்களைக் கூட காண முடியவில்லை. யாரும் வெளியே தலைகாட்டவில்லை.

அவ்வளவு பயம். சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட பீதியே அதற்குக் காரணம். கிரகணங்கள் குறித்து இன்றும் கூட பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன

(என்னுடைய இக்கட்டுரையானது சந்திர கிரகணம் நிகழ்ந்ததற்கு முன்பாக அதாவது 31 ந் தேதி காலை தினத்தந்தி இதழில் வெளியானது.)