Pages

Apr 23, 2013

மூஞ்சூறும் பல்லிகளும் விண்வெளிக்குப் பயணம்

மூஞ்சூறு, சுண்டெலி,பல்லி, நத்தை மீன் முதலியவை ஒரு விண்கலத்தில் வைக்கப்பட்டு ரஷிய  ராக்கெட் மூலம் ஏப்ரல் 19 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.இவை விண்வெளியில் ஒரு மாத காலம் தங்கி விட்டு மே  18 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும்.
பிராணிகளுடன் ரஷிய சோயூஸ் ராக்கெட் உயரே கிளம்புகிறது. Credit :Roscosmos
விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைமை இவற்றின் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், நீண்ட நாள் விண்வெளியில் இருந்தால் உறுப்புகள, திசுக்கள் ஆகிய்வற்றில் உள்ள செல்களில் ஏற்படும் மாற்றங்கள், கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்பு முதலியவற்றை ஆராய்வது இதன் நோக்கம்.

விசேஷ விண்கலத்துக்குள் 45 சுண்டெலி 15 பல்லிகள், எட்டு மூஞ்சூறுகள் பல நத்தைகள் ம்ற்றும் நுண்ணுயிர்கள், தாவரங்கள். மீன் தொட்டியில வைக்கப்பட்ட மீன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன..
ம்ங்கோலிய மூஞ்சூறு Credit :IBMP
விண்வெளிக்கு பிராணிகள் அனுப்பப்ப்டுவது இது முதல் தடவை அல்ல.உலகின் முதலாவது செயற்கைக்கோளை ( ஸ்புட்னிக் 1) அக்டோபர் 4 1957ல் செலுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) மறு மாதம் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோளில் ஒரு நாயை வைத்து அனுப்பியது.

விண்வெளியில் உள்ள நிலைமைகளால் உயிரினத்துக்கு ஏற்படுகின்ற விளைவுகள் ஆராயப்படுவதும் இது முதல் தடவை அல்ல. கடந்த காலத்தில் பல விண்வெளி வீரர்கள் உயரே சென்று வந்துள்ளன்ர்.
 நடுவே இருப்பது தான் பிராணிகளை ஏற்றிச்சென்றுள்ள விண்கலம்.  Credit:Roscosmos
மனிதன் விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தால் கால் சூம்பும். தோள் பகுதி பெருத்துவிடும். முகம் உப்பும். உய்ரம் சற்றே அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பிய பின்னர் இந்த பாதிப்புகள் மறைந்து விடும்..இவையெல்லாம் ஏற்கெனவே  தெரிந்தது தான்.

எனினும் பிராணிகள் விஷயத்தில் ஏற்படும் விளைவுகள் வேறு விதமாக இருக்க வாய்ப்பு உண்டு.Bion M 1  என்று அழைக்கப்படும் ரஷியாவின் இத்திட்டத்தில் அமெரிக்காவின் நாஸா அமைப்பும் பங்கு பெற்றுள்ளது.ஜெர்மனி, போலந்து கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளும் பங்கு கொண்டுள்ளன.
ப்யணிகளில் ஒன்றான பல்லி. Credit Roscosmos
இந்தப் பிராணிகளின் ரத்த நாளம், முதுகுத் தண்டு, முழங்கால் பகுதி. மூட்டுப்பகுதி முதலியவற்றில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் குறிப்பாக ஆராயப்படும்.

பூமியிலிருந்து சுமார் 576 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்று வருகின்ற இந்த விண்கலத்தில் வெவ்வேறு பிராணிகளும் தனித்தனி கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 45 சுண்டெலிகளும் ஒரு கூண்டுக்கு மூன்று என தனிக் கூண்டுகளில் உள்ளன.

பிராணிகளுக்கு பசை வடிவில் உணவு வைக்கப்பட்டுள்ளது. வைட்டமின்கள் அடங்கிய தானியங்களும் உள்ளன. குடிப்பதற்குத் தண்ணீர் உண்டு.உடலுக்கு இதமான வெப்ப நிலை பராமரிக்கப்படுகிறது.விண்கலத்தில் அடங்கிய காற்றில் தகுந்த ஈரப்பதம் உண்டு.

பிராணிகளின் உடல்  நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்க விடியோ காமிராக்கள் உள்ளன. தவிர, தகவல் அனுப்பும் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

பிராணிகள் அனைத்தும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் பாணியில் பாரசூட் மூலம் கீழே வந்து இறங்கும். பின்னர் விஞ்ஞானிகள் இப்பிராணிகளின் உடல் நிலையை விரிவாக ஆராய்வர்.பிறகு இவை கருணை அடிப்படையில் மரிக்கும்படி செய்யப்படும். பின்னர்  இப்பிராணிகளின் உடல்கள் பாதுகாக்கப்படும்.
விண்கலத்தில் சுண்டெலிகளின் இருப்பிடம்.Credit IBMP
உயரே சென்றுள்ள பிராணிகள் குறிப்பான சில அடிப்படைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டவை. உதாரணமாக மூஞ்சூறுகள் மங்கோலிய மூஞ்சூறு வகையைச் சேர்ந்தவை.

ரஷியா முன்னர் 1973 முதல்  நான்கு ஆண்டுக்காலம் பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் ந்டந்த சோதனைகளின் போது பிராணிகள் ஓரிரு வாரங்களில் பூமிக்குத் திரும்பின. உய்ரே செல்லும் பிராணிகள் ஒரு மாத காலம் தங்குவது என்பது இதுவே முதல் தடவை. தவிர, பிராணிகள் விண்வெளியில் தங்கியிருக்கும் போது அவற்றைப் பராமரிக்கவும் கண்காணிக்கவும் இப்போது மிக  நவீன முறைகள் பின்ப்ற்றப்படுகின்றன.

14 comments:

  1. வணக்கம் அய்யா .
    வெகு நாட்களுக்குப்பின் கட்டுரை காணும் வாய்ப்பு கிடத்தது. நன்றி.

    பொதுவாக , விண்வெளி ஆராய்ச்சிக்கு குரங்கு இனங்கள் , குறிப்பாக மனித இன சிம்பன்சி வகை குரங்குகளையே பயன்படுத்தியுள்ளோம் . இப்போதுதான் பிராணிகளை , அதுவும் மீன் ,நத்தை போன்றவைகளை பயன் படுத்தியுள்ளோம்.
    இதற்கு சிறப்பு காரணங்கள் எதுவும் உண்டா ?

    கே.எம்.அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி.

    ReplyDelete
  2. ivargal muttalgal

    ReplyDelete
  3. neenda naatkalukku piragu vantha payanulla ariviyal thagaval . vaaram thorum ithu pondru oru ariviyal katturai veliyittal padippavarkalukku payan tharum . nanri

    ReplyDelete
  4. //பிராணிகள் அனைத்தும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் பாணியில் பாரசூட் மூலம் கீழே வந்து இறங்கும்.//
    பல்லி, மூஞ்சூறு சைஸுக்கு பாராசூட்டுகள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டாலும் அவற்றால் அதை எப்படி உபயோகப்படுத்த முடியும்? பயிற்சி ஏதேனும் தரப்பட்டுள்ளதா?
    //பின்னர் விஞ்ஞானிகள் இப்பிராணிகளின் உடல் நிலையை விரிவாக ஆராய்வர்.பிறகு இவை கருணை அடிப்படையில் மரிக்கும்படி செய்யப்படும்.//
    எதற்காக? இவ்வளவு செய்கிற விஞ்ஞானிகளால் அவற்றுக்கு ஏதேனும் உடல் நல பாதிப்புகள் நேர்ந்தால் மருத்துவம் தர மட்டும் இயலாதா?

    ReplyDelete
  5. ANY POSSIBLITY TO LIVE ON OTHER PLANETS????

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி ஐயா

    S.சுதாகர்

    ReplyDelete
  7. பொதுவாக இது போன்று விலங்குகளை அனுப்பவதன் நோக்கம் என்ன? விண்வெளியில் எப்படியும் மனிதன் பல நாட்கள் தங்குவென்பது மிகவும் முயற்சி மற்றும் செலவு பிடிக்கும் வேலை. பின்னர் எதனால் இந்த விலங்குகளை அனுப்பும் முயற்சி?

    அதாவது இதனால் என்ன கன்க்ளூஷன் வரப் போகிறது?

    ஏன் இந்தப் பிராணிகளை பூமிக்குத் திரும்பிய பின் கொன்றுவிட வேண்டும்? அதற்கு ஏதும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றனவா?

    ReplyDelete
  8. ABUBAKKAR K M
    ரஷியாவும் அமெரிக்காவும் கடந்த காலத்திலும் இவ்விதம் பிராணிகளை அனுப்பி சோதனை நடத்தியுள்ளனர்.ஒவ்வொரு பிராணிக்கும் அலாதித் திறன் உண்டு.மனிதனுக்கு புற ஊதாக் கதிர்களைக் க்ண்ணால் பார்க்கும் திறன் கிடையாது. சில பிராணிகளுக்கு இத்திறன் உண்டு. சில பூச்சிகளுக்கு கடும் கதிர்வீச்சையும் தாங்கும் திறன் உண்டு. இதை மனதில் கொண்டு தான் பிராணிகளும் பூச்சிகளும் உயரே அனுப்பப்படுவதாகச் சொல்லலாம்

    ReplyDelete
  9. poornam
    விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவதற்கான பகுதி உண்டு. அது மட்டும் தனியே பிரிந்து கீழே இறங்கும்.பாரசூட் விர்வது, அது மெல்லத் தரையைத் தொடுவது ஆகியவை தானியங்கி முறையில் செயல்படும்.
    கீழே வந்து சேர்ந்த பிராணிகளை தேவையானால் அறுத்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கும். ஒரு வேளை குணப்படுத்த முடியாத கோளாறுகளும் இருக்கலாம்.அவற்றை வாழ விடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்னும் போது மரிக்கச் செய்வது தான் ஒரே வழி.அவற்றிடம் சில மரபணு மாறுதல்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை இயற்கையில் மற்ற பிராணிகளுடன் சேர விடுவது விரும்பத்தக்கதல்ல.இப்படியான பன அம்சங்களின் அடிப்படையில் அவை மரிக்கும்படி செய்யப்படுகின்றன. இதைக் கருணைக் கொலை என்றும் சொல்லலாம்.

    ReplyDelete
  10. Shan Nalliah / GANDHIYIST
    பிற கிரகம் என்றால் செவ்வாய் ஒன்றில் தான் மனிதன் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும மனிதன் வாழ்வதற்கு உகந்த பல செயற்கையான சூழ் நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டால் தான் அது சாத்தியம்
    செவ்வாயில் மனிதன் இயற்கைகாக சுவாசிக்க இயலாது. ஏனெனில் செவ்வாயின் காற்று மண்டலத்தில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இல்லை. செவ்வாயில் இயற்கை நிலையில் தண்ணீர் இல்லை.செவ்வாயில் கடும் குளிர்.வானிலிருந்து கதிர்வீச்சு தாக்கும் ஆபத்தும் உண்டு.இப்படி பல பிரச்சினைகள் உள்ளன். இவற்றைச் சமாளிக்க நிலையான நம்பகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டால் செவ்வாயில் மனிதன் வாழ இயலும். அதுவும் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோர் தான் செல்ல முடியும்.பிக்னிக் போவது போல சாதாரண மக்கள் செவ்வாய்க்குச் சென்று வர வாய்ப்பே இல்லை

    ReplyDelete