Pages

Apr 11, 2015

வேற்றுலகில் உயிரினம்: 20 ஆண்டுகளில் கண்டுபிடிப்போம் என்கிறார் நாஸா விஞ்ஞானி

வேற்றுலகில் உயிரினம் உள்ளது என்பது இன்னும் 10 ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டு விடும். அவ்வித உயிரினத்தை அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் கண்டுபிடித்து விடுவோம் என்று நாஸாவின் தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோபன் அடித்துக் கூறியுள்ளார்.
எல்லன் ஸ்டோபன்
ஆனால் அப்படிக் கண்டுபிடிக்கப்படும் உயிரினம் மனிதர்கள் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார். கண்டுபிடிக்கப்படுகின்ற உயிரினம் வெறும் நுண்ணுயிர்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

சூரிய மண்டல்த்தில்  செவ்வாய் கிரகத்திலும் வியாழன், சனி போன்ற கிரகங்களைச் சுற்றுகின்ற துணைக்கோள்களிலும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பூமி மாதிரி கிரகங்களிலும் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதா என்று தேடுவதில் நாஸா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உயிரின வாழ்க்கைக்கு தண்ணீர் மிக முக்கியம். அண்மைக் காலமாக நடத்தப்பட்ட ஆராய்வுகளில் வியாழன் கிரகத்தைச் சுற்றும் கானிமீட் எனப்படும் துணைக்கோளில் உறைந்த தரைப் பகுதிக்கு அடியில்  சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் கடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களில் இன்னொன்றான யூரோப்பாவிலும் சனி கிரகத்தைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளிலும் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திலும் சரி, உறைந்து போன பனிக்கட்டி வடிவில்  நிறையவே தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 வானில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற கிரகங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வியாழன் மாதிரியில் உள்ள பெரிய கிரகங்கள்  நிறையவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி மாதிரியான கிரகங்கள் தான்  எளிதில் சிக்குவதாக இல்லை.

விண்வெளியில் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவோம். மேலும் புதிய கிரகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் அறிவோம் என்றும்  எல்லன் ஸ்டோபன் கூறினார். விண்வெளியில் இதுவரை உயிரின வாய்ப்புள்ள 5000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

9 comments:

  1. history சேனலில் வேற்றுலக வாசிகளை பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நன்றாக உள்ளது . புதிய அறிவியல் தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. stalin wesley
    ஏதோ ஒரு கிரகத்தில் மனிதர்களைப் போன்றவர்கள் வாழக்கூடும்.அப்படியான ஒரு கிரகத்தை நாம் கண்டுபிடித்தாலும் அவர்களுடன் தொடர்பு கொள்வதில் தான் பிரச்சினை

    ReplyDelete
  3. Iya nan unkalin valiththalaththil anaiththayum vasiththullen. Unkalin pani palakaalam needikka veendum.... Dhayan srilanka

    ReplyDelete
  4. இதில் கூட நம்ப தகுந்த உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில்தான் பேசப்படுகின்றது.
    உண்மையில் ஏதேனும் நம்ப தகுந்த பதிவுகள் உள்ளனவா?

    ReplyDelete
  5. ஆ.சுதா
    தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பூமியில் கடலுக்கு அடியில் மிகுந்த வெப்பம் கொண்ட வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகிலும் நுண்ணுயிர்கள் உள்ளன. அண்டார்டிக்கில் மிகுந்த குளிர்ப் பகுதியிலும் நுண்ணுயிர்கள் உள்ளன. ஆகவே பூமிக்கு அப்பால் இது போன்ற நிலைமைகள் உள்ள இடங்களிலும் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று தான் பேசப்படுகிறது.

    ReplyDelete
  6. verru ulakil uyirinam irunthan manitharkalal angu uyir vaala mudiyuma

    ReplyDelete
  7. durai ece
    புத்திசாலித்தனமான கேள்வி. வியாழனைச் சுற்றும் துணைக்கோள் ஒன்றில் நுண்ணுயிர்கள் கணடுபிடிக்கப்பட்டால் அங்கு மனிதன் போய் வாழ முடியாது. அப்படியின்றி விண்வெளியில் எங்கொ ஒரு கிரகத்தில் மனிதர்கள் போன்ற வேற்றுலகவாசிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். மனிதனால் அங்கு போக முடிந்தால் அங்கு உயிர் வாழ முடியும். நமக்கு " அருகே" என்று சொல்லப்படுகிற செவ்வாய் கிரகத்துக்கே மனிதனால் செல்ல இயலவில்லை. அந்த் அளவில் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய அந்த கிரக்த்துக்கு நாம் செல்ல வாய்ப்பில்லை. போக முடியும் என்ற நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டால் மனிதன் அங்கு போய் வாழ முடியும். அங்கு போய் வாழ முடியுமா என்பதை விட போக முடியுமா என்பது தான் அடிப்படைப் பிரச்சினை.

    ReplyDelete
  8. வேற்றுகிரக உயிரினங்கள் ஏன் பூமியில் வாழும் உயிரினங்கள் போல் தான் இருக்கும் என்று எண்ண வேண்டும். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நீர், காற்று, சரியான வெப்பநிலை தேவைப் படுகிறது, வேற்றுகிரக உயிரினங்களுக்கு இவையெல்லாம் தேவைப்படாமல் வேறுத் தேவை இருக்கலாம் அல்லவா. அவர்களுக்கு அவர்கள் வாழும் கிரகம் தான் வாழக் கூடிய கிரகமாக இருக்கலாம் (நீர் இல்லாமல் பனிக்கட்டி அல்லது oxygen இல்லாத வேறு வாயு அல்லது அதி வெப்பம் .... இப்படிப்பட்ட சூழ்நிலை) அவர்களுக்கு பூமி, வாழ கூடிய கிரகமாக இருகாது.
    இதை நாம் இப்படிக்கூடப் பார்க்கலாம் அல்லவா ஐயா?
    இப்படி இருக்கையில் அனைத்து கிரகத்தில் கூட உயிரினங்கள் சாத்தியக்ககூறுகள் இருக்கலாம் அல்லவா ஐயா?

    ReplyDelete
  9. Edward J
    வேறு கிரகங்களுக்குப் போவானேன்? பூமியிலேயே ஆக்சிஜன் இல்லாமல் வேறு பொருளைப் பயன்படுத்தி வாழும் உயிரினங்கள் உள்ளன.ஆனால் இவை நுண்ணுயிரிகளாகும். இவை கடலுக்கு அடியில் உள்ள வென்னீர் ஊற்றுகள் அருகிலும் அண்டார்டிகாவிலும் காணப்படுகின்றன.
    வியாழனைச் சுற்றும் சில துணைக்கோள்களில் இவ்வித நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

    ReplyDelete