Pages

Mar 11, 2018

சீன விண்கலம் பூமியில் விழப் போகிறது

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயரே செலுத்தப்பட்ட சீன விண்வெளி நிலையம் இப்போது பூமியில் வந்து விழப் போகிறது. இதன் எடை எட்டு டன்.

டியான்கோங் என்னும் பெயர் கொண்ட இந்த சீன விண்வெளி நிலையம் மார்ச் 29 ந் தேதியிலிருந்து ஏப்ரல் 9 ந் தேதிக்குள்ளாக உலகில் கனடா, ஐரோப்பா, ரஷியா நீங்கலாக எந்த நாட்டின் மீதும் வந்து விழலாம். டியான்கோங் என்றால் சீன மொழியில் வான்மாளிகை என்று பொருள்.

பொதுவில் இப்படியான ஒரு விண்கலம் வானிலிருந்து காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி விழும் போது கடுமையாக சூடேறி தீப்பற்றும். அதன் விளைவாக விண்கலத்தின் பெரும் பகுதி தீப்பிடித்து முற்றிலும் அழிந்து விடும். எனினும். சில பகுதிகள் மட்டும் அழியாமல் கீழே வந்து விழலாம். கடந்த காலத்தில் அப்படி வந்து விழுந்தது உண்டு.

டியான்கோங் விண்வெளி நிலையம் 
அமெரிக்க நாஸாவின் ஸ்கைலாப் என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையம் 1979 ஆம் ஆண்டில் இவ்விதம் கீழே வந்து விழுந்த போது உலகெங்கிலும் பெரும் பீதி கிளம்பியது. இந்தியாவில் வந்து விழலாம் என்றும் அப்போது கவலை நிலவியது. கடைசியில் அதன் பகுதிகள் ஆஸ்திரேலியாவில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வந்து விழுந்தன.

ஒரு விண்கலத்தை யாருக்கும் தீங்கின்றி பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்ய முடியும். கடைசி வரை அந்த விண்கலம் அதை உயரே செலுத்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமானல் அது சாத்தியம். சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம் 2011 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீன விண்வெளி கேந்திரம் அந்த விண்கலம் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.

அதன் பிறகு அந்த விண்கலம் தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது .ஆரம்பத்தில் இந்த விண்கலம் பூமியிலிருந்து 362 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சீன விண்வெளி வீரர்கள் வேறு விண்கலம் மூலம் உயரே சென்று டியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணியாற்றினர்.

அண்மைக்காலமாக டியான்கோங் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கலாயிற்று. இப்போது அது 258 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகிறது. அடுத்த சில வாரங்களில் அது வேகமாக கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்து காற்று மண்டலத்தில் நுழையும் என்று கருதப்படுகிறது.

சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலும் மிக மெல்லிய அளவுக்குக் காற்று உண்டு.இக்காற்றானது விண்கலத்தின் - (செயற்கைக்கோள்களின்) வேகத்தைக் குறைக்க முற்படுகிறது. வேகம் குறையும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவு அதிகரிக்கிறது. எனவே அவை கீழே விழ முற்படுகிறது.

இப்படி ஏற்படாமல் தடுக்க, குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் எரிபொருள் இருக்கும். சிறு பீச்சு கருவிகளும் இருக்கும். இவை எரிபொருளைப் பயன்படுத்தி செயல்படும் போது செயற்கைக்கோள் தகுந்த அளவுக்கு வேகம் பெறும். செயற்கைக்கோள் தொடர்ந்து உரிய பாதையில் இருக்கும்.கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து தக்க ஆணைகளைப் பிறப்பித்து இவ்விதம் செய்ய முடியும்.

சீன விண்கலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வேகத்தை இழந்து பூமியை நோக்கி இறங்கலாயிற்று.

சுமார் 130 டன் எடை கொண்ட ரஷியாவின் மிர் எனப்படும் விண்வெளி நிலையம் 1986 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இனி அது தேவையில்லை என்று ரஷியர்கள் முடிவு செய்த போது திட்டமிட்டு அதை பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்தனர். எனவே மிர் விண்கலம் யாரையும் பயமுறுத்தாமல் பசிபிக் கடலில் வந்து விழுந்தது.

விண்வெளி நிலையம் என்பது விண்வெளி வீரர்கள் பல மாத காலம் தங்கி ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு உயரே பறக்கவிடப்படுகின்ற விண்கலமாகும். இது பல கட்டங்களில் படிப்படியாக உருவாக்கப்படுவதாகும். அமெரிக்கா. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகியவை சேர்ந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் 1998 முதல் உயரே இருந்தபடி பூமியைச் சுற்றி வருகிறது. சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த விண்வெளி நிலையத்தின் எடை சுமார் 420 டன்.

2 comments:

  1. ஆசிய நாடுகளில் விழும் வாய்ப்பிருக்கிறதா

    ReplyDelete
  2. Shan
    இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது

    ReplyDelete