Pages

Mar 30, 2018

சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை

இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்தது. பின்னர் அக்டோபரில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய எந்த நாடும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தப் போகிறது.

இதற்கு முன்னர் சந்திரனில் இறங்கிய பிற நாடுகளின் ஆய்வுக் கலங்கள் அனைத்தும் சந்திரனின் நடுக்கோட்டுப் பகுதியில் தான் போய் இறங்கின. ஆனால் இப்போது இந்தியா அனுப்ப இருக்கும் ஆய்வுக் கலமானது சந்திரனின் தென் துருவத்துக்கு அருகில் போய் இறங்க இருக்கிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஓர் ஆய்வுக் கலம் இறங்குவது இதுவே முதல் தடவையாகும்.

சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு இதுவரை பல விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் ஆறு தடவை சந்திரனுக்குச் சென்று கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்துள்ளனர். அவை விஞ்ஞானிகளால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனாலும் சந்திரனின் தோற்றம் உட்பட சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன.

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா 2008 ஆம் ஆண்டில் சந்திரயான் 1 என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். அந்த விண்கலம் சந்திரனின் நிலப்பரப்பை முப்பரிமாணப் படங்களாக எடுத்த்து. தவிர, சந்திரயானில் இடம் பெற்றிருந்த அமெரிக்க ஆராய்ச்சிக் கருவியானது சந்திரனில் தண்ணீர்த் திவலைகள் தோன்றி மறைகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தது என்றாலும் இது சந்திரயானின் சாதனையாகவே கருதப்படுகிறது.

சந்திரயான் 1 விண்கலத்தைத் தொடர்ந்து இப்போது சந்திரயான் 2 செலுத்தப்படுகிறது. இதில் தாய்க் கலம், இறங்குகலம், ஆய்வுக் கலம் என மூன்று பகுதிகள் இருக்கும்.

முந்தைய சந்திரயான் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட்து. இப்போது ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எனப்படும் ராட்சத ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் உயரே செலுத்தப்படும்.

உயரே சென்றதும் அது நேரடியாக சந்திரனுக்கு கிளம்பி விடாது. அது பல தடவை பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றும். ஒவ்வொரு தடவையிலும் அதன் மறு முனை அதிக தொலைவுக்குச் செல்லும். கடைசியில் ஒரு கட்டத்தில் அது சந்திரனின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இவ்விதம் சந்திரனை அடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகிவிடலாம். குறைந்த எரிபொருள் செலவில் சந்திரனை அடைவதற்காக இந்த உத்தி கையாளப்படுகிறது.

சந்திரனை எட்டிய பிறகு அது சந்திரனிலிருந்து எப்போதும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும்.

அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இறங்கு கலம் தனியே பிரிந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். சந்திரனில் இறங்குவது என்பது மிக சிக்கல் பிடித்த விஷயம். சந்திரனில் மட்டும் காற்று மண்டலம் இருந்தால் பாராசூட் மூலம் சுலபத்தில் இறங்கி விடலாம்.

ஆனால் காற்று மண்டலம் கிடையாது என்பதால் இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ராக்கெட்டுகள் கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் பலனாக இறங்கு கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அது மெல்லக் கீழே இறங்கும். இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் ராடார் கருவியும் இருக்கும். அது சந்திரனின் தரை நெருங்கி விட்டதா என்பதைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
சந்திரனில் நடமாடப் போகும்  ஆய்வுக் கலம்
சந்திரனில் வட்ட வடிப் பள்ளங்கள் நிறையவே உண்டு. எனவே இறங்கு கலம் அப்படியான பள்ளத்தில் இறங்கி விடலாகாது. மிகவும் சரிவான இட்த்திலும் இறங்கி விடக்கூடாது. இப்படியான பிரச்சினைகள் ஏற்படாமலும் ராடார் பார்த்துக் கொள்ளும். கர்நாடகத்தில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் சந்திரனில் உள்ளது போன்ற வட்ட வடிவப் பள்ளங்கள் உண்டாக்கப்பட்டு இறங்கு கலத்தின் மாடலைப் பயன்ப்டுத்தி பல தடவை ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.

சந்திரனில் தரையானது தனித் தன்மை கொண்டது. சந்திரனின் ம்ண்ணானது கண்ணாடியைப் பொடி செய்து போட்டது போல நற நற என்று இருக்கும்.

சந்திரனின் தென் துருவத்துக்கு அருகே இறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 1 முன்னர் எடுத்து அனுப்பிய படங்களை வைத்து இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஏதேனும் ஓர் இடத்தில் இறங்கு கலம் இறங்கும். இரண்டு இடங்களுமே அருகருகே உள்ளன.

இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதற்குள்ளிருந்து ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு கால்களைக் கொண்டதாகும். இது தானாகவே அங்குமிங்குமாகச் செல்லக்கூடியதாகும். அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல் படும்.

சந்திரனின் நிலப்பரப்பை ஆராய இறங்கு கலத்திலும் சரி, நடமாடக்கூடிய ஆய்வுக் கலத்திலும் சரி தகுந்த ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும். ஆய்வுக் கலத்தில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. அந்த வகையில் ஆய்வுக் கலத்தில் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சோலார் பலகை இடம் பெற்றிருக்கும்.அத்துடன் சுற்றுப்புறங்களைப் படம் எடுத்து அனுப்ப காமிராக்கள் இருக்கும்.

சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதால் பூமியைப் போல அன்றி சந்திரனில் பகல் என்பது (பூமிக் கணக்குப்படி) 14 நாட்கள் ஆகும்.. இதே போல 14 நாட்கள் இரவாக இருக்கும். எனவே நடமாடும் ஆய்வுக்கலமானது பகல் 14 நாட்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நாட்கள் வந்த பின்னர் மின்சார உற்பத்தி சாத்தியமில்லை என்பதால் ஆய்வுக் கலம் செயலற்று இருக்கும்.

ஆய்வுக் கலம் சந்திரனின் தரையில் மிக மெதுவாகவே பயணம் செய்வதாக இருக்கும். பகல் 14 நாட்களில் ஆய்வுக் கலம் சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் இறங்கு கலம் அது இறங்கிய இட்த்தில் நிலையாக இருந்தபடி சந்திரன் தொடரபான தகவல்களை சேகரிக்கும்.

இறங்கு கலம் நடமாடும் ஆய்வுக் கலம் ஆகிய இரண்டும் உயரே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2 தாய்க் கலத்துக்கு தகவல்களை அனுப்பும். தாய்க் கலம் இஸ்ரோ கட்டுப்பாட்டுக் கேந்திரத்துக்கு அத்தகவல்களை அனுப்பும்.

பூமியில் மேகங்கள், மழை, கடல், காற்று, தாவரங்கள் முதலியவை வெப்பத்தையும் குளிரையும் ஓரளவு சமன்ப்படுத்துகின்றன. சந்திரனில் இவை எதுவுமே கிடையாது.

எனவே சந்திரனில் பகலில் வெப்பம் 130 செல்சியஸ் வரை இருக்கும். இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கும். சந்திரயானின் இறங்கு கலமும் நடமாடும் ஆய்வுக் கலமும் இவ்வித கடுமையான நிலைமைகளை சமாளித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

(எனது இக்கட்டுரை தினத்தந்தி இதழில் வெளியானதாகும்)

Mar 15, 2018

மூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம்” என்று டாக்டர்கள் 22 வயதில் சொல்லக்கேட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தமது மன உறுதியால் 76 வயது வரை வாழ்ந்து இங்கிலாந்தில் மார்ச் 14 ஆம் தேதி காலனாமானார்.

ஸ்டீபன் ஹாக்கிங்
By NASA - Original. Source (StarChild Learning Center)

பேச முடியாது. நடமாட முடியாது, என்ற நிலையிலும் அவர் செயற்கைக் குரல் மூலம் பேசினார். முக அசைவுகள் மூலம் தனது மின் சக்கர நாற்காலியை இயக்கினார். சக்கர நாற்காலியிலும் நேராக உட்கார முடியாது. ஒரு புறமாக சாய்ந்து தான் அமர்ந்திருப்பார். பெரிய தலை. அகன்ற காதுகள்.

உறுப்புகள் வேலை செய்யவில்லையே தவிர, அவருடைய மூளை மிக நன்றாகவே செயல்பட்டது. நடமாட முடியாத நிலையில் மின்சார நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார் என்றாலும் அவரது சிந்தனை பிரபஞ்ச வெளியில் உலாவியது. பிரபஞ்சவியல் பற்றி முக்கிய கொள்கைகளை உருவாக்கினார்.

மூளைத் திறனில் அவர் சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton), ஐன்ஸ்டைன் (Einstein), ஆகியோருக்கு நிகராகக் கருதப்பட்டவர். இளம் வயதில் பள்ளியில் ஹாக்கிங்குக்கு "ஐன்ஸ்டைன்" என்ற பட்டப் பெயர் உண்டு.

ஹாக்கிங்குக்கு இருந்த நோய் லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்குகிறது. உடலில் உள்ள தசைகள் படிப்படியாக செயலிழந்து விடும். இந்த தசை செயலிழப்பு நோய் ஒவ்வொரு உறுப்பாகப் பரவும். மருந்தே கிடையாது.

நல்ல வேளையாக ஹாக்கிங் விஷயத்தில் இந்த நோய் மெதுவாகப் பரவியது. அதற்குள்ளாக அவர் முடிந்த அனைத்தையும் சாதித்துக் காட்டினார்.

பட்ட மேற்படிப்பின் போது தான் அவருக்குள்ள நோய் கண்டுபிடிக்கப்பட்ட்து. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தது என்றாலும் அவர் சமாளித்துக் கொண்டு முன்னேறினார். அப்போது இங்கிலாந்தில் பிரெட் ஹாயில் (Fred Hoyle) பிரபல விஞ்ஞானி. அவரது மேற்பார்வையில் ஹாக்கிங் பட்ட மேற்படிப்பை முடிக்க விரும்பினார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. வேறு ஒரு விஞ்ஞானியின் கீழ் ஹாக்கிங் செயல்பட்டார்.



ஸ்டீபன் ஹாக்கிங்
By woodleywonderworks
https://www.flickr.com/photos/wwworks/3728608454/

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்து அக்கால கட்டத்தில் இருவிதக் கொள்கைகள் நிலவின. பிரெட் ஹாயிலும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) என்ற விஞ்ஞானியும் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கொள்கையைக் கூறிவந்தனர். இதற்கு நேர் மாறான கொள்கை பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஜனித்தது என்று கூறியது. ஹாக்கிங் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு என்ற கொள்கையை ஆதரித்து நின்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார். பேராசிரியராகப் பணி புரிந்தார் அவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

பிரபஞ்சவியல், நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அண்டைப்புற நட்சத்திரங்களை விழுங்கும் பிளாக் ஹோல் (Black Hole) எனப்படும் பகாசுர நட்சத்திரம் ஆகியவை பற்றி எழுதியும் பேசியும் வந்த ஹாக்கிங் உயர் இயற்பியலிலிருந்து கீழே இறங்கி வந்து பொது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பேசவும் திறன் படைத்தவராகவும் திகழ்ந்தார்.

ஹாக்கிங் உரையாற்றுகிறார் - 2015
By Alexandar Vujadinovic - Own work
https://commons.wikimedia.org/w/index.php?curid=44259942

 அந்த வகையில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவர் எழுதிய நூல்களில் “காலத்தின் சுருக்க வரலாறு: (A Brief History of Time) என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நூலின் விற்பனை ஒரு கோடி பிரதிகளை எட்டியது. வாசகர்கள் "முழுவதுமாக படித்து முடிக்காத பிரபல நூல்" என்ற பெயரும் அந்த நூலுக்கு உண்டு.

பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிய கொள்கையை உருவாக்கியதற்காக ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் கிடைக்கவில்லை.

பிளாக் ஹோல் நட்சத்திரம் நிரந்தரமானது அல்ல. காலப் போக்கில் அது கதிர் வீச்சாக வெளிப்பட்டு அழிந்து விடும் என்று ஹாக்கிங் கூறினார். ஆனால் அக்கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்த வழியே கிடையாது. உறுதிப்படுத்தப்படாத, உறுதிப்படுத்த முடியாத கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. அப்படியும் அவர் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

ஏதாவது ஒரு வகையில் பூமியில் மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்படலாம் என்பது ஹாக்கிங்கின் கொள்கை. ஆகவே மனிதன் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடிபெயர ஆயத்தமாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அந்த வகையில் அவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்தார்

ஒரு சமயம் அவர் ஜெட் விமான மூலம் உயரே சென்று அந்தரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். விண்கலம் மூலம் உயரே செல்வதற்காக டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு அவ்வளவு ஆர்வம்.

அந்தரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்
By Jim Campbell/Aero-News Network
https://www.flickr.com/photos/39735679@N00/475109138

பிரபஞ்ச வெளியில் பூமி மாதிரியில் வேறு கிரகம் இருக்கலாம் அப்படியான கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கலாம் என்ற கருத்தை ஹாக்கிங் ஆதரித்தார். அப்படியான வேற்றுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ரேடியோ அலைகள் மூலம் செய்தி அனுப்ப முற்படலாகாது என்றும் அவர் கூறினார். வேற்றுலக மனிதர்களை நம்ப முடியாது என்றார்.

பூமி இருக்கின்ற இடத்தை வெளி உலகினருக்குத் தெரியப்படுத்தலாகாது. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஹாக்கிங் கருதினார்.

ஹாக்கிங்குக்கு உடல் பிரச்சினை இருந்த போதிலும் அவர் தமது 22 வது வயதில் ஜேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்குக்கு ஜேன் பேருதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஹாக்கிங்கின் உடல் நிலை மேலும் மோசமான நிலையை எட்டிய போது அவரை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள மூன்று வேளைகளுக்கு மூன்று நர்சுகளை நியமிக்க வேண்டி நேர்ந்தது. இந்த நேரத்தில் ஹாக்கிங்குக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஹாக்கிங்குக்கு அந்த மூன்று நர்சுகளில் ஒருவரான எலைன் மேசன் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்து. ஹாக்கிங் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 1995 ஆம் ஆண்டில் அந்த நர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. ஹாக்கிங்குக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகள். இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இல்லை.

Mar 11, 2018

சீன விண்கலம் பூமியில் விழப் போகிறது

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயரே செலுத்தப்பட்ட சீன விண்வெளி நிலையம் இப்போது பூமியில் வந்து விழப் போகிறது. இதன் எடை எட்டு டன்.

டியான்கோங் என்னும் பெயர் கொண்ட இந்த சீன விண்வெளி நிலையம் மார்ச் 29 ந் தேதியிலிருந்து ஏப்ரல் 9 ந் தேதிக்குள்ளாக உலகில் கனடா, ஐரோப்பா, ரஷியா நீங்கலாக எந்த நாட்டின் மீதும் வந்து விழலாம். டியான்கோங் என்றால் சீன மொழியில் வான்மாளிகை என்று பொருள்.

பொதுவில் இப்படியான ஒரு விண்கலம் வானிலிருந்து காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி விழும் போது கடுமையாக சூடேறி தீப்பற்றும். அதன் விளைவாக விண்கலத்தின் பெரும் பகுதி தீப்பிடித்து முற்றிலும் அழிந்து விடும். எனினும். சில பகுதிகள் மட்டும் அழியாமல் கீழே வந்து விழலாம். கடந்த காலத்தில் அப்படி வந்து விழுந்தது உண்டு.

டியான்கோங் விண்வெளி நிலையம் 
அமெரிக்க நாஸாவின் ஸ்கைலாப் என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையம் 1979 ஆம் ஆண்டில் இவ்விதம் கீழே வந்து விழுந்த போது உலகெங்கிலும் பெரும் பீதி கிளம்பியது. இந்தியாவில் வந்து விழலாம் என்றும் அப்போது கவலை நிலவியது. கடைசியில் அதன் பகுதிகள் ஆஸ்திரேலியாவில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வந்து விழுந்தன.

ஒரு விண்கலத்தை யாருக்கும் தீங்கின்றி பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்ய முடியும். கடைசி வரை அந்த விண்கலம் அதை உயரே செலுத்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமானல் அது சாத்தியம். சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம் 2011 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீன விண்வெளி கேந்திரம் அந்த விண்கலம் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.

அதன் பிறகு அந்த விண்கலம் தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது .ஆரம்பத்தில் இந்த விண்கலம் பூமியிலிருந்து 362 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சீன விண்வெளி வீரர்கள் வேறு விண்கலம் மூலம் உயரே சென்று டியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணியாற்றினர்.

அண்மைக்காலமாக டியான்கோங் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கலாயிற்று. இப்போது அது 258 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகிறது. அடுத்த சில வாரங்களில் அது வேகமாக கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்து காற்று மண்டலத்தில் நுழையும் என்று கருதப்படுகிறது.

சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலும் மிக மெல்லிய அளவுக்குக் காற்று உண்டு.இக்காற்றானது விண்கலத்தின் - (செயற்கைக்கோள்களின்) வேகத்தைக் குறைக்க முற்படுகிறது. வேகம் குறையும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவு அதிகரிக்கிறது. எனவே அவை கீழே விழ முற்படுகிறது.

இப்படி ஏற்படாமல் தடுக்க, குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் எரிபொருள் இருக்கும். சிறு பீச்சு கருவிகளும் இருக்கும். இவை எரிபொருளைப் பயன்படுத்தி செயல்படும் போது செயற்கைக்கோள் தகுந்த அளவுக்கு வேகம் பெறும். செயற்கைக்கோள் தொடர்ந்து உரிய பாதையில் இருக்கும்.கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து தக்க ஆணைகளைப் பிறப்பித்து இவ்விதம் செய்ய முடியும்.

சீன விண்கலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வேகத்தை இழந்து பூமியை நோக்கி இறங்கலாயிற்று.

சுமார் 130 டன் எடை கொண்ட ரஷியாவின் மிர் எனப்படும் விண்வெளி நிலையம் 1986 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இனி அது தேவையில்லை என்று ரஷியர்கள் முடிவு செய்த போது திட்டமிட்டு அதை பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்தனர். எனவே மிர் விண்கலம் யாரையும் பயமுறுத்தாமல் பசிபிக் கடலில் வந்து விழுந்தது.

விண்வெளி நிலையம் என்பது விண்வெளி வீரர்கள் பல மாத காலம் தங்கி ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு உயரே பறக்கவிடப்படுகின்ற விண்கலமாகும். இது பல கட்டங்களில் படிப்படியாக உருவாக்கப்படுவதாகும். அமெரிக்கா. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகியவை சேர்ந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் 1998 முதல் உயரே இருந்தபடி பூமியைச் சுற்றி வருகிறது. சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த விண்வெளி நிலையத்தின் எடை சுமார் 420 டன்.