Jan 26, 2012

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Share Subscribe
சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

நுனோ கோம்ஸ்
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.

ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.

ஸ்குபா அணிந்து நீச்சல்
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.

விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.

தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.

உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.

கடல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது

1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.

ட்ரீயஸ்ட் நீர் மூழ்கு கலம். அடிப்புறத்தில் அமைந்த
கோளத்தில் தான் இருவரும் இருந்தனர்
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.

சிவப்பு வட்டம் - பசிபிக் கடலில்
மரியானா அகழி அமைந்த இடம்
கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்.

Jan 24, 2012

பூமியுடன் ஒத்துப் போவதா வேண்டாமா?

Share Subscribe
நமக்கு லீப் வருஷம் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நாம் அவ்வப்போது ஒரு நாளுடன் ஒரு வினாடியை சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிச் சேர்க்கப்படும் வினாடியானது லீப் வினாடி என்று குறிப்பிடப்படுகிறது.

இப்படி ஒரு வினாடியை தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்சினையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன.
” நான் இப்போ கொஞ்சம் ஸ்லோ”
அண்மையில் ஐரோப்பாவில் ஜெனீவா நகரில் சர்வதேச தகவல் தொடர்பு யூனியன்(ITU) கூட்டத்தில் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எனினும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. 2015 ஆம் கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒரு வினாடிப் பிரச்சினையானது ஒரு நாள் என்பதுடன் சம்பந்தப்பட்டது. பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதையே நாம் ஒரு நாள் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு 24 மணி நேரம் ஆவதாகவும் வைத்துக் கொண்டிருக்கிறோம். 24 மணி நேரம் என்பதை வினாடிகளாக மாற்றுவோம். அப்படிச் செய்தால் ஒரு நாள் என்பது 86,400 வினாடிகளுக்குச் சமம்.

ITU தலைமையகம்
பூமி மட்டும் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக 86,400 வினாடிகளை எடுத்துக் கொண்டால் பிரச்சினை இராது. ஆனால் பூமி இப்போது சராசரியாக 86,400.002 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதாவது பூமியின் சுழற்சி வேகம் சற்றே குறைந்துள்ளது. பூகம்பங்கள், சூரியனின் ஈர்ப்பு சக்தி, சந்திரனின்  ஈர்ப்பு சக்தி என பல காரணங்கள் இதற்கு உண்டு. பூமியின் அச்சில் ஏற்படும் நடுக்கமும் ஒரு காரணம்.

இந்த வித்தியாசத்தை அவ்வப்போது சரிக்கட்டாவிட்டால் பிரச்சினை ஏற்படும். ஒருவரின் கடிகாரம் தினமும் 2 வினாடி மெதுவாக ஓடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் அந்த கடிகாரம் காட்டும் நேரம் ஒரு நிமிஷம் குறைவானதாக இருக்கும். ஆகவே அவர் மாதக் கடைசியில் தனது கடிகாரத்தில் நிமிஷம் காட்டும் முள்ளை ஒரு நிமிஷம் முன்னே தள்ளி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இப்போதுள்ள பிரச்சினை இப்படியாகத் தான் உள்ளது.

உலகம் முழுவதற்கும் இப்போது மிகச் சரியான நேரம் என்பது ஒன்று உண்டு. அது அணுக் கடிகாரம் ஆகும். நாம் பின்பற்றுகின்ற அந்த நேரம் Civil  Time என்று குறிப்பிடப்படுகிறது. பல அணுக்கடிகாரங்களின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நேரமும் பூமியின் சுழற்சிப்படியான நேரமும் ஒத்துப் போக வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அதாவது நாம் பூமியுடன் ஒத்துப் போகிறோம். பூமியுடன் இப்படி ஒத்துப் போவதா வேண்டாமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் அவ்வப்போது ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதானது நடைமுறையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கருதுகிறது. ஒரு வினாடியை அவ்வப்போது சேர்ப்பதால் விமான சர்வீஸ் நேர ஏற்பாடு, பங்கு மார்க்கெட்டுகளின் இயக்கம், தகவல் தொடர்பு ஏற்பாடுகள் கம்ப்யூட்டர் சிஸ்டம் முதலியவற்றில் பிரச்சினை உண்டாவதாக அது கூறுகிறது.

ஆகவே அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்கின்ற ஏற்பாடு கூடாது என்று அது கூறுகிறது. அமெரிக்காவின் கருத்தை பிரான்ஸ், ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. இந்தியாவும் லீப் வினாடி ஏற்பாடு தேவையில்லை என்று கூறுகிறது. லீப் வினாடி ஏற்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என பிரிட்டன், சீனா, ரஷியா முதலான நாடுகள் கூறுகின்றன.

லீப் வினாடியைக் கைவிட்டு விட வேண்டும் என்ற யோசனை இப்போது கிளம்பியது அல்ல. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது.

லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அணுக்கடிகாரங்கள் காலை என்று காடடும். ஆனால் அப்போது சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும்.

1972 ஆம் ஆண்டிலிருந்து நாம் இவ்விதம் அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்ளும் முறையைப் பின்பற்றி வருகிறோம். பொதுவில் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஜூன் 30 ஆம் தேதி இவ்விதம் ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு தேதிகளிலும் இது சேர்த்துக் கொள்ளப்பட்டது . கடந்த 40 ஆண்டுகளில் இவ்விதம் 24 தடவை ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

 அமெரிக்காவில் உள்ள அணுக் கடிகாரம்
பூமி சில சமயம் விசித்திரமாகச் செயல்பட்டு அதன் சுழற்சி வேகம் தற்காலிகமாக சில மில்லி செகண்ட் அதிகரிப்பது உண்டு. உதாரணமாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்ட போது பூமியின் சுழற்சி வேகம் 1.8 மில்லி செகண்ட் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது (இந்த கடலடி பூகம்பம் காரணமாகவே கடும் சுனாமி ஏற்பட்டு புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது).

1999 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையிலான காலத்தில், 2005 மற்றும் 2008 ஆண்டுகளில் மட்டுமே ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் கூட்டத்தில் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டதால் வருகிற ஜூன் 30 ஆம் தேதி வழக்கம் போல ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படும்.

Jan 21, 2012

பணக்காரர்களின் மின்சாரம்

Share Subscribe
இன்னும் சில ஆண்டுகளில் சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் தங்கள் வீட்டு மாடிகளில் சூரிய மின் பலகைகளைப் பொருத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் கணிசமான பகுதியைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் ஏற்பாடு வந்து விடலாம்.

சூரிய மின் பலகைகள் (Solar Panels) சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் தருபவை. வீட்டில் இருந்தபடி ஆர்டர் கொடுத்தால் போதும். சில வாரங்களில் மாடி ’மின்சார நிலையம்’  நிறுவப்பட்டு விடும். இதை செயல்படுத்தித் தர இப்போது இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன.

வெளிநாட்டில் வீட்டுக் கூரை மீது
சூரிய மின் பலகைகள்
அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் வீடுகளில் ஏற்கெனவே இப்படியான மாடி மின் நிலையங்கள் வந்து விட்டன.  வர்த்தக நிறுவனங்களின் கூரைகளிலும் சூரிய மின் பலகைகள் பொருத்தப்பட்டு அவையும் சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள ஆரம்பித்துள்ளன.

பாக்ட்ரியின் கூரை மீதும்
சூரிய மின் பலகைகள்
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சிறிய சில்லுகள் 1954 ஆம் ஆண்டு வாக்கில் தான் முதல் தடவையாக உற்பத்தி செய்யப்படலாயின.  ஆரம்ப நாட்களில் இவ்வித சில்லுகள் விளையாட்டு பொம்மைகள், கால்குலேட்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் இத்தொழில்நுட்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அப்படியும் கூட இந்த முறையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு மிக அதிகமாக இருந்தது. ஆகவே சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி கணிசமான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலாது என்ற நிலைமைதான் இருந்தது.

செயற்கைக்கோளின் இரு புறங்களிலும்
சூரிய மின் பலகைகள்
பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதால் -- செலவானாலும் பரவாயில்லை என்று சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1958 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக அமெரிக்காவின் வான்கார்ட் (Vanguard) செயற்கைக்கோளில் சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.

சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தைப் பெறுவதானால் ஒரு வாட் மின்சாரம் பெற 100 டாலர் செலவாகும் என்ற நிலைமைதான் 1971 ஆம் ஆண்டில் இருந்தது. பின்னர் பல நவீன முன்னேற்றங்கள் காரணமாக இது 10 டாலர் ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது கிட்டத்தட்ட ஒரு டாலராகக் குறைந்து விட்டது.

சூரிய மின்சார நிலையங்கள் நிறைய இடத்தை
அடைத்துக் கொள்பவை
எனினும் இந்தியாவில் வீட்டு மொட்டை மாடியில் பெரிய சூரிய மின் பலகைகளை வைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்ப்த்தி செய்து கொள்வதானால் மின்சார உற்பத்திக்கான செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ 15 ஆக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இது மின்சார வாரியம் மூலம் பெறும் மின்சாரத்துக்கு அளிக்கும் கட்டணத்தை விட மிக அதிகம்.

மேலை நாடுகளிலும் சரி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் சரி, தனியார் நிறுவனங்கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்து வினியோகிக்கின்றன. இவை வசூலிக்கும் கட்டணமும் வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு ஆகும் செலவும் கிட்டத்தட்ட சம நிலையை எட்டுமானால் அப்போது நிறையப் பேர் சூரிய மின் பலகைகளுக்கு மாறுவர். இந்த சம நிலையானது Grid Parity என்று குறிப்பிடப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த சம நிலை எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. சீனாவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நிலை எட்டப்படலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
சூரிய மின்பலகைகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஜப்பான் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த நிலை எட்டப்பட்டு விட்டது. ஹவாய் தீவுகளில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அங்கு சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது ஆதாயமாக உள்ளது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதானால் ஓரிடத்தில் ஆண்டில் சுமார் 300 நாட்கள் வெயில் அடிப்பதாக இருக்க வேண்டும். தவிர, வீடு, அல்லது அலுவலகத்தின் மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மூலம் பெற முடியாது. ஏனெனில் பகலில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆகவே மொத்த மின் தேவையில் ஒரு பகுதியை மட்டுமே இந்த முறை மூலம் பெற முடியும். மீதித் தேவைக்கு பொது மின் இணைப்பு (Grid) மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

வீட்டு மாடியில் அல்லது அலுவலக மாடியில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உறபத்தி செய்து கொள்வது என்பது அவரவர் செய்கின்ற முடிவாகும். அரசு அல்லது பெரிய மின் நிறுவனம் பெரிய அளவில் பல மெகாவாட்(Mega Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது வேறு விஷயம்.

பெரிய அளவில், அதாவது பல மெகாவாட் அளவில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் முன்னணியில் உள்ளன. குறிப்பாக ஜெர்மனி முதல் இடம் வகிக்கிறது. சூரிய மின்சாரத்திலும் இரண்டு வித முறை உள்ளது. முதல் முறையில் திறந்த வெளியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் எண்ணற்ற சூரிய மின் பலகைகள் நிறுவப்பட்டு நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் சூரிய ஒளி நேரடியாக மின்சாரமாக மாற்றப்படுகிறது.

சூரிய ஒளியை ஆடிகள் மூலம்
திருப்பி விட்டு மின் உற்பத்தி
இரண்டாவது முறை சற்று வித்தியாசமானது. திறந்த வெளியில் ய்ரமான கோபுரம் நிறுவப்படுகிறது. அதன் உச்சியில் தண்ணீர் அல்லது வேறு திரவம் இருக்கும். கோபுரத்தைச் சுற்றித் தரையில் எண்ணற்ற ஆடிகள் (Mirrors) பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியை கோபுர உச்சிக்குத் திருப்பும். இதனால் உச்சியில் உள்ள திரவம் கடுமையாகச் சூடேறும். இந்த சூடான திரவத்தைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்யப்படும். இந்த நீராவி (அனல் மின் நிலையத்தில் நடைபெறுவது போல்) மின் உற்பத்திக்கான ஜெனரேட்டர்களை இயக்கும்.

இந்த இரண்டு முறைகளிலுமே நிறைய நிலம் தேவை. உதாரணமாக சுமார் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதானால் 600 ஏக்கர் நிலம் தேவை. தவிர, பகல் நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆனால் அண்மையில் இரண்டாவது முறையில் மேலும் முன்னேற்றம் புகுத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் உப்பு வைக்கப்படுகிறது. இது சூடேறி கொதிக்கும் உப்புக் குழம்பாக மாறுகிறது. இதில் ஒரு பகுதி நிலத்துக்கு அடியில் சேமித்து வைக்கப்படுகிறது. அதைக் கொண்டு இரவிலும் மின் உற்பத்தி சாத்தியமாக்கப்பட்டுள்ளது (காண்க சூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி).

மேலே குறிப்பிடப்பட்ட முதல் முறை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது இப்போது இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையங்களை நிறுவுவதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான பல சலுகைகளை அளிக்கிறது. ஆகவே பல நிறுவனங்கள் இதில் இப்போது தீவிரமாக முனைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசின் தேசிய மின்சார நிறுவனம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு உள்ளது. இந்த ஏற்பாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் எட்டு ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொள்ளப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைப் பெறுவதில் இந்தியாவில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதலாவதாக இந்தியாவில் மேலே குறிப்பிடப்பட்ட Grid Parity ஏற்பட நீண்ட காலம் ஆகலாம். தவிர, சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் ஏக்கர் கணக்கில் நிலத்தை விழுங்குபவை. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இந்தியாவில் இது ஒரு பிரச்சினையே.

மானிலங்களின் மின் வாரியத்திடமிருந்து தேவையான மின்சாரத்தைப் பெற முடியாத நிலையில் அதிகச் செலவில் டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டியுள்ள தனியார் நிறுவனங்கள் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முன்வரலாம்.

சூரிய ஒளி வற்றாதது. என்றும் கிடைப்பது. ஆகவே சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் உலகில் எந்த ஒரு சூரிய மின் நிலையமும் பொதுவில் 100 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. சீனாவில் இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள சூரிய மின்சார நிலையம் தான் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கிறது.

சூரிய மின் நிலையத்திலிருந்து இரவு பகல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழியில்லை. காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் பிரச்சினை உள்ளது. ஒரு மானிலத்தில் பல காற்றாலைகள் சேர்ந்து மொத்தம் 3000 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கலாம். ஆனால் மறு நாளே உற்பத்தி 400 மெகாவாட்டாக ஒரேயடியாகக் குறைந்து விடலாம். காற்றை நம்ப முடியாது.

இந்தியாவின் மொத்த மின்சார உபயோகத்தில் சுமார் 70 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. சூரிய மின்சாரமோ காற்றாலை மின்சாரமோ அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக இருப்பது சந்தேகம். ஆனால் எதிர்காலத்தில் அணுமின் நிலையங்கள் மாற்றாக விளங்கலாம்.

அணுமின் நிலைய யூனிட் ஒன்று 1400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஒரே இடத்தில் மூன்று அல்லது நான்கு யூனிட்டுகளை அமைக்கும் போது குறைந்தது 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதுவும் பிரச்சினை இன்றி தொடர்ந்து இரவு பகல் 24 மணி நேரமும் கிடைக்கும்.

ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிமா
அணுமின் நிலையம்
உதாரணமாக ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுவே உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையமாகும். அதற்கு அடுத்தபடியாக கனடாவில் உள்ள புரூஸ் அணுமின் நிலையம் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. திட்டமிட்டபடி அனைத்து யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்து விடலாம்.

மத்திய அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறுகையில் அணு மின்சாரம் தான் மிகவும் விலை குறைந்தது என்றார்.மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும் இதைக் காட்டுகின்றன. எனினும் இதில் இரண்டு விதக் கருத்து உண்டு - அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என்று கூறி புள்ளி விவரம் அளிப்பவர்களும் உள்ளனர். எது எப்படியோ சூரிய மின்சாரத்தை விட அணுமின்சாரம் நிச்சயம் விலை குறைவு என்ப்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அணுமின்சாரத்தை ஏழைகளின் மின்சாரம் என்று யாரும் கூற மாட்டார்கள் என்றாலும் சூரிய மின்சாரம் இன்றைய நிலையில் பணக்காரர்களின் மின்சாரமே.

Jan 14, 2012

சந்திரனுக்குச் சென்ற இரட்டையர்

Share Subscribe
அமாவாசையன்று கடல் வழக்கத்தை விட அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதிக உயரத்துக்கு அலைகள் தோன்றுகின்றன.  கடல்கள் மீது முக்கியமாக சந்திரனின் ஈர்ப்பு ஏற்படுத்தும் விளைவே இதற்குக் காரணம்.

பூமியை விட சந்திரன் வடிவில் சிறியது. அந்த அளவில் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமிக்கு உள்ளதில் ஆறில் ஒரு பங்கு அளவே இருக்கிறது. 

பூமி, சந்திரன் இரண்டிலும் ஈர்ப்பு சக்தியானது எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இல்லை. இடத்துக்கு இடம் நுண்ணிய அளவில் மாறுபடுகிறது. சில இடங்களில் அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம்.

இரு விண்கலங்களும் சந்திரனுக்கு மேலே எவ்விதமாகப் பறக்கும்
என்பதையும், பூமிக்கு எவ்விதமாகத் தகவல்களை அனுப்பும்
என்பதையும் விளக்கும் படம்
சந்திரனின் மேற்பரப்பில் ஈர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என்பது பற்றி மேலோட்டமாகத் தகவலகள் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ளன. எனினும்  மிகத் துல்லியமான தகவல்களைச் சேகரிப்பதற்கென அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இரு விண்கலங்களை சந்திரனுக்கு அனுப்பியது. இவற்றுக்கு கிரெயில் A, கிரெயில் B என்று பெயர். கிரெயில்(GRAIL)  என்பது Gravity Recovery And Interior Laboratory  என்ற நீண்ட பெயரின் சுருக்கமாகும்.

கிரெய்ல் A டிசம்பர் 31 ஆம் தேதியும்(2011), கிரய்ல் B  ஜனவரி ஒன்றாம் தேதியும்(2012) போய்ச் சேர்ந்தன. வழக்கமான முறையில் அல்லாமல் எரிபொருள் அதிகம் தேவைப்படாத பாதையில் சிறிய ராக்கெட் மூலம் இவை செலுத்தப்ப்ட்ட காரணத்தால் சந்திரனுக்குப் போய்ச் சேர மூன்றரை மாதங்கள் ஆகின. இத்துடன் ஒப்பிட்டால் 1960 களில் ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் ஒன்று 36 மணி நேரத்திலேயே சந்திரனுக்குப் போய் சாதனை புரிந்தது.

சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்துள்ள இரு விண்கலங்களும் சந்திரனை ஜோடியாக ஒன்றோடு ஒன்று கைகோர்த்துக் கொண்டது போல தெற்கு வடக்காகப் பறக்கும்.

பூமிக்குள் சில இடங்களில் பாறை அடர்த்தியாக இருக்கும். வேறு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருக்கும். பூமிக்குள் இருக்கின்ற இப்படியான மாறுபாடுகளால் தான் பூமியின் மேற்புறத்தில் ஈர்ப்பு சக்தி அளவில் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாடுகள் மிக உயரத்தில் பறக்கின்ற செயற்கைகோள்கள் மீதும் விளைவுகளை உண்டாக்குகின்றன.பாறைகள் மிக அடர்த்தியாக இருக்கின்ற இடத்துக்கு மேலே பறக்கும் போது --ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்ற இடத்துக்கு மேலாக வரும் போது -- செயற்கைகோள் ஒருகணம் சுண்டி இழுக்கப்படுவது போன்ற விளைவுக்கு உள்ளாகிறது. சந்திரனிலும் இப்படியான நிலைமை உள்ளது.

சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள இரு விண்கலங்களின் சுற்றுப்பாதை நன்கு திருத்தியமைக்கப்பட்டபின் இரண்டும் சந்திரனுக்கு மேல் 54 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும். மார்ச் மாதத்தில் தான் அவை பணியைத் தொடங்கும்.

சந்திரனுக்கு மேலாக இந்த இரு செயற்கைகோள்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பறக்கும் போது சந்திரனின் உட்புறத்தில் உள்ள நிலைமைகள் காரணமாக முதல் விண்கலம் சுண்டி இழுக்கப்பட்லாம். அப்போது இந்த இரு விண்கலங்களுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் லேசான மாறுதல் ஏற்படும்.  இவ்விதமான மாறுபாடுகள் சிக்னல் வடிவில் பூமியில் உள்ள தலைமைக் கேந்திரத்துக்கு அனுப்பப்படும். இந்த இரு விண்கலங்கள் நடத்தும் ஆய்வானது சந்திரனை எக்ஸ்ரே எடுப்பதற்கு ஒப்பானது என சொல்லப்படுகிறது.

சந்திரனின் ஈர்ப்பு சக்தி பற்றி முன்பு எடுக்கப்பட்ட படங்கள்.
இடது: சந்திரனின் முன்பக்கம்.
வலது: சந்திரனின் பின்பக்கம்.
இத்தகவல்களை வைத்து சந்திரன் உட்புறம் எவ்விதமாக உள்ளது என்பது அறியப்படும். இது சந்திரன் எப்படித் தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கு உதவலாம் என்று கருதப்படுகிறது.

விண்வெளி யுகம் தோன்றியதிலிருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலான நாடுகள் சந்திரனுக்கு மொத்தம் சுமார் 100 விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆனாலும் சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னமும் புதிராகவே உள்ளன.

இப்போது சந்திரனுக்கு இரட்டை விண்கலங்களை அனுப்பியுள்ள திட்டத்துக்குப் பொறுப்பான மரியா ஜூபெர் (Maria Zuber) கூறுகையில் சந்திரன் நமக்கு அருகே இருந்தாலும் அதை விட அதிகத் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றித் தான் நாம் நிறைய அறிந்து கொண்டுள்ளோம் என்றார்.

Jan 10, 2012

மனிதன் சிருஷ்டித்த ‘திரிசங்கு சொர்க்கம்’

Share Subscribe
திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. மனிதன் அவ்வாறு பூமிக்கு மேலே சிருஷ்டித்துள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம். மனிதனின் தொழில் நுட்ப வலிமை அதை சாத்தியமாக்கியது.

இரு புறங்களிலும் செங்குத்தாக உள்ள பட்டைகள் சூரிய ஒளியை  மின்சாரமாக
மாற்றுபவை. வெண்மை நிறப் பட்டைகள் வேறு வகையானவை.
அவற்றுக்கு கீழே உள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம்
இதை நிர்மாணிப்பதற்கான தொடக்க வேலைகள் 1998 ல் மேற்கொள்ளப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முதல் குழுவாக ஆறு விண்வெளி வீரர்கள் அதில் குடிபுகுந்தனர். அப்போதிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து விண்வெளி வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தடவையும் மூவர் அடங்கிய குழு உயரே அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆறு மாத காலம் தங்கி பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை ஐந்து பெட்ரூம் கொண்ட வீட்டுக்குச் சமம் எனலாம். அந்த அளவுக்கு அதில் இடவசதி உள்ளது. ஆனால் ஆராய்ச்சிக் கருவிகள் நிறைய இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இதுவரை பல்வேறான துறைகளில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள் உயரே செல்வதே பல பரிசோதனைகளை நடத்துவதற்குதான்.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியுள்ளன. எனினும் இந்த விண்வெளி நிலையத்தில் அந்தந்த நாடுகளுக்கென தனிப் பிரிவுகள் கிடையாது. அமெரிக்கப் பகுதி, ரஷியப் பகுதி என இரண்டு பகுதிகள் மட்டுமே உண்டு.

விண்வெளி நிலையத்தில் நீண்ட நாள் தங்கினால்
கால்களுக்குப் பயிற்சி தேவை
இந்த விண்வெளி நிலையம் ஒரே முயற்சியில் உருவாக்கப்பட்டதல்ல. முதல் பகுதியை ரஷியா தனது ராக்கெட் மூலம் உயரே செலுத்தியது. பின்னர் அமெரிக்க ஷட்டில் வாகனங்கள் அடுத்தடுத்து எடைமிக்க பகுதிகளை உயரே கொண்டு சென்றன. ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை பெரிய பகுதிகளை அளித்தன. கனடா நாடு ராட்சத கிரேன் ஒன்றை அளித்தது. இவை எல்லாம் விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளம் 51 மீட்டர். அகலம் 109 மீட்டர். உயரம் 20 மீட்டர். மொத்த எடை 450 டன். சில சமயம் இது சுற்றுகின்ற உயரம் சற்றே குறையும். உயரத்தை மறுபடி அதிகரிக்க தக்க ஏற்பாடு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எனினும் கனடா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அனுப்பப்படுகின்றனர். ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற முறையில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் உயரே அனுப்பப்படுகின்றனர்.

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் இளைஞர்களை அனுப்புவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. நாற்பது வயதை எட்டும் கட்டத்தில் தான் பொறுப்புணர்வு, சொன்னபடி செய்யும் குணம் ஆகியன இருக்கும் என்று நிபுணர்கள் கருதியதே இதற்குக் காரணம். இப்போது இக்கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது. ரஷியா இது விஷயத்தில் கண்டிப்பான கொள்கை எதையும் பின்பற்றவில்லை.

சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 380 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிறது. அந்த உயரத்தில் இருந்தபடி அது மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓயாது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது  (விண்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது). ஒரு தடவை சுற்றி முடிக்க 91 நிமிஷமே ஆவதால் அது ஒரு நாளில் பூமியை 15 தடவை சுற்றும். ஆகவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவ்வளவு தடவை சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள். ஆகவே அவர்களின் பகலும் இரவும் நமக்கு உள்ளதைப் போல இருப்பதில்லை.

விண்வெளி வீரர்களின் தூக்கம், பணி நேரம் முதலியன கீழே கட்டுப்பாட்டுக் கேந்திரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் வானில் நல்ல வேகத்தில் பூமியைச் சுற்றுவதை உணரமாட்டார்கள். நிலையாக ஓரிடத்தில் இருப்பது போலவே அவர்களுக்குத் தோன்றும். அதே நேரத்தில் அவர்களால் பூமி தனது அச்சில் சுழல்வதைக் காண இயலும்.

விண்வெளி நிலையத்துக்குள்
மேல் கீழ் என்பது கிடையாது
விண்வெளி என்பது பொதுவில் மனிதன் வாழ லாயக்கற்ற பிரதேசம். சர்வதேச விண்வெளி நிலையம் பறக்கின்ற உயரத்தில் ‘எடையற்ற நிலை’ தோன்றும். ஈர்ப்பு சக்தி என்பது அனேகமாக இராது. கையில் பிடித்துள்ள தம்ளரை விட்டால் அப்படியே அந்தரத்தில் நிற்கும். அல்லது இஷடத்துக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகரும். மேல் கீழ் என்பதே இராது.  விண்கலத்துக்குள்ளாகக் கால் ஊன்றி நிற்க இயலாது. விண்கலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அந்தரத்தில் மிதந்தபடி தான் செல்ல வேண்டும். சொல்லப் போனால் கால்களுக்கு வேலையே இல்லை.

போல்ட் ஸ்குரூ போட்டு முடுக்கி இருந்தால் ஒழிய மேஜை பறக்கும். கையில் எடுத்த தட்டை விட்டால் பறக்கும். ஸ்பூனில் எடுத்தால் வாய் அருகே கொண்டு செல்லு முன்னர் ஸ்பூனில் உள்ள உணவுப் பொருள் பறக்கும். தண்ணீர் குடிக்கலாம் என்றால் தம்ளரிலிருந்து தண்ணீர் வாய்க்குள் விழாது. தனித் தனி உருண்டைகளாக மாறி விண்கலத்துக்குள் நாலாபுறங்களிலும் பறக்கும். பணி புரியும் போதும் இப்படியான பிரச்சினைகள் தோன்றும். ஸ்குரூ டிரைவரை மறந்து அருகில் வைத்தால் அது பறந்து விண்கலத்தில் உயரே எங்காவது மூலையில் அந்தரத்தில் நிறகும்.

கைக்கு எட்டிய சாக்லேட் வாய்க்கு எட்டுமா?
படுக்கையில் படுக்க முடியாது. கொஞ்ச நேரத்தில் அந்தரத்தில் மிதப்பார்கள். விண்கல சுவரில் கோணிப்பை போல ஒரு பையைத் தொங்க விட்டு அதனுள் நுழைந்து கொண்டு உறங்கலாம். கஷ்டமாக இராது. ஈர்ப்பு சக்தி அனேகமாக இராது என்பதால் அன்றாட வேலைகளில் எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்

விண்வெளியில் உள்ள நிலைமைகள் உடலை பல வகைகளில் பாதிக்கும். கால்களுக்கு வேலை இல்லை என்பதால் அவை சூம்பிப் போனவை போல ஆகிவிடும். ஆகவே கால்களுக்குப் பயிற்சி அளிக்க விண்கலத்தில் சைக்கிள் பாணியிலான பயிற்சிக் கருவி இருக்கும். அதில் ஏறி உட்கார்ந்து சில மணி நேரம் பெடல் செய்தாக வேண்டும். புஜங்களும் மார்புப் பகுதியும் பெருத்து விடும். உயரம் சில செண்டிமீட்டர் அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பியவுடன் கால்களை ஊன்றி நிற்க இயலாது. எனினும் இவை எல்லாம் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் சரியாகிவிடும்.

விண்வெளி வீரர்களுக்கென கீழே இருந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படுகின்ற ரெடிமேட் உணவுகளை சுட வைத்து சாப்பிட வேண்டும். அவற்றில் மெக்சிகோ வகை சுக்கா ரொட்டி முக்கிய அயிட்டம்.

சுக்கா ரொட்டி அடங்கிய தட்டு அந்தரத்தில் மிதக்கிறது
நடமாட்டம், உணவு, தூக்கம் எனப் பலவகைகளிலும் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்து அப்பிரச்சினைகளுக்கு இடையே தான் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டாக வேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவ்வப்போது உணவு, தண்ணீர், காற்று, மருந்து போன்றவற்றை அவ்வப்போது எடுத்துச் சென்ற அமெரிக்க விண்வெளி ஷட்டில் வாகனங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவை அமெரிக்க மியூசியங்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட்ன. ஆகவே இப்போது ரஷியாவின் சரக்கு வாகனங்களும் சோயுஸ் விண்கலங்களும் (Soyuz) தான் இப்பணிகளைச் செய்து வருகின்றன. சோயுஸ் விண்கலங்கள் மூலம் தான் அவ்வப்போது விண்வெளி வீரர்கள் உயரே செல்கின்றனர் அல்லது அங்கிருந்து திரும்புகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எதிர்பாராத விபத்து அல்லது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டு செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் அல்லது அவற்றின் கழன்று போன உறுப்புகள் அதே உயரத்தில் தான் பறக்கின்றன். இவை சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதி சேதத்தை உண்டாக்கலாம்.

அண்மையில் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் என்று தோன்றிய போது விண்வெளி நிலையத்தின் பாதை சற்றே மாற்றப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் போது ஆபத்தான துகள்கள் பாய்ந்து வரும். அவ்வித நிலைமைகளில் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குச் சென்று ஒண்டிக் கொள்வர். கீழே வருவதற்கான விண்கலம் ஒன்று எப்போதும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தபடி இருக்கும். ஆகவே மிக ஆபத்தான நிலைமை தோன்றினால் அதன் மூலம் பூமிக்குத் திரும்பி விடுவர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு கைவிடுவதென ஒரு திட்டம் உள்ளது. இதை 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று அண்மையில் ரஷியா யோசனை கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பரிசோதனைகளை நடத்த இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ (ISRO) விரும்புவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையத்தை நிர்வகிக்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இல்லை (சீனாவும் இல்லை) என்பதால் இந்திய விண்வெளி வீரர்கள் சரவதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் இல்லை.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி ஆராய்ச்சி நடத்துவதற்காக உயரே விண்வெளி நிலையம் அனுப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1971 ஆம் ஆண்டில் முதன் முதலாக ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) சல்யூட்(Salyut) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. பின்னர் பல சல்யூட் விண்கலங்கள் செலுத்தப்ப்ட்டன். இதில் ரஷிய விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கிப் பணியாற்றினர்.

அமெரிக்க ஸ்கைலாப்
பின்னர் அமெரிக்கா ஸ்கைலாப் (Skylab) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. அது 1973 முதல் 1979 வரை செயல்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கி செயல்பட்டனர். அதன் பிறகு ரஷியாவின் மிர் (Mir) விண்கலம் 1986 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுக்காலம் செயல்பட்டது. அதுவரை உயரே அனுப்பப்பட்ட விண்வெளி நிலையங்களில் மிர் தான் பெரியது. ஆனால் இப்போது செயல்படும் சர்வதேச விண்வெளி நிலையம் தான் வடிவிலும் சரி, எடை அளவிலும் சரி மிகப் பெரியது.

ரஷிய மிர் விண்வெளி நிலையம்
இப்போது சீனா தனக்கென தனியே ஒரு விண்வெளி நிலையத்தை ஏற்படுத்திக் கொள்வதில் முனைந்துள்ளது. 2011 செப்டம்பர் கடைசியில் சீனா வானுலக மாளிகை என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலத்தை உயரே அனுப்பியது. இப்போது அது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீனா பின்னர் நவம்பரில் ஒரு சிறிய விண்கலத்தை அனுப்ப, அது உயரே சென்று வானுலக மாளிகை விண்கலத்துடன் இணைந்து கொண்டது. மேலும் சில இணைப்புக் கலங்களை அனுப்பிய பின்னர் வானுலக மாளிகையில் தங்கி பணி புரிய சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்படலாம். உயரே விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை.

Jan 5, 2012

நாம் இப்போ சூரியனுக்கு ரொம்ப பக்கம்

Share Subscribe
இன்று ஜனவரி 5 ஆம் தேதி. நாம் மற்ற எந்த நாளையும் விட சூரியனுக்கு மிகவும அருகில் இருக்கிறோம். ”இப்போ ரொம்ப குளிருது.  நீங்க ஏதோ தப்பா சொல்றாப்லே இருக்கு” என்று கேட்கலாம்.

நியாயமான சந்தேகம்தான். தமிழகத்தில் இந்த ஆண்டு குளிரானது வழக்கத்தை விட சற்று அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது. பாஸ்டன், லண்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களில் குளிரின் கடுமை பற்றிச் சொல்லவே வேண்டாம். நிலைமை இப்படி இருக்க சூரியனுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதை சற்று விளக்கியாக வேண்டும்.

சூரியனை பூமி சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சராசரி தூரம் 15 கோடி கிலோ மீட்டர். பூமியின் சுற்றுப்பாதை மட்டும் மிகச சரியான வட்டமாக இருந்தால் தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். ஆனால் பூமியின் சுற்றுப்பாதை சற்றே அதுங்கிப் போன வட்டமாக உள்ளது. ஆங்கிலத்தில் இதை Ellipse  என்பார்கள்.தமிழில் இதை நீள் வட்டம் என்பதை விட அதுங்கிய வட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

ஜனவரி 5: பூமி சூரியனுக்கு அருகாமையில் உள்ளது.
ஜுலை 5: பூமி சூரியனிலிருந்து மிகவும் அப்பால் உள்ளது.
பூமியின் சுற்றுப்பாதை இவ்விதம் அதுங்கிய வட்டமாக இருப்பதால் பூமியிலிருந்து சூரியன் ஒரு சமயம் 15.21கோடி கிலோ மீட்டரில் உள்ளது. இதைத் தொலைவு நிலை(Aphelion) என்கிறார்கள். வேறு சமயத்தில் இந்த தூரம் 14.71 கோடி கிலோ மீட்டராக உள்ளது. இதை அண்மை நிலை (Perhelion) என்கிறார்கள். ஆண்டில் குறிப்பிட்ட தேதிகளில் அண்மை நிலையும், தொலைவு நிலையும் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் அண்மை நிலையில் இருக்கும். அதாவது ஆண்டின் மற்ற நாட்களை விட அன்றைய தினம் தான் நாம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம். அப்படியானால் ஜனவரி மாதம் தானே வெயில் கடுமையாக இருக்க வேண்டும்? அப்படி இல்லையே என்று கேட்கலாம்.

அப்படி இல்லாததற்கு முக்கிய காரணம் பூமியின் சாய்மானம். பூமியின் சாய்மானம் காரணமாகத் தான் பூமியில் கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் போன்ற பருவங்கள் ஏற்படுகின்றன. பூமியின் நடுக் கோட்டுக்கு (Equator) வடக்கே உள்ள இடங்களில்-- வட கோளார்த்தம் -- இப்போது குளிர்காலம்.

பூமியானது தனது அச்சில் சுமார் 23.5 டிகிரி அளவுக்கு சாயந்தபடி உள்ளது. அவ்விதம் சாய்ந்த நிலையில் தான் அது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஜனவரி மாதத்தில் சூரியன் பூமிக்கு எதிர்ப்புறமாக சாயந்த நிலையில் உள்ளது.
சூரிய கிரணங்கள் சாய்வாக விழும் போது வெயில் உறைக்காது. செப்டம்பருக்குப் பிறகு பிப்ரவரி வரை வட கோளார்த்தத்தில் சூரிய கிரணங்கள் சாய்வாக விழுகின்றன

நீங்கள் இரவில் விளக்குகளை அணைத்து விட்டு சுவர் அருகே நின்றபடி  டார்ச் லைட்டை சுவர் மீது வெளிச்சம் விழும் படி ஆன் செய்யுங்கள்.வட்டமாக பிரகாசமான  ஒளி விழும். பின்னர் டார்ச் லைட்டை தரையில் கிடத்தி ஆன் செய்யுங்கள்.

ஒளி இப்போது பரந்த பரப்பில் விழும். ஆனால் தரையில் விழும் ஒளி மங்கலாக இருக்கும். அதிகப் பரப்பில் விழுவதால் இப்படி ஏற்படுகிறது. குளிர் கால்த்தில் வட கோளார்த்ததில் இப்படியாகத் தான் வெயில் விழுகிறது.

கோடையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் விழுகின்ற அதே வெயில் குளிர் காலத்தில் பத்து சதுர கிலோ மீட்டரில் விழுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது நிச்சயம் வெயில் உறைக்காது. ஆகவே குளிர் தான் வீசும்.

ஆகவே கோடையா, குளிர் காலமா, வெயில் உறைக்குமா, குளிர் நடுக்குமா என்பது சூரியன் பூமிக்கு அருகில் உள்ளதா இல்லையா என்பதுடன் சம்பந்தப்பட்டது அல்ல.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழகம் மாதிரி பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளை விட 23 ஆம் டிகிரி வடக்கு அட்சரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் -- வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் வட பகுதிகள் ஆகியவற்றில் சூரிய கிரணங்கள் மிகவும் சாய்வாக விழும். ஆகவே தான் குளிர் காலத்தில் அப்பகுதிகளில் குளிர் அதிகமாக உள்ளது.

இடது புறம்: ஜூலையில் சின்ன சூரியன்.
வலது புறம்: ஜனவரியில் பெரிய சூரியன்.
 இது 2005 ஆம் ஆண்டில் அந்தந்த மாதங்களில்
எடுக்கப்பட்டுப் பிறகு ஒன்று சேர்க்கப்பட்ட படம்
இன்னொரு விஷயம். எதுவாக இருந்தாலும் அருகில் இருக்கும் போது சற்று பெரிதாகத் தெரியும். சூரியனுக்கும் இது பொருந்தும். ஜனவரி 5 ஆம் தேதி சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் மற்ற நாட்களில் இருப்பதை விடக் குறைவு என்பதால் ஜனவரியில் சூரியன் சற்று பெரிதாகத் தெரியும். ஜூலையில் சற்று சிறியதாகத் தெரியும் (சூரியன் பெரியதாகத் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ள சூரியனைப் பார்க்க முயல வேண்டாம். கண் பார்வை பறி போய் விடலாம்).

Jan 3, 2012

எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா?

Share Subscribe
வங்கக் கடலில் பொதுவில் நவம்பர் மாதத்தில் புயல்கள் உருவாகும். டிசம்பர் இரண்டாவது வாரம் வரையிலும் புயல் சீசன் தான். இந்த ஆண்டில் அசாதாரண்மான வகையில் வங்கக் கடலில் நவம்பரில் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை. இதற்குப் பரிகாரமாக டிசம்பர் கடைசியில் - 30 ஆம் தேதியன்று - ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கிக் கடும் சேதத்தை விளைவித்தது.

கம்ப்யூட்டர் வசதி கொண்டவர்களில் பலரும் இந்திய வானிலை இலாகாவின் வலைத் தளத்துக்குச் சென்று கல்பனா செயற்கைக்கோள் அவ்வப்போது அனுப்பிய படங்களைப் பார்த்து புயல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் சரி, புயல் சுழலும் பாணியை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

1. வலமிருந்து இடம் 2. இடமிருந்து வலம்
கல்பனா (Kalpana) செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் சில பத்திரிகைகளிலும் வெளியாவதுண்டு. அப்படங்களைப் பார்க்கின்றவர்களும் சரி, புயல் சுழலும் பாணியைக் கவனிக்காமல் இருக்கலாம்.

வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.

வலமிருந்து இடமாகச் சுழலும்
வட கோளார்த்தப் புயல் 
அட்லாண்டிக் கடலிலும் இவ்விதம் புயல்கள் தோன்றி அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்குகின்றன. ஜப்பானை யொட்டிய கடல் புகுதியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அருகில் உள்ள கடலிலும் இது போன்று புயல்கள் உருவாகின்றன. சீனாவின் கிழக்குக் கரையை ஒட்டிய கடலிலும் புயல்கள் தோன்றுகின்றன.

சொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.

டிசம்பர் 2011, "தானே”(Thane) புயல்.
வலமிருந்து இடமாகச் சுழல்கிறது.
நன்றி: IMD
இதற்கு நேர் மாறாக நடுக்கோட்டுக்கு தெற்கே தோன்றும் புயல்கள் அனைத்தும் இடமிருந்து வலப்புறமாகச் சுழலும். கீழே உள்ள படத்தில் புயல் இடமிருந்து வலப்புறமாக (Clockwise) சுழல்வதைக் கவனிக்கவும். இப்புயல் தென் கோளார்த்தத்தில் உருவானதாகும்.தென் கோளார்த்தத்தில் புயல்கள் அனைத்தும் இவ்விதமாகத் தான் சுழலும்.

இடமிருந்து வலமாகச் சுழலும்
தென் கோளார்த்தப் புயல்

குஸ்டாவ் கொரியாலிஸ்
வட கோளார்த்தப் புயல்கள் ஒரு விதமாகவும் தென் கோளார்த்தப் புயல்கள் வேறு விதமாகவும் சுழல்வதற்கு கொரியாலிஸ் விளைவு(Coriolis Effect) காரணம். பிரெஞ்சு விஞ்ஞானியும் கணித நிபுணருமான குஸ்டாவ் கொரியாலிஸ் (Gaspard-Gustave de Coriolis) 1835 ஆம் ஆண்டில் அறிவித்த கொள்கை புயல்களின் இப்போக்குக்கான அடிப்படையை விளக்கியது. ஆகவே இதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.

தென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.

கொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.

பூமியின் வட கோளார்த்தத்தில் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.

ஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை)  மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்த பின்னர் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.