Feb 29, 2012

சில்லுகள் போர்த்திய பூமி

Share Subscribe
சிதறுகாய் போடுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தரையில் ஓங்கி வீசப்பட்ட தேங்காய் உடைந்து பெரியதும் சிறியதுமான சில்லுகளாகச் சிதறும். இச்சில்லுகள் அனைத்தையும் சேகரித்து மிகக் கவனமாக ஒன்றோடு ஒன்று பொருத்தினால் முழுத் தேங்காய் கிடைக்கும். இப்போது அத்தேங்காய பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். பூமியின் மேற்புறம் இப்படியான பல சில்லுகளால் ஆனதே.

பூமியின் மீது அமைந்த பிரதான சில்லுகளும்
அவை நகரும் திசைகளும் (அம்புக்குறி)
இந்த சில்லுகள் மீது தான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்த சில்லுகளை ஆங்கிலத்தில் Plates என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் சில்லுகள் தான் நகருகின்றன. சில்லுகள் நகரும் போது கண்டங்களும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகருகின்றன.

இதுவே சில்லுப் பெயர்ச்சி இயல் (Plate Tectonics) எனப்படுகிறது. மேலே உள்ள படத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிலும் கடல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா நகரும் போது அதைச் சுற்றியுள்ள கடலகளும் சேர்ந்து நகரும். இந்தியச் சில்லு நகரும் போது இந்தியத் துணைக் கண்டமும், அத்துடன் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகரும்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட கணக்குப்படி பூமியில் மொத்தம் 52 சில்லுகள் உள்ளன. இவற்றில் 14 சில்லுகள் பெரியவை (மேலே படம் காண்க),  மற்றவை சிறியவை. பெரிய சில்லுகளில் பசிபிக் சில்லு, யுரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, தென் அமெரிக்க சில்லு, ஆப்பிரிக்க சில்லு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சில்லு என்பது உண்மையில் பிரும்மாண்டமானது. ஒரு சில்லு சில ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக இருக்கலாம். இவற்றின் பருமன் மேலிருந்து கீழ் வரை 15 அல்லது 200 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.அதாவது சில்லுகள் வடிவில் பெரியவை.

உதாரணமாக இந்தியச் சில்லுவின் தடிமன் சுமார் 150 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் இதன் விளிம்பில் அமைந்துள்ள இமயமலை வெறும் கல் துண்டு போன்றதே. இமயமலையின் - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 9 கிலோ மீட்டருக்கும் குறைவு.

சில்லுகள் அனைத்துமே நகருகின்றன. இவற்றை 1. விலகும் சில்லுகள் 2. புதையும் (செருகும்) சில்லுகள் 3. உரசும் சில்லுகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உதாரணமாக அமெரிக்காவின் மேற்குக் கரையில் பசிபிக் சில்லுவும் வட அமெரிக்க சில்லுவும் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. இதன் விளைவாகவே கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடும் பூகம்பம் நிகழ்கிறது.

அமெரிக்காவின் மேற்குக் கரையில் இரு சில்லுகள்
உரசிச் செல்கின்றன. அம்புக் குறிகளைக் கவனிக்கவும்.
இச்சில்லுப் பகுதி உலகிலேயே விரிவாக ஆராயப்பட்டதாகும். எதிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கலிபோர்னியா சில்லு தனியே பிரிந்து தீவு போலாகி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

விலகும் சில்லுகளுக்கு முக்கிய உதாரணம் அட்லாண்டிக் கடலின் நடுவே  சில்லுகளாகும். இவை எதிர் எதிர் திசையில் நகருகின்றன. பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே யூரேசிய சில்லும், வட அமெரிக்க சில்லும் எதிர் எதிரான திசையில் விலகுகின்றன. நடுக்கோட்டுக்குத் தெற்கே ஆப்பிரிக்க சில்லும் தென் அமெரிக்க சில்லும் இதே போல எதிர் எதிரான திசைகளில் விலகுகின்றன. இது கடலடியில் நிகழ்வதால் நம்மால் காண இயலாது.

இடது புறம் உள்ளது வட அமெரிக்க சில்லு.
வலது புறம் ஐரோப்பிய சில்லு.
ஆனால் ஐஸ்லாந்தில் நிலப் பகுதியில் சில்லுப் பெயர்ச்சியை - அதன் அடையாளத்தை நேரில் காண முடியும். ஐஸ்லாந்தில் ஓரிடத்தில் நகரும் இரு சில்லுகளுக்கு இடையே நீங்கள் நடந்து செல்லலாம். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.

செருகும் சில்லுகள் இருக்குமிடத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இமயமலைக்குச் சென்றால் போதும்.அங்கு யுரேசிய சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு செருகுவதாக உள்ளது. இதன் விளைவாகவே இமயமலை தோன்றியது.

இங்கு நிலப் பகுதியாக் உள்ள சில்லு இதே போல நிலப் பகுதியாக உள்ள வேறு சில்லுக்கு அடியில் செருகுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவுடன் ஒட்டிக்கொண்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லுவின் தென் பகுதியில் ஒட்டிக்கொண்டது. அதற்கு முன்னர் இந்திய துணைக்கண்ட சில்லுவில் இமயமலை கிடையாது. இந்திய துணைக்கண்ட சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் செருக ஆரம்பித்த பின்னரே இமயமலை தோன்றியது. கீழே படம் காண்க.

இமயமலை தோன்றிய விதம்
நிலப் பகுதியில் மட்டுமன்றி கடல்களுக்கு அடியிலும் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போகலாம். இந்தியாவுக்குக் கிழக்கே அந்தமான் தீவுகளுக்கு அப்பால் கடலுக்கு அடியில் யுரேசிய சில்லுவின் ஒரு பகுதியான பர்மா சில்லு உள்ளது. இந்த பர்மா சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு புதைகிறது. பல சமயங்களிலும் இந்தியச் சில்லுவையும் ஆஸ்திரேலிய சில்லுவையும் சேர்த்து இந்திய- ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியச் சில்லு பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது
இந்தோனேசியத் தீவுகள் பகுதியில் ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. தவிர, அங்கு பசிபிக் சில்லுவும் யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது.

ஜப்பானுக்குக் கிழக்கே பிலிப்பைன் சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. பசிபிக் சில்லு வட அமெரிக்க சில்லுக்கு அடியில் புதைகிறது.

இப்படியான சில்லுப் பெயர்ச்சிகளால் தான் கண்டங்கள் இடம் பெயருகின்றன. ஒட்டிக்கொண்டிருந்த கண்டங்கள் விலகும் போது புதிதாகக் கடலகள் தோன்றுகின்றன. விலகியிருந்த கண்டங்கள் ஒன்று சேரும் போது அவற்றின் இடையில் இருந்த கடல்கள் மறைந்து போகின்றன.

ஆனால் உரசும் சில்லுகளாலும் புதையும் சில்லுகளாலும் பூமியின் மேற்பரப்பில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு அவ்வப்போது கடும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இதை அடுத்த பதிவில் காண்போம்.

Feb 19, 2012

கண்டங்கள் நகருவது எப்படி?

Share Subscribe
ஆல்பிரெட் வெஜனர் ஜெர்மன்காரர்.  வானவியலில் (Astronomy) டாக்டர் பட்டம் பெற்றவர். வானை அண்ணாந்து பார்த்து ஆராய வேண்டிய அவர் கீழே குனிந்து பூமியை ஆராயத் தொடங்கினார். உலகின் கண்டங்கள் இடம் பெயர்கின்றன என்று முதன் முதலில் கூறியவர் அவர்தான். புவியியல் பற்றிப் பல விஷயங்கள் தெரியவராத கால கட்டத்தில் அவர் கூறியது பெரிய புரட்சிகரமான கருத்து தான்.

தென அமெரிக்கக் கண்டத்தை அப்படியே மேற்கு நோக்கி நகர்த்தினால் அதன் விளிம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியுடன் நன்கு பொருந்தும் என்றார் அவர் (கீழே படம் காண்க). உலகப் படத்தை நீங்கள்  உற்று கவனித்தால் அவர் சொல்வது சரியே என்று தோன்றும். ஆனால் வெஜனர் இது ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.

படத்தில் உள்ள ஐந்து கண்டங்களிலும் பரவியிருந்த
தாவரங்கள், உயிரினங்கள்
தென் அமெரிக்காவின் கிழக்கு ஓரமாக உள்ள மலைகளின் பாறைகளும் ஆப்பிரிக்காவின் மேற்குப் புற மலைகளின் பாறைகளும் ஒரே விதமாக உள்ளதை சுட்டிக் காட்டினார். செடி கொடிகளை ஆதாரம் காட்டினார். விலங்குகளின் புதையுயிர் தடயங்களை சுட்டிக்காட்டினார். ஒரு சில கண்டங்களை ஒன்று சேர்த்தால் இக்கண்டங்களில் உள்ள ஈயச் சுரங்கங்கள் நேர் கோட்டில் அமைவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆப்பிரிக்கா, இந்தியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் சில வகை செடி கொடிகள் ஒரே மாதிரியாக இருப்பதையும் அக்கண்டங்களில் முற்காலத்தில் ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகள் உயிர் வாழ்ந்ததையும் அவர் சான்றாகக் காட்டினார்.

ஆல்பிரெட் வெஜெனர்
(1880 -1930)
அவர் அளித்த ஆதாரங்கள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும், கண்டங்கள் எப்படி நகர்ந்தன என்ற கேள்விக்கு அவரால் விடை அளிக்க இயலவில்லை. அன்றைய விஞ்ஞானிகள் அவரது கொள்கையை நிராகரித்ததில் வியப்பில்லை. வெஜனர் கூறிய கொள்கை சரி தான் என்று பின்னர் நிரூபணமான காலத்தில் அவர் உயிரோடு இருக்கவில்லை.

வெஜனர் வானிலைத் துறையிலும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சிக்காக கடும் குளிர்காலத்தில் கிரீன்லாந்துக்குச் சென்றார். ஆராய்ச்சி வெற்றிபெற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது கொள்கை மறைந்து விடவில்லை.

கண்டப் பெயர்ச்சிக்குக் கடைசியில் எதிர்பாராத வகையில் கடலுக்கு அடியிலிருந்து துப்புகள் கிடைக்க ஆரம்பித்தன். பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கும் கடலடி தந்திக் கம்பிகள் (கேபிள்கள்) போடப்பட்ட்ன. ஒரு சமயம் இவை பழுதடைந்தன. ஆகவே அவற்றை மேலே தூக்கிய போது அவற்றுடன் ஒட்டிக் கொண்டு கற்களும் மேலே வந்தன. அவற்றை ஆராயந்த போது நடுக்கடல் பாறைகள் வயது குறைந்தவையாகக் காணப்பட்டன.

ஒரு ஏரியில் நட்ட நடுவிலிருந்து வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது மிகப் பழையதாக இருக்கும். ஏரியின் நடுப்பகுதியில் வண்டல் நிறையவே இருக்கும். ஏரியின் கரை ஓரமாக உள்ள வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது அண்மையில் வந்ததாக இருக்கும்.

ஆனால் இதற்கு நேர் மாறாக அட்லாண்டிக் கடலின் நடுப் பகுதிலியிருந்து எடுக்கப்பட்ட பாறை வயது குறைந்தவையாகக் காணப்பட்டன. இது பெரிய புதிராக இருந்தது. தவிர, நடுக்கடலில் வண்டல் குறைவாகவே இருந்தது. விசேஷக் கருவிகளைக் கடலுக்குள் இறக்கி ஆராய்ந்த போது அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் கடலடித் தரையில் வெப்பம் வெளிப்படுவது தெரிய வந்தது.

உலகின் கடல்களுக்கு அடியில் தொடர் சங்கிலி போன்ற மலைகள்.
இங்கு தான் கடலடித் தரை விரிவடைகிறது. இங்கு பாறைகள்
வயது குறைந்தவை (சிவப்பு நிறம்) என்பதை இப்படம் காட்டுகிறது.
அட்லாண்டிக்கில் தொடர்ந்து மேலும் ஆராய்ந்தபோது அக்கடலில் வட கோடியிலிருந்து தென் கோடி வரை நீண்ட மலைத் தொடர் இருப்பது தெரிய வந்தது. அக்கடலடி மலைத் தொடரின் நடுவே பள்ளத்தாக்கும் காணப்பட்டது.  அங்கு பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு பிதுங்கியபடி வெளியே வருவது தெரிந்தது.

சுருங்கச் சொன்னால் அங்கு புது நிலம் வெளிப்படுகிறது. அந்த நிலமே அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியை மேற்கு நோக்கியும் கிழக்குப் பகுதியை கிழக்கு நோக்கியும் தள்ளுகிறது என்பது தெரிய வந்தது. இதன் விளைவாக அட்லாண்டிக் கடல் மேலும் மேலும் விரிவடைகிறது.

கடலடித் தரையில் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுக்கு கடலடித் தரை விரிவு (Sea Floor Spreading)  என்று பெயர். பூமியின் மேற்புறத்தில் வேறிடங்களிலும் கடலடித் தரையில் இவ்விதம் நிகழ்கிறது. அட்லாண்டிக்கில் கடலடியில் உள்ள மலை உலகின் பிற கடல்களிலும் நீண்டு அமைந்துள்ளது. வளைந்து வளைந்து செல்லும் இந்த நீண்ட மலைத் தொடரின் நீளம் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர்.

பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளிப்பட,
இரு புறங்களிலும் தரை நகருகிறது
கடலடித் தரை பல இடங்களில் விரிவடைந்தால் பூமியானது பூரி போல உப்பிக் கொண்டே போக வேண்டியது தான். அத்துடன் பூமியின் சுற்றளவும் அதிகரித்துக் கொண்டே போகும். ஆனால் பூமி உப்புவதில்லை. காரணம் பூமியில் வேறிடங்களில் கடலடித் தரை பூமிக்குள் செல்கின்றது.

பூமியின் காந்தத் துருவங்கள் (Magnetic Poles) பல ஆயிரம் அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது. அதாவது வட துருவம் தென் துருவமாக மாறும். தென் துருவம் வட துருவமாகிவிடும். இந்த மாற்றங்கள் கடலடித் தரையில் பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் நெருப்புக் குழம்பில் அடங்கிய நுண்ணிய இரும்புத் துணுக்குகளில் பதிவாகிறது.

ஆகவே கடலடிப் பாறை சாம்பிள்களை ஆராய்ந்த போது பூமியின் கடந்த கால வரலாறே தெரிய வந்தது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்களான பிரெடெரிக் வைன்(Frederick Vine), டிரம்மண்ட் மாத்யூஸ்(Drummond Mathews) ஆகிய இருவரும் பாறை சாம்பிள்களில் அடங்கிய தொல்காந்தப் பதிவுகளுக்கு விளக்கம் கண்டுபிடித்த போது தான் கடலடித் தரை விரிவுக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டது.

விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்ததில் பூமியின் மேற்புறம் பல சில்லுகளால் ஆனது என்பது தெரிய வந்தது. பூமியின் சில்லுகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Feb 17, 2012

அமாசியா என்ற சூப்பர் கண்டம்

Share Subscribe

20 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கண்டங்கள் எவ்விதமாக அமைந்து இருக்கும்? கீழே உள்ள படம் அதைத்தான் காட்டுகிறது.



இடது புறம் தென் அமெரிக்கக் கண்டம் தலை கீழாகத் தொங்குகிற்து. அதை அடுத்து இருப்பது வட அமெரிக்கா. அத்துடன் ஆசியாவும் ஐரோப்பாவும் சேர்ந்து காணப்படுகின்றன. வலது புறத்தில் அடியில் இருப்பது ஆப்பிரிக்கா -  உற்றுக் கவனித்தால் அதை அடையாளம் காண முடியும்.

வலது மூலையில் இந்தியா இருப்பதைப் பார்க்கலாம். இப்போது ஆசியாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தியா தனித் தீவு/துணைக் கண்டமாகக் காட்சி அளிக்கிறது. எல்லாமே வட துருவத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.

உலகின் ஐந்து பெரிய கண்டங்கள் இப்படத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி     சூப்பர் கண்டமாகத் திகழ்கின்றன. என்றோ ஏற்படப் போகின்ற இந்த சூப்பர் கண்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் தான் அமாசியா (Amasia).


உலகின் கண்டங்கள் இப்போது அமைந்துள்ள விதம்
எதிர்காலத்தில் இப்படி நிகழுமா? கண்டங்கள் இடம் பெயருமா? கண்டங்கள் ஒன்றோடு ஒன்று சேர முடியுமா என்றெல்லாம் கேட்கலாம். கடந்த காலத்தில் உலகின் கண்டங்கள் இப்படி இடம் பெயர்ந்துள்ளன. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் சரி, கண்டங்கள் ஓராண்டுக்கு ஒரு செண்டி மீட்டர், இரண்டு செண்டி மீட்டர் எனற வேகத்தில் வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. உதாரணமாக இந்தியத் துணைக் கண்டம் வடகிழக்கு திசை நோக்கி ஓராண்டுக்கு ஐந்து செண்டி மீட்டர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வட அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும் ஆப்பிரிக்கா கிழக்கு நோக்கியும் இப்போது நகர்ந்து கொண்டிருப்பதால் அட்லாண்டிக் கடலின் அகலம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக லண்டனுக்கும் நியூயார்க் நகருக்கும் இடையிலான தூரம் கொஞ்சங்கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
கடந்த காலத்தில் அவ்வப்போது சூப்பர் கண்டங்கள் இருந்தன என்ற காரணத்தால் எதிர்காலத்திலும் சூப்பர் கண்டங்கள் தோன்ற நிச்சயம் வாய்ப்பு உள்ளது.

சுமார் 180 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நுனா (Nuna) என்ற சூப்பர் கண்டம் இருந்தது. 110 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூப்பர் கண்டத்தின் பெயர் ரோடினியா (Rodiniya). 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா (Pangae)  என்ற சூப்பர் கண்டம் இருந்தது.

சூப்பர் கண்டம் தோன்றியது என்றால் அது நிலையாக அப்படியே நீடிப்பதில்லை. சில காலம் கழித்து கண்டங்கள் விலகுகின்றன. கண்டங்கள் ஒன்று சேருவதும் பின்னர் விலகுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளது.

கடந்த காலத்தில் சூப்பர் கண்டங்கள் எவ்விதம் உருவாகின, பின்னர் எந்தப் பாணியில் அவை கலைந்தன என்பன பற்றிய தகவல்களை வைத்து அமெரிக்க யேல் பல்கலைக்கழக(Yale) விஞ்ஞானிகள் எதிர்கால் சூப்பர் கண்டம் எவ்விதமாக எப்போது அமையலாம் என்பதை கம்ப்யூட்டர் மாடல்கள் மூலம் கணித்துள்ளனர்.

சூப்பர் கண்டம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. பூமியின் மேற்புறத்தில் ஒரு மையத்திலிருந்து விலகிப் போன கண்டங்கள் மறுபடி அதே மையத்தை நோக்கி வந்து ஒன்று சேருதல். இரண்டாவது வழி வேறு விதமானது. விலகிய கணடங்கள் மேலும் மேலும் பின நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். பூமி உருண்டை என்பதால் இக்கண்டங்கள் அனைத்தும் பூமியின் மறு புறத்தில் ஒன்றாகக் குவிந்து சூப்பர் கண்டம் உருவாகும். மூன்றாவது முறையில் விலகிச் செல்லும் கண்டங்கள் வட புறமாக அல்லது தென் புறமாக ஒதுங்கிப் போய் சூப்பர் கண்டம் உருவாகும்.  கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தில் இவ்விதமாக உருவாகின்ற சூப்பர் கண்டம் காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சூப்பர் கண்டம் உருவாகுமா என்பது பற்றி 1990 களில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஹாப்மன் (Paul  Hoffman) தான் முதன் முதலில் சிந்திக்கத் தொடங்கினார். அவர் தான் எதிர்கால சூப்பர் கண்டத்துக்கு அமாசியா என்று பெயர் வைத்தவர்.

வெவ்வேறு கால கட்டங்களில் கண்டங்களின்
 இடப்பெயர்ச்சியை விளக்கும் படங்கள் 
இப்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் டேவிட் இவான் ஆய்வுகளை நடத்திப் புதிய சூப்பர் கண்டம் மேலே குறிப்பிட்ட மூன்றாவது வழியில் தான் உருவாகும் என்று கூறியுள்ளார்.

சூப்பர் கண்டம் ஒரு புறம் இருக்க,  கடந்த காலத்தில் மினி சூப்பர் கண்டங்களும் இருந்துள்ளன. சில கண்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மினி சூப்பர் கண்டமாக விளங்குகின்ற அதே நேரத்தில் மீதிக் கண்டங்கள் ஒன்று சேர்ந்து இன்னொரு மினி சூப்பர் கண்டமாக இருந்தன. கோண்டுவானா(Gondwana), லாராசியா(Laurasia) ஆகியவை இவ்விதமான மினி சூப்பர் கண்டங்களாகும். கோண்டுவானாவில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன. லாராசியாவில் மீதிக் கண்டங்கள் அடங்கியிருந்தன.

இந்த இரு மினி சூப்பர் கண்டங்களும் ஒன்று சேர்ந்த போது தான் பாஞ்சியா(Pangea) சூப்பர் கண்டம் தோன்றியது. பின்னர் பாஞ்சியா உடைந்தது. அதைத் தொடர்ந்து மறுபடி கோண்ட்வானா தோன்றியது. கோண்ட்வானா 18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்தது. அப்போது இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டம் ஆசிய கண்டத்தின் தென் பகுதியுடன் வந்து இணைந்து கொண்டது. அந்த சமயத்தில் தான் இமயமலை தோன்றியது.

வடக்கே நகர்ந்த இந்தியா 
கண்டங்கள் இடம் பெயருவதால் அவற்றின் விளிம்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்கின்றன.அல்லது புடைத்துக் கொள்கின்றன. அல்லது ஒன்றின் விளிம்பு மற்றதன் விளிம்புக்கு அடியில் புதைகிறது. இவற்றின் விளைவாகவே பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமியும் தோன்றுகின்றன.

கண்டங்கள் நிச்சயம் கடலில் மிதப்பவை அல்ல. கண்டம் நகரும்போது அதைச் சுற்றியுள்ள கடலும் சேர்ந்து நகருகிறது. கண்டங்கள் எப்படி நகருகின்றன, ஏன் நகருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள மிக நீண்ட காலம் ஆகியது. அது ஒரு நீண்ட கதை.

Feb 12, 2012

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த கல்

Share Subscribe
வானிலிருந்து ஒரு கல் வந்து விழுகிறது. அது செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து விழுந்த கல் தானா என்று கண்டுபிடிக்க வழி இருக்கிறது.

இந்த விண்கல்லுக்குள் மிக நுண்ணிய கண்ணாடி உருண்டை மாதிரியில் துணுக்குகள் இருக்கும். இந்த நுண்ணிய உருண்டைகளுக்குள் நுண்ணிய அளவில் வாயுக்கள் இருக்கும். மேற்கூறிய துணுக்குகளை சூடு படுத்தினால் வாயுக்கள் வெளிப்படும். மிக நுட்பமான கருவிகளை வைத்து ஆராய்ந்தால் அந்த வாயுக்களை வைத்து கல் செவ்வாயிலிருந்து வந்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூமியின் காற்று மண்டலத்தில் அடங்கிய வாயுக்களின் கல்வை ஒரு மாதிரியாக இருக்கும். செவ்வாய் காற்றின் வாயுக்கலவை வேறு மாதிரியாக இருக்கும். வெள்ளி கிரகத்தில் அடங்கிய காற்றின் வாயுக்கலவை இன்னொரு விதமாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள பல ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயின் காற்றை ஆராய்ந்து விரிவான தகவல்களை அனுப்பியுள்ளன. ஆகவே பூமியில் வந்து விழுந்த விண்கல்லில் அடங்கிய காற்று சாம்பிளை ஆராயும் போது அக்கல் செவ்வாயிலிருந்து வந்ததுதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் மொராக்கோவில்
 வந்து விழுந்த செவ்வாய் கல்
கடந்த ஆண்டு ஜூலையில் மொராக்கோ(Morocco) நாட்டில் வந்து விழுந்த விண்கற்கள் செவ்வாயிலிருந்து தான் வந்தவை என்பதை சில வாரங்களுக்கு முன்னர் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விண்வெளியிலிருந்து வந்து விழும் கற்கள் விண்கற்கள் (Meteorites) என்று குறிப்பிடப்படுகின்றன. நம் கண் முன்பாக வானிலிருந்து விண்கல் வந்து விழுவது என்பது மிக அபூர்வம்.  செவ்வாய் கிரகத்திலிருந்து விண்கல் மொராக்கோவில் வந்து விழுந்த இடம் பொதுவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்றாலும் அது விழுந்ததை அந்த வட்டாரத்தில் இருக்க நேர்ந்த நாடோடிகள் நேரில் கண்டனர்.

அது விழுந்த போது இரவு இரண்டு மணி. அதை நேரில் கண்டவர்கள் சொன்னது “வானில் முதலில் மஞ்சள் நிறத்தில் பிரகாசமான ஒளி தெரிந்தது. பிறகு அது பச்சை நிற ஒளியாக மாறியது. அந்த வட்டாரம் முழுவதும் ஒரே வெளிச்சமாகியது. வானிலிருந்து இறங்கிய பொருள் இரண்டாக உடைந்தது. அப்போது பயங்கர இடி முழக்கம் போன்ற சத்தம் ஏற்பட்டது”.

மொராக்கோவில் விழுந்த விண்கல்லின்
ஒரு துண்டு (படம்: Laurence Garvie)
அந்த வட்டாரத்தில் விழுந்த விண்கற்களின் மொத்த எடை ஏழு கிலோ. அவற்றில் பெரியதாக இருந்த கல்லின் எடை ஒரு கிலோ. அவை ஜூலையில் வந்து விழுந்தன என்றாலும் டிசம்பரில் தான் அங்கிருந்து சேகரிக்கப்பட்டன.

விண்கற்களுக்கு விலை உண்டு. உலகில் பல செல்வந்தர்களும் நல்ல விலை கொடுத்து இவற்றை வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றை வாங்கி விற்கின்ற டீலர்களும் பலர் உள்ளனர். சாதாரண விண்கல்லுக்கே நல்ல விலை உண்டு.

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த விண்கல் என்றால் ரேட் அதிகம். தங்கம் போல, இவை ஒரு கிராம் இவ்வளவு டாலர் என்ற விலையில் விற்கப்படுகின்றன. செவ்வாயிலிருந்து மொராக்கோவில் வந்து விழுந்த விண்கல்லுக்கு ஒரு கிராம் 500 டாலர் முதல் 1000 டாலர் வீதம் விலை (ரூ24,500 முதல் 49,000 வரை) கொடுக்கப் பலரும் தயாராக இருந்தனர் (2012 பிப்ரவரி 11 ஆம் தேதியன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 2629 ஆக இருந்தது).

இந்தியாவில் வந்து விழுந்த
ஷெர்கோட்டி விண்கல்
செவ்வாய் கற்களின் விலை மிக அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை பல ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளன என்றாலும் செவ்வாய் கிரகத்திலிருந்து இதுவரை சாம்பிளாக கற்கள் எதுவும் எடுத்து வரப்படவில்லை. செவ்வாய்க்கு இதுவரை மனிதன் சென்றதில்லை. மனிதனை அனுப்பி அங்கிருந்து கற்களை எடுத்து வருவதென்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

சர்வதேச விண்கல் ஆராய்ச்சி மற்றும் கிரக அறிவியல் சொசைடியைச் சேர்ந்த நிபுணர்களும், அமெரிக்க நாஸா விஞ்ஞானிகளும் மொராக்கோவில் விழுந்த விண்கற்களை ஆராய்ந்து அவை செவ்வாயிலிருந்து வந்தவையே என கடந்த மாத மத்தியில் உறுதிப்படுத்தினர். விண்கற்களுக்குப் பெயர் வைப்பது வழக்கம். அதன்படி மொராக்கோவில் விழுந்த கற்களுக்கு Tissint என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட
செவ்வாய் கல் ALH  84001
அமெரிக்காவில் குறைந்தபட்சம் நான்கு பல்கலைக்கழகங்கள் மொராக்கோவில் விழுந்த கற்களின் சாம்பிள்களைப் பெற்றுள்ளன. நிபுணர்கள் இக்கற்களை விரிவாக ஆராய்வர்.

இதற்கு முன்னர் 1962 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. இந்தியாவில் பிகார் மானிலத்தில் உள்ள ஷெர்கோட்டி என்னுமிடத்தில் 1865 ஆம் ஆண்டில் இதே போல செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. அதன் எடை 5 கிலோ. அதற்கு ஷெர்கோட்டி கல் என்று பெயர் வைத்தனர். 1984 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் செவ்வாய் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ALH 84001.

நமக்குத் தெரிந்து செவ்வாயிலிருந்து கல் ஒன்று பூமியில் வந்து விழுவது ஐந்தாவது தடவையாகும்.

செவ்வாயிலிருந்து கற்கள் பூமியில் எவ்விதம் வந்து விழுகின்றன என்று கேட்கலாம். செவ்வாயின் தரையிலிருந்து கற்கள் எதுவும் இறக்கை முளைத்துக் கிளம்பி விடுவதில்லை. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியிலிருந்து பெரிய விண்கல் ஒன்று அல்லது பல கற்கள் செவ்வாயின் தரையில் பயங்கர வேகத்தில் மோதியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்படியான மோதலின் போது செவ்வாயின் தரையில் பாறைகள் தூள் தூளாகி உயரே தூக்கயடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  செவவாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியிலிருந்தே விடுபடக்கூடிய அளவுக்கு இவை அதி வேகத்தில் உயரே தூக்கியடிக்கப்பட்டால் அக்கற்கள் விண்வெளியில் பல கோடி காலம் சஞ்சரித்து உகந்த சூழ்நிலைகளில் பூமியில் வந்து விழுகின்றன. உதாரணமாக ஷெர்கோட்டி செவ்வாய்க் கல் செவவாய் கிரகத்திலிருந்து சுமார் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

மொராக்கோவில் விழுந்த செவ்வாய்க் கல்லின் ஒரு கிலோ சாம்பிள் லண்டன் இயற்கை வரலாற்று மியூசியத்துக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத அன்பர் ஒருவர் அன்பளிப்பாக அண்மையில் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தின் நிபுணர்கள் இக்கல்லை விரிவாக ஆராய உள்ளனர்.

Feb 2, 2012

அண்டார்டிகாவில் 8 மாத ’சிறைவாசம்’

Share Subscribe
அண்டார்டிகாவில் உள்ள அந்த இடத்தின் பெயர் கன்கார்டியா. அது ஓர் ஆராய்ச்சிக்கூடம். அண்டார்டிகாவில் இந்தியா உட்பட பல நாடுகளின் ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலானவை இக்கண்டத்தின் கரை ஓரமாக அமைந்துள்ளன.

பகலாக இருக்கும் காலத்தில் கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடம்
இதற்கு மாறாக பிரான்ஸ்-இத்தாலி ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து அமைத்துள்ள கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடம்(Concordia) உள்ளே தள்ளி அமைந்துள்ளது. பிற ஆராய்ச்சிகூடங்களிலிருந்து இது சுமார் 1000 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி அமைந்துள்ளது. தவிர, இது 3200 மீட்டர் உயரமுள்ள இடத்தில் அமைந்துள்ளது. ஆகவே கோடை என சொல்லப்படும் காலத்தில் இங்கு குளிர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ். குளிர் காலத்தில் மைனஸ் 84 டிகிரி செல்சியஸ்.

இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்பவர் பிப்ரவரி கடைசிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும். ஏனெனில் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை அந்த இடத்துக்கு யாரும் செல்ல முடியாது. அங்கிருந்து வெளியே வரவும் முடியாது. கடும் குளிர் காரணமாகப் பயணம் சாத்தியமில்லை. ஆகவே அந்த எட்டு மாத காலம் ’சிறைவாசம்‘ போன்றதே. தவிர, அந்த எட்டு மாதங்களில் நான்கு மாதம் தொடர்ந்து ஓயாத இரவு.

காரிருளில் கன்கார்டியா
இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 14 நிபுணர்கள் தங்கிப் பணியாற்றுகின்றனர். அடைபட்டுக் கிடக்கின்ற எட்டு மாத காலத்தில் இவர்களின் மனப்போக்கு எப்படி இருக்கும், உடல்நிலை எந்த அளவில் இருக்கும், இவர்களின் தூக்க முறை, செயல்படும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து பதிவு செய்வதற்கென இப்போது பிரிட்டிஷ் டாக்டர் போய்ச் சேர்ந்துள்ளார்.

டாக்டரின் பெயர் அலெக்சாண்டர் குமார். விபரீதமான பருவ நிலைமைகளில் வசிப்பவர்களை ஆராய்வதில் அவர் நல்ல அனுபவம் பெற்றவர். அவரும் கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடத்தை ‘சிறைச்சாலை’ என்றே வருணித்தார். டாக்டர் குமார் இங்கு ஓராண்டுக் காலம் தங்கியிருப்பார்.

இரவாக உள்ள காலத்தில் வெளியே வந்தால் அணியும் உடை
கன்கார்டியா நல்ல உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு காற்று அழுத்தம் மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும். ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியே வந்து பணியாற்றுவதானால் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியாக வேண்டும்.

ஆராய்ச்சிக்கூடத்துடன் தொடர்பு கொள்வதற்கென ரேடியோ கருவி கையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்று பாட்டரியை உடைக்குள் பத்திரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். விசேஷ டார்ச் லைட், மற்றும் மாற்று பாட்டரி இருக்க வேண்டும். விண்வெளி வீரர் அணிவது போன்று சுவாசக் கருவியுடன் கூடிய விசேஷ முகமூடி அணிந்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விசேஷ உடையை அணிந்திருக்க வேண்டும்.

கன்கார்டியாவுக்கு வெளியே ஒரு விஞ்ஞானி
ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானிகள் ஒரே இருளாக இருக்கும் குளிர் காலத்தில் வெளியே வந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வட்டாரத்துக்குள்ளாக சில பணிகளைப் புரிவர். பனிக்கட்டி சாம்பிள்களை சேகரிப்பதும் அதில் அடங்கும். அந்த கும்மிருட்டில் வழிதவறி காணாமல் போனால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆகவே தான் கடும் கட்டுப்பாடுகள்.

இந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சுற்றி உள்ள நிலைமைகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய நிலைமைகளை ஒத்தவை என்று கூறப்படுகிறது. ஆகவே தான் மிகப் பொருத்தமாக கன்கார்டியா குறித்த சில பணிகள் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கீழ் நடைபெறுகின்றன.

கன்கார்டியாவிலிருந்து பார்த்தால்
 வானில் ஆகாய கங்கை (MilkyWay)
கன்கார்டியாவில் குறைந்தது நான்கு மாதம் தொடர்ந்து இரவாக இருப்பதால் இங்கு வான்வியல் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. உலகில் பிற இடங்களில் பகல் வேளை ஆராய்ச்சியில் குறுக்கிடும். இங்கு அந்தப் பிரச்சினை இல்லை. தவிர, இங்கு காற்று மண்டலத்தில் நுண்ணிய தூசு இராது என்பதால் வான் காட்சிகளை நன்கு படமாக்க முடியும். உதாரணமாக ஆகாய கங்கையை (Milky Way) வானில் தெளிவாகக் காண முடியும்.