Mar 26, 2015

விண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை

Share Subscribe
ஒரு விண்கல் மார்ச் 27 ஆம் தேதியன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக வீண் வதந்தி கிளம்பி அது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
அப்படியான ஆபத்து எதுவும் கிடையாது.

உண்மையில் 2014 YB35 என்னும் பெயர் கொண்ட ஒரு விண்கல் 27 ஆம் தேதி  இந்திய நேரப்படி இரவு சுமார் 11 மணி அளவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

அப்போது பூமிக்கும் அந்த விண்கல்லுக்கும் இடையே உள்ள தூரம் 44 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ளதைப் போல 11 மடங்காகும்.  ஆகவே அது பூமியின் மீது மோத சிறிதும் வாய்ப்பில்லை.

பூமியை விண்கற்கள்  கடந்து செல்வது என்பது புதிய விஷயமல்ல. இது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகும். சொல்லப்போனால் மார்ச் 25 ஆம் தேதி  இரண்டு விண்கற்கள் பூமியைக் கடந்து சென்றன. மார்ச் 26 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து சென்றன. 27 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து செல்லும். 28 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் இதே போல கடந்து செல்லும்.
விண்கல் 2014 YB 35 சுற்றுப்பாதையின் உத்தேசப் படம்.
1. சூரியன். 2. பூமி. 3. சந்திரன். 4. விண்கல்
பூமியை எண்ணற்ற விண்கற்கள் கடந்து செல்கின்றன. இவற்றுக்கெல்லாம் தனித்தனி சுற்றுப்பாதை உண்டு. இவற்றில் ஓரளவில் பூமியை " அருகில்" கடந்து செல்கின்ற விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுபிடித்து அவற்றின் பாதையையும் கணக்கிட்டு வைத்துள்ளது.

 இது வரை இவ்விதமான  1563 விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுவைத்துள்ளது. தவிர, அவற்றின் சுற்றுப்பாதைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவற்றில் முப்பது மீட்டர் அல்லது நாற்பது மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கற்கள் உண்டு. சில கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவையும் உண்டு.

ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக  இருந்தால் அதை முன்கூட்டிக் கண்டுபிடித்து விட முடியும்.  அவ்விதமான விண்கல்லின் பாதையை  நாமாக மாற்றவும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியின் சாய்மானம்
பூமியானது தனது அச்சில் சாய்ந்தபடி உள்ளது. அந்த விதமாக இருந்தபடி தான் அது சூரியனைச் சுற்றி வருகிறது. ஆண்டில் எல்லா மாதங்களிலும் சாய்மானம் ஒரே மாதிரியாக இருக்கும். (  பல ஆயிரம் ஆண்டுகளில் சாய்மானம் மாறத்தான் செய்கிறது. அது முற்றிலும் வேறு விஷயம்)
கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும்
 படம் நன்றி: pa.msu.edu




Mar 17, 2015

சூரிய கிரகணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சினை

Share Subscribe
வருகிற மார்ச் 20 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. (இந்தியாவில் இது தெரியாது). ஐரோப்பாவில் நார்வே நாட்டின் வட பகுதியில் இது பூரண கிரகணமாகத் தெரியும். பிரிட்டனிலும்  ஜெர்மனி உட்பட மற்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் சூரியன் முக்கால் வாசி அளவுக்கு மறைக்கப்படும். சூரிய கிரகணம் என்றால் மக்கள் ஆர்வமுடன் காண்பர்.
நார்வேயின் வடக்குப் பகுதியில் பூரண சூரிய கிரகணம் இவ்விதமாகத் தெரியும்.
ஆனால் ஜெர்மனியில் இந்த சூரிய கிரகணமானது மின்சாரத் துறையினருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்குவதாக உள்ளது.

ஜெர்மனியில் சூரிய மின் பலகைகள் (Solar cells)  மூலம் 38 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.

மின் உற்பத்திக்கு சூரியனைப் பயன்படுத்திக் கொள்வதில் இயல்பான பிரச்சினைகள் உண்டு. காலையில் சூரிய ஒளி அவ்வளவாக இராது. நடுப்பகலில் நல்ல வெயில் இருக்கும். அதன் பிறகு சூரிய ஒளி கிடைப்பது படிப்படியாகக் குறையும். சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தியும்  அந்த அளவில் மாறுபடும்.

இதல்லாமல் மேக மூட்டம் இருந்தால் அந்த அளவுக்கு சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். ஜெர்மன் எஞ்சினியர்களுக்கு இதெல்லாம்  வழக்கமான பிரச்சினைகள்.
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும்  சூரிய மின்பலகைகள்
ஆனால் சூரிய கிரகணத்தின் போது சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவு வேகமாக ஒரேயடியாகக் குறையும். பின்னர் கிரகணம் விடும் போது ஒரேயடியாக அதிகரிக்கும். இது கூடப் பிரச்சினையில்லை.

மின்சப்ளையில் உள்ள அடிப்படைப் பிரச்சினை வோல்டேஜ் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே.வோல்டேஜ் சற்றே ஏறி இறங்கினால் பிரச்சினை இல்லை. வோல்டேஜ் ஒரேயடியாக ஏறி இறங்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே சூரிய கிரகணத்தின் போது  பிரச்சினையில்லாமல் சீரான மின்சப்ளை  இருக்கும்படி எப்படிப் பார்த்துக் கொள்வது என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். ஜெர்மனியில் சுமார் காலை எட்டரை மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்கும். சுமார் 11 மணி அளவில் கிரகணம் நீங்கும்.

எனவே சுமார் இரண்டரை மணி நேரம் மின் உற்பத்தியில் இறக்கமும் ஏற்றமும் இருக்கும். இது ஒரே சமயத்தில் 19 மின்சார நிலையங்களை  மின்உற்பத்தியில் ஈடுபடச் செய்து  பின்னர் 12 மின்சார நிலையங்களில் உற்பத்தியை நிறுத்துவதற்கு ஒப்பானது என்று நிபுணர்கள் வருணித்துள்ளனர்.

ஜெர்மனியில் மட்டுமன்றி ஐரோப்பாவில் வேறு சில நாடுகளும் சூரிய மின்சாரத்தை ஓரளவுக்கு நம்பி நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 87 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி சூரியனை நம்பி உள்ளது,

ஐரோப்பாவில் பல்வேறு  நாடுகளின்  மின் வினியோக அமைப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு உள்ளது. சூரிய கிரகணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினையைச் சமாளிக்க பல மாத காலமாக திட்டம் வகுத்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அப்படியும் கூட சில பகுதிகளில் மின் துண்டிப்பு  நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் பூரண சூரிய கிரகணம் அல்லது முக்கால் வாசி சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இப்படியான் பிரச்சினைகள் ஏற்பட்டது கிடையாது. சமீப ஆண்டுகளாக சூரியன் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதால் தான் இப்போது பிரச்சினை.

ஜெர்மனி சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தியை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 66 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அப்போது தினமுமே காலையிலிருந்து மாலைக்குள்ளாக மின் உற்பத்தி அளவு பெரும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும்.   சூரிய கிரகணம் மூலம்  ஜெர்மனி இப்போது பெறும்  அனுபவமானது எதிர்காலப் பிரச்சினையை சமாளிக்க உதவியாக இருக்கும்.

Update:- சூரிய கிரகணத்தின் போது மின் உற்பத்தியில் ஏற்பட்ட இறக்கங்களையும் ஏற்றங்களையும் ஜெர்மனி பிரச்சினை இன்றி சமாளித்ததாகப் பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன.

சூரிய கிரகணம் : பூமியை சந்திரன் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப் பாதையானது சம தளமாக இல்லை. எனினும் அபூர்வமாக சந்திரனின் சுற்றுப்பாதை சம தளத்தில் அமையும் போது அது பூமிக்கும் சூரியனுக்கும் (அமாவாசையன்று) இடையே நேர் குறுக்கே வந்து நிற்கிறது. இதனால்   சூரிய ஒளி வட்டத்தை சந்திரன் மறைக்கிறது. இதன் விளைவாகவே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

Mar 12, 2015

உலகைச் சுற்றி வரும் சூரிய விமானம்

Share Subscribe
சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். அந்த மின்சாரத்தைக் கொண்டு மோட்டார்களை இயக்கலாம். மோட்டார்கள் மூலம் புரோப்பல்லர்களை - விமானத்தின் சுழலிகளை -- இயக்கலாம். சூரிய விமானம் ரெடி.

இப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு விமானம் உலகைச் சுற்றி வருவதற்காகக் கிளம்பியிருக்கிறது. சூரிய ஒளியால் மட்டுமே இயங்குவதால் இந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ்.  அபு தாபியில் திங்களன்று கிளம்பிய அந்த விமானம் ஓமான் வழியாக இந்தியாவில் ஆமதாபாத்தில் வந்து இறங்கியது. அடுத்து வாரணாசி.

அரபுக் கடல் மேலாக சோலார் இம்பல்ஸ் விமானம்
 பின்னர்  இந்தியாவிலிருந்து புறப்பட்டு மியான்மார். அடுத்து சீனா. பிறகு பசிபிக் கடலைக் கடந்து வட அமெரிக்கா. அமெரிக்கக் கண்டம் மீதாகப் பறந்து முடித்த பின் அட்லாண்டிக்கைக் கடந்தாக வேண்டும். பிறகு ஐரோப்பா அல்லது வட ஆப்பிரிக்கா வழியே பழையபடி அபு தாபி வந்து சேர்ந்தாக வேண்டும். மொத்தம் 35 ஆயிரம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும்.

புரொப்பல்லருடன் கூடிய விமானங்கள் விசேஷ பெட்ரோலில் இயங்குகின்றன. பல நூறு பயணிகளுடன் நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்கள் உயர் ரக கெரசினைப் பயன்படுத்துகின்றன. சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இவ்விதமான எரிபொருள் தேவையே இல்லை. அந்த வகையில் இது அபூர்வமான விமானமாகும்.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென விமானத்தின் இரு இறக்கைகளிலும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆகவே இதன் இறக்கைகள் மிகவும் நீளமானவை (72 மீட்டர்). இவ்வளவு சோலார் செல்கள் இருந்தாலும் இந்த விமானத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏறிச் செல்ல முடியாது. அதன் திறன் அவ்வளவு தான்.

சோலார் இம்பல்ஸ் பறந்து  செல்லும் பாதை
சோலார் இம்பல்ஸ் விமானம் பொதுவில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியதாகும். பகலில்   சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் விமானத்தில் உள்ள பாட்டரிகளில் சேமிக்கப்படும் என்பதால் இரவிலும் இந்த விமானத்தை ஓட்டிச் செல்ல முடியும்.

ஆண்ட்ரே போர்ஷ்பெக், பெர்ட்ராண்ட் பிக்கார்ட் ஆகிய இருவரும் தான் மாறி மாறி விமானத்தை ஓட்டிச் செல்வர். வேகம் குறைவு என்பதாலும் வழியில் ஆங்காங்கு தங்கிச் செல்வதாலும் உலகைச் சுற்றி வர அவர்களுக்கு ஐந்து மாதம் ஆகும்.  வானில் பறக்கின்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் 25 நாட்கள் பறக்க வேண்டியிருக்கும்.

 உலக சாதனை படைக்கும் ஆண்ட்ரே போர்ஷ்பெக்,  பெர்ட்ராண்ட் பிக்கார்ட்
பசிபிக் கடலைக் கடப்பது தான் பெரிய சவாலாகும். வழியில் எங்கும் இறங்க இயலாது என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் பறந்தாக வேண்டும். பின்னர் அட்லாண்டிக் கடலைக் கடப்பது  இன்னொரு சவாலாகும்.

கடலைக் கடக்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்படுமானால் கடலில் குதித்து உயிர் தப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

போர்ஷ்பெக்கும் பிக்கார்டும் சேர்ந்து தான் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் பிக்கார்டின் தந்தை ஜாக்கஸ் பிக்கார்ட் 1960 ஆம் ஆண்டில் வால்ஷ் என்பவருடன் சேர்ந்து நீர்மூழ்கு கலம் மூலம் உலகின் கடல்களில் மிக ஆழமான இடத்துக்குச் சென்று சாதனை படைத்தவர்.

பிக்கார்டின் பாட்டனார் ஆகஸ்டே பிக்கார்ட் 1931  வானில் மிக உயரத்துக்குச் சென்று சாதனை படைத்தவர். பேரன் பிக்கார்ட் புதிய வகையில் சாதனை நிகழ்த்த முற்பட்டுள்ளதில் வியப்பில்லை.

சூரிய ஒளியால் விமானத்தை ஓட்ட முடியும் என்றால் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல பயணிகள் இத்தகைய விமானத்தில் செல்ல வழி பிறக்குமா என்ற கேள்வி எழும். இக்கட்டத்தில் இது பற்றி எதுவும் சொல்ல இயலாது.

 சொல்லப் போனால் அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விமானத்தை உருவாக்கியதற்குப் பல ஆண்டுகள் கழித்துத் தான் முதலாவது பயணி விமானத்தில் ஏறிச் சென்றார்.

சோலார் இம்பல்ஸ் விமானத்தின் முயற்சியானது ஒரு துணிகர பரிசோதனை. இப்போதைக்கு அது அவ்வளவு தான்.

ஆள் யாரும் இல்லாமல் சூரிய ஒளி மூலம் வானில் தொடர்ந்து ஆறு மாத காலம் பறந்து கொண்டிருக்கக்கூடிய விமானத்தை உருவாக்குவது தங்களது எதிர்காலத் திட்டம்  என்று போர்ஷ்பேக்கும் பிக்கார்டும் கூறியுள்ளனர்.

அவ்வித விமானம் தகவல் போக்குவரத்து, வானிலை, தேடுதல் பணி போன்று பல பணிகளுக்கு உதவியாக இருக்கலாம்.