Aug 29, 2015

வெற்றிப் பாதையில் இந்திய கிரையோஜெனிக் எஞ்சின்

Share Subscribe
கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டதாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி
விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல். வி ராக்கெட் மார்க் 2
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட  ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ராக்கெட் வெற்றிகரமாகச் செயல்பட்டு ஜிசாட்-6  என்னும் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியுள்ளது. இது, குறிப்பாக இந்தியா சொந்தமாகத் தயாரித்துள்ள கிரையோஜெனிக் எஞ்சினுக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.

இந்த ராக்கெட்டில் மூன்றாவதான முகப்புப் பகுதி இந்த எஞ்சினைக் கொண்டதாக செயல்பட்டது. கிரையோஜெனிக் எஞ்சின்கள் அதிகத் திறன் கொண்டவை. அதிக ஆற்றலை அளிப்பவை. எனவே கிரையோஜெனிக் எஞ்சினைக் கொண்ட ராக்கெட்டினால் அதிக எடையை சுமந்தபடி அதிக உயரத்துக்குச் செல்ல முடியும்.
சோதிக்கப்படும் நிலையில் கிரையோஜெனிக் எஞ்சினின் அடிப்புறப் பகுதி
ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல  ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டுமே வாயுவாகி விடும். எனவே கடும் குளிர்விப்பு தேவை. எனவே இந்த இரண்டையும் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் எஞ்சின் என்று பெயர். கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர்விப்பு என்று பொருள். ஏன் குளிர்விக்க வேண்டும்?

ஹைட்ரஜன் வாயு எரியக்கூடியது. அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. இரண்டையும் ராக்கெட்டில் தனித் தனி தொட்டிகளில் வாயு வடிவில் வைத்து  எரியச் செய்வதானால் பிரும்மாண்டமான தொட்டிகள் தேவை. ராக்கெட்டில் அவ்விதம் பிரும்மாண்டமான தொட்டிகளை இணைத்தால் ராக்கெட் கிளம்பாது. எனவே இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி வெவ்வேறு தொட்டிகளில் வைத்து ,தக்க சமயத்தில் ஒன்று சேர்ந்து எரியச் செய்யும் ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. கடுமையான அளவுக்குக் குளிர்வித்தால் தான் இந்த வாயுக்கள் திரவமாக மாறும்.


ஆனால் இந்த இரண்டு வாயுக்களையும் பயன்படுத்தும் எஞ்சினை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உண்டு. எஞ்சினில் இந்த இரண்டு திரவங்களும் விசேஷத் தொட்டிகளில் அடங்கியிருக்கும். ராக்கெட்டின் அடிப்புறத்தில் உள்ள எஞ்சின் அறைக்கு வரும் போது இவை வாயுவாக மாறி ஒன்று கலந்து எரியும்.
கிரையோஜெனிக் எஞ்சின் தரையில் வைத்து சோதிப்பு
கடும் குளிர்விப்பு  நிலையானது உலோகங்களை  சிதைத்து விடும். எனவே இந்த திரவ நிலையிலான இரு வாயுக்களையும் வைத்திருப்பதற்கான தொட்டிகள், அவை செல்லும் குழாய்கள், பம்புகள் முதலியவற்றை விசேஷ கலப்பு உலோகங்களால் தயாரித்தாக வேண்டும்.  இவை இரண்டும் ராக்கெட்டின்  அடிப்புறம் வழியே பீச்சிடும் போது பயங்கர வெப்பம் தோன்றும். அந்த வெப்பம் எந்த உலோகத்தையும் உருக்கி விடக்கூடியது.

 எனவே ராக்கெட்டில் நெருப்பு  பீச்சுப் பகுதியின் வெளிப்புறத்தில் குளிர்விப்பு செய்தால் உருகாது. அதற்கு அதே அந்த திரவங்களைப் பயன்படுத்த வேண்டும். இப்படியாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
கிரையோஜெனிக் எஞ்சின்
கிரையோஜெனிக் ராக்கெட் தொழில் நுட்பம் வெளிநாடுகளிடமிருந்து நமக்கு கிடைக்காதபடி 1990 களில் அமெரிக்கா பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. அதை உருவாக்குவதற்கு உதவக்கூடிய ”திருகாணி ” கூட நமக்குக் கிடைக்காதபடி வல்லரசுகள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தடுத்தன. அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்து ரஷியாவும் அத்தொழில் நுட்பத்தை அளிக்க முன் வரவில்லை.

கிரையோஜெனிக் எஞ்சின் சோதிப்பு இன்னொரு படம்
ஏதோ ஓட்டையைக் கண்டுபிடித்து ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் ரஷியா அளித்தது.முதலில் ரஷிய எஞ்சின்களை நமது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் பயன்படுத்திப் பார்த்தோம். பல காரணங்களால் அது சரிப்பட்டு வரவில்லை.  எனவே நாமாக விடாப்பிடியாக  முனைந்து இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிக் கொண்டோம்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் நமது சொந்தத் தயாரிப்பான கிரையோஜெனிக் ராக்கெட்டைப் பயன்படுத்திய போது அந்த எஞ்சின் செயல்படவில்லை. எனினும் 2014 ஆம் ஆண்டில் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட்டு ஜிசாட் 14 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த செயற்கைக்கோளின் எடை (1980 கிலோ) குறைவு என்பதால் ஒருவேளை வெற்றி கிட்டியதோ என்றும் நினைக்கத் தோன்றியது.

அந்த சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் கூடுதல் எடை கொண்ட              ( எடை 2117 கிலோ) ஜிசாட் 6 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. எனவே நமது கிரையோஜெனிக் எஞ்சின் நம்பகமான வகையில் செயல்படக்கூடியது  என்று தோன்றுகிறது.

ஆனால் இது போதாது  என்று கருதி இந்த எஞ்சினை விட அதிகத் திறன் கொண்ட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிற புதிய மாதிரி  கிரையோஜெனிக் எஞ்சினை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இப்புதிய எஞ்சின் இன்னும் ராக்கெட்டில் வைத்து சோதிக்கப்படவில்லை. ஆனாலும் தரையில் நிலையாக வைத்து சோதித்ததில் அது நன்கு செயல்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 2  ராக்கெட்டின் முகப்புப் பகுதி
 புதிய கிரையோஜெனிக் எஞ்சின் அடுத்த ஆண்டு கடைசி வாக்கில் செலுத்தப்பட உள்ள ஜி..எஸ்.எல்.வி மார்க் 3 என்னும் ராட்சத ராக்கெட்டில் வைத்து சோதிக்கப்படும் என்று தெரிகிறது. இப்புதிய வகை ராக்கெட்டினால் சுமார் 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த இயலும்.

மார்க் 3 ராக்கெட் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து தடவை வெற்றி கண்டால் நாம் ராக்கெட் துறையில் நல்ல  முன்னேற்றதை அடைந்தவர்கள் ஆவோம்.

1994 ஆம் ஆண்டிலிருந்து நமது பி.எஸ்.எல்.வி ராக்கெட் 30 தடவைகள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது என்பது வாஸ்தவமே.  அதன் திறன் குறைவு. ஆனாலும் அதை வைத்துக் கொண்டே நாம் பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்றாலும் ராக்கெட் துறையில்  கடந்த 20 ஆண்டுளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

ஆகவே தான் 1988 ஆம் ஆண்டிலிருந்து நமது எடை மிக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட் தளத்திலிருந்து அவர்களது ஏரியான் மூலம் செலுத்தச் செய்து வருகிறோம்.

கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் 18 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஏரியான் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால் அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நமது சொந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினின்  இப்போதைய வெற்றி அதற்கான பாதையைத் திறந்து விட்டுள்ளது.

.

Aug 11, 2015

தாங்கள் பயிரிட்ட கீரையை ருசித்த விண்வெளி வீரர்கள்

Share Subscribe
பூமிக்கு மேலே 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) வசித்து வரும் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தாங்கள் வளர்த்த கீரையை திங்களன்று புசித்தனர்.

விண்வெளி நிலையத்தில் தானியங்கள், கீரை வகைகள் முதலியன தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இது நீண்டகாலமாக நடந்து வருவதாகும். ஆனால் விண்வெளி வீரர்கள் தாங்கள் பயிரிட்ட கீரையை அவர்களே சாப்பிடுவது என்பது இதுவே முதல் தடவை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரையை பச்சையாக
சுவைக்கும் விண்வெளி வீரர்கள்
.விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்டது red romaine lettuce  வகைக் கீரையாகும்

லெட்டூஸ் கீரையை வெறுமனே கூட சாப்பிடலாம். விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் வெறுமனே அப்படியே சாப்பிட்டனர். தவிர,கீரையுடன் ஆலிவ் எண்ணெய்,  இனிப்பும் புளிப்பும் கலந்த basalmic vinegar  ஆகியவற்றைச் சேர்த்தும் சாப்பிட்டனர்.

"சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும் "அவர்கள் சியர்ஸ் என்று சொல்லி விட்டுத் தான் லெட்டூஸ் கீரையை ருசி பார்த்தனர். " நல்லாத் தான் இருக்கு" என்று 51 வயதான அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி கூறினார்."பிரமாதம்” என்றார் மற்றொரு அமெரிக்கரான லிண்ட்கிரென். “பிடிச்சிருக்கு” என்றார் ஜப்பானிய விண்வெளி வீரர்.
விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட லெட்டூஸ் கீரை
மூன்று ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பங்காக ஒரு பகுதி கீரை தனியே வைக்கப்பட்டது.

லெட்டூஸ் கீரை எனப்படும் வகைக் கீரை தான் அவர்கள் வளர்த்த கீரையாகும். சூரிய வெளிச்சத்துக்குப் பதில் கூண்டுக்குள் இது சிவப்பு, நீல, பச்சை நிற LED பல்புகளின் வெளிச்சத்தில் வளர்க்கப்பட்டது.  நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட குஷன்கள் மீது தான் விதைப்பு செய்யப்பட்டது.

பூமியில் செய்வது போன்று தண்ணீர் ஊற்ற முடியாது. கிட்டத்தட்ட ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதால் தண்ணீரை ஊற்றினால் அது கீழே விழுவதற்குப் பதில் விண்வெளி நிலையத்துக்குள்  உருண்டைகளாக நாலாபுறமும் மிதக்கும். எனவே விசேஷ முறையில் குஷன்களுக்குள் செலுத்தப்பட்டது.


பூமியில் வளர்க்கப்பட்ட அதே வகைக் கீரை
கடந்த மாதம் 8 ஆம் தேதி விசேஷ கண்ணாடிக் கூண்டுக்குள்  விதைப்பு நடந்தது. 33 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்கள் அறுவடை செய்த கீரையில் பாதி தனியாக பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பப்படும். அங்கு அது பல வகைகளிலும் சோதிக்கப்படும்.

கடந்த ஆண்டில் அவர்கள் இதேபோல கீரை வளர்த்தனர். ஆனால் அந்த கீரை முழுவதும் கீழே விண்வெளி க்ட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் அதிகபட்சம் ஆறு விண்வெளி வீரர்கள் இருக்க முடியும்..இவர்களுக்குத் தேவையான உணவு கீழே இருந்து அவ்வப்போது மேலே அனுப்பப்படுகின்றன.  அந்த உணவைத் தான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். சில சமயங்களில் அமெரிக்க ரஷிய விண்வெளி வீரர்கள் அல்லாமல் ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓரிருவரும் இருப்பது உண்டு.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்
தாம் வளர்த்த செடியை ஆராய்கிறார் ரஷிய விண்வெளி வீரர்
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரவர் விருப்பத்துக்கும் ருசிக்கும் ஏற்ற்வாறு உணவுகள் உயரே அனுப்பப்படுகின்றன.

விண்வெளி நிலையங்களில் விதைப்பு செய்து பயிர்களை வளர்த்து சோதிக்கும் பரிசோதனைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவு. தவிர பூமியில் தரையில் பயிரிடப்படும் பயிர்கள் மேல் நோக்கி -- சூரியனை நோக்கி - வளருகின்றன. ஆனால் விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவு என்பதுடன் மேல் கீழ் என்பது கிடையாது. விண்வெளியில் இருந்தபடி பூமியை சுற்றுகின்ற விண்வெளி நிலையம் ஒரு நாளில் 16 தடவை பூமியை சுற்றுகிறது. இதனால் முளைத்து வெளியே வரும் செடிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு சமயம்  விண்கலம் ஒன்றில்  நெல் விதைகளும் விதைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
எதிர்காலத்தில் செவ்வாயில் செடி கொடிகளை  இவ்விதமாக
வளர்க்க வேண்டியிருக்கலாம்
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டால் போய்ச் சேர எட்டு மாத காலம் ஆகும். உணவுத் தேவையை ஓரளவில்  பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் விண்கலத்துக்குள்ளாக கீரை, முள்ளங்கி, தக்காளி போன்றவற்றை விளைவித்துக் கொண்டாக வேண்டும்.

இவை தேவையான சத்துக்களை அளிக்கும் என்பதுடன், பயிர்களைப் பார்க்கும் போது விண்வெளி வீரர்களுக்கு மனதுக்கு தெம்பை அளிப்பதாகவும் விளங்கும்

செவ்வாயில் போய் இறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பூமியிலிருந்து அவ்வப்போது உணவு அனுப்பப்படும் என்றாலும் அங்கு அவர்கள் காய்கறி பழங்களை விளைவித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இதற்கான வகையில் செடி வளர்ப்புக் கூண்டுகள் தயாரிக்கப்படும்.


Aug 6, 2015

மலேசிய விமானப் பகுதி ரியூனியன் தீவில் ஒதுங்கியது எப்படி?

Share Subscribe
கடந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஒரு விமானம் நடுவானில் மர்மமான முறையில் மறைந்து போயிற்று.  இந்த நிலையில் இப்போது இந்துமாக் கடலில் உள்ள ரியூனியன்(Reunion) தீவில் கரை ஒதுங்கிய விமானப் பகுதியானது காணாமல் போன அந்த விமானத்தின் ஒரு பகுதியே என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடுவானில் காணாமல் போன  MH 370 என்னும் அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 239 பேர் பயணித்தனர். அவர்களில் 152 பேர் சீனப் பயணிகள். ஐந்து பேர் இந்தியப் பயணிகள்.
ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமான இறக்கைப் பகுதி
அந்த விமானம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் விழுந்ததாகக் கருதப்பட்ட கடல் பகுதியில் கடந்த பல மாதங்களாகத் தீவிரமாகத் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

பொதுவில் ஒரு விமானம் கடலில் விழுந்தால் ஏதாவது சிறு பகுதிகளாவது கடலில் மிதக்கும். ஆனால் மலேசிய விமான விஷயத்தில் அப்படியான எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இப்படியான நிலையில் தான் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே ரியூனியன் தீவில் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி கரை ஒதுங்கியது.
விமான இறக்கைப் பகுதி இன்னொரு காட்சி
இப்படி ஒதுங்கிய பகுதியின் நீளம் சுமார் இரண்டு மீட்டர். முதலில் அந்த இறக்கைப் பகுதி போயிங் நிறுவனம் தயாரித்த 777 விமானத்தின் பகுதியே என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் அந்த விமான  இறக்கைப் பகுதியை விசேஷ முறைகளில் ஆராய்ந்த போது அது MH 370  விமானத்தின் பகுதியே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதி எப்படி ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியது என்பது புதிய புதிரைக் கிளப்பியுள்ள்து. ஆனால் இதில் பெரிய மர்மம் எதுவுமில்லை.
காணாமல் போன மலேசிய  MH 370 விமானம்
கடலில் விழுகின்ற பொருள் எதுவும் ஏதாவது ஒரு க்ட்டத்தில் கரை ஒதுங்கும். ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடலில் விழுந்ததாகக் கருதப்படும் அந்த விமானத்தின் பகுதி ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியதிலும் பெரிய மர்மம் கிடையாது.

இந்துமாக் கடலில் உள்ளபடி இயற்கையாக கடல் நீரோட்டங்கள் உள்ளன. இவற்றில் இந்துமாக் கடல் சுழல் ( Indian Ocean Gyre) தான் பிரதானமானது. இதன் அங்கமாகக் கடல் நீரோட்டங்கள் உள்ளன. பூமி நடுக்கோட்டு தென்  நீரோட்டம் (South Equitorial Current) போன்ற நீரோட்டங்கள் இதில் அடங்கும்.

மலேசிய விமானம் விழுந்ததாகக் கருதப்படும் இடத்துக்கு அருகில் உள்ளது ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையாகும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மலேசிய விமானப் பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்காமல் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியதற்கு கடல் நீரோட்டமே காரணம்.
இந்து மாக்கடலில் உள்ள நீரோட்டத்தைக்காட்டும் படம்
மலேசிய விமானத்தின் இடிபாடுகளை கடலில் தேட முற்பட்ட நிபுணர்களுக்கு கடல் நீரோட்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இந்த விமானத்தின் இடிபாடுகள் தென்படுகின்றனவா என்று முதலில் தென் சீனக் கடலில் தேடினர். பின்னர் அந்தமான் கடல் பகுதியில் தேடினர். பின்னர் தான் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தேட முற்பட்டனர்.

விமானம் ஒன்று கடலில் விழுந்தால் மிதக்கக்கூடிய இடிபாடுகள் சில நாட்களுக்குத் தான் கடலில் மிதக்கும். பின்னர் அவையும் மூழ்க முற்படும். ஒரு விமானம் கடலில் நிச்சயமாக இந்த இடத்தில் தான் விழுந்தது என்று உடனேயே தெரிய வந்தால் மிதக்கும் இடிபாடுகளைஅவை மூழ்கு முன்னர் கண்டுபிடித்து விட முடியும்.
ரியூனியன் தீவு உள்ள இடத்தைக் காட்டும் படம்
ஆனால் மலேசிய விமானம் கடலில் விழுந்ததா என்பதே ஆரம்பத்தில் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. சொல்லப் போனால் அந்த விமானம் எங்கோ கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமோ  என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தின் பேரில் பல புரளிகளும் கிளம்பின. இதனால் தேடுதல் பணியில் பிரச்சினைகள் ஏற்பட்டன.தவிர்க்க முடியாதபடி தாமதங்களும் ஏற்பட்டன.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு அமைப்பானது (Australian Transport Safety Bureau)  ஒரு  கட்டத்தில் கடல் நீரோட்டங்களைக் கவனத்தில் கொண்டு கூறுகையில் மிதக்கக்கூடிய  இடிபாடுகளில் சில முதலில் வடக்கு நோக்கிச் சென்று பின்னர் மேற்கு நோக்கி ரியூனியன் தீவு வரையில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டது. அந்த அமைப்பு கருதியபடியே விமான இறக்கைப் பகுதி அந்தத் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

உலகின் கடல்களில் பல நீரோட்டங்கள் உள்ளன. வெதுவெதுப்பான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்கள் உள்ளன. குளிர்ச்சியான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்களும் உள்ளன.


Aug 1, 2015

அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்

Share Subscribe
டாக்டர் அப்துல் கலாம் (1931-2015)
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா. இந்தியாவை மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கி தனது போர்க்கப்பல்களை அனுப்பியது.

ஆனால் அவை வந்து சேருவதற்குள்ளாக இந்தியப் படைகள் பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்தன. போரே முடிந்து விட்டது. மூக்கறுபட்டது போல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.

அக்கால கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.

அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளை சுமந்தபடி 8000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளை  தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன

எதிரிப் படைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க  செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களை துல்லியமாகப் படம் பிடிக்கின்ற செயற்கைக்கோள்களும் உள்ளன.

இன்று நம்மை எதிரி மிரட்டினால் பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும் பங்குண்டு 

 அப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துக் கொண்டு சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் 1963 ஆம் ஆண்டில் ராக்கெட் எஞ்சினியராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போது தான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி ராக்கெட் கேந்திரத்தில் சேர்ந்தார்.

தும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம் கூட இல்லாதவை. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு . நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது
தும்பாவில் செயல்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் நிலையம்
அமெரிக்காவிலிருந்தும் பிரான்சிலிருந்தும் ராக்கெட் செலுத்து சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு காமிராக்கள், ரஷிய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டு வந்த சிறிய ராக்கெட்டுகள் தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன..

 பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் இங்கிருந்து செலுத்தப்பட்டன. இது அப்துல் கலாமுக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. அவர் இங்கு பணியாற்றிய போது புதிய தொழில் நுட்பங்களையும் உருவாக்கினார்.

  பூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால் இங்கு இவ்வித  ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம் கூட வேலை செய்ததுண்டு. குறிப்பாக அப்துல் கலாமின் பணி அப்போதைய விண்வெளித் துறையின் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாயை மிகவும் கவர்ந்தது.

இதற்கிடையே 1969 ஆம் ஆண்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971 ஆம் ஆண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர் எஸ்.எல்.வி  எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட டைரக்டர் என்ற முறையில் ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி என்பது செயற்கைக்கோள் செலுத்து சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடரின் சுருக்கமாகும்.

முதல் முயற்சியாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டில் எஸ்.எல்.வி ராக்கெட்டானது  ரோகிணி என்னும் சிறிய செயற்கைகோளை சுமந்தபடி வானில் பாய்ந்த சில வினாடிகளில் தோல்வியில் முடிந்தது. எதிர்பாராத பிரச்சினைகளால் இத்தோல்வி ஏற்பட்ட போதிலும் தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். அவர் மனம் துவண்டு விடவில்லை

1980 ஆம் ஆண்டு ஜூலையில் எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம்  ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.

இதற்குள்ளாக அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் நிபுணர் என்று பெயர் பெற்றவரானார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது..ஏவுகணைகள் திட எரிபொருளைப் பயன்படுத்துபவை.

இங்கு செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை

ஆனால் நாம் பொதுவில் ராக்கெட் என்று வருணிக்கும் செயற்கைக்கோள் செலுத்து சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்து விட்டால் அதன் பணி அத்துடன் முடிந்து விடுகிறது

செயற்கைக்கோளை செலுத்தும் ராக்கெட்டில் வெவ்வேறு அடுக்குகளில் திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.
ஏவுகணையும் சரி, வானை நோக்கிப் பாய்வது தான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும்.

ஏவுகணையானது மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும் போது  அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும்

அந்த வெப்பமானது முகப்பில் உள்ள அணுக்குண்டைப் பாதித்து விடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும்.  

இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதே போல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.

சீனா 1964 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளைப் பெற்று விட்ட நிலையில் இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில் 1974 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்து சோதனை நடத்தியது

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொகாரன் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டில் இந்தியா நிலத்துக்கடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொகாரனில் அப்துல் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.

இந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்திய போது ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா அணுகுண்டு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறின. 

இந்தியாவுக்கு எதிராக அவை பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தி துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.
 .
பொகாரனில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போது தான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்ப்டைக்கப்பட்ட்து. அந்த சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
பிருத்வி ஏவுகணை
சில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.

இந்தியா ஏவுகணைகளைத் தயாரித்து விடாமல் தடுக்க அப்போது அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் பல வழிகளில் முயன்றன. ஏவுகணை தயாரிப்புக்கு உதவக்கூடிய எந்தப் பொருளும் இந்தியாவுக்குக் கிடைக்காதபடி அவை தடை விதித்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த அத்தனை தடைகளையும் மீறித்தான் இந்தியா ஏவுகணைத் தயாரிப்பில் முன்னேற்றம் கண்டது. ஏவுகணைக்கான குறிப்பிட்ட வகை விசேஷ உருக்கை நாமே சொந்தமாகத் தயாரிப்பதில் வெற்றி கண்டோம் இப்படியாக பல தடைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் அப்துல் கலாமின் தலைமையிலான குழுவினர் பெரும் பங்களித்தனர்.

ஆரம்ப கட்ட பிரச்சினைகளுக்குப் பின்னர் அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டன. இரண்டுமே அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியவை

அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5000 முதல் 8000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. இந்த ஏவுகணை சீனாவின் வட எல்லை வரை செல்லக்கூடியது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது
அக்னி-5 ஏவுகணை
இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே அவரை ஏவுகணை மனிதர் என்று வருணிப்பது உண்டு.

செயற்கைக்கோள்களை செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்ட்து. அப்துல் கலாம் ஏவுகணை பக்கம் திரும்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இந்த ராக்கெட் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

இப்போது மேலும் அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை

இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, மேப் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.

 ஏவுகணைகளை உருவாக்க முக்கிய பங்களித்ததன் மூலம் அப்துல் கலாம் இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது  என்ற நிலையை உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம்

ஆனாலும் அவர் நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதியவர். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்த போதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.

குறிப்பு: நான் எழுதிய இக்கட்டுரை ஜூலை 31 ஆம் தேதியிட்ட தமிழ் ஹிந்து இதழில் வெளியானதாகும். சில வாக்கியங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் கூடுதல் அம்சம்.