Dec 30, 2011

வால் நட்சத்திரத்துக்கு ஆறு வால்கள்

Share Subscribe
ஐரோப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வால் நட்சத்திரங்களை ‘பிசாசுகள்’ என்று கருதினர். நவீன காலத்தில் சர் பிரெட் ஹாயிலும் (Sir Fred Hoyle) சந்திரா விக்ரமசிங்கேயும்(Wickramasinghe) வால் நட்சத்திரங்களை கிருமிகளைக் கொண்டு வரும் ‘வில்லன்கள்’ என வர்ணித்தனர். எனினும் வால் நட்சத்திரங்களை சூரிய மண்டலத்தின் கோமாளிகள் என்றும் சொல்லலாம்.

சர்க்கஸ் கோமாளி அவ்வப்போது வெவ்வேறு வேஷத்தில் வருவது போல வால் நட்சத்திரங்கள் விதவிதமான வடிவில் வருகின்றன. அட்டகாசமான வாலுடன் காணப்படும் வால் நட்சத்திரங்கள் உண்டு. சில வால் நட்சத்திரங்கள் பெரிய தலையுடன் காணப்படுகின்றன. பொதுவில் வால் நட்சத்திரத்துக்கு ஒரு வால் தான் உண்டு. ஆனால் மூன்று வால்கள் அல்லது ஆறு வால்களுடன் மிரட்டிய வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் தெனபட்டுள்ளன.

1744 ஆம் ஆண்டில் தோன்றிய வால் நட்சத்திரம் இவ்விதம் ஆறு வால்களைக் கொண்டதாக இருந்தது. அக்காலத்தில் கேமிரா கிடையாது. பிரெஞ்சு ஓவியர் வரைந்த படத்தைக் கீழே காணலாம்.

ஆறு வால்களுடன் கூடிய வால் நட்சத்திரம்.
தலை அடிவானத்துக்கு கீழே உள்ளது.
1957 ஆம் ஆண்டில் தோன்றிய ஒரு வால் நட்சத்திரத்துக்கு கூரிய மூக்கு இருந்தது. படம் கீழே.

கூர் மூக்கு வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரங்கள் அனைத்துமே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை மறந்து விடக்கூடாது. ஆகையால் தான் அவை சூரியனைச் சுற்றுகின்றன.

ஒரு கால கட்டத்தில் பூமி தான் மையத்தில் இருப்பதாகவும் சூரியன், சந்திரன், கிரகங்கள் என அனைத்தும் பூமியைச் சுற்றுவதாகவும் தவறான கருத்து நிலவியது. போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ்(Copernicus) சூரியன் தான் நடுவில் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். ஆனால் அதை வெளியே பகிரங்கமாகச் சொல்லப் பயந்தார். பின்னர் அவரது கொள்கை நிலைநாட்டப்பட்டது.  ஆனாலும் வால் நட்சத்திரங்களைப் பற்றி கோப்பர்னிகஸுக்குப் பிறகு வந்த கெப்ளர் (Kepler)அல்லது வேறு விஞ்ஞானிகளால் சரியான விளக்கத்தை அளிக்க இயலவில்லை.

எட்மண்ட் ஹாலி
கடைசியில் சர் ஐசக் நியூட்டன்(Sir Isaac Newton) தான் சரியான விளக்கத்தை அளித்தார். நியூட்டனின் சம காலத்தவரான எட்மண்ட் ஹாலி(Edmond Halley) தனது நண்பர் நியூட்டன் உருவாக்கிய இயக்க விதிகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில் வானில் தென்பட்ட வால் நட்சத்திரம் ‘பழைய சுப்பன் தான்’ என்று அவர் கண்டுபிடித்துக் கூறினார். அதாவது கி.மு 240 ஆம் ஆண்டிலிருந்து அது திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறது. அதே வால் நட்சத்திரம் தான் இப்படி வருகிறது என்று அதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பழைய குறிப்புகளையும் தாம் போட்ட கணக்குகளையும் வைத்துத் தான் எட்மண்ட் ஹாலி 1705 ஆம் ஆண்டில் அக்கண்டுபிடிப்பைச் செய்தார். அந்த வால் நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலை காட்டும் என்று கூறிய ஹாலி அது மீண்டும் 1758 ஆம் ஆண்டில் வரும் என்று சொன்னார்.

ஹாலி வால் நட்சத்திரத்தின்
சுற்றுப்பாதை 
அதன்படியே அந்த வால் நட்சத்திரம் அந்த ஆண்டில் மீண்டும் வந்தது. ஆனால் அப்போது ஹாலி உயிருடன் இருக்கவில்லை. அந்த வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டு அது ஹாலி வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது (Halley's Comet). ஹாலி தமது ஆயுட்காலத்தில் 24 வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுக் கூறினார். ஹாலி வால் நட்சத்திரம் மாதிரியே பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன.

திரும்பத் திரும்ப வருகிற வால் நட்சத்திரங்களை அதுவரை யாராலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்? முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எட்மண்ட ஹாலி சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுத் தான் ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் வரும் என்று கூறினார். அடையாளத்தை வைத்து அல்ல.

தவிர, ஒவ்வொரு வால் நட்சத்திரமும் சூரியனை நெருங்கும் போது நிறைய பொருளை இழக்கிறது. ஆகவே அடுத்த தடவை வரும் போது அது இளைத்துக் காணப்படுகிறது. சொல்லப் போனால் ஹாலி வால் நட்சத்திரம் 1986 ல் மறுபடி தலை காட்டிய போது அது சோபை இழந்து காணப்பட்டது. அடுத்து 2061 ஆம் ஆண்டில் அது மறுபடி தலை காட்டும் போது மேலும் இளைத்துக் காணப்படலாம்.

ஹாலி வால் நட்சத்திரம் இப்போது
நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் உள்ளது.
ஒவ்வொரு தடவையும் சூரியன் காரணமாக ஏராளமான பொருளை இழக்கும் வால் நட்சத்திரங்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற கட்டத்தை எட்டும் போது என்ன ஆகும்? பனிக்கட்டி, தூசு, உறைந்த வாயுக்கள் என அனைத்தையும் இழந்த பின் வால் நட்சத்திரம் வெறும் பாறையாக அதாவது அஸ்டிராய்ட் (Asteroid) ஆக மாறி விடும். அப்போது அது பறக்கும் பாறை அல்லது பறக்கும் குட்டி மலை என்று சொல்லத்தக்க அளவில் இருக்கும்.

உதாரணமாக 1949 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்ப்ட்டது. அதற்கு 107 P/Wilson-Harrington வால் நட்சத்திரம் என்று பெயரிட்டார்கள். பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஒரு அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு 1979 A என்று பெயரிட்டனர். பிறகு உன்னிப்பாக ஆராய்ந்ததில் அது 1949 ல் கண்டுபிடிக்க்ப்பட்ட அதே வால் நட்சத்திரம் என்று தெரிய வந்தது. அதாவது வால் நட்சத்திரமாக இருந்து அது பின்னர் அனைத்தையும் இழந்து பாறையாகி விட்டது.

 இதற்கு நேர் மாறாக ஒன்று நடந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்டிராய்ட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கு 596 ஷெல்லா (596 Schella) என்று பெயரிட்டார்கள். எனினும் அமெரிக்க அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் லாசன் 2010 ஆம் ஆண்டு வானை ஆராய்ந்த போது மேற்படி அஸ்டிராய்டு வால் நட்சத்திரம் போலத் தென்படுவதைக் கவனித்தார். பின்னர் மற்ற்வர்களும் ஆராய்ந்த போது உண்மையில் அது வால் நட்சத்திரமே என்பது தெரிய வந்தது. இப்படியாக ஆரம்பத்தில் அஸ்டிராய்டுகள் எனக் கருதப்பட்டவை பின்னர் வால் நட்சத்திரங்கள் என்று தெரிய வந்துள்ளது.



இது புதிய நிலைமையை உண்டாக்கியது. சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே கோடானு கோடி அஸ்டிராய்டுகள் கிரிவலம் செய்யும் பக்தகோடிகளைப் போல ஓர் ஒழுங்குடன் தனிப்பாதை அமைத்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இக்கூட்டத்தில் உள்ளவை அனைத்தும் சிறியதும் பெரியதுமான பாறைகளே.

இப்போது இந்த அஸ்டிராய்ட் கும்பலின் நடுவே வால் நட்சத்திரங்களும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. வானவியல் விஞ்ஞானிகள் இவற்றுக்கு Main Belt Comets  என்று பெயரிட்டுள்ளனர். இவை கிரகங்கள் மற்றும் அஸ்டிராய்டுகள் போல வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்ற காரணத்தால் சூரியனுக்கு அருகில் வருகின்ற வாய்ப்பே இல்லாதவை.

வால் நட்சத்திரங்களைப் பற்றி மேலும் விவரமாக அறியும் பொருட்டு நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் கடந்த பல ஆண்டுகளில் வால் நட்சத்திரங்களை நோக்கி ஆளில்லா விண்கலங்களை அனுப்பின. இவற்றில் பலவும் வால் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் சென்று அவற்றைப் படம் பிடித்து அனுப்பின.

வில்ட்-2 என்னும் வால்
நட்சத்திரத்திலிருந்து தூசு
சேகரித்த ஸ்டார்டஸ்ட்
விண்கலம்
அந்த விண்கலங்களில் ஒன்று வால் நட்சத்திரத்தில் அடங்கிய பொருளின் சாம்பிளை சேகரித்து பூமிக்கு அனுப்பியது. நுண்ணிய வடிவிலான அப்பொருட்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது தெரிய வந்த தகவல்கள் வால் நட்சத்திரங்கள் எப்படி உண்டாயின என்பது பற்றி விஞ்ஞானிகள் இதுவரை கொண்டிருந்த கொள்கைகளை அடியோடு தகர்க்கும் வகையில் உள்ளன.

இப்படியாக வால் நட்சத்திரங்கள் புதுக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளன. இந்த நிலையில் வால் நட்சத்திரங்கள் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது.

Dec 28, 2011

வால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகிறதா?

Share Subscribe
வானில் அதிசயமாக ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தால் நாம் அனைவரும் ஆர்வத்துடன் அதைக் காண முற்படுவோம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரோ வால் நட்சத்திரம் கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மன்னர்களும் சரி, மக்களும் சரி, வால் நட்சத்திரத்தைக் கண்டு குலை நடுங்கினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் பீதியைக் கிளப்பின.

வால் நட்சத்திரம் தலைகாட்டினால் தனது பதவிக்கு ஆபத்து அல்லது உயிருக்கே ஆபத்து என்று மன்னர்கள் அஞ்சினர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்து என்றும் கருதினர்.  ஐரோப்பாவில் ராஜ சபைகளில் ஆஸ்தான ஜோசியர் இருந்தார். வால் நட்சத்திரம் தென்படுகிறதா என்று வானை ஆராய்ந்து சொல்வது தான் அவரது வேலை. "மன்னா வால் நட்சத்திரம் தென்படுகிறது" என்ற ‘கெட்ட செய்தி’ சொன்னதற்காகவே சிறையில் தள்ளப்பட்ட ஜோசியர்கள் உண்டு.

வால் நட்சத்திரம் பூமியத் தாக்கி அழிப்பது போல
 வரையப்பட்ட படம் - ஆண்டு 1858.
சில ஜோசியர்கள் சாமர்த்தியமாக சமாளித்தனர். "மன்னா, கவலை வேண்டாம். வால் நட்சத்திரத்தின் வால் தான் ரொம்ப மோசம். வால் பக்கத்து நாட்டை நோக்கியதாக உள்ளது" என்று மன்னரிடம் ஜோசியர் கூற, பக்கத்து நாட்டு ஜோசியரோ, தனது மன்னரிடம், "மன்னா, வால் நட்சத்திரம் அடுத்த நாட்டை உற்று நோக்குகிறது. வால் நட்சத்திரத்தின் பார்வை பட்டால் தான் ஆபத்து. வால் நம் பக்கம் இருப்பதால் பாதிப்பு இராது" என்றாராம்.

வால் நட்சத்திரங்களைக் கண்டு மன்னர்கள் பயப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்ற கதையாக வால் நட்சத்திரம் தென்பட்ட போது ஒரு சில நாடுகளில் மன்னர்கள் பதவி இழக்க, அது வால் நட்சத்திரம் பற்றி ஒரு மூட நம்பிக்கையை உண்டாக்கியிருக்கலாம்.

சக்ரவர்த்தி வெஸ்பாசியன் (Vespasian) ரோம் நகரத்தை ஆண்ட போது கி.பி.79 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் தோன்றியது. சக்ரவர்த்தி சொன்னார் ”இதைக் கண்டு எனக்கு என்ன பயம். இந்த நீண்ட முடி (வால்) நட்சத்திரம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பார்த்திய மன்னன் நீண்ட முடி கொண்டவன், அவனுக்குத் தான் ஆபத்து. என் தலையோ வழுக்கை”. ஆனால் சில நாட்களில் வெஸ்பாசியன் இறந்து போனார். பதினைந்தாம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னரின் தாய் ஜன்னல் வழியே பார்த்த போது ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தது. தமது உயிருக்கு ஆபத்து என்று பயந்து படுத்தார். மூன்று நாட்களில் உயிர் பிரிந்த்து. இப்படி எவ்வளவோ கதைகள் உண்டு.

1858 ஆம் ஆண்டில் தோன்றிய டொனட்டி
வால் நட்சத்திரத்தைக் காட்டும் ஓவியம் 
வால் நட்சத்திரம் தென்பட்டால் நோய்கள் ஏற்பட்டு ஏராளமான மக்கள் மடிவர் என்று மக்களிடையே ஒரு பயம் நிலவியது. பெரும் விபரீதம் ஏற்படும். உலகமே அழிந்து விடும் என மத நம்பிக்கை அடிப்படையில் அச்சம் நிலவியது. 1680 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது ஐரோப்பாவில் பெரும் பீதி தோன்றியது. மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட்னர்.

பெரும் பணம படைத்தவர்களில் பலரும் உலகம் அழியப் போகிறது என்ற எண்ணத்தில் தங்கள் சொத்துக்களை மடாலயங்களுக்கு எழுதி வைத்தனர். கல்வி அறிவு வளர, வளர இந்த மூட நம்பிக்கைகள் பெரும்பாலும் குறைந்தன

இது ஒரு புறம் இருக்க, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த் சர் பிரெட் ஹாயில் (Sir Fred Hoyle), இலங்கையைச் சேர்ந்த சந்திரா விக்ரமசிங்கே (Chandra Wickramasinghe) ஆகிய இரு நிபுணர்களும் விண்வெளித் தூசு பற்றி ஆராய முற்பட்டனர். இருவருமே வானவியல் நிபுணர்கள்.  நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு 1979 ஆம் ஆண்டில்அவர்கள் ஒரு கொள்கையை வெளியிட்ட்னர்

பூமியில் ஏற்படும் புளூ ஜுரம் போன்ற சில வகை நோய்களுக்கு வால் நட்சத்திரங்களே காரணம் என்பது அக்கொள்கையாகும். வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் நுண்ணிய தூசில் நோய்க் கிருமிகள் அடங்கியுள்ளன என்று அவர்கள் கூறினர். அக்கிருமிகள் பூமியில் இறங்கி நோயை உண்டாக்குகின்றன என்று அவர்கள் கூறினர்.

சர் பிரெட் ஹாயில்
ஒவ்வொரு தடவையும் வால் நட்சத்திரம் வரும் போது சூரிய கிரணங்களின் தாக்குதலாலும் சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற துகள்களாலும் வால் நட்சத்திரம் தாக்கப்படுகிறது. அப்போது வால் நட்சத்திரத்திலிருந்து நுண்ணிய துணுக்குகள் வெளியேறி பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதுவே வால் நட்சத்திரத்தின் வால் போன்று தோற்றமளிக்கிறது. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் பல லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம்.

வால் நட்சத்திரம் வந்த வழியே சென்று விட்ட பிறகு வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட எண்ணற்ற துணுக்குகள் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களிலும் பூமியானது தனது சுற்றுப்பாதையில் இத்துணுக்குககுகள் வழியே செல்கிறது. இத்துணுக்குகளில் நுண்ணுயிர்கள் உள்ளன என்று ஹாயிலும் விக்ரமசிங்கேயும் கூறினர்.

சந்திரா விக்ரமசிங்கே
ஆண்டு தோறும் சுமார் 1000 டன் துணுக்குகள் காற்று மண்டலம் வழியே பூமியில் இறங்குகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இத்துணுக்குகளில் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்ற துணுக்குகளும் அடங்கியுள்ளன என்பது அவர்கள் இருவரின் வாதமாகும். இப்படியாகத் தான் அவ்வப்போது விளக்கம் கூற முடியாத வகையில் பூமியில் திடீரென புளூ போன்ற ஜுரம் பயங்கரமாகப் பரவி மக்களை வாட்டுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஹாயிலும் விக்ரமசிங்கேயும் கூறுவது போல 1918 ஆம் ஆண்டில் உலகம் பூராவும் சுமார் 3 கோடி மக்களின் உயிரை மாய்த்த புளூ ஜுரம் எப்படிப் பரவியது என்பதற்குத் தகுந்த காரணம் கூற முடியவில்லை. அப்போது நாடுகளிடையே விமானப் போக்குவரத்தும் கிடையாது. ஆனாலும் அது பல நாடுகளில் விரைவாகப் பரவியது.

 ஹாயிலும் விக்ரமசிங்கேயும் பின்னர் வெளியிட்ட ஒரு கொள்கையில் ஒரு படி மேலே போய் உயிரின ‘விதைகள்’ விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறினர்.அதாவது பூமியில் உயிரினம் தானாகத் தோன்றவில்லை. உயிரினம் விண்வெளியிலிருந்து தான் பூமிக்கு வந்தது என்பது அவர்களது வாதமாகும்.

ஆனால் இந்த இருவரின் கருத்தை பிற விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. எனினும் பின்னர் மேலும் நடந்த ஆய்வுகள் இந்த இருவரின் கருத்துக்கு ஆதரவு சேர்ப்பவையாக உள்ளன. இவர்களது கொள்கை பற்றிய சர்ச்சை ஓய்ந்ததாகக் கூற முடியாது.

வால் நட்சத்திரங்களிலிருந்து தூசை சேகரித்து அதை ஆராய்ந்தால் இது பற்றிய சர்ச்சைக்கு விடை கிடைக்கலாம்.  நாஸா உட்பட விண்வெளி அமைப்புகள் இப்போது இதில் ஈடுபட்டுள்ளனர்.

Dec 23, 2011

சூரியனிடமிருந்து தப்பிப் பிழைத்த வால் நட்சத்திரம்

Share Subscribe
அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் லவ்ஜாய் (Lovejoy). லவ்ஜாயின் நிலைமை டிசம்பர் 15 ஆம் தேதி தேதியன்று ’கவலைக்கிடமாக’ இருந்தது.  இந்த தகவல் தான் அதற்குக் காரணம்: "லவ்ஜாய் சூரியனை நெருங்கி விட்டது. நிச்சயம் சூரியனின் வெப்பம் தாங்காமல் அழியப் போகிறது".

ஆனால் என்ன ஆச்சரியம்! அது சூரியனின் கடும் வெப்பத்தை தாங்கி நின்று சூரியனை சுற்றி விட்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று கம்பீரமாக வானில் காட்சி அளித்தது. கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும். அழியப் போகிறது என்று சொல்லப்பட்ட வால் நட்சத்திரத்தின்(Comet) நீண்ட வாலை இப்படத்தில் காணலாம். கூர்ந்து கவனித்தால் இரட்டை வால் தெரியும்.

படத்தில் தெரிவது லவ்ஜாய் வால் நட்சத்திரத்தின் 
நீண்ட வால். அதன் தலை அடிவானத்துக்குக் 
கீழே உள்ளது.
இப்படம் மேற்கு ஆஸ்திரேலியாவில் மண்டுரா என்னுமிடத்தைச் சேர்ந்த காலின் லெக் என்பவர் சூரிய உதயத்துக்கு முன்னால் எடுத்தது. அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் சுமார் 55 நிமிஷ நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று அவர் கூறினார்.

இந்த சிறிய வால் நட்சத்திரம் சென்ற மாதம் 27 ஆம் தேதி தான் (நவம்பர் 27, 2011)  கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமெச்சூர் வானவியல் ஆராய்ச்சியாளரான டெர்ரி லவ்ஜாய் (Terry Lovejoy) என்பவர் கண்டுபிடித்ததால் வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

வால் நட்சத்திரங்கள் பொதுவில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கைப்பர் வட்டம்(Kuiper Belt) அல்லது ஊர்ட்ஸ் முகில்(Oorts Cloud)  எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. அவை கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் குறுக்காகக் கடந்து சூரியனை நோக்கி வரும். சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பி விடும்.

வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும் சமயத்தில் தான் வானில் நமக்குத் தென்படுகின்றன .சூரியனை சுற்றி விட்டுத் திரும்புகையில் சில காலம் தெரியும். பிறகு நீண்ட தொலைவு சென்று விடுவதால் தெரியாது. வால் நட்சத்திரங்கள் வானில் அபூர்வமாகவே தென்படுவதற்கு இதுதான் காரணம்.

எல்லா வால் நட்சத்திரங்களையும் போல லவ்ஜாய் சூரியனை சுற்றி முடிக்கையில் தான் அது சூரியனை மிகவும் நெருங்கி விட்டது.

சூரியனை நோக்கி வருகின்ற வால் நட்சத்திரம்
இவ்விதமாக சூரியனை சுற்றிச் செல்லும்.
மஞ்சள் நிறத்தில் இருப்பது சூரியன்.
ஒரு கட்டத்தில் அந்த வால் நட்சத்திரத்துக்கும் சூரியனுக்கும் இடையில் இருந்த தூரம் மிகவும் குறைவு - ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர். அதாவது அந்த வால் நட்சத்திரம் சூரியனின் வாயு மண்டலத்தை உரசியபடி சென்றது. அவ்வளவு அருகில் சென்ற காரணத்தால் அது பொசுங்கி சூரியனோடு ஐக்கியமாகி விடும் என்று வானவியல் நிபுணர்கள் கருதினர். ஆனால் அப்படி நிகழவில்லை. லவ்ஜாய் எப்படி தப்பிப் பிழைத்தது என்பது வியப்பாக உள்ளது.

லவ்ஜாய் வால் நட்சத்திரத்தின் குறுக்களவு வெறும் 500 மீட்டர் தான். இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கியதிலிருந்து அதை 6 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.

வருகிற நாட்களில் லவ்ஜாய் வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மேலும் விலகிச் செல்லும். அப்போது அது வானில் நன்கு தெரியலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

எல்லா வால் நட்சத்திரங்களும் சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் வருவதில்லை. சில சிறிய வால் நட்சத்திரங்களே இவ்வளவு பக்கத்தில் வந்து சூரியனை சுற்றி விட்டுச் செல்கின்றன. இவற்றுக்கு ‘சூரிய உரசிகள்’ என்று பெயர்.
1910 ஆம் ஆண்டில் தெரிந்த பெரிய
வால் நட்சத்திரம். இது பகலிலும்
கண்ணுக்குத் தெரிந்தது.
வால் நட்சத்திரங்கள் சிறிய கற்கள், பாறைகள், தூசு, உறைந்த பனிக்கட்டி, வாயுக்கள் ஆகியவற்றால் ஆனவை. இவற்றுக்கு சுய ஒளி கிடையாது. சூரியனை நெருங்கும் போது தான் வால் நட்சத்திரத்துக்கு வால் தோன்றுகிறது. சூரிய வெப்பத்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் தாக்குவதாலும் வால் நட்சத்திரத்திலிருந்து ஏராளமான அளவுக்கு நுண்ணிய துணுக்குகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இவற்றின் மீது சூரிய ஒளி படும் போது இவை நீண்ட வால் போன்று காட்சி அளிக்கின்றன.

இப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதால் தான் சூரியனை நோக்கி வரும் போது தலை முன்னே இருக்க வால் பின்னே அமைந்திருக்கிறது.  சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின்னால் அமைந்திருக்கிறது.  மேலே கூறிய அதே காரணத்தால் நுண்ணிய துகள்கள் முன்னோக்கித் தள்ளப்படுகின்றன. ஆகவே தான் வால் திசை முன்னே செல்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பெரிய வால நட்சத்திரங்கள் தோன்றின.வால் நட்சத்திரங்களில் பல நூறு ஆண்டுக்கு ஒரு முறை தலை காட்டுபவை உண்டு. சில வால் நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தான் தென்படும். பல சிறிய வால் நட்சத்திரங்க்ள் பாதை மாறி சூரிய மண்டலத்துக்குள்ளாக அமைந்து அடிக்கடி தலைகாட்டுகின்றன. லவ்ஜாய் அப்படிப்பட்ட வால் நட்சத்திரங்களில் ஒன்றாகும்.

Dec 17, 2011

சனிப் பெயர்ச்சி என்பது என்ன?

Share Subscribe
 இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி
இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை
எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும்.
படம் நன்றி: நாஸா
வருகிற நாட்களில் சனிக் கிரகம் மீது விசேஷ ஆர்வம் காட்டப்படும். காரணம் சனிப் பெயர்ச்சி. ஜோசியர்களின் கணக்குப்படி சனி கிரகம் டிசம்பர் 21 ஆம் தேதி துலா ராசிக்குச் செல்கிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பெட்டிக் கடைகளிலும் தொங்கும். நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களில் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் பத்தி பத்தியாக இடம் பெற்றிருக்கும்.

சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.

சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்க்ள் தெரியாது.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.

          இடது புறத்திலிருந்து மூன்றாவதாக உள்ளது சனி கிரகம்.
வலப் புறத்திலிருந்து மூன்றாவதாக நீல நிறத்தில் இருப்பது பூமி.
வெறும் கண்ணால் பார்த்தால் தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வானில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும். இவற்றில் சனி கிரகம் தான் மிக மெதுவாக நகருகிறது என்று ஆதி நாட்களில் கண்டறிந்தார்கள். ஆகவே சனி கிரகத்துக்கு சனைச்சர (शनैश्चर) என்று பெயர் வைத்தன்ர். இது சம்ஸ்கிருத மொழியிலான சொல். அதற்கு ‘மெதுவாகச் செல்கின்ற(து)வன்’ என்று பொருள். அப்பெயர் காலப்போக்கில் சனைச்சரன் ஆகியது. பின்னர் சுருக்கமாக சனி என்று அழைக்கப்படலாயிற்று.

சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.

கொள்ளளவில் சனி கிரகம்
 பூமியை விட 700 மடங்கு பெரியது
நாம் காணும் வானில் சூரியனும் சந்திரனும் செல்கின்ற பாதையில் தான் கிரகங்களும் நகர்ந்து செல்கின்றன. இப்பாதைக்கு வான் வீதி (zodiac) என்று பெயர். அடையாளம் காண்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நாளிலேயே வானவியலார் இதை 12 ராசிகளாகப் பிரித்தனர். இந்த ராசிகள் நட்சத்திரங்கள் அடங்கியவை. இந்த ராசிகளின் எல்லைகள் நாமாக கற்பனையாக ஏற்படுத்திக் கொண்டவை. கிரகங்கள் நகர்ந்து செல்லும் போது இயல்பாக இடம் மாறிக் கொண்டிருக்கும். ஒரு கிரகம் சிம்ம ராசியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் அக்கிரகத்துக்குப் பின்னால் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சிம்ம ராசி நட்சத்திரங்கள் இருக்கும்.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து திருவான்மியூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிற ஒருவர் திருவான்மியூரில் இருக்கிற தனது உறவினரிடம் செல் போனில் சில நிமிஷங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி யில் இருக்கிறேன், ராயப்பேட்டையில் இருக்கிறேன், மயிலாப்பூரில் இருக்கிறேன் என்று தாம் கடக்கும் இடங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவதாக வைத்துக் கொள்வோம். கிரகங்களும் இவ்விதமாகத் தான் வானத்து ராசிகளைக் கடந்து செல்கின்றன.

சனி கிரகம் A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்துக்கு
நகர்ந்துள்ளது - இதுவே சனிப் பெயர்ச்சியாகும்.
இப்படத்தில் 1. சூரியன். 2. பூமி.
அந்த வகையில் வானில் கன்யா ராசி எனப்படும் பகுதி வழியே இதுவரை நகர்ந்து கொண்டிருந்த சனி கிரகம் கன்யா ராசியின் கற்பனையான எல்லையைக் கடந்து துலா ராசி வழியே நகர்ந்து செல்லத் தொடங்கியுள்ளது. இதுவே சனிப் பெயர்ச்சி ஆகும். இதிலிருந்து எந்த கிரகமும் ஒரு ராசியில் ஒரே இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம்.

சனி கிரகத்தின் இன்னொரு தோற்றம்
செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களை நீங்கள் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் ஒளி வட்டமாகத் தெரியும்.  ஆனால் சனி கிரகம் மட்டும் அலாதியானது. அதற்கு சனி கிரகத்தின் வளையங்க்ளே காரணம். டெலஸ்கோப் மூலம் பார்த்தால் சனி கிரகமானது ஒரு வாஷர் நடுவே உள்ள கோலிக்குண்டு மாதிரியாகக் காட்சி அளிக்கும்.

வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.

சனி கிரகத்தின் வளையங்களில் ஒரு பகுதி
சனி கிரகத்தை வடிவில் சிறியவையான கோடானு கோடி பனிக்கட்டி உருணடைகள் சுற்றி வருகின்றன. இவை தான் வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன. பூமியும் சனியும் எந்தெந்த இடங்களில் உள்ளன, அத்துடன் இரண்டும் சம தளத்தில் உள்ளனவா என்பதைப் பொருத்து சனி கிரகம் தனது வளையங்களுடன் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது. இந்த பனிக்கட்டி உருண்டைகள் அனைத்தும் வியக்கத்தக்க ஒழுங்குடன் சனி கிரகத்தைச் சுற்றி வருவது அற்புதமான காட்சியாகும்.(காண்க படம் -1 மற்றும் படம்-2). இப்படங்கள் பூமிக்கு உயரே பறக்கும் ஹ்ப்புள் (Hubble) டெலஸ்கோப் வெவ்வேறு சமயங்களில் எடுத்தவை.

படம்-1 ஹப்புள் எடுத்தது
பூமிக்கு ஒரு சந்திரன் தான் உண்டு. ஆனால் சனி கிரகத்துக்குப் பெரியதும் சிறியதுமான 62 சந்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவும் வடிவில் சிறியவை. சனி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 140 கோடி கிலோ மீட்ட்ர் தொலைவில் உள்ளது.  அவ்வளவு தொலைவில் சூரியனின் வெப்பம் உறைக்காது. ஆகவே சனி கிரகம் உறைந்த பனிக்கட்டி உருண்டையாக உள்ளது (சூரியனிலிருந்து பூமி உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர்).
படம்-2 ஹப்புள் எடுத்தது

1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.

ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.

ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. ’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.

சனி கிரகத்தை டிசம்பர் 22 ஆம் தேதி தென் கிழக்கு வானில் அதிகாலை 5 மணி வாக்கில் காணலாம் (கீழே வரைபடம் காண்க). அடிவானில் சந்திரன் பிறையாகத் தெரியும். அதற்கு மேலே பக்கம் பக்கமாக இரு ஒளிப் புள்ளிகள் தெரியும். இடது புறம் இருப்பது சனிக் கிரகம். வலது புறம் இருப்பது சித்திரை (Spica) நட்சத்திரமாகும்.

டிசம்பர் 22 காலை 5 மணி:  தென் கிழக்கு அடிவானில் சந்திரன்.
பிறைக்கு மேலே இடது புறம் சனி, வலது புறம் சித்திரை (Spica)

Dec 15, 2011

கடல் கடந்து செல்லும் ரோபாட்டுகள்

Share Subscribe
அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிளம்பி பசிபிக் கடலைக் கடந்து ஜப்பானின் டோக்கியோ நகருக்குச் செல்வதானால் குறைந்தது 8000 கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும்.

விமானத்தில் செல்லாமல் கடல் மார்க்கமாகப் பயணம மேற்கொண்டு வழி நெடுக பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கடல் நீரின் உப்புத் தன்மை, கடல் நீரின் வெப்ப நிலை, வானிலை, கடல் நீரில் அடங்கிய ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளந்து செல்வதானால் பெரிய ஆராய்ச்சிக் கப்பல் தேவை. பல ஊழியர்கள் தேவை. இப்படியான பணிக்கு நிறைய செலவாகும்.

இடது புறம் இருப்பது ரோபாட் படகு
படம் நன்றி: Liquid  Robotics
இப்போது நான்கு ரோபாட் படகுகள் இந்த அத்தனை பணியையும் செய்து ஜப்பானுக்குப் போய்ச் சேருகின்ற பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளன. இவை சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்திலிருந்து நவம்பர் 17 ஆம் தேதி கிளம்பின. முதலில் இந்த நான்கும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் உள்ள ஹவாய்(Hawaii) தீவுக்குப் போய்ச் சேரும். பின்னர் அங்கிருந்து இரண்டு ரோபாட் படகுகள் ஆஸ்திரேலியாவை நோக்கிக் கிளம்பும். மற்ற இரண்டும் ஜப்பானை நோக்கிப் புறப்படும்.

ஆளில்லாப் படகுகள் இவ்விதம் மிக நீண்ட தூரம் செல்வது இதுவே முதல் தடவையாகும். இவை ஜப்பானுக்குப் போய்ச் சேர 300 நாட்களாகும் என்று கருதப்படுகிறது.

ரோபாட் படகின் மேற்புறத் தோற்றம்
படம் நன்றி: Liquid Robotics
அமெரிக்காவைச் சேர்ந்த Liquid Robotics என்ற நிறுவனம் இந்த ரோபாட் படகுகளை உருவாக்கி கடலில் செலுத்தியுள்ளது. இப்படகின் நீளம் 7 அடி, அகலம் 2 அடி. படகில் தட்டையாக உள்ள மேற்புறப் பகுதியில் சூரிய ஒளி மின்பலகைகள் உள்ளன. அவற்றுக்கு அடியில பாட்டரி, மற்றும் பல கருவிகள் உள்ளன. அவை தான் மேலே குறிப்பிட்ட பல தகவல்களையும் சேகரிக்கும்.

வழியறிந்து செல்வதற்காக ஜி.பி.எஸ். யூனிட்டும் (GPS) இப்படகில் இருக்கும். இக்கருவிகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை சூரிய ஒளி மின்பலகைகள் அளிக்கும். படகுகள் சேகரிக்கும் தகவலை உடனுக்குடன் செயற்கைகோள் மூலம் மையக் கேந்திரத்துக்கு அனுப்பி விட முடியும்.

சரி, எந்தவித எஞ்சினும் இல்லாமல் கடலில் எப்படித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்ற கேள்வி எழுகிறது. இந்த ரோபாட் படகுக்கு அடியில் 23 அடி நீளத்துக்கு கேபிள் தொங்கும். அதன் நுனியில் ஆறு துடுப்புகள் உண்டு.

கடலில் இயல்பாக அலைகள் உருவாகும் - அதாவது, கடல் நீர் மட்டம் மேலே ஏறும், பிறகு கீழே இறங்கும். கேபிளின் நுனியில் தொங்கும் துடுப்புகள் கடலின் இந்த இயக்கதை ரோபாட் தொடந்து முன்னேறுவதற்கான இயக்கமாக மாற்றித் தருகின்றன. ஆகவே ரோபாட் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கும். இதன் வேகம் மணிக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர்.

ரோபாட் படகுக்கு அடியில் துடுப்புகள்
படம் நன்றி: Liquid Robotics
ஹவாய் தீவுகளிலிருந்து வடக்கு நோக்கி ஜப்பானுக்குச் செல்கின்ற ரோபாட் படகுகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குக் கிழக்கே உள்ள மரியானா கடல் பள்ளம் (Mariana Trench) மீதாகச் செல்லும். இங்குள்ள சேலஞ்சர் டீப் (Challenger Deep)  எனப்படும் கடல் மடு கடல் மட்டத்திலிருந்து 11 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது. உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் இதுவே ஆகும். ரோபாட் இந்த மடு பற்றிச் சேகரிக்க இருக்கிற தகவல்கள் இங்கு நீர்மூழ்குக் கலம் மூலம் உள்ளே இறங்கத் திட்டமிட்டுள்ள குழுவினருக்கு அளிக்கப்படும்.

லிக்விட் ரோபாடிக்ஸ் நிறுவனம் தனது ரோபாட் படகுகளை கடல் சார்ந்த பல துறையினருக்கும் விற்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ரோபாட் படகுகள் உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற போதிலும் பசிபிக் கடலைக் கடக்க இவை இப்போது தான் முதல் தடவையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Dec 13, 2011

புதிய ஆண்டில் பழைய விசேஷம்

Share Subscribe
வருகிற 2012 ஆம் ஆண்டின் முக்கிய விசேஷம் என்ன? பழைய விசேஷம் தான். புதிய ஆண்டு லீப் வருடமாகும். நாம் அனைவரும் ஒரு நாள் கூடுதலாக உழைப்போம். பொதுவில் ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என்றால் லீப் வருடத்தில் 366 நாட்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள்  இருக்கும். இது ஏன்?

சூரியனை பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியானது சூரியனை சுற்றி முடிக்க 366 நாட்களை எடுத்துக் கொள்கிறதா என்று கேட்டால் அப்படி இல்லை.
.
மிகச் சரியாகக் கணக்கிட்டால் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிஷம், 46 வினாடி ஆகின்றது. இந்த அடிப்படையில் நாம் ஆணடைக் கணக்கிட்டுக் கொள்ள் முடியாது. ஆகவே முழு எண்களாக 365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். நமது காலண்டர் அவ்விதமாகத் தான் உள்ளது.

சூரியனை பூமி ஒரு முறை சுற்றி முடிப்பதை ஓர் ஆண்டு என்கிறோம்
ஆனால் இந்த கூடுதல் நேரத்தை (5 மணி 48 நிமிம், 46 வினாடி) கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டால் அது சேர்ந்து கொண்டே போய் பிரச்சனையை உண்டாக்கும். அதாவது அக்கினி நட்சத்திரம் மே மாதத்தில் (சித்திரை மாதம்) வருவதற்குப் பதில் ஜூன், ஜூலை மாதங்களில் வர ஆரம்பிக்கும்.

ஆகவே நமது காலண்டரும் இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்)  கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டாலும் கணக்கு சரியாக வருவதில்லை.

ஏனெனில் நாம் கூடுதலாக 11 நிமிஷம் 14 வினாடியை சேர்த்துக் கொண்டு விடுகிறோம். கணக்குப் பார்த்தால் இது 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி ஆகிவிடுகிறது.  ஆகவே 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் கிடையாது.

அப்படிச் செய்தாலும் கணக்கு உதைக்கிறது. 5 மணி 17 வினாடி குறைந்து போய்விடுகிறது. ஆகவே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம். 1600 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 2000 ஆண்டு லீப் வருடமாக இருந்தது. 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களே. அதேபோல் 2012 ஆம் ஆண்டும் லீப் வருடமே.

நாம் பயன்படுத்தும் காலண்டருக்கு - அதாவது ஆண்டுக் கணக்கு - கிரிகோரியன் காலண்டர் என்று பெயர். நாம் இதை ஆங்கில ஆண்டு என்கிறோம்.

இப்போது நாம் பயன்படுத்தும் காலண்டரில் சீர்திருத்தம் செய்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இப்போது இருக்கின்ற ஏற்பாடே மேல் என்ற நிலை தான் உள்ளது.

நடை முறையில் நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில ஆண்டு சூரியனை வைத்துக் கணக்கிடப்படுவதால் இதை சூரியமான ஆண்டுக் கணக்கு என்றும் கூறலாம். சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் ஆண்டும் சூரியமான ஆண்டே ஆகும்.

உலகில் எவ்வளவோ வகையான காலண்டர்கள் உள்ளன. மாயன் (Mayan) காலண்டர் அவற்றில் ஒன்று. இந்த மாயன் காலண்டர் சம்பந்தப்ப்ட்ட ஒரு விஷயத்தையும் மற்றும் பல விஷயங்களையும் முடிச்சுப்போட்டு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 -41 மணிக்கு உலகம் அழியப் போவதாக வழக்கமாகப் பீதி கிளம்பும் கும்பல் அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நேராது என வானவியல் நிபுணர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்!

Dec 11, 2011

புளூட்டோவை நோக்கி: ஆறு ஆண்டுகளாகப் பயணம்

Share Subscribe
மனிதன் செலுத்திய விண்கலம் ஒன்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அதிவேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அது தனது இலக்கை எட்டுவதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் புளூட்டோவை (Pluto) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த விண்கலத்தை செலுத்திய அமெரிக்க நாஸா(NASA) விண்வெளி அமைப்பானது இடைக்கால அறிக்கை போல அந்த விண்கலம் இப்போது எங்கே உள்ளது என்பது பற்றி அண்மையில் தெரிவித்தது.

அந்த விண்கலம் இப்போது ஒரு நாளில் பத்து லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. அவ்வளவு வேகத்தில் சென்றாலும் புளூட்டோவை நெருங்க இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதிலிருந்து புளூட்டோ எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் செல்லும் பாதை.
இன்னும் செல்ல வேண்டிய தூரம் சிவப்பு நிறத்தில் உள்ளது.
(இடம் கருதி இப்படத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய் 
கிரகங்கள் குறிப்பிடப்படவில்லை)
புளூட்டோ சுமார் 591 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல சமயங்களிலும் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை ஓர் அலகாகக் கொள்வது உண்டு. இத்தூரத்தை ஒரு வான் அலகு (Astronomical Unit) என்று நிபுணர்கள் கூறுவர். இந்த கணக்கின்படி புளூட்டோ ஒரு சமயம் 48 கோடி வான் அலகு தூரத்திலும் வேறு சில சமயங்களில் 29 வான் அலகு தூரத்திலும் இருக்கிறது. புளூட்டோவின் சுற்றுப்பாதை நீள் வட்டமாக இருப்பதே அதற்குக் காரணம். புளூட்டோ ஒரு தடவை சூரியனை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.

புளூட்டோ சூரிய மண்டலத்தின் கடைசி ஸ்டேஷன். அதைத் தாண்டினால் நாம் அனேகமாக எல்லையற்ற விண்வெளியில் காலடி எடுத்து வைப்பவர்களாகி விடுவோம். சூரிய மண்டல எல்லையில் உள்ள ஒன்று எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் 2006 ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்தினார்கள். அது 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் புளூட்டோவை நெருங்கி அதைப் படம் பிடித்து அனுப்புவதுடன் புளூட்டோ பற்றிய தகவலக்ளையும் அனுப்பும்.

யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கி ஆராய்வதற்கு கடந்த கால்த்தில் பயனீர்(Pioneer), வாயேஜர்(Voyager) ஆகிய ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட்டன. அந்த விண்கலங்கள் இந்த இரு கிரகங்களையும் நெருங்கிச் சென்று அவை பற்றிய தகவலகளையும் ப்டங்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் மீதி இருந்தது.

புளூட்டோ சமாச்சாரம் ஒரு சோகக் கதை. சூரிய மண்டலத்தில் நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாயைத் தாண்டிச் சென்றால் இருக்கக்கூடிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்குமே ராட்சதக் கிரகங்கள். ஆனால் சூரிய மண்டலத்தின் வெளிக் கோடியில் காவல்காரன் போல இருக்கின்ற புளூட்டோ, புதன் கிரகத்தைக் காட்டிலும் சிறியது. எனினும் புளூட்டோவை நான்கு குட்டி சந்திரன்கள் சுற்றி வருகின்றன.

புளூட்டோவும் மற்ற சில கிரகங்களும்
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்து ஒன்பது கிரகங்கள் உள்ளதாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகளும் அவ்வாறே கூறி வந்தனர்.

ஆனால் 2006 ல் நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அதன் சிறிய வடிவம் காரணமல்ல. ஒரு கிரகம் என்ற அந்தஸ்து இருக்க வேண்டுமானால் அது தனது வட்டாரத்தில் உள்ள வேறு சிறிய வான் பொருட்கள் இல்லாதபடி அவற்றை ஈர்த்து அந்த வட்டாரத்தில் தனது ஆளுமையை நிலை நாட்டியிருக்க வேண்டும். அந்த அளவுகோலின்படி புளூட்டோ கிரகம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

புளூட்டோ.
ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த படம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால் ஒரு பேட்டையில் ‘தாதா’ ஒருவர் தனது போட்டியாளர்களை ஒடுக்கி தனது அதிகாரத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும். அப்படியானவரே ‘தாதா’ என குற்றக் கும்பல் வட்டாரத்தினரால் மதிக்கப்படுவார்.

புளூட்டோ இருக்கின்ற வட்டாரத்தில் பல ‘சிறு கோள்கள்’ உள்ளன. அந்த வகையில் புளூட்டோவும் ‘சிறு கோள்’ என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் புளூட்டோவை கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து அகற்றியது சரியல்ல என்று கருதுவோர் நிறையவே உள்ளனர். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பிய குழுவினர் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கருதுகின்றனர்.

புளூட்டோவை கிளைட் டாம்பா (Clyde Tombaugh) என்ற அமெரிக்க வானவியல் விஞ்ஞானி நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதனால் நியூ மெக்சிகோ மாகாண சட்ட மன்றம் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று அடித்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டாம்பா இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் இல்லினாய் மாகாண சட்ட மன்றமும் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்ட ம்ன்றமும் புளூட்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

புளூட்டோவுக்கு ஆதரவாக இயக்கம் நீடிக்கிறது
புளூட்டோவுக்கு கிரக அந்தஸ்து கிடையாது என்று சர்வதேச வானவியல் யூனியன் (International Astronomical Union) 2006 ஆம் ஆண்டில் எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதற்குக் காரணம் உண்டு. இந்த யூனியனில் மொத்தம் 9000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2700 பேர் தான் மாநாட்டில் பங்கு கொண்டனர். புளூட்டோவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அரங்கில் 424 பேர் தான் இருந்தன்ர். இக்காரணத்தாலும் புளூட்டோ பற்றிய தீர்மானம் குறித்து இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து கிடைக்கச் செய்ய இன்னமும் இயக்கம் நடந்து வருகிறது.

கிரேக்க புராணப்படி புளூட்டோ பாதாள உலகின் மன்னன். புளூட்டோ மரணத்தின் தேவன் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. ஆக, கிரக அந்தஸ்திலிருந்து கீழே தள்ளப்பட்ட தண்டனையை புளூட்டோ என்றாவது ஒரு நாள் வென்று மறுபடி கிரக அந்தஸதைப் பெற்றால் வியப்பில்லை.

Dec 9, 2011

விண்வெளியில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

Share Subscribe
பூமி மாதிரியில் விண்வெளியில் எங்கோ இன்னொரு ‘பூமி’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர் 5 ஆம் தேதி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு கெப்ளர்-22b (Kepler-22b) என்று பெயரிட்டுள்ளனர். அந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது (சூரியனும் ஒரு நட்சத்திரமே).

கீழே உள்ள படத்தில் சூரியனும், பூமி உட்பட சூரியனைச் சுற்றுகின்ற கிரகங்களும் காட்டப்பட்டுள்ளன. படத்தின் மேற்பகுதியில் கெப்ளர்-22b கிரகமும் அதன் சுற்றுப்பாதையின் நடுவே உள்ள நட்சத்திரமும் காட்டப்பட்டுள்ளன.

சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கெப்ளர்-22b
எவ்விதம் அமைந்துள்ளது என்பதைக் காட்டும் வரைபட்ம்

கடந்த சில ஆண்டுகளில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில் எவ்வளவோ கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இது ஒன்று தான் பூமி மாதிரி உள்ளது. அந்த வகையில் இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். பூமி மாதிரியில் என்றால் எந்த விதத்தில் பூமி மாதிரி என்ற கேள்வி எழுகிறது. உயிரினத்துக்கு உகந்த மாதிரியில் என்பது அதற்கான பதிலாகும்.

சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டால் பூமி ஒன்றில் தான் உயிரினம் உள்ளது. மனிதன் வாழ முடிகிறது. மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஒரு காரணத்தால் மனித வாழ்க்கைக்கு லாயக்கற்றவை. ஆகவே ஒரு கிரகம் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டுமானால் அதற்கென தனித் தகுதிகள் இருக்க வேண்டும் என்பது புலனாகிற்து. பூமி பெற்றுள்ள தகுதிகளைக் கவனிப்போம்.

கெப்ளர்-22b கிரகம் இவ்விதமாக
இருக்கலாம் என ஓவியர் தீட்டிய படம்
1. சூரியனிலிருந்து பூமி அமைந்துள்ள தூரம்
பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தொலைவில் உள்ளது. மலைப் பகுதியில் காட்டில் குளிர் காய்வதற்கு மரக்கட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். அதற்கு மிக அருகில் இருந்தால் வெப்பம் அதிகமாகத் தாக்கும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் வெப்பம் உறைக்காது.

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு தாங்க முடியாத வெப்பம் நிலவுகிறது. அதற்கு அடுத்தாற் போல உள்ள் வெள்ளி (சுக்கிரன்) கிரகம் வேறு காரணங்களால் அக்கினிக் குண்டமாக உள்ளது.

பூமியைத் தாண்டி அமைந்துள்ள செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை சூரியனிலிருந்து மிகவும் தள்ளி அமைந்த கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு கிடைக்கும் சூரிய வெப்பம் மிகவும் குறைவு. ஆகவே அவை உறைந்து போன பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன. பூமி மட்டுமே சூரியனிலிருந்து சரியான தூரத்தில் உள்ளது.

2. பூமியின் பருமன்
பூமியானது தனது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளது. இதற்கு அதன் பருமன் காரணம்.

செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது என்பதால் தனது காற்று மண்டலத்தில் பெரும் பகுதியை இழந்து விட்டது. இன்னமும் இழந்து வருகிறது.

சந்திரன் வடிவில் சிறியது என்பதால் அதற்கு காற்று மண்டலமே இல்லை. புதன் கிரகத்திலும் அப்படித்தான்.

3. காற்று மணடல அடர்த்தி
பூமியின் காற்று மண்டலம் அடர்த்தியாக இருப்பதால் அது சூரியனிலிருந்தும் மற்றும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. தவிர, விண்வெளியிலிருந்து அவ்வப்போது வந்து விழுகின்ற விண்கற்கள் காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆகவே விண்கற்கள் தாக்கும் ஆபத்து அனேகமாக இல்லை.

செவ்வாயில் காற்று மண்டல அடர்த்தி குறைவு. அங்கு திறந்த வெளியில் நின்றால் தலை மீது விண்கல் வந்து விழலாம்.

வெள்ளி கிரகத்தில் காற்று மண்டல அடர்த்தி பயங்கரமான அளவில் உள்ளது. விண்கலம் போய் இறங்கினால் அது அப்பளம் போல நொறுங்கி விடும்.

4பூமியின் காந்த மண்டலம்
பூமியின் மையத்தில் உள்ள இரும்புக் குழம்பின் இயக்கத்தால் பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. இக்காந்த மண்டலம் சூரியனிலிருந்து வருகின்ற சூரியக் காற்று (Solar Wind) எனப்படும் ஆபத்தான துகள்கள் பூமியின் தரையை வந்து அடையாதபடி பாதுகாக்கிறது.

5. பூமியின் சுழற்சி வேகம்
வீட்டில் தாய்மார்கள் நெருப்பில் அப்பளம் சுடும் போது அதை அடிக்கடி திருப்பிப் போடுவார்கள். அப்பளத்தின் ஒரு புறத்தை வெப்பம் அதிகம் தாக்கினால் அது கருகி விடும். தக்கபடி திருப்பிப் போட்டால் தான் அப்பளம் சரியாகப் பொரியும். கருகிப் போகாது. அந்த மாதிரியில் பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆகவே பகலும் இரவும் வருகின்றன. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பகல் 12 மணி நேரமாகவும் இரவு 12 மணி நேரமாகவும் உள்ளன.

இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம், இரவு இரண்டு வாரம். சந்திரனில் இரண்டு வார வெயிலில் வெப்பம் தாங்க முடியாது. இரண்டு வார இரவில் குளிர் கொன்று விடும். புதன் கிரகம் இதை விட மோசம்.

செவ்வாயில் ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம். ஆனால் செவ்வாயில் வேறு பாதக நிலைமைகள் உள்ளன.

6. பூமியில் தண்ணீர்
பூமியின் மேற்பரப்பில் முக்கால் பகுதி கடல்களாக உள்ளது. பூமியின் காற்று அடர்த்தி காரணமாகவே பூமியில் தண்ணீரானது திரவ வடிவில் உள்ளது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் அவசியம். தண்ணீர் காரணமாக பூமியின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் செடிகொடிகள் தோன்றின. தாவரங்கள் மூலம் ஆக்சிஜன் தோன்றியது.

ஆகவே பூமி மாதிரி ஒரு கிரகம் இருக்க வேண்டுமென்றால் அக்கிரகத்தில் மேற்சொன்ன நிலைமைகள் இருந்தாக வேண்டும்.

விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ள கெப்ளர்-22b கிரகத்தின் அளவு பூமியைப் போல இரண்டரை மடங்கு உள்ளது. அக்கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது. நிலம் இருக்கிறது. இதமான குளிர் (22 டிகிரி செல்சியஸ்) உள்ளது. காற்று மண்டலம் இருக்கிறது. அது தனது நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றி முடிக்க 290 நாட்கள் ஆகின்றன. தவிர, அது தனது நட்சத்திரத்திலிருந்து தகுந்த தூரத்தில் அமைந்துள்ளது. எனினும் அக்கிரகத்தில் நிலப் பகுதி அதிகமா அல்லது நீரினால் மூடப்பட்ட பகுதி அதிகமா என்பது தெரியவில்லை.

கெப்ளர்-22b பூமி மாதிரியில் இருந்தாலும் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஒரு வேளை இருக்கலாம். நிச்சயமாகக் கூற இயலாது.

 கெப்ளர் டெலஸ்கோப் - ஓவியம்
அமெரிக்காவின் நாஸா (NASA) விண்வெளி அமைப்பு 2009 ஆம் ஆண்டில் விண்வெளியில் செலுத்திய கெப்ளர் எனப்படும் பறக்கும் டெலஸ்கோப் மேற்படி கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் இருக்கக்கூடிய கிரகங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அது தொடர்ந்து விண்வெளியை ஆராய்ந்து வருகிறது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல வானவியல் விஞ்ஞானி யொஹானஸ் கெப்ளரின் (Johannes Kepler) பெயர் இந்த டெலஸ்கோப்பிற்கு வைக்கப்பட்டுள்ளது.

கெப்ளர்-22b கிரகம் பூமி மாதிரியில் உள்ளது என்பதால் மனிதன் ராக்கெட் மூலம் அந்தக் கிரகத்துக்குப் போகலாமே என்று நினைக்க முடியாது. அது சுமார் 587 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஒரு ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர். ஆகவே அந்த கிரகத்துக்குச் செல்வது என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒன்று.  நமது பூமி மாதிரியில் எங்கோ ஒரு கிரகம் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்படலாம்.   எங்கோ பூமி மாதிரி ஒரு கிரகம் இருப்பதை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களே என்று பெருமைப் படலாம். அவ்வளவு தான்.

Dec 7, 2011

கார்த்திகைப் பண்டிகையன்று என்ன விசேஷம்?

Share Subscribe

கார்த்திகைப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகைகளில் ஒன்று. எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியையொட்டித் தான் இப்பண்டிகை வரும். அனேகமாக அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமாக இருக்கும். நாம் இங்கு கவனிக்கப் போவது மத ரீதியிலான விஷயங்கள் அல்ல. இது வானவியல் (Astronomy) பற்றியது. அதாவது கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு எவ்விதம் வானவியல் அம்சங்கள் காரணமாக உள்ளன என்பதை விளக்குவது.

பூமியைச் சந்திரன் சுற்றி வருவதை நாம் அறிவோம். பௌர்ணமியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இதே வரிசையில் நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நேர்கோட்டை நாம் நீட்டிக் கொண்டே போனால் கோடானு கோடி கிலோ மீட்டருக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கின்ற இடத்துக்குப் போய்ச் சேரும். அதாவது சூரியன் - பூமி - சந்திரன் - கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆகிய நான்கும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் இருக்கும்.


டிசம்பர் 10 ஆம் தேதி இவ்விதமாகத்தான் இருக்கும். ஆண்டில் ஒரு முறை தான், அதாவது கார்த்திகைப் பௌர்ணமியன்று தான், இந்த நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். இதை அடிப்படையாக வைத்தே கார்த்திகைப் பண்டிகை.கொண்டாடுகிறார்கள். வானில் ஆண்டில் ஒரு முறை காணப்படுகின்ற ஓர் ‘அணிவகுப்பை’  பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் எனலாம்.

தமிழகத்தின் பல பண்டிகைகள் இவ்விதம் வானவியல் அடிப்படையிலானவை. பண்டைக்காலத்தில் தமிழர்கள் வானவியலில் வல்லுநர்களாக இருந்ததை இவை காட்டுவதாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் வானவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வானவியல் நிபுணர்கள் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ரிஷப ராசியில் அடை போன்று பல நட்சத்திரங்கள் காணப்படும். இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு நமது முன்னோர்கள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று பெயர் வைத்தனர்.

சந்திரன் ஓயாது பூமியைச் சுற்றி வருகின்றது. ஆண்டில் சுமார் 12 அல்லது 13 பௌர்ணமிகள் வரும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே சூரியன், பூமி,பௌர்ணமி சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ( ரிஷப ராசி) ஆகிய நான்கும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமிகளில் சந்திரனுக்குப் பின்னால் ரிஷப ராசிக்குப் பதில் வேறு ராசி அமைந்திருக்கும்.

வேடிக்கை என்னவென்றால், கார்த்திகைப் பண்டிகையன்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை வானில் காண இயலாது. வானில் சந்திரனுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் என்பதால் பௌர்ணமி நிலவின் பிரசாகத்தின் காரணமாக அது புலப்படாது. ஆனால் ஜனவரி மாதத்தில் கிழக்கு வானில் இரவு 8 மணிக்கு மேல் காண முடியும். பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும்.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள Alcyone எனப்படும் நட்சத்திரமே கார்த்திகை நட்சத்திரமாகக் அழைக்கப்படுகிறது. வானவியலில் இந்த நட்சத்திரம் Eta Tauri என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசம் கொண்டது. வட மொழியில் கார்த்திகை நட்சத்திரம் க்ருத்திகா எனப்படுகிறது. இந்தியாவில் ஆண்களில் பலர் கார்த்திக், கார்த்திகேயன் என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். பெண்களாக இருந்தால் க்ருத்திகா என்று பெயரிடுகின்றனர்

படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ளது தான்
கார்த்திகை (Alcyone) நட்சத்திரம்.
படம்: courtesy NASA/ESA/AURA/Caltech
முருகன் பற்றிய புராணக் கதையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆறு நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் தான் முருகனுக்குக் கார்த்திகேயன் என்றும் ஒரு பெயர் உள்ளது.

ஜப்பானிய மொழியில் இந்த நட்சத்திரக் கூட்டதுக்கு சுபாரு என்று பெயர். ஜப்பானிய கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு சுபாரு என்று வைத்ததுடன் நில்லாமல் அதன் லோகோவில் ஆறு நட்சத்திரக் குறிகளைப் போட்டுக்கொண்டுள்ளது. அரபு மொழியில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு அல் துராயா என்று பெயர். இப்பெயரில் சேடிலைட் டெலிபோன் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Pleiades என்று பெயர். ஏழு சகோதரிகள் என்பது அதன் பொருள். கிரேக்க புராணத்தில் வரும் ஏழு சகோதரிகளின் பெயர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு வைக்கப்பட்டன.

வெறும் கண்ணால் பார்த்தாலே இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். பார்வை கூர்மையாக உள்ளவர்களால் ஏழு நட்சத்திரங்களைக் காண இயலும்.

அரேபியர் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்.  திசைகாட்டும் கருவி கூட இல்லாத காலத்தில் இரவில் நட்சத்திரங்க்ளை வைத்தே திசை அறிந்தனர். ஆகவே பார்வைக் கூர்மை முக்கிய அம்சமாக இருந்தது. எவர் ஒருவரால் வெறும் கண்ணால் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காண முடிந்ததோ அவர்களே மாலுமிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று சொல்வார்கள். பல நட்சத்திரங்களுக்கு அரபு வானவியலார் வைத்த பெயர்கள் இன்றளவும் வானவியல் துறையில் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியலின்படி கார்த்திகை நட்சத்திரக் கூட்டமானது Open Cluster வகையைச் சேர்ந்தது. தமிழில் இதை நட்சத்திரத் திரள் எனலாம். கார்த்திகை நட்சத்திரத் திரள் சுமார் 450 ஒளியாண்டு தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டுத் தொலைவு என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்).

இந்த நட்சத்திரக் கூட்டம் தோன்றி சுமார் 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகைக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து சென்று விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இது டிசமபர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான்காட்சி எப்படி இருக்கும்
என்பதைக் காட்டும் படமாகும்.வலது ஓரத்தில் வெண்மை நிற வட்டம்
பௌர்ணமி சந்திரன். அதற்கு அருகே Alcyone இருப்பதைக் காணலாம்

வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வேறு ஒரு வகையிலும் விசேஷமானது. அன்று சந்திர கிரகணம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில்  சந்திரன்  பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.

Dec 6, 2011

வங்கக் கடலில் புயல்களைக் காணோம்

Share Subscribe
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் தமிழக மக்களில் பலர், “இப்போது தான் மழை ஓய்ந்து நிம்மதியாக இருக்கோம். புயல் தோன்றாமல் போனதால் இப்போ என்ன கெட்டுப் போச்சு” என்று பாய்வார்கள்.போதுமான மழை பெய்து விட்டது. ஆகவே புயல் தோன்றாவிட்டால் நல்லது தான். ஆனால் புயல்கள் தோன்றவில்லை என்பது செய்தி.

இந்த ஆண்டில் அக்டோபர் மாதக் கடைசியில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் 30 வரை தமிழகத்திலும் புதுவையிலுமாகப் பெய்த மழை அளவு வானிலைத் துறையினரின் தகவலின்படி மொத்தம் 47 சென்டிமீட்டர். இது வழக்கமாக இந்த சமயத்தில் பெய்யக்கூடிய மழையை விட 35 சதவிகிதம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் கரையோரமாக பல தடவை காற்றத் தாழ்வு மண்டலங்கள் தோன்றின. ஆனால் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை.

2010 ஆம் ஆண்டில் கரையை நெருங்கும் புயல்
பொதுவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை விட புயலின் விரிவெல்லை அதிகம். நிறைய மழை மேகங்களை ஈர்க்கும். பரந்த வட்டாரத்தில் மழையைப் பெய்விக்கும். தவிர, புயல் என்பது நிலையாக நிற்பது கிடையாது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல நாட்கள் நீடித்துக் கழுத்தறுக்கும். இக்காரணத்தால் பல சமயங்களில் புயல்களை விட காற்றழுத்த மண்டலங்கள் தான் குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் அதிக மழையைக் கொண்டு வரும்.

நவம்பர் கடைசி வரையிலான காலத்தில் தமிழகத்தில் கூடுதல் மழை பெய்துள்ள அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 45 சதவிகிதம் குறைவு. ஒடிஷா(ஒரிசா) மாநிலத்தில பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 83 சதவிகிதம் குறைவு.

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் சென்னைக்குத் தென் கிழக்கே வங்கக் கடலில் மூன்று நான்கு புயல்களாவது உருவாகும். இவை தமிழகம், ஆந்திரம் அல்லது ஒடிஷாவில் கரை கடக்கும். இதன் பலனாக அப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் அபூர்வமாக வங்கதேசத்துக்குச் செல்வதும் உண்டு.

இப்படி வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் நவம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும். டிசம்பரில் புயல்கள் தோன்றுவது அபூர்வம். டிசம்பர் 15 தேதிக்கு மேல் வட கிழக்குப் பருவ மழை நீடிப்பது கிடையாது. இந்த ஆண்டில் டிசம்பர் மத்தி வரை ஒரு புயல் கூடத் தோன்றாமல் போனால் அது அசாதாரண நிலைமையாகவே கருதப்படும்.

வடகிழக்குப் பருவ மழை என்பது நம்மூர் சமாச்சாரம் என்றாலும் காற்று மண்டலம் என்பது உலகளாவியது. உலகின் கடல்களும் சரி, ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. அந்த அளவில் உலகின் பிற பகுதிகளில் காணப்படுகிற நிலைமைக்கும் - குறிப்பாக பசிபிக் கடலில் இருக்கின்ற நிலைமைக்கும் - வட கிழக்குப் பருவ மழைக்கும் (அத்துடன் தென்மேற்குப் பருவ மழைக்கும் தான்) தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் கடல்களில் பசிபிக் கடல் தான் மிகப் பெரியது. அக்கடலின் மேற்பரப்பில் உள்ள வெப்ப நிலை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது -  இன்னும் சரியாகச் சொன்னால் பூமியின் நடுக்கோட்டில் அமைந்த பசிபிக் கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் மேற்பரப்பு.

அங்கு மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக் இருந்தால் எல் நின்யோ (El Nino) என்றும், வழக்கத்தை விட குறைவு என்றால் லா நின்யா(La Nina) என்றும் குறிப்பிடப்படுகின்றன (இவை ஸ்பானிஷ் மொழிச் சொற்கள்).

 2007 ஆம் ஆண்டில் தோன்றிய லா நின்யா:
கடல் நீரின் வெப்பம் வழக்கத்தை விடக் குறைவாக
உள்ளதை நீல நிறம் காட்டுகிறது.
பசிபிக் கடலின் மேற்படி பகுதிகளில் இப்போது லா நின்யா நிலைமை உள்ளது இந்த நிலைமையில் இந்தியாவில் நிறைய மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

எல் நின்யோ லா நின்யாவுக்கு நேர் மாறானது. 2009 ஆம் ஆண்டில் பசிபிக் கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் எல் நின்யா நிலைமை தோன்றி, அதன் விளைவாக இந்தியாவில் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தது.

வங்கக் கடலில் வழக்கமாகக் காணப்படுகின்ற புயல்கள் தோன்றாமல் போனது ஏன் என்பதற்கு வருகிற வாரங்களில் வெளியாகக் கூடிய ஆய்வறிக்கைகளில் காரணம் தெரிவிக்கப்படலாம்.

இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு மழையை அளிக்கின்ற தென்மேற்குப் பருவ மழை பற்றி கடந்த பல ஆண்டுகளில் விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் ஒரு நிபுணரின் கருத்துப்படி வடகிழக்குப் பருவ மழை அந்த அளவுக்கு விரிவாக ஆராயப்படவில்லை.

இந்திய வானிலைத் துறையின் டைரக்டர் ஜெனரல் அஜித் தியாகி அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தென்மேற்குப் பருவ மழை பற்றியே இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகவே வட கிழக்குப் பருவ மழை பற்றி சொல்லவே வேண்டாம்.

Dec 3, 2011

அண்டார்டிகாவில் ஒரு பாரதி

Share Subscribe
பல கண்டங்களும் இணைந்திருந்த கோண்டுவானாலாந்து 

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி நேர் தெற்கே போய்க்கொண்டே இருந்தால் அண்டார்டிகாவுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். தூரம் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர். எனினும் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் அண்டார்டிகா கண்டமும் இணைந்திருந்தன. அந்த அளவில் அண்டார்டிகாவுடன் இந்தியாவுக்கு ஒட்டு உறவு உண்டு. அக்டோபர் மாதக் கடைசியில் அண்டார்டிகாவுக்கு கிளம்பிச் சென்ற இந்திய ஆராய்ச்சிக் குழுவினர் இந்த ‘உறவு’ பற்றி ஆராய்ச்சி செய்வார்கள்.

அண்டார்டிகா கண்டம் பரப்பளவில் ஆஸ்திரேலியாவை விட இரண்டு மடங்கு பெரியது. தென் துருவம் மீது அமைந்த அது நிரந்தரமாக உறைந்த பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். அண்டார்டிகாவில் உள்ள பெங்குவின் பறவைகள் தான் அதன் ‘குடிமக்கள்’.

பெங்குவின்கள்
அண்டார்டிகா கண்டத்தின் வெவ்வேறு பகுதிகள் மீது கடந்த காலத்தில் பல நாடுகள் உரிமை கொண்டாடின. ஆனால் அது யாருக்கும் சொந்தமானதல்ல என 1959 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச உடன்பாட்டின் மூலம் முடிவாகியது. ஆயினும் அண்டார்டிகாவில் எந்த நாடும் ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது. அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நடத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

1981 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் இந்திய மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டு இந்தியாவின் முதலாவது ஆராய்ச்சி நிலையத்தை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. தட்சிண கங்கோத்ரி(Dakshin Gangotri) என்று பெயரிடப்பட்ட இந்த ஆராய்ச்சி நிலையம் 1983 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. அவ்வப்போது இந்திய நிபுணர்கள் அண்டார்டிகா சென்று அங்கு தங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர். உறைந்த பனிக்க்ட்டி மீது நிரந்தரக் கட்டடம் கட்ட இயலாது. அண்டார்டிகாவின் பனிக்கட்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே 1989 ஆம ஆண்டில் இந்த ஆராய்ச்சி நிலையம் கைவிடப்பட்டது.

இதற்குள்ளாக வேறிடத்தில் கட்டப்பட்ட புதிய ஆராய்ச்சி நிலையத்துக்கு மைத்ரி(Maitri) என்று பெயரிடப்பட்டது. இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அண்டார்டிகாவில் ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த விரும்பி இந்திய அரசு லார்ஸ்மான் ஹில் என்னுமிடத்தில் மேலும் ஓர் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது.

இந்தியாவின் மைத்ரி ஆராய்ச்சி நிலையம்
அங்கு 2012 மார்ச் மாத வாக்கில் கட்டுமான வேலைகள் முடிவடைந்து ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கும். இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு பாரதி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும்.   அண்டார்டிகாவில் 26 நாடுகளின் ஆராய்ச்சி நிலையங்களில் பகலாக இருக்கின்ற காலத்தில் மொத்தம் 4000 ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவர். இரவாக இருக்கின்ற காலத்தில் 1000 பேர் தான் இருப்பார்கள்.

சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்
கோண்டுவானாலாந்து
இந்தியாவின் பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் எல்லா வசதிகளும் இருக்கும். பகலாக உள்ள மாதங்களில் இங்கு 25 பேர் தங்கியிருப்பர். இரவாக உள்ள -அதாவது கடும் குளிர் - காலத்தில் 15 பேர் மட்டுமே இருப்பர். கடும் குளிர் காலத்தில் இங்கு குளிர் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். பகலாக உள்ள காலத்தில் - இதை ‘கோடை’ என்று வருணிக்கின்றனர் - குளிர் பூஜ்ய டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

 கோண்டுவானாலாந்து எனப்படும் சூப்பர் கண்டத்திலிருந்து இந்தியா, அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை எவ்விதமாகப் பிரிந்தன என்பது பற்றி இப்போது அண்டார்டிகா சென்றுள்ள இந்திய நிபுணர்கள் ஆராய்வர். கோண்டுவானாலாந்து பற்றிக் கடந்த காலத்தில் வெவ்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப் பிண்டமாக ஒன்று சேருவதும் பின்னர் தனித்தனியே பிரிவதும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம், மத்தியப் பிரதேச மாநிலம் ஆகியவற்றில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு கோண்டுகள் என்று பெயர். அவர்கள் வாழும் பகுதிக்கு கோண்டுவானா என்று பெயர். பல கண்டங்கள் இணைந்த சூப்பர் கண்டம் என்றோ இருந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரிய விஞ்ஞானி எடுவர்ட் சுயெஸ் 1861 ஆம் ஆண்டில் கருத்து கூறினார். அவர் அந்த சூப்பர் கண்டத்துக்கு கோண்டுவானாலாந்து என்று பெயரிட்டார்.

இப்போதும் கண்டங்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு பூமியின் ஆழத்தில் நிகழும் சில்லுப் பெயர்ச்சி இயக்கமே காரணம்.

Dec 1, 2011

பிராசியோடைமியம் என்பது என்ன?

Share Subscribe
பள்ளியில் வேதியல் பாடம் படித்தவர்களுக்கு மூலகங்களின் பட்டியல் (Periodic Table) பற்றித் தெரிந்திருக்கும். பூமியில் எவ்வளவு வகையான மூலகங்க்ள் (Elements) உள்ளன என்பதை இப்பட்டியல் வரைபட வடிவில் காட்டும். அந்தந்த மூலகத்துக்கு உரிய எண், அதன் சுருக்கமான அடையாளப் பெயர் ஆகியவை அந்தப் பட்டியலில் காணப்படும்.

ஆனால் அணு எண் 57 ல் தொடங்கி அணு எண் 71 வரையிலான மூலகங்க்ள் பிரதான பட்டியலில் காணப்படமாட்டாது. அவற்றை மூலகங்களின் பட்டியலுக்கு கீழே தனி வரிசையில் அளித்திருப்பார்கள். இந்த மூலகங்களுக்கு Lanthanides  என்ற பெயரும் உண்டு. லாந்தானம் வகையறா என்பது இதன் பொருள்.

சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டவை லாந்தனம் வகையறா
கிடைப்பதற்கு அரியவை என்ற பொருளில் இந்த மூலகங்களுக்கு அருமண் உலோகங்கள்(Rare Earth Metals) என்ற பொருந்தாப் பெயரும் உண்டு.   இந்த மூலகங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்த காலகட்டத்தில் இவை கிடைப்பதற்கு அரியவையாக இருந்தன. தவிர, ஒரு காலத்தில் ஆக்சைடுகள்(Oxide) மண் என்றும் குறிப்பிடப்பட்டது.  ஆகவே அருமண் உலோகம் என்ற பெயர்.

உண்மையில் இந்த உலோகங்கள் அரியவையும் அல்ல, இவை மண்ணும் அல்ல. சொல்லப்போனால் பூமியின் மேற்பரப்பில் தங்கத்தை விட நியோடைமியம் உலோகம் அதிகமாக உள்ளது. இந்த வகை உலோகங்கள் இப்போது டன் கணக்கில் நிறையவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

லாந்தானம் வகையறா உலோகங்கள் பலவும் வாயில் நுழையாப் பெயர்களைக் கொண்டவை. பிராசியோடைமியம், நியோடைமியம், டிஸ்புரோசியம், இட்டர்பியம், லூடேஷியம் முதலியவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவை அல்லாமல் அருமண் உலோகங்களின் பட்டியலில் லாந்தானம், செரியம், புரோமிதியம், சமாரியம், யூரோப்பியம், கடோலினியம், டெர்பியம், ஹோல்மியம், எர்பியம், தூலியம் ஆகியவையும் அடங்கும்.

 கடலடி உலோக் உருண்டை
 தவிர, பிரதான மூலகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்காண்டியம் (அணு எண் 21) இட்ரியம் (அணு எண் 39) ஆகியவையும் அருமண் உலோகங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (இட்டர்பியம் வேறு, இட்ரியம் வேறு).  பலருக்கும் இப்படியான உலோகங்கள் உள்ளன என்பது தெரியாது (அருமண் உலோகங்கள் பட்டியலில் அடங்கிய புரோமிதியம் இயற்கையில் கிடைப்பது இல்லை).

 நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள் பலவற்றில் அருமண் உலோகங்களில் ஏதாவது ஒன்று அடங்கியுள்ளது. வீடுகளில் காஸ் அடுப்பைப் பற்ற வைப்பதற்குப் பயன்படுத்தும் காஸ் லைட்டரில் தீப்பொறியை தோற்றுவிப்பது செரியம் உலோகம். சிகரெட் லைட்டரிலும் செரியம் அடங்கியுள்ளது. பட்டி தொட்டிகளிலும் பயன்படுத்தப்படும் செல் போன்களிலும் அருமண் உலோகங்கள் சிறு அளவில் அடங்கியுள்ளன.

வர்த்தகத் துறையிலும் ராணுவத் துறையிலும் இவற்றுக்கு நூற்றுக் கணக்கான உபயோகங்கள் உள்ளன. காந்தங்கள், லேசர்கள், இழை ஒளியியல், பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.


கம்ப்யூட்டர் டிஸ்க் டிரைவ், சி.எப்.எல். பல்புகள், சார்ஜ் செய்யத்தக்க பாட்டரிகள், கம்ப்யூட்டர் மெமரி சிப், எக்ஸ்ரே டியூப், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள், சூரிய மின்பலகைகள் என பல்வேறான பொருட்களைத் தயாரிப்பதற்கு இவை அத்தியாவசியமானவை. ராணுவத் துறையில் இவை பயன்படுத்தப்படுகின்ற கருவிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. அணுசக்தித் துறையிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

மோனசைட் அடங்கிய மணல் சேகரிப்பு 
இந்தியாவில் தமிழக மற்றும் கேரளக் கரையில் கிடைக்கும் மோனசைட் மணலில் பலவகையான அருமண் உலோகங்கள் அடங்கியுள்ளன. இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆலைகளை அமைத்து இவற்றைப் பிரித்து எடுத்து வருகிறது. ஒரிசாவிலும் இவை கிடைக்கின்றன. ஆனால் இந்தியா 2004 ஆம் ஆண்டிலிருந்து இவற்றை ஏற்றுமதி செய்வது கிடையாது.

உலகில் அருமண் உலோகங்களின் உற்பத்தியில் 95 சதவிகிதம் சீனாவின் கையில் உள்ளது. கடந்த ஆண்டில் ஜப்பானுடன் ஏற்பட்ட ஒரு தகராறைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோகங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் ஜப்பானில் கார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

மின்சாரத்தால் இயங்கும் கார்களில் இடம் பெறும் காந்தங்களின் உறபத்திக்கு நியோடைமியம், டிஸ்புரோசியம் ஆகிய அருமண் மூலகங்கள் அவசியம். அமெரிக்காவுக்கான அருமண் உலோக ஏற்றுமதி மீதும் சீனா தடை விதித்தது. இத்தடை சில மாதங்களே நீடித்தது. அத்துடன் சீனா இவற்றின் ஏற்றுமதி கோட்டாவை ஒரேயடியாகக் குறைத்தது.

ஆகவே சீனாவை இனி முற்றிலுமாக நம்ப முடியாது என்று அமெரிக்காவும் ஜப்பானும் முடிவெடுத்தன. சீனாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து உலக மார்க்கெட்டில் அருமண் உலோகங்கள் பலவற்றின் விலை ஒரு கட்டத்தில் பத்து மடங்கு உயர்ந்தது.

சீனாவின் தடை நடவடிக்கையைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோக ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் ஜப்பானிய உதவியுடன் புதிய அருமண் பிரிப்பு ஆலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தியா தனது அருமண் உலோக உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

அருமண் உலோகங்கள் உற்பத்தியில் சீன ஆதிக்கம்
இவ்விதப் பின்னணியில் தான் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பதில் மேற்கத்திய வட்டாரங்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த உலோக உருண்டைகளில் அனேகமாக எல்லா அருமண் உலோகங்களும் சிறு அளவுக்கு அடங்கியுள்ளன. ஆனால் இவற்றை மேலே எடுத்து அருமண் உலோகங்களை வர்த்தக ரீதியில் பிரித்தெடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

காண்க: கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்