Aug 31, 2012

ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை ‘புயல்’

Share Subscribe

புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது
2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்
புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை  பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய முடியாது. புயலை திசை திருப்பி விட முடியாது. குறைந்த பட்சம் புயலின் கடுமையை நடுக் கடலிலேயே குறைக்க முடியுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை.  .

ஆகவே தான் அமெரிக்காவில் புளாரிடா மாகாணத்தில் நிபுணர்கள் ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கையாகப் ‘புயலை’ உண்டாக்கி அதை ஆராயும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிஜப் புயலை தோற்றுவிக்க இயலாது என்பதால் சிறு அளவில் புயல் நிலைமைகளை உண்டாக்கி ஆராயப் போகிறார்கள். புயல்கள் தொடர்பாக் இப்படியான ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவது உலகில் இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
ஆகஸ்டில் அமெரிக்காவில் நான்கு மாகாணங்களில் பாதிப்பை உண்டாக்கிய ஐசாக் புயல் 
ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் தோன்றும் புயல்கள் தமிழகம், ஆந்திரம், ஒரிசா மானிலங்களைத் தாக்குகின்றன என்பதை நாம் அறிவோம். அமெரிக்காவிலும் இதே போல தென் கிழக்கு, கிழக்கு கரை மாகாணங்களைப் புயல்கள் தாக்குகின்றன. இப்போது அதாவது கடந்த 29 ஆம் தேதியன்று ஐசாக் என்று பெயரிடப்பட்ட  புயல் அமெரிக்காவின் தென் கிழக்குக் கரையைத் தாக்கி சேதம் விளைவித்தது.

உலகில் ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளையும் அவ்வப்போது புயல்கள் தாக்குகின்றன. அமெரிக்காவைத் தாக்கும் புயல்கள் Hurricane, என்றும் ஜப்பானைத் தாக்குகின்ற புயல்கள் Typhoon என்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் Cyclone என்றும் அழைக்கப்படுகின்றன. பெயர் தான் வித்தியாசமே தவிர இவை அனைத்தும் ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் தான் தோன்றுகின்றன. (காண்க எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா/)

செயற்கைப் புயலை உண்டாக்குவதற்கான ஆராய்ச்சிக் கூடத்தை புளோரிடாவில் உள்ள மியாமி பல்கலைக் கழகம் நிறுவுகிறது.இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. எல்லாப் புறங்களிலும் மூடப்பட்ட பெரிய  நீர் தொட்டி இதன் முக்கிய அம்சமாகும். ஒரு நீச்சல் குளம் அளவுக்கு இது 6 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும்.

இந்த நீர்த் தொட்டிக்கு ஒரு நிமிஷத்துக்கு சுமார் 3700 லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருப்பதற்கான ஏற்பாடு உண்டு. புயல்கள் கடலில் தோன்றுகின்றன என்பதால் இத்தொட்டிக்கு வருவது கடல் நீராகவே இருக்கும். புயல் என்றாலே காற்று தான். ஆகவே மணிக்கு அதிகபட்சம்  240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்படி செய்வதற்கு ராட்சத மின் விசிறி உண்டு.

புயலின் போது  அலைகள் உண்டாகும். ஆகவே அவ்விதம் அலைகளை ஏற்படுத்த 12 வித துடுப்புகள் இருக்கும். நீர்த் தொட்டியைச் சுற்றிலும் கண்ணாடி மாதிரியில் ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் தடுப்புகள் இருக்கும். இது 8 செண்டி மீட்டர் குறுக்களவு கொண்டது.

ஆகவே நீர்த் தொட்டிக்குள் குட்டி  செயற்கைப் புயலை உண்டாக்கினால் வெளியிலிருந்து அதைக் காண முடியும். தகவல்களைப் பதிவு செய்ய உணர் கருவிகளும் இருக்கும். செயற்கைப் புயலை உண்டாக்கி சோதனைகளை நடத்தும் போது அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், கடலோர தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றின் மாடல்களும் பயன்படுத்தப்படும். ப்ல்வேறான கட்டுமானங்கள் மீது கடும் புயல் உண்டாக்கும் விளைவுகளை அறிவது இதன் நோக்கமாகும் இதே மாதிரியில் இன்னொரு ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவுவதற்கும் திட்டம் உள்ளது.

மியாமி பல்கலைக்கழகத்தின் Applied Marine Physics பிரிவின் தலைவர் பிரியன் ஹவுஸ் செயற்கைப் புயல் ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தலைவராக இருப்பார். அவருக்குப் புயல்கள் பற்றி நன்றாகவே தெரியும். புயல் வீசுகின்ற இடங்களுக்குச் சென்று ஆராய்ந்தவர்.

கடலில் தோன்றும் புயல்கள்க் கரையை நோக்கி  வழக்கமாகச் செல்கின்ற பாதைகளில்  நுண்கருவிகளைக் கொண்ட மிதவைகளைப் போட்டு வைப்பது, பின்னர் அக்கருவிகளில்  பதிவாகும் தகவல்களை சேகரித்து ஆராய்வது ஆகியன அவர் பின்பற்றி வந்துள்ள முறையாகும்.  ஒரு சமயம் புயல் பலவீனமடந்து விட்டது போலத் தோன்றிய சமயத்தில் பிரியன் ஹவுஸ் குழுவினர் நுண்கருவிகளை எடுத்துவரக் கிளம்பினர். ஆனால் அதே புயல் மறுபடி தீவிரமாகிய போது பிரியன் ஹவுஸ் குழுவினர் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகினர்.

அமெரிக்காவில் நிறுவப்படும் புயல் ஆராய்ச்சிக்கூடத்தில் தெரிய வரும் தகவல்கள் உலகில் புயல்களால் பாதிக்கப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கும் பலனளிப்பதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 26, 2012

சிறிய கடலடி பூகம்பமும் சுனாமியை உண்டாக்கலாம்

Share Subscribe
தமிழகத்தை 2004 டிசமபரில் கடும் சுனாமி தாக்கி எண்ணற்றவர்களை பலி கொண்டது. 2011 ஆம் ஆண்டில் இதே போன்ற கடும் சுனாமி ஜப்பானைத் தாக்கியது. அப்போதும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஜப்பானின் கிழக்குக் கரையைத் தாக்கிய சுனாமியால் புகுஷிமா அணுமின்சார நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விபரீத விளைவுகள் ஏற்பட்டன.

தமிழகத்திலிருந்து கிழக்கே சுமார்  2000 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலடித் தரையில் ஆழத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாகவே 2004 ஆம் ஆண்டு சுனாமி தோன்றியது. அந்த பூக்ம்பத்தின் கடுமை ரிக்டர் கணக்கில் 9.3 ஆக இருந்தது.

இதே போல  கடந்த ஆண்டில்  ஜப்பானின் கிழக்குக் கரையைத் தாக்கிய கடலடி பூகம்பத்தின் கடுமை  ரிக்டர் கணக்கில் 9 ஆக இருந்தது. இந்த கடலடி பூகம்பம் டொஹோகு கடலடி பூகம்பம் என குறிப்பிடப்படுகிறது.
சுனாமி அலை தோன்றும் விதம்
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்படும் போது அந்த இடத்தில் மேலிருந்து கீழ் வரை  கடல்  நீர் மொத்தமும் மேலே எழும்பிக் கீழே இறங்கும். இவ்விதமாகக் கடல்  நீர் எழும்புவது மூன்று அல்லது  நான்கு அடி உயரம் இருக்கலாம்.  

இதன் விளைவாகக் கடலில் அங்கு தோன்றும் அலையானது நாலா புறங்களிலும் பரவும். நீங்கள் நீர் நிரம்பிய சிறு குட்டையில் கல்லைப் போட்டால் சிறு அளவுக்கு அலைகள் தோன்றி நாலாபுறங்களிலும் பரவுவதைக் கண்டிருக்கலாம். கிட்டத்ட்ட இது மாதிரி தான் கடலில் ஏற்படுகிறது.

கடலடி பூகம்பத்தால் கடலில் எழும் அலையின் அலை நீளம்-- அதாவது அலையின் ஒரு முகட்டுக்கும் அடுத்த முகட்டுக்கும் உள்ள இடை வெளியானது  -- சுமார் 200 கிலோ மீட்டர் வரை இருக்கலாம். ஆகவே அந்த அலைகள் நடுக்கடலில் உள்ள கப்பல்களைப்  பாதிப்பதில்லை. சொல்லப்போனால் தங்களது கப்பலுக்கு அடியில் சுனாமி அலைகள் செல்வதைக் கப்பல் கேப்டனாலும் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால் அந்த அலைகள் கரையை அடையும் போது பேரலையாக உருவெடுத்து நிலப் பகுதிக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் செல்லும். பயங்கர சேதத்தையும் உண்டாக்கும். இதுவே சுனாமி அலையாகும்.கரையைத் தாக்கும் சுனாமி அலைகளின் உயரம் 15 அடியாக இருக்கலாம். 130 அடியாகவும் இருக்கலாம். அது கடலடி பூகம்பத்தின் கடுமையை மட்டுமன்றி கரையோரப் பகுதிகள் அமைந்துள்ள விதத்தையும் பொருத்தது.

நடுக்கடலில் சாதுவாக இருக்கிற சுனாமி அலைகள் கரையை எட்டும் போது மட்டும் ஏன் மிக உயர அலைகளாக மாறுகின்றன என்பது புதிராக இருக்கலாம். இது எப்படி என்பதை அறிய நீங்களே சிறு சோதனையை செய்து பார்க்கலாம். திருமண அழைப்பிதழ் போன்ற சற்றே கெட்டியான அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மேஜை மீது வையுங்கள். அட்டையின் இடது ஓரத்தை இடது கை விரல்களால் அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அட்டையின் வலது ஓரத்தை லேசாக அழுத்தியபடி இடது புறம் நோக்கி நகர்த்துங்கள். அட்டையானது புடைத்துக் கொண்டு மேலே எழும்பும்.

சுனாமி அலை கரையை அடைந்த பிறகு மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றது. அவ்வித நிலையில் கரைக்கு வந்து சேரும் அலையானது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் அட்டை புடைத்து எழும்பியது போல மிக உயரத்துக்கு எழும்புகிறது. சுனாமி அலைகள் கடும் வேகத்தில் தாக்குவதற்கும் காரணம் உள்ளது.

 கடலடி பூகம்பம் நிகழ்ந்த இடத்துக்கு மேலே தோன்றும் அலை நாலா புறங்களிலும்  பரவும் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு சுமார் 800 கிலோ மீட்டர் அளவில் இருப்பதால் கரையை வந்தடையும் போது கடும் வேகத்தில் தாக்குகிறது. கிட்டத்தட்ட் வந்த வேகத்தில் கடலை நோக்கித் திரும்பிச் செல்வதால் அனைத்தும் அடித்துச் செல்கிறது.

பொதுவில் கடலடி பூகம்பத்தின் கடுமை ரிக்டர் அளவில் 6.75 க்கு மேல் இருந்தால் சுனாமி அலைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.   கடல்டி பூகம்பம் ரிக்டர் கணக்கில் 9 ஆக இருக்கும் என்றால் அது மிகக் கடுமையானதே

ஆகவே கடுமையான கடலடி பூகம்பங்கள் கடுமையான சுனாமியைத் தோற்றுவிக்கின்றன என்று கருதப்படுகிறது. ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிறு அளவிலான கடலடி பூகம்பங்களும் கடும் சுனாமியை உண்டாக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் விளக்கமாகச் சொல்வதானால் வேறு ஓர் அம்சம் ஒரு சுனாமியை கடுமையாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில்லு உள்ளே புதைவதையும் கடலடி பூகம்பத்தால்
 கடல் நீரின் மட்டம் உயருவதையும் இப் படம் விளக்குகிறது.
பூமியின் மேற்புறமானது பல சில்லுகளால் (Plates) ஆனது. உதாரணமாக இந்தியாவும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. வட அமெரிகக் கண்டமும் மற்றும் அட்லாண்டிக் கடலின் ஒரு பகுதியும் வட அமெரிக்கச் சில்லு மீது அமைந்துள்ளது. இப்படியான சில்லுகள் ஆண்டுக்கு சில செண்டி மீட்டர் வீதம் நகர்ந்து கொண்டிருக்கின்றன. பல பெரிய சில்லுகள் உள்ள அதே நேரத்தில் சிறிய சில்லுகளும் உள்ளன ஜப்பானுக்கு கிழக்கே பல சிறிய சில்லுகள் உள்ளன்.

சில்லுகள்  நகரும் போது ஒன்றிலிருந்து மற்றொன்று விலகலாம். ஒன்றோடு ஒன்று உரசலாம். ஒன்றுக்கு அடியில் இன்னொரு சில்லு புதையுண்டு போகலாம். இப்படி புதையுண்டு போவது பெரும்பாலும் கடல்களுக்கு அடியில் நிகழ்கிறது.( காண்க சில்லுகள் போர்த்திய பூமி )
ஜப்பானுக்குக் கிழக்கே கடலடியில் அமைந்துள்ள சில்லுகள் 
ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியில்  இப்படி ஒரு சில்லு இன்னொன்றுக்கு அடியில் புதையுண்டு வருகிறது. அந்த இடத்தில் 2011 மார்ச் மாதம்  கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தோன்றின.

இந்த பூகம்பத்துக்குப் பின்னர் ஜப்பானிய ஆழ்மூழ்குக் கலம் ஒன்று கடலுக்குள் மிக ஆழத்துக்கு இறங்கி மேற்படி கடலடி பூகம்பம் நடந்த இடத்தை விரிவாக ஆராய்ந்து படங்களையும் எடுத்தது. இந்த ஆய்வில் சில விஷயங்கள் தெரிய வந்தன.
 கடலில் மிக ஆழத்துக்கு இறங்கும்
 ஜப்பானின் ஆழ்மூழ்கு கலம்
இந்த ஆராய்வுகளின் போது கிடைத்த தகவல்களை வைத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டான் மெக்கன்சி, ஜேம்ஸ் ஜாக்சன் ஆகிய நிபுணர்கள் புதுக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இது Earth and Planetary Science Letters  இதழில் வெளியாகியுள்ளது.

பொதுவில் இரு சில்லுகள் உரசிச் செல்லும் போது அல்லது புதையுண்டு போகும் போது விளிம்புப் பாறைகள் உடையும். தவிர கடலடி வண்டல்களும் இருக்கும். இவை சில்லுகள் சந்திக்கின்ற இடங்களில் இரு சில்லுகளுக்கு இடையே  ஆப்பு மாதிரி பெரும் குவியலாகச் சேர்ந்திருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Accretionary  Wedge என்று கூறுவர்.இதை ஆப்பு வடிவ சேர்மானம் என்று கூறலாம்.  இது ஏற்கனவே அறியப்பட்ட விஷயம்.
இரு சில்லுகளுக்கு இடையே ஆப்பு வடிவ சேர்மானம் எவ்விதம் அமைந்திருக்கும் என்பதை விளக்கும் படம்
கடலடி பூகம்பம் ஏற்படும் போது அந்த பயங்கர அதிர்ச்சியில் இந்தப் பாறைகளும் வண்டலும் மேலே மிக வேகத்தில் தூக்கி எறியப்பட்டு அதன் விளைவாகத் தான் அங்கு ஏற்பட்ட சுனாமி அலைகள் பயங்கரமான அளவுக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது ஆப்பு செருகப்பட்ட ஓரிடத்தில் ஒரு புறத்திலிருந்து ஓங்கி அடித்தால் அந்த ஆப்பு பயங்கர வேகத்தில் பிய்த்துக் கொண்டு கிளம்பும். அது மாதிரி கடலடி பூகம்பத்தின் போது நிகழ்ந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி:  ஒரு காட்சி 
இந்த இரு நிபுணர்களும் 1992 நிகராகுவா சுனாமி, 2004 ஆம் ஆண்டு சுமத்ரா சுனாமி ( தமிழகத்தை தாக்கிய சுனாமி), 2006 ஆண்டு ஜாவா சுனாமி உட்ப்ட கடந்த காலத்தில் நிகழ்ந்த சுனாமி பற்றிய தகவல்களை ஆராய்ந்தனர். இந்த சுனாமிகளுக்குக் காரணமான கடலடி பூகம்பங்கள் ஏற்பட்ட இடங்களில் இதே போன்ற நிலைமைகள் இருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போது கடலடி பூகம்பம் ஏற்பட்டால் உடனே சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது. பல சமயங்களிலும் கடல் ஓரத்தில் வாழும் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். எச்சரிக்கை விடப்படுகின்ற எல்லா சமயங்களிலும் சுனாமி எதுவும் தோன்றுவதில்லை.  எனவே அடுத்த தடவை இப்படி சுனாமி எச்சரிக்கை விடப்படும் போது மக்கள் அதைப் புறக்கணிக்க முற்படுகின்றனர்.

பசிபிக் கடலைச் சுற்றியுள்ள  பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் வீணான எச்சரிக்கைகள் விகிதம் அதிகமாக உள்ளது.  கடலடியில் சில்லுகள் சந்திப்புகளில் ஆப்பு வடிவ  சேர்மானங்கள்  இருப்பதற்கும் சுனாமி தோன்றுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளதால் சிறு கடலடி பூகம்பங்களும் சுனாமியை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிற நிலைமை உள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஒரு சமயம்  உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிக்கச் செய்யாத அளவுக்கு லேசான கடலடி  பூகமபம் ஏற்பட்டது. ஆனால்அந்த சிறு  கடலடி பூகம்பத்தின் விளைவாகப்  பேரிரைச்சலுடன் சுனாமி தாக்கியது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆகவே சுனாமி ஆபத்து உள்ள இடங்களில் சில்லுகள் சந்திப்பில இவ்விதம் ஆப்பு வடிவ சேர்மானங்கள் உள்ளனவா என்று ஆழ்மூழ்கு கலங்களைக் கொண்டு கண்டுபிடித்தால் சுனாமி  பற்றி சரியாக கணிக்க இயலும் என்பது அவர்களது கருத்தாகும். இது சுனாமி எச்சரிக்கைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். என்றும் சுனாமி எச்சரிக்கையை மக்கள் அலட்சியப்படுத்தி உயிரிழக்கின்ற நிலைமைகள் தவிர்க்கப்படும் என்றும் அந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.



Aug 23, 2012

ஒரு கிரகத்தை விழுங்கிய நட்சத்திரம்: பூமிக்கும் அதே கதி?

Share Subscribe
ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த கிரகத்தை விழுங்கி விட்டதாக விஞ்ஞானிகள் இப்போது  கண்டுபிடித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் கூறியுள்ளனர்.எங்கோ நடந்த சமாச்சாரம் என இதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனெனில்  பூமியை சூரியன் இப்படித்தான் விழுங்கப் போகிறது,  இப்போதல்ல, 500 கோடி ஆண்டுகள் கழித்து. நட்சத்திரம் என்ன, சிங்கமா, முதலையா ஒரு கிரகத்தை விழுங்குவதற்கு?

நட்சத்திரங்களின் வரலாறு பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டும்..  நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளம் பருவம், முதுமை என எல்லாம் உண்டு. சில வகை நட்சத்திரங்கள் வயதாகி விட்ட  நிலையில் வடிவில் பூதாகாரமாகப் பெருக்க ஆரம்பிக்கும், அப்படிப் பெருக்கும் போது அது சிவந்த நிறத்தைப் பெறும். அக்கட்டத்தில் அந்த நட்சத்திரத்துக்கு செம்பூதம  (Red Giant ) என்று பெயர்.( செம்பூத நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். )

செம்பூத நட்சத்திரம் வடிவில் பெருக்கும் போது தனக்கு அருகே உள்ள கிரகங்களை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பிக்கும். இது ஒரு பெரு நகரம் மேலும் மேலும் விரிவடையும் போது அதன் அருகில் உள்ள கிராமங்களை விழுங்குவதைப் போன்றதே.

சூரியனை எடுத்துக் கொண்டால் அது ஒரு நட்சத்திரமே. அதுவும் மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள கிரகங்களை விழுங்க ஆரம்பிக்கும்.
படத்தில்  இடது புறம் உள்ள்து திருவாதிரை ( Betelgeuse)  நட்சத்திரம்..வலது புறம் கேட்டை (Antares). நட்சத்திரம். கீழே அம்புக் குறிக்கு எதிரே உள்ள சிறிய புள்ளி சூரியன்.
சூரியன் முதலில் புதன்(Mercury)கிரகத்தை விழுங்கும்.. அடுத்து வெள்ளி (Venus) காலி.. பின்னர் பூமியும் கபளீகரம். பூமியானது சூரியனிலிருந்து 15 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. சூரியன் வடிவில் எந்த அளவுக்கு பூதாகார வடிவத்தைப் பெறும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

வானவியல் நிபுணர்கள் செம்பூத நட்சத்திரங்கள் பற்றிக் கூறி வந்துள்ளதெல்லாம் இதுவரை வெறும் ஏட்டளவில் தான் இருந்து வந்துள்ளது. இப்போதோ நிஜமாகவே ஒரு நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நட்சத்திரத்துக்கு  BD + 48 740 என்று பெயர்.  ( நட்சத்திரங்களுக்கு எண்களைப் பெயர்களாக வைப்பது உண்டு)  இந்த நட்சத்திரம்  பெர்சியஸ் ராசி மண்டலத்தில் உள்ளது. இது ரிஷப ராசிக்கு அருகில் உள்ளதாகும்.

மேற்படி நட்சத்திரம் தனக்கு அருகே உள்ள கிரகத்தை விழுங்கியது என்பதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? கொலைக் கேஸ்களில் சந்தர்ப்ப சாட்சியம் என உண்டு. அது மாதிரியில் தான் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு நட்சத்திரத்தில் என்னென்ன அடங்கியுள்ளது என்ப்தை அதன் ஒளியை வைத்து கண்டுபிடித்து விட முடியும். அப்படித்தான் கண்டுபிடித்துள்ளார்கள்.

முதல் சாட்சி: பொதுவில் வயதான நட்சத்திரங்களில் லிதியம் என்ற மூலகம்-- ஓர் உலோகம்-- இருப்பது கிடையாது. ஆனால் அந்த ‘ கொலைகார’ நட்சத்திரத்தின் ‘வயிற்றில்’ மிக நிறைய லிதியம் காணப்படுகிறது. அந்த நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியிருந்தால் மட்டுமே அவ்வளவு லிதியம் இருக்க முடியும்.

இரண்டாவது சாட்சி: அந்த நட்சத்திரத்தை சுற்றி வந்த மற்றொரு கிரகம் இப்போது தாறுமாறான சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தை கிரகங்கள் சுற்றுகின்றன என்றால் அவற்றின் இடையே பரஸ்பர ஈர்ப்பு இருக்கும். அவை ஒன்றை ஒன்று இழுத்துப் பிடித்துக் கொண்டு நிறபதாகவும் கூறலாம். அருகே உள்ள  கிரகத்தை  நட்சத்திரம் விழுங்கி விட்ட  பிறகு  இரண்டாவது கிரகம் நிலை குலைந்து விட்டதாகவும் ஆகவே  அது தாறுமாறான பாதையில் சுற்ற ஆரம்பித்தது  என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இவை எல்லாம் The Astrophysical Journal Letters என்னும் இதழில் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.இக்குழுவின் தலைவரும் அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியருமான அலெக்ஸ் வோல்ஸ்கான் இது பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.இந்த  நிபுணர்கள் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு டெலஸ்கோப்பை தங்களது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினர்.

சூரியன் செம்பூத நட்சத்திரம் என்ற கட்டத்தை எட்டும் போது பூமியானது ஒரு வேளை தனது பாதையை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே சில நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். அவர்கள் கூறுவது சரியாக இருக்கலாம் .ஏனெனில் முதல் கிரகம் விழுங்கப்பட்ட பின்னர் இரண்டாவது கிரகம் தனது இடத்தில் இல்லாமல் வேறு பாதையில்  தாறுமாறான சுற்ற ஆரம்பித்துள்ள்து.  அது போல பூமியும் சூரியனிடமிருந்து தப்பி வேறு பாதையில் சுற்ற ஆரம்பிக்கலாம்.

இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக  மனிதன்  செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. அந்த வகையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இப்போது பணத்தை செலவிடுவதில் தப்பு இல்லை என்றே கூறலாம்.

சரி, வானில்  செம்பூத நட்சத்திரங்கள் உள்ளனவா? அவற்றை நம்மால் காண முடியுமா? திருவாதிரை(Betelgeuse) நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரமே. குறுக்களவில் அது சூரியனை விட 700 மடங்கு பெரியது.   ஏப்ரல் மாதத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் திருவாதிரை நட்சத்திரத்தைக் காணலாம். பெயருக்கு ஏற்ற்படி அது சிவந்த நிறத்தில் காணப்படும்.கேட்டை (Antares) நட்சத்திரமும் ஒரு செம்பூத நட்சத்திரமே.  அதுவும் சிவந்த நிறத்தில் காணப்படும்.


Aug 20, 2012

” இருக்கும்.. .. ஆனா... இருக்காது”

Share Subscribe
”இருக்கும்.... ஆனா.. இருக்காது”. இது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் நான் கேட்ட வசனம். இந்த இரண்டில் ஒன்று தான் சாத்தியம. சட்டிக்குள் சோறு இருக்கிறது என்றால் இல்லை என்ற் பேச்சுக்கு இடமில்லை. டப்பாவில் சர்க்கரை இருக்கிறது என்றால் அதே மூச்சில் இல்லை என்று சொல்ல முடியாது.' இருக்காது. ஆனா... இருக்கும்” என்று மாற்றிச் சொன்னாலும் அதுவும் அர்த்தமற்றதே.

ஆனால் அணுசக்தி உலகில் ’ இருக்காது . ஆனா... இருக்கும்’  என்று சொல்ல முடியும். கதிரியக்கத் தன்மை கொண்ட மூலகங்கள் விஷய்த்தில் இப்படியான நிலைமை உள்ளது.

தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற மூலகங்கள் (Elements) சாகா வரம் பெற்றவை. அவற்றின் அணுக்களுக்கு அழிவே கிடையாது. ஆனால் ரேடியம், யுரேனியம், தோரியம்  போன்ற மூலகங்கள் -- உலோகங்கள் என்றும் சொல்லலாம் --. அழிந்து கொண்டே இருப்ப்வை. இவை கதிரியக்க (radioactive) மூலகங்கள். இவற்றின் அணுக்கள் ஆற்றலை வெளிப்படுத்தி விட்டு அடுத்தடுத்து  வேறு மூலகமாக மாறிக் கொண்டே இருக்கும்.

மேடம் கியூரி கண்டுபிடித்த ரேடியம் பற்றி அனேகமாக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ரேடியக் கட்டி ஒன்றை இரும்புப் பெட்டிக்குள் பத்திரமாக வைத்து விட்டு சுமார் 1600 வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதில் பாதி தான் ரேடியமாக இருக்கும். மீதிப் பாதி ரேடான் வாயுவாகவும் வேறு உலோகங்களாகவும்  மாறி விட்டிருக்கும்.இரும்புப் பெட்டியை மூடி விட்டு  மேலும் 1600 வருடங்கள் கழித்துப் பார்த்தால் மீதியில் பாதிதான் ரேடியமாக இருக்கும். மேலும் 1600 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அதேமாதிரி தான். (உண்மையில் இரும்புப் பெட்டியில் அவ்வளவு காலம் ரேடியத்தை வைத்திருந்தால் இரும்புப் பெட்டியே இருக்காது. ரேடியத்தின் கதிர்வீச்சு காரணமாக இரும்புப் பெட்டி அழிந்து விடும்.)

ஒரு கட்டத்தில் ஒரு கட்டியில்  20 கோடி ரேடியம் அணுக்கள் மிஞ்சுவதாக வைத்துக் கொள்வோம். அதில் பாதி அழிவதற்கு 1600 ஆண்டுகள். பின்னர் மீதிப் பாதி அழிய அதே போல மேலும் 1600 ஆண்டுகள். இது இப்படியே போய்க் கொண்டிருக்கும். இதை அரை ஆயுள் கணக்கு என்பார்கள். அதாவது ரேடியத்தின் அரை ஆயுள் ( Half-life) 1600 ஆண்டுகள்.( இது ரேடியம்- 226 எனப்படும் ரேடிய ஐசடொப்பின் (Isotope) அரை ஆயுள் கணக்கு.) அந்த ரேடியக் கட்டி முற்றிலுமாக அழிந்து தீர்ந்து விடுமா?

இது விஷயத்தில் ஓரு உதாரணம் அளிப்பது உண்டு. சென்னையிலிருந்து சுமார் 300 கிலோ  மீட்ட்ர் தொலைவில் உள்ள திருச்சியை நோக்கி  ஒரு ரயில் வண்டி கிள்ம்புகிறது. அது முதல் அரை ம்ணி நேரம் 100 கிலோ மீட்டர் வேகத்தில்  செல்கிறது. அடுத்த அரை மணி நேரத்தில் வேகம் பாதியாக அதாவது  50 கிலோ மீட்டராகக்  குறைகிறது. பிறகு அடுத்த அரை மணி நேரத்தில் வேகம் மேலும் பாதியாக ( 25 கி.மீ.) குறைகிறது. அதற்கு அடுத்த அரை மணியில் வேகம் மறுபடி பாதியாகக் குறைகிறது. இப்படியே தொடர்கிறது. அந்த ரயில் வண்டி திருச்சிக்குப் போய்ச் சேருமா அல்லது சேராதா?  ரயில் வண்டி போய்க் கொண்டே இருக்கும். ஆனால் போய்ச் சேரவே சேராது.

பல கதிரியக்க ஐசடொப்புகளின் கதை இப்படியாகத் தான் இருக்கிறது. யுரேனியம் - 238 ஐசடொப்பின் அரை ஆயுள் 446 கோடி ஆண்டுகள். யுரேனியம்-235 ஐசடொப்பின் அரை ஆயுள்  70 கோடி ஆண்டுகள். இவை இரண்டுமே இயற்கையில் கிடைப்பவை. இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க உலோகங்கள் பல உள்ளன,

ஆனால் ஆராய்ச்சி அணு உலைகளில் அல்பாயுசு கொண்ட பல கதிரியக்க ஐசடொப்புகள் செயற்கையாக உண்டாக்கப்படுகின்றன. அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படும் எரிபொருள் தண்டுகளிலிருந்தும் க்திரியக்க ஐசடொப்புகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை நோயறிவுக்காக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியான செயற்கை கதிரியக்க ஐசடொப்புகளில் ஒன்று டெக்னீஷியம்-99 m. இதன் அரை ஆயுள் 6 மணி நேரமே. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான அரை ஆயுளைக் கொண்ட செயற்கை க்திரியக்க ஐசடோப்புகள் பல உள்ளன.

 மறுபடி ரேடியத்துக்கு வருவோம். அது ஆற்றலை வெளிப்படுத்தி ஓயாது அழிந்து கொண்டிருக்கிற்து. அப்படிப் பார்த்தால் அது முற்றிலுமாக அழிந்து  ரேடியமே இருக்கக்கூடாது. ஆனால் அப்படி ஏற்படுவதில்லை. ’அழியும். ஆனா...அழியாது’. இது இருக்கும். ஆனா.. இருக்காது என்பதைப் போன்றதே.

ஐசடொப் விளக்கம் : யுரேனியத்தை எடுத்துக் கொண்டால் உலகில் யுரேனியம் அணுக்கள் அனைத்திலும் சொல்லி வைத்தாற் போல 92 புரோட்டான்கள் இருக்கும். ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை வித்தியாசப்படலாம். யுரேனிய அணு ஒன்றில் 146 நியூட்ரான்கள் இருந்தால் (புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்)  அது யுரேனியம்- 238. நியூட்ரான்கள்  143  ஆக இருந்தால் அது யுரேனியம்- 235.ஆனால் 142 நியூட்ரான்கள்  இருந்தால் அது யுரேனியம்- 234. இந்த மூன்றும் யுரேனியத்தின் ஐசடொப்புகள். அதாவது இந்த மூன்றும் தாயாதிகள். பெரும்பாலான மூலகங்கள் இப்படி  தாயாதிகளைக் கொண்டவை. தாயாதிகள் இல்லாத மூலகங்களும் உண்டு. தங்கம் அவற்றில் ஒன்று.

Aug 18, 2012

அணுசக்தியால் இயங்கும் பாட்டரி

Share Subscribe
சந்திரனில் இறங்கி ஆராய்ச்சி நடத்துவதற்காக அடுத்த ஆண்டில் ஆளில்லாத ஆய்வுக் கலம் ஒன்றை அனுப்ப இருப்பதாகவும் அதில் அணுசக்தியால் இயங்கும் பாட்டரி இடம் பெற்றிருக்கும் என்றும் சீனா இப்போது அறிவித்துள்ளது. இச்செய்தியில் அடங்கிய முக்கிய அம்சம் அணுசக்தி பாட்டரி பற்றியதாகும்.

உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு நாடுகள் மட்டுமே விண்கலங்களில் அணுசக்தி பாட்டரிகளைப்   பயன்படுத்தி  வந்துள்ளன. இப்போது சீனாவும் இந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவும் அணுசக்தி பாட்டரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
அணுசக்தி பாட்டரி
சாதாரண பாட்டரிகள் பற்றி நமக்குத் தெரியும்.பாட்டரிகள் மின்சாரத்தை அளிப்பவை. பாட்டரிகளில் பல வகை உண்டு. சில வகை பாட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்ளலாம். செல் போன் வைத்திருப்பவர்கள் இதை நன்கு அறிவர்.

அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய பிரச்சினை இன்றி பல ஆண்டுக்காலம் உழைக்கக்கூடிய சாதாரண  பாட்டரியை உருவாக்குவது தொடர்பாக உலகில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதுவரை முழு  வெற்றி கிட்டவில்லை.

அணுசக்தி பாட்டரிகள் தனி ரகம். 80 ஆண்டுக்காலம் உழைக்கின்ற அணுசக்தி பாட்டரியும் உண்டு. இவ்வித பாட்டரிகளிலிருந்து தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால். இவை மிக ஆபத்தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்துபவை. ஆகவே இவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த இயலாது.
பூமியைச் சுற்றும் செயற்கைக்கோளின் இரு புறங்களிலும் சூரிய மின் பலகைகள் 
ஆனால் மனித நடமாட்டம் இல்லாத இடங்களிலும், விண்வெளியில் மிகத் தொலைவு செல்கின்ற விண்கலங்களிலும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் பயன்படுத்தலாம். வேறு விதமாகச் சொன்னால் சூரிய மின் பலகைகளைப் பயனபடுத்த முடியாத இடங்களில் அணுசக்தி பாட்டரிகளைப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.

பூமியைச் சுற்றுகின்ற எண்ணற்ற செயற்கைக்கோள்கள் அனைத்திலும் சூரிய   மின் பலகைகள் உண்டு.இவை சூரிய ஒளியை மின்சாரமாக மர்ற்றித் த்ருகின்றன. இவற்றுக்கு எப்போதும் சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் சூரிய மின் பலகைகள் உகந்தவையாக உள்ளன.
  அப்போலோ 14  மூலம் சந்திரனுக்குச் சென்ற விண்வெளி வீரர் RTG ஒன்றை வைக்கின்றார்
சந்திரனிலும் வெயிலுக்குப் பஞ்சமில்லை தான். ஆனால் சந்திரனில் எந்த ஓரு இடத்திலும் பகல் 14 நாட்களாகவும் இரவு 14 நாட்களாகவும் இருக்கும். இக் காரணத்தால் தான் 1969 லிருந்து 1972 வரை 6 தடவை சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு வைத்துவிட்டு வந்த கருவிகள் அணுசக்தி பாட்டரிகளைக் கொண்டவையாக இருந்தன.

சந்திரனில் இறங்கும் சீன ஆய்வுக் கலம் பகல் 14 நாட்களில் சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தைப் பெறும். இரவு 14 நாட்களில் அணுசக்தி பாட்டரிகள் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து மேலும் அதிகத் தொலைவில் உள்ளது. ஆகவே அங்கு சூரிய மின் பலகைகள் மூலம் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.

 செவ்வாய்க்கு அப்பால் சென்றால் சூரியன் பட்டாணி சைஸில் தான் தெரியும். அவ்வளவு தொலைவில் சூரிய மின் பலகைகளால் பயன் இல்லை.ஆகவே விண்கலங்களில் உள்ள கருவிகளுக்கு மின்சாரத்தை அளிப்பதற்கு அணுசக்தி பாட்டரிகள் அவசியம் தேவை.

பொதுவில் அணுசக்தி பாட்டரிகள் புளூட்டோனியம் -238 என்னும் அணுசக்திப் பொருளால் செயல்படுபவையாக இருக்கும். இது கதிரியக்கத் தன்மை  கொண்டது. அணுச்சிதைவு காரணமாக   இப்பொருள் எப்போதும் வெப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அணுசக்தி பாட்டரியில் இந்த வெப்பம் மின்சாரமாக மாற்றபபடுகிறது.
எப்போதும் வெப்பத்தை வெளிப்படுத்துவதால்
 தக தக என்று ஜொலிக்கும் புளூட்டோனியம்-238 வில்லை 
இவை அணுசக்திப் பாட்டரிகள் என்று வருணிக்கப்பட்டாலும் உண்மையில் இவை மின்சார ஜெனரேட்டர்களே.ஆங்கிலத்தில் இவை Radioisotope Thermoelectric Generator  என்று (சுருக்கமாக RTG) குறிப்பிடப்படுகின்ற்ன.

செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களை ஆராய்வதற்காக கடந்த காலத்தில் செலுத்தப்பட்ட  விண்கலங்கள் அனைத்திலும் RTG இடம் பெற்றிருந்தன .முன்னர் 1976 ஆம் ஆண்டில் செவ்வாயில் இறங்கி மண்ணை ஆராய்ந்த வைகிங் - 1 வைகிங்-2 ஆய்வுக் கலங்களில் RTG க்கள் இடம் பெற்றிருந்தன

இப்போது செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கியுள்ள கியூரியாசிடி ஆய்வுக் கலத்திலும் RTG வைக்கப்பட்டுள்ளது. அதில் 3.6 கிலோ அளவுக்கு புளூட்டோனியம்-238 வைக்கப்பட்டுள்ளது.இது பல ஆண்டுகளுக்கு மின்சாரத்தை அளித்து வரும்.
காசினி விண்கலத்தில் வைக்கப்பட  இருக்கிற RTG ஒன்றை விஞ்ஞானி சோதிக்கிறார்.
வியாழனை ஆராய 1989 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட கலிலியோ விண்கலத்தில் இரண்டு அணுசக்தி பாட்டரிகள் (7.8 கிலோ புளூட்டோனியம்-238) இடம் பெற்றிருந்தன. 1997 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட் காசினி விண்கலத்தில் மூன்று அணுசக்தி பாட்டரிகள் ( 33 கிலோ புளூட்டோனியம்-238) இடம் பெற்றிருந்தன.

புளூட்டோ கிரகத்தை நெருங்கி ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள் நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் RTG வைக்கப்பட்டுள்ளது. இதில் 11 கிலோ புளூட்டோனியம் -238 வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அணுசக்தி பாட்டரி உற்பத்தியை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன. சில காலம் அமெரிக்கா இந்த் பாட்டரிகளை ரஷியாவிடமிருந்து பெற்று வந்தது. மறுபடி இவ்வகை பாட்டரிகளின் உற்பத்தியை  மேற்கொள்ள வேண்டும் என நாஸா அமைப்பின் நிபுணர்கள் அமெரிக்க அரசை வற்புறுத்தி வருகின்றனர்.ஏனெனில் இந்த வகை பாட்டரிகள் இல்லாமல் தொலைவில் உள்ள கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பிப் பயன் இல்லை.

பொதுவில் அமெரிக்காவில் ராக்கெட் மூலம் ஒரு விண்கலம் செலுத்தப்படுகையில் விண்வெளிக் கேந்திரம் அருகே பல ஆயிரம் பேர் கூடி வேடிக்கை பார்ப்பதுடன் விண்கலத்தைச் சுமந்த ராக்கெட் உயரே சென்றதும் உற்சாகத்துடன் கைதட்டி மெச்சுதலைத் தெரிவிப்பர்.

ஆனால் காசினி செலுத்தப்பட்ட போது பல நூறு பேர் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காசினியில் 33 கிலோ புளூட்டோனியம் 238 வைக்கப்பட்டதை எதிர்த்தே அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டு அது கீழே விழுந்தால் அதில் அடங்கிய அணுசக்திப் பொருளால் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கருதியே அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆனால் ஒன்று. அணுசக்தி பாட்ட்ரிகள் (RTG)  இல்லாவிடில் நம்மால் செவ்வாய் கிரகத்தைப் பற்றி அல்லது அதற்கு அப்பால் உள்ள வியாழன், சனி யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்களைப் பற்றி எதையும் அறிந்து கொண்டிருக்க முடியாது.
வாயேஜர் 1 விண்கலம்
அணுசக்தி பாட்டரிகளிலும் சரி, காலப்போக்கில் திறன் குறைய ஆரம்பிக்கும்.புளூட்டோனியம் -238 அணுக்கள் வேறு வகை அணுக்களாக மாறிக் கொண்டிருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

1977 ஆம் ஆண்டில் அணுசக்தி பாட்டரிகளுடன்  செலுத்தப்பட்ட வாயேஜர்1 விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை ஆராய்ந்து விட்டு இப்போது சூரிய மண்டல எல்லையில் அதாவது சுமார் 1800 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது மேலும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அதில் வைக்கப்பட்ட  அணுசக்தி பாட்டரிகளின் செயல் திறன் குறைந்து  வாயேஜரின் ‘குரல்’ மங்கி விட்டது. ஆனாலும் அது இன்னமும் பலவீனமான சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

கொசுறு தகவல்: புளூட்டோனியம்-238 அணுவுக்கு புளூட்டோனியம் 239 என்ற பெயரில்  தம்பி (அல்லது அண்ணன்) உண்டு. புளூட்டோனியம் அணுக்கள் அனைத்திலும் சொல்லி வைத்தாற் போல 94 புரோட்டான்கள் இருக்கும். புளூட்டோனியம்- 238 அணுவில் 94 புரோட்டான்களும் அத்துடன் 144 நியூட்ரான்களும் இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் புளூட்டோனியம்-239 அணுவில் 94 புரோட்டான்களுடன்  145 நியூட்ரான்கள் ( கூடுதலாக ஒரு நியூட்ரான்)  இருக்கும். புளூட்டோனியம்-239 அணுக்களை மட்டும் கஷ்டப்பட்டு தனியே பிரித்து கிர்னி பழ சைஸுக்கு ஒரு உருண்டையாக ஆக்கினால் ........ டமார்...... பல லட்சம் பேர் காலி.  அது தான் அணுகுண்டு)


Aug 15, 2012

ஆகாயத்தில் தெரிந்த அதிசய மேகம்

Share Subscribe
வானை நோக்கினால் மேகங்கள் தென்படுகின்றன. இவற்றில் பல வகைகள் உண்டு என்று சொல்லத் தேவையில்லை. பார்த்தாலே தெரிகிறது. சில வகை மேகங்கள் மிக உயரத்தில் உள்ளன அந்த வகை மேகங்களை நம்மால் அடையாளம் காண முடியும். இதற்கெல்லாம் நிபுணத்துவம் தேவையில்லை.

வானில் சுமார் 12 கிலோ மீட்டர் ( சுமார் 40,000 அடி) உயரம் சென்றுவிட்டால்  மேகங்கள் கிடையாது. அதற்கும் மேலே சென்றால் மேகங்கள் நமது  காலுக்கு அடியில் தெரிய ஆரம்பிக்கும். விமானத்தில் பயணம் செய்தவர்கள் இதை அறிவர். விமான ஜன்னல் வழியே பார்த்தால் கீழே பஞ்சு மூட்டைகளைக் கொட்டியது  போல ஒரே வெண்மையான மேகங்களாகத் தென்படும்.

மின்னல், மழைத் தொல்லை கிடையாது. தவிர, அவ்வளவு உய்ரத்தில் பறக்கும் போது எரிபொருள் செலவு குறைவு.  இப்படியான காரணங்களால் நாடுகள் இடையே, நகரங்கள் இடையே பறக்கின்ற விமானங்கள் பெரும்பாலும் சுமார் 11 கிலோ மீட்டர் உய்ரத்தில் பறக்கின்றன.
இரவு ஒளிர் மேகங்கள்.
ஆனால் 76 முதல் 85 கிலோ மீட்டர் உய்ரத்தில் அபூர்வமாக மேகங்கள் தோன்றுவது உண்டு. குறிப்பாக துருவப் பகுதிகளில் இந்த வகையான அபூர்வ மேகங்களைக் காணலாம். அண்மையில் வட துருவப் பகுதியில் இவ்வித மேகம் காட்சி அளித்தது. இந்த வகை மேகங்களுக்கு Noctilucent cloud என்று பெயர்.’ இரவு ஒளிர் மேகம்’ என்பது இதன் பொருள்.

பெயருக்கு ஏற்றபடி இந்த மேகங்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் அல்லது சூரிய உத்யத்துக்கு முன்னர் தான் தென்படும். சூரியன் அடிவானத்துக்குக் கீழே சுமார் 6 முதல்16 டிகிரியில் இருக்க வேண்டும் வானில் அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 120 டிகிரி அளவுக்கு இருக்கின்ற நிலையில் இந்த மேகங்கள் உருவாகின்றன. பொதுவில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கேயும் தெற்கேயும் 50 முதல் 60 டிகிரி வரையிலான அட்சரேகைகளில் அமைந்த இடங்களில் தான் இந்த மேகங்களைக் காண இயலும்.

இந்த வகை மேகங்களை வெப்ப நாடுகளில் காண முடியாது
இரவு ஒளிர் மேகங்கள்  நீல நிறத்தில் இருக்கும்.  மெல்லிய மேகங்களாகக் காணப்படும இவை மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகளால் ஆனவை.சூரிய ஒளி படுவதால் இவை ஒளிர்வது போலத் தோன்றுகிறது.

.பொதுவில்  மேகம்  உண்டாக மிக மிக நுண்ணிய தூசுகள் தேவை. இந்த தூசுகள் மீது நுண்ணிய நீர்த் துணுக்குகள் அல்லது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்கின்றன  பொதுவில் இத் தான் மேகம். மேகம் உருவாக உதவும் நுண்ணிய தூசு மற்றும் இதர துணுக்குகள்  அனைத்தும் பூமியின் மேற்பரப்பிலிருந்து மேலே சென்றவை தான்.
சூரிய ஒளி பட்டு இந்த மேகங்கள் ஒளிருகின்றன
ஆனால் இரவு ஒளிர் மேகங்கள் விண்வெளித் தூசு மூலம் தோன்றுபவை. பூமியை ஓயாது விண்கற்கள் தாக்கிய வண்ணம் உள்ளன.இவை காற்று மண்டலத்தில் நுழைந்ததும் சூடேறித் தீப்பற்றி பொடிப் பொடியாக உதிர்ந்து விடும். (இந்த விண்கற்கள் தீப்பற்றி ஒளிக் கீற்றாகக் கீழே இறங்குவதைத் தான் பலரும் ‘” நட்சத்திரம் விழுகிறது” என்று தவறாக வருணிக்கிறார்கள்.)

விண்கற்களால் ஏற்படும் தூசு மீது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்வதன் மூலமே இரவு ஒளிர் மேகங்கள் உண்டாகின்றன.

Aug 14, 2012

வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்த் இந்திய மாண்வர்

Share Subscribe
தில்லியைச் சேர்ந்த 16 வயது மாணவர் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் SOHO 2333 என்பதாகும். பிரபுல் சர்மா என்னும் அந்த மாண்வர் தில்லியில் உள்ள ஒருபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பிரிட்டிஷ் வானவியல் அசோசியேஷன் பிரபுல் சர்மாவின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்திய்ள்ளதுடன், அவரது கண்டுபிடிப்பை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
சோஹோ செயற்கைக்கோள்
பொதுவில் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால் அமெரிக்க நாஸா அமைப்பும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் சேர்ந்து செலுத்திய செயற்கைக்கோள் எடுக்கும் படங்கள்  சூரியனுக்கு அருகாமையில் தென்படக்கூடிய வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கியுள்ளன.

இந்த இரு விண்வெளி அமைப்புகளும் சேர்ந்து 1995 ஆம் ஆண்டில் SOHO ( Solar Heliospheric Observatory) எனப்படும் செயற்கைக்கோளை வானில் செலுத்தின. இந்த செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கியது.இரு அமைப்புகளும் உருவாக்கிய 12 கருவிகள் இதில் இடம் பெற்றன. நாஸா இதை உயரே செலுத்தியது.

சோஹோ பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் அமைந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை 24 மணி நேரமும் ஆண்டில் 365 நாட்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருவதே இந்த செயற்கைக்கோளின் நோக்கம். அந்த வகையில் அது சூரியனைத் தொடர்ந்து படம் பிடித்து அனுப்பி வருகிறது. குறிப்பாக சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றங்கள், ஆற்றல் மிக்க துகள் கூட்டங்கள் ஆகியவை படம் பிடிக்கப்படுகின்றன.
சோஹோவில் உள்ள் ஒரு கருவியால் சூரிய ஒளித் தட்டு மறைக்கப்பட்டு ள்ளதைக் கவனிக்கவும்
சூரிய ஒளித் தட்டை மறைத்தால் தான் சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றங்களைப் படமாக்க முடியும்.அதாவது ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கின் அருகே அகல் விளக்கை வைத்தால் அகல் விளக்கு இருக்கிற இடமே தெரியாது.ஆனால் ஒரு பலகையால் பெட்ரோமாக்ஸ் விளக்கை மறைத்தால் அகல் விளக்கு இருப்பது தெரியும்.அது போல சூரியனை மறைத்தால் தான் சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற சீற்றம் தெரியும்.

தவிர, விண்வெளியிலிருந்து பார்த்தால் வானம் கரிய நிறத்தில் காணப்படும். சூரியன் மட்டுமன்றி நட்சத்திரங்களும் தெரியும். ஆகவே தான் சூரிய ஒளித் தட்டை மறைத்தால் வால் நட்சத்திரங்கள் நன்கு தென்படுகின்றன.

ஆகவே சோஹோ செயற்கைக்கோளில் சூரியனை மட்டும் மறைக்க வட்ட வடிவிலான கருவி உள்ளது.   சூரிய ஒளித் தட்டு மறைக்கப்படும் போது சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற அனைத்தையும் காண முடிகிறது. அதே நேரத்தில் சூரியனுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வால் நட்சத்திரங்களையும் சோஹோ எடுக்கும் படங்களில் காண முடிகிறது.
சோஹோ எடுத்த ஒரு ப்டத்தில் நீண்ட வால் நட்சத்திரம் 
சோஹோ தொடர்ந்து படங்களை அனுப்புகிறது. இவற்றை யார் வேண்டுமானாலும் பெற முடியும்.வானவியலில் ஆர்வம் கொண்ட  பிரபுல் சர்மா போன்ற மாணவர்களும், அமெச்சூர் வானவியல் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து இப்படங்களை ஆராய்ந்து சூரியனின் அருகே புதிதாக வால் நட்சத்திரங்கள் தெரிகின்றனவா என்று கவனிப்பார்கள்.
பல வால் நட்சத்திரங்களைக் காட்டும் சோஹோ படம் 
வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் இருந்து வருபவை. அவை நீள் வட்டப் பாதையைப் பின்பற்றி சூரியனை நோக்கிக் கிளம்பும். சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பி விடும். எண்ணற்ற வால நட்சத்திரங்கள் இவ்விதம் சூரியனைச் சுற்றிவிட்டுத் திரும்புகின்றன.

ஆகவே சோஹோ எடுக்கும் படங்களில் புதிது புதிதாக வால் நட்சத்திரங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். இவற்றில் ஏற்கெனவே அறியப்பட்டவை எவை புதிதாகத் தலை காட்டியுள்ள வால் நட்சத்திரங்கள் எவை என்று கண்டுபிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பிரபுல் சர்மா கண்டுபிடித்த சிறிய வால் நட்சத்திரம் மக்கோல்ட்ஸ் எனப்படும் ஒரு பெரிய வால் நட்சத்திரம் உடைந்த போது தோன்றிய துண்டு என்று கருதப்படுகிறது.

 சோஹோ  செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 2300 க்கும் மேற்பட்ட  வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது அல்ல.
சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றத்தைக் கவனிக்கவும்
சூரியனில் ஏற்படும் சீற்றம் போன்றவை பூமியைச் சுற்றுகின்ற எண்ணற்ற செயற்கைக்கோள்களைப் பாதிக்கலாம். பூமியில் பல்வேறு நாடுகளின் மின்சார இணைப்புத் தொகுப்பைப் பாதிக்கலாம். தகவல் தொட்ர்பு வசதிகளைப் பாதிக்கலாம். அந்த அளவில் சூரியனை ஆராய்வது தான் சோஹோவின் பிரதான நோக்கமாகும்.

சோஹோ படங்கள் மூலம் சூரியனுக்கு அருகே தென்படும் வால் நட்சத்திரங்களை மட்டுமே காண முடியும். சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற -- சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கின்ற  வால் நட்சத்திரங்கள் சோஹோவின் படங்களில் தெரியாது. அவ்வித வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க சக்தி மிக்க டெலஸ்கோப் தேவை..

Aug 13, 2012

பசிபிக் கடலில் தோன்றிய மிதக்கும் ‘தீவு’

Share Subscribe
கடலில் உள்ள தீவுகள் மிதந்து செல்வதில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பசிபிக் கடலில் கோடானு கோடி கற்கள் அடை போல மிக நெருக்கமாக மிதந்து செல்லக் காணப்பட்டன.வானிலிருந்து பார்த்தால் இவை மிதக்கும் தீவுகள் போன்று காட்சி அளித்தன.

தென்பசிபிக் கடலில் நியூலாந்துக்குக் கிழக்கே சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மிதக்கும் கற்கள் காணப்பட்டன. இவற்றின் பரப்பு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது. இது பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்புக்குச் சமம்.

கடலில் மிதக்கும் கற்களைக் கண்டதும் நியூசிலாந்து கடற்படைக் கப்பல் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. எனினும் இக்கற்களால் கப்பல்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது கடலில் தோன்றிய மிதக்கும் கற்களை
 வானிலிருந்து எடுத்த படம்
நீரில் ஒரு கல்லைப் போட்டால் குபுக் என்று நீருக்கும் மூழ்கி விடும். ஆனால் மிதக்கும் கற்கள் உண்டு. இவை Pumice Stonces  என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நுரைக் கற்கள் என்று கூறலாம். இவை எரிமலையினால் தோற்றுவிக்கப்படுபவை .காற்றுக் குமிழ்கள் நிறைய அடங்கிய நெருப்புக் குழம்பு உருண்டைகள் வடிவில்  மிக வேகமாக உயரே தூக்கி எறியப்பட்டு நீரில் வந்து விழும் போது இந்த நுரைக் கற்கள் உண்டாகின்றன.
2006 ஆம் ஆண்டில் கடலில் மிதக்கும் கற்கள் காணப்பட்ட போது
பிரெடெரிக் என்ற ஆஸ்திரேலியர் எடுத்த படம்
நுரைக் கல் ஒன்றை அதே  பரிமாணமுள்ள சாதாரணக் கல்லுடன் ஒப்பிட்டால் நுரைக் கல்லின் அடர்த்தி குறைவு. நுரைக் கல் ஒன்றை உற்றுக் கவனித்தால் அதில் எண்ணற்ற சிறிய துளைகள் காணப்படும். நெருப்புக் குழம்பு உருண்டையாக இருந்த கட்டத்தில் இதனுள் காற்றுக் குமிழ்கள் இருந்தன என்பதை இவை காட்டுகின்றன அடர்த்தி குறைவு என்பதால் இவை நீரில் மிதக்கும்.
சற்றே பெரிய நுரைக் கல். இதில் நிறைய துளைகள் இருப்பதைக் கவனிக்கவும்
தென் பசிபிக் கடலுக்கு அடியே இருக்கக்கூடிய  எரிமலையின் சீற்றத்தின் விளைவாக இவை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது பசிபிக் கடலுக்கு  அடியில் எரிமலைகள் நிறையவே உள்ளன. நுரைக் கற்கள் எந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஒரு வேளை நியூசிலாந்துக்கு அருகே உள்ள மோனாவாய் என்ற எரிமலையிலிருந்து    வெளிப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடலுக்குள் அமைந்த மோனாவாய் எரிமலை
 மோனாவாய்  எரிமலையின் உச்சியானது  கடல் மட்டத்திலிருந்து சுமார் 130 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.கடந்த காலத்தில் இது விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது சில ஆண்டுகளுக்கு முன்னர் பசிபிக்கில் இவ்விதம் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளில் ஒன்று நிறைய நெருப்பைக் கக்கியபடி கடல் நீருக்கு மேலே தலையை நீட்டியது.வேறு விதமாகச் சொன்னால் நடுக்கடலில் புதிதாக ஒரு தீவு முளைத்தது.

மிதக்கும் நுரைக் கற்கள் கடலில் மிதந்தபடி  எங்காவது கரையில் ஒதுங்கும். சுமார் 129 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசிய எரிமலை ஒன்றினால் உண்டான நுரைக் கற்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் போய் ஒதுங்கின.

தீவு போல மிதக்கும் நுரைக் கற்கள் மூலம் ஒரு தீவிலிருந்து வேறு தீவுக்கு தாவரங்களும் விலங்குகளும் பரவியிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலில் மிதக்கும் நுரைக் கற்கள் 
நுரைக் கற்களுக்குப் பல உபயோகங்கள் உள்ளன.பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானியர்   இவற்றைப் பயன்படுத்தி கட்டடங்களைக் கட்டினர். இவற்றைப் பொடி செய்தும் பயன்படுத்துவது உண்டு. சிறு கட்டிகளாக உருக்கொடுத்து கடைகளில் விற்கின்றனர். குளிக்கும் போது குதிகால், உள்ளங்கால் ஆகியவற்றில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற  நுரைக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Aug 7, 2012

சந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு?

Share Subscribe
சந்திரனுக்கு 1969 முதல் 1972  வரை ஆறு தடவை சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு நட்டு வந்த அமெரிக்க தேசியக் கொடிகள் 40 ஆண்டுகள் ஆகியும் அப்படியே தான் இருக்கின்றன.

சந்திரனை இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் வானிலிருந்து எடுத்த படங்கள் இதைக் காட்டுகின்றன. நம்மூரில் பறக்கவிடப்படுகின்ற தேசியக் கொடியாகட்டும் அல்லது கட்சிக் கொடியாகட்டும் இப்படி 40 ஆண்டுகள் தாங்குமா என்பது சந்தேகமே.

அமெரிக்கா 2009 ஆம் ஆண்டில் LRO எனப்படும் (Lunar Reconnaissance Orbiter)     ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரனின் நிலப் பரப்பை விரிவாக அத்துடன் மேலும் துல்லியமாகப் படம் எடுப்பது இந்த விண்கலத்தின் நோக்கமாகும்.சந்திரனுக்கு மறுபடி அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதென்றால் அதற்கான உகந்த இடங்களைத் தேர்வு செய்வதும் இந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியதன் நோக்கமாகும்.
சந்திரனில் அமெரிக்கக் கொடியை நாட்டிய் பின்
கொடிக்கு வணக்கம் செலுத்தும் விண்வெளி வீரர் ஜான் யங்
இந்த விண்கலம்  சந்திரனில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நாட்டிய கொடிகளின் நிழல்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.  1969 ஜூலையில் அப்போலோ 11 விண்கலம் மூலம் சென்று முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங் மற்றும் ஆல்ட்ரின் நாட்டிய கொடியின் நிழல் மட்டும் காணப்படவில்லை.

இந்த இருவரும் சந்திரனில் பணியை முடித்துக் கொண்டு உயரே கிளம்புகையில் அவர்கள் அமர்ந்திருந்த விண்கலம் நெருப்பைப் பீச்சிட்ட போது அந்த வேகத்தில் கொடி சாய்ந்து விட்டது என்று அப்போதே ஆல்ட்ரின் கூறியிருந்தார். ஆகவே தான் அதன் நிழல் LRO எடுத்த படங்களில் காணப்படவில்லை.

அமெரிக்காவின் LRO விண்கலத்தில் இடம் பெற்றுள்ள கேமராவுக்குப் பொறுப்பான தலமை விஞ்ஞானி டாக்டர் மார்க் ராபின்சன் கூறுகையில் இந்த விண்கலம் எடுத்த படங்கள் அப்போலோ 11 விண்வெளி வீரர்கள் நாட்டிய கொடி நீங்கலாக மற்ற ஐந்து குழுவினரும் நாட்டிய கொடிகள் நிலையாக  நிற்கின்றன என்பதைக் காட்டுகின்றன என்றார்.

சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் எடுத்துச் சென்ற கொடிகளில் விசேஷ ஏற்பாடு பின்பற்றப்பட்டது. சந்திரனில் காற்று கிடையாது என்பதால் அது அசைந்தாடி ‘பட்டொளி’ வீச வழியில்லை. எனவே கொடியின் மேற்புறத்தில் நீள வாட்டில் ஒரு கம்பி பொருத்தப்ப்ட்டது. கொடியின் கீழ்ப்புறத்திலும் அதே போல கம்பி கொடுக்கப்பட்டது.கொடி தொங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு பின்பற்றப்பட்டது.
சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் LRO விண்கலம்
அமெரிக்க விண்வெளி வீரர்கள்.  நாட்டிய  கொடிகள் நைந்து போய் விட்டனவா சந்திரனில்  வீசும் கடும் வெயில் காரணமாக வெளிறிப் போய் விட்ட்னவா என்பது தெரியவில்லை.LRO  எடுத்த படங்களில் கொடிகளின் நிழல் சந்திரனின் தரையில் விழுவது நன்கு பதிவாகியிருக்கிறது. இதிலிருந்து கொடிகள் நட்டது நட்டபடி உள்ளன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி  சந்திரனில் காற்று கிடையாது. மழை கிடையாது. நுண்ணுயிர்களும் கிடையாது. பூமியிலோ ஒரு குப்பை மேட்டில் சாக்கு வீசி எறியப்பட்டால் சில மாதங்களில் அது நைந்து போய் விடும். நுண்ணுயிர்கள் அதை சிதைத்து  துண்டு துண்டாக்கி விடும். பின்னர் பார்த்தால் சாக்கு மண்ணோடு மணணாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

 பூமியுடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் சந்திரனைக் கடுமையாகத் தாக்குகின்றன. பூமியின் காற்று மண்டலம் சூரியனின் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் த்ரைக்கு வந்து சேராதபடி தடுத்து விடுகின்றன.

ஆகவே விண்வெளி வீரர்கள் நட்ட கொடிகள் எவ்விதம் புற ஊதாக் கதிர்களைத் தாங்கி நிற்கின்றன என்பதும் சந்திரனில் வீசும் கடும் வெயிலையும் தாங்கி நிற்கின்றன என்பது புதிராக உள்ளது என்று மார்க் ராபின்சன் கூறியுள்ளார்.

சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் அங்கு அமெரிக்க தேசியக் கொடியை நாட்டியதில் ஒரு சுவையான விஷயம் உள்ளது. இவர்கள் எடுத்துச் செல்வதற்காக நாஸா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு இக்கொடியை வடிவமைத்து தயார் செயதது. இதற்குப் பொறுப்பான  டாம் மோசரிடம் இந்த விஷயம் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டது.

காரணம் இது தான். சந்திரன் மீது எந்த நாடும் உரிமை கோரக்கூடாது என்று  சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது. ஆகவே சந்திரனுக்குச் செல்லும் குழுவினர் அமெரிக்க தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் விஷயம் வெளியே தெரிந்தால் சந்திரனில் அமெரிக்க தேசியக் கொடியை நாட்டக்கூடாது என உலகில் பல நாடுகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சந்திரனுக்கு ஆறு தடவை சென்ற குழுவினர் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கக் கொடியை சந்திரனில் நாட்டியதற்கு பெரிதாக் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.

மனித குலத்தின் சார்பாகவே இவ்விதம் அமெரிக்கக் கொடி நடப்பட்டதாகப் பின்னர் அமெரிக்கா விளக்கம் கூறியது. அப்படியானால் மனித குலத்தின் அடையாளமாக ஐ. நா கொடியை அல்லவா சந்திரனில் நாட்டியிருக்க வேண்டும் என்று பின்னர் ஒரு சமயம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்விக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.


Aug 5, 2012

வயிற்றில் நெருப்பைக் கட்டி நிற்கும் நாஸா விஞ்ஞானிகள்

Share Subscribe
வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள் நாஸா விஞ்ஞானிகள். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப்ப்பட்ட கியூரியாசிடி விண்கலம் பத்திரமாகத் தரை இறங்க வேண்டுமே என்பது அவர்களது கவலை. கடந்த ஆண்டு நவம்பரில் பூமியிலிருந்து கிளம்பிய அந்த விண்கலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு செவ்வாயில் தரை இறங்க இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் முன்னர் தரை இறங்கிய அமெரிக்க விண்கலங்கள் .வைக்கிங்-1
வைக்கிங் 2 1975) ஸ்பிரிட் (2003), ஆப்பர்சூனிடி (2003), பீனிக்ஸ் (2007)
செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலம் ஒன்று அனுப்பப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த பல ஆண்டுகளில் பல அமெரிக்க விண்கலங்கள் செவ்வாயில் வெற்றிகரமாக்த் தரை இறங்கி நன்கு செயல்பட்டுள்ளன. அப்படியானால் இந்தத் தடவை ஏன் அவ்வளவு கவலைப்பட வேண்டும்?
அமெரிக்காவின் பாத்பைண்டர் விண்கலம் இப்படி காற்று பைகளில் வைக்கப்பட்டதாகத் தரை இறங்கியது. ஆனால் அதன் எடை சுமார் 260 கிலோ.
கியூரியாசிடி விண்கலம் செவ்வாயில் தரை இறங்குவதற்கு இதுவரை இல்லாத புது முறை கையாளப்படுகிறது என்பது முக்கிய காரணம். தவிர இந்த விண்கலம் எடை மிக்கது. சுமார் ஒரு டன்.செவ்வாய் கிரகத்தில் பல நவீன சோதனைகளை நடத்துவதற்கென பல ஆண்டுக்காலம் பாடுபட்டுசுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதாகும்.உண்மையில் இதன் பெயர் செவ்வாய் அறிவியல் (தானியங்கி) ஆராய்ச்சிக்கூடம் (Mars Science Laboratory) என்பதாகும்.

வானில் கிளம்புவதுடன் ஒப்பிட்டால் தரை இறங்குவது தான் எப்போதும் பிரச்சினை நிறைந்தது.இது விமானங்களுக்கும் பொருந்தும். விமான விபத்துகளில் பெரும்பாலானவை விமானம் தரை இற்ங்கும் போது தான் நிகழ்கின்றன.
கியூரியாசிடி எவ்விதம்தரை இறங்கும் என்பதை விவரிக்கும் படம்
செவ்வாய் போன்று வேறு கிரகத்துக்கு அதுவும் ஆளில்லா விண்கலத்தை அனுப்புவதென்றால் பிரச்சினைக்குக் கேட்கவே வேண்டாம்.செவ்வாயில் ஒரு விண்கலம் தரை இறங்குவதில் பொதுவில் உள்ள பிரச்சினைகளைக் கவனிப்போம்.

செவ்வாயை நெருங்கி விட்ட கட்டத்தில் விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 21  ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். இந்த வேகம் மிகவும் குறைக்கப்பட்டாக வேண்டும். தரையைத் தொடுகின்ற நேரத்தில் வேகம் மணிக்கு 3 கிலோ மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லாவிடில் விண்கலம் தரையில் மோதி நொறுங்கி விடும்.

காற்று மண்டலம் வழியே வேகமாகக் கீழ் நோக்கி இறங்குகையில் விண்கலத்தின் வெளிப்பகுதி கடுமையாகச் சூடேறும்.. நீங்கள் ஒரு கத்தியை பாறை மீது அழுத்திக் கீறினால் தீப்பொறிகள் கிளம்பும். அது மாதிரியில் காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கும் போது கடும் வெப்பம் தோன்றும். விண்கலம் இறங்கும் போது அதன் வெளிப்புறத்தைத் தாக்கும் வெப்பம் 1600 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம். வெளிப்புறப் பகுதியானது தீப் பிழம்பாகக் காட்சி அளிக்கும்.

 இப்படியான வெப்பம் விண்கலத்தையே அழித்து விடும். ஆகவே தான் முத்துச் சிப்பி வடிவிலான் பெரிய பேழைக்குள் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும். ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிய பிறகு விண்கலத்தை மூடியுள்ள வெப்பத் தடுப்புக் கேடயம் தனியே பிரிந்து விழுந்து விடும்.

பிறகு ஒரு கட்டத்தில் விண்கலத்துடன் இணைந்த பிரும்மாண்டமான பாரசூட்  விரிந்து கொள்ளும். பாரசூட் விண்கலம் கீழே இறங்கும் வேகத்தைப் பெரிதும் குறைக்கும்.

விண்கலம் மெல்லத் த்ரை இறங்குவதானால் வேகம் மேலும் குறைக்கப்பட வேண்டும்.கியூரியாசிடி விஷயத்தில் இதற்கென தனி உத்திமுதல் தடவையாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது பாரசூட்டிலிருந்து விண்கலம் பிரிந்ததும் . நான்கு கால்களைக் கொண்ட கிரேன் ஒன்றிலிருந்து விண்கலம் தொங்க ஆரம்பிக்கும். ஸ்கைகிரேன் எனப்படும் இந்த கிரேனின் கால் பகுதியிலிருந்து நெருப்பு கீழ் நோக்கிப் பீச்சிடும். அதாவது இது ராக்கெட்டிலிருந்து நெருப்பு பீச்சிடுவது போல இருக்கும்.
ஸ்கைகிரேன் செயல்படும் விதத்தை விளக்கும் படம்
பொதுவில் ராக்கெட்டின் பின்புறத்திலிருந்து நெருப்பு பீச்சிட்டால் ராக்கெட் மேல் நோக்கிப் பாய முற்படும். ஸ்கைகிரேனிலிருந்து கீழ் நோக்கி நெருப்பு பீச்சிடும் போது அது கியூரியாசிடி விண்கலத்தை மேல் நோக்கி.அதாவது உயரே  த்ள்ளும் விளைவை உண்டாக்கும்.

 செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி விண்கலத்தை கீழ் நோக்கி இழுக்க ராக்கெட் விண்கலத்தை மேல் நோக்கித் தள்ள முறபடும். இந்த இரு விளைவுகளின் பலனாக கியூரியாசிடி கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைக்கப்பட்டு அது மெல்லத் தரை இறங்கும். சந்திரனில் இறங்க இந்த வித உத்தி தான் கையாளப்பட்டது.

கியூரியாசிடி என்பது உண்மையில் ஆறு சக்கர வாகனம். இந்த சக்கரங்களில் எதுவும் சேதமடையாமல் ஆறு கால்களும் ஒரே சமயத்தில் தரையில் பதியும் வகையில் அது தரை இறங்கியாக வேண்டும். அப்படியின்றி அது பக்கவாட்டில் சாய்ந்தப்டி இறங்க நேரிட்டால் அதை நிமிர்த்த வழியே இராது.

கியூரியாசிடி கீழே நோக்கி ஆரம்பித்ததிலிருந்து அது த்ரையைத் தொடுவதற்கு ஆகும் நேரம் ஏழு நிமிஷங்களே. இந்த ஏழு நிமிஷத்தில் எது வேண்டுமானாலும் நேரலாம் எனபதால் இதை “ ஏழு நிமிஷ பயங்கரம்” என்று வருணிக்கிறார்கள். ஏழு நிமிஷ சஸ்பென்ஸ் என்றும் கூறலாம்.

கியூரியாசிடி. இது ஒரு கார் சைஸ் இருக்கும்
 செவ்வாயில் குறிப்பிட்ட இடத்தில் கியூரியாசிடி இறங்க வேண்டும் என இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் அது இறங்கியாக வேண்டும்.சிறு பிரச்சினைகளை சமாளித்துக் கொள்ள கியூரியாசிடியில் உள்ள கம்ப்யூட்டர்கள் உதவலாம். பெரிய பிரச்சினை என்றால் சங்கடம் தான்.

கடைசி கட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டு அமெரிக்காவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டுக் கேந்திரத்திலிருந்து தகுந்த் ஆணை பிறப்பித்து பிரச்சினையை சரி செய்வதற்கும் வாய்ப்பு கிடையாது.

ஏனெனில் செவ்வாயிலிருந்து அனுப்பப்படும் சிக்னல் பூமிக்கு வந்து சேருவதற்கு 14 நிமிஷங்கள் ஆகும். பூமியிலிருந்து ஏதேனும் ஆணை பிறப்பித்தால் அது செவ்வாய்க்குப் போய்ச் சேர மேலும் 14. நிமிஷங்கள் ஆகும். இந்த சிக்னல்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் செல்பவை தான்.

ஆனால் செவ்வாய் கிரகம் சுமார் 27 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கிருந்து சிக்னல் கிடைக்கவும் இங்கிருந்து அனுப்பும் ஆணை செவ்வாய்க்குப் போய்ச் சேரவும் இவ்விதம் காலதாமதம் ஆகும். இது தவிர்க்க முடியாத் ஒன்று.

வருகிற ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதன் அனுப்பப்படும் போது இதே பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருக்கும். செவ்வாயில் இறங்கும் கட்டத்தில் விண்வெளி வீரர் ‘பாரசூட் விரியலே என்ன பண்றது” என்று கேட்டால் அவரது அவசர செய்தி பூமிக்கு வந்து சேருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

முன்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய போது இப்படியான பிரச்சினை ஏற்படவில்லை.ஏனெனில் பூமியிலிருந்து சந்திரன் அதிக பட்சம் 4 லட்சம் கிலோ மீட்டரில் உள்ளதாகும். பூமியிலிருந்து சந்திரனுக்கு சிக்னல் போய்ச் சேருவதற்கு ஆகும் நேரம் ஒன்றரை வினாடியே. ஆகவே தகவல் தொடர்பில் பிரச்சினை இருக்கவில்லை.

செவவாயிலிருந்து கியூரியாசிடி அனுப்பும் சிக்னல்களைப் பெறுவதில் வேறு பிரச்சினையும் உண்டு. செவ்வாய் கிரகம் தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு பூமி போலவே சுமார் 24 ம்ணி நேரம் ஆகிறது.

 ஆகவே கியூரியாசிடி சுமார் 12 மணி நேரம் பூமியைப் பார்த்தபடி இருக்கும். மீதி 12 மணி நேரம் அது செவ்வாய் கிரகத்தின் மறுபுற்த்தில் இருக்கும். கியூரியாசிடி செவ்வாயின் மறுபுறத்தில் இருக்கும் போது அது அனுப்பும் சிக்னல்கள் பூமிக்கு கிடைக்காது. சிக்னல்கள் நேர் கோட்டில் செல்பவை.

எனினும் இதனால் பிரச்சினை இல்லை. அமெரிக்க நாஸா 2001 ஆம் ஆண்டில் அனுப்பிய மார்ஸ் ஒடிசி என்னும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது கியூரியாசிடி அனுப்பும் சிக்னல்களைப் பெற்று பூமிக்கு அனுப்பும். மார்ஸ் ஒடிசி விண்கலத்தில் க்டந்த ஜூன் தொடக்கத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டு அது நாஸா விஞ்ஞானிகளுக்குப் பெரும் கவலையை உண்டாக்கியது.
செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் மார்ச் ஒடிசி விண்கலம்
நல்ல வேளையாக அது சரி செய்யப்பட்டு விட்டது. கியூரியாசிடி தரை இறங்கும் போது அதற்கு மேலே மார்ஸ் ஒடிசி அமைந்திருக்கும். எனவே கியூரியாசிடி தரை இறங்கியதும் நாஸா விஞ்ஞானிகளுக்கு உடனே தகவல் கிடைத்து விடும்.

 1969 முதல் 1972 வரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்று வந்தனர். அந்த 6 தடவைகளிலும் இறங்கு கலம் பிரச்சினையின்றி சந்திரனில் இறங்கியது. சந்திரனில் காற்று மண்டலம் கிடையாது.இது ஒரு வகையில் சௌகரியமாகப் போய் விட்டது. காற்று மண்டலம் இருந்தால் தான் கீழே இறங்குகின்ற விண்கலம் சூடேறுகின்ற பிரச்சினை ஏற்படும்.

சந்திரனுடன் ஒப்பிட்டால் செவ்வாயில் காற்று மண்டலம் உள்ளது. ஆனால் அக்காற்று மண்டலம் பூமியில் உள்ளதைப் போன்று அடர்த்தியாக இல்லை. செவ்வாயின் காற்று மண்டல அடர்த்தி பூமியில் உள்ளதில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. ஆகவே தான் கியூரியாசிடி தரை இறங்க ஸ்கைகிரேன் தேவைப்படுகிறது.

பூமியில் காற்று மண்டலம் அடர்த்தியாக் இருப்பதால் சௌகரியம உள்ளது.    பூமிக்கு மேலே சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தப்டி பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சில மாதங்களுக்கு ஒரு முறை ரஷிய சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் கீழே அனுப்பப்படுகின்றனர்.

இவர்கள் பூமிக்குத் திரும்புகையில் மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய இறங்குகலத்தின் அடிப்புறப் பகுதி காற்று மண்டலம் காரணமாகப். பயங்கரமாகச் சூடேறுகிறது. ஆகவே இதன் வெளிப்புறத்தில் வெப்பக் காப்புக் கேடயம் உள்ளது.
சோயுஸ் பாரசூட் மூலம் கீழே இறங்குகிறது
பிறகு அந்த மூவர் அடங்கிய கோளம் பாரசூட் மூலம் ரஷியாவுக்கு அருகே உள்ள கஜாகஸ்தானில் தரை இறங்குகிறது.  பூமியின் காற்று மண்டலம் அடர்த்தியானது என்பதால் காற்றானது  பாரசூட்டை நல்ல அழுத்தத்தில் மேல் நோக்கித் தள்ளுகிறது.  இதன் விளைவாக அக்கோளம் கீழே இறங்கும் வேகம நன்கு  குறைத்து விடுகிறது.

செவவாய் கிரகத்தில் காற்று மண்டல அடர்த்தி குறைவு என்ற காரணத்தால் பாரசூட் வேகமாக இறங்க முற்படுகிறது. ஆகவே பாரசூட்டு  மட்டும் போதாது.   ஸ்கைகிரேன் போன்ற ஏற்பாட்டின் மூலம் வேகத்தை மேலும் குறைக்க வேண்டியுள்ளது

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி மேலும் கீழும் நடமாடி தானியங்கி முறையில் பல ஆராய்ச்சிகளை நடத்த இருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா மனிதனை அனுப்பும் திட்டம் கியூரியாசிடி நடத்தும் ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பொருத்ததாக இருக்கும். ஆகவே கியூரியாசிடி பத்திரமாகத் தரை இறங்குவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

(காண்க: செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?)

(என்னுடைய இக் கட்டுரை தினமணி இதழில ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகியது. அது இந்த வலைப் பதிவில் பிரசுரிக்கப்படுகிறது. நன்றி : தினமணி)

Update: கியூரியாசிடி ஆய்வுக்கலம்  ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு   செவ்வாயில் வெற்றிகரமாகத் தரை இறங்கி படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.  

Aug 4, 2012

சூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்

Share Subscribe
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெள்ளியன்று நடுப்பகல் வாக்கில் வானில் அதிசயக் காட்சி ஒன்று தென்பட்டது. சூரியனைச் சுற்றி ஒரு வளையம் காணப்பட்டது. பலருக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

முதலாவதாக ஒன்றைத் தெளிவு படுத்தியாக வேண்டும். சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வளையமோ சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த பஞ்சு மேகங்களால் உண்டாவதாகும்.. ஆகவே  இது சூரியனுக்கு அருகில் ஏற்படுகின்ற வளையம் அல்ல்.

உலகில் எந்த இடமானாலும் தலைக்கு மேலே மேகங்கள் தென்படும். இந்த மேகங்கள் பலவகைப்பட்டவை.வெவ்வேறு மேகங்கள் வெவ்வேறு உயரங்களில் அமைந்திருக்கும். அதாவது எல்லா மேகங்களும் ஒரே உயரத்தில் அமைந்தவை அல்ல. அந்த வகையில் பஞ்சு(Cirrus)  மேகங்கள் வெப்ப மண்டல நாடுகளில் சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.
சூரியனைச் சுற்றி வளையம்
பஞ்சு மேகங்களிலேயே பல வகை உண்டு. இந்த பஞ்சு மேகங்களில் மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகள் இருக்கும். இந்த ஐஸ் துணுக்குகள் தூசை விடச் சிறியவை சில சமயங்களில் இந்த பஞ்சு மேகம் நம் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு மெல்லிய படலமாகவும் அமைந்திருக்கலாம்.

சதுரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டது என்று நமக்குத் தெரியும். இந்த ஐஸ் துணுக்குகள் ஆறு பக்கங்களைக் கொண்டவை. பல லட்சம் ஐஸ் துணுக்குகள் ஒவ்வொன்றும் சூரிய் ஒளிக் கற்றைகளை 22 டிகிரி அளவுக்குத் திருப்புகின்றன. இதன் விளைவாகக் கீழே இருக்கின்ற நமக்கு சூரியனைச் சுற்றி  வானில் வளையம் அமைந்துள்ளது போன்ற காட்சி தென்படுகிறது.  இது மழைத் தூறல் இருக்கும் போது வானில் சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றுவதைப் போன்றதே.

வானில் சூரியனைச் சுற்றி வளையம் தென்படுகின்ற நேரத்தில் பஞ்சு மேகங்களுக்கு மேலாகப் பறக்கின்ற ஒரு விமானத்தில் இருக்கும் பயணிகள் கீழ் நோக்கிப் பார்த்தால் அவர்களுக்கு சூரிய வளையம் எதுவும் தெரியாது. தவிர, இந்த பஞ்சு மேகங்களுக்கு மேலாக இருந்தபடி சூரியனைப் பார்த்தால் சூரியனைச் சுற்றி வளையம் எதுவும் தென்படாது.

இதல்லாமல் ஓரிடத்தில் சூரிய வளையம் தென்பட்டால்  அந்த வளையம் ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் தில்லியில், மும்பையில், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கும் தென்படாது.  குறிப்பிட்ட வட்டாரத்துக்கு மேலே இருக்கின்ற ப்ஞ்சு மேகங்களால் இந்த வளையம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆகவே அந்த வட்டாரத்தில் மட்டுமே சூரிய வளையம் தெரியும்.  இதர இடங்களில் இந்த வான் காட்சி தென்படாது.
சந்திரனைச் சுற்றி வளையம். 
சுருங்கச் சொன்னால் சூரியனைச் சுற்றி அமைந்தது போலத் தோன்றும் சூரிய வளையம் காற்று மண்டல நிலைமைகளால் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே ஏற்படுவதாகும்.உலகில் எவ்வளவோ இடங்களில் கடந்த காலங்களில அபூர்வமாக இப்படி சூரிய வளையம் தென்பட்டது உண்டு.

இரவு வேளைகளில் பௌர்ணமி நிலவைச் சுற்றியும் இப்படி வளையம் காணப்படலாம். ஒரு வித்தியாசம். சந்திரனைச் சுற்றிய வளையம் மங்கலாக இருக்கும்.