Jan 6, 2014

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்

Share Subscribe

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி(GSLV) ராக்கெட் ஜனவரி 5 ஆம் தேதி மாலை சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட்-14 எனப்படும் செயற்கைக்கோளை வானில் வெற்றிகரமாகச் செலுத்தியது. இது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மகத்தான சாதனை.
  
 இஸ்ரோவின் நிபுணர்கள் பல ஆண்டுக் காலம் பாடுபட்டு உருவாக்கிய கிரையோஜெனிக் வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

  இந்த வெற்றியானது விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப்  பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தியாவின்  எடைமிக்க செயற்கைக்கோள்களை ஐரோப்பிய ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்த அவற்றை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வது விரைவிலேயே நின்று விடலாம்.

ஏரியான் மூலம் செலுத்துவதற்காக ஒவ்வொரு தடவையும் ரூ 500 கோடி கட்டணம் செலுத்துகின்ற நிலைமை அகலக்கூடும். வீண் செலவும் சிரமமும் மிச்சமாகும்.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றியில் இவற்றை விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. அதாவது இனி நாம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அல்லது இருவரை பூமியைச் சுற்றி வருவதற்கான வகையில் உயரே அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விதம் இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதற்கு இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்பட்டதன் பலனாக நாம் இனி இந்த வகையில் சிந்திக்க முடியும்.

எந்த ஒரு ராக்கெட்டாக இருந்தாலும் அதற்கு இரண்டு வகைத் திறன் உண்டு.  ஒரு ராக்கெட் சுமார் 300 அல்லது 400 கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை சுமந்து செல்வதானால் அதற்கு ஒரு திறன் உண்டு. மாறாக. சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை கொண்டு செல்வதானால் வேறு திறன் என்று அளவு கணக்கு உண்டு.

இதுவரை தொடர்ந்து 24 தடவை வெற்றி கண்டுள்ள பி.எஸ்.எல்.வி. (PSLV)  ராக்கெட்டுக்கும் இது மாதிரியில் இரண்டு விதத் திறன் உண்டு. அந்த ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்கு இரண்டு டன் சுமையை —ஒரு செயறகைக்கோளை – சுமந்து செல்ல முடியும். ஆனால் அந்த ராக்கெட்டினால்  36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு  அவ்வளவு எடையைச் சுமந்து செல்ல முடியாது. குறைந்த எடையைத் தான் அவ்வளவு உயரத்துக்குத் தூக்கிச் செல்ல முடியும்.

இத்த்டன் ஒப்பிட்டால் இப்போது வெற்றி கண்டுள்ள ஜி.எஸ்.எ;ல்.வி ராக்கெட்டினால் இரண்டு டன் எடையை 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் செல்ல முடியும். அந்த ராக்கெட்டை  300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்தினால் போதும் என்றால் இந்த ராக்கெட்டினால் 5 டன் எடையை சுமந்து செல்ல முடியும். அதாவது இந்த ராக்கெட்டும் சரி,, இரண்டு வகைத் திறன் கொண்டது

  ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே இதுவரை விண்வெளி வீரர்களை உயரே அனுப்பியுள்ளன. இப்படிச் சென்றவர்கள் ஏறிச் சென்ற விண்கலங்கள் அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் தான் பறந்துள்ளன. இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்புவதானால் அந்த விண்கலமும் இந்த உயரத்தில் தான் பூமியைச் சுற்றுவதாக இருக்கும்.

  இந்திய வீரர் ஒருவர் அல்லது இருவர் உயரே செல்வதற்கான விண்கலத்தைத் தயாரிப்பதானால் அது குறைந்தது 3 டன் எடை கொண்டதாக இருக்கும்.   ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் இப்படியான ஒரு விண்கலத்தை ( செல்ல வேண்டிய உயரம் 300 கிலோ மீட்டர் தான் என்பதால்)  எளிதில் சுமந்து செல்ல இயலும்.

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிடம் ஏற்கெனவே இந்த வகையிலான ஒரு திட்டம் உண்டு. விண்வெளி வீரரகளை உயரே அனுப்ப ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்துவது என்பது அந்தத் திட்டத்தில் அடங்கும்.

விண்வெளி வீரர்கள் ஒருவர் அல்லது இருவரை உயரே அனுப்புவதற்கான விண்கலம் இனிமேல் தான் உருவாக்கப்பட வேண்டும். இதற்கென ஒரு விண்கலத்தை வடிவமைப்பதற்கு ஏற்கெனவே திட்டம் உள்ளது.
  
மனிதன் ஏறிச் செல்வதற்கான விண்கலத்தைத் தயாரிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அது சொந்தமாக கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்குவதைப் போல அவ்வளவு கடினமானதல்ல

இதில் வேடிக்கை என்னவென்றால் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்பினால் அவர் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவதில் அடங்கிய அடிப்படைப் பிரச்சினைகளை இந்தியா ஏற்கெனவே சமாளித்து அதில் வெற்றி கண்டுள்ளது. அதாவது ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னரே அவர் பத்திரமாகப் பூமிக்குத்  திரும்பச் செய்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்தியா 2007 ஆம் ஆண்டில் SRE (Space Capsule Recovery Experiment) என்னும் திட்டம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 550 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் உயரே செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வந்த  அந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்குப் பிறகு  வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டது. 635 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த செயற்கைக்கோள் சென்னைக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மெல்ல இறங்கியது.

 பின்னர் கடலோரக் காவல் படையினர் அதைக் கடலிலிருந்து மீட்டனர். நிபுணர்கள் பின்னர் அதை ஆராய்ந்த போது அது எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

ஒரு விண்கலம் மூலம் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்புவதை விட அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் தான் பிரச்சினைகள் அதிகம்.
ஜிசாட் 14 செயற்கைக்கோளை சும்ந்தபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே பாய்கிறது
படம்: இஸ்ரோ
உதாரணமாக SRE செயற்கைக்கோள் உயரே இருந்து பூமிக்கு இறங்குகையில் ஒரு கட்டத்தில் அதன் வேகம் மணிக்கு 29,000 கிலோ மீட்டராக இருந்தது. காற்று மண்டலம் வழியே அது இறங்க ஆரம்பித்த போது அதன் முகப்பு 2000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பயங்கரமாகச் சூடேறியது. அதன் பின்பகுதியில் வெப்பம் 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. இந்த வெப்பம் உள்ளே இருக்கின்ற பகுதிகளைத் தாக்காமல் தடுக்க வெளிப்புறத்தில் தகுந்த பூச்சு இருந்தது. வெப்பத்தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.

 சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் முதல் பாராசூட் விரிந்தது. இதன் மூலம் அது கீழே இறங்கும் வேகம் மணிக்கு 363 கிலோ மீட்டராகக் குறைந்தது. அடுத்த பாராசூட் விரிந்த பின்னர் வேகம் மேலும் குறைந்தது. இறுதியில் அது மெல்லக் கடலில் வந்து இறங்கி மிதக்க ஆரம்பித்தது.
இந்திய விண்வெளி வீரர் இருவர்  உயரே அனுப்பப்பட்டால் அவர்கள் இவ்விதமாகத் தான் கடலில் வந்து இறங்குவர்.

 SRE செயற்கைக்கோளை வங்கக் கடலில் மெல்ல இறங்கச் செய்வதில் வெற்றி கண்டுள்ளதன் மூலம் நாம் இந்திய விண்வெளி வீரர்கள் ஏறிச் செல்லும் விண்கலத்தை பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விடை கண்டு விட்டதாகக் கூறலாம்.  
இங்கு ஒன்றைக் கூறியாக வேண்டும். ஜி எஸ்.எல்.வி ராக்கெட் அடுத்தடுத்து இன்னும் சில தடவை வெற்றி கண்டாக வேண்டும்.
அப்போது தான் அது நம்பகமான ராக்கெட் என்பது நிரூபணமாகும்.

 அது அவ்விதமே செயல்படும் என்று வைத்துக் கொண்டு இப்போது பணிகளைத
 தொடங்கினாலும் தகுந்த விண்கலத்தை உருவாக்குவது, அதை ஆளில்லாமல் செலுத்தி சோதிப்பது, விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது,, பயிற்சி அளிப்பது, விண்வெளி வீரர்களை அனுப்புதற்கான புதிய ராக்கெட் தளத்தை நிறுவுவது போன்ற வேலைகளை செய்து முடிக்க குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிடலாம்

Jan 2, 2014

கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஜி.எஸ்.எல் வி ராக்கெட்

Share Subscribe
வருகிற ஜனவரி 5 ஆம் தேதியன்று இந்தியாவின் ஜி. எஸ்.எல்.வி ராக்கெட் (GSLV)  உயரே செலுத்தப்பட இருக்கிறது. இது சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட் -14 என்னும் செயறகைக்கோளை சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரே செலுத்தும் திறன் கொண்டது.

 இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டுமே என இந்தியாவின் விண்வெளித் துறையினர் கவலை கொண்டிருந்தால அதில் வியப்பில்லை. ஏனெனில் இதுவரை இந்த வகை ராக்கெட்டை ஏழு தடவை உயரே செலுத்தியதில் மூன்று தடவைகளில் தான் வெற்றி கிடைத்தது.
  விண்வெளித் துறையில் நாம்  அடுத்து வேகமாக முன்னேற வேண்டுமானால் இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டும். என்ற இக்கட்டான நிலை உள்ளது.

உள்ளபடி நம்மிடம் இரண்டு வகை ராக்கெட்டுகள் உள்ளன.ஒன்று பி.எஸ்.எல்.வி ராக்கெட் (PSLV).இது பொதுவில் சுமார் 400 அல்லது 600 கிலோ மீட்டர் உயரத்தில் 2 டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

 1993 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. 24 தடவைகளில் வெற்றி கண்டுள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்துள்ள இந்த வகை ராக்கெட் மிக நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தான் சில வெளி நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் செலுத்தச் செய்துள்ளன.

ஆனால் ஒன்று. இதன் திறன் 2 டன் என்றாலும் கடந்த பல ஆண்டுகளில் இது அதிகபட்சமாக சுமந்து சென்ற எடை 1850 கிலோ கிராம் தான். அந்த வகையில் சுமாரான திறன் கொண்ட ராக்கெட் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இந்தியா சிறிய செயற்கைக்கோள்களை மட்டுமன்றி எடை மிக்க செயற்கைக்கோள்களையும் தயாரித்து வருகிறது. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களாகும்.

 இவை எடைமிக்கவை  உதாரணமாக இந்தியா தயாரித்த ஜிசாட் -8 செயற்கைக்கோளின் எடை 3 டன். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டியவை. இந்த வகை செயற்கைக்கோள்களை அந்த அளவு உயரத்துக்குக் கொண்டு செல்ல இந்தியாவிடம் இப்போதைக்கு சக்திமிக்க ராக்கெட் கிடையாது.

ஆகவே தான் நாம் தயாரித்து வருகின்ற எடை மிக்க செயற்கைக்கோள்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு குயானாவில் உள்ள கூரூ விண்வெளிக் கேந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டு வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்தியாவின் அவ்வகை செயற்கைக்கோள்களை கூரூவுக்கு எடுத்துச் செல்லும் செலவு,, உயரே செலுத்தித் தருவதற்கு நாம் அளிக்கும் கட்டணம் ஆகிய வகையில் செலவு அதிகம் தான்..ஆகவே சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டையே பெரிய அளவில் செய்தால் அது சக்திமிக்கதாகி விடாதா என்று கேட்கலாம். அது சாத்தியமானதல்ல. ஒரு ராக்கெட்டில் அதிக உந்து திறனை அளிக்கின்ற எஞ்சினைப் பொருத்தினால் தான் அது அதிக சக்தி பெறும். அந்த வகை எஞ்சின் கிரையோஜெனிக் எஞ்சின் எனப்படுகிறது.
ஜி.எஸ்.எல்வி.  ராக்கெட்  படம்:இஸ்ரோ
ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை நமக்குத் தெரியும். இந்த இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி அந்த இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை அளிக்கும்.ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 223 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். ஹைட்ரஜன் வாயுவை இதே போல மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும்

.இந்த வாயுக்களை இவ்விதம் குளிர்விப்பது பெரிய பிரச்சினை அல்ல. கடும் குளிர் நிலையில் இருக்கிற இந்த திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் தான் பல பிரச்சினைகள் உள்ளன.இந்த இரண்டையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சின் கிரையோஜெனிக் (கடும் குளிர்விப்பு நிலை) ராக்கெட் எஞ்சின் எனப்படுகிறது.

ராக்கெட் என்பது ஒன்றின் மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்று அடுக்கு ராக்கெட்டாக அல்லது இரண்டு அடுக்கு ராக்கெட்டாக இருக்கும். ராக்கெட்டின் முனையில் இடம் பெறுகின்ற அடுக்கானது இவ்விதம் கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
உலகில் நான்கு டன் அல்லது ஐந்து டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்து சக்திமிக்க ராக்கெட்டுகள் அனைத்திலும் கிரையோஜெனிக் எஞ்சின்களே பயன்படுத்தப்படுகின்றன

. இந்த வகை எஞ்சின்களை உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்தை காசு கொடுத்து ரஷியாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990 களில் முயன்றது. ஆனால் அமெரிக்கா குறுக்கிட்டு ரஷியாவிடமிருந்து இத் தொழில் நுட்பம் கிடைக்காதபடி தடுத்து விட்டது.

இவ்வித நிலையில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. இவ்வித எஞ்சின்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தவும் மற்றும் இவற்றை செயல்படுத்தி சோதிப்பதற்காகவும் ஒரு கேந்திரம் தமிழகத்தில் மகேந்திரகிரி என்னுமிடத்தில் உள்ளது.

கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ராக்கெட் எஞ்சினில் இந்த இரு திரவங்களையும் தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் விட்டால் இரண்டும் ஆவியாகி விடும். ஆகவே ராக்கெட் கிளம்புதற்கு சற்று முன்னர் தான் இந்த இரு திரவங்களையும் நிரப்புவர். ராக்கெட் கிளம்புவதற்குள் எப்படியும் கொஞ்சம் ஆவியாகி விடும் என்பதால் சற்று அதிகமாகவே நிரப்புவர்.

 இந்த இரு தொட்டிகளிலிருந்தும் திரவ ஆக்சிஜனும் திரவ ஹைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் எஞ்சின் அறைக்கு வர வேண்டும். தொட்டிகளிலிருந்து எஞ்சின் அறைக்கு இவற்றை செலுத்துவதற்கான பம்புகள், வால்வுகள், மோட்டார்கள் ஆகியவை கடும் குளிர் நிலையைத் தாங்கும் திறன் கொண்ட விசேஷ உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.கடும் குளிர் நிலையில் சாதாரண உலோகங்கள் பொடிப் பொடியாகி விடும்.அல்லது உருக்குலைந்து விடும்.

எஞ்சின் அறையில் இரண்டும் கலந்து எரியும் போது பயங்கர வெப்பம் தோன்றும். அந்த வெப்பத்தினால் எஞ்சின் அறையின் உலோகத்தால் ஆன சுவர்கள் உருகி விடக்கூடாது. இப்படிப் பல பிரச்சினைகள்.. இவற்றையெல்லாம் சமாளித்து இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சினை தரையில் நிலையாக வைத்து நடத்திய பரிசோதனைகளில் பல தடவை வெற்றி காணப்பட்டுள்ளது..

எடை மிக்க செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்குப் பொதுவில் மூன்றடுக்கு ராக்கெட் பயன்படுத்தப்படும்.. சில நாடுகள் இரண்டு அடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகின்றன.. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி .ராக்கெட் மூன்று அடுக்கு ராக்கெட் ஆகும். இதில் மூன்றாவது அடுக்கில் பொருத்துவதற்காகத் தான் கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டது. நம்மிடம் ஏற்கெனவே உள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் கிரையோஜெனிக் எஞ்சின் கிடையாது.
.
இந்தியா சொந்தமாகத் தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சினை (மூன்றாவது அடுக்கில்) பொருத்தி 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் முகப்பில் 2220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது.

 ஆனால் அந்த ராக்கெட் தோல்வியில் முடிந்தது..மூன்றாவது அடுக்கிலான கிரையோஜெனிக் எஞ்சின் செயல்படாமல் போனதே தோல்விக்குக் காரணம்.

இதன் பிறகு அதே ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே செலுத்தப்பட்டது. அப்போது வேறு காரணங்களால் அது திசை மாறிய போது கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது.

 பிறகு 2013 ஆகஸ்டில் மறுபடி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராக்கெட் உயரே செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில் ராக்கெட்டிலிருந்து ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டை செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.

இப்படியான பின்னணியில் தான் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி ஜி.எஸ்..எல்.வி ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது. ராக்கெட்டின் வெற்றி பெரிதும் கிரையோஜெனிக் எஞ்சினின் செயல்பாட்டைப் பொருத்தது எனலாம்
.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏன் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்கலாம்.பல வீடுகளில் மாடியில் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுவதற்காக கிண்ணவடிவ ஆண்டெனா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை வானை தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். 

இந்த ஆண்டெனா ஒன்றின் மையத்திலிருந்து அது நோக்கி இருக்கும் திசையை நோக்கி கற்பனையாகக் கோடு கிழித்தால் அது உயரே இருக்கின்ற ஒரு செயற்கைக்கோளில் போய் முடியும்.

அந்த குறிப்பிட்ட செயறகைக்கோளிலிருந்து தான் அந்த ஆண்டெனா சிக்னல்களைப் பெறுகிறது. சிக்னல்கள் எப்போதும் நேர் கோட்டில் செல்பவை. ஆகவே ஆண்டெனாவும் செயற்கைக்கோளும் எப்போதும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தாக வேண்டும். ஆணியடித்து நிறுவப்பட்ட ஆண்டெனா போலவே வானில் அந்த செயற்கைக்கோளும் ஒரே இடத்தில் “ நிலையாக” இருக்க வேண்டும்..

ஆனால் எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். நிலையாக இருக்க முடியாது.ஆனால் அது நிலையாக இருப்பது போன்று செய்ய முடியும்.

பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள ஒரு நாள் ஆகிறது. சரியாகச் சொன்னால் 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி ஆகிறது. ஆகவே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கின்ற ஒரு செயற்கைகோள் ஒன்று பூமியைச் சுற்ற மிகச் சரியாக அதே நேரத்தை எடுத்துக் கொண்டால் அது பூமியைச் சுற்றவும் செய்யும். ஒரே இடத்தில் இருப்பது போலவும் ஆகிவிடும். 

அந்த அளவில் ஒரு செயற்கைக்கோள் மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்படி செய்தால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக மேலே குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொள்ளும். இது இய்ற்கையின் நியதி ஆகவே தான் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அந்த அளவு உயரத்துக்கு செலுத்தப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஜிசாட் 14 போன்ற செயற்கைக்கோள்களை 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த முடியாதா என்று கேட்கலாம். ஏற்கெனவே கூறியபடி அதன் திறன் சுமாரானது.  . மேலும் அதிக உயரத்துக்கு அது செல்ல வேண்டுமானால் அது ஏற்றிச் செல்லும் சுமையைக் குறைத்தாக வேண்டும்.

 கடந்த பல ஆண்டுகளில் அந்த வகை ராக்கெட் இரண்டு முறை தான் 35 ஆயிரம் உயரத்துக்கு செலுத்தப்பட்டது. அதாவது 2002 ஆம் ஆண்டில் அது மெட்சாட் ( அதன் பெயர் பின்னர் கலபனா என்று மாற்றப்பட்டது) எனப்பட்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு கொண்டு சென்று செலுத்தியது. அதன் எடை 1060 கிலோ. கல்பனா செயற்கைக்கோளுடன் ஒப்பிடுகையில் ஜிசாட்-14 செயற்கைக்கோளின் எடை சுமார் இரண்டு டன். பின்ன்ர் 2011 ஆம் ஆண்டில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஜிசாட் 12 செயற்கைக்கோள் அந்த உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதன் எடை 1400 கிலோ கிராம்.


பி.எஸ்.எல்.வி  ராக்கெட் மூலம் 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பினோமே.அதே ராக்கெட் மூலம் அண்மையில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பி சாதனை புரிந்தோமே என்றும் கேட்கலாம்.

 இந்த இரண்டுமே 1400 கிலோ கிராம் எடைக்குக் குறைவு. இந்த இரண்டையும் பி.எஸ்எல்.வி ராக்கெட் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு சென்று பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்தது. இது அந்த ராக்கெட்டின் திறனுக்கு உட்பட்டதே.
இவை உயரே சென்ற பின்னர் விசேஷ உத்திகளைப் பின்பற்றி – இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி—சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பி வைத்தோம். 

.வேறு விதமாகச் சொன்னால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது அவற்றை நேரடியாக சந்திரனுக்கோ செவ்வாய்க்கோ அனுப்பி விடவில்லை. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இருந்திருக்குமானால் அவற்றை நேரடியாக சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பியிருக்க முடியும். எனினும் சுமாரான திறன் கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி விசேஷ உத்திகளைக் கையாண்டு நாம் சாதனை படைத்தோம் என்பது பெருமைக்குரிய விஷயமே.

ஒரு ராக்கெட் அதிகத் திறன் கொண்டதாக இருந்தால் தான் அது அதிக உயரத்துக்குச் செல்லும்.அதிக வேகத்துடன் பாயும். அத்துடன் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தும்.  
இப்போது செலுத்தப்பட உள்ள ஜி.எச்.எல்.வி (மார்க் 2 ) ராக்கெட் கூட நமக்குப் போதாது.

 ஆகவே தான் இதை விட இன்னும் திறன் கொண்டஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடை கொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு செலுத்தும் திறன் கொண்டது. நமக்கு இப்போது அந்த அளவு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. முதலாவதாக  நாம் டிவியில் பார்க்கிற நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாகத்தான் நம்மை வந்தடைகின்றன. பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால் இவ்வித செயற்கைக்கோள்கள் மேலும் பல பணிகளைச் செய்கின்றன.பங்கு மார்க்கெட் வர்த்தகம் இவை மூலம் தான் நடைபெறுகின்றன.

 பல தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்புப் பணிகள் இவற்றின் மூலமாகத் தான் நடபெறுகின்றன. ஒரு மருந்த்துவமனையில் நடக்கின்ற அபூர்வமான அறுவை சிகிச்சையை வேறு மருத்துவமனைகளில் நேரடியாகக் காண உதவுகின்றன. கல்வித் துறையிலும் இவற்றின் பங்கு உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இல்லாவிடில் நாட்டில் பல முக்கிய பணிகள் ஸ்தம்பித்து விடும் என்ற நிலை உள்ளது.

நாட்டில் தகவல் தொடர்புத் தேவைகள் அதிகரித்து வருகின்றன.. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.ஆகவே தான் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் இவ்வித செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன.

 இப்போது பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்த மாதிரியில் நம் தலைக்கு மேலே 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனாலும் இது போதவில்லை.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுள் சுமார 12 ஆண்டுகள். ஆகவே ஏற்கெனவே உயரே உள்ள ஒரு செயற்கைக்கோளின் ஆயுள் முடிந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப புதிதாக ஒன்றைக் காலாகாலத்தில் செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக நாட்டில் புதிது புதிதாக டிவி சேனல்கள் தோன்றி வருகின்றன.

 அத்துடன் கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் மூலம்  டிவி சேனல்களை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன.  . இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் தங்களுக்கு மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. வேறு தரப்பினரும் இவ்விதம் கோருகின்றனர.

தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர் என்னும் கருவிகளே கீழிருந்து டிவி நிறுவனங்கள் போன்றவை அனுப்பும் சிக்னல்களைப் பெற்று அவை இந்தியா முழுவதிலும் கிடைக்கும்படி செய்கின்றன.

இப்பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் தான் இஸ்ரோ நிறுவனம் மேலும் அதிக எடை கொண்ட மேலும் அதிக டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக 1995 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட இன்சாட் 2 சி செயற்கைக்கோளின் எடை 2106 கிலோ கிராம். 2003 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட 3 ஏ செயற்கைக்கோளின் எடை 2950 கிலோ கிராம்

. இத்துடன் ஒப்பிட்டால் 2012 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட் -10 செயற்கைக்கோளின் எடை 3455 கிலோ கிராம். இவற்றில் இடம் பெற்ற டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது .இன்சாட் 2 சி செயற்கைக்கோளில் 20 டிரான்பாண்டர்களே இடம் பெற்றிருந்தன. ஆனால் ஜிசாட்- 10 செயற்கைக்கோளில் 30 டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றிருந்தன.  இவை அனைத்தும் ஏரியான் ராக்கெட் மூலமே செலுத்தப்பட்டவை.

அடுத்த சில ஆண்டுகளில் செலுத்தப்பட இருக்கும் ஜிசாட் 11 செயற்கைக்கோள் நாலரை டன் எடை கொண்டதாகவும் 40 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டதாகவும் விளங்கும். ஒரு வேளை இது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படலாம்.

    எடை மிக்க செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் இஸ்ரோவிடம் உள்ளது.இது விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இஸ்ரோ ஆரம்ப முதல் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளது. அதாவது செயற்கைக்கோள் தயாரிப்பையும் ராக்கெட்டுகளை உருவாக்குவதையும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடவில்லை.

 சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கிய பின்னரே பெரிய செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது என்ற கொள்கையைப் பின்பற்றவில்லை. இஸ்ரோ உருவாக்கிய ஆர்யபட்டா என்னும் முதல் செயற்கைக்கோளின் எடை 360 கிலோ கிராம். அதைச் செலுத்த அப்போது இந்தியாவிடம் ராக்கெட் கிடையாது. 1975 ஆம் ஆண்டில் ஆர்யபட்டா ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து 1980 ஆம் ஆண்டில் இந்தியா உருவாக்கிய எஸ்.எல்.வி என்னும் எளிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகிணி செயறகைக்கோளின் எடை 30 கிலோ கிராம்.

செயற்கைக்கோள் தயாரிப்பில் காணப்பட்ட வேகமான முன்னேற்றத்தை நம்மால் ராக்கெட் தயாரிப்பில் காண முடியாமல் போய் விட்டது. இப்போது செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்திய கிரையோஜெனிக் எஞ்சினின் திறன் உறுதிப்படுத்தப்படுமானால் ராக்கெட் துறையில் இனி வேகமான முன்னேற்றத்தைக் காண இயலும்.

  (இக்கட்டுரை தி ஹிந்து தமிழ் பதிப்பின் ஜனவரி 2ம் தேதி இதழில் வெளியாகியது. அது இங்கே அளிக்கப்பட்டுள்ளது)