Dec 21, 2013

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?

Share Subscribe
சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக் கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளிக் கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
.  .
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

அது ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவது தான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக  ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக் கேந்திர அதிகாரிகள் ராக்கெட்  கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை  நடுவானில் அழிப்பர்.

இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர்  25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளிக் கேந்திரத்தை கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு   23.93 மணி நேரம் பிடிக்கிறது..  பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு  1569 கிலோ மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக  பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன 
  
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625  கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
 .
படம்: நன்றி- Mahendragiri LPSC Staff Assn Report
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடிவதில்லை.

அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது. அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு  என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து விடும்.

 எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி  ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.

ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம் 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்

. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித்  தருவது என்பது உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார் நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.

உலகில் இந்தியா உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம் என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம் குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில் கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

தவிர, பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது.

 குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது. படம் மற்றும் கூடுதல் தகவல்களுடன் இங்கு வெளியிடப்படுகிறது

Dec 13, 2013

வியாழனுக்குப் பாதி தூரம் சென்று விட்டு பூமி நோக்கித் திரும்பிய விண்கலம்

Share Subscribe
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி  வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது.  ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது

இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத் தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். அது ஏன்?

 ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது  மணிக்கு  சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது.
ஜூனோ விண்கலம். அதன் பின்னால் வியாழன் கிரகம்.  இது ஓவியர் வரைந்த படம்
ஆனால் அந்த விண்கலத்துக்கு அளிக்கப்பட்ட வேகம் போதாது. தவிர அந்த விண்கலம் வியாழனை நோக்கிச் செல்கையில் அது சூரியன் உள்ள திசைக்கு நேர் எதிரே செல்வதாகியது.. ஆகவே போகப் போக அதன் வேகம் குறையும். ஆகவே அதனால் வியாழன் கிரகத்துக்குப் போய்ச் சேர முடியாது

எனினும் வியாழனுக்குப் போய்ச் சேரும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும். அந்த விண்கலம் பாதி வழியில் திரும்பி பூமியை ஒரு வட்டமடித்துச் சென்றால் அதன் வேகம் அதிகரிக்கும். ஆகவே தான் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்தை உயரே அனுப்பும் போதே அது பூமியை  வட்டமடித்துச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்

அதாவது ஜூனோ பூமியை வட்டமடிக்கும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக அந்த விண்கலத்தின் வேகம் இயல்பாக அதிகரிக்கும்.

.இப்படி ஒரு கிரகத்தின் உதவி கொண்டு விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு கிராவிடி அசிஸ்ட்  ( Gravity Assist)  என்று பெயர். தமிழில் இதை கிரக உதவி என்று குறிப்பிடலாம்

நாஸா விஞ்ஞானிகள்  திட்டமிட்டபடி ஜூனோ  2012 செப்டம்பர் வாக்கில் பூமியை நோக்கித் திரும்பியது. வட்ட வடிவப் பாதையில் பூமியை  நோக்கி வந்த ஜூனோ விண்கலம் 2013 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பூமியை சுற்றி விட்டு மறுபடி வியாழனை நோக்கிக் கிளம்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக ஜூனோ விண்கலம் கூடுதலாக மணிக்கு  26,280 கிலோ மீட்டர் வேகம் பெற்றது.   இதன் பின்னர் ஜூனோ கூடுதல் வேகத்துடன் வியாழன் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இப்படியான ஏற்பாடு செய்யாமல் விட்டிருந்தால் ஜூனோ வியாழனுக்குச் செல்லாமல் சூரியனைச் சுற்ற ஆரம்பித்திருக்கும். சரி, ஜுனோ விண்கலத்தை செலுத்திய போதே அதை வியாழனை நோக்கிச் செல்வதற்கான வேகத்தை அளித்திருக்கலாமே என்று கேட்கலாம்.
ஜூனோ விண்கலம் பின்பற்றிய பாதையை விளக்கும் படம். மூன்றாவது
வட்டத்தில் நீல நிறத்தில் இருப்பது பூமி.
அப்படிச் செய்வதென்றால்  கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டிருக்கும். அட்லஸ் -5 ராக்கெட்டுக்குப் பதில் மேலும் அதிக சக்தி கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்த வேண்டி நேர்ந்திருக்கும். இதனால் செல்வு அதிகரித்திருக்கும். நாஸா செல்வை மிச்சப்படுத்தும் நோக்கில் தான் பூமியின் உதவியை நாடும் ஏற்பாட்டைப் பின்ப்ற்றிய்து. இதன் மூலம் நாஸாவுக்குப் பல கோடி டாலர் பணம் மிச்சமாகியது. இப்போதெல்லாம் நாஸா தனது திட்டங்களில் செலவைக் குறைக்கும் போக்கைக் காட்டி வருகிறது.

ஜூனோ வியாழனை நோக்கிப் பாதி வழி சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதால் அதிக செல்வு ஏற்பட்டிராதா என்று கேட்கலாம். சுமார் 40 ஆயிரக் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ஜூனோ விண்கலத்துக்கு எரிபொருள் செலவு கிடையாது. அதன் பிறகு அந்த விண்கலம் ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்வெளியில் இயல்பாக மிதந்து சென்று கொண்டிருக்கும்.

பூமியை நோக்கித் திரும்பும்படி செய்த போது மட்டும் ஜூனோ விண்கலத்தில் இருந்த எஞ்சின் சிறிது நேரம் செயல்பட்டது. .இத்துடன் ஒப்பிட்டால் எரிபொருள் செலவு இல்லாமலேயே ஜூனோ பூமியின் உதவியால் கூடுதல் வேகம் பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படிச் செய்வதால் ஜூனோ வியாழனுக்குப் போய்ச் சேருவதற்கு அதிக நாள்  ஆகமே என்றும் கேட்கலாம். வியாழனுக்கு ஜூனோ இந்தத் தேதிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற அவசரம் ஏதுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உள்ளபடி ஜூனோ 2016 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் வியாழனுக்குப் போய்ச் சேரும்.

இதற்கு முன்னரும் பல விண்கலங்கள் வியாழன் கிரகத்தை ஆராய்ந்துள்ளன. ஜூனோ முந்தைய விண்கலங்கள் போல் இல்லாமல் வியாழனை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றும். வியாழனின் ஈர்ப்பு வரம்பு,  காந்த மண்டலம் ஆகியவற்றை ஆராயும்.

பூமியை விட 1300 மடங்கு பெரியதான வியாழன் கிரகம் பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டை. மாம்பழத்துக்கு நடுவே கொட்டை இருப்பது போல அந்த பனி உருண்டையின் நடுவே பாறை உள்ளதா  என்பது பற்றியும் வியாழன் எப்படி உருவானது என்பது பற்றியும் ஜூனோ ஆராயும்

(செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப இந்தியா Gravity Assist உத்தியைக் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது)

Nov 30, 2013

மங்கள்யான்: பூமி கைகொடுக்கிறது

Share Subscribe

   இக்கட்டுரை மீண்டும் மங்கள்யான் பற்றியதே. எனினும் இது மங்கள்யான் திட்டத்துக்கு அடிப்படையான அறிவியல் அம்சங்களை விளக்குவதாகும். இது தினமணி 30 ஆம் தேதி இதழில் வெளியானதாகும்.


இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 30 ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்பட இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மங்கள்யான் மணிக்கு சுமார் 42 ஆயிரம் வேகத்தில் செவ்வாய் கிரக்த்தை நோக்கிப் பயணிக்கும்.

மங்கள்யான் இந்த மாதம் 5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அது இத்தனை நாட்களாகப் பூமியைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.

மங்கள்யான் இவ்விதம் பூமியை வட்டமிட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நவம்பர் 18 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு செவ்வாய் கிரகத்தை நோக்கி மாவென் என்ற விண்கலத்தைச் செலுத்தியது. அந்த விண்கலம் உயரே சென்ற சுமார் 27  நிமிஷத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கிக் கிளம்பியது. இப்போது அது செவ்வாயை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மாவென் விண்கலம் உடனே செவ்வாயை நோக்கிக் கிளம்ப, இந்தியாவின் மங்கள்யான் மட்டும் இதுவரை பூமியை சுற்றிக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. அமெரிக்க விண்கலத்தை உயரே தூக்கிச் சென்ற அட்லஸ் ராக்கெட் சக்திமிக்கது. ஆகவே மாவென் உயரே சென்றதும் செவ்வாயை நோக்கி  உகந்த வேகத்தில் செலுத்தப்பட்டு விட்டது..

அமெரிக்க ராக்கெட்டுடன் ஒப்பிட்டால் மங்கள்யானை உயரே செலுத்திய  நமது பி.எஸ்.எல்.வி ராக்கெட் திறன் குறைந்தது. அந்தக் காரணத்தால் மங்கள்யானை அதனால் அதி வேகத்தில் செலுத்த இயலவில்லை. மங்கள்யான் உயரே சென்றடைந்த போது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர்.

ஆனால் ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு  செவ்வாய்க்கு செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். பொதுவில் விண்கலத்திலேயே எஞ்சின் உண்டு. எரிபொருள் உண்டு. மங்கள்யானுடன் இணைந்த எஞ்சினை இயக்கினாலும் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர்  வேகம் கிடைக்காது.

இந்தியாவிடம் மட்டும் சக்திமிக்க ராக்கெட் இருந்திருக்குமானால் பிரச்சினை இருந்திராது உள்ளபடி இந்தியா சக்திமிக்க இரு ராக்கெட்டுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று செம்மையாக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று இனிமேல் தான் சோதிக்கப்பட இருக்கிறது.

அதுவரை காத்திருக்க இந்தியா விரும்பவில்லை. செவவாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வாய்ப்பான காலம் என்பது உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வாய்ப்பான கட்டம் வரும். அதாவது இப்போது விட்டால் 2016 ஜனவரியில் தான் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப முடியும். அது வரை காத்திருக்க இந்திய விண்வெளி அமைப்பு விரும்பவில்லை.

ஆகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் ஓர் உத்தியைப் பின்பற்ற முடிவு செய்தார்கள். அதாவது மங்கள்யானை உயரே செலுத்திய பின்னர் அதன் வேகத்தை அதிகரிக்க பூமியைப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தனர். பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை நாம் அறிவோம். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க இந்த ஈர்ப்பு சக்தி உதவியது.
 பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதை மிக நீள் வட்டப் பாதையில் செலுத்தினால் வேகத்தை அதிகரிக்க முடியும்..
மங்கள்யான் எவ்விதம் அண்மை நிலையிலிருந்து (perigee) செவவாயை நோக்கிக்
கிளம்பும் என்பதை இப்படம் விளக்குகிறது
 அதன்படி மங்கள்யான் நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்த போது ஒரு கட்டத்தில் அது பூமியிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது. இதை அண்மை நிலை (perigee) என்று கூறுவார்கள்.  நீள் வட்டப் பாதை என்பதால் விண்கலம் மேலும் மேலும் விலகிச் சென்று  மறுகோடிக்குச் செல்லும். மறு கோடி முனையைத் தொலைவு நிலை     (apogee) என்று கூறுவார்கள்.

மங்கள்யான் பூமிக்கு மிக அருகில் வரும் சமயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்க்லத்தில் உள்ள எஞ்சினை இயக்கினர். அதன் விளைவாக அது அதிக தூரத்துக்குச் சென்றது. பின்னர் தொலைவு நிலைவிலிருந்து அது பூமியை மேலும் மேலும் நெருங்கிய போது அதன் வேகம் இயல்பாக அதிகரித்தது. இது இயற்கை நியதி. இவ்விதம் பல தடவை செய்யப்பட்டது

பூமியானது சூரியனை சுற்றுவதை நாம் அறிவோம்.
 பூமி தனது பாதையில் எப்போதும் ஒரே வேகத்தில் செல்வதில்லை. ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால் ஜனவரி மாதத்தில் பூமியானது சூரியனுக்கு சற்று அருகில் இருக்கும். ஆகவே ஜனவரியில் பூமி அதிக வேகத்தில் பயணிக்கிறது.

சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிப்பவரின் அருகே உள்ளவர்கள் பிடிபடாமல் இருக்க அதிக வேகத்தில் ஓடுவார்கள். சற்றே தொலைவில் உள்ள சிறுவர்க்ள் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மெதுவாக ஓடுவார்கள். இது கிரகங்களுக்கும் பொருந்தும். பூமி போன்ற கிரகத்தைச் சுற்றுகிற விண்கலங்களுக்கும் பொருந்தும். ஜோகான்னஸ் கெப்ளர்  என்ற ஜெர்மன் விஞ்ஞானி (1571—1630) இந்த இயற்கை விதியைக் கண்டுபிடித்துக் கூறினார்
.
 நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றும் மங்கள்யான் பூமியை நெருங்குகையில் அதிக வேகத்துடன் வர முற்பட்டதற்கு இந்த இயற்கை விதியே காரணம். தொலைவு நிலையை மேலும் மேலும் அதிகரித்தால் மங்கள்யான் பூமியை  நோக்கி அதிக வேகத்துடன் வரும். இந்த விதமாக மங்கள்யானின் வேகத்தை அதிகரிப்பது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்து அதன்படியே செய்தனர்.

பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்த கட்டத்தில் மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. அது தொலைவு நிலையில் பூமியிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் தொலவில் இருந்தது. அண்மை நிலையில் அது ஆரமபத்தில் இருந்தது போல்வே சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது.

இங்கு ஒன்றை விளக்கியாக வேண்டும். மங்கள்யான் சுமார 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது தான் அதன் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டர். விண்கலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது வேகம் சில ஆயிரம் கிலோ மீட்டரே. கெப்ளர் விதிப்படி தொலைவில் இருந்தால் இயல்பாக வேகம் குறையும்.
 மங்கள்யான் 27 ஆம் தேதி புதன்கிழமையன்று பூமிக்கு மிக அருகாமையில் வந்து விட்டுப் பிறகு தொலைவு நிலைக்குச் சென்று விட்டது.

 மறுபடி  அது 30 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் பூமியை நெருங்கும். மங்கள்யான் சுமார் 280 கிலோ மீட்டர் உயரத்தில்  இருக்கின்ற  நேரத்தில்   மங்கள்யானில் உள்ள எஞ்சினை 29 நிமிஷ நேரம் இயக்குவர். இதனால் மங்கள்யான் கூடுதல் வேகம் பெறும். அதாவது   மங்கள்யானின் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டரிலிருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும். இதன் பலனாக அது செவ்வாயை நோக்கிப் பாயும்.

இவ்விதம் ( பூமி உட்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர்
.  .
   நாஸா கடந்த காலத்தில் பயனீர் விண்கலங்கள், வாயேஜர் விண்கலங்கள் ஆகியவற்றை அனுப்பிய போது இந்த உத்தியைப் பயன்படுத்தியது. அதாவது இந்த விண்கலங்கள் வியாழனை நெருங்கிய போது வியாழனின் ஈர்ப்பு சக்தியால் அதிக வேகத்தைப் பெற்றன. அதன் பலனாகவே அவை வியாழனுக்கு அப்பால் உள்ள சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களுக்கு அருகாமையில் சென்று அவற்றை ஆராய முடிந்தது.

   செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப பூமியின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்துவது என்பது இதுவே முதல் தடவை. அந்த அளவில் உலகில் பல நாடுகளில் விண்வெளித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை மிக ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.

மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயை நோக்கிக் கிளம்பிய பிறகு அது இயற்கை விதிகளின்படி விண்வெளியில் மிதந்து செல்லும் 

செவ்வாயை. நெருங்கும் வரையில் மங்கள்யானில் உள்ள எஞ்சினை இயக்கத் தேவையில்லை. சூரியனைச் சுற்றி வருவதற்கு பூமியில் எந்த எஞ்சினும் இல்லை எனபது போல மங்கள்யான் விண்வெளியில் இயல்பாக மிதந்து செல்லும். அக்கட்டத்தில் மங்கள்யானுக்கு எஞ்சினின் உதவி தேவையில்லை. மங்கள்யானை அப்படியே விட்டால் அது சூரியனை சுற்ற முற்படும். ஆகவே செவ்வாயை நோக்கிச் செல்லும் வகையில் மங்கள்யானின் பாதையில் சிறு திருத்தங்களைச் செய்ய தீபாவளி ராக்கெட் சைஸில் சிறு உந்திகள் இருக்கும்

. விண்வெளியானது கும்மிருட்டாக இருக்கும். கரிய வானில் சூரியன் எப்போதும். தெரியும்.. இதே போல எல்லாப் புறங்களிலும் நட்சத்திரங்கள் எப்போதும் தென்பட்டிருக்கும்.. அகத்திய நட்சத்திரம் உட்பட குறிபிட்ட சில நட்சத்திரங்களின் ஒளியானது மங்கள்யானில் உள்ள குறிப்பிட்ட கருவியில் எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும். அதாவது இப்படியாக நட்சத்திரங்களை வைத்து மங்கள்யான் வழியறிந்து செல்லும்.
  
மங்கள்யான் வளைந்த பாதையில் சுமார் பத்து மாத காலம் பயணிக்கும். இதற்கிடையே செவ்வாயும் தனது வளைந்த பாதையில் மணிக்கு 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்துக்கு மங்கள்யான் போய்ச் சேரும் வகையில் கணக்கிட்டு அதன் பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் சில மணி நேரம் முன்கூட்டியோ  அல்லது தாமதமாகவோ போய்ச் சேர்ந்தால் செவ்வாயை அடைய முடியாது.

இதில் வேறு ஒரு பிரச்சினையும் உள்ளது. செவ்வாயை நெருங்கிய பின்னர் மங்கள்யானின் வேகம் கணிசமாகக் குறைக்கப்பட்டாக வேண்டும்.அப்படி வேகத்தைக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும். எனவே மங்கள்யானில் உள்ள எஞ்சினை இயக்கி அதன் வேகத்தைத் தக்கபடி குறைப்பார்கள். அதைத் தொடர்ந்து மங்கள்யான் செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பிக்கும்
_________________________________________________________________________________


 

  

Nov 24, 2013

அடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை

Share Subscribe
" செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது " என்று நவமபர் மாதம் 6 ஆம் தேதி காலைப் பத்திரிகைகளின் தலைப்புகள் கூறின.

 ஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.  அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை  நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.
மங்கள்யான் விண்கலம்
கடந்த பல நாட்களில் அதன் சுற்றுப்பாதை பல தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது மங்கள்யான் பூமியிலிருந்து மேலும் மேலும் அதிகத் தொலைவில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி  எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அதிகபட்சத் தொலைவு  1,92,874 கிலோ மீட்டர் ஆக இருக்கும்படி செய்யப்பட்டது.

அடுத்தபடியாக டிசம்பர் முதல் தேதியன்று மங்கள்யான் பூமியைச் சுற்றுவதற்கு மாறாக செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். அப்போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அதி வேகப் பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிக் கிளம்பும். இத்துடன் ஒப்பிட்டால் மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் பூமியிலிருந்து உயரே கிளம்பிய போது அதன் அதிக பட்ச வேகம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விண்கலம் ( அதைச் சுமந்து செல்கின்ற ராக்கெட்) பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு ஒரு கிரகத்தை நோக்கிச் செல்வதானால் அது மேலே குறிப்பிட்டபடி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாக வேண்டும்,

 அவ்வளவு வேகத்தில் ஒரு விண்கலத்தை செலுத்துவதற்கான  சக்திமிக்க ராக்கெட் இந்தியாவிடம் இப்போது கிடையாது. ஆகவே தான் பூமியைப் பல தடவை சுற்றிவிட்டுப் பிறகு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டியபின் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும்படி செய்யும் ஏற்பாட்டை இந்திய விண்வெளி அமைப்பு ( இஸ்ரோ) பின்பற்றுகிறது.

மங்கள்யான் ஒவ்வொரு தடவையும் பூமியைச் சுற்றி வந்த போது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக மங்கள்யானின் வேகம் அதிகரித்தது. இது நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாமல் போன குறையைப் பூர்த்தி செய்தது. அதாவது மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டே அது பூமியைப் பல தடவை சுற்றும்படி செய்தனர்.

மங்கள்யான் விண்கலத்தின்  உயரம் எவ்விதம் படிப்படியாக
அதிகரிக்கப்பட்டது என்பதை இப்படம் காட்டுகிறது.
கடந்த காலத்தில் ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பிய போது அவற்றைச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் பூமியிலிருந்து நேரடியாக செவ்வாயை நோக்கிச் சென்றன.அந்த ராக்கெட்டுகள் சக்தி மிக்கவை என்பதே அதற்குக் காரணம்.

 நாம் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் நுட்பமான, திறன் மிக்க செயற்கைக்கோள்கள்களையும் விண்கலங்களையும் தயாரிப்பதில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டோம்.  ஆனால் ராக்கெட் தயாரிப்பில் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.

இந்தியா இப்போது   சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே தான் குறைந்த திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி என்னும் சிறிய ராக்கெட்டைப் ப்யன்படுத்தி மங்கள்யானை உயரே செலுத்தியது.

இந்த விஷயத்தில் இரண்டு விதமாக வாதிக்கலாம்.சக்திமிக்க பெரிய ராக்கெட்டுகளை உருவாக்கும் வரையில் காத்திருக்கலாமே?.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன்? செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்ற பெருமைக்காக இவ்வளவு அவசரமா  என்று கேட்கலாம்.
மங்கள்யானின் வைக்கப்பட்டுள்ள கலர் கேமரா பூமியைப் படம் எடுத்து
அனுப்பியுள்ளது. இதே கேமரா பின்னர் செவ்வாயைப் படம்  எடுத்து எனுப்பும்
வேறு விதமாகவும் வாதிக்கலாம். இதே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்திதான் சந்திரயான் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பினோம்.அது போல இந்த ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இயலும் என்னும்போது அதில் ஈடுபடுவதில் தவறு கிடையாது என்று கூற முடியும்.தவிர, மற்றவர் பின்பற்றிய வழியில் தான் சென்றாக வேண்டும் என்பது கிடையாது என்றும் கூறலாம்

.இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்  உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே தான் டிசம்பர் முதல் தேதியன்று  நள்ளிரவு மங்கள்யான் செவ்வாயை நோக்கிப் பாய இருக்கிறது. மங்கள்யான் விண்கலத்திலேயே இதற்கான எஞ்சின் உள்ளது.அது சில நிமிஷ நேரம் இயக்கப்படும். அப்போது விண்கலம் தேவையான வேகத்தைப் பெறும்.அந்த எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்படுவதானது அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

மங்கள்யான் அந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்து விட்டால் அது உறுதியாக செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு மங்கள்யான் பல சிறிய பரீட்சைகளிலும் வென்றாக வேண்டும்.

விண்வெளி என்பது காரிருள் நிறைந்தது. பகல் இரவு என்பது கிடையாது. நிரந்தர இருள் தான். ஆனால் சூரியனும் தெரியும்.அதே நேரத்தில் எங்கு திரும்பினாலும் நட்சத்திரங்களும் தெரியும்.” செவ்வாய்க்குச் செல்லும் வழி “ என போர்டு எல்லாம் விண்வெளியில் கிடையாது.  இந்த நட்சத்திரங்கள் தான் வழிகாட்டிகள்.

மங்கள்யான் விண்கலத்தில் நட்சத்திர ஒளி உணர்வுக் கருவி (Star Sensor)  உண்டு. கனோபஸ் ( அகத்திய நட்சத்திரம்) உட்பட குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ஒளி இக் கருவிக்குள்   எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும்.மங்கள்யான் தனது பாதையிலிருந்து விலகாமல் இருக்க இக்கருவி உதவுகிறது.இதை மங்களயானின் லகான் என்றும் சொல்லலாம். இது மாதிரியில் மங்கள்யானில் பல கருவிகள் உண்டு.

மங்கள்யான் டிசம்பர் முதல் தேதியன்று செவ்வாயை  நோக்கிக் கிளம்பும் போது வானில் செவ்வாய் கிரகம் ஓரிடத்தில் இருக்கும்.(கீழே படம் காண்க) ஆனால் மங்கள்யான் அந்த இடத்தை நோக்கிச் செல்லாமல் வேறு இடத்தை நோக்கிக் கிளம்பும். இதற்குக் காரணம் உண்டு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம் தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது.
டிசம்பர் முதல் தேதி பூமியின் பிடியிலிருந்து  விடுபட்டுக் கிளம்பும் மங்கள்யான்
வளைந்த பாதையில் 300 நாள் பயணம் செய்து செவ்வாயை அடையும்..செவ்வாய் கிரகம் இப்போது எங்கு உள்ளது என்பதையும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி எங்கு இருக்கும் என்பதையும் இப்படத்தில் காணலாம்.
மங்கள்யான் ஐந்தே வினாடிகளில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதற்குள்ளாக செவ்வாய் கிரகம் இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து 120 கிலோ மீட்டர் நகர்ந்து விட்டிருக்கும்.ஆகவே செவ்வாய் கிரகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தை நோக்கி மங்கள்யான் பயணிக்கும்.

 விண்கலம் ஓர் அலாதியான வாகனம். ஆளில்லாப் படகு ஒன்றை ஆற்றில் தள்ளி விட்டால் படகு மிதந்து போய்க் கொண்டே இருக்கும். விண்கலம் அப்படிப்பட்டதே. பூமியின் பிடியிலிருந்து மங்கள்யான் விடுபட்ட பின் இயற்கை சக்திகளின்படி தொடர்ந்து அது பறந்து கொண்டிருக்கும்.

சூரிய்னை பூமி   சுற்றுகிறது. அதற்கான வகையில் பூமியில் எஞ்சின் எதுவும் கிடையாது. பூமியானது இயற்கை சக்திகளின்படி சூரியனை சுற்றி வருகிற்து. எல்லா கிரகங்களும் இப்படித்தான் சூரியனை சுற்றுகின்றன. மங்கள்யான் விண்வெளிக்குச் சென்ற பின் அது இயற்கை சக்திகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்து ராக்கெட் அல்லது எஞ்சின் உதவியின்றி பறக்க ஆரம்பிக்கிற்து.

ஆனால் மங்கள்யானை அப்படியே விட்டுவிட்டால் அது சூரியனை சுற்றத் தொடங்கும். பல லட்சம் ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அது செவ்வாய்க்குச் செல்ல வேண்டிய வாகனம். ஆகவே சூரியனை சுற்ற விடாமல் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்ய வேண்டும்.

 இதற்கென மங்கள்யானின் எல்லாப் புறங்களிலும் தீபாவளி ராக்கெட் சைஸில் சிறிய ராக்கெட்டுகள பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை ராக்கெட் என்று வருணிப்பதில்லை. உந்திகள் (Thrusters ) என்று வருணீக்கிறார்கள். இவற்றைத் தக்கபடி சில வினாடிகள் இயக்குவதன் மூலம் மங்கள்யான் செல்லும் பாதையில் சிறு திருத்தங்கள் செய்ய முடியும்.

மங்கள்யான் செவ்வாய்க்க்குப் போய்ச் சேர 300 நாட்கள் ஆகும். இதற்குக் காரணம் உண்டு. முதலாவதாக செவ்வாய் கிரகம் இப்போது பூமியிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது. ஆகவே மங்கள்யான் பல கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். இரண்டாவதாக மங்கள்யான் வளைந்த பாதையில் செல்வதால் பயண தூரம் அதிகம்.

மங்கள்யான் செவ்வாய்க்கு சென்று கொண்டிருக்கையில் சிக்னல்கள் வடிவில் அதனுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டாக வேண்டும்.  இதில் ஒரு பிரச்சினை உண்டு. சிக்னல்கள் என்னதான் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் பூமியிலிருந்து சிக்னல்கள் மங்கள்யானுக்குப் போய்ச் சேர மங்கள்யான் இருக்கின்ற தூரத்தைப் பொருத்து 6 நிமிஷம் முதல் 20 நிமிஷம் வரை ஆகலாம்

ஆகவே குறிப்பிட்ட சமயத்தில் மங்கள்யான் எவ்வளவு தொலைவில் இருக்கும் எனபதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி முன்கூட்டியே மங்கள்யானுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாக வேண்டும். சில நிமிஷ தாமதம் ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும். இவ்விதப் பிரச்சினை ஏற்ப்டாமல் இருக்க மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டர்களே தக்க சமயங்களில் அந்த விண்கலத்தில் உள்ள கருவிகளுக்கு தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ள்து.
செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் மங்கள்யான்
அக்கிரகத்தை எவ்விதம்  நீள் வட்டப்பாதையில்
சுற்றும் என்பதை இப்படம்  ( வலது மூலை) காட்டுகிறது 
செவ்வாயை மங்கள்யான் நெருங்கும் கட்டத்தில் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அதாவது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும்.

 இல்லாவிடில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று விடும். மங்கள்யானில் மிச்சமிருக்கின்ற எரிபொருளைப் பயன்படுத்தி அதன் வேகத்தைக் குறைப்பார்கள். அத்ன் பிறகு மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கி அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பிக்கும்.

இப்படியாக மங்கள்யான் திட்டத்தில் 1.மங்கள்யானை உயரே செலுத்தும் கட்டம். 2. பூமியைச் சுற்றச் செய்யும் கட்டம். 3.செவ்வாய் நோக்கி செலுத்தும் கட்டம். 4 செவ்வாயை நோக்கி சுமார் 300 நாட்கள் பயணம் செய்யும் கட்டம். 5 செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்யும் க்ட்டம். 6. இறுதியாக செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும் கட்டம் என ஆறு கட்டங்கள் உள்ளன.

இப்போது முதல் இரு கட்டங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமும் ஐந்தாவது கட்டமும் தான் மிக முக்கியமானவை. இவற்றில் வெற்றி கிட்டலாம், கிட்டாமலும் போகலாம். ஆனால் ஒன்று. மங்கள்யான் திட்டம் தோற்றாலும் சரி, இத்திட்டம் மூலம் நாம் உருவாக்கிய தொழில் நுட்பம், உருவாக்கிய உத்திகள், பெற்ற அனுபவம் ஆகியவை என்றைக்கும்  வீண் போகாது.

( குறிப்பு: வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டதன் விளைவாகக் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கட்டுரைகளை அளிக்க இயலாமல் போய் விட்டது )


Oct 8, 2013

மிதக்கும் அணு மின்சார நிலையம்

Share Subscribe
ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை.  சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும்.  விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள்   அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.

மகாராஷ்டிர மானிலத்தில் ஜைதாப்பூரில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள அணுமின் நிலையம் பற்றி  ஒரு சமயம் ஆங்கில டிவி செய்தி சேனல் ஒன்று இப்படி பீதி கிளப்பும் தலைப்புடன் செய்தி வெளியிட்டது. (தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது).

ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை.  ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக  நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.
ரஷிய மிதக்கும் அணுமின் நிலையத்தின் மாடல்
image: SevMashZevod
கப்பல்களில் அணு உலை இடம் பெறுவது என்பது புதிது அல்ல. பனிக்கட்டியால் மூடப்பட்ட கடல் பகுதிகளில் பனிக்கட்டியை உடைத்து கப்பல்கள் செல்வதற்கு வழி அமைக்க ரஷியா ஏற்கெனவே விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை பனிக்கட்டி உடைப்பான் கப்பல்கள் ( icebreakers) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணுசக்தியால் இயங்குவை. அதாவது இவற்றில் அணு உலைகள் உண்டு.  இக் கப்பல்கள் இயங்க இந்த அணு உலைகள் உதவுகின்றன்

இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.

ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது.  பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Oct 6, 2013

சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம்

Share Subscribe
பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு  இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும்.

காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல.
ப்டத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm  என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும்.
பூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. ஆனால் காந்த வட துருவம் இடம் மாறிக் கொண்டிருக்கிறது. இது த்னிக் கதை. இப்போது சூரியனின் விஷயத்துக்கு வருவோம்.

சூரியனுக்கும் இப்படி வட காந்த துருவம், தென் காந்த துருவம் உள்ளன. அடுத்த சில மாதங்களில் சூரியனின் வட காந்த துருவம் தென் காந்த துருவ்மாக மாறி விடும் என்றும் தென் காந்த துருவம் வட காந்த துருவமாக மாறி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது அதிசயம் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி காந்த துருவ மாற்றம் (Reversal of Magnetic Poles)   நிகழும் போது சூரியனின் இயற்கையான “பூகோள் “ துருவங்கள் இடம் மாறுவதில்லை. அதாவது சிரஸாசனம் மாதிரியில் சூரியனின் “தலை’பகுதி கீழ் நோக்கி மாறி விடுவதில்லை. சூரியனின் உட்புற்த்தில் உள்ள காந்த துருவங்கள் மட்டுமே மாறுகின்றன.இது எப்போது நிகழ்கிறது?

சூரியனின் முகத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள்  (Sun Spots) தோன்றுவது உண்டு.சூரியனில் வெப்பம் சற்றே குறைவாக உள்ள இடங்களே நமக்கு கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன. ஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.

சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் ஒரு கால ஒழுங்குக்கு  உட்பட்டு நிகழ்கிறது.2009 ஆம் ஆண்டில் சூரியனில் அனேகமாகக் கரும் புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன.  சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் 2014 ஆம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டில் இது உச்ச அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியனில் கரும் புள்ளிகள்
பிறகு அடுத்த சுமார் ஐந்தரை ஆண்டுகளில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்து கரும் புள்ளிகளே இல்லாமல் போய்விடும். இந்தக் கணக்குப்படி 2020 ஆம் ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளே இராது.

கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டுவதும் இதே போல 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இதன்படி2025 ஆம் ஆண்டில் அது உச்ச அளவை எட்டும்.
சூரியனின் வட காந்த தென் காந்த துருவங்கள்.படத்தில்
 சூரியனின் காந்தப் புலத்தையும் காணலாம்
சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கின்ற கட்டத்தில் தான் சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது. அனேகமாக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இது நிகழலாம் என்று அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  தோடா ஹோக்சிமா கூறியுள்ளார். அவர் சூரிய ஆராய்ச்சி நிபுணர்.

சூரியனின் துருவ மாற்றம், சூரியனின் காந்தப் புலம் பற்றி ஆராய்வதற்கென  தனி ஆராய்ச்சிக்கூடம்  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. ஹோக்சிமா அந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவர்.

சூரியனுக்கு காந்த துருவங்கள் உண்டு என்பதால் சூரியனுக்கு காந்தப் புலமும் உண்டு. இந்த காந்தப் புலம் சூரிய மண்டலம் முழுவதும் வியாபித்துள்ளது. இக்காந்தப் புலமானது வலுவிழந்து கொண்டே போய் பூஜ்ய நிலைக்கு வரும் போது சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது.
சூரியனில் காந்த துருவங்கள் மாறி அமைந்துள்ளதைக் கவனிக்கவும்
சூரியனின் காந்தப் புலமானது அண்டவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் பூமி போன்று உள் வட்ட கிரகங்களைக் கடுமையாகத் தாக்காமல் பாதுகாக்கிறது.

சூரியனுக்கு உள்ளது போலவே பூமிக்கும் காந்தத் துருவங்கள் உள்ளன. பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது.அப்படியானால் சூரியனின் காந்த துருவங்கள் மாறுவது போல பூமியிலும் நிகழுமா என்று கேட்கலாம். அவ்விதம் நிகழத்தான் செய்கிறது. ஆனால் பூமியின் காந்தத் துருவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாறுகின்றன.

பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூமியின் மையத்தில்  இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் (Solar Wind) த்ரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது.


Oct 5, 2013

கடலில் திடீரென முளைத்த தீவு

Share Subscribe
அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை.
பலுச்சிஸ்தான் கரை ஓரமாக முளைத்த தீவு
ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் க்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

பலுச்சிஸ்தானில் ஏற்ப்ட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
புதிதாகத் தோன்றிய தீவு. வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்திய்த் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  (Plate) எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷியா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களையும் கடல்களையும் தாங்கி நிற்கும் பல்வேறு சில்லுகள் வெவ்வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.சில்லுகள் என்பவை பூமியில் மிக் ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு Plate Tectonics  எனப்படும்.
குவாடார், ஓர்மாரா ஆகிய இடங்களைக் காட்டும் மேப்
யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்ப்டும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன்றியது. அதைக் கண்டு க்ரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

பலரும் பின்னர் ப்டகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வேடிக்கை பார்க்கப் பலரும் இத்தீவுக்கு வந்தனர்
சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.
பலுச்சிஸ்தானில் உள்ள இந்த் சேற்று எரிமலை உலகிலேயே மிக
உயாந்ததாகும் (300 அடி) சேறு அவ்வப்போது வழிந்ததால்
ஏற்பட்ட அடையாளங்களைக் காணலாம்
சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாசமானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும்.

 சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரிமலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

பலுச்சிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன.


Sep 20, 2013

சந்திரனின் புழுதியை ஆராய்வதற்கு ஒரு விண்கலம்

Share Subscribe

 நமக்குப் புதை மணல் தெரியும். காலை வைத்தால் ஒருவர் உள்ளே போய்க் கொண்டே இருப்பார்.  இறுதியில் மணல் சமாதிதான். மனிதனை சந்திரனுக்கு அனுப்ப 1960 களில் அமெரிக்கா அப்போலோ திட்டத்தில் முனைந்திருந்த போது சந்திரனில் போய் இறங்குகின்ற அமெரிக்க விண்கலம் இப்படி சந்திரனின் புழுதியில் சிக்குண்டு புதைந்து போய்விடுமோ என்ற ஒரு சந்தேகம் மேலோங்கி இருந்தது. எனினும் அது அப்படியில்லை என்பது விரைவிலேயே தெளிவாகியது.

  சந்திரனில் பெரும் புழுதி இருப்பது என்னவோ உண்மைதான். அந்த்ப் புழுதி பற்றி ஆராய்வதற்கு இப்போது அமெரிக்கா ‘லாடிஎன்ற பெயரில் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. லாடி என்பது நீண்ட ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்த ஆளில்லா விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி விண்வெளியில் செலுத்தப்பட்டது.
சந்திரனில் பெரும் புழுதி இருப்பதற்குக் காரணம் உண்டு
சந்திரனில் வந்து விழும் விண்கற்களால் ஏற்பட்ட பள்ளங்கள்
. விண்வெளியிலிருந்து சந்திரனின் நிலப் பரப்பில் ஓயாது சிறியதும் பெரியதுமாகக் கற்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. மணிக்கு 60 ஆயிரம் அல்லது 70 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து விழும் கற்கள் சந்திரனின் தரையில் மோதி பல துண்டுகளாக உடைகின்றன.

 ஏற்கெனவே சந்திரனில் வந்து விழுந்த கற்களை மேலும் புதிதாக வந்து விழும் கற்கள் தாக்குகின்றன. அப்போது புழுதி தோன்றுகிறது. இப்படி பல நூறு கோடி ஆண்டுகளாக நடந்து வருவதால் சந்திரனில் புழுதி நிறையவே உள்ளது.
 .
சந்திரனுடன் பூமியை ஒப்பிட்டால் விண்வெளியிலிருந்து வரும் கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்து மிக வேகமாகக் கீழ் நோக்கி இறங்கும் போது கடுமையாகச் சூடேறி  நடுவானில் தீப்பற்றி எரிந்து விடுகின்றன. இறுதியாக மிஞ்சும் பொடி தான் கீழே வந்து விழுகிறது. இது பெரும்பாலும் கடலில் விழுந்து கரைந்து விடுகிறது. சந்திரனில் காற்று மண்டலம் இலலை எனபதால் விண்கற்கள் ந்டுவானில் தீப்ப்ற்றி எரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பூமியில் புழுதியானது காற்று காரணமாக இடம் பெயருகிறது. மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது. சந்திரனில் காற்று இல்லை. மழை இல்லை. கடுகு சைஸிலான ஒரு துணுக்கு ஓரிடத்தில் கிடந்தால் பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அது அதே இடத்தில் தான் கிடக்கும்.

பூமியில் உள்ள புழுதிக்கும் சந்திரனில் உள்ள புழுதிக்கும் வித்தியாசம் உண்டு. பூமியில் உள்ள புழுதி நைஸாக இருக்கும். சந்திரனில் உள்ள புழுதி நற நற என்று இருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலைப் பொடி செய்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியில் இருக்கும். தவிர, கரிய நிறம் கொண்ட அது எதன் மீதும் ஒட்டிக் கொள்ளும். உதறினாலும் லேசில் அகலாது. எனவே தான் சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் விசேஷ பிரஷ் எடுத்துச் சென்ற்னர்.
சந்திரனில் கற்களை சேகரிக்க
அமெரிக்க் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய சந்திர வண்டி
அமெரிக்கா 1972ல் அப்போலோ 17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு இரு விண்வெளி வீரர்களை அனுப்பிய போது  அந்த இருவரும் கூரை இல்லாமல் வெறும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சந்திர வண்டி மூலம் ( இந்த வாகனம் மடிக்கப்பட்ட நிலையில் அப்போலோ விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது) சந்திரனில் ஆங்காங்கு சென்று சந்திரனில் உள்ள கற்களை சேகரித்தனர்.

 அப்போது சந்திரனின் புழுதி அவர்களுக்குப் பெரிய  பிரச்சினையாகியது. விண்வெளி வீரர் செர்னான் வண்டியின் பின்பக்கமாக நடந்து வந்த போது அவரது பாக்கெட்டில் செருகி வைத்திருந்த ஒரு சுத்தியல் சந்திர வண்டியின் பின் சக்கர மட்கார்டில் மோதியது. இதனால் மட்கார்ட் பிய்ந்து போயிற்று. சரி, பரவாயில்லை என்று வண்டியை ஓட்டிய போது சந்திரனின் கரிய புழுதியானது   மழைபோல இவர்கள் மீது பொழிந்தது. அதை அப்படியே விட முடியாது.
சந்திர வண்டியின் பின்புற மட்கார்ட்
சேதமடைந்து டேப் போட்டு ஒட்டப்பட்டுள்ள காட்சி
 அவர்கள் இருவரும் அணிந்திருந்த காப்பு உடை மீது மேலும் நிறைய கரிப்பொடி அப்பிக் கொண்டால் அது சூரிய வெப்பத்தை நிறையக் கவரும். (கரிய நிறமானது வெப்பத்தை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டது) இதனால் காப்பு உடைக்குள் வெப்பம் அதிகரித்து விண்வெளி வீரர்களைத் தாக்கும். இதனால் வேறு பிரச்சினைகள் தோன்றும்.

 தவிர, கரிய பொடியானது விண்வெளி வீரர்களின் தலைக்கவசத்தில்  பார்வைக்காக உள்ள கண்ணாடிகள் மீது படியும். அவற்றைத் துடைக்க முயன்றால் கண்ணாடியில் கீறல்கள் விழும். அதனால் எதிரே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. செர்னான் கீழே இறங்கி சாதாரண  பசை டேப்பைப் பயன்படுத்தி மட்கார்டை ஒட்ட வைக்க முயன்றார். முதல் முயற்சியில் டேப்புடன் கரிய பொடி ஒட்டிக் கொண்டது தான் மிச்சம்.   மட்கார்டடை ஒட்ட வைக்க முடியவில்லை.

 இரண்டாவது முயற்சியில் மட்கார்ட் சரி செய்யப்பட்டது. வண்டியை மேலும் ஓட்டிச் சென்ற போது மட்கார்ட் மறுபடி கழன்று விழுந்தது. கடைசியில் விண்வெளி வீரர்கள் தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பூச்சு கொண்ட மேப்புகளை மடித்து டேப் போட்டு ஒட்டி மட்கார்ட் போலப் பொருத்திக் கொண்டனர். இந்த ஏற்பாடு பலனளித்தத்து.
இல்லாவிடில் அவர்கள் கற்களை சேகரிக்கும் பணியைக் கைவிட நேரிட்டிருக்கும்.

சந்திரனில் உள்ள புழுதி சுவாசத்தின் போது உள்ளே சென்றால் நுரையீரல் பாதிக்கப்படும். கண்ணில் பட்டால் எரிச்சல் ஏற்படும். சந்திரனில் காற்று இல்லை என்பதால் விண்வெளி வீரர்கள் வெளியே நடமாடும் போது சுவாசிப்பதற்கான காற்றை அளிக்கும் காப்பு உடையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சந்திரனில் போய் இறங்கிய விண்கலத்துக்குள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் வசதி உண்டு. வேலையை முடித்துக் கொண்டு திரும்பியதும்  கதவைச் சாத்திய பின் காப்பு உடையைக் கழற்றி விட்டு ஓய்வு எடுப்பர்.
விண்வெளி வீரர் ஷ்மிட் நெற்றியில்
 கரி அப்பியது போல சந்திர மண்டலப் புழுதி
அந்த மாதிரியான் ஒரு சமயத்தில் காப்பு உடையிலும் காலணிகளிலும் ஒட்டிக்கொண்டிருந்த சந்திரப் புழுதி விண்கலத்துக்குள் பரவியது. இதன் விளைவாக செர்னானும் அவரது சகா ஷ்மிட்டும் சில கணம் அதை சுவாசிக்க  நேர்ந்தது. இருவருமே வெடிமருந்து நெடி அடித்ததாகக் கூறினர். ஷ்மிட்டுக்கு லேசாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மறு நாள் சரியாகியது

இவ்விதமாக சந்திரனின் புழுதி பற்றி ஏற்கெனவே நாஸா விஞ்ஞானிகளுக்கு பல விஷயங்கள் தெரியும் என்றாலும் இப்போது அது பற்றி  மேற்கொண்டு ஆராய்வதற்காகவே லாடி விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவிர, சந்திரனில் சூரிய உதயத்துக்கு முன்பாக அடிவானில் ஒளிர்வு காணப்படுவது ஏன் என்பதையும் லாடி விண்கலம் ஆராயும்.

சந்திரனை நோக்கி செலுத்தப்பட்டுள்ள லாடி விண்கலத்தின் படம்
சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்று குறிப்பிட்டோம். எனினும் மிக மிக லேசான அளவுக்கு சந்திரனில் காற்று மண்டலம் உள்ளது. இது பற்றியும் லாடி விண்கலம் ஆராயும்.

  சந்திரனுக்கு இதுவரை அமெரிக்கா 40 க்கும் மேற்பட்ட விண்கலங்களை செலுத்தியுள்ளது. அனேகமாக இவை அனைத்துமே கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து ஏவப்பட்டன. ஆனால் லாடி விண்கலம் வர்ஜீனியா மாகாணத்தின் கரையோரமாக  வாலாப்ஸ் தீவில் அமைந்த ராக்கெட் தளத்திலிருந்து செலுத்தப்பட்டது.  

இதை சுமந்து சென்ற ராக்கெட்  நெருப்பைக் கக்கியபடி இரவு வானைக் கிழித்துக் கொண்டு உயரே பாயந்த போது அதன் ஒளிக்கீற்றை வாஷிங்டன், நியூயார்க் முதலான பல நகரங்களில் உள்ளவர்களும் காண முடிந்தது. அவர்களுக்கு இது அரிய அனுபவம்.
 நாஸாவின் லாடி விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டாலும் அது அக்டோபர் 6 ஆம் தேதி வாக்கில் தான் சந்திரனை அடைந்து சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். அதாவது அது சந்திரனை  எட்டிப்பிடிக்க சுமார் ஒரு மாத காலம் ஆகும்.

2008 ஆம் ஆண்டில் இந்தியா செலுத்திய சந்திரயான் சந்திரனை அடைய 18 நாட்கள் ஆகின. இத்துடன் ஒப்பிட்டால் 1959 ஆம் ஆண்டு செப்டம்பரில் சோவியத் யூனியன் (ரஷியா) அனுப்பிய லூனா -1 விண்கலம் 33 மணி நேரத்தில் சந்திரனை அடைந்தது. அதே கால கட்டத்தில் அமெரிக்கா அனுப்பிய பல விண்கலங்களும் இதே போல விரைவாக சந்திரனை அடைந்தன.
படத்தில் கீழ்ப்புறம் உள்ள புள்ளி தான் பூமி. லாடி விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் இரு முறை ( நீல நிறம் ) சுற்றி விட்டு மூன்றாவது முறையில் (சிவந்த நிறம்)  சந்திரனை நெருங்கி சந்திரனின் பிடியில் சிக்கும். படத்தில் மேற்புறம் உள்ள புள்ளி தான் சந்திரன்.. இப்படத்தில் பூமியை சந்திரன் சுற்றும் பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் 18 நாள் எடுத்துக் கொண்டதற்கும் இப்போது  லாடி விண்கலம் ஒரு மாதம் எடுத்துக் கொள்வதற்கும் காரணம் உண்டு. நிறைய செலவு பிடிக்கிற சக்தி மிக்க ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினால் விண்கலம் விரைவாக சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்படியின்றி மெதுவாகப் போய்ச் சேர்ந்தால் பாதகமில்லை என்ற அளவில் செலவு குறைவான நடுத்தர திறன் கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தினால் இவ்விதம் பல நாட்கள் ஆகும்.

  சந்திரனுக்கும் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கும் குறைந்த செலவில் விண்கலங்களைச் செலுத்த அமெரிக்க கணித நிபுணரான பெல் புரூனோ 1990 ஆம் ஆண்டில் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தார். சந்திரனை நோக்கி செலுத்தப்படும் ராக்கெட் இதன்படி நேரடியாக சந்திரனை நோக்கிக் கிளம்பாது. அது பூமியை நீள் வடடப் பாதையில் சுற்ற முற்படும்.

 ஒவ்வொரு தடவையும் அத்ன் மறு முனை மேலும் மேலும் அதிகத் தொலைவில் அமையும். கடைசி சுற்றில் அதன் மறு முனை சந்திரனை நெருங்கி விடும். அப்போது அதன் பாதை சற்று மாற்றப்படும். அதைத் தொடர்ந்து அது சந்திரனின் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இக்காரணத்தால் தான் லாடி விண்கலம் சந்திரனை அடைய ஒரு மாத காலம் ஆகும். ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இது பொருத்தமான ஏற்பாடே.

வருகிற நவம்பரில் செவ்வாய்க்கு இந்தியா செலுத்த இருக்கும் ஆளில்லா விண்கலமும் இவ்விதம் பெல் புரூனோ வகுத்த பாதையைப் பின்பற்றுவதாக இருக்கும்.

 இப்போது அமெரிக்கா செலுத்தியுள்ள லாடி விண்கலத்தில் சந்திரனின் நிலப்பரப்பை – புழுதியை ஆராயவதற்கும் மற்றும் மெல்லிய காற்று மண்டலத்தை ஆராய்வதற்கும் நுட்பமான கருவிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் லாடி விண்கலம் சந்திரனிலிருந்து சுமார் 25 முதல் 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி சந்திரனைச் சுற்றி வந்து ஆராயும்.

(  எனது இக் கட்டுரை தினமணி செப்டம்பர் 19 ஆம் தேதி நாளிதழில் வெளியாகியது. இப்போது எனது வலைப் பதிவில் பிரசுரமாகிறது)