Mar 24, 2013

வானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”

Share Subscribe
 நிலவற்ற நாட்களில் இரவு வானைக் கவனித்தால் திடீரென்று பிரகாசமான ஒளிக் கீற்று வேகமாக் கீழ் நோக்கி இறங்கும். சில கணங்களில் அது மறைந்து விடும். கிராமப் புறங்களில் இக்காட்சியை நன்கு காண முடியும்.

“ ந்டசத்திரம் கீழே விழுகிறது” என்று பலரும் இதைத் தவறாக வருணிப்பர். இதைப் பார்க்க நேரிட்டால் உடனே “ ப்ச்சை மரத்தைப் பாரு” என்றும் கூறுவார்கள்.
காற்று மண்டல்ம் வழியே கீழே இறங்குவது நட்சத்திரம் அல்ல 
வான மண்டலம் வழியே இவ்விதம் கீழே இறங்கும் ஒளிக் கீற்றானது  நட்சத்திரமே அல்ல.விண்வெளியிலிருந்து மிளகு சைஸிலான சிறிய கல் துணுக்கு அல்லது அதை விடச் சிறிய மணல் துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைய நேரிட்டால் இவ்விதம் தீப்பற்றி கீழ் நோக்கி இறங்கும். இவ்விதத் துணுக்குகள் முற்றிலுமாக எரிந்து பொடியாகி அந்தப் பொடி காற்றோடு கலந்து பூமியில் வந்து சேரலாம். ஆக, சிறிய துணுக்கு தான் இவ்விதம் ஷோ காட்டுகிறது.

  நட்சத்திரம் ஒன்று பூமியை விட பல ஆயிரம் அல்லது பல லட்சம் மடங்கு பெரியது. அத்துடன் நட்சத்திரங்க்ள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீட்டர் அப்பால் உள்ளவை. சொல்லப் போனால் பெரும்பாலான நட்சத்திரங்கள்  பயங்கர வேகத்தில் பூமியிலிருந்து மேலும் மேலும் அப்பால் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே எந்த நட்சத்திரமும் பூமியை நெருங்க் வாய்ப்பே கிடையாது.ஆகவே “ நட்சத்திரம் விழுகிறது “ என்பது முற்றிலும் தவறான விளக்கம்.
ஆப்பிரிக்காவில் இப்போதைய நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல். இதன் எடை 60 டன் 
விண்வெளியில் எண்ணற்ற விண்கற்கள் ( Asteroids)  உள்ளதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டோம். பறக்கும் மலை என்று சொல்லத்தக்க விண்கல்லிலிருந்து  நம் வீட்டு அம்மிக்கல் வரை வெவ்வேறு சைஸ்களில் விண்கற்கள் உள்ளன. இவை அல்லாமல்   ரோடு போடுவதற்குப் பயன்படும் ஜல்லி சைஸிலும் கூழாங்கல் சைஸிலும் விண்கற்கள் உள்ளன. தவிர மணல் துணுக்குகள், தூசு முதலியவையும் விண்வெளியில் உள்ளன.இவை தோன்றியது எப்படி?

செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே Main Asteroid Belt  உள்ளது பற்றி முந்தைய பதிவில் கூறினோம். சூரியனைச் சுற்றி வரும் இந்த பல லட்சம் அஸ்டிராய்டுகள் அணிவகுத்துச் செல்கையில் ஒன்றோடு ஒன்று மோதி உடைகின்றன். இவ்வித மோதல்களின் போது தோன்றும் துண்டு துணுக்குகள், மணல். தூசு ஆகியவையும் பூமி இருக்கின்ற வட்டாரத்துக்கு வந்து சேர்ந்து பூமியின் காற்று மண்டலம் வழியே கீழே இறங்குகின்றன. அப்போது தான் “ நட்சத்திரம் விழுவது போன்ற காட்சி” தோன்றுகிறது

.வால் நட்சத்திரங்கள் உடைவதால் ஏற்படுகின்ற தூசு, இயல்பாக விண்வெளியில் உள்ள தூசு முதலியவையும் இவ்விதம் பூமிக்குள் வந்து இறங்குகின்றன. ஓர் ஆண்டில் சுமார் 10   ஆயிரம் டன் எடை அளவுக்கு இவை பூமியில் வந்து விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.(  அண்டவெளித் தூசு என தனி சமாச்சாரமும் உள்ளது)

வால் நட்சத்திரங்கள்  வந்து செல்லும் போது ஏராளமான நுண்ணிய துகள்களை விட்டுச் செல்லும்.  அவற்றை அடித்துச் செல்ல விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் அத்துகள்கள் விண்வெளியில் பரவி நிற்கும். பூமி தனது பாதையில் அத்துகள்களின் ஊடே செல்லும் போது அத்துகள்கள் வான் மண்டலம் வழியே கீழே இறங்கும்.அப்போது எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் தென்படும். இதை ஒளிமழை (Meteor Shower) என்று கூறுவார்கள். இது கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும்
ஆண்டில் சில மாதங்களில் இவ்விதம் ஒளிமழையைக் காணலாம் 
ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் இந்த ஒளிமழை தென்படும். மேலை நாடுகளில் ஆர்வலர்கள் இரவில் ஊருக்கு வெளியே வாய்ப்பான இடங்களில் கூடி இதைக் காண்பர்.

இது ஒருபுறம் இருக்க கால்பந்து அல்லது அதை விட சற்றே பெரியதான விண்கற்கள் அவ்வப்போது பூமியில் வந்து விழுகின்றன. இவை முற்றிலுமாக எரிந்து போவது கிடையாது. இவை நெருப்புப் பந்து போல வானிலிருந்து கீழே இறங்கும். அக்கட்டத்தில் இவை பல துண்டுகளாக வெடித்து அத் துண்டுகள் பூமியில் வந்து விழும்.ஆங்கிலத்தில் இதை Meteorite என்கிறார்கள்,.
பாலைவண மணலில் கிடக்கும்    விண்கற்கள்
விஞ்ஞானிகளைப் பொருத்த வரையில் இவை மிக அரிய கற்கள். இந்த விண்கற்கள் சூரிய மண்டலம் தோன்றிய போது உருவானவை என்று கருதப்படுகிறது. ஆகவே புதிதாக விண்கல் கிடைத்தால் விஞ்ஞானிகள் அதை ஆராய்கிறார்கள்.

 இது ஒருபுறம் இருக்க, அரும் பொருட்களைச் சேகரிக்கிறவரகள் விண்கற்களை விலைக்கு வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றுக்கு நல்ல விலை உண்டு. பாலைவனங்கள், மற்றும் அண்டார்டிகா போன்று பனிக்கட்டியால் மூடப்பட்ட  பிராந்தியங்கள் ஆகிய இடங்களில் வானிலிருந்து கீழே வந்து விழுந்த விண்கற்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூட விண்கல் வந்து விழலாம். ஆனால் எது விண்கல் என்று கண்டுபிடிக்கத் தனித் திறன் தேவை.

ஒரு சமயம் அமெரிக்காவில் சிறிய சைஸ் விண்கல் ஒன்று  ( மரப் பலகையால் ஆன)  கூரையைப் பொத்துக் கொண்டு விட்டுக்குள் வந்து விழுந்தது. ஜெர்மனியில் சாலையில்  சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மிகச் சிறிய விண்கல் விழுந்தது.

பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியது இப்போதைய   நமீபியா நாட்டில் வந்து விழுந்த  ஹோபா (Hoba Meteorite) விண்கல்லாகும். இதன் நீளம் 3 மீட்டர். அகலம் சுமார் மூன்று மீட்டர்.உயரம் சுமார் ஒன்றரை மீட்டர். எடை சுமார் 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.. எனினும் 1920 ஆம் ஆண்டில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது .  விழுந்த இடத்திலேயே அப்படியே  பாதுகாக்கப்பட்டு வரும் இந்த விண்கல் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக உள்ளது.

அபூர்வமாக பல மீட்டர் நீளமுள்ள விண்கல் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைவது உண்டு.ரஷியாவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் செலியாபின்ஸ்க் நக்ருக்கு அருகே சுமார் 15 மீட்டர் நீளமுள்ள விண்கல் (அஸ்டிராய்ட்) காற்று மணடலத்தில் நுழைந்து வெடித்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அப்போது தோன்றிய அதிர்ச்சி அலைகள் காரணமாகவே எண்ணற்ற கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

 வானில் ஒரு விண்கல் வெடிப்பது என்பது மிக அபூர்வமாகவே நிகழ்வதாகும். இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் துங்குஸ்கா என்னுமிடத்தில் இது போன்று ஏற்பட்டது. அது மனித நடமாட்டமற்றது ஆனால் ஊசியிலைக் காடுகள் நிறைந்தது.வானில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் விளைவாகக் கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றின்.அதன் காரணமாக  எண்ணற்ற மரங்கள் ஒரேயடியாகச் சாய்ந்தன.
துங்குஸ்காவில் சரிந்து கிடந்த மரங்கள் 
அங்கு வானில் வெடித்தது விண்கல்லா அல்லது பூமியை நோக்கி இறங்கிய வால் நட்சத்திரமா என்பது தெரியவில்லை.

மிக மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியில் வந்து விழுந்து பெரு நாசத்தை ஏற்படுத்துவது என்பது மிக அபூர்வமானது.சுமார் 65 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர்  வட அமெரிக்க கணட்த்தின் தென் புறத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் வந்து விழுந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விண்கல் வந்து விழுந்ததால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவே டைனோசார் வகை விலங்குகள் அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது.

அந்த விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் டைனோசார் விலங்குகள் இனம் அழிந்ததற்கு பெரிய விண்கல் விழுந்தது தான் காரணமா என்பது குறித்து இன்னமும் சர்ச்சை உள்ளது. விழுந்தது விண்கல்லாக இல்லாமல்  ஒரு வால் நட்சத்திர்மாக இருக்கலாம் என இப்போது ஒரு புதுக் கருத்து கூறப்பட்டுள்ளது.

விழுந்தது எதுவாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் இப்படியான பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.


Mar 10, 2013

மேற்கு வானில் ஒரு வால் நட்சத்திரம்

Share Subscribe


வருகிற 12 ஆம் தேதி மாலை சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கே  அடிவானத்துக்கு சற்று மேலே வால் நட்சத்திரம் ஒன்று தென்படும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர் (மேலே படம் காண்க). அனேகமாக இது வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 பான்ஸ்டார்ஸ் என்னும் பெயர் கொண்ட இந்த வால் நட்சத்திரம் சில வாரங்களுக்கு முன்ன்ர் தென்னாப்பிரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வெறும் கண்ணால் பார்த்தால் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அப்படியிருக்க வருகிற 12 ஆம் தேதி வெறும் கண்ணால் பார்த்தால் பார்த்தால் தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறதா? ஆம.

அர்ஜெண்டினாவில் மார்ச் 2 ஆம் தேதி தெரிந்த பான்ஸ்டார்ஸ் வால் நடசத்திரம் 
ஒரு பெரிய “தாதா” வின் அறைக்குள் ஒருவர் அழைத்துச் செல்லப்படுகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் வெளியே வரும் போது சட்டை கிழிந்து, முடி கலைந்து, ஊமைக் காயங்களுடன் தலைகுனிந்து தள்ளாடியப்டி வெளியே வருகிறார்.

சூரிய மண்டலத்தின் தாதா சூரியனே. எங்கிருந்தோ வருகின்ற வால் நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனை சுற்றி விட்டுத் தான் திரும்பிச் செல்கின்றன..சூரியனைச் சுற்றுகையில் அவை சூரியனுக்கு’ அருகாமையில்’ இருக்க நேரிடுகிறது. சூரியனின் மிகுந்த ஈர்ப்பு சக்தியும் கடும் வெப்பமும் வால் நட்சத்திரத்தை  ஒரு கை பார்த்து விடுகின்றன. இப்படியாக ஒரு வால் நட்சத்திரம் சூரியனின் வெப்பம் காரணமாக பெரும் பொருளை இழந்து ‘ இளைத்து’ விடலாம். சில வால் நட்சத்திரங்கள் இரண்டாக பிளந்துவிடுவது உண்டு.
தென் கோளார்த்தத்தின் வானில் வான்ஸ்டார்ஸ்
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரீக்கா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில்  உள்ளவர்கள் சூரியனை சுற்றுவதற்காகப் போய்க் கொண்டிருந்த நல்ல பொலிவுடன் இருந்த வால் நட்சத்திரத்தைக் கண்டனர். நாமோ  சூரியனை சுற்றிவிட்டு  மீண்டு   வருகின்ற, வால் நட்சத்திரத்தைக் காணப் போகிறோம். சூரியனை 10 ஆம் தேதி கடக்கும் போது அதிக சேதம் ஏற்படாமல் இருந்தால் அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காண இயலும்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் லவ்ஜாய் என்ற ஒரு வால் நட்சத்திரம் சூரியனை மிக நெருக்கமாகக் கடந்தும் கூட சேதமின்றி தப்பி வந்து காட்சி அளித்தது. இப்போதைய நட்சத்திரம் அதை விடப் பெரியது. ஆகவே அது எதிர்பார்க்கப்படுகிற பிரகாசத்துடன் தென்படலாம்.

இந்த வால் நட்சத்திரம் சில நாட்களே வானில் தென்ப்டும்.. அது புறப்பட்ட இடத்தை நோக்கிச் செல்வதால் நம்மிடமிருந்து மேலும் மேலும் விலகிச செல்லும்.ஆகவே பெரிய டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் தெரியும். பின்னர் டெலஸ்கோப்பிலும் சிக்காது.

ஆங்கிலத்தில் அந்த வால் நட்சத்திரத்தின் பெயர்  Pan-STARRS என்ப்தாகும். ஹவாய் தீவுகளில் அமைந்த Panoramic Survey Telescope and Rapid Response System  என்ற அமைப்பின் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த அமைப்பின் பெயரைச் சுருக்கி அதற்கு வைத்துள்ளனர். அந்த வால் நட்சத்திரம் 2011 ல் கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு C/2011 L 4  என்ற பெயரும் உண்டு.இதுவே அதிகாரபூர்வ பெயர்.

இந்த வால் நட்சத்திரம் இதுவரை பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே அதாவது தென் கோளார்த்தத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே தெரிந்து வந்தது. மார்ச் 7 ஆம் தேதிக்குப் பிறகு தான்  பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே ( வட கோளார்த்தம்) உள்ள பகுதிகளில் தெரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு இந்த வால் நட்சத்திரத்தின் பாதையும் பூமியின் வளைவும் காரணமாகும்.

வால் நட்சத்திரங்களில் பலவும், சூரியனிலிருந்து  சுமார்  எட்டு லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊர்ட் முகில் ( Oort's Cloud) என்ற பகுதியிலிருந்து வருகின்றன. C/2011 L 4 வால் நட்சத்திரம் அப்படிப்பட்டதே.

ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து கிளம்புகிற கட்டத்தில் ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 500 கிலோ மீட்டர வேகம் கொண்டதாக இருக்கலாம். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள க்ட்டத்தில் அதன் வேகம் மணிக்கு சுமார்  இரண்டு லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும்.

பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப தலை காட்டிச் செல்லும். Halley's Comet என்ற வால் நட்சத்திரம் அதற்கு ஓர் உதாரணம்.. அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்வதாகும். இப்போதைய வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது இதுவே முதல் த்டவையாகும்.இது மறுபடி தலைகாட்ட பத்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

பெயர் தான் வால் நட்சத்திரமே தவிர அது நட்சத்திரமே அல்ல., வால் நட்சத்திரங்கள்  கிரகங்களைப் போன்றவை. பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் சூரியனை சற்றே அதுங்கிய வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன.சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் உள்ள தொலைவு ஓரளவில் நிலையானவை.. ஆகவே  இரவு வானில் இவற்றைக் காண இயலும்.
பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரம் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது
ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன். கிரகங்களுக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே வால் நட்சத்திரங்களுக்கும் சுய ஒளி கிடையாது.வால் நட்சத்திரங்களும் சரி, கிரகங்களும் சரி, அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.

கிரகங்களுடன் ஒப்பிடுகையில் வால் நட்சத்திரங்கள் வடிவில் சிறியவை.     ஒரு வால் நட்சத்திரம் என்பது சிறிய குன்றுகள்  என்று சொல்லத்தக்க அளவிலான  பெரிய பெரிய பாறாங்கற்கள், சிறு கற்கள், மணல்,,உறைந்த பனிக்கட்டி உருண்டைகள், சில வகை வாயுக்கள் ஆகியவற்றால் ஆனதே.

ஒரு வால் நட்சத்திரத்தின் குறுக்களவு சில நூறு மீட்டர் அளவில் இருக்கலாம். பல கிலோ மீட்டர் அளவிலும் இருக்கும். இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியாகும் ( Nucleus).இந்த தலைப் பகுதியைச் சுற்றி சிகை (Coma) அமைந்திருக்கும், இது பஞ்சு மிட்டாய் மாதிரி. நுண்ணிய தூசு, வாயுக்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும். இதன் குறுக்களவு பல லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும். சூரியனை நெருங்கிய கட்டத்தில் தான் சிகை உருவாகிறது. இதன் மீது சூரிய ஒளி படும் போது தான் வால் நட்சத்திரம் பெரிய வடிவைக் கொண்டது போன்று காட்சி  அளிக்கிறது.

 வால் நட்சத்திரத்துக்கு நிரந்தர வால் கிடையாது.பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போது அது பெரிதும் பனிக்கட்டி உருண்டைதான். சூரியனை நோக்கிக் கிளம்பி பெரும்பாலான தூரம் வந்ததற்குப் பிறகு தான் வால் நட்சத்திரத்தின் வால் தோன்ற ஆரம்பிக்கிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்களின் விளைவாகவே வால்  நட்சத்திரத்துக்கு வால் முளைக்கிறது. சூரியனின் இத் துகள்கள் Solar Wind  என்று அழைக்கப்படுகின்றன். இவை கிரகங்களையும் தாக்குகின்றன. வால் நட்சத்திரங்களையும் தாக்குகின்றன.
வால் நட்சத்திரத்தின் வால்கள் எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாக இருக்கும். Solar wind இதற்குக் காரணம் 
சூரியனின் இத் துகள்களின் தாக்குதலால் வால் நட்சத்திரத்திலிருந்து வாயுக்களும், மிக நுண்ணிய துகள்களும் டன் கணக்கில்  வெளிப்பட்டு பின் நோக்கித் தள்ளப்படுகின்றன. இதுவே வால் போல அமைகிறது. சூரிய ஒளி பட்டு இது நீண்ட வால் போல் காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரத்தின் வால் பகுதி பல கோடி கிலோ மீட்டர்   நீளத்துக்கு  இருக்கலாம்.சொல்லப் போனால் வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் உண்டு. ஒன்று தூசு அடங்கிய வால். மற்றொன்று வாயுக்களால் ஆன வால்.

.ஒரு சமயம் பூமியானது தனது சுற்றுப்பாதையில் இந்த வால் வழியே சென்றது.இது ஒரு சாலை ஓரமாக   குப்பை எரிவதால் தோன்றும்  புகை மண்டலம் வழியே கார் செல்வதைப் போன்றதே.

வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வருகையில் சூரியத் துகள்களின் தாக்குதலால் கணிசமான அளவில் பொருளை இழக்கின்றன. . ஆகவே பல தடவை வந்து சென்ற ஒரு  வால் நட்சத்திரம் இளைத்துக் காணப்படும்.  

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை வால் நட்சத்திரங்கள் மன்னர்களையும் மக்களையும் பயமுறுத்தின. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னரின் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து நேரும் என்ற மூட நம்பிக்கை நிலவியது. வால் நட்சத்திரம் தோன்றினால் உலகமே அழிந்து விடலாம் என மக்களும் அஞ்சினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த மூட நம்பிக்கை நிலவியது.

 வருகிற 12 ஆம் தேதியன்று பான்ஸ்டார்ஸ் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியாமல் போனால் வருந்த வேண்டாம்.  நவம்பர் மாத வாக்கில் ISON எனப்படும்  வால் நட்சத்திரம் வரப் போகிறது. யார் கண்ணிலும் படாமல் தப்பாது என்கிற அளவுக்கு அது பெரியதாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்து பல நாட்களுக்கு அது காட்சி தரும்.

Mar 7, 2013

எங்கிருந்து வருகுது விண்கல்?

Share Subscribe
ரஷியாவில்  நடுவானில் வெடித்த விண்கல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது வந்த பாதையையும் அவர்களால் கணக்கிட முடிந்துள்ளது.

விண்கல் எங்கிருந்து வருகிறது? இக்கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதாகக் கூறலாம். விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன.சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் சைஸிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன.

ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய தொங்குவதைப் போல பூமிக்கு மேலே  வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது. எல்லா விண்கற்களுமே பயங்கர வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.

சூரிய மண்டலத்தில் பூமி, புதன்,  வெள்ளி, செவ்வாய், வியாழன் முதலான கிரகங்கள் தனித்தனிப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதே மாதிரியில் விண்கற்களுக்கும். தனிப் பாதை உண்டு.இது செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் நடுவே உள்ளது. இது Main Asteroid Belt என்று குறிப்பிடப்படுகிறது.
செவவாய் (Mars) கிரகத்துக்கும் வியாழன் (Jupiter) கிரகத்துக்கும் இடையே உள்ள அஸ்டிராய்டுகள் 
 சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் தோன்றிய போதே இந்த விண்கற்களும் தோன்றியதாகக் கருதப்படுகிறது.ஒரு பெரிய பங்களாவைக் கட்டி முடித்தபின் பார்த்தால் மீதியாக் இருக்கும் செங்கற்கள் ஒருபுறம் கிடக்கும். மிஞ்சிய மணல், ஜல்லி,ஆகியவையும் காம்பவுண்ட் சுவர் கட்டியது போக மிஞ்சிய பெரிய கருங்கற்களும் கிடக்கும். இது போல சூரிய மண்டலமும் கிரகங்களும் உருவான பின்னர் இந்த் விண்கற்கள் மிஞ்சி நின்றதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இந்த விண்கற்கள் கூட்டத்தில் பல கோடி விண்கற்கள் இருந்திருக்க வேண்டும்.

விண்கற்கள் உள்ள் இடத்தில் ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் அப்படி உருவாமல் போனதால அந்த இடத்தில் விண்கற்களாகக் காணப்படுகின்றன.என்றும் ஒரு கருத்து உண்டு. பெரியதும் சிறியதுமான துண்டுகள் ஒன்று சேர்ந்து தான் கிரகங்கள் உருவாகின .பூமியும் இப்படித்தான் உருவாகியது.

சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய சில காலத்துக்குப் பின்னர் அதாவது சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு பயங்கர   நிகழ்ச்சியின் விளைவாக விண்கற்கள் கூட்டத்திலிருந்து  எண்ணற்ற விண்கற்கள் பூமி, சந்திரன், புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய் முதலிய கிரகங்கள் அமைந்த திசையை நோக்கிப் புயல் போல் கிள்ம்பி இந்த கிரகங்களைத் தாக்கின.
விண்கற்கள் தாக்குதலால் சந்திரனில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள். செவ்வாய், புதன் கிரகங்களிலும் இதே போன்ற பள்ளங்கள் உள்ளன
இவ்விதம் விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்ட வட்டவடிவப் பள்ளங்களை இன்றும் சந்திரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களில் காண முடிகிறது  பூமியில்  இவை அபூர்வமாகவே தென்படுகின்றன.விண்கற்கள் தாக்கியதால்  பூமியில் ஏற்பட்ட பள்ளங்கள்  காற்று ,மழை மற்றும் பூகம்பம் காரணமாக மேடிட்டுப் போயின. அல்லது பெரிய ஏரியாக மாறின.( வெள்ளி கிரகத்தின் தரையை நம்மால் இன்னும் விரிவாகக் காண முடியவில்லை என்பதால் வெள்ளி கிரகம் பற்றி எதுவும் திட்டவட்டமாகக் கூற முடியாது)

ஆனால் விண்கற்களால் பூமி உட்பட இந்த நான்கு கிரகங்கள் மீதான தாக்குதல் அடியோடு நின்று விடவில்லை. ஒரு கிரகத்தை அதன் பாதையிலிருந்து வெளியே தள்ள முடியாது. ஆனால் விண்கற்கள் அப்படி அல்ல.செவ்வாய், மற்றும் வியாழன் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தியானது  விண்கற்கள் கூட்டத்தில்  அவ்வப்போது சலனத்தை உண்டாக்குகின்றன. இதன் விளைவாக விண்கற்கள் அவற்றின் பாதையிலிருந்து அவ்வப்போது வெளியே தூக்கி எறியப்படுகின்றன.
இந்த மேப்பில் நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.இதை குறுக்காகக் கடக்கும் அஸ்டிராய்டுகள் சிலவற்றின் நீள்வட்டப்பாதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன
இப்படி தூக்கி எறியப்பட்ட விண்கற்கள் சூரியனை வழக்கமான பாதையில் சுற்றுவதற்குப் பதிலாக நீள் வட்டப் பாதையில் சுற்ற முற்படுகின்றன. அதாவது அவை செவ்வாய், பூமி, வெள்ளி, புதன் ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளை குறுக்காகக் கடக்கின்றன. இது ஆளில்லா லெவல் கிராசிங் வழியே லாரியும் பஸ்ஸும் ரயில்பாதையைக் கடப்பதற்கு ஒப்பானது.

பூமியின் சுற்றுப்பாதையை ஒரு விண்கல் கடக்கும் நேரத்தில் அதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமானால் பிரச்சினை இல்லை. ஆனால் பூமி தனது சுற்றுப்பாதையில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் வழியே விண்கல் கடக்க முயன்றால் பிரச்சினைதான்.லெவல்கிராசிங்கில் லாரி மீது ரயில் மோதுவது போன்று பூமியின் மீது விண்கல் மோத நேரிடும். ரஷியாவில் இது மாதிர்த்தான் நிகழ்ந்துள்ளது.
அஸ்டிராய்ட் ஒன்று எவ்விதம் பூமியின் பாதையை க் குறுக்காகக் கடக்கிறது என்பதை விளக்கும் படம். எண்ணற்ற அஸ்டிராய்டுகள் இவ்வித்ம் பூமியின் பாதையைக் கடந்து செல்கின்றன
இது வரை நாம் பொதுவில் விண்கல் என்றே குறிப்பிட்டு வந்தோம். ஒரு விண்கல் பல நூறு கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம். அல்லது சில மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருக்கலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட Main Asteroid Belt ல் இப்படி வெவ்வேறு சைஸ்களிலான விண்கற்கள் உள்ளன. பொதுவில் பெரிய சைஸில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர்.அந்த அளவில் இருபது அல்லது முப்பது மீட்டர் நீளமுள்ள விண்கற்களும் அஸ்டிராய்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.

மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.இப்படியான விண்கல் ஒன்று வானிலிருந்து விழுவதை உங்களால் எளிதில் காண முடியும். இது பற்றி அடுத்த பதிவில் கவனிப்போம்.