Jun 10, 2012

தலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்

Share Subscribe
செயற்கைக்கோள் இல்லையேல் டிவி ஒளிபரப்பே சாத்தியமில்லை. டிவி சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை சிக்னல்கள் வடிவில் உயரே உள்ள செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றன. செயற்கைக்கோள் அவற்றை வாங்கி கீழ் நோக்கி அனுப்பும் போது எல்லா இடங்களுக்கும் அந்த சிக்னல்கள்  (நிகழ்ச்சிகள் ) கிடைக்கின்றன.

டிவி ஸ்டுடியோவிலிருந்து இணை சுற்று
செயற்கைக்கோளுக்கு சிக்னல் அனுப்பப்படுவதையும்
பின்னர் சிக்னல்கள் கீழே திருப்பி அனுப்பப்படுவதையும்
இப்படம் விளக்குகிறது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் மூலம் இந்த சிக்னல்களைப் பெற்றுப் பிறகு வீடுகளுக்கு கேபிள் மூலம் டிவி நிகழ்ச்சிகள் அளிக்கின்றனர். இப்போதெல்லாம் DTH சேவை அளிக்கும் நிறுவனங்கள்   வீட்டு மாடிகளில் சிறிய கிண்ண வடிவ ஆண்டெனாக்களைப் பொருத்தி உங்களுக்கு டிவி நிகழ்ச்சிகள் கிடைக்கும்படி செய்கின்றன.

செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் பெற
கிண்ண வடிவ ஆண்டெனா
சென்னையில் எங்காவது வீட்டு மாடியில் நிறுவப்பட்டுள்ள கிண்ண வடிவ ஆண்டெனாவை கவனித்துப் பாருங்கள். அது வானில் தென் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். அபூர்வமாக ஒரிரு ஆண்டெனாக்கள் தென்மேற்கு திசையை நோக்கி இருக்கலாம். இந்த ஆண்டெனாக்கள் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே அமைந்துள்ள செயற்கைக்கோளைப் பார்த்தபடி அமைந்திருக்கும். அந்த ஆண்டெனா சிறிது கூட அந்தப் பக்க்கம் இந்தப் பக்கம் திரும்பி விடக்கூடாது. இது செயற்கைக்கோளுக்கும் பொருந்தும்.

தட்டை வடிவ ஆண்டெனா
ஆண்டெனா நகராதபடி உறுதியாக ஆணி அடித்து முடுக்கி விட முடியும். செயற்கைக்கோள் அப்படி அல்ல. எந்த செயற்கைக்கோளானாலும் ஓயாமல் பூமியை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வானில் எந்த செயற்கைக்கோளும் நிலையாக ஓரிடத்தில் நிற்க முடியாது. அது பூமியைச் சுற்றுகின்ற வேகம் குறைந்தாலும் இறுதியில் பூமியில் விழுந்து விடும். அப்படியிருக்கும்போது செயற்கைக்கோள் வானில் எப்படி “ நிலையாக” இருக்க முடியும்?


நம்மைப் பொருத்த வரையில் அது “ நிலையாக “ இருக்கும்படி செய்ய முடியும்.
பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக 23 மணி 56 நிமிஷம், நான்கு வினாடி ஆகிறது. பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக இதே நேரத்தை எடுத்துக் கொண்டால் சென்னைக்கு மேலே வானில் குறிப்பிட்ட இடத்தில் தெரிகிற செயற்கைக்கோள் என்றும் சென்னைக்கு மேலே அதே இடத்தில் தெரிந்து கொண்டிருக்கும்.

செயற்கைக்கோள் இப்படி ஏன் ’நிலையாக’ இருக்க வேண்டும்? கீழே உள்ள டிவி நிலையம் அனுப்புகின்ற சிக்னல் நேர் கோட்டில் செல்லும். செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும் சிக்னல்  செயற்கைக்கோளை சென்றடையாது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கும். இவ்விதமாக வானில் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே ‘நிலையாக‘ இருக்கின்ற செயற்கைக்கோள்களுக்கு Geostationary Satellite  என்று பெயர். இவை பூமிக்கு இணையாக பூமியைச் சுற்றுவதால் தமிழில் இவற்றை இணைசுற்று செயற்கைக்கோள்கள் என்று கூறலாம்.

பூமியை சுற்றுகின்ற எந்த செயற்கைக்கோள் ஆனாலும் அது இயற்கை விதிகளுக்கு ஏற்ப செயல்படுகின்றது. பூமியை சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகின்ற செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்ற சுமார் 90 நிமிஷம் எடுத்துக் கொள்ளும். செயற்கைகோள் இருக்கின்ற உயரம் அதிகரிக்க அதிகரிக்க அது (கெப்ளர் கூறிய விதியின்படி)  மேலும் மேலும் மெதுவாக பூமியைச் சுற்றும். உதாரணமாக 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்தியாவின் ஜிசாட் 12
இணைசுற்று செயற்கைக்கோள்
இந்த இயற்கை விதிகளின்படி பார்த்தால் பூமியை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 23 மணி, 56 நிமிஷம் 4 வினாடி எடுத்துக் கொள்கின்ற செயற்கைக்கோள் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் பறப்பதாக இருக்க வேண்டும். தவிர, அது பூமியிலிருந்து எப்போதும் அதே உயரத்தில் இருக்க வேண்டும். பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்ற வேண்டும்.

 இந்த உயரத்தில் அமைந்தபடி ஒரு செயற்கைக்கோள் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றும்படி செய்யும்போது அது எந்த வேகத்தில் சுற்றுகிறது என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. அது எடுத்துக் கொள்கின்ற நேரம் தான் முக்கியம். ஆகவே அந்த செயற்கைக்கோள் அதே உயரத்தில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். இதற்குப் பல வழிகள் உள்ளன.

உயரே செல்லக் காத்திருக்கும்
ஜிசாட்- 10 செயற்கைக்கோள்
இந்தியாவுக்கு மேலே 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இப்படியான பல இணைசுற்று செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியாவின் உபயோகத்துக்கென மேலும் பல இணைசுற்று செயற்கைக்கோள்களை செலுத்தத் திட்டம் உள்ளது. இவற்றில் இன்சாட் 3D, ஜிசாட் 6, ஜிசாட் 7, ஜிசாட் 9, ஜிசாட் 10 முதலான செயற்கைக்கோள்கள் அடங்கும்.

இந்தியா இப்படி எடை மிக்க செயற்கைக்கோள்களை அடிக்கடி செலுத்த வேண்டியுள்ளது ஏன் என்று கேட்கலாம். இந்தியா ஒரு பெரிய நாடு. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. டிவி ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் சேகரிப்பு என பல பணிகளுக்கும் நாம் செயற்கைக்கோள்களை நம்பி இருக்கிறோம். உள்ளபடி தமிழில் மட்டும் பல டிவி சேனல்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழிகளையும் கணக்கில் கொண்டால் பல நூறு டிவி சேனல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லாமே இணைசுற்று செயற்கைக்கோள்களை நம்பி நிற்பவை.

பல்வேறு நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் இணைசுற்று செயற்கைக்கோள்கள் மூலமே நடைபெறுகின்றன.  நாட்டின் பங்கு மார்க்கெட் வர்த்தகம் செயற்கைக்கோள் மூலமாகவே நடைபெறுகிறது. மணியார்டர் அனுப்புவது கூட செயற்கைக்கோள் மூலம் நடக்கிறது. இப்படியாக இவ்வித செயற்கைக்கோள்கள் பல பணிகளைச் செய்து வருகின்றன. ரயில் பயணத்தின் போது இண்டெர்னட் இணைப்பு பெறவும் இணைசுற்று செயற்கைகோள் மூலம் ஏற்பாடு செய்யத் திட்டம் உள்ளது. செயற்கைக்கோள்கள் இல்லை என்றால் நாடே ஸ்தம்பித்து விடும் என்ற நிலை உள்ளது.

இப்போது நம் தலைக்கு மேலே இந்தியாவை நோக்கியபடி 13 இணை சுற்று செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை அனைத்தும் பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator)  நேர் மேலே உள்ளன. அதே சமயத்தில்அவை வெவ்வேறான  தீர்க்க ரேகைக்கு மேலே உள்ளன. அவை வருமாறு:-

.        ஜிசாட்- 2  செயற்கைக்கோள்-- 48 கிழக்கு தீர்க்க ரேகை
         இன்சாட் 3E, ஜிசாட் 8 --- 55 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 3C இன்சாட் -- 4CR, கல்பனா, எடுசாட்-- 74 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 2E, இன்சாட் 3B, இன்சாட் 4A, ஜிசாட் 12 -- 83 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 4B, இன்சாட் 3A -- 93 கிழக்குத் தீர்க்க ரேகை

இவற்றில் கல்பனா செயற்கைக்கோள் வானிலை தகவல்களை அளிப்பதற்கானது. எடுசாட் செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்புக்கானது. மற்ற 11 செயற்கைக்கோள்களும் தக்வல் தொடர்பு உட்பட மேலே குறிப்பிட்ட பணிகளுக்கானவை. இவை போதாது. இந்தியாவுக்கு இவை போன்று மேலும் பல இணை சுற்று செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவுக்கு மேலே 35,786  கிலோ மீட்டர் உயரத்தில்
அமைந்துள்ள 13 இணைசுற்று செயற்கைக்கோள்களைக்
காட்டும் வரைபடம்
இவை ஒவ்வொன்றின் ஆயுள் 10 முதல் 15 ஆண்டுகள். ஆகவே அவ்வப்போது மாற்று செயற்கைக்கோளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். எடைமிக்க இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இப்போது இல்லை. ஆகவே ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நம்பி இருக்கிறோம். பல சமயங்களிலும் முன்கூட்டி இடம் பதிவு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது. ஏரியானின் திட்டத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மேலும் காத்திருந்தாக வேண்டும்.

உதாரணமாக் இந்தியாவின் ஜிசாட்-10 செயறகைக்கோளை இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே உயரே செலுத்தியிருக்க வேண்டும். அது தாமதப்பட்டதால் இந்தியாவில் டிஷ் மூலம் டிவி நிகழ்ச்சிகளை அளிக்கும் ஓர் இந்திய நிறுவனம தனது சேவையை மேற்கொண்டு விஸ்தரிக்க முடியாமல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது

இந்தியா போலவே உலகில் பல நாடுகள் சொந்தமாக இணைசுற்று செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளன. ஆனால் பல சிறிய நாடுகளின் தேவைக்காக இண்டல்சாட் என்னும் சர்வதேச நிறுவனம் உயரே இணைசுற்று செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. இவற்றைப் பயன்படுத்தும் சிறிய நாடுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலுக்கு மேலே உள்ள
செயற்கைக்கோள்களைக் காட்டும் படம்.
வளைவு கோட்டுக்கு கீழே உள்ள எண்கள் கிழக்கு
அல்லது மேற்கு தீர்க்க ரேகையைக் குறிப்பவை.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி பூமியைச் சுற்றி பூமியின்  நடுக்கோட்டுக்கு மேலே மொத்தம் சுமார் 401 இணைசுற்று செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் வானில் அமெரிக்க செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

நாம் இப்பதிவில் முக்கியமாக இணைசுற்று செயற்கைக்கோள்கள் பற்றியே கவனித்தோம். பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும் செயற்கைக்கோள்கள் நிறையவே உள்ளன. இவை வட தென் துருவங்களுக்கு மேலாக அமைந்துள்ளதால் துருவ செயற்கைக்கோள்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் இணைசுற்று செயற்கைக்கோள்களைச் சேர்க்காமல் இந்தியாவின் 11 துருவ செயற்கைக்கோள்கள் வடக்கு தெற்காக பூமியை சுற்றி வருகின்றன். இவை பிரதானமாகப் படம் எடுக்கும் செயற்கைக்கோள்களாகும். சுமார் 600 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த செயற்கைக்கோள்களின் எடை குறைவு என்பதால் இவை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுகின்றன.
 துருவ செயற்கைக்கோள் பூமியை
வடக்கு தெற்காகச் சுற்றுவதைக் காட்டும் படம்.
ஆனால் இன்சாட், ஜிசாட் போன்ற எடை மிக்க இணை சுற்று செயற்கைக்கோள்களை நாமே உயரே செலுத்திக் கொள்ளும் நிலையை எட்டுவதற்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி பெறுவது மிக அவசியம். அவ்விதம் வெற்றி கிட்டினால் அடுத்ததாக நாம் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை செலுத்தித் தருவதிலும் ஈடுபட்டு நிறைய டாலர் சம்பாதிக்கலாம். உள்ளபடி நாம் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை, அதாவது சுமார் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களை, நமது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்திக் கொடுத்து ஓரளவில் பணம் சம்பாதித்து வருகிறோம்.

பிற நாடுகளின் தேவைக்கேற்ப நம்மால் செயற்கைக்கோள்களை தயாரித்து அளிக்க இயலும். பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் நமக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவற்றைச் செலுத்தித் தருவதிலும் நாம் ஈடுபட்டால் இத்துறையில் நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ முடியும்.  நாமாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் வெற்றி பெறுவதைப் பொருத்து தான் எல்லாமே உள்ளது.

Jun 5, 2012

சூரிய ஒளித் தட்டில் கருப்பாகத் தெரியும் வெள்ளி

Share Subscribe
பெயருக்கு ஏற்ப வெள்ளி கிரகம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில், அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில், வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும். மாலையில் இருட்டிய பிறகு மேற்கு வானில் தெரிந்தால் அதன் பெயர் அந்தி வெள்ளி, அதி காலையில் கிழக்கு வானில் தெரிந்தால் விடி வெள்ளி என்று அழைக்கின்றனர். இரண்டுமே ஒன்று தான். வெள்ளி (Venus) கிரகத்தைக் காணாதவர்கள் இருக்க முடியாது. பிரகாசமான ஒளியை வீசுவதால் அது இயல்பாக உங்களைக் கவரும்.

மேற்கு வானில் சந்திரன் அருகே
ஒளிப்புள்ளியாகத் தெரிவதே வெள்ளி கிரகம்
ஆனால் ஜூன் 6 ஆம் தேதி காலையில் சூரியனின் ஒளித் தட்டில் வெள்ளி கிரகத்தை நீங்கள் கருப்புப் பொட்டு வடிவில் காணலாம். இது ஒரு வகையில் கிரகணம் போன்றதே. ஆனாலும் இதை கிரகணம் என்று வர்ணிப்பதில்லை.

சூரிய கிரகணம் பற்றி நமக்குத் தெரியும். சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டை முற்றிலுமாக அல்லது ஓரளவில் மறைக்கும். எல்லா அமாவாசைகளிலும் சந்திரன் இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைந்திருக்கும் என்றாலும் நேர் குறுக்கே வராது. சந்திரனின் சுற்றுப்பாதை பெரும்பாலான சமயங்களில் சாய்வாக அமைவதே அதற்குக் காரணம்.  அபூர்வமாக சூரியன்,- சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அந்த வரிசையில் அமையும் போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை
 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ளது
சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது. புதன் முதல் வட்டத்தில் உள்ளது என்றால், வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்திலும் பூமி மூன்றாவது வட்டத்திலும் அமைந்துள்ளன. வேறு விதமாக்ச் சொல்வதானால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே புதன், வெள்ளி ஆகியவை அமைந்துள்ளன. (இந்திய ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்று பெயர்)

வெள்ளி கிரகமானது 583  நாட்களுக்கு ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகிறது. அதாவது சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். ஆனால் வெள்ளியின் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக இருப்பதால் அது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்காது. அதாவது அது சூரியனை மறைத்துக் கொண்டு நிற்பதில்லை.ஆனால் 105 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. ஆனால் நடுவே அமைந்த வெள்ளி கிரகம் சூரியனை முழுதாக மறைப்பதில்லை. இதற்குக் காரணம் உண்டு.

சூரியன், வெள்ளி (சுக்கிரன்) பூமி ஆகிய மூன்றும்
ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே வெள்ளி கடப்பு நிகழும்
சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் டிவி பார்க்கும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண் முன்னே புருவத்தைத் தொடுகிற அளவுக்கு உங்கள் கட்டை விரலை வைத்துக் கொண்டால் டிவி திரை முற்றிலுமாக மறைக்கப்படும். ஆனால் நீங்கள் அடுத்து கையை நன்கு நீட்டி வைத்துக் கொண்டால் அதே கட்டை விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் கட்டை விரல் கருப்பாகத் தெரியும்.

வெள்ளி கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டில் வெறும் கருப்புப் பொட்டு போலத் தெரிவதற்கு அதுவே காரணம். இதைத் தான் வெள்ளி கடப்பு (Transit of Venus) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வை தமிழகத்தில் உள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி காலை காணலாம். சூரியன் உதிக்கும் போதே அதன் இடது புறத்தின் மேல் மூலையில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியும். இது இந்திய நேரப்படி காலை 10-20 வரை தெரியும். பின்னர் வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டிலிருந்து விலகி விடும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி  இவ்விதமாகக்
கரும் புள்ளியாகத் தெரியும்
சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கரும் பொட்டாகத் தெரிகின்ற வேளையில் வெள்ளி கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 11 கோடி கிலோ மீட்டராக இருக்கும். வெள்ளி கடப்பின் போது அதை உலகின் பல பகுதிகளிலும் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.

வெள்ளி கடப்பு ஒரு தடவை நிகழ்ந்தால் அடுத்து எட்டு ஆண்டுகளில் அதே போல இன்னொரு வெள்ளி கடப்பு நிகழும். இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் இது போன்ற வெள்ளி கடப்பு நிகழ்ந்தது. இதற்கு முன்னர் வெள்ளி கடப்பு 1874 ஆம் ஆண்டிலும் 1882 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அடுத்து 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் நிகழும். ஆனால் அவை தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளி கடப்பு தமிழகத்தில் தெரியும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி எவ்விதமாக நகரும்
என்பதை இந்த வரை படம் காட்டுகிறது
முன்பு 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளி கடப்பு வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் முக்கியமானது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது அறியப்படாத காலம் அது. வெள்ளி கடப்பின் போது வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டை எப்போது தொடுகிறது, எப்போது விலகுகிறது என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொண்டால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விட முடியும் என்று அப்போது இங்கிலாந்தின் மற்றும் ரஷியாவின் விஞ்ஞானிகள் கருதினர். ஆகவே சூரிய கடப்பு நிகழும் போது உலகின் பல பகுதிகளுக்கும் விஞ்ஞானிகளை அனுப்பி இத்தகவல்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏற்பாட்டின்படி 1761 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் சைபீரியாவுக்குச் சென்று வெள்ளி கடப்பு தகவலகளைப் பதிவு செய்தார். அதே விஞ்ஞானி பின்னர்1769 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கும் சென்று வெள்ளி கடப்பு நிகழ்வை ஆராய்ந்தார். அங்கு அவர் டைபாய்ட் ஜூரத்தால் பாதிக்கப்பட்டு கடைசியில் இறந்தே போனார். 1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து பிரபல கேப்டன் குக் தென் பசிபிக் கடலில் உள்ள தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதெல்லாம் பாய்மரக் கப்பலில் தான் கடற்பயணம் மேற்கொள்ள முடியும். கேப்டன் குக் எட்டு மாத கால கடற்பயணத்துக்குப் பிறகு தாகிதி தீவுக்கு போய்ச் சேர்ந்து அங்கிருந்தபடி வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்தார்.

தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்ட
கேப்டன் குக்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கில்லாமே டி ஜெண்டில் என்ற விஞ்ஞானியின் அனுபவம் துயரம் வாய்ந்தது. அவர் 1760 ஆண்டு பாண்டிச்சேரி நோக்கிக் கப்பலில் கிளம்பினார். இந்தியாவில் காலூன்ற அப்போது இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் இடையிலான போரில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது.

ஜெண்டில் கிளம்பிய சமயம் பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால் அவர் பாண்டிச்சேரி வந்து சேருவதற்குள் அது பிரிட்டிஷார் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே பாண்டிச்சேரியில் வந்து இறங்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நடுக்கடலில் கப்பலில் இருந்தபடியே அவர் 1761 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பை ஆராய்ந்தார்.

அடுத்த வெள்ளி கடப்புக்கு மேலும் எட்டு வருடங்கள் இருந்தாலும் அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. எப்படியும் குறிக்கோளை அடைய விரும்பிய அவர்  ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சுப் பகுதிகளில் காலத்தைக் கழித்து விட்டு 1768 மார்ச் வாக்கில் மறுபடி பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அது மீண்டும் பிரான்ஸ் வசம் வந்துவிட்டதால் அவருக்குப் பிரச்சினை ஏற்படவில்லை. பாண்டிச்சேரியில் சிறிய வான் ஆராய்வுக்கூடத்தை நிறுவி 1769 ஜூன் 4 ஆம் தேதி நிகழவிருந்த வெள்ளி கடப்பை ஆராய்வதற்கு ஆயத்தமானார். அந்தத் தேதியும் வந்தது.

ஆனால் அவரது துரதிருஷ்டம், வான்ம் மேகங்களால் சூழப்பட்டதாகக் காட்சி அளித்தது..பைத்தியம் பிடிக்காத குறை. மனமொடிந்தவராக தாயகம் நோக்கிக் கிளம்பினார். கப்பலில் செல்கையில் அவருக்கு வயிற்றுக் கடுப்பு. ஏதோ தீவில் அவரை இறக்கிவிட்டுச் சென்றனர். பிறகு ஒரு வழியாக பிரான்ஸ் வந்து சேர்ந்தார். 11 ஆண்டுகளாக ஆளைக் காணாததால் அவர் செத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்து வந்த பதவியில் வேறு ஒருவர் அமர்ந்திருந்தார். அது கூடப் பரவாயில்லை. தமது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டதை அறிந்தார். ஜெண்டிலின் சொத்துக்களை அவரது சொந்தக்காரர்கள் பிரித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஜெண்டில் வழக்குப் போட்டார். மன்னரிடம் முறையிட்டார். மீண்டும் பதவி கிடைத்தது. சொத்துக்களும் அவரது கைக்கு வந்தன. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வளவோ இன்னல்கள் ஏற்பட்டாலும் அறிவியலுக்காக அவற்றைத் தாங்கிக் கொண்ட விஞ்ஞானிகளில் ஜெண்டிலும் ஒருவர்.

1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பின் போது உலகில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பல நாடுகளின் விஞ்ஞானிகளும் சேகரித்த தகவல்களை வைத்து கணக்கிட்டதில் பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மில்லியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தோன்றியது. அதுவரையில் சூரியனுக்கு உள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. 1960 களில் நவீன முறைகளைப் பின்பற்றிக் கணக்கிட்டதில் சூரியனுக்கு உள்ள சராசரி தூரம் 149 மிலியன் கிலோ மீட்டர் என்பது தெரிய வந்தது.

 இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, ஜூன் 6 ஆம் தேதி காலை சூரியன் உதித்த பின்னர் சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியுமா என்பது உங்கள் ஊரில் வானிலை நிலவரம் எப்படி என்பதைப் பொருத்தது.