Showing posts with label பூகம்பம். Show all posts
Showing posts with label பூகம்பம். Show all posts

Apr 30, 2015

நேபாள பூகம்பம் சொல்லும் சேதி

Share Subscribe
நேபாளத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி (2015) அன்று ஏற்பட்ட கடும் பூகம்பத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் பூகம்பம் நிகழ்ந்துள்ளது.

அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும்.

நேபாளத்தின் இடிபாடுகளில் ஒரு காட்சி

நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடிய அண்டார்க்டிகா கண்டமோ இன்னும் தொலைவில் இருப்பதை அறிய முடியும்.

ஆனால், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் புறத்தில் இணைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் புறத்தில் இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகியவை இணைந்திருந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே கண்டமாக விளங்கின. விஞ்ஞானிகள் இதற்கு கோண்டுவானாலாந்து என்று பெயர் வைத்துள்ளனர்.

கோண்டுவானாலாந்து

கோண்டுவானாலாந்துக்கு வடக்கே லௌராசியா என்ற கண்டம் இருந்தது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா முதலியவை ஒன்றிணைந்து இவ்விதம் ஒரே கண்டமாக விளங்கின. அப்போது உலகில் மனித இனம் கிடையாது. சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானாலாந்து உடைய ஆரம்பித்தது. கண்டங்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது

இதற்குள் லௌராசியாவும் உடைய ஆரம்பித்தது. இந்தியத் துணைக் கண்டமானது சுமார் 4 கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய யுரேசியாவுடன் தென்பகுதியில் வந்து ஒட்டிக்கொண்டது. மோதியது என்றும் சொல்லலாம். இந்த மோதலின்போது விளிம்புகள் மேல் நோக்கிப் புடைத்துக்கொண்டன. இப்படியாக இமயமலை உண்டாயிற்று.

இந்தியத் துணைக் கண்டம் தொடர்ந்து நெருக்குவதால் இமயமலை இன்னமும் உயர்ந்து வருகிறது. கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அல்ல கண்டங்கள். அவை எப்படி இடம் மாறும் என்று கேட்கலாம். சிதறு காய் போடுவதுபோல ஒரு தேங்காயை ஓங்கித் தரையில் அடிக்கிறீர்கள். அது பல துண்டுகளாகச் சிதறும். இவ்விதம் சிதறிய சில்லுகள் அனைத்தையும் பொறுக்கி ஒன்றோடு ஒன்று பொருத்தி மறுபடியும் அதை முழுத் தேங்காயாக ஆக்குகிறீர்கள். இப்போது அந்தத் தேங்காய் பல சில்லுகளால் ஆனதாக இருக்கும்.

பூமியின் மேற்புறமானது இவ்விதம் பல சில்லுகளால் ஆனதே. மொத்தம் ஏழு எட்டுச் சில்லுகள் உள்ளன. சிறிய சில்லுகள் பல உள்ளன. பூமியின் மீதான இந்தச் சில்லுகள் மீதுதான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகள்தான் நகர்கின்றன. ஆங்கிலத்தில் இவை பிளேட்ஸ் எனப்படுகின்றன. சில்லுகள் இடம்பெயர்வதை பிளேட் டெக்டானிக்ஸ் என்கிறார்கள். பூமியின் உட்புறத்தில் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்கின்றன. பொதுவில் சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

பூமியைப் போர்த்துள்ள சில்லுகள்

இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா இந்து மாக்கடல் ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்திய - ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகின்றனர். இந்தியச் சில்லு பல கோடி ஆண்டுகளாக யுரேசிய சில்லுக்கு அடியில் அதாவது, நேபாளத்துக்கு அடியில் செருகிக்கொண்டு வடக்கே நகருகிறது. ஆகவேதான் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரை இமயமலை அடிவாரம் நெடுக அவ்வப்போது பூகம்பங்கள் நிகழ்கின்றன. இந்தியச் சில்லு நெருக்குகிறது என்றால் வாரா வாரம், தினம் தினம் ஏன் நிலநடுக்கம் நிகழ்வதில்லை என்று கேட்கலாம்.

ரயில் வண்டியில் செல்லும்போது இரவு இரண்டு மணி வாக்கில் பார்த்தால் எதிர் பெஞ்சில் பச்சை சட்டை போட்டவர் தமக்கு அருகே அமர்ந்துள்ள மஞ்சள் சட்டைக்காரர் மீது மெல்லச் சாய்வார். தொடர்ந்து மேலும் மேலும் சாய்வார். ஒரு கட்டத்தில் ‘விலுக்’ என்று இருவருமே விழித்துக்கொள்வர்.

அதுபோல இந்தியத் துணைக் கண்டத்தின் நெருக்குதல் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும்போது ஒருகட்டத்தில் ‘விலுக்’ ஏற்பட்டுக் கடும் பூகம்பம் நிகழும். ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.9 என்று அளவிடப்பட்டுள்ளது.

இந்த ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு. ரிக்டர் அளவில் 6 என்று சொல்லப்படுகிற நிலநடுக்கத்தைவிட, ரிக்டர் அளவில் 7 என்ற நிலநடுக்கமானது 30 மடங்கு கடுமையானது. ரிக்டர் அளவில் 8 என்பது அதைவிட 30 மடங்கு கடுமையானது.

ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமா என்று முன்கூட்டி அறிந்துகொள்ள இதுவரை வழி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும், பிராணிகள் முன்கூட்டி அறிந்து கொள்கின்றன. ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்றால் ஏராளமான தவளைகள், பாம்புகள் ஆகியவை பல மணி நேரத்துக்கு முன்பே வெளியேறிவிடுகின்றன. இதன் ரகசியத்தை நம்மால் அறிய முடியும் என்றால், ஏராளமான உயிர்களைக் காக்க இயலும். ஆனால் ஒன்று, பூகம்பங்கள் மனிதர்களைச் சாகடிப்பதில்லை. கட்டிடங்கள்தான் மனித உயிர்களைப் பலி கொள்கின்றன என்று சொல்வதுண்டு. அது பெருமளவுக்கு உண்மை.

பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில் இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்கள் உட்பட அசாம், பிஹார், இமாசலப் பிரதேசம் முதலியன ஐந்தாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடும் நிலநடுக்க வாய்ப்பு உள்ள இடங்கள் என்று பொருள். முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு அனேகமாக இல்லாதது. அடுத்து, இரண்டாவது மண்டலம். தமிழகம் முன்பு இரண்டாவது மண்டலத்தில் இருந்தது.

ஆனால், இப்போது சென்னை மற்றும் கோவையை அடுத்த பகுதி ஆகியன மூன்றாவது மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஓரளவு நிலநடுக்க வாய்ப்பு உள்ளது என்பது இதன் பொருள்.

கட்டிடங்களைக் கட்டும் விஷயத்தில் எந்தெந்த மண்டலத்தில் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளன. ஆகவேதான், நிலநடுக்கம் ஏற்படாமலேயே அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுகின்ற நிலைமை உள்ளது.


அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அடுக்கு மாடிக் கட்டடங்கள்

இந்தியாவில் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் இந்த வசதி உண்டு, அந்த வசதி உண்டு எனப் பிரமாதமாக வர்ணித்துக்கொள்கின்ற அதே நேரத்தில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டவை என்ற வாசகத்தைச் சேர்ப்பதே கிடையாது. ஏன்?

உண்மையில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் 50 மாடிக் கட்டிடங்களையும்கூடக் கட்ட முடியும். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சர்வ சாதாரணமாகக் கட்டிவருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் இவ்விதக் கட்டிடங்கள் முன்னும் பின்னுமாக லேசாக அசைகின்றன. ஆனால், கட்டிடத்தில் விரிசல் கிடையாது. தகர்ந்து விழுவதும் கிடையாது.

உலகில் பெரும் ஜனநெருக்கடி மிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா, கட்டிடக் கட்டுமான விஷயத்தில் கண்டிப்புடனும் தொலைநோக்குடனும் புது விதிமுறைகளை வகுத்து அமல்படுத்துவது அவசியம். ஒருவகையில், இதுபோன்ற சம்பவங்கள் நம்க்கான எச்சரிக்கை விளக்குகள்!

என்னுடைய இக்கட்டுரையானது தி ஹிந்து தமிழ் இதழில் ஏப்ரல் 30 ஆம் தேதி (2015) வெளியானதாகும்.

Oct 5, 2013

கடலில் திடீரென முளைத்த தீவு

Share Subscribe
அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை.
பலுச்சிஸ்தான் கரை ஓரமாக முளைத்த தீவு
ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் க்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

பலுச்சிஸ்தானில் ஏற்ப்ட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
புதிதாகத் தோன்றிய தீவு. வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்திய்த் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  (Plate) எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷியா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களையும் கடல்களையும் தாங்கி நிற்கும் பல்வேறு சில்லுகள் வெவ்வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.சில்லுகள் என்பவை பூமியில் மிக் ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு Plate Tectonics  எனப்படும்.
குவாடார், ஓர்மாரா ஆகிய இடங்களைக் காட்டும் மேப்
யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்ப்டும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன்றியது. அதைக் கண்டு க்ரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

பலரும் பின்னர் ப்டகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வேடிக்கை பார்க்கப் பலரும் இத்தீவுக்கு வந்தனர்
சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.
பலுச்சிஸ்தானில் உள்ள இந்த் சேற்று எரிமலை உலகிலேயே மிக
உயாந்ததாகும் (300 அடி) சேறு அவ்வப்போது வழிந்ததால்
ஏற்பட்ட அடையாளங்களைக் காணலாம்
சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாசமானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும்.

 சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரிமலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

பலுச்சிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன.