May 23, 2013

நம்மை அழைக்கும் புதன் வியாழன் வெள்ளி

Share Subscribe
சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழன், மிக்ச் சிறிய கிரகமான புதன், பூமி சைஸில் உள்ள வெள்ளி ( சுக்கிரன்) ஆகிய மூன்று கிரகங்களையும் மேற்கு வானில் அருகருகே காண்கின்ற வாய்ப்பு இப்போது கிட்டியுள்ளது.
மே 26 ஆம் தேதியன்று மேற்குத் திசையில் அடிவானத்துக்கு சற்று மேலே
வியாழன், வெள்ளி, புதன் ஆகிய மூன்றும் இவ்விதமாகக் காட்சி த்ரும் நன்றி: நாஸா
குறிப்பாக மே 26 ஆம் தேதி சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் இந்த மூன்று கிரகங்களையும் அடிவானத்துக்கு சற்று மேலே காணலாம். முக்கோணத்தின் மூன்று புள்ளிகள் போல இவை தெரியும்.

இந்த மூன்றில் மிகப் பிரகாசமானது தான் வெள்ளி.(Venus) அதன் அருகே பிரகாசம் குறைந்ததாகத் தெரிவது வியாழன்.(Jupiter) இந்த இரண்டு கிரகங்களையும் எளிதில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இந்த இரண்டுக்கும் அருகே  மிக மங்கலான் புள்ளியாகத் தெரிவது புதன் கிரகம். ( Mercury).பொதுவில் புதன் கிரகம் கண்ணில் தென்படுவது அபூர்வம். மிக மங்கலாக இருப்பதே அதற்குக் காரணம்.எனினும் கூர்ந்து கவனித்தால் தெரியும். பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் புதனை நன்கு காண முடியும்.ஆனால் வெள்ளியையும் வியாழனையும் பார்க்க பைனார்குலர்ஸ் தேவையில்லை.

மே 26 ஆம் தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் இந்த மூன்றையும் காண முடியாதா என்று கேட்கலாம். வியாழனையும் வெள்ளியையும் காண இயலும். வானில் புதன் விரைவில் நகருவதாகும். ஆகவே பிற நாட்களில் அது இடம் தள்ளிக் காணப்படும்
மேலே உளள படம் மேற்படி தேதியில் கிரகங்கள் எங்கெங்கே உள்ளன் என்பதைக் காட்டுவதாகும். இதில் J என்பது வியாழன். SE என்பது செவ்வாய். Vஎன்பது வெள்ளி. M என்பது புதன். E என்பது பூமி.. நடுவில் உள்ள S என்பது சூரியன்.
மேற்கு வானில்  மூன்று கிரகங்களும் அருகருகே தென்பட்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் இருப்பவை.

 இந்த மூன்று கிரகங்களில் வியாழன் பூமியிலிருந்து சுமார் 90 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி சுமார் 25 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் புதன் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன
.
நீங்கள் உங்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்வையைச் செலுத்துகிறீர்கள். அப்போது உங்கள் வீட்டைக் கடந்து ஒரு சைக்கிள் மெதுவாகச் செல்கிறது. அதற்கு அப்பால்  தெரிகிற சாலையில் ஒரு மாட்டு வண்டி செல்கிறது. அதைத் தாண்டி தொலைவில் ஒரு லாரி மெதுவாகச் செல்கிறது. நீங்கள் பார்க்கின்ற நேரத்தில் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் தெரிகின்றன. புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்றும் வானில் நமக்கு இப்படியாகத் தான் தெரிகின்றன.
வியாழனுடன் ஒப்பிட்டால் பூமி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் எவ்வளவு சிறியவை
என்பதை இந்த வரைபடம் விளக்குகிறது.
ஜன்னல் வழியே பார்க்கும் போது சைக்கிள், மாட்டு வண்டி, லாரி ஆகியவை வெவ்வேறு தொலைவில் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.ஆனால் வானத்தில் தெரிகின்ற மூன்று ஒளிப்புள்ளிகளாகத் தெரிகிற மூன்று கிரகங்களில்  எது எந்த தூரத்தில் உள்ளது எனபது நமக்குப் புலப்படுவதில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எல்லாமே சூரியனைச் சுற்றி வ்ருகின்றன.தத்தம் சுற்றுபபாதையில் வெவ்வேறு வேகத்தில் சுற்றும் கிரகங்கள் அபூர்வமாக   ஒன்றன் பின் ஒன்றாக அமையும் போது வானில் அவை ஒரே பகுதியில் ஒன்று கூடி நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.




Update: 27th May 2013

கீழே உள்ள போட்டோ  புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று கிரகங்களையும் காட்டுகிறது.  போலந்து நாட்டில் உள்ள Szubin  நகரைச் சேர்ந்த Marek Nikodem மே 26 ஆம் தேதி மாலையில் இந்த போட்டோவை எடுத்தார்.( படம்  நன்றி spaceweather com


போட்டோவில்  கீழ்ப்புறத்தில் இருப்பது வெள்ளி (Venus) இடது புறம் இருப்பது வியாழன் ( Jupiter).மேற்புறத்தில் இருப்பது புதன் ( Mercury).


May 12, 2013

பெரிய சூரியன் பிளஸ் சிறிய சந்திரன் = கங்கண சூரிய கிரகணம்

Share Subscribe
ஓரளவு  அதிசயமான  சூரிய கிரகணம் மே 10 ஆம் தேதி நிகழ்ந்தது. இது ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் மட்டுமே தெரிந்தது. இந்த வகை சூரிய கிரகணத்துக்கு கங்கண சூரிய கிரகணம் என்பது பெயர். கங்கணம் என்றால் வளையல். அந்த வகையில் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படாமல் சூரியனின் நடுப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டடு சூரியன் வளையல் போன்று  ஒளி வளையமாகத் தென்படும்.
கங்கண சூரிய கிரகணம். ஒளி வளையம்  தான் சூரியன். அதன் நடுவே கருப்பு வட்டமாக உள்ளது தான் சந்திரன்
கங்கண சூரிய கிரகணத்தின் போது சூரியன் எவ்விதமாகக் காட்சி அளிக்கும் என்பதை மேலேயும் கீழேயும்  உள்ள ப்டங்கள் காட்டுகின்றன.
கங்கண சூரிய கிரகணம் இன்னொரு காட்சி.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக சந்திரன் வந்து நிற்கும் போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. பூமியைச் சுற்றி வருகின்ற சந்திரன்  எப்போதாவது தான் இப்படி நேர் குறுக்கே வருகிறது.சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக இருப்பதால் சந்திரன் பெரும்பாலான சமயன்களில் சூரியனை மறைப்பது கிடையாது.
சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது.
இது அறைகுறை (பார்சுவ) சூரிய கிரகணமாகும்
சந்திரன் இப்படி நேர் குறுக்காக வந்து நிற்கும் போது நிகழ்கின்ற சூரிய கிரகணம் மூன்று வகையாக இருக்கலாம். ஒன்று சூரிய ஒளி வட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கலாம். இது பார்சுவ ( அறைகுறை) சூரிய கிரக்ணமாகும்.
பூரண சூரிய கிரகணம்
இரண்டாவதாக சந்திரனின் விளிம்பும் சூரியனின் விளிம்பும் மிகக் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பொருந்தி பூரண சூரிய கிரகணம் ஏற்படலாம்.  மூன்றாவது வகைதான் கங்கண சூரிய கிரகணம்.

கங்கண சூரிய கிரகணம் ஏற்படுவது ஏன்? சின்ன சூரியன், பெரிய சூரியன் மற்றும் சின்ன சந்திரன் பெரிய சந்திரன் தான் காரணம்.
இடது புறம்: ’சின்ன’ சூரியன் 152 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது..
வலது புறம்.’ பெரிய’  சூரியன் 147 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
சூரியன் ஆண்டில் 365 நாட்களும் ஒரே சைஸில் இருப்பதாகப் பலரும் கருதுவர். அது அப்படி அல்ல.  சூரியன் சில சமயம் சற்று பெரிய ஒளி வட்டமாக இருக்கும். வேறு சில சமயங்களில் சூரியன் சற்று “இளைத்து” காணப்படும். இது பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது.

சூரியன் அதிகத் தொலைவில் இருந்தால் சற்றே சிறுத்துக் காணப்படும்.சற்று அருகில் இருந்தால் சற்று பெரிதாகக் காணப்படும் ( மேலே படம் காண்க)

சந்திரனும் அப்படித்தான்.பூமியிலிருந்து அமைந்துள்ள தூரத்தைப் பொருத்து சந்திரன்  சில சமயங்களில் பெரிதாக்வும் வேறு சமயங்களில் சற்று சிறியதாகவும் காணப்படும். நாம் கூர்ந்து கவனித்தாலும் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.
இடது புறம் ‘சின்ன ‘: சந்திரன் 4 லட்சத்து 5 ஆயிரம்  கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
வலது புறம்: ‘பெரிய’  சந்திரன் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
சூரியனின் சைஸ் பெரியதாக இருக்கிற சமயம் பார்த்து சந்திரன் சற்றே தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான சமயத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டால் பெரிய சூரியனுக்கு நடுவே சின்ன சந்திரன் அமைவதாகி விடும். அப்போது தான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிற்து.


அசப்பில் பார்த்தால் வானில் சூரியனும் பௌர்ணமி நிலவும் ஒரே சைஸில் இருப்பது போலத் தோன்றும். உண்மையில் சந்திரன் பூமியை விட்ச் சிறிது. சூரியனை விட மிக மிகச் சிறியது.

ஆனால் பூரண சூரிய கிரகணத்தின் போது சூரியனை சந்திரன் விளிம்போடு விளிம்பு பொருந்துகிற வகையில் மறைக்கிறது.இதற்குக் காரணம் உண்டு.பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைப் போல 400 மடங்கு தூரத்தில் சூரியன் உள்ளது. தவிர, சூரியனின் குறுக்களவானது சந்திரனின் குறுக்களவைப் போல  400 மடங்கு உள்ளது. இது தற்செயல் பொருத்தமே. ஆகவே தான் பூரண சூரிய கிரகணத்தின் போது ச்ந்திரன் விளிம்புடன் விளிம்பு பொருந்தும் வகையில் சூரியனை மறைத்து நிற்கிறது.


May 10, 2013

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசையா? நீங்களும் விண்ணப்பிக்கலாம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்துக்கு எங்கள் செலவில் உங்களை அனுப்பி வைக்கிறோம்..  விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் டச்சு நிறுவனம் ஒன்று அறிவித்தது.

ஆனால் இதில் ஒரு முக்கிய நிபந்தனை உண்டு.. அதாவது செவ்வாய்க்கு செல்கிறவர்க்ள்  திருப்பி பூமிக்கு அழைத்து வரப்படமாட்டார்கள்.அதற்கு எந்த ஏற்பாடும் கிடையாது.உத்தரவாதமும் கிடையாது.
செவ்வாய்க்குச் செல்பவர்கள் இவ்விதக் குடில்களில் தான் தங்கியிருக்க வேண்டும்
செவ்வாய்க்குப் போனால்  கடைசி வரை அங்கேயே இருக்க  வேண்டியது தான் என்று தெரிந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கடந்த சில நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறு தொகையைக் கட்டி தங்களது பெயரைப்  பதிவு செய்து கொண்டுள்ளனர்.வருகிற நாட்களில் இவர்களது எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கலாம்.

மார்ஸ் ஒன் எனப்படும் இந்த நிறுவனத்துக்கும் விண்வெளித் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.லாப நோக்கு இல்லாத நிறுவனம் என்று தங்களை அறிவித்துக் கொண்டுள்ள அந்த நிறுவனம் தங்கள் கையிலிருந்து ஒரு பைசா செலவிடப் போவதில்லை.

செவ்வாய்க்கு முதல் குழு 2023 ஆண்டில் அனுப்பப்படும் என்று கூறும் அந்த நிறுவனம் இதற்கு மொத்தம்  30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதையும்  குறிப்பாக டிவி விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் திரட்டப்படும் என்றும் அது கூறுகிறது.

முதல் குழு செவ்வாய்க்குச் செல்வதற்கு முன்னரே செவ்வாயில் இவர்கள் தங்குவதற்கான குடில்கள் ஆளில்லா விண்கலங்கள் மூலம் செவ்வாய்க்கு அனுப்ப்ப்பட்டு தானியங்கி முறையில் நிர்மாணிக்கப்படும்.
செவ்வாய் கிரகத்தில் ஆறு, குளம் எதுவும் கிடையாது. மரம், செடி, கொடி புல் பூண்டு கிடையாது
இக்குடில்களில் தங்குவதற்கான இடமும் காய்கறி பயிரிடுவதற்கான ப்குதியும் உடற் ப்யிற்சிக்கான பகுதியும் இருக்கும். இதில் தங்குபவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளையும் பேட்டிகளையும் ஒளிபரப்ப இக்குடில்களில் டிவி காமிராக்கள் இருக்கும்.

முதல் குழுவில் நான்கு பேர் இருப்பார்கள். இவர்களில் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். விண்ணப்பிக்கிறவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குழு சென்ற இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழு அனுப்பப்படும். இவ்விதம் ஆறு குழுக்கள் அனுப்பப்படுவர். எனவே மொத்தம் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு ஏழு ஆண்டுக்காலம் பயிற்சி அளிக்கப்படும்.

 விண்ணப்பித்த அனைவரையும் பரிசீலித்து இந்த 24  பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.. இதற்கென அந்தந்த நாடுகளில் உள்ள குழுக்கள் இதற்கான போட்டியை நடத்தும்.இவை டிவியில் காட்டப்படும்.இந்த நிகழ்ச்சியை தங்கள் டிவியில் காட்ட விரும்பும் டிவி நிறுவனம் ஏலத்தின் மூலம் பணம் செலுத்தி இதற்கான உரிமையைப் பெறும்.. நிகழ்ச்சியின் இடையே விளம்பரங்கள் இடம் பெறும்.

செவ்வாய்க்குச் செல்லவிருப்பவர்களைப் பேட்டி காணும் உரிமை, அவர்களது குடும்பத்தைப் பேட்டி காண்பதற்கான உரிமை, இந்த நால்வரையும் சுமந்து கொண்டு ராக்கெட் உயரே கிளம்புவதை டிவியில் காட்டுவதற்கான உரிமை, இந்த நால்வரின் ஏழு மாதகாலப் பயணத்தின் போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் பற்றி பேட்டி காண்பதற்கான உரிமை, செவவாயில் இறங்குவதைக் காட்டுவதற்கான உரிமை என பல உரிமைகளும் ஏலம் விடப்படலாம்..
தனியார் நிறுவனம் உருவாக்கி வரும்    பால்கன் ஹெவி ராக்கெட். செவ்வாய்க்கான விண்கலம் இதன் மூலம் செலுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகள் டிவியில் காட்டப்படும் போது இடையிடையே விளம்ப்ரங்கள் இடம் பெறலாம். நால்வரும் அடங்கிய விண்கலம் கீழே இறங்கப் போகும் கட்டத்தில் “ இந்த நால்வரும் தங்களுடன் எடுத்துச் செல்லும் போஷாக்குப் பானம் எங்களுடையது தான்” என்று விளம்பரம் வரலாம். அந்த பானத்தின் பாட்டில் மீதுள்ள லேபிள் குளோசப்பாகக் காட்டப்படலாம்.

இவர்கள் நால்வரும் செவ்வாயின் த்ரையில் பத்திரமாக இறங்கினார்களா என்ற கவலையில் நாம்  அனைவரும் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது   “ செவ்வாயில் முதல் மனிதன் காலடி வைத்த போது அணிந்திருந்த ஷூ எங்கள் கம்பெனி தயாரிப்பே” என்று அலறும் விளம்பரம் தோன்றலாம்.

இவ்விதமாக டி.ஆர்.பி ரேடிங்குகளுக்காக அலையும் டிவி சேனல்கள்,தங்களது விளம்பரங்களை பிரபல சேன்ல்களில் வெளியிட விரும்புகிற பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையே இந்த செவ்வாய்ப் பயணத்தில் முன்னிற்கும்.

செவ்வாய்க்கு நாலவரை அனுப்புத் திட்டமிட்டுள்ள மார்ஸ் ஒன் நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்புவதற்கான ராக்கெட், தொட்ர்பான தொழில் நுட்பம, நீண்ட தூரப் பயணத்தை சமாளிப்பதற்கான தொழில் நுட்பம், செவ்வாயில் இறங்குவதற்கான தொழில் நுட்பம் என எல்லாமே கிடைக்கிற நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சந்திரனின் தரையிலிருந்து கிளம்பிய சிறிய விண்கலம் மேலே சந்திரனை ச்ற்றுக் கொண்டிருக்கும் தாய்க் கலத்துடன் சேருவதற்காக வந்து கொண்டிருக்கிறது.சந்திரன் வடிவில் சிறியது என்பதால் இந்த அள்விலான சிறிய விண்கலம் போதுமானதாக இருந்ததூ.தொலைவில் அடிவானத்தில் தெரிவது பூமி. இது சந்திரனுக்குச் சென்ற் அப்போலோ விண்வெளி வீரர்கள் எடுத்த படம். 
செவ்வாய்க்கு அனுப்புகிறவர்களை பூமிக்குத் திரும்ப வழி வகை செய்யாமல் விடுவது தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரானது அல்லவா என்று கேட்டதற்கு மார்ஸ் ஒன் திட்ட நிர்வாகி பதிலளிக்கையில் செவ்வாயிலிருந்து பூமிக்குத் திரும்புவதற்கான் தொழில் நுட்பம் இன்னும் உருவாகவில்லையே என்று பதிலளித்தார்

டச்சு நிறுவனத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டம் பற்றி சிலர் கருத்து தெரிவிக்கையில்  இது டிவியில் வழக்கமாக இடம் பெறுகின்ற ரியாலிடி ஷோ போன்றtதே என்று கூறினர்.

தனியார் நிறுவனம் ஒன்று செவ்வாய்க்கு ஆளை அனுப்புகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதற்குக்  காரணம் உண்டு

 அமெரிக்க நாஸா அமைப்புக்கு அமெரிக்க அரசு பணம் ஒதுக்குவ்தை எப்போதோ குறைத்து விட்டது.  மனிதனை விண்வெளிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்துக்கு அழைத்துச் செல்ல இப்போது பல தனியார் நிறுவனங்கள் சொந்தமாக ராக்கெட்டை வடிவமைத்துள்ளன.விண்வெளித் தளங்களையும் பெற்றுள்ளன.

 இந்த விஷயத்தில் முன்னேறிய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையே கூட்டு ஏற்பாடுகளும் உருவாகியுள்ளன. ரஷியா முன்னர சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் விண்வெளித் துறைக்குப் பணம் வாரி வழங்கப்பட்டது.இப்போது அப்படி இல்லை.

ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய விண்வெளி அமைப்பினாலும் பெரும் பணம் ஒதுக்க இயலாது.

1960 களில் அமெரிக்க நாஸா அமைப்பு  சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது விண்வெளி வீரர்கள் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பும் அம்சத்தில் மிக முக்கிய கவனம் செலுத்தியது.சோவியத் யூனியனும் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில்   அதே அளவுக்கு கவனம் செலுத்தியது.

அம்ரிக்கா, ஐரோப்பா, ரஷியா, ஜப்பான் போனற நாடுகளின் விண்வெளி அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து செவ்வாய்க்கு மனிதனை அனுப்பலாமே என்று கேட்கலாம். மார்ஸ் ஒன் டச்சுக் கம்பெனி கூறியது போல ஒரு வழிப் பயணமாக செவ்வாய்க்கு நால்வரை அனுப்புவத்ற்கே 30 ஆயிரம் கோடி ஆகலாம்.

 அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு ஆகக்கூடிய செலவையும் சேர்த்தால் 60 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகலாம். மேற்குறிப்பிட்ட நாடுகள் தனியாக அல்லது கூட்டாக இந்த அளவுக்குப் பணம் செலவிடும் நிலையில் இல்லை. இவர்கள் இந்த வகையில் செலவிடும் எந்தத் தொகையும் மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் வந்தாக வேண்டும்.

 வேறு எவ்வளவோ வகைகளில் மக்களின் மேம்பாட்டுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையில் அமெரிகாவோ ரஷியாவோ செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதை முக்கியமான ஒன்றாகக் கருத வாய்ப்பில்லை.

 தவிரவும் மனிதன் செவ்வாய்க்குச் சென்று நடத்தக்கூடிய பல ஆய்வுகளை ஆளில்லா விண்கலம் மூலமே சாதிக்கின்ற நிலைமை உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய தானியங்கி ஆராய்ச்சிக்கூடத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. கியூரியாசிடி எனப்படும் அந்த விண்கலம் 2012 ஆகஸ்டில் செவ்வாயில் இறங்கி அங்கு கல்லையும் மண்ணையும் அள்ளிப் பொடியாக்கிப் பரிசோதிப்பது போன்ற நுட்பமான பரிசோதனைகளை நடத்தி வருகிறது.


பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் விஷயம் வேறு.தங்களது  உற்பத்திப் பொருட்களின் விற்பனை பெருகும் என்றால் விளம்பரத்துக்கு நிறைய செலவு செய்வர். டிவி சேனல்களைப் பொருத்த வரையில் அப்படியான தனியார் நிறுவனங்களிடமிருந்து நிறைய விளம்பரங்களைப் பெற்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதே நோக்கம்.

மனிதன் செவ்வாயில் போய் இறங்கினால் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அங்குள்ள காற்றில் ம்னிதன் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் தகுந்த அளவில் இல்லை. நிலையான அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. கடும் குளிர் நிலவுகிறது. திடீரென புழுதி புயல் கிளம்பும். செவ்வாய் கிரகம் முழுவதையும் கப்பிக் கொள்ளும் அந்த புழுதிப் புயல் தொடர்ந்து பல மாத காலம் நீடிக்கும்.

வானிலிருந்து ஆபத்தான கதிர்கள் தாக்கும்.தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பயிர் சாகுபடிக்கான வாய்ப்பு குறைவு.சோத்து மூட்டை கட்டிச் செல்வது போல சில நாட்களுக்குத் தாங்குகிற வகையில் கையோடு கொஞ்சம் எடுத்துச் செல்லலாம். அவ்வளவு தான்.

பூமியிலிருந்து தொடர்ந்து கண்டெய்னர் போன்ற ஆளில்லாத விண்கலங்கள் மூலம் உணவையும் தண்ணீரையும் அனுப்பலாம். இது நிச்சயமான ஏற்பாடாக இருக்க் முடியாது.


ஆனால் ஒன்று. செவ்வாய்க்கு ஒரு வழிப் பயண்மாகச் சிலரை அல்லது பலரை அனுப்ப மார்ஸ் ஒன் டச்சு நிறுவனத்தின் திட்டம் பற்றி இதுவரை விஞ்ஞானிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.

செவ்வாயில் போய் இறங்குகிறவர்கள் நிச்சயம் சில நாட்களில் அல்லது பல நாட்களில் செத்து விடுவர்  என்ற நிலையில் அவ்விதமான திட்டத்தை விஞ்ஞானிகள்  ஆதரிக்க மாட்டார்கள். இதை வேறு கோணத்திலிருந்தும் பார்த்தாக வேண்டும்.

செவவாய்க்கு செல்கிறவர்கள் அங்கு மடிந்த நிலையில் அவர்களது சடலம் முறையாக அடக்கம் செய்யப்படாத் நிலையில் சடலங்கள் அழுகி அதன் விளைவாக செவ்வாயில் கிருமித் தொற்று ஏற்படலாம். உகந்த சூழ்னிலை இருக்குமானால் இக்கிருமிகள் பல்கிப் பெருகலாம்.

செவ்வாய் கிரகத்தில் இப்போது உள்ள நிலைமைகளை கெடுக்கின்ற செயலை உலக நாடுகள் அனுமதிக்காது. எந்த நாட்டுக்கும் இதற்கு உரிமை கிடையாது. நிச்சயம் டச்சு நிறுவனம் போன்ற  தனியார் துறைக்கு அந்த உரிமை கிடையாது.

பல்வேறு நாடுகளும் நிபுணர்களும் எழுப்பக்க்கூடிய ஆட்சேபங்களின் விளைவாக டச்சு நிறுவனத்தின் திட்டம் தடை செய்யப்படுவதற்குள் அது விண்ணப்பக் கட்டண வகையில் கணிசமான பணைத்தை சம்பாதித்து விடும்.இப்போதே நிறைய வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

கடைசியாக ஒரு விஷயம். அமெரிக்கா சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவில்லையா? செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதில் அப்படி என்ன பிரச்சினை என்று கேட்கலாம். பூமியிலிருந்து சந்திரன் கிட்டத்தட்ட ஒரே தூரத்தில் ( சுமார் நான்கு லட்சம் கிலோ மீட்டர்) உள்ளது.எனவே சந்திரனுக்கு மூன்று நாளில் போய்ச் சேர்ந்து விடலாம். ரஷியாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று 36 மணி நேரத்தில் சந்திரனை அடைந்தது.

செவ்வாய் கிரகமோ பூமியிலிருந்து குறைந்தது 20 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவே குறைந்தது 7 மாதகாலம் விண்கலத்தில் பயணம் செய்தாக வேண்டும்.

தவிர, சந்திரன் சிறியது. அதன் ஈர்ப்பு சக்தியும் அந்த அளவுக்குக் குறைவு. ஆகவே சந்திரனில்  இறங்குவதற்கும் அங்கிருந்து மேலே கிளம்புவதற்கும் சிறிய கலமே போதுமானதாக இருந்தது
.
சந்திரனுடன் ஒப்பிட்டால் செவ்வாய் வடிவில் பெரியது. ஆகவே அதன்   ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் காரணமாக செவ்வாயில் இறங்குவதில் பிரச்சினை உண்டு. பூமிக்குத் திரும்புவதற்காக செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து மேலே கிள்மபுவது இதை விடப் பெரிய பிரச்சினை. செவ்வாயிலிருந்து மேலே  கிளம்புவதற்கு சற்றே பெரிய ராக்கெட் தேவை..

செவ்வாயில்முதலில் போய் இறங்குகிற ரஷிய அல்லது அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து தனி ஏற்பாடாக ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பப்படுகின்ற பொருட்களைக் கொண்டு அந்த ராக்கெட்டை உருவாக்க் முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும்.

இதற்கு நம்பகமான ஏற்பாடு உருவாக்கப்பட்டால் தான்  செவ்வாய்ப் பயணம் சாத்தியமாகும்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்ற போது சந்திரனிலிருந்து மேலே கிளம்புவதற்கான சிறிய மற்றும் எளிய வாகனத்தையும் கூடவே எடுத்துச் சென்ற்னர்.

செவ்வாய்க்கு அனுப்பப்படுகிற தாய்  ராக்கெட்டுடன் அங்கிருந்து திரும்புவதற்கான ராக்கெட்டையும் சேர்த்து அனுப்ப வழியில்லை.எடை மிக அதிகமாக இருக்கும் என்பதால் தாய் ராக்கெட் மேலே கிளம்பாது. ஒரு வேளை புதிய தொழில் நுட்பம் அல்லது புது வகை எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால் இது சாத்தியமாகலாம். இவ்வளவு காலமாக மனிதன் செவ்வாய்க்கு அனுப்பப்படாததற்கு இதுவே காரணம்.

( என்னுடைய  இக்கட்டுரை தினமணி நாளிதழில் மே 10 ஆம் தேதி வெளியாகியது. அதே கட்டுரை இப்போது சில  கூடுதல் விளக்கங்களுடனும் படங்களுடனும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.)

May 8, 2013

சூரிய ஒளியால் இயங்கும் விமானம்

Share Subscribe
அந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ். பெயரிலிருந்தே அது சூரிய ஒளியால் இயங்குவது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவில் விமானங்கள் அவற்றில் அமைந்த எஞ்சின்களைப் பொருத்து விசேஷ பெட்ரோல் அல்லது உயர் ரக கெரசினை எரிபொருளாகப் பயன்படுத்தும். சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இப்படியான எரிபொருள் தேவையில்லை. இந்த விமானம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றிக் கொள்கிற்து. அந்த மின்சாரம் விமானத்தை இயக்கப் பயன்படுத்தப்படுகிற்து.
முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம்
இதை சற்று விளக்கியாக வேண்டும். முன்புறம் சுழலிகள் (புரொப்பல்லர்கள்) பொருத்தப்பட்ட விமானத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்த் சுழலிகள் சுழன்றால்  தான் விமானம் பறக்கும். அதற்குத் தான் விசேஷ பெட்ரோல்.

சோலார் இம்பல்ஸ் விமானத்தில்  நான்கு மின்சார பேட்டரிகள் இருக்கும். இவை இறக்கைகளின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் இவற்றில் சேமிக்கப்படும்.விமானத்தின் புரொப்பல்லர்களை இயக்க இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.இந்த விமானத்தை மின்சார விமானம் என்று அழைத்தாலும் தப்பில்லை. அந்த அளவில் இது மின்சார கார் மாதிரி என்றும் சொல்லலாம்.

விமானத்தின் புரொப்பல்லர்கள் இயங்க நிறைய மின்சாரம் வேண்டுமே. ஆகவேதான் சோலார் இம்ப்ல்ஸ் விமானத்தின் இறக்கைக்களின் மேற்புறம் மீது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற சுமார் 12,000 சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன்.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பிய போது...
இவ்வளவு மின்சார செல்களைப் பொருத்த நிறைய இடம் தேவை என்பதால் தான் இந்த விமானத்தின் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன். இடது புற இறக்கையின் நுனியிலிருந்து வலது புற இறக்கையின் நுனி வரை இறக்கைகளின் நீளம் 63 மீட்டர். ( சுமார் 208 அடி).  விமானத்தின் பின்புறத்திலும் மேல் பகுதியில் சோலார் செல்கள் உண்டு.

தரையில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் போது மேலிருந்து பார்த்தால் ஏதோ குச்சிப் பூச்சி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றும்.

இந்த விமானம் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும் என்றாலும் இதன் எடை ஒரு காரின் எடைக்குச் சமம்.அவ்வள்வுதான்.

 பல புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பெருஞ்செலவில் பரீட்சார்த்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் அதை இயக்கும் பைலட் ஒருவர் தான் ஏறிச் செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்ட், ஆண்டோ போர்ஷ்பெர்க் ஆகிய இருவரில் ஒருவர் தான் இதை வானில் ஓட்டிச் செல்வார், இரவானாலும் சரி, பகலானாலும் சரி இந்த விமானம் தொடர்ந்து 26 மணி நேரம் பறக்கத்தக்கது.

சோலார் இம்பல்ஸ் விமானம் இந்த மாதம் மூன்றாம் தேதி காலை சுமார் 6 மணி அளவில் அமெரிக்காவின் மேற்குக் கரையோரமாக உள்ள  சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள நியூயார்க் நகரை நோக்கிக்  கிளம்பியது. வழியில் பீனிக்ஸ், டல்லஸ், செயிண்ட் லூயி, வாஷிங் டன்,DC ஆகிய நகரங்களில் இறங்கி அங்கு தங்கி விட்டு ஜூலை மாத வாக்கில் நியூயார்க் நகருக்குப் போய்ச் சேரும்.
,வானில் கிளம்புவதற்கு ஆயத்த நிலையில் சோலார் இம்பல்ஸ்
இத்துடன் ஒப்பிட்டால் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பி வழியில் எங்கும் இறங்காமல் பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற விமானங்கள் சுமார் ஆறரை மணி நேரத்தில் ( சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம்)  நியூயார்க் போய் சேருகின்றன.

சோலார் இம்பல்ஸ் விமானம் சுமார் மூன்று மாத காலம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் உண்டு. அது மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும்.( மற்ற விமானங்கள் மணிக்கு சுமார் 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவை). மெதுவாகப் பறக்கிறது என்பதால் சோலார் இம்பல்ஸ் முதல் கட்டமாக பீனிக்ஸ் நகருக்கு வந்து சேரவே 19 மணி நேரம் பிடித்தது.

சோலார் இம்பல்ஸ் விமானத்தை ஓட்டிச் செல்பவர் தனியொருவராகப் பயணிக்கிறார்.விமானத்தைத் தக்கபடி கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கு மிகுந்த கவனமும் மனப் பக்குவமும் தேவை. எனவே தான் பிக்காரடும், போர்ஷ்பெர்க்கும் யோகாசனமும் ப்யின்றுள்ளனர்.

 பகலில் நல்ல வெயில் அடிக்கிற நேரத்தில் இந்த விமானம் சுமார் 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும். மாலை நேரம் வந்ததும் 1500 மீட்டர் உயரத்தில் பறக்கத் தொடங்கும்.

பொதுவில் விமானங்கள் உறுதியான அலுமினிய கலப்பு உலோகத் தகடுகளால் உருவாக்கப்படும். இதற்கு மாறாக சோலார் இம்பல்ஸ் விமானம் உலோகமல்லாத பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ நார்ப் பொருளுடன் பிசினைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிக மெல்லிய் ஷீட்டுகளை  கொண்டு இந்த விமானத்தின் உடல் பகுதியும் இறக்கைகளும் உருவாக்கப்பட்டன.

 நீண்ட இறக்கைகள் மீது சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்
இந்த விமானம் 2009 ல் கட்டி முடிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் தடவையாகப் பறந்தது. பின்னர் பரிசோதனையாக ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டுக்குப் ப்றந்தது.  இப்போது அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குப் பறப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இப்போதைய மாடல் HB- SIA  என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் சில புதிய அம்சங்களுடன் அடுத்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டில் இப்புதிய மாடல் விமானம் உலகைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியால் இயங்கும் விமானத்தை உருவாக்கியதன் பிரதான நோக்கம் காற்று மண்டலத்தைக் கெடுக்காத தொழில் நுட்பத்தின் மீது அரசுகளும் தனியார் துறையினரும் அக்கறை காட்டும்படி செய்வதேயாகும் என்று இந்த விமானத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

விமானத்தை ஓட்டுகின்ற ஒரே ஒருவர் மட்டும் ஏறிச் செல்லும் வகையிலான ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கும் அவர்களிடம் பதில் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் லிண்ட்பெர்க் 1927 ஆம் ஆண்டில் நியூயார்க்கிலிருந்து பாரிஸ் நகருக்கு அவர் ஒருவர் மட்டுமே ஏறிச் செல்கிற விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்தார். ஆனால் அதற்கு 25 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா- ஐரோப்பா இடையே  200 பேர் செல்கின்ற விமானப் பயணம் சாத்தியமாகியது.சூரிய ஒளியால் இயங்கும் இப்போதைய விமானத்தை அந்த அளவில் தான் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


May 6, 2013

அக்னி நட்சத்திரத்தின் போது அதிக வெயில் ஏன்?

Share Subscribe
கோடைக்காலம் வந்து விட்டால் குறிப்பாகத்  தமிழ்ப் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தை முதல் பக்கத்தில - பல சமயங்களிலும் -- கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள்.இந்த ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை  நாட்கள் தொடங்கி விட்டதைத் தொடர்ந்து வேலூரில் அதிக பட்சமாக`107 டிகிரி (பாரன்ஹைட்) வெயில் பதிவாகியது. வருகிற  நாட்களில் தமிழகத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் வெயில் அதிகரிக்கும்.

சரி, வெயிலை எப்படி அளக்கிறார்கள்? .வெப்பமானி மூலம தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக் கூடிய விடை.ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

சொல்லப் போனால் வெப்ப்மானியானது   காற்று புகும் வசதி உள்ள ஒரு பெட்டியில் தான் வைக்கப்படுகிற்து. தவிர, அது வெயிலை அளப்பதே கிடையாது. த்ரையிலிருந்து சுமார் நான்கு அல்லது ஆறு அடி உயரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பத்தைத் தான் அளக்கிறது. ஆகவே உள்ளே காற்று எளிதில் புகும் வகையில் வெப்பமானிப் பெட்டியின் நான்கு புறங்களிலும் சாய்வான திறப்புகள் இருக்கும்.
திற்ந்த வெளியில் வெப்பமானி  வைக்கப்பட்டுள்ள பெட்டி.இதன்  நான்கு புறங்களிலும் உள்ள சாய்வான திறப்புகள் வழியெ காற்று உள்ளே செல்லும்.
வெயிலானது காற்றை நேரடியாக சூடாக்குவது கிடையாது. அப்படிப் பார்த்தால் தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் காற்று பயங்கர சூடாக இருக்க வேண்டும். சூரிய ஒளி காற்று மண்டலம் வழியே வந்தாலும் சூரிய ஒளியானது காற்றை சூடாக்குவது கிடையாது.

சூரிய ஒளி தரையில் வந்து விழும் போது தரையை சூடாக்குகிறது. தரை சூடாகும் போது தரைக்கு சற்று மேலே உள்ள காற்று சூடாகிறது.இந்தக் காற்றின் வெப்பத்தைத் தான் வெப்பமானி அளக்கிறது. இதைத் தான் நாம்  நேற்றைய வெயில் அளவு என்று கூறுகிறோம்.

வெப்பமானி எவ்விதமாக இருக்க வேண்டும். அதை எங்கு நிறுவ வேண்டும் எனபன பற்றி சர்வதேச அளவில் விதி முறைகள் உள்ளன. இவை உலக வானிலை அமைப்பு நிர்ணயித்தவை.

இதன்படி வெப்பமானி ஒரு மரப்பெட்டிக்குள்ளாக இருக்கும். அந்த மரப்பெட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். அருகே கட்டடங்கள் இருத்தல் கூடாது. மரங்கள் இருத்தல் கூடாது.அப்படி மரம் இருந்தால்  மரத்தின் உய்ரத்தைப் பொருத்து வெப்பமானிக்கும் மரத்துக்கும் இடையே  எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது.
வெப்பமானி பெட்டியின் உட்புறம்
வெப்பமானியானது காற்றின் வெப்பத்தை அளப்பதாகக் கூறினோம். த்ரை வெப்பத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. காற்றின் வெப்பமே இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.   தரை வெப்பமோ இடத்துக்கு இடம் மிக நிறையவே மாறுபடும்.

ஒரு நகரில் கட்டடங்கள் நிறைய உள்ள இடத்தில் தார் ரோடில் தார் உருகும் அளவுக்கு வெப்பம் இருக்கின்ற அதே நேரத்தில் அருகே ஓரிடத்தில் புல் தரையில் வெறும் காலால் நிற்க இயலும். தோட்டங்களில் மர நிழலில் த்ரை சுடாது.ஆகவே தான் காற்றின் வெப்பத்தை அளக்கிறார்கள். ஆனாலும் ஆற்றின் கரையோரமாக ஜிலு ஜிலு காற்று அடிக்கலாம்.

அந்த அளவில் வெப்பமானி அளவிடுகின்ற -- காற்றின் வெப்பம் கூட ஓரள்வு இடத்துக்கு இடம் சற்றே மாறலாம். ஆகவே நாளிதழில் நீங்கள் படிக்கின்ற வெப்ப அளவு அந்த நகரில் எல்லா இடங்க்ளிலும் ஒரே சீராக உள்ள வெப்பம் அல்ல். வெப்பமானியில் பதிவாகி நாளிதழ்களில் பிரசுரிக்கப்படுவது குத்துமதிப்பான ஒன்றே.
கோடைக் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெயில் அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் போது குளிர்காலமாக இருக்கும்
உச்சி வெயில், மண்டை வெடிக்கிற வெயில் என்பார்கள். அதாவது சூரியன் தலைக்கு நேர்  மேலே இருக்கின்ற போது தான் வெயில் மிக அதிகபட்சமாக இருக்கும் என்று பலரும் கருதுவர். ஆனால் அது அப்படி அல்ல.

பெரும்பாலும் பிற்பகல் சுமார் இரண்டு அல்லது இரண்டரை மணிக்குத் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஓரிடத்தில் அதிக பட்ச வெப்பமும் அந்த நேரத்தில் தான் வெப்பமானியில் பதிவாகிறது

இதற்குக் காரணம் உண்டு. வெயில் ஏற ஏறத்  தரை மேலும் மேலும் சூடாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் சூடேறிய தரையானது அதிக அளவில்  வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. பிற்பகல் இரண்டு மணி அளவில் இது ஏற்படுகிறது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க  தமிழகத்தில் மே மாதத்தில் அதாவது இரண்டாவது மூன்றாவது வாரங்களில் வெயில் கடுமையாக இருப்பதற்குக் காரணம் உண்டு.சூரியன் அப்போது பூமிக்கு அருகில் இருப்பதாக சிலர் தவறாகக் கருதுவர்.

உண்மையில் சூரியன் ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி வாக்கில் தான் பூமிக்கு சற்றே அருகில் உள்ள்து.ஆனால் அப்போதோ பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் குளிர் காலமாக உள்ளது. தமிழகத்திலும் தான்.

பூமியானது  23.5  டிகிரி சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக்காலம் குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சூரியனின் கதிர்கள் எந்த்விடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த விடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும்.பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரிய்ன தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் தோன்றுகிறது.

அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருந்தது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பித்தது.இப்போது சூரியன் தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கிறது. ஆகவே வெயில் அதிகமாக உள்ளது.

 வடக்கு  நோக்கி நகர்ந்து செல்லும் சூரியன் ஜூன் 21 ஆம் தேதி வாக்கில் கடக ரேகைக்கு( 23.5 வட்க்கு அட்ச ரேகை)  நேர் மேலே இருக்கும்.. சூரியன் பிறகு தெற்கு நோக்கி அதாவது பூமியின் நடுக்கோட்டை நோக்கி நகர ஆரம்பிக்கும். இதன் விளைவாக சூரியன் இரண்டாம் தடவை தமிழகத்துக்கு நேர்  மேலே இருக்கும். அப்போது இரண்டாம் தடவையாக ஆவணி-புரட்டாசி மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்துக்கு இரண்டு கோடை உண்டு

பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் கோடையாக இருக்கும் போது நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள  நாடுகளில் குளிர் காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் என்பதே அதற்குக் காரணம்.

மறுபடி அன்றாட வெயில் விஷய்த்துக்கு வருவோம்.ஓரிடத்தில் தினமும் பதிவாகிற அதிகபட்ச வெயிலை வைத்து மாத மற்றும் வருடாந்திர சராசரி வெப்பம் க்ணக்கிடப்படும். உலகில் பல நூறு இடங்களிலும் இவ்விதம் கணக்கிடப்படுகிற வருடாந்திர சராசரி வெப்பத்தை வைத்து உலக சராசரி வெப்பம் கணக்கிடப்படும். இந்த சராசரி வெப்ப அளவு மனிதனின் பல்வேறு செயல்களால் கடந்த 150 ஆண்டுகளில் மெல்ல உயர்ந்து வருவதாகவும் இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.