Oct 8, 2013

மிதக்கும் அணு மின்சார நிலையம்

Share Subscribe
ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை.  சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும்.  விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள்   அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.

மகாராஷ்டிர மானிலத்தில் ஜைதாப்பூரில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள அணுமின் நிலையம் பற்றி  ஒரு சமயம் ஆங்கில டிவி செய்தி சேனல் ஒன்று இப்படி பீதி கிளப்பும் தலைப்புடன் செய்தி வெளியிட்டது. (தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது).

ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை.  ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக  நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.
ரஷிய மிதக்கும் அணுமின் நிலையத்தின் மாடல்
image: SevMashZevod
கப்பல்களில் அணு உலை இடம் பெறுவது என்பது புதிது அல்ல. பனிக்கட்டியால் மூடப்பட்ட கடல் பகுதிகளில் பனிக்கட்டியை உடைத்து கப்பல்கள் செல்வதற்கு வழி அமைக்க ரஷியா ஏற்கெனவே விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை பனிக்கட்டி உடைப்பான் கப்பல்கள் ( icebreakers) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணுசக்தியால் இயங்குவை. அதாவது இவற்றில் அணு உலைகள் உண்டு.  இக் கப்பல்கள் இயங்க இந்த அணு உலைகள் உதவுகின்றன்

இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.

ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது.  பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Oct 6, 2013

சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம்

Share Subscribe
பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு  இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும்.

காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல.
ப்டத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm  என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும்.
பூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. ஆனால் காந்த வட துருவம் இடம் மாறிக் கொண்டிருக்கிறது. இது த்னிக் கதை. இப்போது சூரியனின் விஷயத்துக்கு வருவோம்.

சூரியனுக்கும் இப்படி வட காந்த துருவம், தென் காந்த துருவம் உள்ளன. அடுத்த சில மாதங்களில் சூரியனின் வட காந்த துருவம் தென் காந்த துருவ்மாக மாறி விடும் என்றும் தென் காந்த துருவம் வட காந்த துருவமாக மாறி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது அதிசயம் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி காந்த துருவ மாற்றம் (Reversal of Magnetic Poles)   நிகழும் போது சூரியனின் இயற்கையான “பூகோள் “ துருவங்கள் இடம் மாறுவதில்லை. அதாவது சிரஸாசனம் மாதிரியில் சூரியனின் “தலை’பகுதி கீழ் நோக்கி மாறி விடுவதில்லை. சூரியனின் உட்புற்த்தில் உள்ள காந்த துருவங்கள் மட்டுமே மாறுகின்றன.இது எப்போது நிகழ்கிறது?

சூரியனின் முகத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள்  (Sun Spots) தோன்றுவது உண்டு.சூரியனில் வெப்பம் சற்றே குறைவாக உள்ள இடங்களே நமக்கு கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன. ஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.

சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் ஒரு கால ஒழுங்குக்கு  உட்பட்டு நிகழ்கிறது.2009 ஆம் ஆண்டில் சூரியனில் அனேகமாகக் கரும் புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன.  சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் 2014 ஆம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டில் இது உச்ச அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியனில் கரும் புள்ளிகள்
பிறகு அடுத்த சுமார் ஐந்தரை ஆண்டுகளில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்து கரும் புள்ளிகளே இல்லாமல் போய்விடும். இந்தக் கணக்குப்படி 2020 ஆம் ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளே இராது.

கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டுவதும் இதே போல 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இதன்படி2025 ஆம் ஆண்டில் அது உச்ச அளவை எட்டும்.
சூரியனின் வட காந்த தென் காந்த துருவங்கள்.படத்தில்
 சூரியனின் காந்தப் புலத்தையும் காணலாம்
சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கின்ற கட்டத்தில் தான் சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது. அனேகமாக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இது நிகழலாம் என்று அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  தோடா ஹோக்சிமா கூறியுள்ளார். அவர் சூரிய ஆராய்ச்சி நிபுணர்.

சூரியனின் துருவ மாற்றம், சூரியனின் காந்தப் புலம் பற்றி ஆராய்வதற்கென  தனி ஆராய்ச்சிக்கூடம்  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. ஹோக்சிமா அந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவர்.

சூரியனுக்கு காந்த துருவங்கள் உண்டு என்பதால் சூரியனுக்கு காந்தப் புலமும் உண்டு. இந்த காந்தப் புலம் சூரிய மண்டலம் முழுவதும் வியாபித்துள்ளது. இக்காந்தப் புலமானது வலுவிழந்து கொண்டே போய் பூஜ்ய நிலைக்கு வரும் போது சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது.
சூரியனில் காந்த துருவங்கள் மாறி அமைந்துள்ளதைக் கவனிக்கவும்
சூரியனின் காந்தப் புலமானது அண்டவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் பூமி போன்று உள் வட்ட கிரகங்களைக் கடுமையாகத் தாக்காமல் பாதுகாக்கிறது.

சூரியனுக்கு உள்ளது போலவே பூமிக்கும் காந்தத் துருவங்கள் உள்ளன. பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது.அப்படியானால் சூரியனின் காந்த துருவங்கள் மாறுவது போல பூமியிலும் நிகழுமா என்று கேட்கலாம். அவ்விதம் நிகழத்தான் செய்கிறது. ஆனால் பூமியின் காந்தத் துருவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாறுகின்றன.

பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூமியின் மையத்தில்  இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் (Solar Wind) த்ரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது.


Oct 5, 2013

கடலில் திடீரென முளைத்த தீவு

Share Subscribe
அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை.
பலுச்சிஸ்தான் கரை ஓரமாக முளைத்த தீவு
ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் க்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

பலுச்சிஸ்தானில் ஏற்ப்ட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
புதிதாகத் தோன்றிய தீவு. வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்திய்த் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  (Plate) எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷியா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களையும் கடல்களையும் தாங்கி நிற்கும் பல்வேறு சில்லுகள் வெவ்வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.சில்லுகள் என்பவை பூமியில் மிக் ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு Plate Tectonics  எனப்படும்.
குவாடார், ஓர்மாரா ஆகிய இடங்களைக் காட்டும் மேப்
யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்ப்டும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன்றியது. அதைக் கண்டு க்ரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

பலரும் பின்னர் ப்டகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வேடிக்கை பார்க்கப் பலரும் இத்தீவுக்கு வந்தனர்
சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.
பலுச்சிஸ்தானில் உள்ள இந்த் சேற்று எரிமலை உலகிலேயே மிக
உயாந்ததாகும் (300 அடி) சேறு அவ்வப்போது வழிந்ததால்
ஏற்பட்ட அடையாளங்களைக் காணலாம்
சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாசமானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும்.

 சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரிமலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

பலுச்சிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன.