Oct 20, 2018

ராமதுரை காலமானார்

Share Subscribe
அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.

இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.

அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.

ராமதுரையின் நீண்ட பயணத்தில் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - அவரை ஊக்குவித்து கற்க உதவியவர்கள்,  வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், அவருடன் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்.

- ராமதுரையின் குடும்பத்தினர்

Mar 30, 2018

சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்தது. பின்னர் அக்டோபரில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய எந்த நாடும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தப் போகிறது.

இதற்கு முன்னர் சந்திரனில் இறங்கிய பிற நாடுகளின் ஆய்வுக் கலங்கள் அனைத்தும் சந்திரனின் நடுக்கோட்டுப் பகுதியில் தான் போய் இறங்கின. ஆனால் இப்போது இந்தியா அனுப்ப இருக்கும் ஆய்வுக் கலமானது சந்திரனின் தென் துருவத்துக்கு அருகில் போய் இறங்க இருக்கிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஓர் ஆய்வுக் கலம் இறங்குவது இதுவே முதல் தடவையாகும்.

சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு இதுவரை பல விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் ஆறு தடவை சந்திரனுக்குச் சென்று கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்துள்ளனர். அவை விஞ்ஞானிகளால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனாலும் சந்திரனின் தோற்றம் உட்பட சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன.

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா 2008 ஆம் ஆண்டில் சந்திரயான் 1 என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். அந்த விண்கலம் சந்திரனின் நிலப்பரப்பை முப்பரிமாணப் படங்களாக எடுத்த்து. தவிர, சந்திரயானில் இடம் பெற்றிருந்த அமெரிக்க ஆராய்ச்சிக் கருவியானது சந்திரனில் தண்ணீர்த் திவலைகள் தோன்றி மறைகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தது என்றாலும் இது சந்திரயானின் சாதனையாகவே கருதப்படுகிறது.

சந்திரயான் 1 விண்கலத்தைத் தொடர்ந்து இப்போது சந்திரயான் 2 செலுத்தப்படுகிறது. இதில் தாய்க் கலம், இறங்குகலம், ஆய்வுக் கலம் என மூன்று பகுதிகள் இருக்கும்.

முந்தைய சந்திரயான் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட்து. இப்போது ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எனப்படும் ராட்சத ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் உயரே செலுத்தப்படும்.

உயரே சென்றதும் அது நேரடியாக சந்திரனுக்கு கிளம்பி விடாது. அது பல தடவை பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றும். ஒவ்வொரு தடவையிலும் அதன் மறு முனை அதிக தொலைவுக்குச் செல்லும். கடைசியில் ஒரு கட்டத்தில் அது சந்திரனின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இவ்விதம் சந்திரனை அடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகிவிடலாம். குறைந்த எரிபொருள் செலவில் சந்திரனை அடைவதற்காக இந்த உத்தி கையாளப்படுகிறது.

சந்திரனை எட்டிய பிறகு அது சந்திரனிலிருந்து எப்போதும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும்.

அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இறங்கு கலம் தனியே பிரிந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். சந்திரனில் இறங்குவது என்பது மிக சிக்கல் பிடித்த விஷயம். சந்திரனில் மட்டும் காற்று மண்டலம் இருந்தால் பாராசூட் மூலம் சுலபத்தில் இறங்கி விடலாம்.

ஆனால் காற்று மண்டலம் கிடையாது என்பதால் இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ராக்கெட்டுகள் கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் பலனாக இறங்கு கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அது மெல்லக் கீழே இறங்கும். இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் ராடார் கருவியும் இருக்கும். அது சந்திரனின் தரை நெருங்கி விட்டதா என்பதைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
சந்திரனில் நடமாடப் போகும்  ஆய்வுக் கலம்
சந்திரனில் வட்ட வடிப் பள்ளங்கள் நிறையவே உண்டு. எனவே இறங்கு கலம் அப்படியான பள்ளத்தில் இறங்கி விடலாகாது. மிகவும் சரிவான இட்த்திலும் இறங்கி விடக்கூடாது. இப்படியான பிரச்சினைகள் ஏற்படாமலும் ராடார் பார்த்துக் கொள்ளும். கர்நாடகத்தில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் சந்திரனில் உள்ளது போன்ற வட்ட வடிவப் பள்ளங்கள் உண்டாக்கப்பட்டு இறங்கு கலத்தின் மாடலைப் பயன்ப்டுத்தி பல தடவை ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.

சந்திரனில் தரையானது தனித் தன்மை கொண்டது. சந்திரனின் ம்ண்ணானது கண்ணாடியைப் பொடி செய்து போட்டது போல நற நற என்று இருக்கும்.

சந்திரனின் தென் துருவத்துக்கு அருகே இறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 1 முன்னர் எடுத்து அனுப்பிய படங்களை வைத்து இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஏதேனும் ஓர் இடத்தில் இறங்கு கலம் இறங்கும். இரண்டு இடங்களுமே அருகருகே உள்ளன.

இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதற்குள்ளிருந்து ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு கால்களைக் கொண்டதாகும். இது தானாகவே அங்குமிங்குமாகச் செல்லக்கூடியதாகும். அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல் படும்.

சந்திரனின் நிலப்பரப்பை ஆராய இறங்கு கலத்திலும் சரி, நடமாடக்கூடிய ஆய்வுக் கலத்திலும் சரி தகுந்த ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும். ஆய்வுக் கலத்தில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. அந்த வகையில் ஆய்வுக் கலத்தில் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சோலார் பலகை இடம் பெற்றிருக்கும்.அத்துடன் சுற்றுப்புறங்களைப் படம் எடுத்து அனுப்ப காமிராக்கள் இருக்கும்.

சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதால் பூமியைப் போல அன்றி சந்திரனில் பகல் என்பது (பூமிக் கணக்குப்படி) 14 நாட்கள் ஆகும்.. இதே போல 14 நாட்கள் இரவாக இருக்கும். எனவே நடமாடும் ஆய்வுக்கலமானது பகல் 14 நாட்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நாட்கள் வந்த பின்னர் மின்சார உற்பத்தி சாத்தியமில்லை என்பதால் ஆய்வுக் கலம் செயலற்று இருக்கும்.

ஆய்வுக் கலம் சந்திரனின் தரையில் மிக மெதுவாகவே பயணம் செய்வதாக இருக்கும். பகல் 14 நாட்களில் ஆய்வுக் கலம் சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் இறங்கு கலம் அது இறங்கிய இட்த்தில் நிலையாக இருந்தபடி சந்திரன் தொடரபான தகவல்களை சேகரிக்கும்.

இறங்கு கலம் நடமாடும் ஆய்வுக் கலம் ஆகிய இரண்டும் உயரே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2 தாய்க் கலத்துக்கு தகவல்களை அனுப்பும். தாய்க் கலம் இஸ்ரோ கட்டுப்பாட்டுக் கேந்திரத்துக்கு அத்தகவல்களை அனுப்பும்.

பூமியில் மேகங்கள், மழை, கடல், காற்று, தாவரங்கள் முதலியவை வெப்பத்தையும் குளிரையும் ஓரளவு சமன்ப்படுத்துகின்றன. சந்திரனில் இவை எதுவுமே கிடையாது.

எனவே சந்திரனில் பகலில் வெப்பம் 130 செல்சியஸ் வரை இருக்கும். இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கும். சந்திரயானின் இறங்கு கலமும் நடமாடும் ஆய்வுக் கலமும் இவ்வித கடுமையான நிலைமைகளை சமாளித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

(எனது இக்கட்டுரை தினத்தந்தி இதழில் வெளியானதாகும்)

Mar 15, 2018

மூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்

Share Subscribe
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் ஜாஸ்தி” என்று டாக்டர்களால் 22 வயதில் அறிவிக்கப்பட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தமது மன உறுதியால் 76 வயது வரை வாழ்ந்து இங்கிலாந்தில் மார்ச் 14 ஆம் தேதி காலனாமானார்.

பேச முடியாது. நடமாட முடியாது என நிலையிலும் அவர் செயற்கைக் குரல் மூலம் பேசினார். முக அசைவுகள் மூலம் தனது மின்சார சக்கர நாற்காலியை இயக்கினார். சக்கர நாற்காலியிலும் நேராக உட்கார முடியாது. ஒரு புறமாக சாய்ந்து தான் அமர்ந்திருப்பார். பெரிய தலை. அகன்ற காதுகள்.

உறுப்புகள் வேலை செய்யவில்லையே தவிர, மூளை மிக நன்றாகவே செயல்பட்டது. நடமாட முடியாத நிலையில் மின்சார நாற்காலியில் அமர்ந்தபடி காலம் தள்ளினார் என்றாலும் அவரது சிந்தனை பிரபஞ்ச வெளியில் உலாவியது. பிரபஞ்சவியல் பற்றி முக்கிய கொள்கைகளை உருவாக்கினார்.

மூளைத் திறனில் அவர் சர் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன், ஆகியோருக்கு நிகராகக் கருதப்பட்டவர். இளம் வயதில் பள்ளியில் ஹாக்கிங்குக்கு “ஐன்ஸ்டைன்’ என்ற பட்டப் பெயர் உண்டு.

ஹாக்கிங்குக்கு இருந்த நோய் லட்சத்தில் ஒருவருக்குத் தான் ஏற்படும் என்று சொல்லத் தக்கதாகும். உடலில் உள்ள தசைகள் படிப்படியாக செயலிழந்து விடும் என்பது தான் அந்த நோய். இந்த தசை செயலிழப்பு நோய் ஒவ்வொரு உறுப்பாகப் பரவி வருவதாகும். இதற்கு மருந்தே கிடையாது.

நல்ல வேளையாக ஹாக்கிங் விஷயத்தில் இந்த நோய் பரவுதல் மெதுவாக நிகழ்ந்தது. அதற்குள்ளாக அவர் முடிந்த அனைத்தையும் சாதித்துக் காட்டினார்.

பட்ட மேற்படிப்பின் போது தான் அவருக்குள்ள நோய் கண்டுபிடிக்கப்பட்ட்து. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தது என்றாலும் அவர் சமாளித்துக் கொண்டு முன்னேறலானார். அப்போது இங்கிலாந்தில் பிரெட் ஹாயில் பிரபல விஞ்ஞானி. அவரது மேற்பார்வையில் ஹாக்கிங் பட்ட மேற்படிப்பை முடிக்க விரும்பினார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. வேறு ஒரு விஞ்ஞானியின் கீழ் ஹாக்கிங் செயல்பட்டார்.

ஸ்டீபன் ஹாக்கிங் 
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்து அக்கால கட்டத்தில் இருவிதக் கொள்கைகள் நிலவின. பிரெட் ஹாயிலும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகார் என்ற விஞ்ஞானியும் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கொள்கையைக் கூறி வந்தனர். இதற்கு நேர் மாறான கொள்கையானது பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஜனித்தது என்று கூறியது. ஹாக்கிங் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு என்ற கொள்கையை ஆதரித்து நின்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார். பேராசிரியராகப் பணி புரிந்தார் அவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

பிரபஞ்சவியல், நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அண்டைப்புற நட்சத்திரங்களை விழுங்கும் பிளாக் ஹோல் எனப்படும் பகாசுர நட்சத்திரம் ஆகியவை பற்றி எழுதியும் பேசியும் வந்த ஹாக்கிங் உயர் இயற்பியலிலிருந்து கீழே இறங்கி வந்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பேசவும் திறன் படைத்தவராகவும் திகழ்ந்தார்.

அந்த வகையில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவர் எழுதிய நூல்களில் “காலத்தின் சுருக்க வரலாறு: (A Brief History of Time) என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நூலின் விற்பனை ஒரு கோடி பிரதிகளை எட்டியது. முழுவதுமாக படித்து முடிக்கப்படாத பிரபல நூல் என்ற பெயரும் அந்த நூலுக்கு உண்டு.

பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிய கொள்கையை உருவாக்கியதற்காக ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

பிளாக் ஹோல் நட்சத்திரமானது நிரந்தரமானது அல்ல. காலப் போக்கில் அது கதிர் வீச்சாக வெளிப்பட்டு அழிந்து விடும் என்று ஹாக்கிங் கூறினார். ஆனால் அக்கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்த வழியே கிடையாது. உறுதிப்படுத்தப்படாத உறுதிப்படுத்த முடியாத கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

ஏதாவது ஒரு வகையில் பூமியில் மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்படலாம் என்பது ஹாக்கிங்கின் கொள்கையாகும். ஆகவே மனிதன் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடிபெயர ஆயத்தமாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அந்த வகையில் அவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்தார்

ஒரு சமயம் அவர் ஜெட் விமான மூலம் உயரே சென்று அந்தரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். விண்கலம் மூலம் உயரே செல்வதற்காக டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு அவ்வளவு ஆர்வம்

பிரபஞ்ச வெளியில் பூமி மாதிரியில் வேறு கிரகம் இருக்கலாம் அப்படியான கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கலாம் என்ற கருத்தை ஹாக்கிங் ஆதரித்தார். அப்படியான வேற்றுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ரேடியோ அலைகள் மூலம் செய்தி அனுப்ப முற்படலாகாது என்றும் அவர் கூறினார். வேற்றுலக மனிதர்களை நம்ப முடியாது என்றார்.

பூமி இருக்கின்ற இடத்தை வெளி உலகினருக்குத் தெரியப்படுத்தலாகாது. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஹாக்கிங் கருதினார்.

ஹாக்கிங்குக்கு உடல் பிரச்சினை இருந்த போதிலும் அவர் தமது 22 வது வயதில் ஜேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்குக்கு ஜேன் பேருதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஹாக்கிங்கின் உடல் நிலை மேலும் மோசமான நிலையை எட்டிய போது அவரை 24 மணி நேரமும் கூட இருந்து கவனித்துக் கொள்ள மூன்று ஷிப்டுகளில் மூன்று நர்சுகளை நியமிக்க வேண்டி நேர்ந்தது. இதற்குள்ளாக ஹாக்கிங்குக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. இந்த நிலையில் ஹாக்கிங்குக்கு அந்த மூன்று நர்சுகளில் ஒருவரான எலைன் மேசன் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்து. ஹாக்கிங் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு1995 ஆம் ஆண்டில் அந்த நர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்தில் போய் முடிந்தது. ஹாக்கிங்குக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகள். இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இல்லை.

Mar 11, 2018

சீன விண்கலம் பூமியில் விழப் போகிறது

Share Subscribe
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயரே செலுத்தப்பட்ட சீன விண்வெளி நிலையம் இப்போது பூமியில் வந்து விழப் போகிறது. இதன் எடை எட்டு டன்.

டியான்கோங் என்னும் பெயர் கொண்ட இந்த சீன விண்வெளி நிலையம் மார்ச் 29 ந் தேதியிலிருந்து ஏப்ரல் 9 ந் தேதிக்குள்ளாக உலகில் கனடா, ஐரோப்பா, ரஷியா நீங்கலாக எந்த நாட்டின் மீதும் வந்து விழலாம். டியான்கோங் என்றால் சீன மொழியில் வான்மாளிகை என்று பொருள்.

பொதுவில் இப்படியான ஒரு விண்கலம் வானிலிருந்து காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி விழும் போது கடுமையாக சூடேறி தீப்பற்றும். அதன் விளைவாக விண்கலத்தின் பெரும் பகுதி தீப்பிடித்து முற்றிலும் அழிந்து விடும். எனினும். சில பகுதிகள் மட்டும் அழியாமல் கீழே வந்து விழலாம். கடந்த காலத்தில் அப்படி வந்து விழுந்தது உண்டு.

டியான்கோங் விண்வெளி நிலையம் 
அமெரிக்க நாஸாவின் ஸ்கைலாப் என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையம் 1979 ஆம் ஆண்டில் இவ்விதம் கீழே வந்து விழுந்த போது உலகெங்கிலும் பெரும் பீதி கிளம்பியது. இந்தியாவில் வந்து விழலாம் என்றும் அப்போது கவலை நிலவியது. கடைசியில் அதன் பகுதிகள் ஆஸ்திரேலியாவில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வந்து விழுந்தன.

ஒரு விண்கலத்தை யாருக்கும் தீங்கின்றி பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்ய முடியும். கடைசி வரை அந்த விண்கலம் அதை உயரே செலுத்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமானல் அது சாத்தியம். சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம் 2011 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீன விண்வெளி கேந்திரம் அந்த விண்கலம் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.

அதன் பிறகு அந்த விண்கலம் தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது .ஆரம்பத்தில் இந்த விண்கலம் பூமியிலிருந்து 362 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சீன விண்வெளி வீரர்கள் வேறு விண்கலம் மூலம் உயரே சென்று டியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணியாற்றினர்.

அண்மைக்காலமாக டியான்கோங் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கலாயிற்று. இப்போது அது 258 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகிறது. அடுத்த சில வாரங்களில் அது வேகமாக கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்து காற்று மண்டலத்தில் நுழையும் என்று கருதப்படுகிறது.

சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலும் மிக மெல்லிய அளவுக்குக் காற்று உண்டு.இக்காற்றானது விண்கலத்தின் - (செயற்கைக்கோள்களின்) வேகத்தைக் குறைக்க முற்படுகிறது. வேகம் குறையும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவு அதிகரிக்கிறது. எனவே அவை கீழே விழ முற்படுகிறது.

இப்படி ஏற்படாமல் தடுக்க, குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் எரிபொருள் இருக்கும். சிறு பீச்சு கருவிகளும் இருக்கும். இவை எரிபொருளைப் பயன்படுத்தி செயல்படும் போது செயற்கைக்கோள் தகுந்த அளவுக்கு வேகம் பெறும். செயற்கைக்கோள் தொடர்ந்து உரிய பாதையில் இருக்கும்.கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து தக்க ஆணைகளைப் பிறப்பித்து இவ்விதம் செய்ய முடியும்.

சீன விண்கலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வேகத்தை இழந்து பூமியை நோக்கி இறங்கலாயிற்று.

சுமார் 130 டன் எடை கொண்ட ரஷியாவின் மிர் எனப்படும் விண்வெளி நிலையம் 1986 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இனி அது தேவையில்லை என்று ரஷியர்கள் முடிவு செய்த போது திட்டமிட்டு அதை பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்தனர். எனவே மிர் விண்கலம் யாரையும் பயமுறுத்தாமல் பசிபிக் கடலில் வந்து விழுந்தது.

விண்வெளி நிலையம் என்பது விண்வெளி வீரர்கள் பல மாத காலம் தங்கி ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு உயரே பறக்கவிடப்படுகின்ற விண்கலமாகும். இது பல கட்டங்களில் படிப்படியாக உருவாக்கப்படுவதாகும். அமெரிக்கா. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகியவை சேர்ந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் 1998 முதல் உயரே இருந்தபடி பூமியைச் சுற்றி வருகிறது. சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த விண்வெளி நிலையத்தின் எடை சுமார் 420 டன்.

Feb 14, 2018

சூரியனை சுற்றி வரும் கார்

Share Subscribe
காரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும்.

அமெரிக்க கோடீசுவரர் ஒருவர் தாம் உருவாக்கியுள்ள மிக நவீன ராக்கெட்டில் ஒரு காரை வைத்து உயரே செலுத்தியுள்ளார். அது பூமியைப் போல சூரியனைச் சுற்றி வர ஆரம்பித்துள்ளது. அந்தக் காரும் அவர் உருவாக்கியதே.


பால்கன் ஹெவி ராக்கெட்
அந்த கோடீசுவரரின் பெயர் எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்த அவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலேயே ஆசை. அவர் ஆரம்பத்தில் பல கம்பெனிகளை நிறுவினார். அவற்றில் ஒன்று பேபால் (PayPal) என்பது.

கையில் ஓரளவு பணம் சேர்ந்ததும் அவர் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார். பல ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம். ஏராளமான எஞ்சினியர்க்ளையும் மற்றும் நிபுணர்களையும் அவர் அமர்த்திக் கொண்டார். தங்கள் நிறுவனத்துக்கென ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்தார். அந்த ராக்கெட்டுகளுக்கு பால்கன் (Falcon) என்று பெயர். அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய பால்கன் 9 என்ற ராக்கெட் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ராக்கெட் துறையில் அது புதிய சாதனையை ஏற்படுத்தியது.

பொதுவில் செயற்கைக்கோள்களை செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளே. உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் பணி முடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும்..

உலகில் ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளாக உயரே செல்கின்ற ராக்கெட்டுகளின் கதி இது தான். எலான் மஸ்க். கதையைப் புரட்டிப் போட்டு தனது இரண்டு அடுக்கு பால்கன் 9 ராக்கெட்டின் அடிப்புற ராக்கெட் தனியே கழன்று தரையில் குறிப்பிட்ட இலக்கில் மெல்ல வந்து உட்காரும்படி சாதித்துக் காட்டினார். பால்கன் 9 ராக்கெட் 20 க்கும் மேற்பட்ட தடவை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படி வந்து இறங்கிய ராக்கெட்டை எலான் மஸ்க் மீண்டும் பயன்படுத்தலானார்.

உயரே சென்ற ராக்கெட்டுகளில் இரண்டு கீழே வந்து இறங்குகின்றன
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகமில்லை. உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் செல்வு தான் அதிகம். எனவே அந்த வகையில் ராக்கெட்டைச் செலுத்த எலான் மஸ்கிற்கு குறைந்த செலவே ஆகிறது. .

மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதையே நோக்கமாகக் கொண்ட எலான் மஸ்க் அடுத்து மூன்று பால்கன் 9 ராக்கெட்டுகளை பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்றாக இணைத்தார்’. இதன் பெயர் பால்கன் ஹெவி என்பதாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது. உலகில் இப்படியான ராக்கெட்டே கிடையாது என்று கூறும் அளவுக்கு இது சக்திமிக்க பிரும்மாண்டமான ராக்கெட் ஆகும். இது சுமார் 64 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது.

1969 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய சாடர்ன் 5 ராக்கெட் தான் பால்கன் ஹெவி ராக்கெட்டை விட அதிக சக்தி கொண்டதாகும்.

பால்கன் ஹெவி உயரே செலுத்தப்படுவது இதுவே முதல் தடவை.

எனவே இதற்கென இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் முகப்பில் செயற்கைகோள் அல்லது விண்கலம் எதுவும் வைக்கப்படவில்லை. காரணம் இது தான். அந்த ராக்கெட் அழிந்தால் செயற்கைக்கோளும் அழிந்து தேவையற்ற வீண் செலவு ஏற்படும். ஒரு ராக்கெட்டை முதல் தடவையாக சோதிக்கும் போது அதன் முகப்பில் எடை மிக்க கான்கிரீட் பாளங்க்ள் அல்லது இரும்புத் தண்டுகளை வைத்து அனுப்புவது வழக்கம்.

ஆனால் எலான் மஸ்க் தனது பால்கன் ஹெவி ராக்கெட்டின் முகப்பில் சிவப்பு நிறக் காரை வைத்து அனுப்பினார். ராக்கெட் தயாரிக்கும் எலான் மஸ்க் மின்சார பாட்டரி மூலம் இயங்கும் கார்களையும் தயாரித்து வருகிறார். அந்தக் கம்பெனிக்கும் அவர் தான் தலைவர்.

மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான ரோட்ஸ்டர் காரை வைத்ததோடு நிற்கவில்லை. அந்த காரில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரியில் விண்வெளி வீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பினார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக் கொண்டிருந்த்து. இதெல்லாம் எலான் மஸ்கின் ஐடியா.

உயரே சீறிப்பாய்ந்த பால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டி சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது.

அந்தக் கார் பின்னர் சூரியனைச் சுற்ற ஆரம்பித்த்து. அது அப்படிச் சுற்றும் போது ஒரு சமயம் பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும். .பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

எலான் மஸ்க்
அந்தக் கார் என்ன ஆகும் என்று கேட்கலாம். அது பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்கு உட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்த காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.

எலான் மஸ்கின் அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை (பணம் பெற்றுக்கொண்டு) அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே குரூ டிராகன் என்ற விண்கல்த்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பி.எப்.ஆர் என்னும் ராட்சத ராக்கெட்டை உருவாக்குவதில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்ட காலத் திட்டமாகும்.

ஓரளவு வசதி உள்ளவர்களும் விண்வெளிக்குச் சென்று வருவதற்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ராக்கெட் தயாரிப்பு, விண்கலத் தயாரிப்பு, மின்சாரக் கார் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார். இவை போதாதென நகரங்களுக்கு இடையே சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் பயணம் செய்வதற்கான திட்டத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 46 வயதான எலான் மஸ்க் அசகாய சூர்ர்.

(எனது இக்கட்டுரை பிப்ரவரி 13 ந் தேதி தினத்தந்தி இதழில் வெளிவந்ததாகும்)

Feb 1, 2018

சந்திர கிரகணம்: 150 ஆண்டுகளாக இல்லாத பெரிய அதிசயமா?

Share Subscribe
இந்த மாதம் 31 ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சந்திரன் உதிக்கும் முன்னரே கிரகணம் தொடங்கி விடும்

இந்த கிரகணம் 152 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசய கிரகணம் என மேலை நாடுகளின் ஊடகங்களில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைக் காப்பியடித்து இந்தியாவிலும் பல பத்திரிகைகள், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், இதைப் பற்றி பிரமாதமாக எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய மக்களைப் பொருத்த வரையில் குறிப்பாகத் தமிழக மக்களைப் பொருத்தவரையில் இது வழக்கமாக வருகின்ற சந்திர கிரகணம் தான். இது அதிசய கிரகணம் அல்ல. இதில் எந்த விசேஷமும் இல்லை

சரி, மேலை நாட்டவர் இந்த சந்திர கிரகணத்தை அதிசய கிரகணம் என்று வருணிப்பானேன்?

பொதுவில் 29 நாட்களுக்கு ஒரு முறை பௌர்ணமி வருகிறது.அந்த வகையில் மாத்துக்கு ஒரு பௌர்ணமி வருவதாகக் கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரலாம். இப்படி ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமிக்கு மேலை நாட்டவர் புளூ மூன் (Blue Moon) என்று பெயர் வைத்துள்ளனர். பெயர் தான் புளூ மூனே தவிர, அந்த பௌர்ணமியன்று சந்திரன் நீல நிறத்தில் இராது, வழக்கமான வெண்மை நிற்த்தில் தான் இருக்கும்.

பௌர்ணமி நிலவு ஒரு போதும்
 நீல நிறத்தில் காட்சி அளிப்பது கிடையாது
தமிழ் மாதத்திலும் இப்படி இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது உண்டு. அதற்கெல்லாம் நாம் தனிப் பெயர் வைக்கவில்லை.

ஜனவர் 31 ந் தேதி நிகழும் பௌர்ணமியானது இந்த மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமியாகும். அந்த அளவில் மேலை நாட்டவரைப் பொருத்த வரையில் அது புளூ மூன்.

சந்திரன் பூமியை சுற்றிச் சுற்றி வருவதை நாம் அறிவோம். சந்திரனின் இந்த சுற்றுப்பாதை சற்று நீள் வட்டமாக அமைந்துள்ளது. ஆகவே பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரம் சில சமயம் வழக்கத்தை விட அதிகமாக அல்லது குறைவாக உள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று சந்திரன் வழக்கத்தை விடக் குறைவாக அதாவது மூன்று லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே அன்றைய தினம் சந்திரன் வழக்கத்தை விட 15 சதவிகித அளவுக்குப் பெரிதாகவும் வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும். சந்திரன் இப்படி பெரிதாகத் தெரிகின்ற பௌர்ணமியை மேலை நாட்டவர் சூப்பர் மூன் என்று குறிப்பிடுகின்றனர்.

சந்திரன் புளூ மூனாகவும் சூப்பர் மூனாகவும் இருக்கின்ற நாளில் நிகழும் கிரகணம் என்பதால் இந்த கிரகணத்தை மேலை நாட்டவர் ஓர் அதிசயம் என்கிறார்கள் .இதற்கு முன்னர் 1866 ஆம் ஆண்டில் தான் இப்படியான நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டதாம். அடுத்து 2028 ஆண்டில் தான் இப்படி நிகழுமாம்.

ஆனால் நமக்கு எல்லா பௌர்ணமிகளும் ஒன்று தான். சித்ரா பௌர்ணமியை வேண்டுமானால் விசேஷ பௌர்ணமி எனலாம். தவிர, நமக்கு சூப்பர் மூன் என்பதெல்லாம் இல்லை. புளூ மூனும் கிடையாது. மேலை நாட்டவர் அதிசயம் என்று கூறி குதிக்கிறார்கள் என்பதால் நாமும் சேர்ந்து குதிக்க வேண்டுமா? எனவே நம்மைப் பொருத்தவரையில் இது சாதாரண சந்திர கிரகணமே.

சூப்பர்மூன், என்ற வகைப்பாட்டுக்கு அறிவியல்பூர்வ ஆதாரமே இல்லை என்றும் இது ஒரு ஜோசியர் உருவாக்கியது என்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழக வானவியல் நிபுணர் ஜேம்ஸ் லாட்டிஸ் கூறுகிறார். புளூ மூன் என்பதும் அப்படிப்பட்டதே..

இவை ஒரு புறம் இருக்க, பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்றைய தினம் சூரியன் பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில்.அமைந்திருக்கும். ஆனால் இவை ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்ல முடியாது. அபூர்வமாக நேர் கோட்டில் இருக்க நேர்ந்தால் சூரியன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழலானது சந்திரன் மீது விழும். அப்போது பௌர்ணமி நிலவு பொலிவிழந்து கிரகணம் பிடிக்கப்பட்டதாக நமக்குக் காட்சி அளிக்கிற்து. எல்லா பௌர்ணமிகளிலும் கிரகணம நிகழ்வதில்லை என்பதற்குக் காரணம் உள்ளது.

நீங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறீர்கள். உங்களால் சூரியனைக் காண முடிகிறது. நீங்கள் சில படி இறங்கி வந்து முதல் மாடியின் பால்கனியில் நிற்கிறீர்கள். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகை மறைக்கிறது என்பதால் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மேலும் பல படிகள் இறங்கி தரையில் வந்து நிற்கிறீர்கள். இப்போது சூரியனைக் காண முடிகிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக உள்ளதால் அது பெரும்பாலான பௌர்ணமி நாட்களில் இவ்விதம் பூமியின் நிழலுக்கு மேலாக அல்லது கீழாக அமைந்து விடும்.. சந்திரன் மீது நிழல் படுவதில்லை என்பதால் கிரகணம் ஏற்படுவதில்லை.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது? சூரிய ஒளி என்பது உண்மையில் ஏழு நிறங்களின் சேர்க்கை ஆகும். சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியின் காற்று மண்டலத்தின் ஊடே செல்லும் போது தூசு காரணமாக சிதறடிக்கப்படுகிறது. அப்போது நீலம், வயலட், பச்சை முதலிய நிறங்கள் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிற ஒளிகள் மட்டும் வளைந்து சென்று சந்திரன் மீது விழுகின்றன. ஆகவே தான் கிரகணத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் சிவப்பாகத் தெரிகிறது.

சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போதெல்லாம் நிகழும் என்று முன் கூட்டியே கண்டறிய முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலும் கிரேக்கம் போன்ற நாடுகளிலும் பண்டைக்கால கணித நிபுணர்கள் இந்த கணக்கு முறையை அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கிரகணங்கள் குறித்து ஆதி நாட்களில் குறிப்பாக சூரிய கிரகணம் பற்றி பாமர மக்களிடையே பீதி நிலவி வந்துள்ளது. அவ்வளவு போவானேன்? சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ( 1980 பிப்ரவரி என்று ஞாபகம்) சென்னை நகரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னை நகர தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சைக்கிள்களைக் கூட காண முடியவில்லை. யாரும் வெளியே தலைகாட்டவில்லை.

அவ்வளவு பயம். சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட பீதியே அதற்குக் காரணம். கிரகணங்கள் குறித்து இன்றும் கூட பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன

(என்னுடைய இக்கட்டுரையானது சந்திர கிரகணம் நிகழ்ந்ததற்கு முன்பாக அதாவது 31 ந் தேதி காலை தினத்தந்தி இதழில் வெளியானது.)

Jan 15, 2018

முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்துக்கு ஒரு விணகலம்

Share Subscribe
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி ரஷியாவின் லூனா – 2 விண்கலம் சந்திரனில் இறங்கியதில் தொடங்கி சந்திரனில் பல விண்கலங்கள் இறங்கியுள்ளன.

ஆனால் இவை எல்லாமே சந்திரனின் முன்புறத்தில் தான் இறங்கியுள்ளன. சந்திரனின் மறு புறத்தில் ஒரு விண்கலம் கூட இறங்கியதில்லை. இப்போது முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்கப் போகிறது.

சீன விண்கலம்தான் இந்த சாதனையை நிகழ்த்தப் போகிறது. சீனாவின் அந்த இறங்குகலத்தின் பெயர் சாங்கி-4

சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்குவது என்பது அப்படியென்ன எளிதில் சாதிக்க முடியாத சமாச்சாரமா? இல்லை. ரஷியாவும் அமெரிக்காவும் நினைத்திருந்தால் எளிதில் சந்திரனின் மறு புறத்தில் தங்களது விண்கலங்களை இறக்கியிருக்க முடியும். ஆனால் அதில் ஒரு பெரிய பிர்ச்சினை இருந்தது. அது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட்து.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டுமே நமக்குக் காட்டி வருகிறது. சந்திரன் தனது அச்சில் சுழல்வதற்கு ஆகும் நேரமும் அது பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் (27 நாட்கள்) சம்மாக இருப்பதால் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் எப்போதும் பார்த்து வருகிறோம். சந்திரனின் மறுபுறத்தை யாரும் கண்டது கிடையாது.

எனவே சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்குமானால் அது பத்திரமாகத் தரை இறங்கியதா என்ற தகவல் கூட பூமிக்கு வந்து சேராது.

சந்திரனின் முன்புறம் (இடது) சந்திரனின் மறுபுறம் (வலது)
காரணம் இது தான். ஒளியும் சரி, தகவல் தொடர்பு சிக்னல்களும் சரி, எப்போதும் நேர்கோட்டில் செல்பவை. எனவே சந்திரனின் மறுபுறத்திலிருந்து ஒரு விண்கலம் சிக்னல்களை அனுப்பினால் அந்த சிக்னல்கள் பூமிக்கு வந்து சேராது.. ஆகவே தான் அமெரிக்கா, ரஷியா ஜப்பான் முதலான நாடுகள் தங்களது விண்கலங்கள் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி உள்ள முன்புறத்தில் போய் இறங்கும்படி செய்தன. ஆறு தடவை சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீர்ர்களும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கினர். சீனா முன்னர் அனுப்பிய ஒரு விண்கலமும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கியது.

இப்போது சீனா அனுப்பும் சாங்கி-4 இறங்குகலம் சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்கினால் அது அனுப்புகின்ற சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை என்பதால் சீனா இதற்கு ஒரு தக்க ஏற்பாட்டைச் செய்ய இருக்கிறது.

சாங்கி 4 விண்கலம் சந்திரனின் பின்புறத்திலிருந்து அனுப்புகிற சிக்னல்களைப் பெற்று பூமிக்கு அனுப்ப இன்னொரு விண்கலத்தை சீனா அனுப்ப இருக்கிறது. அதை ரிலே விண்கலம் என வருணிக்கலாம்.

அந்த அளவில் சாங்கி-4 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்னால் அதாவது இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனா ரிலே விண்கலத்தை சந்திரனை நோக்கி அனுப்பும்.

ரிலே விண்கலம் சந்திரனையும் தாண்டிச் சென்று சந்திரனிலிருந்து 67 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபடி ஜெயண்ட் வீல் மாதிரியில் மேலிருந்து கீழாகச் சுற்றும். சந்திரனிலிருந்து அவ்வளவு தொலைவில் இருந்தால் அது தொடர்ந்து சந்திரனுக்குப் பின்புறமாகவே இருந்து கொண்டிருக்கும்.. சந்திரனை விட்டு விலகிச் செல்லாது.

அதன் பலனாக சந்திரனின் மறுபுறத்திலிருந்து சாங்கி -4 விண்கலம் அனுப்பும் சிக்னல்களை அது தொடர்ந்து பெற்று அந்த சிக்னல்களை சீனாவின் விண்வெளித் தலைமையகத்துக்கு அனுப்பி வரும். ரிலே விண்கலம் மேலிருந்து கீழாக சுற்றுவதால் சந்திரன் அந்த விண்கலத்தை மறைக்காது.எனவே அதிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் பிரச்சினையின்றிக் கிடைக்கும்.

ரிலே விண்கலம் சந்திரனுக்கு அப்பால் லாக்ராஞ்சியன் புள்ளியில் அமைந்திருக்கும்


சாங்கி 4 விண்கலம் சந்திரனில் தரை இறங்கிய பின்னர் அதிலிருந்து ஒர் குட்டி வாகனம் வெளிப்பட்டு அங்குமிங்கும் நடமாடும். அது அனுப்பும் சிக்னல்களை சாங்கி 4 பெற்று ரிலே விண்கலத்துக்கு அனுப்பும்.

ரிலே விண்கலம் அமைந்த புள்ளியானது லாக்ராஞ்சியன் புள்ளி எனப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித நிபுணரான ஜோசப் லூயி லாக்ராஞ்ச் கணக்குப் போட்டு அவ்விதப் புள்ளி பற்றி எடுத்துக் கூறினார். அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். அவரது கருத்துப்படியான அந்தப் புள்ளியில் ஒரு விண்கலம் இருக்குமானால் அது சந்திரனை எப்போதும் நோக்கியபடி இருக்கும்

இந்த உத்தியை அமெரிக்காவோ ரஷியாவோ கையாண்டிருக்க முடியும். என்ன காரணத்தாலோ அவை அதற்கு முற்படவில்லை. எனினும் சந்திரனின் பின்புறம் எப்படி உள்ளது என்பதை நாம் 1959 ஆம் ஆண்டிலேயே தெரிந்து கொண்டோம்.

ரஷியா அனுப்பிய லூனா-3 விண்கலம் சந்திரனை சுற்றி வந்த போது சந்திரனின் முதுகைப் படம் பிடித்து அனுப்பியது. பின்னர் அமெரிக்காவின் அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீர்ர்கள் சந்திரனின் பின்புறத்தைப் படம் பிடித்து அனுப்பினர்.

நாம் எப்போதும் காணும் சந்திரனின் முன் பகுதியில் நிலப் பகுதியானது பெரிதும் சமவெளி போல உள்ளது. சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகம் உள்ளன.

Jan 13, 2018

அண்டவெளியில் மிதக்கும் தங்கம்

Share Subscribe
கோடானு கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அண்டவெளியில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டால் என்ன ஆகும்? டன் கணக்கில் தங்கம் உண்டாகும். அத்துடன் பிளாடினம் போன்ற உலோகங்களும் உண்டாகும்.

இவ்விதம் தங்கம் உண்டான இடத்தை அண்மையில் விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் மூலம் கண்டனர்.

நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக் கொண்ட போது உண்டான தங்கம் கொஞ்சநஞ்சமல்ல. பூமியின் எடையை (நிறை) போன்று 200 மடங்கு அளவுக்குத் தங்கமும் பூமியின் எடையைப் போன்று 500 மடங்குக்கு பிளாட்டினமும் உண்டானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு தங்கமும் பிளாட்டினமும் கட்டி வடிவில் உண்டாகவில்லை. நுண் துணுக்குகள் வடிவில் தோன்றின. நாளடைவில் இவை அண்டவெளியில் உள்ள ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்து விடும்.

அண்டவெளியில் நிகழும் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். அமெரிக்காவில் உள்ள லிகோ (LIGO) எனப்படும் இரட்டை ஆராய்ச்சிக்கூடங்கள் தான் முதலில் இதைக் கண்டுபிடித்தன.

Ligo ஆராய்ச்சிக்கூடம்


குளத்தில் சிறிய கூழாங்கல்லை வீசினால் சிறு அலைகள் தோன்றுவதைப் போல் அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதினால் ஈர்ப்பு அலைகள் தோன்றும். இந்த நுட்பமான அலைகளைப் பதிவு செய்வதற்காகவே இந்த லிகோ ஆராய்ச்சிகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்த ஆராய்ச்சிக்கூடங்களில் ஈர்ப்பு அலைகள் பதிவானபோது விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர உலகெங்கிலும் விஞ்ஞானிகள் பலர் உஷார்படுத்த்தப்பட்டனர். இத்தாலியில் உள்ள லிகோ ஆராய்ச்சிக்கூடத்திலும் இந்த அலைகள் பதிவாகின.

வானில் எந்த இடத்திலிருந்து ஈர்ப்பு அலைகள் வருகின்றன என்ற தகவல் வான் ஆய்வுக்கூடங்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் சுமார் 70 தொலைநோக்கிகள் மூலம் வானில் அந்த இடத்தை ஆராய்ந்த போது ஒளி மொத்தை தெரிந்தது. விரைவில் அது கலைய ஆரம்பித்தது. அந்த ஒளியைத் தக்க கருவிகள் மூலம் ஆராய்ந்த போது அவ்விடத்தில் தங்கம் பிளாடினம் போன்ற தனிமங்கள் (Elemens) உண்டாகியிருந்தது தெரிய வந்தது
இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பள்ளியில் வேதியியல் பாடத்தில் தனிமங்களின் அட்டவணை பற்றிப் படித்திருக்கலாம். இதைத் தனிமங்களின் பட்டியல் என்றும் கூறலாம். ஆராய்ச்சிகூட்த்தில் செயற்கையாக சில தனிமங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. மற்றபடி தனிமங்கள் பூமியில் உண்டாவதில்லை.

நமது சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஹீலியம் என்னும் தனிமம் உண்டாகிறது. இதுவே அணுச்சேர்க்கை ஆகும். சூரியனில் மேலும் சில தனிமங்கள் உண்டாகின்றன. சூரியனை விடப் பல மடங்கு பெரிதாக உள்ள நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கை மூலம் இரும்பு வரையிலான தனிமங்கள் உண்டாகின்றன். அணுப்பட்டியலில் இரும்புக்கு அப்பால் உள்ள தனிமங்கள் பலவும் அண்டவெளியில் பிற அணுக்களுடன் நியூட்ரான்கள் மோதும் போது உண்டாகின்றன.

இந்த மோதல்கள் இரு விதங்களில் நிகழ்கின்றன.

ஒப்புநோக்குகையில் மெதுவான மோதல்கள். அதி பயங்கர மோதல்கள். அண்டவெளியில் இவ்விதம் நிகழும் மோதல்களின் போது பல வகையான தனிமங்கள் உண்டாகின்றன.

சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகளின் போது சில வகை தனிமங்கள் தோன்றுகின்றன என்று அறியப்பட்டிருந்த போதிலும் தங்கம், பிளாடினம் போன்ற அதிக எடை கொண்ட தனிமங்கள் எவ்விதமான சூழ்நிலைகளில் தோன்றுகின்றன என்பது குறித்து உத்தேசமான கொள்கைகள்தான் இருந்து வந்தன.

நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்களின் போது தான் தங்கம், பிளாட்டினம் போன்றவை உண்டாகின்றன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதென்ன நியூட்ரான் நட்சத்திரம்?

பொதுவில் அணுக்களில் புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் அணுவின் மையக் கருப் பகுதியில் ஒன்று சேர்ந்து உள்ளன. இவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அணுவின் மையத்தைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமைந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை தனிமத்தில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்

இந்த எலக்ட்ரான்கள் காவல்காரன் போன்றவை. ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரான்களை விரட்டியடிக்க முடியாது. ஆனால் தீப்பந்தத்தைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள தேனீக்களை விரட்டியடிக்க முடியும். அது போல பயங்கரமான வெப்பம் இருக்குமானால் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு ஓடி விடும்.

சூரியனின் மையத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு உள்ளது. இவ்வித நிலையில் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு ஓடிவிடுவதால் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து அணுச்சேர்க்கை நிகழ்கிறது.

நியூட்ரான் நட்சத்திரத்தில் தனித்தனி அணுக்கள் என்பதே கிடையாது. எல்லாமே நியூட்ரான்களாக இருக்கும். புரோட்டான் ஒன்றுடன் எலக்ட்ரான் சேர்ந்தால் அது நியூட்ரான் என்று வைத்துக் கொள்வோம். அந்த அளவில் நியூட்ரான் நட்சத்திரத்தில் புரோட்டான்கள் அனைத்துக்குள்ளும் எலக்ட்ரான் நுழைந்து கொண்டால் என்ன ஆகும் அவை நியூட்ரான்களாகி விடும்

சூரியன் ஒரு பஞ்சு மிட்டாய் என்றால் நியூட்ரான் நட்சத்திரம் ஒரு கமார்கட்டு மாதிரி. சூரியன் திடீரென நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அதன் குறுக்களவு சுமார் 30 கிலோ மீட்டர் அளவில் தான் இருக்கும். காரணம் என்ன?

எந்த அணுவிலும் காலியிடம் நிறைய இருக்கிறது. ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்ட கால்பந்து தான் ஓர் அணுவின் மையக் கரு என்றால் எலக்ட்ரான்கள் அந்த மைதானத்தின் விளிம்பில் தான் இருக்கும். அந்த அளவில் எந்த ஓர் அணுவிலும் காலியிடம் உண்டு.

ஆனால் அணுவில் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்கள் என தனித்தனியே இல்லாமல் எல்லாமே நியூட்ரான்கள் என்றால் காலியிடம் அனைத்தும் நீங்கி விடும். எனவே தான் நியூட்ரான் நட்சத்திரம் பயங்கர அடர்த்தி கொண்டதாக இருக்கும். எனவே சூரியன் ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதானால் அதன் எடை( நிறை) குறைவதில்லை. அதன் சைஸ் மட்டும் தான் குறைகிறது.

எனவே நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும் போது ஏராளமான அளவுக்கு நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை அண்டவெளியில் ஏற்கெனவே உள்ள அணுக்களுடன் மோதும் போது தங்கம், பிளாட்டினம் போன்ற அணுக்கள் உருவாகின்றன.

இந்த தங்கம் பிளாட்டினம் வகை அணுக்கள் மிக நுண்ணிய துணுக்குகளாக அண்டவெளியில் மிதந்து கொண்டிருக்கும். எனினும் அண்டவெளியில் வாயு வடிவிலான ஹைட்ரஜன் தான் அதிகம். ஒரு கட்டத்தில் இந்த ஹைட்ரஜன் ஒரு பெரிய முகிலாக ஒன்று திரண்டு நட்சத்திரமாக உருவெடுக்கும்.

அந்த நட்சத்திரத்தில் மேற்படி தங்கம் பிளாட்டினம் அணுக்களும் ஒரு வகை வாயு வடிவில் அடங்கியிருக்கும்.. எனவே நட்சத்திரம் முழு உருப்பெறும் போது கிரகங்களும் தோன்றும். அந்த கிரகங்களிலும் தங்கம் அடங்கியிருக்கும்.

ஆரம்பத்தில் நெருப்புக் குழம்பாக இருந்த கிரகங்கள் ஆறி கெட்டிப்படும் போது தோன்றும் பாறைகளில் தங்கம் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாறைகளைப் பொடியாக்கி அதிலிருந்து நாம் தங்கத்தைப் பிரித்து எடுத்து நகைகளாக மாற்றி அணிந்து கொள்கிறோம். நாம் அணியும் அந்தத் தங்கம் என்றோ அண்டவெளியில் உற்பத்தியானதே.