Feb 1, 2018

சந்திர கிரகணம்: 150 ஆண்டுகளாக இல்லாத பெரிய அதிசயமா?

Share Subscribe
இந்த மாதம் 31 ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சந்திரன் உதிக்கும் முன்னரே கிரகணம் தொடங்கி விடும்

இந்த கிரகணம் 152 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசய கிரகணம் என மேலை நாடுகளின் ஊடகங்களில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைக் காப்பியடித்து இந்தியாவிலும் பல பத்திரிகைகள், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், இதைப் பற்றி பிரமாதமாக எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய மக்களைப் பொருத்த வரையில் குறிப்பாகத் தமிழக மக்களைப் பொருத்தவரையில் இது வழக்கமாக வருகின்ற சந்திர கிரகணம் தான். இது அதிசய கிரகணம் அல்ல. இதில் எந்த விசேஷமும் இல்லை

சரி, மேலை நாட்டவர் இந்த சந்திர கிரகணத்தை அதிசய கிரகணம் என்று வருணிப்பானேன்?

பொதுவில் 29 நாட்களுக்கு ஒரு முறை பௌர்ணமி வருகிறது.அந்த வகையில் மாத்துக்கு ஒரு பௌர்ணமி வருவதாகக் கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரலாம். இப்படி ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமிக்கு மேலை நாட்டவர் புளூ மூன் (Blue Moon) என்று பெயர் வைத்துள்ளனர். பெயர் தான் புளூ மூனே தவிர, அந்த பௌர்ணமியன்று சந்திரன் நீல நிறத்தில் இராது, வழக்கமான வெண்மை நிற்த்தில் தான் இருக்கும்.

பௌர்ணமி நிலவு ஒரு போதும்
 நீல நிறத்தில் காட்சி அளிப்பது கிடையாது
தமிழ் மாதத்திலும் இப்படி இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது உண்டு. அதற்கெல்லாம் நாம் தனிப் பெயர் வைக்கவில்லை.

ஜனவர் 31 ந் தேதி நிகழும் பௌர்ணமியானது இந்த மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமியாகும். அந்த அளவில் மேலை நாட்டவரைப் பொருத்த வரையில் அது புளூ மூன்.

சந்திரன் பூமியை சுற்றிச் சுற்றி வருவதை நாம் அறிவோம். சந்திரனின் இந்த சுற்றுப்பாதை சற்று நீள் வட்டமாக அமைந்துள்ளது. ஆகவே பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரம் சில சமயம் வழக்கத்தை விட அதிகமாக அல்லது குறைவாக உள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று சந்திரன் வழக்கத்தை விடக் குறைவாக அதாவது மூன்று லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே அன்றைய தினம் சந்திரன் வழக்கத்தை விட 15 சதவிகித அளவுக்குப் பெரிதாகவும் வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும். சந்திரன் இப்படி பெரிதாகத் தெரிகின்ற பௌர்ணமியை மேலை நாட்டவர் சூப்பர் மூன் என்று குறிப்பிடுகின்றனர்.

சந்திரன் புளூ மூனாகவும் சூப்பர் மூனாகவும் இருக்கின்ற நாளில் நிகழும் கிரகணம் என்பதால் இந்த கிரகணத்தை மேலை நாட்டவர் ஓர் அதிசயம் என்கிறார்கள் .இதற்கு முன்னர் 1866 ஆம் ஆண்டில் தான் இப்படியான நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டதாம். அடுத்து 2028 ஆண்டில் தான் இப்படி நிகழுமாம்.

ஆனால் நமக்கு எல்லா பௌர்ணமிகளும் ஒன்று தான். சித்ரா பௌர்ணமியை வேண்டுமானால் விசேஷ பௌர்ணமி எனலாம். தவிர, நமக்கு சூப்பர் மூன் என்பதெல்லாம் இல்லை. புளூ மூனும் கிடையாது. மேலை நாட்டவர் அதிசயம் என்று கூறி குதிக்கிறார்கள் என்பதால் நாமும் சேர்ந்து குதிக்க வேண்டுமா? எனவே நம்மைப் பொருத்தவரையில் இது சாதாரண சந்திர கிரகணமே.

சூப்பர்மூன், என்ற வகைப்பாட்டுக்கு அறிவியல்பூர்வ ஆதாரமே இல்லை என்றும் இது ஒரு ஜோசியர் உருவாக்கியது என்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழக வானவியல் நிபுணர் ஜேம்ஸ் லாட்டிஸ் கூறுகிறார். புளூ மூன் என்பதும் அப்படிப்பட்டதே..

இவை ஒரு புறம் இருக்க, பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்றைய தினம் சூரியன் பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில்.அமைந்திருக்கும். ஆனால் இவை ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்ல முடியாது. அபூர்வமாக நேர் கோட்டில் இருக்க நேர்ந்தால் சூரியன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழலானது சந்திரன் மீது விழும். அப்போது பௌர்ணமி நிலவு பொலிவிழந்து கிரகணம் பிடிக்கப்பட்டதாக நமக்குக் காட்சி அளிக்கிற்து. எல்லா பௌர்ணமிகளிலும் கிரகணம நிகழ்வதில்லை என்பதற்குக் காரணம் உள்ளது.

நீங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறீர்கள். உங்களால் சூரியனைக் காண முடிகிறது. நீங்கள் சில படி இறங்கி வந்து முதல் மாடியின் பால்கனியில் நிற்கிறீர்கள். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகை மறைக்கிறது என்பதால் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மேலும் பல படிகள் இறங்கி தரையில் வந்து நிற்கிறீர்கள். இப்போது சூரியனைக் காண முடிகிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக உள்ளதால் அது பெரும்பாலான பௌர்ணமி நாட்களில் இவ்விதம் பூமியின் நிழலுக்கு மேலாக அல்லது கீழாக அமைந்து விடும்.. சந்திரன் மீது நிழல் படுவதில்லை என்பதால் கிரகணம் ஏற்படுவதில்லை.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது? சூரிய ஒளி என்பது உண்மையில் ஏழு நிறங்களின் சேர்க்கை ஆகும். சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியின் காற்று மண்டலத்தின் ஊடே செல்லும் போது தூசு காரணமாக சிதறடிக்கப்படுகிறது. அப்போது நீலம், வயலட், பச்சை முதலிய நிறங்கள் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிற ஒளிகள் மட்டும் வளைந்து சென்று சந்திரன் மீது விழுகின்றன. ஆகவே தான் கிரகணத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் சிவப்பாகத் தெரிகிறது.

சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போதெல்லாம் நிகழும் என்று முன் கூட்டியே கண்டறிய முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலும் கிரேக்கம் போன்ற நாடுகளிலும் பண்டைக்கால கணித நிபுணர்கள் இந்த கணக்கு முறையை அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கிரகணங்கள் குறித்து ஆதி நாட்களில் குறிப்பாக சூரிய கிரகணம் பற்றி பாமர மக்களிடையே பீதி நிலவி வந்துள்ளது. அவ்வளவு போவானேன்? சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ( 1980 பிப்ரவரி என்று ஞாபகம்) சென்னை நகரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னை நகர தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சைக்கிள்களைக் கூட காண முடியவில்லை. யாரும் வெளியே தலைகாட்டவில்லை.

அவ்வளவு பயம். சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட பீதியே அதற்குக் காரணம். கிரகணங்கள் குறித்து இன்றும் கூட பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன

(என்னுடைய இக்கட்டுரையானது சந்திர கிரகணம் நிகழ்ந்ததற்கு முன்பாக அதாவது 31 ந் தேதி காலை தினத்தந்தி இதழில் வெளியானது.)

No comments:

Post a Comment