Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts
Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts

Jun 9, 2015

மங்கள்யானின் இரண்டு வார மவுனம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலத்துடன் இந்த மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை தொடர்பு கொள்ள இயலாது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அது ஏன்?

பூமியிலிருந்து பார்க்கும் போது மங்கள்யான் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.
1. சூரியன். 2. பூமி. 3 செவ்வாய் ( இப்படத்தில் புதன்,
வெள்ளி ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் காட்டப்படவில்லை)
அதாவது செவ்வாய், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் உள்ளன. செவ்வாயைச் சுற்றுகின்ற மங்கள்யானிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வருவதாக இருந்தாலும் சரி, பூமியிலிருந்து நாம் மங்கள்யானுக்கு சிக்னல்களை அனுப்புவதாக இருந்தாலும் சரி, அவை  நேர்கோட்டில் தான் செல்லும்.

சிக்னல்கள் அவ்விதம் செல்லும் போது  பிரும்மாண்டமான சைஸில் உள்ள சூரியன் அந்த சிக்னல்களைத் தடுத்து விடும். அல்லது சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து சென்றாக வேண்டும். எப்படியாக இருந்தாலும் பிரச்சினைதான். சிக்னல்களோ பலவீனமானவை.சூரியனோ பயங்கர சக்தி கொண்டது.

 சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து செல்லும் போது அவை சிதைக்கப்பட்டு விடும். அந்த அளவில் மங்கள்யானுக்கு இஸ்ரோ அனுப்பும் சிக்னல்கள் உருப்படியாக மங்கள்யானுக்குப் போய்ச் சேராது. மங்கள்யானிலிருந்து வரும் சிக்னல்களின் கதியும் அதே தான். ஆகவே மங்கள்யானுடன் தொடர்பு கொள்ள மேற்படி கால கட்டத்தில் இஸ்ரோ முயற்சி மேற்கொள்ளாது.

 எனினும் மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டரில் ஏற்கெனவே ஆணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூமியிலிருந்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டிய அவசியமின்றி மங்கள்யான் பிரச்சினையின்றித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மங்கள்யான் விண்கலம்
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களுமே சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் பூமியானது செவ்வாயை விட அதிக வேகத்தில் செல்வதாகும்.

ஆகவே ஜூன் 22 ஆம் தேதிக்குப் பின்னர் சிக்னல்கள் சூரியனை மிக அருகில் கடந்து செல்கின்ற நிலைமை இராது. ஆகவே அப்போது சிக்னல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்படாது.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 2013 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. அது 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்தை இப்போது மங்கள்யான் மட்டுமன்றி, நாஸாவின் மார்ஸ் ஒடிசி விண்கலம் மார்ஸ் ரிக்கன்னைசன்ஸ்  ஆர்பிட்டர் விண்கலம், மாவென் விண்கலம் ஆகிய மூன்று விண்கலங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. இதல்லாமல் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் நாஸாவின் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்துடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சரி, செவ்வாய்க்கு ஆறு விண்வெளி வீரர்களை --ரஷியாவோ அமெரிக்காவோ--அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் போது இப்படி செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த 15 நாட்களில் அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வரும்.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஏட்டளவில் ஒரு தீர்வு உள்ளது. வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்காவோ ரஷியாவோ விண்வெளி வீரர்களுடன் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். எனவே அவ்வித நிலையில் செவ்வாயிலிருந்து வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். செவ்வாயில் உள்ளவர்கள் பற்றிய தகவலை வெள்ளியைச் சுற்றுகின்ற விண்கலம் பெற்றுக் கொண்டு அதை பூமிக்கு அனுப்பி வைக்கும். இதெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒரு முறை இவ்விதம் சூரியனுக்கு நேர் பின்னால் அமைந்திருக்கும். ஆகவே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதப் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

செவ்வாய் கிரகம் இப்போது சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் போது பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்.(பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிஞ்சிப் போனால் 4 லட்சம் கிலோ மீட்டர்)

Dec 22, 2014

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு

Share Subscribe
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிலிருந்து திடீர் திடீரென மீத்தேன் வாயு கசிவதாக அமெரிக்காவின் கியூரியாசிடி நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் கண்டறிந்துள்ளது. ஆளில்லாத இந்த ஆராய்ச்சிக்கூடம் தானாக இயங்கி ஆங்காங்கு ஆராய்ந்து வருகிறது.

ஒரு வேன் சைஸிலான கியூரியாசிடி 2012 ஆகஸ்டில் போய் இறங்கியதிலிருந்து  செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.
அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி ஆராய்ச்சிக்கூடம்
செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து  திடீர் திடீரென மீத்தேன் வாயு வெளிப்படுவதை கியூரியாசிடி கண்டுபிடித்து பூமிக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

ஏனெனில்  உயிரினத்துக்கும் மீதேன் வாயுவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பூமியில் உயிரினம் காரணமாக நிறையவே மீத்தேன் வாயு வெளிப்படுகிறது.கால்நடைகளின் வயிற்றிலிருந்து மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. நெல் வயல்களிலிருந்து கணிசமான அளவில் மீத்தேன் வெளிப்படுகிறது. சதுப்பு நிலங்களிலும் இயற்கையாக மீதேன் வாயு உற்பத்தியாகிறது. மீத்தேன் தீப்பற்றும் தன்மை கொண்டது.

சதுப்பு நிலங்களில் வெளிப்படும் மீத்தேன்  இரவு நேரங்களில் சில சமயங்களில் தற்செயலாகத் தீப்பிடிப்பது உண்டு.  ஒரு காலத்தில் இதைக் கண்டவர்கள் கொள்ளி வாய்ப் பிசாசு என்றும் கருதினர். உண்மையில் இது கொள்ளி வாயு  அதாவது மீத்தேன் வாயு என்பது பின்னர் தான் கண்டறியப்பட்டது.

 ஓரிடத்தில் நீண்ட நாள் குப்பையைப் போட்டு வைத்தால் இயல்பாக அதில் மீத்தேன் உற்பத்தியாகும். சில நாடுகளில் பெரிய அளவிலான குப்பை மேடுகளிலிருந்து மீத்தேன் வாயுவை சேகரித்துப் பயன்படுத்துகின்றனர். சாண வாயு என்பதும் பெரிதும் மீத்தேன் வாயு தான். கரையான்கள் மூலமும் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

கடல் பகுதியிலும் நிலப் பகுதியிலும் மிக ஆழத்திலிருந்து எரிவாயு எடுக்கப்படுவது பற்றி அறிந்திருக்கலாம். எரிவாயுவில் பெரும் பகுதி மீத்தேன் வாயு ஆகும். ஏதோ ஒரு காலத்தில் இருந்த தாவரங்களும் விலங்குகளும் மிக ஆழத்தில் புதையுண்டு கடும் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளான போது தோன்றியதே எரிவாயு ஆகும். பூமியில் உள்ள மீதேனில் 95 சதவிகிதம் நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்படுவதாகும்.ஆனால் புவியியல் காரணங்களாலும் மீத்தேன் வாயு தோன்றுவது உண்டு. அதாவது சில வகைப் பாறைகளும் நீரும் சேரும்போது மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

 கியூரியாசிடி செவ்வாயில் இறங்கி காற்று மண்டலத்தை ஆராய்ந்த போது மீத்தேன் வாயு 0.7 ppbv ( parts per billion by volume) அளவுக்கே   இருப்பதாகக் கண்டறிந்தது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் காற்று மண்டலத்தில் இந்த வாயு 1800 ppbv  அளவுக்கு உள்ளது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நான்கு தடவைகளில் கியூரியாசிடியின் கருவிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு மீத்தேன் வாயு பதிவாகியது. இவ்விதம் திடீர் திடீரென மீத்தேன் வாயு அளவு அதிகரிப்பதற்கு அந்த வாயு செவ்வாயின் நிலத்துக்குள்ளிருந்து   கசிவதே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் செவ்வாயில் காணப்படும் மீத்தேன் வாயு இப்போது அல்லது கடந்த காலத்தில் இருந்திருக்கக்கூடிய நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்பட்டதா அல்லது புவியியல் காரணங்களால் தோற்றுவிக்கப்பட்டதா என்பதை கியூரியாசியினால் கண்டறிய இயலவில்லை. செவ்வாயின் மீத்தேன் நுண்ணுயிர்கள் காரணமாகத் தோன்றுவதே என்று தெரிய வந்தால் அக்கிரகத்தில் இப்போது அல்லது கடந்த காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்தன என்று சொல்ல முடியும்.

அப்படியில்லாத நிலையில் செவ்வாயில்  மீத்தேன் வாயு அவ்வப்போது வெளிப்படுவதை வைத்து எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி அமைப்பு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நினைவிருக்கலாம். 2014  ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பித்த மங்கள்யான் அங்கிருந்து படங்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை மங்கள்யான் கண்டறியும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் செவ்வாயில் மங்கள்யான் எதையாவது கண்டுபிடித்ததா என்பது பற்றி கடந்த சில மாதங்களில் இஸ்ரோவிடமிருந்து எந்த செய்தியும் கசியவில்லை.