Jul 25, 2015

இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

Share Subscribe
நமது பூமியிலிருந்து மிக மிகத் தொலைவில்  இன்னொரு பூமி - அதாவது நமது பூமி மாதிரியில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது பூமியானது சூரியனை ( சூரியன் ஒரு நட்சத்திரமே) சுற்றி வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகமும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கலாம்.

சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில்  ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம் என நீண்டகாலமாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் நீண்ட காலமாகப்  பல பிரச்சினைகள் இருந்து வந்தன.

ஆனால் நாஸாவின் கெப்ளர் டெலஸ்கோப்  புதிய முறையைப் பின்பற்றி அந்த கிரகங்களைத் தேட முற்பட்டது. இவ்விதம் விண்வெளியை ஆராய்ந்ததில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்துமே பனிக் கட்டியால் மூடப்பட்ட  உருண்டைகள்.

இதல்லாமல் இப்படி கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் ( பனி உருண்டைகள்) எல்லாமே நமது வியாழன் கிரகம் அளவுக்கு அல்லது அதை விட வடிவில் பெரியவையாக உள்ளன.( வியாழன் கிரகம் பூமியைப் போல 1400 மடங்கு பெரியது).
கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ள கிரகம் இப்படியாக
இருக்கலாம் என ஓவியர் கற்பனையாக வரைந்த படம்.
பூமி மாதிரி ஒரு கிரகம் தென்படுமா என்று விஞ்ஞானிகள் தேடி வந்தனர். பூமி மாதிரி என்றால் என்ன? சூரியனுக்கு   அருகாமையில் இருந்தால் வெப்பம் பொசுக்கி விடும். சூரியனிலிருந்து மிக அப்பால் இருந்தால் போதுமான வெப்பம் கிடைக்காமல் எல்லாமே உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும். அப்படியில்லாமல் பூமியானது சரியான தூரத்தில் உள்ளது.

   எனவே பூமி மாதிரி என்றால் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்திலிருந்து  உகந்த தூரத்தில் இருக்க வேண்டும். காற்று மண்டலம் இருக்க வேண்டும். தண்ணீர் இருக்க வேண்டும்.  கிட்டத்தட்ட பூமி சைஸில் இருக்க வேண்டும். இவ்வளவு நாள் தேடியதற்குப் பிறகு இப்போது தான் பூமி மாதிரியில்   ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கிரகம் பூமியை விட சற்றே பெரியது. அதாவது 60 சத விகிதம் பெரியது. அது சுற்றி வருகின்ற நட்சத்திரம்  நமது சூரியனை விட சற்றே பெரியது.  எனவே மேற்படி கிரகத்துக்குப் போதுமான வெப்பம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நமது பூமி சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதோ  (15கோடி கிலோ மீட்டர்)   அதை விட சற்று அதிக தூரத்தில்  இப்போது கண்டுபிடித்துள்ள  கிரகம் உள்ளது. அனேகமாக அந்த கிரகம் பூமி போல கல், மண், பாறை ஆகியவற்றால் ஆனதாக இருக்க வாய்ப்பு உள்ளது. காற்று மண்டலம் உள்ளது. எரிமலைகளும் உள்ளன.

சூரியனை பூமியானது ஒரு தடவை சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகின்றன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்னொரு பூமியானது தனது நட்சத்திரத்தை ஒரு தடவை சுற்றி முடிக்க 385 நாட்கள் ஆகின்றன. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். இன்னொரு பூமியின் வயது 600 கோடி ஆண்டுகள். எனவே உயிரினம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்பு உண்டு..

 இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்துக்கு கெப்ளர் 452b  என்று பெயரிட்டுள்ளனர். அது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.

கெப்ளர் விண்வெளி டெலஸ்கோப்  (Kepler Space Telescope) 2009 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. அது சூரியனை சுற்றி வந்தபடி விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உள்ள கிரகங்களைக் கண்டுபிடித்து வருகிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள் "இன்னொரு பூமியை" நேரில் போய் ஆராய்ந்தால் என்ன என்று கேட்கலாம். அது சாத்தியமற்றது. ஏனெனில் அது பூமியிலிருந்து 1400   ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.

பூமியிலிருந்து சிக்னல் வடிவில் :ஹலோ: என்று சொன்னால் சிக்னல்கள் போய்ச் சேர 1400 ஆண்டுகள் ஆகும்.  452b  கிரகத்தில் உள்ளவர்கள் (யாரேனும் இருந்தால்) பதிலுக்கு ஹலோ சொன்னால் சிக்னல்கள் நமக்கு வந்து சேர மேலும் 1400 ஆண்டுகள் ஆகும். இங்கு பூமியில் அந்த சிக்னல்களைப் பெறுகிறவர்கள் என்ன என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள்.

Jul 16, 2015

நியூ ஹொரைசனின் அபார வெற்றி

Share Subscribe
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக புளூட்டோவைக் கடந்து பல படங்களை அனுப்பியுள்ளது.

புளூட்டோவைச் சுற்றிலும்  துகள் படலம் இருக்கலாம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது. நெல்மணி சைஸில் உள்ள துகள் தாக்கினாலும் விண்கலம் சேதமடைந்து விண்கலம் செயல்படாமல் போகலாம் என்ற அச்சம் இருந்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் ஏற்படவில்லை.

புளூட்டோவை நியூ ஹொரைசன்ஸ் கடந்த போது விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது.  எட்டு நிமிஷங்களில் அது புளூட்டோவைக் கடந்து சென்றது.

அப்போது புளூட்டோவுக்கும் விண்கலத்துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.

நியூ ஹொரைசன்ஸ் எடுத்த படங்களை நாஸா விஞ்ஞானிகள் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு வாக்கில் வெளியிட்டனர்.
 நாஸா வெளியிட்ட புளூட்டோவின் குளோசப் படம்

புளூட்டோவில் பனிக்கட்டியால் ஆன  உயர்ந்த மலைகள் இருப்பதை அப்படங்கள் காட்டின.புளூட்டோவைச் சுற்றும் சாரோன் என்ற சந்திரனில் நீண்ட பள்ளத்தாக்கு இருப்பதையும் அவை காட்டின.

எனினும் சந்திரனில் இருப்பது போன்ற வட்டவடிவப் பள்ளங்க்ள் புளூட்டோவில் காணப்படவில்லை.
புளூட்டோவின் சந்திரன்களில் ஒன்றான சாரோன் NASA
புளூட்டோ எடுத்த படங்கள்,சேகரித்த தகவல்கள் மொத்தமும் பூமிக்கு வந்து சேர 16 மாதங்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது. தகவல்கள் மிக அதிகம். அத்துடன் நியூ ஹொரைசன்ஸ் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவற்றை அனுப்பும்.

Jul 13, 2015

புளூட்டோவை நெருங்கியது அமெரிக்க விண்கலம்

Share Subscribe

புளூட்டோ. இது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்  சுமார்
40 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது எடுத்த படம்.
மனிதகுல வரலாற்றில் நாளை - ஜூலை 14 ஆம் தேதி ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது.. மனிதன் உருவாக்கி அனுப்பிய ஒரு விண்கலம் சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ள புளூட்டோ கிரகத்தை நெருங்கி அதைப் படம் பிடிக்கப் போகிறது.

அமெரிக்காவின் நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ்(New Horizons) என்னும் அந்த விண்கலம் புளூட்டோவை (Pluto) அடைவதற்குப் பயணம் செய்த தூரம் சுமார் 482 கோடி கிலோ மீட்டர். 2006 ஆம் ஆண்டில் பூமியிலிருந்து கிளம்பிய அந்த விண்கலம் புளூட்டோவை அடைய ஒன்பதரை ஆண்டுகள் பிடித்தன.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சென்ற பாதை
இதற்கு முன்னர் நாஸா அனுப்பிய விண்கலங்கள் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கிப் படம்  பிடித்ததுடன் அவை பற்றிப் பல புதிய தகவல்களை சேகரித்து அனுப்பின. சூரிய மண்டலத்தில் புளூட்டோ ஒன்று தான் பாக்கியாக இருந்தது. நாஸாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இப்போது புளூட்டோவை  ஆராய்ந்து புதிய தகவல்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்
புளூட்டோவுடன் ஒப்பிட்டால் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வடிவில் பெரியவை. அவற்றை ராட்சஸ கிரகங்கள்  என்று  வருணிக்கலாம். இவற்றுடன் ஒப்பிட்டால் புளூட்டோ ஒரு "சுண்டைக்காய்".

வியாழன், சனி முதலானவை பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். ஆனால் புளூட்டோ கிரகம் பூமியைப் போல பாறைகளால் ஆனது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோ  கிரகமானது பூமி, செவ்வாய் ஆகியவை இருக்கின்ற வட்டாரத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தூக்கி எறியப்பட்டு  இப்போதுள்ள இடத்துக்குப் போயிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
புளூட்டோவின் குட்டி சந்திரன்கள்
சூரியனிலிருந்து புளூட்டோ சுமார் 590 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கிலோ மீட்டர்) அது  சூரிய மண்டலத்தின்   "கடைசி தெருவில் "அமைந்துள்ளது. புளூட்டோவிலிருந்து பார்த்தால் சூரியன் ஒரு நட்சத்திரம் போலத் தெரியும். மிகத் தொலைவில் உள்ள காரணத்தால் பூமியிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் போய்ச் சேர அல்லது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சிக்னல் வடிவில் அனுப்பும் தகவல்கள் வந்து சேர நாலரை மணி நேரம் பிடிக்கும்.

இரவு வானில் நீங்கள் வியாழன், சனி போன்றவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும். புளூட்டோவைப் பார்க்க முடியாது.  புளூட்டோ மிகத் தொலைவில் இருப்பதால் சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் மங்கலான புள்ளியாகத்தான் தெரியும். புளூட்டோ சைஸில் சிறியது என்பதும் அதற்குக் காரணம். புளூட்டோ (குறுக்களவு (2368 கி.மீ) சந்திரனை  (குறுக்களவு சுமார் 3474 கி.மீ) விடவும் சிறியது .சூரியனை புளூட்டோ ஒரு தடவை சுற்று முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
கைப்பர் வட்டாரத்தைக் காட்டும் படம்
புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.  நீண்டகாலம் புளூட்டோ ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. புளூட்டோவுக்கு ஐந்து சந்திரன்கள் உள்ளன.  புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட போது அது சூரியனை சுற்றுகின்ற ஒன்பதாவது கிரகமாகக் கருதப்பட்டது.

ஆனால் 2006 ஆம் ஆண்டில் சர்வதேச வானவியல் விஞ்ஞானிகள் சங்க மாநாடு நடந்த போது புளூட்டோ கிரக அந்தஸ்திலிருந்து அகற்றப்பட்டது. புளூட்டோ தனது வட்டாரத்தில் உள்ள குட்டி சந்திரங்களை  ஏப்பம் விட்டு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டாத காரணத்தால் அது கிரகம் அல்ல என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.  அவர்கள் புளூட்டோவை குட்டிக் கிரகம்  என்ற நிலைக்கு கீழே இறக்கினர்.

ஆனால் இப்படியான முடிவு எடுக்கப்பட்டதற்கு முன்னரே நாஸா புளூட்டோவுக்கு நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பி விட்டது. அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகமாகவே கருதுகின்றனர். புளூட்டோ அமெரிக்கர் ஒருவர் கண்டுபிடித்த ஒரே கிரகம் என்பது ஒரு காரணம்.

நாஸாவின் அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கிக் கடந்த பின்னர் புளூட்டோவுக்கும் அப்பால் உள்ள கைப்பர் பெல்ட் (Kuiper Belt) என்னும்  பிராந்தியத்தை  நோக்கிச் செல்லும். சொல்லப்போனால் புளூட்டோவும் கைப்பர் வட்டாரத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போவின்
அஸ்தி அடங்கிய டப்பி
கைப்பர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிக் கிரகங்கள் உள்ளன. இவற்றைப் பனி உருண்டைகள் என்றும் சொல்லலாம். இவற்றில் ஒன்றுக்கு வருணா (வருணன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் தொடர்ந்து சென்று கைப்பர் வட்டாரத்தையும் ஆராய இருக்கிறது.

அவ்வப்போது தலைகாட்டும் சிறிய வால் நட்சத்திரங்கள்  கைப்பர் வட்டாரத்திலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது,
புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ
சூரிய மண்டலம் தோன்றிய போது மிஞ்சிய துண்டு துக்கடாக்களே  கைப்பர் வட்டாரத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க விஞ்ஞானி ஜெரார்ட் கைப்பர் நினைவாக இந்த வட்டாரத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புளூட்டோவை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் கிளைட் டாம்போ. அவரது அஸ்தியின் சிறு பகுதி நியூ ஹொரைசன்ஸ விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Jul 7, 2015

பூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்

Share Subscribe
கடந்த (ஜூலை) 6 ஆம் தேதி சென்னையில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. அன்றைய தினம் வெயில் 40.7 டிகிரி செல்சியஸ்.கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக அதிகபட்சம் என்று சொல்லப்படுகிறது.  திருச்சியிலும் தமிழகத்தின் வேறு நகரங்களிலும் வெயில் கடுமையாக இருந்தது.

ஆனால் வேடிக்கையான வகையில் இந்த ஆண்டில் ஜூலை 6 ஆம் தேதியன்று - மிகச் சரியாகச் சொல்வதானால் அன்றைய தினம் நள்ளிரவு சூரியன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. அன்றைய தினம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருந்த தூரம் 15, 20,93,480   கிலோ மீட்டர். எளிதுபடுத்திச் சொல்வதானால் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அதாவது நல்ல குளிர் வீசிக் கொண்டிருந்த போது சூரியன் பூமிக்கு வழக்கத்தை விட சற்று அருகே இருந்தது. அன்றைய தினம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இருந்த தூரம் 14,70,96,204 கிலோ மீட்டர்.

ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் ஜூலை 6 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 49 லட்சம் கிலோ மீட்டர். இதையே வேறுவிதமாகச் சொல்வதானால் சூரியன் ஜனவரியில் இருந்ததை விட இப்போது 49 லட்சம் கிலோ மீட்டர் தள்ளிி இருக்கிறது

முதல் கேள்வி: பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசப்படுவது ஏன்?  சூரியனை பூமி சுற்று வருகின்ற பாதை வட்ட வடிவமாக இல்லாமல் சற்றே அதுங்கிய வட்டமாக உள்ளது. எனவே தான் தூரம் வித்தியாசப்படுகிறது.

 அடுத்த கேள்வி:.சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் போது அதிக வெயிலாகவும் தொலைவில் இருக்கும் போது குளிராகவும் இல்லாமல் நேர் எதிராக இருப்பது ஏன்?   பூமி சுமார் 23 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையில் இருந்தபடி சூரியனை சுற்றுவதே இதற்குக் காரணம்.

பூமியின் இந்த சாய்மானம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி சூரியனின் கதிர்கள் இந்தியா உட்பட பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் செங்குத்தாக விழுகின்றன.  ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கோடைக்காலமாக உள்ளது.
பூமியின்  நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதியில் சூரியனின் கதிர்கள்
செங்குத்தாக விழுகின்றன
அதே காலகட்டத்தில் சூரியன் கதிர்கள் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில்  சாய்வாக விழுகின்றன. ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே கோடையாக இருக்கின்ற காலத்தில் அக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக உள்ளது.

பிற்சேர்க்கை:
வாசக அன்பர் ஒருவர் பூமியானது எப்போதும் ஒரே பக்கமாக சாய்ந்து இருக்குமா என்று கேட்டிருந்தார். அது நல்ல கேள்வி.  பூமி ஒரே பக்கமாகத்தான்  சாய்ந்திருக்கிறது. அதன் விளைவாகத் தான் கோடையும் குளிர் காலமும் மாறி மாறி வருகின்றன.
மேலே உள்ள படம் பூமி ஜூன் மாத வாக்கில் உள்ள நிலையை ( இடது புறம்) காட்டுகிறது. அப்போது சூரியனின் கதிர்கள் வட கோளார்த்தத்தில்  செங்குத்தாக விழும்..வலது புறத்தில் பூமி டிசம்பரில் உள்ள நிலையைக் காட்டுகிறது. அப்போது  வட கோளார்த்தத்தில் சூரிய கதிர்கள் சாய்வாக விழும். எனவே வட கோளார்த்தத்தில் குளிர் காலமாக இருக்கும்.
  
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியனின் கதிர்கள் தென் கோளார்த்தத்தில் உள்ள நாடுகளில் செங்குத்தாக விழும். ஆகவே அந்த நாடுகளில் அப்போது கோடைக் காலமாக இருக்கும்.

மேலே உள்ள படமானது தென் கோளார்த்தத்தில் எவ்விதம் கோடைக்காலம் நிகழ்கிறது என்பதை விளக்குகிறது.

ஆனால் இன்னும் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சாய்மானம் நேர் எதிராக அமையும். அப்போது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா உட்பட வட கோளார்த்த நாடுகளில் கோடைக்குப் பதில் குளிர் காலம் ஏற்படும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் கோடைக்காலம் நிலவும். அதாவது பருவங்கள் தலைகீழாக மாறிவிடும். பூமியின் சாய்மான மாற்றம் அதற்கு காரணமாக இருக்கும். இவ்விதம் ஏற்படும் என மிலுடின் மிலன்கோவிச் (1879--1958) என்ற நிபுணர் கண்டுபிடித்துக் கூறினார். இது தனி சமாச்சாரம்.