Nov 20, 2012

பூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்

Share Subscribe
’சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான்

பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை.

குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி  மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்க முடியும்.
சுமார் 4 லட்சம் கி.மீ. தொலவிலிருந்து பார்த்தால் பூமி. இது மாதிரி எங்கேனும் உள்ளதா/ 
சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் வேறு எந்த கிரகமும் பூமி மாதிரியில் இல்லை.  சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே எண்ணற்ற வகை வகையான உயிரினங்கள் இருக்கின்றன.

ஆகவே கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால்  எங்கோ இருக்கின்ற ந்ட்சத்திரங்களுக்கு  ( சூரியனும் ஒரு நட்சத்திரமே)  கிரகங்கள் இருக்கின்றனவா/ அப்படியான கிரகங்களில் பூமி மாதிரி கிரகம் இருக்குமா ? என்று அறிவதில் கெப்ளர் விண்கலம் ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது.

சரி, பூமி மாதிரி என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். சைஸில் பூமி மாதிரியாக மட்டும் இருந்தால் போதாது.  சொல்லப்போனால் சுக்கிரன்    (வெள்ளி கிரகம் ) பூமி சைஸில் உள்ளது. ஆனால் அது அக்கினிக் குண்டமாக --அத்துடன்  ”அமுக்கு பிசாசு “போல உள்ளது.

பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ளது. ஆகவே தான் பூமியில் புதனில் உள்ளது போல விபரீத வெப்பமும் விபரீதக் குளிரும் இல்லை. செவ்வாயில் உள்ளது போல கடும் குளிர் இல்லை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

பூமியில் காற்று மண்டலம் உள்ள்து. பூமியின் காற்று மண்டலமே சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துகிறது.இதன் பலனாகவே பூமியில் உயிரினம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

தவிர, பூமியின் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் தண்ணீர் உள்ளது. நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் தண்ணீர் உள்ளது. காற்றழுத்தம் அளவுக்கு மீறிப் போனதால் தான் வெள்ளி கிரகம் பாழாய்ப் போய் விட்டது. கடும் காற்றழுத்தம் உள்ளதால் வெள்ளி கிரகத்தில் போய் இறங்கும் எந்த (ஆளில்லா ) விண்கலமும் அப்பளம் போல நொறுங்கி விடுகிறது.

பூமியைப் போல சந்திரனும் சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ள்து தான். ஆனால் சந்திரனை ஆபத்தான கதிர்கள் தாக்குகின்றன.தகுந்த காப்பு உடை இல்லாமல் சந்திரனில் இருக்க முடியாது.
கெப்ளர் விண்கலம். பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம் 
தகுந்த தூரத்தில் இருந்தால் போதாது. தகுந்த காற்று மண்டலம் இருந்தாலும் போதாது. பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இல்லத்தரசிகள் வீடுகளில் நெருப்பில் அப்பளம் சுடும் போது ஒரே பக்கத்தில் அதிகம் வெப்பம் தாக்கினால் அப்பளம் தீய்ந்து விடும் என்பதை அறிந்து தக்கபடி திருப்பித் திருப்பிப் போடுவர். பூமியின் சுழற்சி வேகம் தக்க அளவில் உள்ளதால் நாம் பிழைத்தோம்.

சந்திரனைப் பாருங்கள். சந்திரனில் தொடர்ந்து 14 நாள் வெயில்.தொடர்ந்து  14 நாள் இரவு. சந்திரனில் ஒருவர் பகலாக உள்ள புறத்தில் 14 நாள் இருந்தால் பொசுங்கிப் போய்விடுவார்.. இரவாக உள்ள புறத்தில்14 நாள் இருந்தால் குளிரில் விறைத்து செத்துப் போய்விடுவார்.

கெப்ளர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன் மாதிரியில் பனிக்கட்டி உருண்டையாக உள்ள கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரத்திலிருந்து ( அந்த நட்சத்திர மண்டலத்தின் சூரியன் என வைத்துக்கொள்ளுங்களேன்) தகுந்த தூரத்தில் உள்ள ஓரிரு கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.

எனினும் கெப்ளர் கண்டுபிடித்துள்ள பல  கிரகங்கள் பற்றிய தகவலகள் இன்னும் பகுத்து ஆராயப்படவில்லை.அவற்றில் ஒரு வேளை பூமி போன்ற கிரகம் இருக்கலாம்.

கெப்ளர் விண்கலம்  எப்படி கிரகங்களைக் கண்டுபிடிக்கிறது?.இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வானில் மிக உயரத்தில் விமானம் போகிற சத்தமே கேட்காமல் இருக்க, அந்த விமானம் ஒரு கணம் அந்த நட்சத்திரத்தை மறைக்கிறது. அந்த நட்சத்திரத்தை ம்றைத்தது விமானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அது மாதிரியில தான் நட்சத்திரங்களின் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இதை வேறு விதமாகவும் வருணிக்கலாம். அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு  வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
கெப்ளர் கண்டுபிடித்த சிறிய கிரகம். இது ஓவியர் வ்ரைந்த படம் 
இதே விதமாக கெப்ளர் விண்கலம்  வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு  எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது. கெப்ளர் இப்படியாக அனுப்புகின்ற படங்கள், தகவல்கள் ஆகியவற்றை  நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ந்து வரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் நட்சத்திரங்கள் ஆராயப்பட்டுள்ளன.

வானில் தென்படுகின்ற நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்ற்னர். அந்த அளவில் நமது அண்டத்தில் (Galaxy) கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இந்த பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில் பூமி மாதிரி எங்குமே இருக்க வாய்ப்பில்லை  என்று கருதக்கூடாது என்று ஒரு நிபுணர் கூறினார். தவிர இப்பிரஞ்சத்தில் பூமி தான் நடுநாயகமாக இருப்பதாகவும் கருதலாகாது என்றார் அவர்.
.

Nov 14, 2012

கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

Share Subscribe
” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று  விமான  நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம்.

விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன.
 நூற்றுக்கு நூறு தாவர எண்ணெய் மூலம் பறக்கும் விமானம் முன்னே ( வலது புறம்) செல்ல மற்றொரு விமானம் பின் தொடர்ந்து செல்கிறது
அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது.  தாவர எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடியும் என்ப்தை அது நிரூபித்தது. உண்மையில் அது சமையல் எண்ணெயே. ஆப்பிரிக்க நாடுகளில் அந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

உலகில் நாடுகளிடையே பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற பயணி விமானங்கள் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டவை. இந்த விமானங்கள் ஒரு வகையான் உயர் ரக கெரசினைப் பயன்படுத்தி இயங்குகின்றன.இதில் ஜெட்-A, ஜெட் A 1  என இரு வகைகள் உண்டு ( ஆனால் முன்புறம் சுழலிகளைக் கொண்ட விமானங்கள் ஒரு வகை பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன).

காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் புவியின் ச்ராசரி வெப்ப நிலை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியில் காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானத்தைக் குறைப்பதில் தங்களது பங்காக விமான நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின்                   ( இவற்றில் பெட்ரோல், டீசல், கெரசின் முதலானவை அடங்கும்)  உபயோகத்தைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
எதியோப்பிய கடுகு வகைச் செடி பூத்த நிலையில்
இந்த நோக்கில் வழக்கமான விமான எரிபொருளுடன் தாவர எண்ணெயை ஓரளவு கலப்புச் செய்து விமானங்களில் பயன்படுத்தும் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

தேங்காய் எண்ணெய், காட்டாமணக்கு எண்ணெய், பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெய்  போன்றவற்றைத் தக்கபடி பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து தாவர எரிபொருளை  (bio-fuel) எடுத்து அந்த எரிபொருள் கெரசினுடன் சேர்த்து விமானங்களில் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்பட்டது.ஒரு வகைப் பாசியிலிருந்து பெறப்பட்ட தாவர எரிபொருளும் இவற்றில் அடங்கும்.

ஏர்பஸ், போயிங் ஆகிய விமானங்களிலும் இவ்விதம் வழக்கமான விமான எரிபொருளுடன் ஓரளவு தாவர எரிபொருட்கள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்துக்கும் இவ்விதம் பயன்படுத்தப்பட்டது உண்டு.

இப்போது முதல் தடவையாக முற்றிலும் தாவர எரிபொருளைப் பயன்படுத்தி விமானம் ஓட்டப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த விமான நிறுவனம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று  சுமார் 15 பயணிகள் ஏறிச் செல்லக்கூடிய பயணி விமானத்தில் இந்த தாவர எரிபொருளைப் பயன்படுத்தியது. அந்த விமானம் வானில் பறந்து சென்ற போது அதிலிருந்து வெளிப்படும் சூடான வாயுக்களில் தீங்கான பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று அறிவதற்காக இன்னொரு விமானம் ‘மோப்பம்” பிடித்தபடி பின்னால் பறந்து சென்றது. அதாவது வாயு சாம்பிள்களை சேகரித்தது.(மேலே  படம் காண்க)
எதியோப்பிய கடுகுச் செடி. இதைக் கீரையாகவும் உண்கின்றன
கனடா விமானம் பயன்படுத்திய இந்த தாவர எரிபொருள் Brassica Carinata எனப்ப்படும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாகும். இத்தாவரத்துக்கு எதியோப்பிய கடுகு என்ற பெயரும் உண்டு. அதாவது இது கடுகு வகையைச் சேர்ந்தது. ( இந்தியாவில் வட மானிலங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் Brassica Nigra வகையைச் சேர்ந்தது) தமிழகத்தில் சமையலுக்கு கடுகு பயன்படுத்தப்பட்டாலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை.

எதியோப்பியாவில் விளையும் கடுகு வகையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.எதியோப்பிய மக்கள் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தவிர, இச்செடிகளை கீரை போல ச்மைத்து உண்கின்றனர்

இக்கட்டுரையில் தொடக்கத்தில் விமானத்தின் எரிபொருள் டாங்கியில் கடுகு எண்ணெய அப்படியே ஊற்றப்படுவது போல வேடிக்கையாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அது அப்படி அல்ல. எதியோப்பிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆலைகளில்  பல வகைகளில் பக்குவப்படுத்தப்பட்டு அதன் பின்னரே விமானத்தில் தாவர எரிபொருளாகத் தயாரிக்கப்படுகிறது.

விமானத்துக்கான தாவர எரிபொருளாக மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் வழக்கமான விமான எரிபொருளுக்கும் ( விசேஷ கெரசின்) பார்வைக்கு வித்தியாசமே கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது

கனடாவின் தென் பகுதியிலும் அமெரிக்காவின் வட ப்குதியிலும் உள்ள வறண்ட நிலங்கள் எதியோப்பிய வகை சாகுபடிக்கு ஏற்றது என வருணிக்கப்பட்டுள்ளது.

 நூற்றுக்கு நூறு தாவர எரிபொருளைப் பயன்படுத்தும் கட்டம் விரைவில் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு 2500 ஹெக்டேர் நிலத்தில் எதியோப்பிய க்டுகு பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் விமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்கள் பக்கம் திரும்புவது நல்லதாகத் தோன்றவில்லை என்று சில வட்டாரங்களில் கருதப்படுகிறது..இவற்றை அடுத்து பெரும் பண பலம் கொண்ட பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களும் தங்களது பாரவையைத் திருப்பலாம்.அவ்வித நிலையில் விவசாய நிலங்கள் கபளீகரம் ஆகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.






http://library.thinkquest.org/C0126543/thesun.htm

Nov 12, 2012

சலிப்புத் தட்டாத அதிசயம்

Share Subscribe
பூரண சூரிய கிரகணம் நம்மை பிரமிக்க வைக்கிற இயற்கை அதிசயம். சில நிமிஷங்கள் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

வருகிற 14 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம்  நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியில் தெரியும். வட கோடியில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற நகரம் மிக வாய்ப்பான இடம் என்பதால் பூரண சூரிய கிரகணத்தைக் காண ஏராளமான பேர் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர்.
சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைத்து நிற்கிறது. மறைக்கப்பட்ட சூரியனைச் சுற்றி ஒளிர்வது தான் சூரிய ஜோதி.(corona)
சூரியன் உதயமாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் சூரியன் சுமார் 2 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படும். அந்த நேரத்தில் சூரியனை ஆராயவும் விரிவாகப் படங்களை எடுக்கவும் உலகின் பல ப்குதிகளிலிருந்து விஞ்ஞானிகள் ஏற்கெனவே கெய்ர்ன்ஸ் நகருக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

சர்வதேச வானவியல் சங்கத்தில் சூரிய கிரகண ஆராய்ச்சிக்கென தனி பிரிவு உள்ளது. அதன் தலைவரான ஜே பாசாஷோப் சூரிய கிரகண நிபுணர். எங்காவது சூரிய கிரகணம் என்றால் இவர் உடனே கிளம்பி விடுவார். இதுவரை அவர் 55 சூரிய கிரகணங்களை ஆராய்ந்துள்ளார். இப்போதைய சூரிய கிரகணத்தை ஆராய அவர் விசேஷக் கருவிகளுடன் முகாம் போட்டுள்ளார்.சூரிய கிரகணத்தை இப்படி விழுந்து விழுந்து ஆராய்வானேன்?
1988 ஆம் ஆண்டு பூரண் சூரிய கிரகணம். சூரிய ஜோதி வேறு விதமாக உள்ளதைக் கவனிக்கவும்.
சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி (செண்டிகிரேட்) தான். எனினும் சூரியனைச் சுற்றி அமைந்த சூரிய ஜோதி (Corona)  ஒரு மிலியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது. இது ஏன் என்பதை அறிவதற்காகத் தான் சூரிய கிரகணத்தின் போது ஆராய்ச்சி நடத்துகின்றனர். சூரிய ஜோதி இவ்வளவு வெப்பம் கொண்டதாக இருப்பதற்கான காரணம் இன்னும் முற்றிலுமாகக் கண்டறியப்படவில்லை.
1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம். சூரிய ஜோதியை கவனிக்கவும் 
தவிர, சூரிய ஜோதி எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. சூரியனில் கரும் புள்ளிகள் (Sunspots) அதிகமாக இருக்கும் காலத்தில் சூரிய ஜோதி சூரியனின் எல்லாப் புறங்களிலும் காணப்படுகிறது. சில சமயங்களில் இடது புறத்திலும் வலது புறத்திலும் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே தான் ஒவ்வொரு பூரண சூரிய கிரகணத்தின் போதும் எடுக்கப்படுகின்ற படங்கள் வெவ்வேறு விதமாக உள்ளன.

இந்த சூரிய ஜோதி பிரும்மாண்டமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து இது பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் வியாபித்து நிற்கிறது. இது சூரியனின் வளி மண்டலம் போன்றது.

சூரியன் தினமும் தலை காட்டுகிறது. தினமும் சூரிய ஜோதி தெரியாதா?    சூரிய கிரகணத்தின் போது மட்டும் என்ன புதிதாகத் தெரியப் போகிறது.என்று கேட்கலாம்.
இது  2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம்
சூரியனின் பிரகாசம் காரணமாக சூரிய ஜோதியை மற்ற நாட்களில்  காண முடியாது. சூரியனின் ஒளித் தட்டை முற்றிலுமாக மறைத்தால் தான் சூரியனைச் சுற்றியுள்ள சூரிய ஜோதி தென்படும். ஆகவே பூமியிலிருந்து சூரியனை ஆராய்கின்ற பல டெலஸ்கோப்புகளில் சூரிய ஒளித்தட்டை மறைக்கின்ற தகடு ஒன்றைப் பொருத்திக் கொண்டு சூரிய ஜோதியை ஆராய்கின்றனர்.
சோஹோ விண்கலம் சூரிய ஒளித் தட்டை மறைத்த்படி எடுத்த படம்
சூரியனை விரிவாக ஆராய விண்ணில் சோஹோ (SOHO) என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலமும் ஸ்டீரியோ என்னும் பெயர் கொண்ட இரு விண்கலங்களும் உள்ளன. சூரிய ஒளித் தட்டை மறைக்க இவற்றில் விசேஷ ஏற்பாடு உள்ளது. ஆகவே இவை சூரிய ஜோதியை அவ்வப்போது படம் எடுத்து அனுப்புகின்றன. ஆனால் சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு இவை எல்லாம் செயற்கை ஏற்பாடுகளே/

சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு மிகச் சிறந்த இயற்கை ஏற்பாடு உள்ளது. அது தான் பூரண சூரிய கிரகணம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்காக வந்து நிற்கிற சந்திரன் சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைத்து விடுகிறது.
சோஹோ விண்கலம்
இவ்விதம் சூரியன் மறைக்கப்படுகிற நேரம் சில நிமிஷங்களே. அந்த சில நிமிஷ வாய்ப்புக்காகத்தான் விஞ்ஞானிகள் எங்கெல்லாம் பூரண் சூரிய கிர்கணம் தெரியுமோ அந்த இடங்களுக்கு ஓடுகின்றனர்.

சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைக்கின்ற நேரம் இயற்கையின் விதிகளின்படி    ஒரு போதும் ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க் முடியாது. ஆஸ்திரேலியாவில் 14 ஆம் தேதி நிகழும் பூரண சூரிய கிரகண்த்தின் போது சூரியன் இரண்டு நிமிஷமே மறைக்கப்படும். அந்த இரண்டு நிமிஷ நேரத்தில் சூரிய ஜோதியை பல்வேறு கருவிகளைப் பய்னப்டுத்தி ஆராய்வர். புகைப்படங்களையும் எடுப்பர்.

இதில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ப்ல மாத காலம் திட்டமிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து ஓரிடத்துக்குச் சென்று திறந்த வெளியில் சூரியனை நோக்கி  எல்லாக் கருவிகளையும் ஆயத்தம் செய்து வானை நோக்கி சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த கண நேரத்துக்காகக் காத்திருக்கும் போது எங்கிருந்தோ வருகின்ற மேகங்கள் சூரியனை மறைத்து விடும்.  அத்தனை முயற்சியும் வீண். இவ்விதம் நிகழ்ந்து நொந்து போன விஞ்ஞானிகள் பலர் உண்டு.

அப்படி ஏற்படாமல் இருக்க ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள  விஞ்ஞானிகளுக்கு நமது வாழ்த்துகள்.


Nov 10, 2012

சூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;

Share Subscribe
ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார்.

பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும்   விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட  விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம்.

பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?

சூரியனிலிருந்து ’சூரியக் காற்று ’துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன
முதலில் சூரியனைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.சூரியனிலிருந்து ஓயாது ஒழியாது சக்தி மிக்க துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 14 லட்சம் கிலோ மீட்டர். இத்துகள்களின் வேகம் அவ்வப்போது மாறும். வெளிப்படும் துகள்களின் அளவும் அவ்வப்போது மாறும்.

இவை துகள்களே என்றாலும்  நிபுணர்கள் இவற்றுக்குப் பொருத்தமில்லாமல் ‘சூரியக் காற்று’(Solar Wind) என்று பெயர் வைத்து விட்டார்கள். நாமும் சூரியக் காற்று என்றே குறிப்பிடுவோம்.

இந்த சூரியக் காற்று சூரியனிலிருந்து கிளம்பி நாலா புறங்களிலும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனைச் சுற்றுகின்ற பூமி, செவ்வாய், வியாழன் சனி என எல்லாக் கிரகங்களையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்கிறது.. (உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத் துகள்கள் நம்மைத் தாக்காதபடி  பூமியின்  காந்த  மண்டலம் தடுத்து விடுகிறது.)

சூரிய மண்டலத்தின் எல்லையிலுள்ள புளூட்டோ கிரகத்தையும் தாண்டி இத்துகள்கள் சென்று கொண்டிருக்கின்றன.தடுப்ப்தற்கு எதுவும் இன்றி இவை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றன.  எனினும் பல நூறு கோடி கிலோ மீட்டரைக் கடந்த பிறகு   மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிலையில் அவை  இட்து புறமும் வலது புறமும் பிரிந்து செல்ல ஆரம்பிக்கின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான சூரியக் காற்றுத் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்துள்ளதைக் காட்டும் வரிவடிவப் படம்
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மறந்து விடலாகாது.  அந்த நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஆற்றல் மிக்க  நுண் துகள்கள் தான் சூரியக் காற்று மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து விடுகின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான நட்சத்திர மண்டல துகள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விண்வெளியின் அப்பகுதியில் அவற்றின் சக்தி தான் அதிகம். ஆகவே சூரியக் காற்று இவ்விதம் தடுக்கப்படுகின்ற விண்வெளிப் பகுதியை சூரிய மண்டலத்தின் எல்லை (Heliopause)  என்று சொல்லலாம்.  சூரியக் காற்று அத்தோடு நின்று விடுகிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?.
வாயேஜர் 1 விண்கலம்
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு  1977 ஆம் ஆண்டில் வாயேஜர் -1  என்னும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.  அந்த விண்கலம்  வியாழன், சனி ஆகிய கிரகங்கள நெருங்கி ஆராய்ந்து பல அரிய படங்களையும் அத்துடன் அந்த இரு கிரகங்கள் பற்றிய த்கவல்களையும் சேகரித்து அனுப்பியது. எந்த கிரகத்திலும் இற்ங்காமல் அவற்றைக் கடந்து சென்ற  அந்த் விண்கலம் அதன் பிறகு தொடர்ந்து விண்வெளியை நோக்கிப் ப்ய்ணத்தைத் தொடர்ந்தது.

வாயேஜரின் முக்கிய பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது இடைவிடாது விண்வெளி நிலைமைகள் பற்றித் தகவல் அனுப்பி வருகிற்து.. சூரியக் காற்றின் துகள்கள் பற்றியும் அது தெரிவித்து வருகிறது.  எனவே எவ்வளவு துகள்கள் வாயேஜரின் கருவியில் பதிவாகின்றன என்ற தகவல்  நாஸாவின் தலைமைக் கேந்திரத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது

வாயேஜரிலிருந்து  கடந்த செப்டம்பரில்  கிடைத்த தகவலகளை ஆராய்ந்த போது சூரியக் காற்றின் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்து விட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் அண்டவெளியிலிருந்து சூரிய மண்டலத்தைத் தாக்கும் ஆற்றல் மிக்க துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

இதிலிருந்து தான் வாயேஜர் சூரிய மண்டல எல்லையை எட்டி விட்டதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப் பகுதி அமைந்துள்ள தூரம் சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் ஆகும். இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு.

சூரிய மண்டலத்தின் எல்லை அவ்வளவு தொலைவில் உள்ளதாகச் சொல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பூமி முதலான கிரகங்கள் தெரியாது. சூரியன் பிரகாசமான ஒளி புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத் தெரியும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)

சூரிய மண்டலத்துக்கு குட்பை சொல்லி விட்டு வெளியேறும் வாயேஜர் 1 எங்கே செல்லும்? அண்டவெளி என்பது  எல்லையற்ற வெளி.    ஒபியுகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர மண்டலத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கும்.  இந்த நட்சத்திர மண்டலம் விருச்சிக ராசிக்கு அருகே உள்ளது. வாயேஜர் 1  எந்த நட்சத்திரத்தையும் நெருங்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாயேஜரில் வைக்கப்பட்டுள்ள CD
வாயேஜர் விண்கலத்தில் ஒரு CD  வைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய மணடலம்  மற்றும் பூமி முதலான கிரகங்கள் எங்கே உள்ளன என்ற தகவலகள் உள்ளன. ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் ப்டங்கள்  35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி, என பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.  உலகின் பல்வேறு வகையான இசைகளின் சாம்பிள்களும் இதில் இடம் பெற்றுள்ளன... இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகி கேசர்பாய் கேர்கரின் குரலும் இவற்றில் அடங்கும்.

ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) வாயேஜர் விண்கலத்தைக் கைப்பற்ற நேர்ந்தால் பூமி பற்றியும் மனித இனம் பற்றியும் தெரிவிக்கும் நோக்கில் தான் இந்த CD வைக்கப்பட்டுள்ளது.   அப்படி அன்னிய கிரகவாசிகள் இருக்க நேரிட்டு அவர்களின் கையில் இது கிடைப்பதற்கு அனேகமாக வாய்ப்பே இல்லை என்று பிரபல விஞ்ஞானி கார்ல் சாகன் கூறியுள்ளார்.
வாயேஜர் விண்கலங்கள், பயனீர் விண்கலங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகள்
நாஸா கடந்த பல ஆண்டுகளில் வாயேஜர் 1 விண்கலத்தை  மட்டுமன்றி வாயேஜர் 2,  ப்யனீர் 10,  பயனீர் 11 ஆகிய ஆளில்லா விண்கலங்களையும் அனுப்பியுள்ளது. ஒரு கால கட்டத்தில் இவையும் சூரிய மண்டல எல்லையை விட்டு வெளியேறும்.


Nov 3, 2012

சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி

Share Subscribe
 நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது  நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்

குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.

எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை   நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தால் தண்ணீர் மிகுந்த அளவுக்கு சூடேறும்.

அந்த சூடான தண்ணீரை மேலே கொண்டு வந்து அதிலிருந்து நீராவியைப் பிரித்து டர்பைன்களுக்கு அனுப்பலாம்.  நீராவியானது டர்பைன்களைச் சுழலச் செய்யும். அப்போது அவற்றுடன் இணைந்த ஜெனரேட்டர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ( அனல் மின் நிலையங்களில் இப்படித்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் நீரை சூடேற்றி  நீராவியைப் பெற நிலக்கரி எரிக்கப்படுகிறது.)

ஆரிகன் மாகாணத்தில் அமையும் புவி வெப்ப மின் நிலைய செயல்பாட்டை விளக்கும் படம் 
அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் அவிந்த எரிமலை அருகே இப்போது நிலத்தடிப் பாறைகளின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சார உறபத்திக்கென ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முன்னோடித் திட்டம் என வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உள்ளது.

இங்கு நிலத்தடிப் பாறைகளின் வெப்பம் சுமார் 300 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலை கக்கி 1300 ஆண்டுகள் ஆகின்றன.

இங்குள்ள பாறைகள் நீர் ஊடுருவாதவை. ஆகவே முதலில் அப்பாறைகளில் இயற்கையாக உள்ள வெடிப்புகளைப் பயன்படுத்தி பாறைகளூக்குள்ளே ஏராளமான நுண்ணிய பாதைகளை ஏற்படுத்துவர். இதற்கு விசேஷ முறைகள் உள்ளன்.

இவ்விதம் நுண்ணிய பாதைகளை ஏற்படுத்திய பின்னர் மேலிருந்து உள்ளே சாதாரணத் த்ண்ணீரைச் செலுத்தும் போது அத்தண்ணீர் 2.7 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள சூடான பாறைகளின் ஊடே சென்று சூடான நீராக மாறும். அத்தண்ணீர் மேலே மின் நிலையத்துக்கு கொண்டுவரப்படும். இவ்வித மின் நிலையமானது புவி வெப்ப  மின் நிலையம் (Geo-thermal power station) என்று குறிப்பிடப்படுகிறது.

உலகில் ஏற்கெனவே இந்த மாதிரியான மின் நிலையங்கள் பல உள்ளன. ஆனால் அவை நிலத்துக்கு அடியில் இயற்கையாக உள்ள வெப்ப நீரை எடுத்துப் பயன்படுத்துபவை. நியூசீலந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வித மின் நிலையங்கள் உள்ளன. ஐஸ்லாந்தின் மொத்த மின் உற்பத்தியில் 30 சதவிகிதம் இவ்வித மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. ஐஸ்லாந்தில் நிறைய எரிமலைகளும் வென்னீர் ஊற்றுகளும் உள்ளன.

அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் நிறுவப்பட உள்ள புவி வெப்ப  மின் நிலையமானது இவற்றிலிருந்து வேறுபட்டது. புதுமையானது. சாதாரண நீர் உள்ளே செலுத்தப்பட்டு சூடான பாறைகள் மூலம்  வெப்ப நீராக மாற்றப்படுகிறது. இது இங்கு அவிந்த எரிமலை அருகே நிறுவப்பட்டாலும் உலகில் எந்த இடத்திலும் இவ்வித மின் நிலையத்தை அமைக்க முடியும் இத்திட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Nov 1, 2012

பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

Share Subscribe
பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற  ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு  அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன்.

 அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த பதிலுடன் மேலும் சில விளக்கத்தையும் இங்கு சேர்த்திருக்கிறேன்.

”NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will seea entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, prayto God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.

இது உண்மையா?.....உங்களிடமிருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.”  -சுதாகர்

to Sudhakar
Dear Sir
   நான் அறிந்த வரையில் நாஸா  அப்ப்டி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. total blackout  என்பது என்ன என்று புரியவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

 அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது . மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை.  பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
 
பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.
 
சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல்.
 நாஸா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல. 
 
Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே.

 படித்தவர்களும் இந்த வதந்திகளை நம்ப முற்படுவது வேதனையைத் தருகிறது. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரப்ஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை.
 வீண் வதந்திகளை நம்பாதீர்கள். எனது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

ராமதுரை

இப்போது கூடுதல் விளக்கம்:

சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று ( பெரிய கிரகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.

அப்படி பிரும்மாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால் ,  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.

சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து கிளப்பும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி கிளம்பும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.

ஒரு வேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே ( சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும்.

ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரும்மாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.

ஆக்வே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும்.
(ப்டங்கள் இல்லை, மன்னிக்கவும்)