Showing posts with label ராக்கெட். Show all posts
Showing posts with label ராக்கெட். Show all posts

Feb 14, 2018

சூரியனை சுற்றி வரும் கார்

Share Subscribe
காரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும்.

அமெரிக்க கோடீசுவரர் ஒருவர் தாம் உருவாக்கியுள்ள மிக நவீன ராக்கெட்டில் ஒரு காரை வைத்து உயரே செலுத்தியுள்ளார். அது பூமியைப் போல சூரியனைச் சுற்றி வர ஆரம்பித்துள்ளது. அந்தக் காரும் அவர் உருவாக்கியதே.


பால்கன் ஹெவி ராக்கெட்
அந்த கோடீசுவரரின் பெயர் எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்த அவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலேயே ஆசை. அவர் ஆரம்பத்தில் பல கம்பெனிகளை நிறுவினார். அவற்றில் ஒன்று பேபால் (PayPal) என்பது.

கையில் ஓரளவு பணம் சேர்ந்ததும் அவர் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார். பல ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம். ஏராளமான எஞ்சினியர்க்ளையும் மற்றும் நிபுணர்களையும் அவர் அமர்த்திக் கொண்டார். தங்கள் நிறுவனத்துக்கென ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்தார். அந்த ராக்கெட்டுகளுக்கு பால்கன் (Falcon) என்று பெயர். அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய பால்கன் 9 என்ற ராக்கெட் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ராக்கெட் துறையில் அது புதிய சாதனையை ஏற்படுத்தியது.

பொதுவில் செயற்கைக்கோள்களை செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளே. உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் பணி முடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும்..

உலகில் ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளாக உயரே செல்கின்ற ராக்கெட்டுகளின் கதி இது தான். எலான் மஸ்க். கதையைப் புரட்டிப் போட்டு தனது இரண்டு அடுக்கு பால்கன் 9 ராக்கெட்டின் அடிப்புற ராக்கெட் தனியே கழன்று தரையில் குறிப்பிட்ட இலக்கில் மெல்ல வந்து உட்காரும்படி சாதித்துக் காட்டினார். பால்கன் 9 ராக்கெட் 20 க்கும் மேற்பட்ட தடவை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படி வந்து இறங்கிய ராக்கெட்டை எலான் மஸ்க் மீண்டும் பயன்படுத்தலானார்.

உயரே சென்ற ராக்கெட்டுகளில் இரண்டு கீழே வந்து இறங்குகின்றன
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகமில்லை. உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் செல்வு தான் அதிகம். எனவே அந்த வகையில் ராக்கெட்டைச் செலுத்த எலான் மஸ்கிற்கு குறைந்த செலவே ஆகிறது. .

மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதையே நோக்கமாகக் கொண்ட எலான் மஸ்க் அடுத்து மூன்று பால்கன் 9 ராக்கெட்டுகளை பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்றாக இணைத்தார்’. இதன் பெயர் பால்கன் ஹெவி என்பதாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது. உலகில் இப்படியான ராக்கெட்டே கிடையாது என்று கூறும் அளவுக்கு இது சக்திமிக்க பிரும்மாண்டமான ராக்கெட் ஆகும். இது சுமார் 64 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது.

1969 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய சாடர்ன் 5 ராக்கெட் தான் பால்கன் ஹெவி ராக்கெட்டை விட அதிக சக்தி கொண்டதாகும்.

பால்கன் ஹெவி உயரே செலுத்தப்படுவது இதுவே முதல் தடவை.

எனவே இதற்கென இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் முகப்பில் செயற்கைகோள் அல்லது விண்கலம் எதுவும் வைக்கப்படவில்லை. காரணம் இது தான். அந்த ராக்கெட் அழிந்தால் செயற்கைக்கோளும் அழிந்து தேவையற்ற வீண் செலவு ஏற்படும். ஒரு ராக்கெட்டை முதல் தடவையாக சோதிக்கும் போது அதன் முகப்பில் எடை மிக்க கான்கிரீட் பாளங்க்ள் அல்லது இரும்புத் தண்டுகளை வைத்து அனுப்புவது வழக்கம்.

ஆனால் எலான் மஸ்க் தனது பால்கன் ஹெவி ராக்கெட்டின் முகப்பில் சிவப்பு நிறக் காரை வைத்து அனுப்பினார். ராக்கெட் தயாரிக்கும் எலான் மஸ்க் மின்சார பாட்டரி மூலம் இயங்கும் கார்களையும் தயாரித்து வருகிறார். அந்தக் கம்பெனிக்கும் அவர் தான் தலைவர்.

மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான ரோட்ஸ்டர் காரை வைத்ததோடு நிற்கவில்லை. அந்த காரில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரியில் விண்வெளி வீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பினார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக் கொண்டிருந்த்து. இதெல்லாம் எலான் மஸ்கின் ஐடியா.

உயரே சீறிப்பாய்ந்த பால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டி சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது.

அந்தக் கார் பின்னர் சூரியனைச் சுற்ற ஆரம்பித்த்து. அது அப்படிச் சுற்றும் போது ஒரு சமயம் பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும். .பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

எலான் மஸ்க்
அந்தக் கார் என்ன ஆகும் என்று கேட்கலாம். அது பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்கு உட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்த காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.

எலான் மஸ்கின் அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை (பணம் பெற்றுக்கொண்டு) அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே குரூ டிராகன் என்ற விண்கல்த்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பி.எப்.ஆர் என்னும் ராட்சத ராக்கெட்டை உருவாக்குவதில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்ட காலத் திட்டமாகும்.

ஓரளவு வசதி உள்ளவர்களும் விண்வெளிக்குச் சென்று வருவதற்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ராக்கெட் தயாரிப்பு, விண்கலத் தயாரிப்பு, மின்சாரக் கார் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார். இவை போதாதென நகரங்களுக்கு இடையே சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் பயணம் செய்வதற்கான திட்டத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 46 வயதான எலான் மஸ்க் அசகாய சூர்ர்.

(எனது இக்கட்டுரை பிப்ரவரி 13 ந் தேதி தினத்தந்தி இதழில் வெளிவந்ததாகும்)

Nov 12, 2015

ராக்கெட்டின் பகுதி இலங்கை அருகே கடலில் விழும்

Share Subscribe
எப்போதோ உயரே செலுத்தப்பட்ட ஒரு  ராக்கெட்டின் பகுதி வெள்ளிக்கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே கடலில் விழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  ஒரு வேளை இது விண்கலம் ஒன்றின் பகுதியாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடலில் விழப்போகும் அப்பகுதி    இரண்டு மீட்டர் நீளம் (சுமார் 7 அடி) கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் எடை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.  இரண்டு டன் அளவுக்கும் இருக்கலாம்.
ராக்கெட் துண்டின் சுற்றுப்பாதை.(சிவந்த நிறம்) Credits: Data - Bill Gray/Project Pluto, Image - Celestia
இது எந்த நாடு செலுத்திய ராக்கெட்டின் பகுதி என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. சந்திரனை நோக்கி செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம். ஏனெனில் இது பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது. அதன் பாதை சந்திரனின் சுற்றுப்பாதையையும் தாண்டி அமைந்துள்ளது.

 கடந்த 5 ஆம் தேதி இது பூமியிலிருந்து சுமார் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கிருந்து பூமியை நோக்கி வருகின்ற அது 13 ஆம் தேதி பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும்.

பின்னர் அது கீழ் நோக்கி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். அப்போது அது  மிகுந்த சூடேறி தீப்பற்றும்.  அதன் விளைவாக அது வானிலேயே எரிந்து அழிந்து விடலாம்.  அப்படி அது  நடுவானிலேயே அழிந்து விட்டால் சாம்பல் தான் கீழே வந்து விழும்.
ராக்கெட் துண்டு  நடுவானில் அழியாமல் போனால் கடலில் எங்கு விழும் என்பது
 பச்சை வட்டம் வடிவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இலங்கை அரசு முன்னெச்சரிக்கையாக அந்த கடல் பகுதியில் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.  அப்பகுதியில் வானில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் செலுத்தப்படும் பல வகையான செயற்கைக்கோள்கள் செயலிழந்த பிறகு கடைசியில் மெல்ல கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறி தீப்பிடித்து அனேகமாக முற்றிலுமாக எரிந்து போகும். செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு கட்டத்திலும் கழன்று கீழ் நோக்கி இறங்கும். அவையும் இப்படி தீப்பிடித்து அழிகின்றன.

ஆனாலும் விண்வெளியில் ராக்கெட்டுகளின் துண்டுப் பகுதிகள், செயலிழந்த செயற்கைக்கோள்களின் ப்குதிகள் என  லட்சக் கணக்கில்   இருக்கின்றன. அவை பூமியைத் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

 பூமிக்கு மேலே கால்பந்தை விட பெரிய சைஸில் உள்ள துண்டுகள் சுமார் 20 ஆயிரம் இருக்கலாம். கோலிக்குண்டு சைஸில் சுமார் 5 லட்சம் துண்டுகள் இருக்கலாம். அதை விடச் சிறியவை சுமார் 10 கோடி இருக்கலாம். இவை அனைத்துமே பூமியைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது பூமியை நோக்கி இறங்க இருக்கும் துண்டுக்கு WT 1190F என்று பெயர்  வைக்கப்பட்டுள்ள்து. உயரே இருக்கும் போதே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு, இந்தத் தேதியில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் கீழே விழும் என்று முதல் முறையாகக் கணிக்கப்ப ராக்கெட் துண்டு இதுவேயாகும்.

இலங்கைக்குத் தெற்கே கடல் பகுதியில் நாளை காலை 11-50  மணிக்கு இது விழ்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானவியல் சங்கமும் ஐக்கிய அரபு குடியரசின் விண்வெளி அமைப்பும் சேர்ந்து ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு அந்த ராக்கெட் துண்டு கீழே விழுவதைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளன.

Latest Update

எதிர்பார்த்தபடி அந்த ராக்கெட்  துண்டு இன்று முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பிடித்து அழிந்தது. கீழே படம்
தீப்பிடித்து எரிந்தபடி கீழே பாயும் ராக்கெட் துண்டு