Showing posts with label சந்திர வளையம். Show all posts
Showing posts with label சந்திர வளையம். Show all posts

Aug 4, 2012

சூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்

Share Subscribe
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெள்ளியன்று நடுப்பகல் வாக்கில் வானில் அதிசயக் காட்சி ஒன்று தென்பட்டது. சூரியனைச் சுற்றி ஒரு வளையம் காணப்பட்டது. பலருக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

முதலாவதாக ஒன்றைத் தெளிவு படுத்தியாக வேண்டும். சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வளையமோ சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த பஞ்சு மேகங்களால் உண்டாவதாகும்.. ஆகவே  இது சூரியனுக்கு அருகில் ஏற்படுகின்ற வளையம் அல்ல்.

உலகில் எந்த இடமானாலும் தலைக்கு மேலே மேகங்கள் தென்படும். இந்த மேகங்கள் பலவகைப்பட்டவை.வெவ்வேறு மேகங்கள் வெவ்வேறு உயரங்களில் அமைந்திருக்கும். அதாவது எல்லா மேகங்களும் ஒரே உயரத்தில் அமைந்தவை அல்ல. அந்த வகையில் பஞ்சு(Cirrus)  மேகங்கள் வெப்ப மண்டல நாடுகளில் சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.
சூரியனைச் சுற்றி வளையம்
பஞ்சு மேகங்களிலேயே பல வகை உண்டு. இந்த பஞ்சு மேகங்களில் மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகள் இருக்கும். இந்த ஐஸ் துணுக்குகள் தூசை விடச் சிறியவை சில சமயங்களில் இந்த பஞ்சு மேகம் நம் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு மெல்லிய படலமாகவும் அமைந்திருக்கலாம்.

சதுரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டது என்று நமக்குத் தெரியும். இந்த ஐஸ் துணுக்குகள் ஆறு பக்கங்களைக் கொண்டவை. பல லட்சம் ஐஸ் துணுக்குகள் ஒவ்வொன்றும் சூரிய் ஒளிக் கற்றைகளை 22 டிகிரி அளவுக்குத் திருப்புகின்றன. இதன் விளைவாகக் கீழே இருக்கின்ற நமக்கு சூரியனைச் சுற்றி  வானில் வளையம் அமைந்துள்ளது போன்ற காட்சி தென்படுகிறது.  இது மழைத் தூறல் இருக்கும் போது வானில் சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றுவதைப் போன்றதே.

வானில் சூரியனைச் சுற்றி வளையம் தென்படுகின்ற நேரத்தில் பஞ்சு மேகங்களுக்கு மேலாகப் பறக்கின்ற ஒரு விமானத்தில் இருக்கும் பயணிகள் கீழ் நோக்கிப் பார்த்தால் அவர்களுக்கு சூரிய வளையம் எதுவும் தெரியாது. தவிர, இந்த பஞ்சு மேகங்களுக்கு மேலாக இருந்தபடி சூரியனைப் பார்த்தால் சூரியனைச் சுற்றி வளையம் எதுவும் தென்படாது.

இதல்லாமல் ஓரிடத்தில் சூரிய வளையம் தென்பட்டால்  அந்த வளையம் ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் தில்லியில், மும்பையில், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கும் தென்படாது.  குறிப்பிட்ட வட்டாரத்துக்கு மேலே இருக்கின்ற ப்ஞ்சு மேகங்களால் இந்த வளையம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆகவே அந்த வட்டாரத்தில் மட்டுமே சூரிய வளையம் தெரியும்.  இதர இடங்களில் இந்த வான் காட்சி தென்படாது.
சந்திரனைச் சுற்றி வளையம். 
சுருங்கச் சொன்னால் சூரியனைச் சுற்றி அமைந்தது போலத் தோன்றும் சூரிய வளையம் காற்று மண்டல நிலைமைகளால் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே ஏற்படுவதாகும்.உலகில் எவ்வளவோ இடங்களில் கடந்த காலங்களில அபூர்வமாக இப்படி சூரிய வளையம் தென்பட்டது உண்டு.

இரவு வேளைகளில் பௌர்ணமி நிலவைச் சுற்றியும் இப்படி வளையம் காணப்படலாம். ஒரு வித்தியாசம். சந்திரனைச் சுற்றிய வளையம் மங்கலாக இருக்கும்.