Dec 7, 2011

கார்த்திகைப் பண்டிகையன்று என்ன விசேஷம்?

Share Subscribe

கார்த்திகைப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகைகளில் ஒன்று. எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியையொட்டித் தான் இப்பண்டிகை வரும். அனேகமாக அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமாக இருக்கும். நாம் இங்கு கவனிக்கப் போவது மத ரீதியிலான விஷயங்கள் அல்ல. இது வானவியல் (Astronomy) பற்றியது. அதாவது கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு எவ்விதம் வானவியல் அம்சங்கள் காரணமாக உள்ளன என்பதை விளக்குவது.

பூமியைச் சந்திரன் சுற்றி வருவதை நாம் அறிவோம். பௌர்ணமியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இதே வரிசையில் நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நேர்கோட்டை நாம் நீட்டிக் கொண்டே போனால் கோடானு கோடி கிலோ மீட்டருக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கின்ற இடத்துக்குப் போய்ச் சேரும். அதாவது சூரியன் - பூமி - சந்திரன் - கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆகிய நான்கும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் இருக்கும்.


டிசம்பர் 10 ஆம் தேதி இவ்விதமாகத்தான் இருக்கும். ஆண்டில் ஒரு முறை தான், அதாவது கார்த்திகைப் பௌர்ணமியன்று தான், இந்த நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். இதை அடிப்படையாக வைத்தே கார்த்திகைப் பண்டிகை.கொண்டாடுகிறார்கள். வானில் ஆண்டில் ஒரு முறை காணப்படுகின்ற ஓர் ‘அணிவகுப்பை’  பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் எனலாம்.

தமிழகத்தின் பல பண்டிகைகள் இவ்விதம் வானவியல் அடிப்படையிலானவை. பண்டைக்காலத்தில் தமிழர்கள் வானவியலில் வல்லுநர்களாக இருந்ததை இவை காட்டுவதாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் வானவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வானவியல் நிபுணர்கள் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ரிஷப ராசியில் அடை போன்று பல நட்சத்திரங்கள் காணப்படும். இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு நமது முன்னோர்கள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று பெயர் வைத்தனர்.

சந்திரன் ஓயாது பூமியைச் சுற்றி வருகின்றது. ஆண்டில் சுமார் 12 அல்லது 13 பௌர்ணமிகள் வரும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே சூரியன், பூமி,பௌர்ணமி சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ( ரிஷப ராசி) ஆகிய நான்கும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமிகளில் சந்திரனுக்குப் பின்னால் ரிஷப ராசிக்குப் பதில் வேறு ராசி அமைந்திருக்கும்.

வேடிக்கை என்னவென்றால், கார்த்திகைப் பண்டிகையன்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை வானில் காண இயலாது. வானில் சந்திரனுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் என்பதால் பௌர்ணமி நிலவின் பிரசாகத்தின் காரணமாக அது புலப்படாது. ஆனால் ஜனவரி மாதத்தில் கிழக்கு வானில் இரவு 8 மணிக்கு மேல் காண முடியும். பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும்.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள Alcyone எனப்படும் நட்சத்திரமே கார்த்திகை நட்சத்திரமாகக் அழைக்கப்படுகிறது. வானவியலில் இந்த நட்சத்திரம் Eta Tauri என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசம் கொண்டது. வட மொழியில் கார்த்திகை நட்சத்திரம் க்ருத்திகா எனப்படுகிறது. இந்தியாவில் ஆண்களில் பலர் கார்த்திக், கார்த்திகேயன் என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். பெண்களாக இருந்தால் க்ருத்திகா என்று பெயரிடுகின்றனர்

படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ளது தான்
கார்த்திகை (Alcyone) நட்சத்திரம்.
படம்: courtesy NASA/ESA/AURA/Caltech
முருகன் பற்றிய புராணக் கதையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆறு நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் தான் முருகனுக்குக் கார்த்திகேயன் என்றும் ஒரு பெயர் உள்ளது.

ஜப்பானிய மொழியில் இந்த நட்சத்திரக் கூட்டதுக்கு சுபாரு என்று பெயர். ஜப்பானிய கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு சுபாரு என்று வைத்ததுடன் நில்லாமல் அதன் லோகோவில் ஆறு நட்சத்திரக் குறிகளைப் போட்டுக்கொண்டுள்ளது. அரபு மொழியில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு அல் துராயா என்று பெயர். இப்பெயரில் சேடிலைட் டெலிபோன் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Pleiades என்று பெயர். ஏழு சகோதரிகள் என்பது அதன் பொருள். கிரேக்க புராணத்தில் வரும் ஏழு சகோதரிகளின் பெயர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு வைக்கப்பட்டன.

வெறும் கண்ணால் பார்த்தாலே இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். பார்வை கூர்மையாக உள்ளவர்களால் ஏழு நட்சத்திரங்களைக் காண இயலும்.

அரேபியர் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்.  திசைகாட்டும் கருவி கூட இல்லாத காலத்தில் இரவில் நட்சத்திரங்க்ளை வைத்தே திசை அறிந்தனர். ஆகவே பார்வைக் கூர்மை முக்கிய அம்சமாக இருந்தது. எவர் ஒருவரால் வெறும் கண்ணால் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காண முடிந்ததோ அவர்களே மாலுமிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று சொல்வார்கள். பல நட்சத்திரங்களுக்கு அரபு வானவியலார் வைத்த பெயர்கள் இன்றளவும் வானவியல் துறையில் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியலின்படி கார்த்திகை நட்சத்திரக் கூட்டமானது Open Cluster வகையைச் சேர்ந்தது. தமிழில் இதை நட்சத்திரத் திரள் எனலாம். கார்த்திகை நட்சத்திரத் திரள் சுமார் 450 ஒளியாண்டு தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டுத் தொலைவு என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்).

இந்த நட்சத்திரக் கூட்டம் தோன்றி சுமார் 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகைக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து சென்று விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இது டிசமபர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான்காட்சி எப்படி இருக்கும்
என்பதைக் காட்டும் படமாகும்.வலது ஓரத்தில் வெண்மை நிற வட்டம்
பௌர்ணமி சந்திரன். அதற்கு அருகே Alcyone இருப்பதைக் காணலாம்

வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வேறு ஒரு வகையிலும் விசேஷமானது. அன்று சந்திர கிரகணம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில்  சந்திரன்  பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.

8 comments:

krishjapan said...

why we celebrate karthigai theepam on 8th dec this eyar? its not full moon day...is there any discrepancy?

என்.ராமதுரை / N.Ramadurai said...

டிசம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலையில் பரணி தீபம் கொண்டாடுகிறார்கள். டிசம்பர் 10 ஆம் தேதி ச்ர்வாலய தீபம்.டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான் நிலைமைகளைக் காட்டும் படத்தின் link கீழே அளிக்கப்பட்டுள்ளது.அதில் வெண்மை வட்டம் பௌர்ணமி சந்திரன்.அதன் பின்னால் Alcyone நட்சத்திரம் இருப்பதைக் காண்க
http://www.wunderground.com/sky/ShowSky.asp?CurDir=Up&TheLat=13.00000000&TheLon=80.18000031&TimeZoneName=Asia%2FKolkata&Month=12&Day=10&Year=2011&Min=0&Hour=18&Redraw=Change&ShowPlanets=checked&Sh

krish said...

Hi Ramdurai,

Thanks for the valuable info.I have lot of questions in my mind to ask you about science.Hope you'll explain.Here comes the first one

I'm always wondering for what reason we see the size difference in moon(like paurnami to pirai & pirai to paurnami) Which one is hiding the moon,Would be really helpful if you explain this whole process.

Rgds..
Krish.

Anonymous said...

I got the following information from one website, the reason for celebrating karthigai deepam. What do you think about this Sir?

தீபத்திருநாள் கொண்டாடப்பட கதை ஒன்றை எல்லோரும் சொல்வர். அது நம் முன்னோர் செய்து சென்ற சூட்சும ஏற்பாடு. அதில் மிகச்சிறந்த அறிவியலே ஒளிந்திருக்கின்றது.

பொதுவாக தீபத்திருநாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் முன்னரெல்லாம் (5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) அதிகமாக புயல்கள் உருவாகி வட கிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்க்கும். அதன் காரணமாக வெள்ள அபாயம் எப்பொழுதும் தமிழகத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

இதிலிருந்து காக்க மன்னர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் எல்லோரும் ஆலோசித்தனர். அதன் காரணத்தை அறிவியல் ரீதியாக அணுகி ஒரு தீர்வு கண்டனர். அதாவது புயல் உருவாவதற்கு காரணம் கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதை சரி செய்ய நாட்டின் உயரமான இடங்களில் சூடு படுத்த வேண்டும். அதனால் அந்த இடங்களில் வெப்பம் காரணமாக காற்று சூடாகி விரிவு பெரும். இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமன் செய்யப்பட்டு புயல் அபாயம் நீங்கும். ஆனால் மழை மட்டும் பொழிந்துகொண்டிருக்கும். அதனால் கார்த்திகை தீபத்திருவிழா வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக தீபத் திருநாளில் இருந்து 15 நாட்களுக்கு நாட்டின் உயரமான பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு புயல் சமன் செய்யப்படுகின்றது. அதன் பிறகு மழை பொழிவு சீரடைந்து புயல் அபாயம் நீங்குகின்றது.

Regards,
Uma

என்.ராமதுரை / N.Ramadurai said...

Krish,
பூமியைப் போலவே சந்திரனும் ஓர் உருண்டை. எந்த ஒரு உருண்டை மீது ஒளி பட்டாலும் பாதிப் பகுதி மீது தான் ஒளி விழும். அந்த வகையில் தான் நமக்கு இரவும் பகலும் ஏற்படுகின்றன. சந்திரன் மீது சூரிய ஒளி விழும் போது அதன் ஒரு பாதி பகலாகவும் மறு பாதி இரவாகவும் இருக்கும். ஆனால் சந்திரன் பூமியைச் சுற்றுகிறது. ஆக்வே இடம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆகவே சந்திரனின் ஒரு பாதி மீது ஒளி விழுந்தாலும் சந்திரன் நம்மைப் பொருத்து எங்கே உள்ளது என்பதைப் பொருத்து ஒளி விழும் பாதியில் ஒரு பகுதி மட்டுமே நமக்குத் தெரிகிறது. இதன் விளைவாகவே பிறைகள் தென்படுகின்றன.பௌர்ணமியன்று சந்திரன் மீது ஒளி விழும் முழுப் பாதியும் நமக்குத் தெரிகிறது. ஆகவே சந்திரன் ஒளி வட்டமாகத் தெரிகிறது.பிறைகளுக்குக் காரணம் சந்திரனின் இடப் பெயர்ச்சியே.

Anonymous said...

super uma...intha thagaval than ithana nala ethir parthu kondu irunthen....

ovvuru pandigayum manithanoda(tamilanoda) nalanukakathan kondadu kiranga...

atha kadavul pera sonnatha pannuvan nam munnorgal ellam pandigayum kadavul perala seyranga..

Intha kurippu kidaitha website solla mudiyuma..
Please post it.

Regards
Paramasivam.R

Anonymous said...

Dear Mr.Paramasivam

Sorry, I don't remember the website. I think if you copy and type these words in I.E search you can find it out.

I expect the comments from Mr.Ramathurai.

Regards,
Uma

Chidambaram Venkatesa Deekshithar said...

அது மட்டுமின்றி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நாம் சிறப்பு விசேஷங்கள் கொண்டாடுகிறோம் அவைகளும் அறிவியல் காரணங்களும் உண்டு .விஞ்ஞானமும் ,மெய்ஞானமும் சேர்ந்தது தான் ஆன்மிகம்

Post a Comment