Nov 20, 2012

பூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்

Share Subscribe
’சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான்

பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை.

குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி  மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்க முடியும்.
சுமார் 4 லட்சம் கி.மீ. தொலவிலிருந்து பார்த்தால் பூமி. இது மாதிரி எங்கேனும் உள்ளதா/ 
சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் வேறு எந்த கிரகமும் பூமி மாதிரியில் இல்லை.  சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே எண்ணற்ற வகை வகையான உயிரினங்கள் இருக்கின்றன.

ஆகவே கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால்  எங்கோ இருக்கின்ற ந்ட்சத்திரங்களுக்கு  ( சூரியனும் ஒரு நட்சத்திரமே)  கிரகங்கள் இருக்கின்றனவா/ அப்படியான கிரகங்களில் பூமி மாதிரி கிரகம் இருக்குமா ? என்று அறிவதில் கெப்ளர் விண்கலம் ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது.

சரி, பூமி மாதிரி என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். சைஸில் பூமி மாதிரியாக மட்டும் இருந்தால் போதாது.  சொல்லப்போனால் சுக்கிரன்    (வெள்ளி கிரகம் ) பூமி சைஸில் உள்ளது. ஆனால் அது அக்கினிக் குண்டமாக --அத்துடன்  ”அமுக்கு பிசாசு “போல உள்ளது.

பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ளது. ஆகவே தான் பூமியில் புதனில் உள்ளது போல விபரீத வெப்பமும் விபரீதக் குளிரும் இல்லை. செவ்வாயில் உள்ளது போல கடும் குளிர் இல்லை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

பூமியில் காற்று மண்டலம் உள்ள்து. பூமியின் காற்று மண்டலமே சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துகிறது.இதன் பலனாகவே பூமியில் உயிரினம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

தவிர, பூமியின் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் தண்ணீர் உள்ளது. நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் தண்ணீர் உள்ளது. காற்றழுத்தம் அளவுக்கு மீறிப் போனதால் தான் வெள்ளி கிரகம் பாழாய்ப் போய் விட்டது. கடும் காற்றழுத்தம் உள்ளதால் வெள்ளி கிரகத்தில் போய் இறங்கும் எந்த (ஆளில்லா ) விண்கலமும் அப்பளம் போல நொறுங்கி விடுகிறது.

பூமியைப் போல சந்திரனும் சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ள்து தான். ஆனால் சந்திரனை ஆபத்தான கதிர்கள் தாக்குகின்றன.தகுந்த காப்பு உடை இல்லாமல் சந்திரனில் இருக்க முடியாது.
கெப்ளர் விண்கலம். பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம் 
தகுந்த தூரத்தில் இருந்தால் போதாது. தகுந்த காற்று மண்டலம் இருந்தாலும் போதாது. பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இல்லத்தரசிகள் வீடுகளில் நெருப்பில் அப்பளம் சுடும் போது ஒரே பக்கத்தில் அதிகம் வெப்பம் தாக்கினால் அப்பளம் தீய்ந்து விடும் என்பதை அறிந்து தக்கபடி திருப்பித் திருப்பிப் போடுவர். பூமியின் சுழற்சி வேகம் தக்க அளவில் உள்ளதால் நாம் பிழைத்தோம்.

சந்திரனைப் பாருங்கள். சந்திரனில் தொடர்ந்து 14 நாள் வெயில்.தொடர்ந்து  14 நாள் இரவு. சந்திரனில் ஒருவர் பகலாக உள்ள புறத்தில் 14 நாள் இருந்தால் பொசுங்கிப் போய்விடுவார்.. இரவாக உள்ள புறத்தில்14 நாள் இருந்தால் குளிரில் விறைத்து செத்துப் போய்விடுவார்.

கெப்ளர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன் மாதிரியில் பனிக்கட்டி உருண்டையாக உள்ள கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரத்திலிருந்து ( அந்த நட்சத்திர மண்டலத்தின் சூரியன் என வைத்துக்கொள்ளுங்களேன்) தகுந்த தூரத்தில் உள்ள ஓரிரு கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.

எனினும் கெப்ளர் கண்டுபிடித்துள்ள பல  கிரகங்கள் பற்றிய தகவலகள் இன்னும் பகுத்து ஆராயப்படவில்லை.அவற்றில் ஒரு வேளை பூமி போன்ற கிரகம் இருக்கலாம்.

கெப்ளர் விண்கலம்  எப்படி கிரகங்களைக் கண்டுபிடிக்கிறது?.இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வானில் மிக உயரத்தில் விமானம் போகிற சத்தமே கேட்காமல் இருக்க, அந்த விமானம் ஒரு கணம் அந்த நட்சத்திரத்தை மறைக்கிறது. அந்த நட்சத்திரத்தை ம்றைத்தது விமானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அது மாதிரியில தான் நட்சத்திரங்களின் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இதை வேறு விதமாகவும் வருணிக்கலாம். அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு  வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
கெப்ளர் கண்டுபிடித்த சிறிய கிரகம். இது ஓவியர் வ்ரைந்த படம் 
இதே விதமாக கெப்ளர் விண்கலம்  வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு  எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது. கெப்ளர் இப்படியாக அனுப்புகின்ற படங்கள், தகவல்கள் ஆகியவற்றை  நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ந்து வரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் நட்சத்திரங்கள் ஆராயப்பட்டுள்ளன.

வானில் தென்படுகின்ற நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்ற்னர். அந்த அளவில் நமது அண்டத்தில் (Galaxy) கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இந்த பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில் பூமி மாதிரி எங்குமே இருக்க வாய்ப்பில்லை  என்று கருதக்கூடாது என்று ஒரு நிபுணர் கூறினார். தவிர இப்பிரஞ்சத்தில் பூமி தான் நடுநாயகமாக இருப்பதாகவும் கருதலாகாது என்றார் அவர்.
.

11 comments:

poornam said...

நட்சத்திரங்கள் பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாம் காணும் நட்சத்திரம் ஒன்றின் ஒளி பல ஒளி ஆண்டுகள் முன் அதனிடமிருந்து கிளம்பியதாக இருக்கலாம், அதன் ஒளி நம்மை அடைவதற்கு முன் அந்த நட்சத்திரம் அழிந்தே போயிருக்கலாம். அதே போல் புதிதாக உருவாகும் நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடையவே பல நூறு ஆண்டுகள் ஆகலாம் இத்தகவலை வைத்துப் பார்க்கும் போது கெப்ளரின் ஆராயும் திறன் எவ்வளவு? அது உருவாக்கப்பட்டும் போது ஒளி வேகத்தில் ஏற்படும் இத்தகைய Time Lagஐக் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறதா?

poornam said...

மற்றொரு கேள்வி: உயிரினங்கள் வாழத் தகுதி இல்லாதத்து என்று ஒரு கிரகத்தை எவ்வாறு கூற இயலும்? நம் பூமியில் இருக்கும் உயிரின அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது வரையறுக்கப்பட்ட கற்பனை அல்லது அறிவின் மூலம் நாம் தீர்மானிப்பது எவ்வளவு தூரம் சரி?
கெப்ளர் ஆராய்ந்த கிரகங்கள் பூமி மாதிரி இல்லா விட்டாலும் அவற்றில் அதனதன் அமைப்புக்குத் தகுந்த மாறுபாடுகளுடன் கூடிய வேறு விதமான உயிரினங்கள் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கலாம் அல்லவா?

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா...

என்.ராமதுரை / N.Ramadurai said...

poornam
தாங்கள் கூறியுள்ள விஷயங்கள் சரியே.கெப்ளர் இரட்டை சூரியன்களுடன் கூடிய ஒரு கிரகத்தை அண்மையில் கண்டுபிடித்தது.அது சுமார் 4900 ஒளியாண்டு தொலைவில் உள்ளதாகும். அதன் ஒளி பூமிக்கு வந்து சேர அவ்வளவு ஆண்டுகள் ஆகும். எனினும் ஒளி அந்த நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய பிற்கு இந்த 4900 ஆண்டுகளில் அது அழிந்து போக வாய்ப்பில்லை. ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் குறைந்தது பல நூறு கோடி ஆண்டுகளாவது இருக்கும்.
கெப்ளர் விண்கலம் நமது அண்டத்துக்குள் (Galaxy)இருக்கின்ற நட்சத்திரங்களை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது.
time lag பிரச்சினை-- இது நீங்கள் செவ்வாய் கிரகத்துக்குப் போனாலே தலை காட்டும். நீங்கள் அங்கிருந்து ஹலோ சொன்னால் உங்கள் குரல் பூமிக்கு வந்து சேர 20 நிமிஷம் கூட ஆகலாம்.
வாயேஜர் 1 அனுப்பும் சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர 17 மணி நேரம் ஆகிறது.

இரண்டாவது கேள்வி-- உயிரினம் இருக்க இப்படியான தகுதிகள் தேவை என நாம் சில அடிப்படைகளை நிர்ணயித்திருக்கிறோம். இதையும் மீறி வேறு அடிப்படைகளில் உயிரினம் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.
அவ்வளவு போவானேன்? பூமியில் சில இடங்களில் கடல்களில் மிக ஆழத்தில் Black smokers எனப்படும் வென்னீர் கூம்புகள் உள்ளன. இவற்றின் அருகே சுமார் 400 டிகிரி செல்சியஸ் வெப்பனிலையில் வெளி வரும் வென்னீர் அருகே -- நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன

Sudhakar Shanmugam said...

மிக அருமையான பதிவு

அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.

இதைவிட எளிமையாக யாராலும் விளக்க முடியாது

மிக்க நன்றி

சுதாகர்

Unknown said...

நல்ல உபயோகமான தகவல்கள் . நன்றி

Natarajan said...

மிகவும் நல்ல தகவல்கள். நன்றி.

"big Bang" மூலம் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்று விஞ்ஞானிகள் முற்றிலுமாக கண்டுபிடிதிருக்கின்றனரா?
அவ்வாறு இருந்தால் நம் நட்சத்திர மண்டலத்தைபோல்,பூமியைப்போல் பல லட்சம் கிரகங்கள் உருவத்தில் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம் அல்லவா?
எப்படி,நம் சூரிய மண்டலத்தில் பூமி தகுந்த தூரத்தில் இருப்பதைப்போல,உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருக்கலாம் அல்லவா?
அப்படியே இருந்தாலும் நம் சூரிய குடும்பத்திற்குரிய பலவகையான சக்திகள்,ஆற்றல்களைவிட பல மடங்கு கண்டறியப்படாத சக்திகள் இருக்கலாமல்லவா? உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்குமல்லவா?

நடராஜன்.கே ஓமலூர்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Natarajan
நீங்கள் சொல்கின்ற அத்தனைக்கும் வாய்ப்புகள் உண்டு. நமது அண்டத்திலேயே பூமி போல பல லட்சம் பூமிகள் இருக்கலாம் இவற்றில் சிலவற்றைக் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இப்படியான வேறு ஒரு பூமியில் இருக்கக்கூடிய வேற்றுலகவாசிகளுடன் உருப்படியான தொட்ர்பு கொளவதற்கான வாய்ப்பு தான் மிகக் குறைவு

Wonders said...

ஐயா,
கெப்ளர் கண்டுபிடித்தது 4 சூரியன்களுடன் கூடிய கிரகம் என்று நினைக்கிறேன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

அன்புச்செல்வன் அது நியாயமான கேள்வி தான். ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற ஒரு கிரகம் பூமி வேகத்தில் சுற்ற முடியாது. சூரியனை புதன் கிரகம் (தனது சுற்றுப்பாதையில்) ஒரு வினாடிக்கு 47 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.சூரியனுக்கு அருகில் இருப்பதால் புதன் அவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது.சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ள பூமியானது தனது சுற்றுப்பாதையில் வினாடிக்கு 29 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற -- நீங்கள் கூறும் -- கிரகம் சூரியனை பூமியின் வேகத்தை விட அதிக வேகத்தில் தான் சுற்றும். ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்கு தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது குறைந்த வேகத்தில் செல்லும். இதையே மாற்றிச் சொல்வதானால் எந்த அளவுக்கு சூரியனுக்கு அருகில் இருக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாகச் செல்லும். இது விஞ்ஞானி கெப்ளர் கண்டுபிடித்துக் கூறிய இயற்கை விதி. ஆகவே சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற கிரகம் பூமியை விட வேகமாக் சூரியனை சுற்றும். ஆகவே அதனால் தொடர்ந்து சூரியனை மறைத்தப்டி செல்ல இயலாது. தெளிவாகப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். on பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

கரும் சிறுத்தை
பூமியிலிருந்து சுமார் 800 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாக்கிமாக்கி என்னும் குட்டிக் கோள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து தகவல் சேகரித்ததாக் அண்மையில் செய்தி வந்தது.
நிபுரூ என்ற கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்குமானால் இத்தனை நேரம் அது எளிதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். நிபுரூ சமாச்சாரம் எல்லாம் வெறும் கற்பனை. வீண் பீதியைக் கிளப்புவதற்காக கட்டிவிடப்பட்ட கதை.டிசம்பர் 31 ஆம் தேதி நாம் எல்லோரும் உயிருடன் தான் இருக்கப்போகிறோம். பூமிக்கு எதுவும் நேர்ந்திருக்காது. ஞாபகமாக டிசம்பர் 31 ஆம் தேதி எனக்கு இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும்

Post a Comment