Aug 1, 2015

அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்

Share Subscribe
டாக்டர் அப்துல் கலாம் (1931-2015)
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா. இந்தியாவை மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கி தனது போர்க்கப்பல்களை அனுப்பியது.

ஆனால் அவை வந்து சேருவதற்குள்ளாக இந்தியப் படைகள் பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்தன. போரே முடிந்து விட்டது. மூக்கறுபட்டது போல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.

அக்கால கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.

அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளை சுமந்தபடி 8000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளை  தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன

எதிரிப் படைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க  செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களை துல்லியமாகப் படம் பிடிக்கின்ற செயற்கைக்கோள்களும் உள்ளன.

இன்று நம்மை எதிரி மிரட்டினால் பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும் பங்குண்டு 

 அப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துக் கொண்டு சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் 1963 ஆம் ஆண்டில் ராக்கெட் எஞ்சினியராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போது தான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி ராக்கெட் கேந்திரத்தில் சேர்ந்தார்.

தும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம் கூட இல்லாதவை. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு . நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது
தும்பாவில் செயல்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் நிலையம்
அமெரிக்காவிலிருந்தும் பிரான்சிலிருந்தும் ராக்கெட் செலுத்து சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு காமிராக்கள், ரஷிய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டு வந்த சிறிய ராக்கெட்டுகள் தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன..

 பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் இங்கிருந்து செலுத்தப்பட்டன. இது அப்துல் கலாமுக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. அவர் இங்கு பணியாற்றிய போது புதிய தொழில் நுட்பங்களையும் உருவாக்கினார்.

  பூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால் இங்கு இவ்வித  ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம் கூட வேலை செய்ததுண்டு. குறிப்பாக அப்துல் கலாமின் பணி அப்போதைய விண்வெளித் துறையின் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாயை மிகவும் கவர்ந்தது.

இதற்கிடையே 1969 ஆம் ஆண்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971 ஆம் ஆண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர் எஸ்.எல்.வி  எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட டைரக்டர் என்ற முறையில் ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி என்பது செயற்கைக்கோள் செலுத்து சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடரின் சுருக்கமாகும்.

முதல் முயற்சியாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டில் எஸ்.எல்.வி ராக்கெட்டானது  ரோகிணி என்னும் சிறிய செயற்கைகோளை சுமந்தபடி வானில் பாய்ந்த சில வினாடிகளில் தோல்வியில் முடிந்தது. எதிர்பாராத பிரச்சினைகளால் இத்தோல்வி ஏற்பட்ட போதிலும் தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். அவர் மனம் துவண்டு விடவில்லை

1980 ஆம் ஆண்டு ஜூலையில் எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம்  ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.

இதற்குள்ளாக அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் நிபுணர் என்று பெயர் பெற்றவரானார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது..ஏவுகணைகள் திட எரிபொருளைப் பயன்படுத்துபவை.

இங்கு செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை

ஆனால் நாம் பொதுவில் ராக்கெட் என்று வருணிக்கும் செயற்கைக்கோள் செலுத்து சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்து விட்டால் அதன் பணி அத்துடன் முடிந்து விடுகிறது

செயற்கைக்கோளை செலுத்தும் ராக்கெட்டில் வெவ்வேறு அடுக்குகளில் திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.
ஏவுகணையும் சரி, வானை நோக்கிப் பாய்வது தான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும்.

ஏவுகணையானது மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும் போது  அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும்

அந்த வெப்பமானது முகப்பில் உள்ள அணுக்குண்டைப் பாதித்து விடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும்.  

இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதே போல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.

சீனா 1964 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளைப் பெற்று விட்ட நிலையில் இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில் 1974 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்து சோதனை நடத்தியது

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொகாரன் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டில் இந்தியா நிலத்துக்கடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொகாரனில் அப்துல் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.

இந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்திய போது ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா அணுகுண்டு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறின. 

இந்தியாவுக்கு எதிராக அவை பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தி துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.
 .
பொகாரனில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போது தான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்ப்டைக்கப்பட்ட்து. அந்த சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
பிருத்வி ஏவுகணை
சில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.

இந்தியா ஏவுகணைகளைத் தயாரித்து விடாமல் தடுக்க அப்போது அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் பல வழிகளில் முயன்றன. ஏவுகணை தயாரிப்புக்கு உதவக்கூடிய எந்தப் பொருளும் இந்தியாவுக்குக் கிடைக்காதபடி அவை தடை விதித்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த அத்தனை தடைகளையும் மீறித்தான் இந்தியா ஏவுகணைத் தயாரிப்பில் முன்னேற்றம் கண்டது. ஏவுகணைக்கான குறிப்பிட்ட வகை விசேஷ உருக்கை நாமே சொந்தமாகத் தயாரிப்பதில் வெற்றி கண்டோம் இப்படியாக பல தடைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் அப்துல் கலாமின் தலைமையிலான குழுவினர் பெரும் பங்களித்தனர்.

ஆரம்ப கட்ட பிரச்சினைகளுக்குப் பின்னர் அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டன. இரண்டுமே அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியவை

அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5000 முதல் 8000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. இந்த ஏவுகணை சீனாவின் வட எல்லை வரை செல்லக்கூடியது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது
அக்னி-5 ஏவுகணை
இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே அவரை ஏவுகணை மனிதர் என்று வருணிப்பது உண்டு.

செயற்கைக்கோள்களை செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்ட்து. அப்துல் கலாம் ஏவுகணை பக்கம் திரும்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இந்த ராக்கெட் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

இப்போது மேலும் அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை

இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, மேப் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.

 ஏவுகணைகளை உருவாக்க முக்கிய பங்களித்ததன் மூலம் அப்துல் கலாம் இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது  என்ற நிலையை உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம்

ஆனாலும் அவர் நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதியவர். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்த போதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.

குறிப்பு: நான் எழுதிய இக்கட்டுரை ஜூலை 31 ஆம் தேதியிட்ட தமிழ் ஹிந்து இதழில் வெளியானதாகும். சில வாக்கியங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் கூடுதல் அம்சம்.

9 comments:

radha said...

Thank you very much sir

Vadamally said...

Tribute to Our Real Leader Dr.A.P.J.Abdul Kalam

Thank you Sir,

A.Venkatesh

Anonymous said...

ஓ.. இந்தியா வல்லரசாகிவிட்டதா? யாரும் சொல்லவே இல்ல!

இராய செல்லப்பா said...

பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் விதத்தில் எளிமையாக ஆனால் தெளிவாக, அமரர் டாக்டர் அப்துல் கலாமின் பணிகள் எவ்வாறு சாதனைகளாயின என்று படம்பிடித்துக் காட்டினீர்கள். நன்றி. - இராய செல்லப்பா

Sathyan.R said...

Salute to " THE REAL PRESIDENT "

Sathyan.R said...

மனிதரில் புனிதர் அப்துல்கலாம்

Anonymous said...

வணக்கம் ஐயா

நம் பலவீனத்தை பொறுத்து தான் எதிரியின் பலம் தீர்மானிக்கப்படுகிறது, எதிரியின் பலத்தை குறைக்க வேண்டுமென்றால் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் அந்த வகையில் நம் நாட்டின் பலத்தை அதிகரிக்க செய்ததில் மாமனிதர் திரு A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பங்கு அளப்பரியது என்பதை தங்களின் விளக்கமான பதிவின் மூலம் அறியமுடிகிறது. நன்றி. ஐயா தாங்களும் திரு A.P.J. அப்துல் கலாம் அவர்களும் ஏதேனும் தருணத்தில் அறிவியல்,விண்வெளி பற்றி விவாதித்து இருக்கிறீர்களா

வெங்கடேஷ்

Ganapathi DCW said...

Thanks lot ji

Unknown said...

நம் பலவீனத்தை பொறுத்து தான் எதிரியின் பலம் தீர்மானிக்கப்படுகிறது, எதிரியின் பலத்தை குறைக்க வேண்டுமென்றால் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் அந்த வகையில் நம் நாட்டின் பலத்தை அதிகரிக்க செய்ததில் மாமனிதர் திரு A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பங்கு அளப்பரியது என்பதை தங்களின் விளக்கமான பதிவின் மூலம் அறியமுடிகிறது. நன்றி. OM SakthiStudeo & Mobiles Iluppaiyur

Post a Comment