Aug 11, 2015

தாங்கள் பயிரிட்ட கீரையை ருசித்த விண்வெளி வீரர்கள்

Share Subscribe
பூமிக்கு மேலே 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) வசித்து வரும் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தாங்கள் வளர்த்த கீரையை திங்களன்று புசித்தனர்.

விண்வெளி நிலையத்தில் தானியங்கள், கீரை வகைகள் முதலியன தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இது நீண்டகாலமாக நடந்து வருவதாகும். ஆனால் விண்வெளி வீரர்கள் தாங்கள் பயிரிட்ட கீரையை அவர்களே சாப்பிடுவது என்பது இதுவே முதல் தடவை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரையை பச்சையாக
சுவைக்கும் விண்வெளி வீரர்கள்
.விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்டது red romaine lettuce  வகைக் கீரையாகும்

லெட்டூஸ் கீரையை வெறுமனே கூட சாப்பிடலாம். விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் வெறுமனே அப்படியே சாப்பிட்டனர். தவிர,கீரையுடன் ஆலிவ் எண்ணெய்,  இனிப்பும் புளிப்பும் கலந்த basalmic vinegar  ஆகியவற்றைச் சேர்த்தும் சாப்பிட்டனர்.

"சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும் "அவர்கள் சியர்ஸ் என்று சொல்லி விட்டுத் தான் லெட்டூஸ் கீரையை ருசி பார்த்தனர். " நல்லாத் தான் இருக்கு" என்று 51 வயதான அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி கூறினார்."பிரமாதம்” என்றார் மற்றொரு அமெரிக்கரான லிண்ட்கிரென். “பிடிச்சிருக்கு” என்றார் ஜப்பானிய விண்வெளி வீரர்.
விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட லெட்டூஸ் கீரை
மூன்று ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பங்காக ஒரு பகுதி கீரை தனியே வைக்கப்பட்டது.

லெட்டூஸ் கீரை எனப்படும் வகைக் கீரை தான் அவர்கள் வளர்த்த கீரையாகும். சூரிய வெளிச்சத்துக்குப் பதில் கூண்டுக்குள் இது சிவப்பு, நீல, பச்சை நிற LED பல்புகளின் வெளிச்சத்தில் வளர்க்கப்பட்டது.  நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட குஷன்கள் மீது தான் விதைப்பு செய்யப்பட்டது.

பூமியில் செய்வது போன்று தண்ணீர் ஊற்ற முடியாது. கிட்டத்தட்ட ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதால் தண்ணீரை ஊற்றினால் அது கீழே விழுவதற்குப் பதில் விண்வெளி நிலையத்துக்குள்  உருண்டைகளாக நாலாபுறமும் மிதக்கும். எனவே விசேஷ முறையில் குஷன்களுக்குள் செலுத்தப்பட்டது.


பூமியில் வளர்க்கப்பட்ட அதே வகைக் கீரை
கடந்த மாதம் 8 ஆம் தேதி விசேஷ கண்ணாடிக் கூண்டுக்குள்  விதைப்பு நடந்தது. 33 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்கள் அறுவடை செய்த கீரையில் பாதி தனியாக பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பப்படும். அங்கு அது பல வகைகளிலும் சோதிக்கப்படும்.

கடந்த ஆண்டில் அவர்கள் இதேபோல கீரை வளர்த்தனர். ஆனால் அந்த கீரை முழுவதும் கீழே விண்வெளி க்ட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் அதிகபட்சம் ஆறு விண்வெளி வீரர்கள் இருக்க முடியும்..இவர்களுக்குத் தேவையான உணவு கீழே இருந்து அவ்வப்போது மேலே அனுப்பப்படுகின்றன.  அந்த உணவைத் தான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். சில சமயங்களில் அமெரிக்க ரஷிய விண்வெளி வீரர்கள் அல்லாமல் ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓரிருவரும் இருப்பது உண்டு.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்
தாம் வளர்த்த செடியை ஆராய்கிறார் ரஷிய விண்வெளி வீரர்
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரவர் விருப்பத்துக்கும் ருசிக்கும் ஏற்ற்வாறு உணவுகள் உயரே அனுப்பப்படுகின்றன.

விண்வெளி நிலையங்களில் விதைப்பு செய்து பயிர்களை வளர்த்து சோதிக்கும் பரிசோதனைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவு. தவிர பூமியில் தரையில் பயிரிடப்படும் பயிர்கள் மேல் நோக்கி -- சூரியனை நோக்கி - வளருகின்றன. ஆனால் விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவு என்பதுடன் மேல் கீழ் என்பது கிடையாது. விண்வெளியில் இருந்தபடி பூமியை சுற்றுகின்ற விண்வெளி நிலையம் ஒரு நாளில் 16 தடவை பூமியை சுற்றுகிறது. இதனால் முளைத்து வெளியே வரும் செடிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு சமயம்  விண்கலம் ஒன்றில்  நெல் விதைகளும் விதைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
எதிர்காலத்தில் செவ்வாயில் செடி கொடிகளை  இவ்விதமாக
வளர்க்க வேண்டியிருக்கலாம்
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டால் போய்ச் சேர எட்டு மாத காலம் ஆகும். உணவுத் தேவையை ஓரளவில்  பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் விண்கலத்துக்குள்ளாக கீரை, முள்ளங்கி, தக்காளி போன்றவற்றை விளைவித்துக் கொண்டாக வேண்டும்.

இவை தேவையான சத்துக்களை அளிக்கும் என்பதுடன், பயிர்களைப் பார்க்கும் போது விண்வெளி வீரர்களுக்கு மனதுக்கு தெம்பை அளிப்பதாகவும் விளங்கும்

செவ்வாயில் போய் இறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பூமியிலிருந்து அவ்வப்போது உணவு அனுப்பப்படும் என்றாலும் அங்கு அவர்கள் காய்கறி பழங்களை விளைவித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இதற்கான வகையில் செடி வளர்ப்புக் கூண்டுகள் தயாரிக்கப்படும்.


16 comments:

Unknown said...

Sir , mars'ல் oxygen ullatha? Manitharkal angu senral nam boomiyil pol irukka mudiuma? Melum ithu ponru payirkal valarpathan moolam oxygen alavai uyartha mudiuma? Melum mars'ல் vithyasamana curiosity roverஇன் படங்களை பற்றி உங்கள் கருத்து என்ன?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Palani Appan
செவ்வாயின் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் அதிகம். ஆக்சிஜன் மிகவும் குறைவு.விண்வெளியிலிருந்து கற்கள் தாக்கும் ஆபத்து உண்டு. உடல் முழுவதையும் மூடுகிற காப்பு உடை அணிந்திருக்க வேண்டும். விசேஷக் குடியிருப்புக்குள் ஆக்சிஜன் சப்ளை தேவை. அக்குடியிருப்புக்குள் சாதாரண உடையில் இருக்கலாம்.பயிர்களை வ்ளர்ப்பதன் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம். அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். கியூரியாசிடி படங்கள் பற்றிய கேள்வி புரியவில்லை.

Raghav said...

ஐயா.. சில கேள்விகள் (முட்டாள்தனமாக பட்டால் சிரித்துவிட்டு பதில் தாருங்கள்) ..

1. விண்வெளி நிலையத்தில் - வீரர்களுக்கு வியர்த்தல், உடல்வலி.. காய்ச்சல் உண்டாகுமா ?

2. காலைக்கடன்கள் மற்றும் உறங்குவது பற்றி நீங்கள் சொல்லியுள்ளதை படித்துருக்கிறேன்.. மற்றபடி, குளிப்பது உண்டா ?

3. அவர்களுக்கு என்று தனியாக நேரம் உண்டா.. பூமியின் மீது சுற்றிக் கொண்டே இருப்பதால் அமெரிக்கா நேரம் அல்லது இந்திய நேரம் என்பது போன்று விண்வெளி நேரம் என ஏதும் உண்டா..

நன்றி.

இராகவன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

இராகவன்.
கேள்வி கேட்டதில் தப்பில்லை.
1. உடல் வலி காய்ச்சல் உண்டு.இதற்கெல்லாம் மருந்து உண்டு. அவர்களது உடல் நிலையை கீழே விண்வெளி கேந்திரத்திலிருந்து இரவு பகல் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். உடல் நிலை மிக நன்றாக இருந்தால் கூட
2 குளிப்பது உண்டு. சிரமமான காரியம்.பூமியில் செய்கிற மாதிரியில் குளிக்க முடியாது.
3.விண்வெளி வீரரின் 24 மணி நேரமும் கீழே உள்ள விண்வெளிக் கேந்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது..விண்வெளி கடிகாரம் தனி.

Anonymous said...

சார், ஸ்பேஸ் ஸ்டேஷன், முன்பு மீர், ஸ்கை லாப் போன்றவற்றுக்கு ஏகப்பட்ட பேர் போய் வந்துகொண்டே இருக்கிறார்கள். (இந்தியரான கல்பனா சாவ்லா கூட சென்று எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தார்) இவர்கள் சென்றுதான் செய்ய வேண்டும் என்பது போன்ற ஆராய்ச்சிகள் நிஜமாக இருக்கின்றனவா? எங்கேயோ இருக்கும் ப்ளூட்டோவையே வெறும் கருவிகள் உள்ள விண்கலம் ஆராய்கிறது. இங்கு 350 கி.மீ. தொலைவில் தானியங்கிக் கருவிகள் செய்ய முடியாத அப்படி என்ன ஆராய்ச்சியை இவர்கள் செய்கிறார்கள்? ஏதோ ஒரு முறை, இரு முறை என்றால் சரி. தொடர்ந்து 6 பேர் எப்போதும் இருந்து வருகிறார்களே? இது எதற்கு? விண்வெளியில் வாழ்வது பற்றிய ஆராய்ச்சி என்றால், விண்வெளியிலோ, செவ்வாயிலோ பனிதன் குடியேற அப்படி என்ன அவசியம் இருக்கிறது என்று புரியவில்லை.

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
விண்வெளியில் எடையற்ற நிலை உள்ளது.இந்த சூழலில் விண்வெளியில் பல மாத காலம் இருக்கும் போது விண்வெளிவீரர்களின் உடலில் பல மாறுபாடுகள் ஏற்படுகின்றன. உயரம் சற்று அதிகரிக்கும். புஜங்கள் பெரிதாகும். கால்க்ளுக்கு வேலை இல்லை என்பதால் கால்கள் சூம்பிவிடும். இருதய இயக்கமும் மாறுகிறது. ஆகவே பரிசோதனைக்கூடங்களில் எலிக்ளை வைத்து சோதிப்பது போல விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பித் தான் பல புதிய விஷயங்களை அறிய வேண்டியிருக்கிறது. விண்வெளியில் தாவர வளர்ப்பும் அப்படித்தான்.
ஊட்டியை போட்டோவில் பார்த்தால் திருப்தி ஏற்படுவதில்லை. மனித அனுபவம் என்பது விசேஷ்மானது.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கடல் கடந்து புதுப்புது இடங்களுக்குச் சென்றான். செவ்வாய்க்குப் போவதும் அது போன்றதே.கருவிகள் ஜடங்கள். மனித அனுபவம் என்பது அலாதியானது.

Anonymous said...

*** பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கடல் கடந்து புதுப்புது இடங்களுக்குச் சென்றான். செவ்வாய்க்குப் போவதும் அது போன்றதே. ***
உண்மைதான்.

உங்கள் பதிலுக்கு நன்றி சார்.
சரவணன்

Unknown said...

கியூரியோசிட்டி மூலம் எடுக்கப்பட்ட படங்களில் சக்கரம் பிரமிடு நண்டு பெண் உருவம் இருப்பது போல் தோன்றும் படம் ஆகியவற்றை பற்றிய உங்கள் கருத்து என்ன? ஏற்கனவே அங்கு உயிரினங்கள் இருந்திருப்பதை போல இந்த படங்கள் காட்டுவது சர்ச்சையானதாக உள்ளதே?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Palani Appan
பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விண்கலம் செவ்வாயை வானிலிருந்து எடுத்த படத்தில் ”மனித முகம் ” தென்பட்டது. அது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.செவ்வாயில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் செதுக்கிய சிற்பம் தான் அது என்று பலரும் கருதினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் நுட்பமான காமிராவுடன் சென்ற அமெரிக்க விண்கலம் அதே மனித முகத்தைப் படம் எடுத்த போது சூரிய ஒளியால் பாறைகளில் ஏற்பட்ட நிழல் தான் அவ்விதம் மனித முகமாகத் தெரிந்தது என்பது புலனாயிற்று.கியூரியாசிடி எடுத்த படங்கள் கதையும் அதே தான். செவ்வாயில் இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் அங்கு நுண்ணுயிர்கள் கூட இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Unknown said...

ஐயா தங்களது பதிலுக்கு நன்றி.தங்களது அறிவியல் சேவை தொடர வேண்டும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.நன்றி

Anonymous said...

arumayana padhivu

Siva said...

Mikka nanri aiya. Kelvikku bhadhil

Suresh said...

Excellent writing sir,
I've one doubt!
Is next world war will happen in space? Because America, Russia & China launching many spy satellites and weapons in satellite targeting other countries satellite. If that happens then what will happen to existing satellite depended technologies like internet, mobile services and flight navigation system. We will run back to stone age again?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Suresh
வல்லரசுகள் எல்லா வகைகளிலும் தங்களை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றன. ஐ.சி.பி.எம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் விட்டுப் பறக்கும் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரித்துக் கொண்டன. இவ்வித ஏவுகணைகளைக் கொண்ட அணுசக்தி சப்மரீன்களைப் பெற்றுள்ளன. அப்போதே மூன்றாவது போர் மூண்டிருக்கலாம். ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. விண்வெளியில் பரஸ்பரம் செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யும் ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. ஆனாலும் போர் மூள வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் விண்வெளியில் போர் மூண்டால் அது விண்வெளியோடு நிற்காது. அனைவருக்கும் சர்வ நாசத்தில் போய் முடியும். வெற்றி பெற்றவர் என எந்த நாடும் மிஞ்சாது. ஆகவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை

adam said...

Sir could you please tell me God is there or not ? bcoz nasa sent space ship to all the planets still now no miracle happened then why people trusting god? according to the science, earth and other planets formed by nature right? what is your opinion sir?

என்.ராமதுரை / N.Ramadurai said...

adam
இந்த இணைய தளம் ஆன்மீகம் பற்றியது அல்ல

Post a Comment