இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, கண்களைத் திறக்க முடியாமல், நினைவு சற்றே இருந்த நிலையில், மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.
அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.
ராமதுரையின் நீண்ட பயணத்தில் உடன் இருந்தவர்கள் பலர். அவருக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் (தினத்தந்தி, நவமணி, தினமணி, தினமணி சுடர்), தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அவருடன் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, அவரின் எழுத்துக்கு காரணமாக இருந்த உலகளாவிய வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்து புத்துணர்ச்சியூட்டிய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
- ராமதுரையின் குடும்பத்தினர்