Nov 24, 2013

அடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை

Share Subscribe
" செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது " என்று நவமபர் மாதம் 6 ஆம் தேதி காலைப் பத்திரிகைகளின் தலைப்புகள் கூறின.

 ஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.  அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை  நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.
மங்கள்யான் விண்கலம்
கடந்த பல நாட்களில் அதன் சுற்றுப்பாதை பல தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது மங்கள்யான் பூமியிலிருந்து மேலும் மேலும் அதிகத் தொலைவில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி  எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அதிகபட்சத் தொலைவு  1,92,874 கிலோ மீட்டர் ஆக இருக்கும்படி செய்யப்பட்டது.

அடுத்தபடியாக டிசம்பர் முதல் தேதியன்று மங்கள்யான் பூமியைச் சுற்றுவதற்கு மாறாக செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். அப்போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அதி வேகப் பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிக் கிளம்பும். இத்துடன் ஒப்பிட்டால் மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் பூமியிலிருந்து உயரே கிளம்பிய போது அதன் அதிக பட்ச வேகம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விண்கலம் ( அதைச் சுமந்து செல்கின்ற ராக்கெட்) பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு ஒரு கிரகத்தை நோக்கிச் செல்வதானால் அது மேலே குறிப்பிட்டபடி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாக வேண்டும்,

 அவ்வளவு வேகத்தில் ஒரு விண்கலத்தை செலுத்துவதற்கான  சக்திமிக்க ராக்கெட் இந்தியாவிடம் இப்போது கிடையாது. ஆகவே தான் பூமியைப் பல தடவை சுற்றிவிட்டுப் பிறகு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டியபின் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும்படி செய்யும் ஏற்பாட்டை இந்திய விண்வெளி அமைப்பு ( இஸ்ரோ) பின்பற்றுகிறது.

மங்கள்யான் ஒவ்வொரு தடவையும் பூமியைச் சுற்றி வந்த போது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக மங்கள்யானின் வேகம் அதிகரித்தது. இது நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாமல் போன குறையைப் பூர்த்தி செய்தது. அதாவது மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டே அது பூமியைப் பல தடவை சுற்றும்படி செய்தனர்.

மங்கள்யான் விண்கலத்தின்  உயரம் எவ்விதம் படிப்படியாக
அதிகரிக்கப்பட்டது என்பதை இப்படம் காட்டுகிறது.
கடந்த காலத்தில் ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பிய போது அவற்றைச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் பூமியிலிருந்து நேரடியாக செவ்வாயை நோக்கிச் சென்றன.அந்த ராக்கெட்டுகள் சக்தி மிக்கவை என்பதே அதற்குக் காரணம்.

 நாம் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் நுட்பமான, திறன் மிக்க செயற்கைக்கோள்கள்களையும் விண்கலங்களையும் தயாரிப்பதில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டோம்.  ஆனால் ராக்கெட் தயாரிப்பில் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.

இந்தியா இப்போது   சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே தான் குறைந்த திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி என்னும் சிறிய ராக்கெட்டைப் ப்யன்படுத்தி மங்கள்யானை உயரே செலுத்தியது.

இந்த விஷயத்தில் இரண்டு விதமாக வாதிக்கலாம்.சக்திமிக்க பெரிய ராக்கெட்டுகளை உருவாக்கும் வரையில் காத்திருக்கலாமே?.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன்? செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்ற பெருமைக்காக இவ்வளவு அவசரமா  என்று கேட்கலாம்.
மங்கள்யானின் வைக்கப்பட்டுள்ள கலர் கேமரா பூமியைப் படம் எடுத்து
அனுப்பியுள்ளது. இதே கேமரா பின்னர் செவ்வாயைப் படம்  எடுத்து எனுப்பும்
வேறு விதமாகவும் வாதிக்கலாம். இதே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்திதான் சந்திரயான் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பினோம்.அது போல இந்த ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இயலும் என்னும்போது அதில் ஈடுபடுவதில் தவறு கிடையாது என்று கூற முடியும்.தவிர, மற்றவர் பின்பற்றிய வழியில் தான் சென்றாக வேண்டும் என்பது கிடையாது என்றும் கூறலாம்

.இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்  உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே தான் டிசம்பர் முதல் தேதியன்று  நள்ளிரவு மங்கள்யான் செவ்வாயை நோக்கிப் பாய இருக்கிறது. மங்கள்யான் விண்கலத்திலேயே இதற்கான எஞ்சின் உள்ளது.அது சில நிமிஷ நேரம் இயக்கப்படும். அப்போது விண்கலம் தேவையான வேகத்தைப் பெறும்.அந்த எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்படுவதானது அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

மங்கள்யான் அந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்து விட்டால் அது உறுதியாக செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு மங்கள்யான் பல சிறிய பரீட்சைகளிலும் வென்றாக வேண்டும்.

விண்வெளி என்பது காரிருள் நிறைந்தது. பகல் இரவு என்பது கிடையாது. நிரந்தர இருள் தான். ஆனால் சூரியனும் தெரியும்.அதே நேரத்தில் எங்கு திரும்பினாலும் நட்சத்திரங்களும் தெரியும்.” செவ்வாய்க்குச் செல்லும் வழி “ என போர்டு எல்லாம் விண்வெளியில் கிடையாது.  இந்த நட்சத்திரங்கள் தான் வழிகாட்டிகள்.

மங்கள்யான் விண்கலத்தில் நட்சத்திர ஒளி உணர்வுக் கருவி (Star Sensor)  உண்டு. கனோபஸ் ( அகத்திய நட்சத்திரம்) உட்பட குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ஒளி இக் கருவிக்குள்   எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும்.மங்கள்யான் தனது பாதையிலிருந்து விலகாமல் இருக்க இக்கருவி உதவுகிறது.இதை மங்களயானின் லகான் என்றும் சொல்லலாம். இது மாதிரியில் மங்கள்யானில் பல கருவிகள் உண்டு.

மங்கள்யான் டிசம்பர் முதல் தேதியன்று செவ்வாயை  நோக்கிக் கிளம்பும் போது வானில் செவ்வாய் கிரகம் ஓரிடத்தில் இருக்கும்.(கீழே படம் காண்க) ஆனால் மங்கள்யான் அந்த இடத்தை நோக்கிச் செல்லாமல் வேறு இடத்தை நோக்கிக் கிளம்பும். இதற்குக் காரணம் உண்டு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம் தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது.
டிசம்பர் முதல் தேதி பூமியின் பிடியிலிருந்து  விடுபட்டுக் கிளம்பும் மங்கள்யான்
வளைந்த பாதையில் 300 நாள் பயணம் செய்து செவ்வாயை அடையும்..செவ்வாய் கிரகம் இப்போது எங்கு உள்ளது என்பதையும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி எங்கு இருக்கும் என்பதையும் இப்படத்தில் காணலாம்.
மங்கள்யான் ஐந்தே வினாடிகளில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதற்குள்ளாக செவ்வாய் கிரகம் இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து 120 கிலோ மீட்டர் நகர்ந்து விட்டிருக்கும்.ஆகவே செவ்வாய் கிரகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தை நோக்கி மங்கள்யான் பயணிக்கும்.

 விண்கலம் ஓர் அலாதியான வாகனம். ஆளில்லாப் படகு ஒன்றை ஆற்றில் தள்ளி விட்டால் படகு மிதந்து போய்க் கொண்டே இருக்கும். விண்கலம் அப்படிப்பட்டதே. பூமியின் பிடியிலிருந்து மங்கள்யான் விடுபட்ட பின் இயற்கை சக்திகளின்படி தொடர்ந்து அது பறந்து கொண்டிருக்கும்.

சூரிய்னை பூமி   சுற்றுகிறது. அதற்கான வகையில் பூமியில் எஞ்சின் எதுவும் கிடையாது. பூமியானது இயற்கை சக்திகளின்படி சூரியனை சுற்றி வருகிற்து. எல்லா கிரகங்களும் இப்படித்தான் சூரியனை சுற்றுகின்றன. மங்கள்யான் விண்வெளிக்குச் சென்ற பின் அது இயற்கை சக்திகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்து ராக்கெட் அல்லது எஞ்சின் உதவியின்றி பறக்க ஆரம்பிக்கிற்து.

ஆனால் மங்கள்யானை அப்படியே விட்டுவிட்டால் அது சூரியனை சுற்றத் தொடங்கும். பல லட்சம் ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அது செவ்வாய்க்குச் செல்ல வேண்டிய வாகனம். ஆகவே சூரியனை சுற்ற விடாமல் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்ய வேண்டும்.

 இதற்கென மங்கள்யானின் எல்லாப் புறங்களிலும் தீபாவளி ராக்கெட் சைஸில் சிறிய ராக்கெட்டுகள பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை ராக்கெட் என்று வருணிப்பதில்லை. உந்திகள் (Thrusters ) என்று வருணீக்கிறார்கள். இவற்றைத் தக்கபடி சில வினாடிகள் இயக்குவதன் மூலம் மங்கள்யான் செல்லும் பாதையில் சிறு திருத்தங்கள் செய்ய முடியும்.

மங்கள்யான் செவ்வாய்க்க்குப் போய்ச் சேர 300 நாட்கள் ஆகும். இதற்குக் காரணம் உண்டு. முதலாவதாக செவ்வாய் கிரகம் இப்போது பூமியிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது. ஆகவே மங்கள்யான் பல கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். இரண்டாவதாக மங்கள்யான் வளைந்த பாதையில் செல்வதால் பயண தூரம் அதிகம்.

மங்கள்யான் செவ்வாய்க்கு சென்று கொண்டிருக்கையில் சிக்னல்கள் வடிவில் அதனுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டாக வேண்டும்.  இதில் ஒரு பிரச்சினை உண்டு. சிக்னல்கள் என்னதான் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் பூமியிலிருந்து சிக்னல்கள் மங்கள்யானுக்குப் போய்ச் சேர மங்கள்யான் இருக்கின்ற தூரத்தைப் பொருத்து 6 நிமிஷம் முதல் 20 நிமிஷம் வரை ஆகலாம்

ஆகவே குறிப்பிட்ட சமயத்தில் மங்கள்யான் எவ்வளவு தொலைவில் இருக்கும் எனபதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி முன்கூட்டியே மங்கள்யானுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாக வேண்டும். சில நிமிஷ தாமதம் ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும். இவ்விதப் பிரச்சினை ஏற்ப்டாமல் இருக்க மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டர்களே தக்க சமயங்களில் அந்த விண்கலத்தில் உள்ள கருவிகளுக்கு தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ள்து.
செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் மங்கள்யான்
அக்கிரகத்தை எவ்விதம்  நீள் வட்டப்பாதையில்
சுற்றும் என்பதை இப்படம்  ( வலது மூலை) காட்டுகிறது 
செவ்வாயை மங்கள்யான் நெருங்கும் கட்டத்தில் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அதாவது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும்.

 இல்லாவிடில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று விடும். மங்கள்யானில் மிச்சமிருக்கின்ற எரிபொருளைப் பயன்படுத்தி அதன் வேகத்தைக் குறைப்பார்கள். அத்ன் பிறகு மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கி அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பிக்கும்.

இப்படியாக மங்கள்யான் திட்டத்தில் 1.மங்கள்யானை உயரே செலுத்தும் கட்டம். 2. பூமியைச் சுற்றச் செய்யும் கட்டம். 3.செவ்வாய் நோக்கி செலுத்தும் கட்டம். 4 செவ்வாயை நோக்கி சுமார் 300 நாட்கள் பயணம் செய்யும் கட்டம். 5 செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்யும் க்ட்டம். 6. இறுதியாக செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும் கட்டம் என ஆறு கட்டங்கள் உள்ளன.

இப்போது முதல் இரு கட்டங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமும் ஐந்தாவது கட்டமும் தான் மிக முக்கியமானவை. இவற்றில் வெற்றி கிட்டலாம், கிட்டாமலும் போகலாம். ஆனால் ஒன்று. மங்கள்யான் திட்டம் தோற்றாலும் சரி, இத்திட்டம் மூலம் நாம் உருவாக்கிய தொழில் நுட்பம், உருவாக்கிய உத்திகள், பெற்ற அனுபவம் ஆகியவை என்றைக்கும்  வீண் போகாது.

( குறிப்பு: வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டதன் விளைவாகக் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கட்டுரைகளை அளிக்க இயலாமல் போய் விட்டது )