Jul 29, 2012

சந்திரன் தோன்றியது எப்படி?

Share Subscribe
சூரியன் தோன்றியது எப்படி? தெரியும். பூமி .தோன்றியது எப்படி? தெரியும். சந்திரன் தோன்றியது எப்படி? விஞ்ஞானிகள் இக்கேள்விக்கு விடை காண இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கொள்கை கூறப்பட்டுள்ளது.
புதிராக உள்ள சந்திரனின் தோற்றம்
சந்திரன் தோன்றியது எப்படி என்ற கேள்வியை வேறு விதமாகவும் கேட்க முடியும். பூமிக்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? சந்திரன் பூமியின் ச்கோதரனா?  அல்லது பூமியின் புதல்வனா? அல்லது பூமியின் அடிமையா?
சூரியன், பூமி, சந்திரன்
பூமியும் சந்திரனும் ஒரே சமயத்தில் சூரியனிலிருந்து . தோன்றியிருந்தால் பூமிக்கு சந்திரன் ச்கோதரன். அப்படியில்லை என்பது ஏற்கெனவே நிரூபணமாகி விட்டது. பூமியிலிருந்து சந்திரன் தோன்றியிருந்தால் சந்திரன் பூமியின் புதல்வன். அப்படியும் இல்லை என்பதை விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் காட்டுகின்றன.

மூன்றாவதாக எங்கோ இருந்து வந்து பூமியின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கொண்டது என்றால் சந்திரன் பூமியின் அடிமை என்று சொல்லலாம். அப்படியும் இல்லை என்றாகி விட்டது.

நான்காவதாக ஒரு கொள்கை உண்டு. செவ்வாய் கிரகம் சைஸில் ஒரு கிரகம் பூமியின் மீது மோதியிருக்க வேண்டும். அந்த மோதலின் விளைவாக ஏற்பட்ட சிதறல்களே ஒன்று திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்.  .பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு விஞ்ஞானிகள் தைய்யா(Theia )  என்று பெயர் வைத்தனர். இந்த கொள்கைக்குத் தான் இப்போது ஓரளவுக்கு ஆதரவு உள்ளது.
பூமியின் மீது ஒரு கிரகம் மோதியதால் சந்திரன் உருவாகியிருக்கலாம் .என்பதை விளக்கும் படம்
ஆனாலும் பூமியின் வந்து மோதிய அக்கிரகம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பது குறித்தும் அது எந்த வேகத்தில் மோதியிருக்கும் என்பது பற்றியும் விஞ்ஞானிகளிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

இப்போது சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரில் உள்ள Center For Space and Habitability  என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் ரைபர் என்ற விஞ்ஞானியும் அவரது சகாக்களும் சந்திரன் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது பற்றி கம்ப்யூட்டரில் பாவனையாக வெவ்வேறு நிலைமைகளை (simulations) தோற்றுவித்து ஆராய்ந்தனர்.

இவற்றை வைத்து அவர்கள் பூமியின் மோதிய கிரகம் தைய்யாவை விடப் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்றும் தவிர, அது மிக வேகத்தில் வந்து மோதியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இவ்விதம் மோதிய கிரகம் குறைவான பொருளை மட்டும் இழந்து தன் வழியே சென்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த மோதலின் விளைவாக மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வட்டு தோன்றி அதுவே பின்னர் உருண்டு திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோதலின் போது தூக்கியெறியப்பட்ட பொருளில் பெரும் பகுதி பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சந்திரனிலிருந்து அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த கல்
இப்படியான கொள்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவை. அதாவது பூமியின் மேற்புறம் பற்றியும் பூமியில் உள்ள தனிமங்கள் அவற்றின் ஐசடோப்புகள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும். இந்த விஷயங்களில் பூமிக்கும் சந்திரனுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.சந்திரனிலிருந்து 1969 முதல் 1972 வரை ஆறு தடவைகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கொண்டுவந்த கற்கள், மண் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டு சந்திரன் பற்றி மேலும் தகவல்கள் அறியப்பட்டு வருகின்றன்.

எந்த விதமான முறையில் மோதல் ஏற்பட்டிருந்தால் பூமி, சந்திரன் இடையே இப்படி ஒற்றுமைகளும் அத்துடன் வேற்றுமைகளும் இருக்கும் என்று கண்டறிவதில் தான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இறுதியில் ஏற்கத்தக்க விடை கிடைக்க சந்திரனின் கற்கள் மேலும் விரிவாக ஆராயப்பட்டு அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பாவ்னையாக மேலும் பல .மோதல்களை நடத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம் சந்திரன் எப்படித் தோன்றியது என்பதற்கு விடை காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற்னர்.

Jul 17, 2012

தூக்கியெறியப்பட்ட கிரகத்துக்கு இன்னொரு சந்திரன்

Share Subscribe
சில ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன என்று காணப்படும். ஆனால் இந்த ஒன்பது கிரகங்களில் ஒன்றான புளூட்டோ ( Pluto) என்ற கிரகத்தை ’ அது கிரகமே அல்ல’ என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கிரகமாகக் கருதுகிறது. அந்த மானிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மானிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கிரகமாக இருந்து வருவதாகக் கருதுகிறது.ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு . கிரகம் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு.  புளூட்டோ கிரகத்துக்கு ஐந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ ஐந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.
புளூட்டோ ம்ற்றும் அதன் சந்திரன்கள்
புளூட்டோவின் ஐந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் P4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் P 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் கிரகம் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதைக் காட்டும் வரைபடம். புளூட்டோ சூரிய மண்டல எல்லையில் இருப்பதைக் கவனிக்கவும்.
சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம்.  இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது.
புளூட்டோ. ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த ப்டம்
நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவலகளை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள் படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவலகளை அறிய இயலும்.

புளூட்டோவின் ஐந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும்.

பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம்.

சரி, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கிரகம் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து.. முதலாவதாக ஒரு கிரகம் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.
புளூட்டோ எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் படம்
மூன்றாவது தகுதி ஒரு கிரகம் தனது வட்டாரத்தில்,-- சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து.

நீண்டகாலம் மக்களால் கிரகம் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40ல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது.   புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.


Jul 6, 2012

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்

Share Subscribe

அணுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது என்று சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரூதர்போர்ட் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்

அதன் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது. அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய் முற்பட்ட போது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. கல், மண்,பேனா, பென்சில், கார், விமான்ம், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள் தான் அடிப்படை.
16 அடிப்படைத் துகள்களின் பட்டியல்


இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இயற்பியல் துறையில் இரு வகையான விஞ்ஞானிகள் உண்டு. ஒரு வகை விஞ்ஞானிகள் காகிதம் பென்சில் ஆகியவற்றை மட்டுமே பயனபடுத்தி தங்கள் சிந்தனை ஆற்றல் மூலம் இது இப்படிததான் இருக்க வேண்டும். இப்படியான துகள் இருந்தாக வேண்டும் என்று கூறுபவர்கள். இவர்களை கொள்கை விஞ்ஞானிகள் என்று வருணிக்கலாம்.

இவர்கள் கூறியவை சரிதானா என்று பரிசோதனைகள் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள் இன்னொரு வகை. ஐன்ஸ்டைன் முதல் வகையைச் சேர்ந்தவர். E=MC 2 என்பது முதல் அவர் கூறிய பல கொள்கைகள் சரியே என்று பின்னர் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.

அடிப்படைத் துகள்கள் 16 என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவர் போலவே மேலும் சில விஞ்ஞானிகளும் இன்னொரு முக்கியமான துகள் இருந்தாக வேண்டுமே என்று 1964 ஆம் ஆண்டு வாக்கில் கூறினர். விஞ்ஞானி ஹிக்ஸ் கூறிய துகள் போஸான் என்ற வகையைச் சேர்ந்தது.
பீட்டர் ஹிக்ஸ்
அது வரை அறியப்படாத அத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் வைக்கப்பட்டது. அதாவது  ஹிக்ஸ் கூறிய வகையைச் சேர்ந்த போஸான் என்பது அதன் பொருள். இந்த போஸானை எங்கே தேடுவது? பொதுவில் போஸான் வகைத் துகள்கள் அல்பாயுசு கொண்டவை. தோன்றிய சில கணங்களில் வேறு வகைத் துகளாகி விடும்.

 ஹிக்ஸ் தாம் குறிப்பிட்ட போஸான் துகள் பற்றி ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி வைத்தார்.. அதாவது எல்லா அடிப்படைத் துகள்களும் வெவ்வேறு அளவில் நிறை (Mass) கொண்டவை. நிறை வேறு எடை என்பது வேறு என்றாலும் எளிதில் புரிந்து கொள்ள நிறை என்பதை எடை என்றும் சொல்லலாம். 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்று அவர் சொன்னார்.

ஆகவே ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாகியது. தவிர, அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் விளக்கும் வகையில் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளில் பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இதை Standard Model என்று கூறுவர். ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்காவிட்டால் இக் கொள்கையில் பெரிய ஓட்டை இருப்பதாகி விடும். ஆகவே தான் ஹிக்ஸ் போஸானைத் தேடுவது முக்கிய விஷயமாகியது.

ஹிக்ஸ் போஸானை எங்கே கண்டுபிடிப்பது? இங்கு ஐன்ஸ்டைன் உதவிக்கு வருகிறார். பொருளை ஆற்றலாக மாற்றலாம். அதே போல ஆற்றலையும் பொருளாக மாற்றலாம். ஐன்ஸ்டைனின் E= MC 2  என்ற கொள்கையின் அர்த்தமே அது தான். ஆகவே பெரும் ஆற்றலைத் தோற்றுவிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில் பொருள் தோன்றும். உதாரணமாக புரோட்டான்களை பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோத விட்டால் பெரும் ஆற்றல் தோன்றும். அப்போது தோன்றும் நுண்ணிய துகள்களை ஆராய்ந்தால் அவற்றில் ஹிக்ஸ் போஸான் தட்டுப்படலாம்.
அமெரிக்காவின் பெர்மிலாப்
துகள்களை இப்படி மோத விடும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஆட்டுக் கிடா சண்டை போல சிறிய அளவில் இருந்து பின்னர் டைனோசார்களை மோத விடுவதைப் போன்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெர்மிலாப் என்ற துகள் மோதல் ஆராய்ச்சிக் கூடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜெனீவா நகருக்கு அருகே பாதாளத்தில் பிரும்மாண்டமான துகள் மோதல் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாப் அண்மையில் மூடப்பட்டது.

 ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக செர்ன் (CERN)  என்று அழைக்கப்படுகிறது. இங்கு 100 மீட்டர் ஆழத்தில் புரோட்டான்களை மோத விடும் ஆராய்ச்சிக் கூடம் உள்ள்து. குதிரைப் பந்தய மைதானம் போல இது வட்ட வடிவில் உள்ளது. இங்கு வலுவான காந்தக் கட்டைகளைப் பயன்படுத்தி புரோட்டான்களை விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள்.
ஜெனீவா அருகே உள்ள செர்ன். வான் காட்சி
இரு புறங்களிலும் ஆட்கள் நின்று கொண்டு ஒரு குதிரையை மாறி மாறி சவுக்கால் அடித்தால் அது மேலும் மேலும் வேகமாக ஓடும். புரோட்டான்கள் அது போல விரட்டப்படுகின்றன. 27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் விசேஷ சூழ் நிலைகளில் புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் வகையில் விரட்டப்படும். அதே சமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து இதே வேகத்தில் புரோட்டான்கள் பாய்ந்து வரும். எதிரும் புதிருமாக அதி வேகத்தில் வருகின்ற இந்த்ப் புரோட்டான்கள் ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று மோதும்படி செய்யப்படும். பல கோடி புரோட்டான்கள் இவ்விதம் ஒன்றோடு ஒன்று மோதும். 

அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து பொறிகள் வெளிப்படுவதைப் போல ஒளிக் கீற்றுகள் பறக்கும். பயங்கர மோதலின் விளைவாக பெரும் ஆற்றல் வெளிப்படும். ஆற்றல் துகள்களாக மாறலாம் என்ற கொள்கையின்படி பல துகள்கள் நாலா புறங்களிலும் பாயும். இவற்றில் பலவும் அல்பாயுசாக உடனே வேறு துகள்களாக மாறும்.
புரோட்டான்களின் மோதல்களின் போது பாய்ந்து செல்லும் துகள்கள்
இந்த மோதல்களின் போது தோன்றும் விளைவுகளை மிக நுட்பமான காமிராக்கள் படம் எடுக்கும். அப்படங்களை விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்வர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான்கள் தொடர்பாக மிகத் தீவிரமாக பரிசோதனைகளை நடத்தி புதன்கிழமையன்று முடிவுகளை அறிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் ஆற்றலைத் தோற்றுவித்ததால் இப்போதைய பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான்கள் தட்டுப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஹிக்ஸ் போஸான்கள் என்று சொல்லத் தக்க துகளைக் க்ண்டுபிடித்து விட்டோம் என்று தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் குழுவினர் மிக ஜாக்கிரதையாக அறிவிப்பு வெளியிட்டனர். பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான் சில கணங்களில் வேறு துகளாக மாறினாலும் ஹிக்ஸ் போஸான் எவ்விதமான் துகள்களாக மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். உருமாறிய போஸான்கள் அவ்விதத் தன்மைகளைக் காட்டியதால்  அவர்கள் கண்டுபிடித்தது ஹிக்ஸ் போஸான்களே என்று கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு மிக மகத்தானது என்றே சொல்ல வேண்டும்.

ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே மேற்கத்திய பத்திரிகைகளும் டிவி சேனல்களும் கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இதில் கடவுள் எங்கே வந்தார்? 

 ஹிக்ஸ் போஸான் பற்றி ஒரு சமயம் பிரபல விஞ்ஞானி ஒரு நூலை வெளியிட்டார். இத்துகள் விஞ்ஞானிகளை அலைக்கழிப்பதை அவர் மனதில் கொண்டு எரிச்சலுடன் தம்து  நூலுக்கு Goddamn particle  என்று தலைப்பிட்டார். நாசமாய்ப் போன துகள் என்பது இதன் பொருள். வசவு வார்த்தை ஒரு நூலின் தலைப்பாக இருக்கக்கூடாது என்று கருதிய நூல் பதிப்பாளர் அதை God Particle  என்று மாற்றினார்.

 தவிர இத் தலைப்பு மக்களைக் கவருவதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார் அவர் நினைத்தது சரியாகியது. அப்போதிலிருந்து ஹிக்ஸ் போஸான் துகளைப் பலரும் கடவுள் துகள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். மற்றபடி ஹிக்ஸ் போஸான் துகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஹிக்ஸ் போஸானை கடவுள் துகள் என்று வருணிப்பது அபத்தம் என்று தெரிந்தும் பெரும்பாலான மேலை நாட்டு ஊடகங்கள்  ( இந்தியாவிலும் தான்) கவர்ச்சியான தலைப்புக்காக அச்சொல்லையே பயன்படுத்தின.இதை விட ஒரு படி மேலே போய் விஞ்ஞானிகள் கடவுளைக் கண்டனர் என்று வருணித்த ஊடங்கங்களும் உண்டு.

ஹிக்ஸ் போஸான்களில் மட்டும் கடவுள் இருப்பது போல எண்ணச் செய்வது அசட்டுத்தனமானது. கட்வுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதானால் ஹிக்ஸ் போஸான் என்ன, அனைத்துத் துகள்களிலும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஹிக்ஸ் போஸானை மட்டும் கடவுள் துகள் என்று வருணிக்க முற்படலாகாது.

விஞ்ஞானிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் ஹிக்ஸ் போஸானை கடவுள் துகள் என்று குறிப்பிட்டதில்லை. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி விஷயங்களில் கடவுளை இழுப்பதே கிடையாது. 

ஹிக்ஸ் போஸானுக்கும் இந்தியாவுக்கும் சில தொடர்புகள் உண்டு. அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்த சமயத்தில் குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்சினை எழுந்தது.
ச்த்யேந்திர நாத் போஸ்
 இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின்  பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது. போஸ் என்பதை போஸான் என்று மாற்றி அவ்வகைத் துகள்களை போஸான்கள் என்று அழைக்கலாயினர். சத்யேந்திர நாத் போஸும் ஐன்ஸ்டைனும் சம காலத்தவர். இருவரும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் இயற்பியல் உலகில் முக்கியமானவை. சத்யேந்திர நாத் போஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

ஐரோப்பிய செர்ன் ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேவையான ராட்சத காந்தங்களையும் மற்றும் பல கருவிகளையும் இந்தியா தயாரித்தளித்தது. அங்கு சுமார் 100 இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.

ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்ததுடன் இயற்பியலில் ஆராய்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. மேலும் ஆராய்ச்சிகளை நடத்தி ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

தவிர, பிரபஞ்சத்தில் கருப்புப் பொருள், கருப்பு ஆற்றல் என இன்னும் பிடிபடாத விஷயங்கள் உள்ளன. இவை பற்றி நிறைய ஆராய வேண்டியுள்ளது. தவிர, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி விஷயத்தில் எப்போதுமே இத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது என்று திருப்திப்படுவது கிடையாது.

( என்னுடைய இக் கட்டுரை தினமணி 6 ஆம் தேதி இதழில் வெளியாகியது. அது இப்போது எனது வலைப் பதிவில்  அளிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமணி) படங்கள் புதிய சேர்ப்பு.

-----------------------------------------------

Jul 4, 2012

விடிவதற்குள் எழுந்தால் விண்ணில் ஒரு காட்சி

Share Subscribe
வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தையும், வியாழன் கிரகத்தையும் வானில் ஒரே சமயத்தில் அருகருகே பார்க்க ஆசையா?  சூரிய உதயத்துக்கு முன்னால் இருட்டாக இருக்கும் போதே எழுந்து கிழக்கு திசையில் நோக்கினால் இந்த இரு கிரகங்களையும் காணலாம். ஜூலை மாதம் முழுவதும் இவற்றைக் காண முடியும்.

எனினும் வருகிற 7 ஆம் தேதியன்று சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பார்ப்பது உசிதம். அன்றைய தினம் வெள்ளி,வியாழன் ஆகிய கிரகங்களை மட்டுமன்றி ரோகிணி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். இவை மூன்றும் மேலிருந்து கீழாக ஒரே நேர் கோட்டில் காணப்படும்.
சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் வெள்ளி, வியாழன், ரோகிணி நட்சத்திரம் ஆகியவை அந்த வரிசையில் மேலிருந்து கீழாக இவ்விதம் காணப்படும்.இது ஒரு வரைபடம்.
இந்த மூன்றில் வெள்ளி (Venus) மிகப் பிரகாசமாகத் தெரியும். அதற்குக் கீழே வியாழன் (Jupiter) கிரகம் பிரகாசம் குறைந்ததாகத் தென்படும். அதற்குக் கீழே ரோகிணி நட்சத்திரம் ஒளிப்புள்ளியாகத் தெரியும்.  
வியாழன் சுமார் 62 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
இவை ஒன்ற்ன் கீழ் ஒன்றாக நேர் கோட்டில் காட்சி அளித்தாலும் வெள்ளி கிரகம் பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வியாழன் கிரகமோ 62 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. ரோகிணி நட்சத்திரம் 65 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.( ஒளி ஓராண்டுக்காலத்தில் செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரமாகும்)

மேலே உள்ள படத்தில் வெள்ளி கிரகம் வட்டமாக வரையப்பட்டுள்ள போதிலும் உண்மையில் அது பிறை வடிவில் தான் தெரியும். சக்தி வாய்ந்த பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் அக்கிரகம் பிறை வடிவில் இருப்பதைக் காணலாம். 
பிறை வடிவில் வெள்ளி கிரகம் 
வெள்ளி கிரகத்தை ஒரு போதும் நம்மால் முழு நிலவு போல வட்ட வடிவில் காண இயலாது. வெள்ளி முழு வட்டமாக இருக்கின்ற சமயத்தில் அது சூரியனுக்குப் பின்னால் அமைந்திருக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கிற்குப் பின்னால் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி நம் கண்ணில் படாது என்பது போல சூரியனுக்குப் பின்னால் அமைந்த வெள்ளி நம் பார்வையில் தென்படாது.


வானத்தை நிபுணர்கள் 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். இதனபடி வெள்ளி கிரகமும், வியாழன் கிரகமும் இப்போதைக்கு ரிஷப ராசியில் உள்ளன. இப்போதைக்கு என்று சொல்வதற்குக் காரணம் உள்ளது. வெள்ளி, வியாழன் உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை ராசி மாறிக் கொண்டிருக்கும்.அதாவது வானில் இடம் மாறிக் கொண்டிருக்கும்.
கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகே ரோகிணி
ஆனால் நட்சத்திரங்கள் இடம் மாறுவதில்லை. அந்த வகையில் ரோகிணி நட்சத்திரம் எப்போதும் ரிஷப ராசியில் இருந்து வருவதாகும்.இந்த நட்சத்திரம் வானில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு (Pleiades) அருகே உள்ளது ரோகிணி நட்சத்திரத்துக்கு மேற்கத்திய வானவியலில் Aldebaran  என்று பெயர்.இது அரபுக்கள் வைத்த பெயர்.