Dec 3, 2012

புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்

Share Subscribe
புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்ற மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே   ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும்.

சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் ((Mercury) தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர,  அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம்.
புதன் கிரகம்
பகலாக உள்ள பகுதியில் வெயில் 427 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தின் வானில் 11 சூரியன் பிரகாசித்தால் எப்படி? அந்த அளவு வெயில். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரி. புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை.புதன் பொசுங்கிப் போன கிரகம்.

ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில் தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில்  இருப்பதாக  ராடார் மூலம் கணட்றியப்பட்டிருந்தது என்றாலும்  பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை.ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.

பூமியில்  வட தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர் காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழுபனி (Snowfall) உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை.
புதன் கிரகத்தின் வட துருவத்துக்கு மேலாக இருந்தபடி மெசஞ்சர் எடுத்த படம். சிவப்பு நிறத்தில் உள்ளவை  பனிக்கட்டி இருக்கும் இடங்கள்
மாறாக புதன் கிரகத்தில் வட துருவப் பகுதியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை பனிக்கட்டிகள் வெளியிலிருந்து ‘இறக்குமதி’ஆனவை. அதாவது வால் நட்சத்திரங்கள் கொண்டு வந்து சேர்த்தவை.

வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம்.அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமய்ங்களிலும் வால் நட்சத்திரங்கள் கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த  வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு.
மெசஞ்சர் விண்கலம். இதில். Sunshade என்ற பகுதியைக் கவனிக்கவும். சூரியனின் வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் தடுக்கவே இந்த கூரை போன்ற பகுதி. இதை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகின
புதன் கிரகத்தின் வட பகுதியில்  உள்ள ஆழமான பள்ளங்களில் இப்போது  காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள்  பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விதம் வால் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.

புதன் கிரக பனிக்கட்டி உருண்டைகள் வெண்மையாகக் காணப்படுவதற்குப் பதில் அவற்றின் மீது பல செண்டிமீட்டர் கனத்துக்கு கரும் பொடி காணப்படுகிறது. இக்கரிய பொடி  அஸ்டிராய்ட் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வந்தவையே.
புதன் கிரகத்துக்கு மேலாக மெசஞர் விண்கலம். இது ஒரு வரை படம் 
புதன் கிரகத்தில் வட துருவ்ப் பனிக்கட்டிகள் உருகாததற்கு முக்கிய காரணம் உண்டு. பூமியானது தனது அச்சில் 23 டிகிரி சாய்ந்து உள்ளது.ஆகவே தான் வட துருவத்தில் ஆறு மாதம் பகலும் ஆறு மாத இரவும் ஏற்படுகின்றன.  தென் துருவப்  பகுதியிலும் இது போன்று  ஆறு மாதப் பகல், ஆறு மாத இரவு உண்டு..

ஆனால் புதன் கிரகம் கிட்டத்தட்ட அடென்ஷனில் அதாவது சாய்மானம் இன்றி தனது அச்சில்  செங்குத்தாக அமைந்தபடி  சுழல்கிறது.  ஆகவே வட தென் துருவப் பகுதிகளில் என்றும் வெயிலே படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு தான் இந்த பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.

அமெரிக்க நாஸா 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சா விண்கலம்  2008 ஆம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது. அதில் பல வகையான கருவிகள் உள்ளன. அவை தான் புதன் கிரகத்தின் வட பகுதியில் தண்ணீரால் ஆன பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்துள்ளன.
புதன் கிரகத்தை மெசஞ்சர்  நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதைக் காட்டும்  வரை படம். கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது புதன் கிரகம்  
புதன் கிரகத்தின் தென் துருவத்திலும் இதே போல பனிக்கட்டிகள் இருக்கலாம். புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலத்தின்  நீள் வட்ட சுற்றுப்பாதை காரணமாக அதனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியை மட்டுமே ஆராய முடிந்துள்ளது.

புதன் கிரகம் வடிவில் சிறியது.அது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய தகவல்... விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

Sudhakar Shanmugam said...

நன்றி ஐயா,

சுதாகர்

நண்பன் said...

suppar

Anonymous said...

பத்ரி பதிவுக்கு நான் அனுப்பியுள்ள ஒரு பின்னூட்டம் உங்கள் பார்வைக்காக-

திண்டுக்கல் பக்கம் ஜெயவீரபாண்டியன் என்பவர், 'ரீசைக்கிள் ஜெனரேட்டர்' என்ற ஒரு சாதனத்தை உருவாக்கியிருப்பதாகப் பல பத்திரிகைகள், ஊடகங்களில் செய்தி வந்தபடி உள்ளது. இச்சாதனத்தில் ஒரு பேட்டரி மூலம் மின் மோட்டாரை இயக்கி, அதை வைத்து ஒரு ஜெனரேட்டர் ஓட்டப் படுகிறது. இதில், ஜேனரேட்டர், தான் எடுத்துக்கொள்வதை விடக் கூடுதல் மின்சக்தியைது தருகிறது என்றும், அதை மற்றெரு பாட்டரியில் சேர்த்துவைத்து இச்சாதனத்தை எந்த எரிபொருளும் இல்லாமல் தொடர்ந்து இயக்கலாம், வீட்டுக்குத் தேவையான மின்சாரம் இதிலிருந்து இலவசமாக வந்துகொண்டே இருக்கும் (!) என்று கிளைம் பண்ணுகிறார் இவர். இது தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு முரணாக இருப்பதைப் பற்றி இவருக்கோ, இவரது இயந்திரத்துக்கோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை! யாராவது இச்சாதனத்தை முறையாக ஆராய்ந்து அறிக்கை கொடுத்தால் நல்லது.

புதிய தலைமுறை டிவி செய்தி வீடியோ சுட்டி கீழே-

http://puthiyathalaimurai.tv/weekly-videos?vid=ayutham-seivom

டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டி கீழே-

http://articles.timesofindia.indiatimes.com/2012-10-09/madurai/34341850_1_generator-batteries-power-crisis

அப்படி இது உண்மை என்றால் நிலக்கரி சுரங்கங்கள், அணு உலைகள், எண்ணைக் கிணறுகள் எல்லாம் திவாலாகி விடுமே?! என்னதான் சொல்ல வருகிறார்கள் ஊடகங்கள் என்று தெரியவில்லை. யூடியூபிலும் ஃப்ரீ எனர்ஜி என்ற பெயரில் பல வீடியோக்கள் உள்ளன. இவை ஏதாவது ஒன்று உண்மை என்றாலும் இந்நேரம் அதற்கு நோபல் பரிசு கொடுத்திருப்பார்கள், ஒட்டுமொத்த உலக எனர்ஜி பிஸினஸே இழுத்து மூடியிருப்பார்களே!

சரவணன்

Tue Dec 04, 01:17:12 PM IST

Salahudeen said...

நல்ல தகவல்கள் நன்றி ஐயா! இன்றைய நவீன உலகில் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது இதற்க்கு அறிவியல் ரீதியாக ஏதேனும் தீர்வு உண்டா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
ரீ சைக்கிள் ஜெனரேட்டர் பற்றி தங்கள் மூலமாகத் தான் அறிகிறேன்.இந்த மாதிரி சமாச்சாரங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாக் வேண்டும். அதே மாதிரி மற்றவர்கள் செய்து பார்க்கும் போது அதே பலன்கள் கிட்ட வேண்டும். நடைமுறை சாத்தியமாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் ஈடுபடுத்தும் ஆற்றலை விட குறைவான ஆற்றலே கிடைக்குமானால் அது பயனுள்ளதாக இராது.
எனினும் எந்த புதிய முயற்சியையும் ஒதுக்கித் தள்ளாமல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் அது பற்றித் தீவிரமாக ஆராய வேண்டும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

சலாஹுதீன்
முதல் விஷய்ம. நம்மால் புதிதாகத் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது.அந்த அளவில் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறைகளில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.தெற்கு ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் விண்ட்ஹோக் நகரில் வறட்சி நிலைமைகளில் சாக்கடை நீரை சுத்திகரித்து அதை குடி நீராகப் பயன்படுத்துகிறார்கள். 1968 ஆண்டிலிருந்து இத் திட்டம் அமலில் உள்ளது.வழக்கமான குடி நீருடன் சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை நீரை ஓரள்வு பய்னபடுத்தும் திட்டம் வேறு சில இட்ங்களில் பின்பற்றப்படுகிறது,
சாக்கடை நீரை குடி நீராக சுத்திகரித்தால் அதைக் குடிப்பதற்கு எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள் என்ற கேள்வி உள்ளது.

Salahudeen said...

தங்கள் விளக்கத்திற்க்கு மிக்க நன்றி ஐயா

gangsters said...

sir neenga vaal natchacthiram water eduthu vandhadha sonneenga. appadina nammama galaxy la engayavathu water source irrukanum illa? vaal nathathuku yaar thanni tharanga?
adha namma arivu jeevigal yean innum kandhu pidikala?

என்.ராமதுரை / N.Ramadurai said...

gangsters
நமது அண்டத்தில் Galaxy யில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன.அவற்றில் பலவற்றுக்கு கிரகங்கள் உள்ளன. அவ்வித கிரகங்கள் சிலவற்றில் பூமி மாதிரியில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது
சூரிய மண்டலம் தோன்றிய சமயத்தில் தான் வால் நட்சத்திரங்களும் உருவாகின.பனிக்கட்டி உருண்டைகளான அவை சூரிய மண்டல விளிம்பில் போய்ச் சேர்ந்தன. அங்கிருந்து அவை சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடுகின்றன

Unknown said...

ayya,messenger vingalam 4 andugal payanikka enna attralai payanbaduthiyathu? evvaru eriporul illamal avvalavu thooram payanam seyhirathu? sollungal ayya nandri!!

என்.ராமதுரை / N.Ramadurai said...

siva prakasam
மிக நீண்ட நதி. அதில் ஆளில்லாத படகைத் தள்ளி விடுங்கள். அப்படகு நதி நீரின் ஓட்டத்துடன் போய்க் கொண்டே இருக்கும். துடுப்புப் போடத் தேவையில்லை. எஞ்சின் தேவையில்லை.
ஆளில்லா விண்கலங்களும் -- மெசஞ்சர் உட்பட-- இப்படித் தான் விண்வெளியில் செல்கின்றன.பூமியின் பிடியிலிருந்து விடுப்ட்டு விண்வெளிக்குச் செல்கின்ற வரை தான் எரிபொருள் ராக்கெட் ஆகியவை தேவை.
பூமியானது கோடானு கோடி ஆண்டுகளாக சூரியனை சுற்றி வருகிறது. பூமியில் எந்த எஞ்சின் இருக்கிறது?
ஆளில்லா விண்கலத்தின் பாதையை அவ்வப்போது சரி செய்ய சிறு பீச்சு கருவிகள் இருக்கும். அவற்றில் மொத்தத்தில் சில கிலோ எரிபொருள் இருக்கும். அவ்வளவு தான்.
ஆளில்லா விண்கலத்தில் உள்ள கருவிகள் செய்ல்பட மின்பலகைகள் இருக்கும். அவை சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் த்ரும். இந்த மின்சாரமும் கருவிகளுக்காகத் தானே தவிரல் விண்வெளியில் பயணம் செய்வதற்கல்ல.
வியாழன், சனி போன்ற கிரகங்களை ஆராய்வதற்காகச் செலுத்தப்படும் விண்கலங்களில் அணுசக்திப் பொருள் அடங்கிய பாட்டரிகளை வைக்கிறார்கள். இந்த அணுசக்திப் பொருட்கள் மின்சாரத்தை அளித்து வரும்.

Anonymous said...

ஐயா ஒரு சிறு சந்தேகம். புதன் கோளின் சூரிய ஒளி படாத பாகம் என்று இருக்கலாம். ஆனால் வெப்பம் அடையாத பாகம் இருக்க முடியுமா? உதாரணமாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடேற்றினால் நெருப்பு படும் பாகம் மட்டுமின்றி அதன் அனைத்து பாகத்திலும் தானே வெப்பம் ஆகிறது. அது போல புதனில் சூரிய வெப்பத்தால் அக்கிரகம் முழுவதும் வெப்பம் பரவாதா? அப்படி பரவினால் துருவத்தில் உள்ள பனி உருக வாய்ப்பு உண்டா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்தால் பாத்திரம் முழுவதும் சூடாகிறது. காரண்ம் அது உலோகம். உலோகங்கள் வெப்பத்தைக் கடத்துபவை.
பூமியில் உள்ள நிலைமை வேறு. புதனில் உள்ள நிலைமை வேறு. கோடைக் காலத்தில் நல்ல வெயில் அடித்தால் வீட்டுக்குள்ளும் அனல் அடிக்கிறது. காற்று வெப்பத்தைக் கடத்துகிறது.
புதன் கிரகத்தில் காற்று மண்டலம் கிடையாது. சந்திரனிலும் தான். புதனிலும் சரி, சந்திரனிலும் சரி, திறந்த வெளியில் வெயில் தகிக்கும்.ஈயம் கூட உருகி விடும். அந்த அளவுக்கு வெயில் இருக்கும். அருகே குகை இருந்தால் அந்த குகைக்குள் தாங்க முடியாத அளவுக்கு குளிர் இருக்கும். காற்று இல்லாததே இதற்குக் காரணம்.
புதனில் துருவப் பகுதிகளில் ஆழமான பள்ளங்களில் பனிக்கட்டி இருந்தால் அவை அப்படியே இருக்கும். புதனில் கடும் வெயில் அடிக்கும் இடத்தில் ஒரு குகைக்குள் பனிக்கட்டிகள் இருந்தால் உருகாமல் அப்படியே இருக்கும்.

Post a Comment