Oct 5, 2013

கடலில் திடீரென முளைத்த தீவு

Share Subscribe
அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை.
பலுச்சிஸ்தான் கரை ஓரமாக முளைத்த தீவு
ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் க்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

பலுச்சிஸ்தானில் ஏற்ப்ட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
புதிதாகத் தோன்றிய தீவு. வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்திய்த் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  (Plate) எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷியா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களையும் கடல்களையும் தாங்கி நிற்கும் பல்வேறு சில்லுகள் வெவ்வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.சில்லுகள் என்பவை பூமியில் மிக் ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு Plate Tectonics  எனப்படும்.
குவாடார், ஓர்மாரா ஆகிய இடங்களைக் காட்டும் மேப்
யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்ப்டும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன்றியது. அதைக் கண்டு க்ரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

பலரும் பின்னர் ப்டகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வேடிக்கை பார்க்கப் பலரும் இத்தீவுக்கு வந்தனர்
சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.
பலுச்சிஸ்தானில் உள்ள இந்த் சேற்று எரிமலை உலகிலேயே மிக
உயாந்ததாகும் (300 அடி) சேறு அவ்வப்போது வழிந்ததால்
ஏற்பட்ட அடையாளங்களைக் காணலாம்
சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாசமானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும்.

 சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரிமலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

பலுச்சிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன.


9 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா

விளக்கமும் மிக அருமை படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி ஐயா...

கவியாழி said...

அதிசயமான தகவலை அனைவருக்கும் தெரியப் படுத்தியமைக்கு நன்றி.பயனுள்ள அரிய தகவலால் நானும் மகிழ்ந்தேன்

swejeni said...

முதல் படம் தவறு என நினைக்கிறேன். தீவில் பசுமையாக தாவரங்களும் எதோ சிறு கட்டுமானங்களும் தெரிகிறது

Anonymous said...

தகவலுக்கு நன்றி..

Anonymous said...

good articles,thanks ,we need more articles like this

Anonymous said...

வணக்கம் ஐயா

பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் வெப்பம் இத்தனைக் கோடி வருடங்களாகியும் இன்னும் அப்படியே இருப்பதற்கு என்ன காரணம்.

வெங்கடேஷ்

srinivasansubramanian said...

வியக்க வைக்கும் தகவல் ,படங்களும் மிக அருமை

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
பூமியின் உள்ளே செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும். வெப்பம் அதிகமாக இருப்பதற்கு அது ஒரு காரணம். அதை விட முக்கிய காரணம் உண்டு. பூமி உருவான போது யுரேனியம் போன்ற உலோகங்கள் எடை காரணமா உள்ளே அமிழ்ந்தன. யுரேனியம் கதிரியக்கத் தன்மை கொண்டது.யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் கதிரியக்கம் மூலம் வெப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

Post a Comment