Jan 16, 2015

பூமியைக் கடந்து செல்லும் விண்கல்

Share Subscribe
சுமார்  680  மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் (Asteroid) ஒன்று ஜனவரி 26 ஆம் தேதியன்று பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த விண்கல்லினால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு எதுவும் இல்லை.

2004 BL 86  என்னும் பெயரிடப்பட்ட அந்த விண்கல் பூமியைக் கடந்து செல்லும் போது பூமிக்கும் அதற்கும் உள்ள தூரம் 12 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இது சந்திரனுக்கு உள்ள தூரத்தைப் போல மூன்று மடங்காகும். இந்த விண்கல் பூமியின் சுற்றுப்பாதையைக் குறுக்காகக் கடந்து செல்லும். இது 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

விண்வெளி அளவுகோலின்படி அந்த விண்கல் பூமியை “அருகாமையில்” கடந்து செல்வதாகக் கூறலாம். அடுத்த 12 ஆண்டுகளுக்கு வேறு எந்த விண்கல்லும் இந்த அளவுக்கு அருகில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BL 86 விண்கல்லின் சுற்றுப்பாதையைக் காட்டும் படம். ஜனவரி 19 ஆம் தேதி
விண்கல் எங்கே இருக்கும் என்பது படத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
படம் நன்றி NASA/JPL-Caltec

சூரியனைச் சுற்றுகின்ற பூமிக்குத் தனிப்பாதை உள்ளது போலவே  எல்லா விண்கற்களுக்கும் தனித்தனி சுற்றுப்பாதை உண்டு. அவையும் சூரியனைச் சுற்றிச் செல்பவை தான். ஆனால் விண்கற்களின் சுற்றுப்பாதை ஏறுமாறாக இருப்பது உண்டு. அதனால் தான் ஏதாவது ஒரு விண்கல் இவ்விதம் பூமியைக் கடந்து செல்கின்றது.

பூமியை நெருங்கிக் கடந்து செல்கின்ற விண்கற்கள்  மிக நிறையவே உண்டு. இவற்றில்  100 மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்ட அத்துடன்  15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்கின்ற விண்கற்கள்
“ ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட விண்கற்கள்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை பூமியில் வந்து மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் நிபுணர்கள் இவற்றின் மீது கண் வைத்து கவனித்து வருகிறார்கள். இதற்கென்றே தனிக் குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரையிலான கணக்குப்படி இவ்வகையான 1533 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வருகிற 26 ஆம் தேதி BL 86 விண்கல்  பூமியை அதி வேகத்தில் கடந்து செல்லும் போது அமெரிக்காவில் கோல்ட்ஸ்டோன் என்னுமிடத்தில் உள்ள பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும், மற்றும் போர்ட்டோரிகோவில் அரசிபோ என்னுமிடத்தில் உள்ள மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும் மைக்ரோ அலைகளை அந்த விண்கல் மீது செலுத்தி அதனை ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க நாஸா ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு விண்கல் பூமியைக் கடந்து செல்வது என்பது அப்படி ஒன்றும் அபூர்வமானதல்ல. அவ்வப்போது பல விண்கற்கள் இவ்விதம் கடந்து செல்கின்றன. .ஜனவரி 12 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 6 விண்கற்கள் பூமியைக் கடந்து செல்ல இருக்கின்றன.

 அவற்றில் ஒரு கிலோ மீட்டர் அல்லது அதற்கு அதிகமான குறுக்களவு கொண்ட  விண்கற்களும் அடங்கும். பெரும்பாலானவை பூமியை மிகத் தொலைவில்  கடந்து செல்லும்.

 .

5 comments:

Unknown said...

Sir thanks , sir bermuda triangel pattri vilakkam vendum

என்.ராமதுரை / N.Ramadurai said...

S.Balaji Cameraman
முன்னர் இதே போல சிலர் கேட்டுக்கொண்டனர். பெர்முடா முக்கோணம் என்பதாக எதுவும் கிடையாது. ஆதாரமற்ற தகவல்கள்,மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், வெறும் ஊகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் தொடங்கியது. அது இன்னமும் நீடித்து வருகிறது. அறிவியல் ரீதியில் இதற்கு ஆதாரம் இல்லை என்று பல்வேறு கோணங்களில் வெவ்வேறு தரப்பினர் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆகவே அது பற்றி எழுத எதுவும் இல்லை.

Unknown said...

Thanks sir

Life said...

ஐயா

வணக்கம் பூமிக்கு அருகே வரும் விண்கற்கள் என்று அடிகடி செய்திகள் வருகிறது அவ்வாறு இல்லாமல் பூமியை நேர தாக்கும் விண்கற்கள் வந்தால் பிற்காலத்தில் பூமியை சற்றே தள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளருமா இது சாத்தியமா

என்.ராமதுரை / N.Ramadurai said...

Life
பூமியை சற்றே நகர்த்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் பூமியைத் தாக்க வரும் விண்கல்லின் பாதையை மாற்ற இயலும்.அப்படி மாற்றினால் அது பூமியின் மீது மோதாமல் சென்று விடும்.
அல்லது அது தொலைவில் இருக்கும் போதே அதை அழிக்க இயலும்.இந்த இரண்டு வழிக்கான சாத்தியக்கூறுகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்

Post a Comment