Mar 17, 2012

சூரியன் உதிக்காமல் போனால்...

Share Subscribe
தமிழ் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் ஒருமுறை படித்தது :

கேள்வி: சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?
பதில்: ரொம்ப ஜாலி. படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை...

வேடிக்கையாக பதில் தரப்பட்டுள்ளது. சூரியன் உதிக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சூரியனிடமிருந்து வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வெப்பம் கிடைக்காமல் பல வார காலம் அல்லது பல மாத காலம் தூசு மண்டலம் சூரியனை மறைத்தபடி இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. அப்படியான நிலைமை ஏற்பட்டால். விபரீத விளைவுகள் ஏற்படும். பூமி ஒரேயடிகாகக் குளிர்ந்துவிடும். இதை எரிமலையால் ஏற்பட்ட குளிர் பருவம் (Volcanic winter) என்பர்.

கோடையில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய பருவத்தில் பனிப்பொழிவு (Snowfall) இருக்கும். பயிர்கள் பொய்த்து விடும். மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுக் கலவரங்கள் மூளும். மக்கள் பட்டினியால் சாவார்கள். குளிர் வாட்டும். நோய்கள் பெருகும். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெறும் ஊகம் அல்ல.

உண்மையில் இப்படியான நிலைமை 1816 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதாவது அப்போது சூரியன் மறைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள தம்போரா (Tambora) என்ற எரிமலையே அதற்குக் காரணம். அதற்கு முந்தைய ஆண்டில்(1815) தம்போரா எரிமலை பயங்கரமாக வெடித்தது. 5000 ஆண்டுகளில் காணப்படாத பிரம்மாண்டமான வெடிப்பு அது. அந்த எரிமலையிலிருந்து பெரும் புகை வெளிப்பட்டது. கோடானு கோடி டன் தூசு வெளிப்பட்டது.

தம்போரா எரிமலை, இந்தோனேசியா
இத்தூசு வானில் 40 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்றது. தூசு மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்தன. விரைவில் அவை பூமியைப் போர்த்துக் கொண்டன. சூரியன் பெரிதும் மறைக்கப்பட்டது. கருப்புக் கண்ணாடியால் பார்த்தால் தெரிவது போல சூரியன் மங்கலான வட்டமாகத் தெரிந்தது.

வானில் இருந்த தூசு காரணமாக சூரியன் வெவ்வேறு சமயங்களில் பச்சை நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் தெரிந்தது.

தூசு மண்டலத்தால் சூரியன் மறைக்கப்பட்டபோது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைக்காலம். ஆனால் நல்ல வெயில் அடிப்பதற்குப் பதில் கடும் குளிர் வீசியது. நியூயார்க் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் பனிப் பொழிவு (Snowfall) இருந்தது. பயிர்களை படர் பனி (Frost) தாக்கியது. பயிர்கள் பொய்த்தன. ஐரோப்பிய நாடுகளும் இதே போல கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் பல நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் கலவரங்கள் வெடித்தன. நோய்களால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.ஆகவே 1816 ஆம் ஆண்டை கோடையே இல்லாத ஆண்டு என்று கூறுவர்.

கிரகடோவா எரிமலை
தம்போரா எரிமலை வெடித்ததற்குப் பின்னர் அதே இந்தோனேசியாவில் 1883 ஆம் ஆண்டில் கிரகடோவா எரிமலை (Krakatoa) வெடித்தது. அப்போது ஏற்பட்ட தூசு முகில் பூமியை பல முறை சுற்றி வந்தது. கிரகடோவா வெடித்ததால் ஏற்பட்ட நிலைமைகள் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை.

அதே இந்தோனேசியாவில் உள்ள டோபா எரிமலை (Toba) இன்னும் மோசம். அந்த எரிமலை சுமார் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்தது. அப்போது தோன்றிய பிரம்மாண்டமான எரிமலை சாம்பல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவைக் கப்பியது.

டோபா எரிமலை, சுமத்ரா தீவு, இந்தோனேசியா.
இந்த எரிமலையின் வாய் இப்போது
பெரிய ஏரியாக உள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் நிலத்துக்கு அடியில் நிபுணர்கள் தோண்டிப் பார்த்த போது சுமார் 15 செண்டிமீட்டர் கனத்துக்கு எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. நிபுணர்கள் தோண்டிய இடங்களில் ஆந்திரத்தில் உள்ள ஜுவாலாபுரம் என்ற இடமும் ஒன்றாகும். . இங்கு காணப்பட்ட சாம்பல் படிவு டோபா எரிமலை வெடித்த போது வெளிப்பட்ட சாம்பலே என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திரத்தில் நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி.
வெள்ளையாக சாம்பல் படிந்தது தெரிகிறது.
டோபா எரிமலை வெடிப்பினால் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உலகின் மக்கள் தொகை வெறும் 10 ஆயிரத்துக்கு குறைந்தது என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றி சர்ச்சை உள்ளது என்றாலும் பெரும்பாலான மக்கள் அழிந்தனர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. டோபா வெடிப்பினால் ஐரோப்பா அருகே உள்ள ஐஸ்லாந்திலும் அமில மழை பெய்தது. இந்த பெரும் வெடிப்பைத் தொடர்ந்து பூமி குளிர்ந்தது. அதைத் தொடர்ந்து பனி யுகம் தோன்றியது.

கீழே உள்ள படம் டோபா எரிமலை வெடிப்பின் தாக்கத்தைக் காட்டுகிறது. வட்டமான சிவப்புப் புள்ளி டோபா எரிமலை. நீல நிறப் புள்ளிகள் டோபா எரிமலைச் சாம்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களைக் காட்டுகின்றன. சிவப்பு கோட்டுக்கு உள்பக்கம் வாழ்ந்த மக்களில் யாரும் மிஞ்சவில்லை என்று சில நிபுணர்க்ள் கூறியபோதிலும் பலர் அதை ஏற்கவில்லை.

டோபா எரிமலை வெடிப்பின் தாக்கம்
தம்போரா, கிரகடோவா மற்றூம் டோபா எரிமலைகள் பூமிக்குள் சில்லுகள்  புதையும் இடங்களில் அமைந்துள்ளவை. சில்லுப் பெயர்ச்சியால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய ஆபத்து எரிமலை வெடிப்பால் பூமியை தூசுப் படலம் சூழ்ந்து கொள்வதே ஆகும்.

இன்று தம்போரா எரிமலை அமைதியின் வடிவமாக இருக்கிறது. டோபா எரிமலை ஏரி வடிவில் அமைதியாக உள்ளது.

இவற்றை வைத்து எரிமலைகள் மனித குலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று முடிவு கட்டிவிடலாகாது. பூமியில் மனித குலம் தோன்றியதில் எரிமலைகளின் வாயுக்களும் மின்னல்களும் முக்கிய பங்களித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தவிர, எப்போதோ எரிமலைக் குழம்புகள் வழிந்தோடிய நிலங்கள் பயிர் விளைச்சலுக்கு மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன். பல சமயங்களிலும் பாதுகாப்பைக் கருதி எரிமலை அடிவாரங்களிலிருந்து மக்களை வெளியேற்ற முற்பட்டால் அவர்கள் வெளியேற மறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆகவே எரிமலைகளை மனித குலத்தின் எதிரி என்றும் சொல்லிவிட முடியாது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்.

சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?

பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் நமக்கு சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழ்கின்றன. பூமி தனது அச்சில் சுழல்வது நின்று விடுவதாக வைத்துக் கொண்டால், சூரிய உதயமே இருக்காது. பூமியின் ஒரு பாதியில் வானில் சூரியன் நிலை குத்தி நிற்கும் (பூமி உருண்டை என்பதால்). அங்கு என்றெனும் பகலாகவே இருக்கும். அப்படியான நிலையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.

பூமியின் மறுபாதியில் என்றென்றும் இரவாக இருக்கும். சூரிய வெப்பம் இல்லாமல் போய்விடுவதால் கடும் குளிர் வீசும். அனைத்தும் உறைந்து போய் விடும். பயிர்கள் வளராது. மக்கள் குளிரில் விறைத்து மடிந்து போவர். அல்லது பட்டினியால், நோய்களால் செத்து மடிவர். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இருக்காது. பூமி செத்து விடும். பூமி தனது அச்சில் சுழன்று, அதனால் சூரிய உதயமும் அஸ்தமனமும் இருந்தால் தான் பூமியில் உயிரினம் இருக்க முடியும். சூரியன் இல்லையேல் - அதாவது பகலும் இரவும் இல்லையேல் - உயிரினமே இராது. உயிர் வாழ்க்கையின் ஆதாரமே சூரியன் தான்.

”ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” - இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்.


தொடர்புடைய பதிவு: பூகம்பம் ஏன், எரிமலை ஏன், சுனாமி ஏன்

14 comments:

Nanbar Koottam said...

Excellent sir.., most astonishing thing is how human can assume things happened 73thousand years ago and also relate various findings they do over a period... Good work sir

Ram said...

As usual super sir. With supporting photographs and pictures you guide us well through out the article without the need for imagination.

Pls try to make frequent posts...

துளசி கோபால் said...

பயன் உள்ள தகவல்களுக்கு நன்றி.

Rajkamal said...

Migavum payanulla thakavalukku nanri. Vilaivukalai vidavum athil irundhu nammai kaapathu epadi endru kurinal migavum panullathaga irukum.

Anonymous said...

Very informative site. thank u sir.

nagu
www.tngovernmentjobs.in

Usman said...

மிக அருமையான பயனுள்ள தகவல்.

Sindhai said...

அதி வேகமாக சுற்றும் பூமி சட்டென எப்படி நிற்கும்... சட்டென நிற்குமா...? அல்லது வேகத்தை படிப்படியாக குறைத்து நிற்குமா....?

சுற்றும் வேகம் சட்டென நிற்குமென்றால் பூமியின் வேகத்தில் அதனோடு இயங்கும் பூமியில் உள்ளவைகளின் நிலை என்னாகும்...? தூக்கி எரியபட்டுவிடாதா...?

சுற்றும் வேகத்தை படிப்படியாக குறைத்து நிற்கும் என்றால் இரவு பகலின் நேரம் அதிகமாகுமே .....? அப்படியானால் நமக்கு ஒரு நாளுக்கு அதிக நேரம் கிடைக்குமா....?

கற்பனை செய்யவே முடியலையே ....? விளைவு எப்படி இருக்கும்....? Please சொல்லுங்க சார்......?

என்.ராமதுரை / N.Ramadurai said...

பூமி தனது அச்சில் சுழல்வது ஒரு போதும் நிற்காது. அப்படி ஏற்பட வாய்ப்பே இல்லை.எதிர்காலத்தில் பூமியின் சுழற்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் பூமி உள்ளவரை சூரியன் உள்ளவரை இருந்து கொண்டு தான் இருக்கும்

Abirami Palacode said...

very nice 2 read

srikrishnan said...

really wonderful thanks for ur informations

vaasu said...

மிக்க நன்றி இது போன்ற தகவல்களுக்கு, என்னுடைய சிறு கேள்வி. துருவ இடப்பெயர்வு சாத்தியமா? சாத்தியமென்றால் அதன் விளைவுகள் பூமியிலும், சூரியனிலும் எப்படி இருக்கும்?

என்.ராமதுரை / N.Ramadurai said...

vaasu
பூமிக்கு உண்மையில் இரு வட துருவங்கள் உள்ளன. ஒன்ரு பூகோள துருவம். இது மாறாதது.இதுவே பூமியின் வட புற அச்சு. பூமிக்கு காந்த துருவம் என இன்னொரு துருவம் உள்ளது. காந்த ஊசியானது இந்த் காந்த துருவத்தை நோக்கித்தான் திசை காட்டி நிற்கும். காந்த துருவம் பூமியின் வட துருவ வட்டாரத்தில் இடம் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கும் பூமியின் சுழற்சிக்கும் தொடர்பு இல்லை.காந்த துர்வத்தை Magnetic Pole என்று குறிப்பிடுவர். இடம் மாறாத வட துருவத்தை Geographic pole என்று குறிப்பிடுவர்
இதெல்லாம் போக பலப்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் காந்த வட துருவம் தென் துருவமாகவும் காந்த தென் துருவம் வட துருவமாகவும் மாறிவிடும். இது Reversal of Poles என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி மாறுவ்தால் பூமியில் என்ன விளைவுகள் ஏற்படும் என்று இன்னும் திட்ட்வட்டமாக அறியப்படவில்லை. கடந்த பல மிலிய்ன் ஆண்டுக்காலத்தில் இப்படி பல தடவை நிகழ்ந்துள்ளது. ஆனால் இது சூரியனில் பாதிப்பை ஏற்படுத்தாது.

Sathish Kumar said...

Sir,
It is very informative. it is amazing learning astronomy in tamil. by reading this i have a question of Why the earth & other object in the universe spins?

What i know is because of Association of energy particle. if this is the case then how it is possible that earth can increase it speed?

ரா.ராமலிங்கம் said...

நன்றி, மிகவு‌ம் பயபயனுள்தாகயிருந்தது

Post a Comment