Feb 7, 2014

நியூட்ரினோ ஆய்வால் நில நடுக்கம் வருமா?

Share Subscribe
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், சீனா என பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்துறையில் பின் தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த நோக்கில் தான் தேனி மாவட்டத்தில் ரூ 1400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டு வருகிறது. இது 2015 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனிலிருந்து ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை மிகவும் நுண்ணியவை. எதையும் துளைத்துச் செல்லக்கூடியவை. நீங்கள் சூரியனை நோக்கி உள்ளங்கையை விரித்தால் உங்கள் உள்ளங்கையை பல கோடி நியூட்ரினோக்கள் துளைத்துச் செல்லும்.

நியூட்ரினோக்கள் உள்ளங்கை என்ன, பூமியையும் துளைத்துச் செல்பவை. அடுத்தடுத்து பத்து பூமியை நிறுத்தினாலும் அத்தனை பூமிகளையும் அவை துளைத்துக் கொண்டு விண்வெளிக்குச் சென்று விடும்.

பலரும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நியூட்ரான் பற்றிப் படித்திருப்பார்கள். நியூட்ரான் வேறு. நியூட்ரினோ வேறு. நியூட்ரான்கள் அணுவுக்குள் இருப்பவை. உடலை நியூட்ரான்கள் தாக்கினால் ஆபத்து. நியூட்ரினோக்கள் ஆபத்து விளைவிக்காதவை.

சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல கோடி டன் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறி வருகின்றன. இது அணுச்சேர்க்கை எனப்படுகிறது. இவ்வித அணுச்சேர்க்கையின் போது தான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன.

கோடானு கோடி நியூட்ரினோக்கள் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேருகின்றன. அந்த வகையில் காலம் காலமாக நியூட்ரினோக்கள் பூமியில் வாழும் மக்களையும் அத்துடன் பூமியையும் துளைத்துச் சென்று கொண்டிருக்கின்றன.. ஆகவே நியூட்ரினோக்களால் மனித குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது நிரூபணமான உண்மை.

நியூட்ரினோக்களால் நமக்கு நன்மை உண்டா? அவற்றை நம்மால் ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்துக் கொள்ள முடியுமா? நம்மால் இன்னும் நியூட்ரினோக்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

அந்த நோக்கில் தான்  உலகில் பல நாடுகளிலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோ பற்றி நாம் நன்கு அறிந்து கொண்ட பின்னர் தான் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திக்க முடியும்.

நியூட்ரினோக்களைக் கண்ணி வைத்துப் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் நியூட்ரினோக்கள் அவற்றின் பாதையில் உள்ள எதையும் ஊடுருவிச் செல்பவை.

ஆனால் அவை சில சமயங்களில் போகிற போக்கில் வழியில் உள்ளதை உதைத்துத் தள்ளும். ஒதுக்கித் தள்ளும். மோதித் தள்ளும். இப்படியான செயல்களின் விளைவுகளை வைத்துத் தான் நியூட்ரினோக்கள் பற்றி அறிய முடியும் என்ற நிலை தான் உள்ளது.

இரவில் சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கிறது. உள்ளே போய் பார்த்தால் ஜன்னல் திறந்து கிடக்கிறது. பூனை வந்து பாத்திரங்களை உருட்டிச் சென்றிருக்கிறது என்று உணருகிறோம்.. நியூட்ரினோக்களின் கதையும் அப்படித்தான் உள்ளது.

நியூட்ரினோக்கள் எதை உதைத்துத் தள்ளி விட்டுச் சென்றால் அவை பற்றி நன்கு அறிய முடியும் என்ற அடிப்படையில் உலகில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் விதவிதமாக அமைந்துள்ளன.

ஜப்பானில் ஒரு மலைச் சிகரத்துக்கு அடியில் 1000 மீட்டர் ஆழத்தில் எவர்சில்வரினால் ஆன 40 மீட்டர் அகல  கோள வடிவிலான தொட்டியில் மிக சுத்தமான நீர் அடங்கியுள்ளது. நியூட்ரினோக்கள் இத் தொட்டியின் வழியே பாய்ந்து செல்லும் போது தற்செயலாக எலக்ட்ரான்கள் மீது அல்லது அணுக்கருக்கள் மீது மோதிச் செல்லலாம். அப்படி மோதினால் மினுக் என்று ஒளி தோன்றும். இந்த மினுக் ஒளிகளைப் பதிவு செய்ய நாலாபுறங்களிலும்  பதிவுக் கருவிகள் உண்டு.

கனடாவில் பாதாள நீர்த் தொட்டியில் அழுக்குப் போக்கும் திரவம் வைக்கப்பட்டது.

அண்டார்டிகாவில் ஒரு கன கிலோ மீட்டர் அகலம், நீளம் உயரம் கொண்ட பெரும் பனிக்கட்டிதான் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம்.

தமிழகத்தில் தேனியில் அமையும் ஆராய்ச்சிக்கூடத்தில் காந்தத்தன்மை கொண்ட 50 ஆயிரம் டன் இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். அடுக்கடுக்காக உள்ள இந்த இரும்புத் தகடுகளை நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும் போது ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்வதற்கான கருவிகள் இந்த இரும்புத் தகடுகளுக்கு இடையே பொருத்தப்படும்.

ஒரே பாறையாக அமைந்த குன்றின் உச்சியிலிருந்து 1300 மீட்டர் ஆழத்தில் ஆராய்ச்சிக்கூடம் அமைந்திருக்கும். ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் நீள சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் குன்றின் அடியில் அல்லது பாதாளத்தில் அமைக்கப்படுவதற்குக் காரணம் உள்ளதுநியூட்ரினோக்கள் அல்லாத வேறு துகள்கள் வருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.

 நியூட்ரினோக்கள் 1960 களிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகளைப் படாதபாடு படுத்தியுள்ளன. சூரியனின் மையத்தில் எவ்வளவு நியூட்ரினோக்கள் உற்பத்தியாக வேண்டும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்

சூரியனிலிருந்து எவ்வளவு நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்து சேருகின்றன என்று ஆராய்ச்சிக் கருவிகள் மூலம் கணக்கிட்டு அறிய விஞ்ஞானிகள் முயன்ற போது கணக்கு உதைத்தது.

மூன்றில் ஒரு பங்கு தான் வந்து சேருவதாகக் கருவிகள் காட்டின. மற்ற நியூட்ரினோக்கள் என்னவாகின என்று கேள்வி எழுந்தது. சூரியனின் நடக்கும் அணுச்சேர்க்கை பற்றிய தங்களது கருத்தே தவறானதோ என்றும் விஞ்ஞானிகள் எண்ண முற்பட்டனர்.

மேலும் நவீன கருவிகளை வைத்து ஆராய்ந்த போது சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களில் மூன்றில் இரு பங்கு பாதி வழியில் வேறு இரு வகை நியூட்ரினோக்களாக மாறிவிடுகின்றன என்பது தெரிய வந்த்து. 2002 ஆம் ஆண்டில் தான் இந்த உண்மை தெரிய வந்தது. அவற்றையும் சேர்த்துக் கணக்கிட்ட போது சூரியன் பற்றிய கொள்கை சரியானதே என்பது புலனாகியது.

உலகில் பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும். ஜெனீவாவில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் 2011 ஆம் ஆண்டில் இவ்விதம் நியூட்ரினோக்களை உண்டாக்கி பாதாளம் வழியே இத்தாலியில் உள்ள ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பி சோதனை நடத்தியது

அப்போது நியூட்ரினோக்கள் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பொய்யாக்கும் வகையில் ஒளி வேகத்தை மிஞ்சுவது போலத் தோன்றியது. இது சில மாத காலம் பெரும் குழப்பதை உண்டாக்கியது. கடைசியில் கருவிகளில் தான் கோளாறு,, ஐன்ஸ்டைனின் கொள்கை சரியானது தான் என்று நிரூபணமாகியது

இந்தியாவில் நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சி நடப்பது இது முதல் தடவை அல்ல.1964 ஆம் ஆண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தில் மிக ஆழமான இடத்தில் சிறு அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சி நடந்தது. விண்வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் நியூட்ரினோக்களைத் தோற்றுவிக்கின்றன என்பது முதல் தடவையாக அங்கு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

தேனியில் இப்போது அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் காற்றுமண்டல நியூட்ரினோக்களைத் தான் முதலில் ஆராயும். பின்னர் அது சூரியனிலிருந்து வருகின்ற நியூட்ரினோக்களையும் ஆராய ஆரம்பிக்கும்.

அதற்கு அடுத்த கட்டத்தில் ஜெனிவாவிலிருந்து நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே அனுப்பப்படுகின்ற நியூட்ரினோக்களையும் ஆராயத் தொடங்கும்.

இவ்விதம் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்பினால் பூகம்பம் உண்டாகும் என்று பீதி கிளப்பப்படுகிறது. இது வெறும் கற்பனை. ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்புவது எண்ணற்ற தடவை நடந்துள்ளது. அங்கெல்லாம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை

குறிப்பு: நான் எழுதிய இக்கட்டுரை பிப்ரவரி 6 ஆம் தேதி தி ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியானதாகும். இப்போது என் வலைப்பதிவில் வெளியிடப்படுகிறது..
----------------------------------------------------------------------------------------




9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கெங்கு ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

Anonymous said...

நியூட்ரினோக்கள் குறித்து எளிமையாக புரியும்படி பதிந்தமைக்கு மிக்க நன்றிகள். நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் அமையவிருப்பதும் பெருமை தருகின்றது. :)

ABUBAKKAR K M said...

வணக்கம் ஐயா .
நியூட்ரினோக்கள் பற்றிய அரிய தகவல்கள் .பதிவுக்கு நன்றி.
ஆய்வு மையம் நமது மாநிலத்தில் அமையவுள்ளது மகிழ்ச்சியான ஒன்றாகும்.
ஐன்ஸ்டீனின் ஒளி வேகம் பற்றிய கோட்பாடு எந்த நிலையிலும் தவறு என நிரூபிக்க படாத / இயலாத நிலையில் ,
நியூட்ரினோக்களின் வேகம் ஒளியின் வேகத்தை விஞ்சியிருக்குமோ என்ற ஐயம் விஞ்ஞானிகளுக்கு வந்துஇருக்க கூடாது அல்லவா?
<> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி
09 02 2014

என்.ராமதுரை / N.Ramadurai said...

ABUBAKKAR K M
நியூட்ரான்களால் ஒளி வேகத்தை மிஞ்ச இயலாது என்ற நம்பிக்கை காரணமாகத்தான் அது தொடர்பான பரிசோதனகள் அடுத்தது ப்ல தடவை நடத்தப்பட்டது. விஞ்ஞானிகள் யாரும் நியூட்ரான் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பொய்ப்பித்து விட்டதாக வாய் திறந்து கூறவில்லை. ஊடகங்கள் தான் விஷயத்தைப் பெரிது படுத்தி வீண் ஐயங்களைக் கிளப்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Sudhakar Shanmugam said...

பதிவுக்கு நன்றி

S.சுதாகர்

silver moon said...

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதால், ஏதாவது தீமையா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

silver moon
மீதேன் வாயுப் படிவுகள் உள்ளனவா என்று கண்டறிவதற்காக விவசாய நிலங்களில் ப்ள்ளம் தோண்டுவதைத் தான் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். ஒரு வேளை நிறைய மீதேன் வாயுப் படிவுகள் இருப்பதாகத் தெரிய வந்தால் விவசாய நிலங்கள் மீதேன் எடுக்கப்படுகிற பிராந்தியம் ஆகிவிடும். இது விவசாயப் பணிகளுக்குப் பாதிப்பாகிவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
மற்றபடி ஒரு பிராந்தியத்தில் மீதேன் எடுப்பதால் அப்பிராந்தியத்துக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக விவசாயத்துக்கு கொஞ்சமும் இல்லாத நிலங்களில் மீதேன் கிடைப்பதாக வைத்துக் கொண்டால் அப்பகுதியில் மீதேன் எடுப்பதால் எந்த பாதிப்பும் இராது.
தமிழகத்தின் சில பகுதிகளில் விவசாய நிலங்களை கூறு போட்டு அடுக்கு மாடிகளைக் கட்டுகின்ற நிலை உள்ளது. இது அதிகரித்துக் கொண்டே போகிறது. நல்ல விலை கிடைக்கிறது என்று விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பதே இதற்குக் காரணம்

Unknown said...

ஐயா, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை தேனியில் நிறுவ ஏதேனும் காரணம் உள்ளதா? தேனி போன்ற வளமான பகுதிகளை விட்டுவிட்டு தென்னக தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழாத சுகப்படாத எத்தனையோ தரிசு நிலங்களில் இதை அமைத்திருக்கக்கூடாதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parivel Murugesan
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அமைக்க தேனி தான் உகந்த இடம் ஆகும். மிக உய்ரமான குன்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டி அங்கு தான் ஆராய்ச்சிக் கருவிகளை வைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் திட்டம். அப்படிப்பட்ட குன்று ஒரே பாறையால் ஆனதாக இருக்க வேண்டும். வானிலிருந்து வரக்கூடிய பிற கதிர்கள் தடுக்கப்பட வேண்டும். நியூட்ரினோ மட்டுமே குன்றுக்கு அடியில் சுரங்கத்தில் உள்ள கருவிகளை வந்தடைய வேண்டும். இப்படியான பல அடிப்படைகளை வைத்து முதலில் நீலகிரியில் ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது வனவிலங்குகளின் காப்பகம் உள்ள இடத்தின் ந்டுவே உள்ளதால் அத்திட்டம் கைவிடப்பட்டு பின்னர் தேனி தேர்ந்தெடுக்கப்பட்டது.
திறந்த வெளியில் இந்த ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்தால் நியூரினோக்கள் மட்டுமன்றி வேறு கதிர்களும் கருவிகளை வந்தடையும். குன்று என்றால் பல க்திர்களும் குன்றை ஊடுடுவ முடியாமல் தடுக்கப்பட்டு விடும். நியூட்ரினோக்கள் எதையும் ஊடுருவும் என்பதால் அவை மட்டும் ஆராய்ச்சிக் கருவிகளை வந்தடையும். இந்தியாவில் பல இடங்கள் ஆராயப்ப்ட்டு அவை உகந்தவை அல்ல என்று நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்தால் யாருக்கும் தீங்கு கிடையாது. உலகில் பல நாடுகளில் இவ்வித ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன. அந்த நாடுகளில் இப்படி எல்லாம் அர்த்தமற்ற எதிர்ப்புகள் ஏற்படவில்லை.

Post a Comment