Dec 30, 2015

சூரியப் புயல் பூமியைத் தாக்கும்

Share Subscribe
சூரியனிலிருந்து புயல் போன்று கிளம்பிய துகள் மேகம் நாளை 31 ஆம் தேதி பூமியைத் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கோ சுற்றுச் சூழலுக்கோ பாதிப்பு எதுவும் இராது.

ஆனால் பூமியைச் சுற்றி வருகின்ற எண்ணற்ற செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு,  மின் பகிர்மான கிரிட் போன்றவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 பூமியை சூரியப் புயல் தாக்குவது இது முதல் தடவையல்ல. கடந்த காலத்தில் எண்ணற்ற தடவைகள் இவ்விதம் ஏற்பட்டுள்ளது.

சூரியனில் உள்ள கரும் புள்ளிகளே சூரியப் புயல் ஏற்படுவதற்கான காரணமாகும். சூரியனின் முகத்தில் கரும் புள்ளிகள் இயற்கையாக ஏற்படுகின்றன. சூரியனின் மேற்புறத்தில் வெப்பம் சற்றே குறைவான பகுதிகள் பூமியிலிருந்து பார்க்கும் போது கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன.

 2000 ஆம் ஆண்டில் சூரியப் புயலின் போது எடுக்கப்பட்ட படம்
சூரியனின் ஒளி வட்டம் ஒரு கருவியால் மறைக்கப்பட்டுள்ளது

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும் போது சூரியனில் சீற்றம் ஏற்படும். அப்படியான சீற்றம் ஏற்படும் காலத்தில் சூரியனிலிருந்து பெரும் வாயு மொத்தை தூக்கி எறியப்படும். பிளாஸ்மா வடிவிலான இந்த வாயு மொத்தையானது பெரிதும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் அடங்கியதாகும்.

வாயு மொத்தை இவ்விதம் சூரியனிலிருந்து தூக்கி எறியப்படுவதானது Coronal Mass Ejection  (CME)  என்று குறிப்பிடப்படுகிறது. எனினும் சில விஞ்ஞானிகள் இதை சூரியன் “ஏப்பம் விடுகிறது” என்று வருணிக்கின்றனர். இந்த மொத்தையின் எடை பல நூறு கோடி டன் அளவுக்கு இருக்கலாம். இப்போதைய சூரியப் புயலின் போது வாயு மொத்தை டிசம்பர் 28 ஆம் தேதி தூக்கி எறியப்பட்டது.

இந்த வாயு மொத்தை சூரியனிலிருந்து எந்தத் திசையில் வேண்டுமானாலும் வீசப்படலாம். சில சமயங்களில் இது பூமியை நோக்கி வர நேரிடுகிறது. அந்த வாயு மொத்தையின் வேகத்தைப் பொருத்து அது சுமார் மூன்று நாட்களில் பூமியை வந்தடையலாம். அப்போது சூரியனைப் பார்த்தபடி உள்ள பூமிப் பகுதியை  அது தாக்குகிறது.

பூமியைச் சுற்றுகின்ற பல்வேறு செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள், பூமியைச் சுற்றுகின்ற சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவை தாக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது திடீரென ஹைவோல்டேஜ்  மின்சாரம் பாய்வது போன்ற விளைவு உண்டாகிறது. எனவே செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் பழுதடைந்து விடும் என்பதால் வாயு மொத்தை வருகின்ற நேரத்தில் செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன.சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பான அறைகளுக்குள் ஒண்டிக் கொள்கின்றனர்.

தரையில் மின்சார கிரிட் பாதிக்கப்படலாம். குறிப்பாக பூமியின் நடுக்கோட்டுக்கு அப்பால் உள்ள நாடுகளில் இவ்விதம் ஏற்படலாம். 1989 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றித் தவித்தனர்.

1859 ஆம் ஆண்டில் வாயு மொத்தை தாக்குதல் கடுமையாக இருந்தது. அப்போது நாடுகளிடையே தந்திப் போக்குவரத்து மட்டுமே இருந்தது. அப்போது தந்திக் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றியது. தந்தி ஆபரேட்டர்களுக்கு ஷாக் அளிக்கும் அளவுக்கு அது இருந்தது.

CME  விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் நன்கு அறியப்பட்டுள்ளதால் முன்கூட்டி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவ்விதம் CME தாக்குதல் ஏற்பட்டது.

பூமியைச் சுற்றியுள்ள காந்த மண்டலமானது நல்ல தடுப்பு அரணாக விளங்குவதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை.

அரோரா வான் காட்சி
வட தென் துருவப் பகுதிகளில் குறிப்பாக வட துருவப் பகுதியில் சில 

சமயங்களில் அரோரா எனப்படும் கண் கவரும் வான் காட்சி தெரியும். சூரியனிலிருந்து வரும் துகள்களே இதற்குக் காரணம். சூரியப் புயலின் போது இது மிக எடுப்பாகத் தெரியும். அத்துடன்  பூமியின் நடுக் கோட்டுப் பகுதிக்கு அருகே உள்ள நாடுகளிலும் வானில் இக்காட்சி தெரியும்.

சூரியனின் முகத்தில் கரும் புள்ளிகள் படம் நன்றி: நாஸா

சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அண்மையில் உச்சத்தை எட்டியது. இன்னும் சுமார் 5 அல்லது 6 ஆண்டுகளில் இது படிப்படியாகக் குறையும். பிறகு சூரியனில் கரும்புள்ளிகளே இராது.

கரும் புள்ளிகளே  இல்லாத சூரியன்

பின்னர் மறுபடி அதிகரிக்க ஆரம்பித்து உச்சத்தை எட்டும். இவ்விதம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் கரும்புள்ளிகள் உச்சத்தை எட்டுகின்றன. இது உச்சத்தை எட்டும் போது தான் சூரியனில் சீற்றம் உண்டாகிறது. வாயு மொத்தை தூக்கி எறியப்படுகிறது. கரும்புள்ளிகளே இல்லாத காலத்தில் சூரியன் அமைதி காக்கிறது.

1 comment:

Siva said...

Nice information. Keep posting frequently sir

Post a Comment