Jan 16, 2021

ஐராவதம் என்ற சிற்பி - முதல் பகுதி

Share Subscribe
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது. (ராமதுரை, ஐராவதம் மகாதேவன் - இருவரும் 2018-ல் காலமானார்கள்.)

***

தமிழ்க் கல்வெட்டு ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற நிபுணரான திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களை ஒரு சிற்பி என்றும் சொல்லலாம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நுணுக்கமான ஒன்றைப் படைப்பவரை சிற்பி என்று வர்ணித்தல் தகும். திரு. ஐராவதம் அவர்களிடம் மறைந்துநின்ற சிற்பியை நான் தினமணியில் அவருடன் பணியாற்றியபோது கண்டேன்.

திரு.ஐராவதம் மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஐ. ஏ.எஸ் அதிகாரியாக 27 ஆண்டுக்காலம் உயர்ந்த பதவிகளை வகித்தவர். அந்த முறையில் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். சிந்து சமவெளி எழுத்துகள் பற்றி அவர் எழுதிய நூல் உலகப் புகழ் பெற்றது. இது போன்று பல ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றைப் பற்றி எல்லாம் விமரிசிக்க எனக்குத் தகுதி இல்லை என்று கூறுவேன். அவர் தன் நூல்களை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திரு.ஐராவதம் அவர்கள் 1987 முதல் 1991 வரை தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்தார். அப்போது தினமணியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்த எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

தினமணி ஆசிரியராகப் பதவி ஏற்ற சில மாதங்களில் அவர் தமிழில் அறிவியலை வளர்க்க ஏதாவது செய்ய விரும்பினார். அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் தினமணி நாளிதழ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. தினமணி நாளேட்டில் வாரம் ஒரு நாள் அறிவியல் கட்டுரை  வெளியாகும். இந்த அளவில் நிறுத்திக் கொள்ளாமல், (இலவச இணைப்பாக) அறிவியலுக்கென்றே தனி வார இதழைத் தொடங்க விரும்பினார் திரு.ஐராவதம். நான் ஏற்கனவே அறிவியல் நூல்களை எழுதி பரிசு பெற்றவன் என்பதை அறிந்த அவர் என்னை அழைத்து அறிவியல் இதழ் தொடங்குவது பற்றிப் பேசினார்.

திரு.ஐராவதம் எதையும் நன்கு திட்டமிட்டு, விரிவாக விவாதித்து, மிக நுணுக்கமாக கவனித்து, பணியை மேற்கொள்பவர் என்பதை அப்போது நான் கவனித்தேன். சுடர் இதழின் பக்க அமைப்பு எப்படி இருக்க வேண்டும்; அச்சாகும் கட்டுரைகள் மற்றும் அவற்றின் தலைப்புகள் சுடர் இதழில் எந்தவிதமாக அமைய வேண்டும்; ஒவ்வொரு வரிக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி வேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்களில் முதலில் தர அளவுகள் நிர்ணயிக்கப்பட்டன.

தினமணியில் அப்போது அச்சுக் கோர்க்க கம்ப்யூட்டர் முறை வந்து விட்டது என்றாலும் நாங்கள் எழுதிய எதுவும் அச்சுக் கோர்க்கப்பட்டு மெல்லிய ஃபோட்டோ ஃபிலிம் வடிவில் மீண்டும் எங்களிடம் வந்து சேரும். பிறகு ஃபிலிமைத் தனித் தனியே கத்தரித்து கெட்டியான தாளில் ஒட்டி அதை அச்சிடுவதற்கு அனுப்பி வைப்போம். பக்க அமைப்பை முடிவுசெய்து அச்சுக் கோர்க்கப்பட்ட ஃபிலிம்களை ஒட்டும் பணி மூத்த ஓவியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதல் மூன்று அல்லது நான்கு இதழ்களின் தயாரிப்புப் பணி திரு.ஐராவதம் அவர்களின் நேரடி மேற்பார்வையில், அவரது அறையில் நடைபெற்றது. மற்ற பல பணிகளுக்கிடையே இதற்கென அவர் நேரம் ஒதுக்கினார். எல்லாம் சரியான ஏற்பாட்டின் கீழ் வந்து விட்டது என்று அவர் திருப்தி அடைந்த பின்னரே சுடர் தயாரிப்புப் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.



நுனிப்புல் அறிவியல்


அக்காலத்தில் பல பத்திரிகைகளில் நுனிப்புல் அறிவியல் மட்டுமே காணப்பட்டது . உதாரணமாக "உலகில் 1100 வகையான வௌவால்கள் உள்ளன" என்று ஏதாவது ஒரு பக்கத்தில் மூலையில் ஒரு வரி காணப்படும். இரண்டாவது வரி இருக்குமானால் அது வௌவால்கள் இருளில் எவ்விதம் வழி அறிந்து பறக்கின்றன என்பதை விளக்குவதாக இராது. தினமணி சுடர் இப்படியான நுனிப்புல் அறிவியல் இதழாக இருக்கக்கூடாது என்பது ஆரம்பத்திலேயே திரு.ஐராவதம் எடுத்த முடிவுகளில் ஒன்றாகும். ஒரு செய்தியை எடுத்துக் கொண்டால் அது பற்றி மக்களுக்கு எளிய நடையில் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரை வடிவில் விரிவாக எடுத்துக் கூற வேண்டும் என்று முடிவானது.

சுடரின் முதல் சில இதழ்கள் தயாரிக்கப்பட்ட போது, திரு.ஐராவதம் அவர்கள் எவ்விதம் தமது உலகப் புகழ் பெற்ற நூல்களைப் பதிப்பித்தார் என்பது பற்றி நான் அறிந்து கொண்டேன். அவர் எழுதுகிற ஒரு நூல் இறுதி வடிவம் பெற்ற பிறகு அதன் மாதிரிப் பிரதியை (proof) அவரே படிப்பது வழக்கம். நூலின் 25வது பக்கத்தில் ஓர் எழுத்துப் பிழை தென்பட்டால், வேறு ஏதாவது பிழை கண்ணில் படாமல் போயிருக்கலாம் என்ற அடிப்படையில் மறுபடி முதல் பக்கத்திலிருந்து வாசிப்பார். 78வது பக்கத்தில் இன்னொரு பிழையா? மறுபடியும் முதலிலிருந்து வாசிப்பார். இப்படியாகத் தான் சிந்து சமவெளி எழுத்துகள் பற்றிப் பல நூறு பக்கங்கள் அடங்கிய தன் நூலை ஒரு பிழை கூட இல்லாமல் தயாரித்ததாக அவர் ஒரு சமயம் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இது மிகுந்த பிரமிப்பை உண்டாக்கியது. பிழையே இல்லாமல் ஒரு நூலைத் தயாரிக்க இது சிறந்த வழி என்றும் தோன்றியது.

விளம்பரங்கள்


அறிவியல் இதழ் என்பதால் தினமணி சுடரில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதில் சில நியதிகள் இருக்க வேண்டும் என்று திரு.ஐராவதம் அவர்கள் கருதினார். அதனால் மதுபான விளம்பரங்கள், சிகரெட் விளம்பரங்கள் ஆகியவை தினமணி சுடரில் இடம் பெறலாகாது என்று ஆரம்பத்திலேயே அவர் உறுதியான முடிவு எடுத்தார். விளம்பரப் பிரிவினரிடம் இது தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர் மீது வேறு ஒரு தரப்பிலிருந்து நிர்பந்தம் வந்தது. பலவித நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கப்படும் என்பதாகக் கூறிக்கொண்டு "சென்னை வருகிறார்", " திருச்சி வருகிறார்" என்று அறிவிக்கும் "வைத்தியசாலைகளின்" விளம்பரங்களைப் பல பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். தினமணி நாளிதழிலும், அதன் இதர வார இதழ்களிலும், இந்த விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டு. அதே விளம்பரங்கள் அறிவியல் ஏடான தினமணி சுடரில் வெளியாக வேண்டும் என்று "வைத்தியசாலைகள்" மிகவும் விரும்பின. அறிவியல் ஏடான சுடரில் வெளியானால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கும் என்று அவை நினைத்தன. அந்த வகையில் விளம்பரத் துறையினரை அவை நிர்ப்பந்தித்தன. விளம்பரத் துறையினர் ஆசிரியரிடம் இது குறித்துப் பேசிய போது அவர் இத்தகைய விளம்பரங்களுக்கு சுடரில் இடம் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். இந்த விஷயத்தில் ஆசிரியரின் முடிவில் நிர்வாகம் தலையிடவில்லை .

"சயன்டிஃபிக் அமெரிக்கன்" என்ற அமெரிக்க அறிவியல் இதழும், பிரிட்டனிலிருந்து வெளியாகும் " நியூ சயன்டிஸ்ட்" என்ற அறிவியல் வார இதழும் உலகப் பிரசித்தி பெற்றவை. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஒரு சமயம் அவ்விதழ்களின் ஆசிரியர்களை நான் நேரில் சந்தித்த போது அவர்களும் விளம்பரங்களைப் பிரசுரிப்பதில் அறிவியல் இதழ்கள் சில நியதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

கலைச் சொற்கள்


சுடருக்கு பலரும் கட்டுரைகளை எழுதி அனுப்பினர். இவ்விதம் அனுப்பப்படுகின்ற கட்டுரைகள் தமிழில் தான் இருக்க வேண்டும்  என சுடர் இதழில் எடுத்த எடுப்பிலேயே அறிவிக்கப்பட்டது. ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாக்கப்பட்டது. தமிழில் சிந்தித்து தமிழில் எழுதப்படுகிற கட்டுரைகள் மூலம் அறிவியலைப் பரப்புவதுடன் அதன் மூலம் தமிழையும் செழுமையாக்க முடியும் என்பது ஆசிரியரின் கருத்து. 

மேற்படி அறிவிப்பின் பலனாகக் கட்டுரையாளர்கள் அனைவரும் தமிழிலேயே கட்டுரைகளை எழுதி அனுப்பினர். இவ்விதம் அனுப்பப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றை தான் திருத்த வேண்டியிருந்தது. கட்டுரையாளர்கள் சுடரைத் தொடர்ந்து வாசித்ததால் தமிழில் கட்டுரைகள் எவ்விதமாக அமைய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி எழுத ஆரம்பித்தனர்.

எனினும் சுடருக்கு வந்த கட்டுரைகளில் அறிவியல் தொடர்பான கலைச் சொற்கள் விஷயத்தில் ஒவ்வொரு கட்டுரையாளரும் குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்குத் தனக்குச் சரி என்று தோன்றிய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தும் போக்கு காணப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய கலைச் சொற்கள் அப்படியே இருக்க வேண்டுமே தவிர, இதுதான் சரியான தமிழ்ச் சொல் என்று சுடர் நிர்ணயித்து, அச்சொற்களை மாற்ற முற்படலாகாது என்பது திரு. ஐராவதம் அவர்கள் ஆரம்பத்திலேயே எடுத்த மற்றொரு முடிவாகும். ஆகவே கட்டுரைகளில் இடம் பெற்ற கலைச் சொற்கள் மாற்றப்படவில்லை.

தமிழைப் பொருத்தவரையில் அறிவியல் தொடர்பான கலைச் சொற்களில் தர வரைமுறை என்பது இன்னும் முடிவாக உருவாகாத ஒன்றாகும். காலப்போக்கில் இது தானாக உருவாகும். ஆகவே சுடர் இதில் வலியப் போய் தர வரைமுறையை நிர்ணயிக்க முற்பட வேண்டியதில்லை என்று அவர் கூறினார். இப்படிப்பட்ட நிலையை எடுப்பதால் ஒன்றும் கெட்டு விடாது. வெவ்வேறு கட்டுரையாளர்கள் எந்தப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று திரு ஐராவதம் கூறினார். தவிர, பெரும்பாலான கலைச் சொற்களுக்கு சுடரில் நாங்கள் அடைப்புக்குள்ளாக ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்தி வந்தோம். ஆகவே வாசகர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

வெவ்வேறு கட்டுரையாளர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களையும் அவற்றுக்கு ஈடான ஆங்கிலச் சொற்களையும் தொகுத்து வாரா வாரம் சுடர் இதழில் வெளியிடலாமே என்று திரு. ஐராவதம் அவர்கள் யோசனை தெரிவித்தார். இவை "அறிவியல் அகராதி "என்ற தலைப்பில் தனிப் பகுதியாக வெளிவரலாயிற்று. இது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.



அறிவியல் அகராதியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், வானவியல் தொழில்நுட்பம் என அறிவியலின் பல துறைகளையும் சேர்ந்த தமிழ்க் கலைச் சொற்கள் இடம் பெற்று வந்தன. அந்தந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் படிக்க ஆரம்பித்து அறிவியல் அகராதியில் இடம் பெற்ற சொற்களுக்கு மாற்றாக வேறு பல சொற்களைப் பயன்படுத்தலாமே என்று கூறிக் கடிதங்களை எழுதலாயினர். சுடர் எடுத்த நிலைப்பாட்டினால் தமிழில் கலைச் சொல்லாக்கத்துக்கு வழி பிறந்தது என்றும் சொல்லலாம். இப்பகுதியானது நாளா வட்டத்தில் ஏராளமான வாசகர்களை ஈர்க்க ஆரம்பித்தது. குறிப்பிட்ட கலைச் சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தலாமே என்று கூறிய வாசகர்கள் அதற்கான காரணத்தையும் விவரித்தனர். இப்படியான கடிதங்களை வெளியிட "சொல்லாக்க மேடை" என்ற தலைப்பில் தனிப் பகுதி தொடங்கப்பட்டது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என பலரும் சொல்லாக்க மேடைப் பகுதியில் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

தவிர, சுடரில் வெளியான கட்டுரைகளைப் பற்றி அல்லது அக் கட்டுரைகளில் இடம் பெற்ற விஷயங்கள் பற்றி வாசகர்கள் எழுதிய கடிதங்கள் "அறிவியல் மன்றம்" என்ற தலைப்பில் தனிப் பகுதியாக வெளியிடப்பட்டன. இப்பகுதிக்கும் நிறையக் கடிதங்கள் வரலாயின.

சுடர் எந்த அளவுக்கு ஆழ்ந்த விஷய ஞானம் கொண்ட வாசகர்களை ஈர்த்தது என்பதை அறிய எங்களுக்கு இப்பகுதிகள் உதவியாக இருந்தன.




அறிவியல் அகராதியில் வாரா வாரம் பல புதிய சொற்கள் இடம் பெற்றன. காலப் போக்கில் ஏராளமான சொற்கள் சேர்ந்தன. இவற்றைத் தனி அகராதி போன்றே வெளியிடலாம் என்ற அளவுக்குச் சொற்கள் சேர்ந்தன. வாரா வாரம் வெளிவந்த அறிவியல் அகராதி தனியே கத்தரித்து எடுத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இந்த சொற்சேகரத்தின் பிரதி தங்களுக்குக் கிடைக்குமா என்று ஆராய்ச்சி மாணவர்கள் உட்படப் பலரும் சுடரை அணுகினார்கள். சுடரைப் பிரசுரிப்பது நிறுத்தப்பட்டு நானும் தினமணியை விட்டு விலகிய பின்னர் இந்த அறிவியல் அகராதி சேகரம் எங்கு போயிற்று என்பது தெரியவில்லை. அதற்கு ஒரு பிரதி எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டோமே என்பது எனக்கு வருத்தம்.

சுடரில் அறிவியல் தொடர்பாக கேள்வி-பதில் பகுதியும் இடம் பெற்றிருந்தது. இப்பகுதி குறிப்பாக மாணவர்களை மிகவும் ஈர்த்தது. வாசகர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சுடர் பதிலளிக்காமல் அந்தந்த துறையைச் சார்ந்த நிபுணர்களே பதில்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்விகள் வகை பிரிக்கப்பட்டு அந்தந்த துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களது பதில்கள் பெறப்பட்டன. நிபுணர்கள் தங்களது பல்வேறு அலுவல்களுக்கு இடையே சுடர் அனுப்பிய கேள்விகளுக்கு பதில்களை எழுதி அனுப்பினர். இப்பணியை அவர்கள் தமிழில் அறிவியலை வளர்ப்பதில் தங்களது பங்காகக் கருதி ஒத்துழைத்தனர். முடிந்த வரை இப்பகுதியில் படங்களும் சேர்க்கப்பட்டன.




ஆசிரியரின் கட்டுரை


திரு ஐராவதம் அவர்கள் சுடருக்கு கட்டுரைகளை அளித்தது கிடையாது. தினமணி செய்திப் பத்திரிகையைக் கவனிப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. தவிரவும், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தமது பத்திரிகையில் தாமே கட்டுரையைப் பிரசுரிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கருதினார். எனினும், இதற்கு விதிவிலக்காக அறிவியல் கட்டுரை ஒன்றை எழுத வைத்த பெருமை கீழ்க்கண்ட செய்திக்கு உண்டு.

அச்சமயம் சென்னை அருங்காட்சி வளாகத்தில் டைனசார் விலங்கின் ஒரு பெரிய உருவம் வைக்கப்பட்டது. இந்த விலங்கின் உருவம் வைக்கப்பட்டதன் முக்கியத்துவம் பற்றி விவரித்த அதிகாரி ஒருவர் டைனசார் விலங்குகள் பற்றியும் அவற்றின் கற்படிவங்கள் பற்றியும் ஒரு பேட்டியில் தவறான தகவல்களைக் கூறியிருந்தார். இதைப் படித்த திரு ஐராவதம் அவர்கள் வெகுண்டார். அறிவியல் தொடர்பான ஒரு விஷயத்தை மக்களுக்குத் யார் தவறாக எடுத்துக் கூறினாலும் அவருக்குப் பிடிக்காது. ஆகவே மேற்படி செய்தியைப் படித்ததும் அவர் என்னைக் கூப்பிட்டு சுடருக்கு இந்த வாரம் கட்டுரை ஒன்றை எழுத விரும்புகிறேன், இடம் இருக்குமா என்று கேட்டார்.

டைனசார் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் அந்த வகை விலங்குகளின் தோற்றம், மறைவு பற்றி மட்டுமல்லாது உயிரினங்களின் எலும்புகள் எவ்விதம் கற்படிவமாக மாறுகின்றன என்பதும் தெளிவாக விவரிக்கப்பட்டது.




மூட நம்பிக்கைகளைக் களைவது அறிவியல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று திரு. ஐராவதம் மகாதேவன் கருதினார். அந்த வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவ்வப்போது சுடரில் கட்டுரைகள் இடம் பெற்றன. சில கட்டுரைகள் தீவிர சர்ச்சைகளைக் கிளப்பின. நிறைய கடிதங்கள் வந்தன. கண்டனக் கடிதங்களும் சுடரில் "அறிவியல் மன்றம்" பகுதியில் வெளியிடப்பட்டன. அக்கடிதங்களுக்கு திரு ஐராவதமே பதிலளித்தார். அவர் என்றும் சர்ச்சைகளைக் கண்டு அஞ்சியவர் அல்லர். 

1 comment:

Post a Comment