Showing posts with label இணைய தள வதந்தி. Show all posts
Showing posts with label இணைய தள வதந்தி. Show all posts

Aug 20, 2014

வானில் இரண்டு சந்திரன்கள் : வெறும் கட்டுக்கதை

Share Subscribe
உலகில் அவ்வப்போது இணைய தளம் மூலம் புருடாக்கள் கிளம்புவது வழக்கமாகி விட்டது. அவற்றில் ஒன்று   “வானில் இரட்டை சந்திரன்கள்” பற்றிய புருடாவாகும்.

எல்லோருக்கும் வானவியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தான் பலரும் இப்படியான செய்தியை நம்ப முற்படுகிறார்கள்

என்றைக்குமே வானில் ஒரு சந்திரனைத் தான் காண முடியும். இரண்டாவது சந்திரன் தென்பட ஒரு போதும் வாய்ப்பு கிடையாது.

ஆனால் வருகிற 27 ஆம் தேதி இரவு சந்திரனும் அத்துடன் செவ்வாய் கிரகமும் வானில் இரண்டு முழு நிலவு போலக் காட்சி அளிக்கும் என்று  யாரோ கிளப்பிவிட்ட வதந்தியைப் பலரும் நம்பக்கூடும்.
இது இணைய தளங்களில் உலவும் படம். யாரோ வானில் இரண்டு சந்திரன்கள்
தெரிவது போல போலியாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.. பூமி உள்ளளவும் இது போன்று தெரிய சிறிதும் வாய்ப்பு கிடையாது. நன்றி: earthsky.org
சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது செவ்வாய் வெள்ளி, வியாழன் போன்ற கிரகங்களைக் காட்டிலும் அது பூமிக்கு அருகில் உள்ளது. ஆகவே அந்த வகையில் அது இரவு வானில் பெரியதாகத் தெரிகிறது.

செவ்வாய் விஷயம் வேறு. அது பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது எப்போதுமே வானில் சிவந்த நிறத்தில் ஒரு புள்ளியாகத் தான் தெரியும். சில சமயங்களில் சற்று பெரிய ஒளிப் புள்ளியாகத் தெரியும். ஆனால் அது  பௌர்ணமி நிலவு சைஸுக்குத் தெரிய பூமி உள்ளளவும் செவ்வாய் உள்ளளவும் வாய்ப்பே கிடையாது. 

ஆகவே இரவு வானில் சந்திரனும் செவ்வாயும்  இரண்டு பௌர்ணமி நிலவு போலத் தெரியும் என்று கூறுவது பொய். அப்படிக் கூறுவதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை.

ஆகஸ்ட்  27 ஆம் தேதி நீங்கள் இரவு வானை தாராளமாகக் காணலாம். அந்த வகையிலாவது வான் காட்சியை ஒருவர் காண்கிறார் என்றால் அது வரவேற்கத் தக்கதே.ஏனெனில் இப்போதெல்லாம் யாருக்கும் வான் காட்சியைக் காண நேரம் கிடைப்பதில்லை.

இங்கே இன்னொன்றையும் கூறியாக வேண்டும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி சந்திரன் கூடமுழு நிலவு சைஸுக்கு தெரியாது .  சொல்லப்போனால் அன்று இரவு சந்திரனை பார்ப்பதும் கடினமே.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானில் செவ்வாய் கிரகமும்
சனி கிரகமும் இவ்விதமாகத் தான் தெரியும்.படம்:Stellarium
வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி அமாவாசை. அந்த அளவில் 27 ஆம் தேதி என்பது  இரண்டாம் பிறை. மேற்கு வானில் இரண்டாம் பிறை சந்திரனைக் காண்பது மிக அரிது. மூன்றாம் பிறைச் சந்திரனைக்  காண்பது என்பதே அபூர்வம். எல்லோருக்கும் நான்காம் பிறை சந்திரன் தான் எளிதில் கண்ணில் படும்.

27 ஆம் தேதியன்று மாலையில் இரண்டாம் பிறைச் சந்திரன்  சிறிது நேரம் மிக மெல்லியக் கீற்று போல தென்பட்டு விட்டு மாலை 6 மணி 57 நிமிஷத்துக்கு மேற்கு வானில் அஸ்தமித்து விடும். ஆகவே அதற்குப் பிறகு மேற்கு வானில் சந்திரன் தெரியாது.

நீங்கள் இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானைக் கவனித்தால் செவ்வாய் கிரகமும் அதன் அருகே சனி கிரகமும் தெரியும். செவ்வாய் சிறிய ஒளிப்புள்ளியாக சிவந்த நிறத்தில் தெரியும்.

இணைய தள வதந்திகளை நம்பி இரண்டு முழு நிலவுகளைக் காணலாம் என்ற நினைப்பில் மேற்கு வானைக் காண்பவர்கள் ஏமாந்து போனாலும் செவ்வாய், சனி ஆகிய இரு கிரகங்களைப் பார்த்தோம் என்று திருப்தி அடையலாம்.

அன்றைய தினம் இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானைக் காணும் போது செவ்வாய் கிரகம் சுமார் 20 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும். சனி கிரகம் 152 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.

இறுதியாகக் கூறுவதானால் 27 ஆம் தேதியன்று இரண்டு சந்திரன்கள் அல்ல ஒருசந்திரன் கூடத் தெரிய வாய்ப்பில்லை.