Apr 27, 2012

இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ரிசாட்-1

Share Subscribe
இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் பெயர் ரிசாட்- 1 என்பதாகும்(RISAT-1). இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்(PSLV) மூலம் உயரே வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். உலகில் எந்த நாடும் தங்களிடம் வேவு செயற்கைக்கோள் இருப்பதாக அல்லது வேவு செயற்கைக்கோளை செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொள்வதில்லை.

இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும்
பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுகின்றன.
அந்த வகையில் ரிசாட்-1 செயற்கைக்கோளை இந்திய அரசு தொலையுணர்வு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கிற்து. குறிப்பாக பயிர் விளைச்சலை, அதுவும் நெல் விளைச்சலை, மதிப்பிட இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மீடியா இந்த செயற்கைக்கோளை வேவு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கின்றன.

இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பல தொலையுணர்வு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியுள்ளது. இவை அனைத்தும் பூமியை வடக்கு தெற்காகச் சுற்றுபவை. உயரே இப்போது இந்தியாவின் 11 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறான திறன் கொண்ட காமிராக்களைப் பயன்ப்டுத்தி உயரே இருந்து படங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்விதப் படங்களை வெவ்வேறு பணிகளுக்கு இந்தியா பயன்படுத்தி வருகிறது.

கார்ட்டோசாட் 2 இந்தியாவின் தொலையுணர்வு
செயற்கைக்கோள்களில் ஒன்றாகும் (CARTOSAT-2).
இது அந்த செயற்கைக்கோள் எடுத்த படம்.
தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும் வடக்கிலிருந்து தெற்காகப் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 90 நிமிஷம் ஆகும். இப்படி சுற்றுகையில் அந்த செயற்கைக்கோள் இந்தியாவைப் படம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த செயற்கைக்கோள் ஒரு தடவை சுற்றி முடித்து விட்டு அடுத்த ரவுண்ட் வருவதற்குள் அந்த செயற்கைக்கோளுக்கு கீழே அமைந்த நிலப் பிராந்தியம் இந்தியாவாக இருக்க வேண்டுமென்பதில்லை.

இந்தியாவின் ரிசோர்சாட் 1 செயற்கைக்கோள் (Resourcesat-1).
இதுவும் ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோளாகும்.
பூமி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதை மறந்து விடக்கூடாது. ஆகவே அந்த செயறகைக்கோள் மூன்றாவது அல்லது நான்காவது ரவுண்ட் சுற்றும் போது செயற்கைக்கோளின் கீழே இருப்பது ஆப்பிரிக்க கண்டமாகவும் இருக்கலாம். அட்லாண்டிக் கடலாகவும் இருக்கலாம். அமெரிக்காவாகவும் இருக்கலாம்.

வேறு விதமாகச் சொல்வதானால் இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் உலகில் எல்லா நாடுகள் மீதும் பறந்து படங்களை எடுக்கின்றன. பிற நாடுகள் கேட்டால் அவற்றின் மீதாகப் பறக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை இந்தியா உரிய கட்டண அடிப்படையில் அவற்றுக்கு விற்கிறது.

இப்படியாக இந்தியா இப்படங்களை விற்பனை செய்து வருவதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் இந்தியா முன்னணியில் உள்ள நாடு என்றும் கூறலாம். இவ்விதம் உயரே இருந்து எடுக்கும் படங்களை நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த இயலும். எனினும் இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தையும் வேவு செயற்கைக்கோள்கள் என்று வர்ணிக்க முடியாது.

இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் சில குறைபாடுகள் உண்டு. பூமியில் பகலாக இருக்கும் பகுதிகளை மட்டுமே இவற்றினால் படம் எடுக்க இயலும். இரவில் படங்களை எடுக்க இயலாது. தவிர, மேக மூட்டமாக இருந்தால், மழை பெய்தால் தெளிவான படங்கள் கிடைக்காது.

ரிசாட் 2 செயற்கைக்கோள்.
ஆனால் செயற்கைக்கோளில் Synthetic Aperture Radar எனப்படும் மிக நவீன கருவியைப் பொருத்தினால் அது மைக்ரோ வேவ் எனப்படும் அலைகளைக் கீழே அனுப்பி எதிரொலித்து வரும் அலைகளைக் கொண்டு படம் எடுக்கும். இந்த் முறையின் மூலம் இரவிலும் பூமியின் பல்வேறு பகுதிகளை படம் எடுக்க முடியும். மேக மூட்டம் அல்லது பனி மூட்டம் இருந்தாலும் படம் எடுக்கலாம்

நிலத்தில் ராணுவ டாங்கிகள் அல்லது விமானங்கள் மீது இலை தழைகளைப் போட்டு மறைத்திருந்தாலும் அவற்றை ஊடுருவிப் படம் எடுக்க முடியும். சுருங்க்ச் சொன்னால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அவசியமானால் பிற பகுதிகளை வானிலிருந்து கண்காணிக்கும் திறன் இந்த வகை செயற்கைக்கோளுக்கு உண்டு.

ரிசாட் 1 உய்ரே செலுத்தப்படுகிறது.
படம்: நன்றி ISRO
இவ்விதத் திறனுள்ள செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளது. ராடார் மூலம் படம் எடுப்பதால் இவ்வகை செயற்கைக்கோளுக்கு Radar Imaging Satellite என்று பெயர். இதன் சுருக்கமே Risat. இந்தியா உருவாக்கி வந்த இவ்வித ராடார் செயற்கைக்கோளுக்கு ரிசாட் 1 என்றும் பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் படகுகள் மூலம் மும்பையில் வந்திறங்கி கடற்க்ரை ஓரமாக அமைந்த தாஜ் ஓட்டலில் நுழைந்து பலரைக் கொன்றது நினைவிருக்கலாம். வானிலிருந்து இந்தியாவின் கரைகளைக் கண்காணிக்க ரிசாட் 1 செயற்கைக்கோளைத் தயாரித்து முடிக்க மேலும் சில காலம் ஆகும் என்பதால் இஸ்ரேலிடமிருந்து அவசர அடிப்படையில் ரிசாட்  வகை செயற்கைக்கோள் ஒன்று வாங்கப்பட்டு அது 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது.
இந்தியா சொந்தமாக உருவாக்கிய
ரிசாட் 1 செயற்கைகோள்
இந்தியா உருவாக்கும் கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கு ஏற்கெனவே ரிசாட் -1 என்று பெயர் வைக்கப்பட்ட காரணத்தால் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு செயறகைக்கோளுக்கு ரிசாட் -2 என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக ரிசாட் -2 முந்திக்கொள்ள ரிசாட்-1 இப்போது தான் உயரே செலுத்தப்படது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

ரிசாட் 1 செயற்கைக்கோள் மூலம் பல்வகையான அளவுகளில் படம் எடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் படம் எடுக்க முடியும். இந்தியாவின் வடமேற்கு எல்லைகளில் உள்ள பள்ளததாக்குகளில் ஆக்கிரமிப்பாளர் நடமாட்டம் இருந்தால் ரிசாட் 1 படங்கள் அதைக் காட்டிக் கொடுத்து விடும். இந்தியாவைச் சுற்றியுள்ள் கடல்களில் சந்தேகப்படும் வகையில் கப்பல்கள், படகுகள் நடமாடினால் கண்டுபிடித்து விடலாம். ஓரளவில் சப்மரீன்களின் நடமாட்டத்தையும் கண்டுபிடித்து விட முடியும்.

ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் இருந்தால் போதாது. ஆகவே வருகிற நாட்களில் மேலும் பல ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவது நிச்சயம்.

வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவும் ரஷியாவும் நீண்ட காலமாக பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளிலும் ராணுவத் துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே தனி செயற்கைக்கோள்கள் உள்ளன.

அமெரிக்காவில் இப்போது வேவு செயற்கைக்கோள்களை செலுத்தி அவற்றை இயக்குவதற்குத் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அந்த செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களை விற்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அப்படங்களை விற்கலாகாது என அமெரிக்க அரசு தடுக்க முடியும்.

இந்தியாவில் ராணுவத் துறையினர் தங்கள் பயன்பாட்டுக்கென தனி செயற்கைக்கோள்கள் வேண்டும் என கடந்த சில காலமாகக் கோரி வருகின்றனர்.

Apr 24, 2012

அமெரிக்க வானில் அதிசய ஒளி, பயங்கர இடி முழக்கம்

Share Subscribe
அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி ஞாயிறு காலை அபூர்வ அனுபவம் ஏற்பட்டது. அதை பயங்கர அனுபவம் என்றும் கூறலாம். காலை 8 மணி அளவில் வானில் அதிசய ஒளி தென்பட்டது. ஒரு போதும் கண்டிராத ஒளியாக, பெரிய நெருப்பு உருண்டையாகக் காட்சி அளித்தது. அந்த பகல் நேரத்திலும் வீட்டுக்குள் இருந்தவர்களின் நிழல் விழுந்தது. அந்த அளவுக்கு ஒளி பிரகாசமாக இருந்தது.

அந்த ஒளி தோன்றியதைத் தொடர்ந்து இடி முழக்கத்தை மிஞ்சும் சத்தம் - இரண்டு முறை இப்படி நிகழ்ந்தது. வீடுகள் அதிர்ந்தன. குழந்தைகள் பயத்தால் அலறின. வீடுகளில் இருந்தவர்கள் நிலை தடுமாறி சுவர் மீதும் ஜன்னல் மீதும் மோதினர்.

விண்கல் ஒன்று பூமியை நோக்கி
இறங்குவதை விளக்கும் வரைபடம்
கலிபோர்னியா பிராந்தியத்தில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. ஆகவே சிலர் இது நில நடுக்கமோ என்று சந்தேகித்தனர். நில நடுக்கமல்ல என்று பின்னர் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் சுமார் 600 கிலோ மீட்டர் பிராந்தியத்தில் இக்காட்சி தென்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் அளவிலான விண்கல் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பிடித்து வெடித்த போது தான் இப்படியான அதிசய விளைவுகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பலரும் இரவு வானில் எப்போதாவது ’ நட்சத்திரம் விழுவதை’ பார்த்திருக்கிறோம். கலிபோர்னியாவிலும் நெவாடாவிலும் நடந்துள்ளது அது போன்ற, ஆனால் அதை விடப் பெரிய சமாச்சாரம்.

விண்கல் எவ்விதம் நெருப்பு உருண்டையாகக்
காட்சி அளிக்கும் என்பதைக் காட்டும் படம்
பூமி என்ற இந்தப் பெரிய உருண்டை அந்தரத்தில் அமைந்திருப்பதாகச் சொல்லலாம். பூமியைச் சுற்றி அமைந்த விண்வெளியில் தூசு, கடுகு அல்லது மிளகு அளவிலான எண்ணற்ற கற்கள், நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சுப் பழ அளவிலான கற்கள் என பல வகையான கற்கள் எங்கிருந்தோ வந்து ஏதோ ஒரு திசை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில எப்போதாவது பூமியின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கிப் பாய்வது உண்டு.

கடுகு, அல்லது மிளகு அள்விலான கற்கள் சில, காற்று மண்டலத்தில் நுழைந்தால் மேலும் மேலும் வேகத்தில் இறங்கும். அப்போது அவை காற்றை மேலும் அதிக அளவில் அழுத்தும் போது கடுமையான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். இதன் விளைவாக அக்கற்கள் தீப்பிழம்பாகி ஒளி வீசியபடி கீழ் நோக்கிப் பாயும்.அத்துணுக்கு முற்றிலுமாக அழிந்து பொடியாக உதிர்ந்து விடும். இதைத் தான் நாம் ‘நட்சத்திரம் விழுகிறது’ என்கிறோம் (நட்சத்திரம் விழுவதைப் பார்க்க நேர்ந்தால் உடனே பச்சை மரத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள்).

நட்சத்திரங்கள் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவை. அதே சமயம் சூரியனை விடப் பல மடங்கு பெரியவை. அவை பூமியில் வந்து ‘விழ’ என்றுமே வாய்ப்பில்லை. ஒரு நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அந்த நட்சத்திரம் பூமியை வந்து அடைவதற்கு முன்னரே பூமி பொசுங்கி அழிந்து போய் விடும். ஆகவே அடுத்த தடவை வானில் நீங்கள் ஒளிக்கீற்றைக் கண்டால் அது ஒரு சிறிய கல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்த்த்துடன் வெடிக்கும். அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலைகளால் கட்டடங்கள் அதிரும். அத்துடன் ஒளிக்கீற்று பெரிய அளவில் இருக்கும். அந்த பெரிய கல் பல சமயங்களிலும் துண்டு துண்டுகளாகக் கீழே விழுவது உண்டு. அவை சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன்.

இப்படியாக பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் (Meteorite) என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நமீபியா நாட்டில் விழுந்த விண்கல்.
இதன் எடை 60 டன்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மணடலத்தில் ஏற்பட்ட ஏதோ களேபரத்தின் விளைவாகப் பல கிலோ மீட்டர் நீள அகலம் கொண்ட -- மலை அளவிலான -- பிரம்மாண்டமான பாறைகள் பூமி, சந்திரன், புதன், செவ்வாய், வெள்ளி முதலான கிரகங்களைத் தாக்கின. இதன் விளைவாக வட்ட வடிவிலான பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றின. சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவற்றில் இப்பள்ளங்களை இன்றும் காணலாம். பூமியில் ஏற்பட்ட பள்ளங்கள் மழை, காற்று, தாவர வள்ர்ச்சி ஆகியவை காரணமாக இருந்த இடம் தெரியாமல் போயின.

விண்கற்கள் வந்து விழுந்ததால்
சந்திரனில் ஏற்பட்ட பள்ளங்கள்
அதன் பின்னரும் அபூர்வமாக பெரிய பாறை பூமியில் வந்து விழுந்தது உண்டு. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள Barringer Crater என்னும் வட்ட வடிவப் பள்ளம் பெரிய பாறை வந்து விழுந்ததால் ஏற்பட்டதே. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 45 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் வந்து விழுந்ததால் இது தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றன்ர்.

பூமியும் சந்திரனும் இருக்கின்ற இடம் நோக்கி Asteroid எனப்படும் பெரிய பாறைகள் இப்போதும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 18 மீட்டர் நீளம் கொண்ட ஓர் அஸ்டிராய்ட் பூமியை 36 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்தபடி கடந்து சென்றது. வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி 67 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓர் அஸ்டிராய்ட் பூமியை சுமார் 5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். பூமியை பயமுறுத்தக்கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அஸ்டிராய்டுகள் சுமார் 1200 உள்ளன.

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள
வட்ட வடிவப் பள்ளம்
அமெரிக்க நாஸா அமைப்பு இந்த அஸ்டிராய்டுகளின் சுற்றுப்பாதைளைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு அருகில் வருமேயானால் இயற்கை விதிகளின்படி முதலில் அது வெடித்துச் சிதறும். அதன் சிதறல்கள் பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும். ஒரு பெரிய அஸ்டிராய்ட் பூமியின் மீது வந்து மோதுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. பத்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதம் அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் மீது வந்து மோதலாம் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் அஸ்டிராய்ட் வந்து பூமியில் மோதியதன் விளைவாகத்தான் டைனோசார் வகை விலங்குகள் அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைப் பின்புலனாக வைத்துத் தான் ஜுராசிக் பார்க் என்ற ஹாலிவுட் சினிமாப் படம் எடுக்கப்பட்டது.

Apr 23, 2012

அண்டார்டிகாவில் ஒரு சென்சஸ்

Share Subscribe
சென்சஸ் என்றால் அது மனிதர்களை எண்ணுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பறவைகளின் கணக்கெடுப்பும் சென்சஸ் தான். அண்டார்டிகா பனிக் கண்டத்தில் பெங்குவின் பறவைகள் எவ்வளவு உள்ளன என்று அறியும் பொருட்டு சென்சஸ் நடத்தினர்.அங்கு மொத்தம் 6 லட்சம் பெங்குவின்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.

அண்டார்டிகாவில் பெங்குவின் கூட்டம்
இவை எம்பரர் பெங்குவின்(Emperor) எனப்படும் வகையைச் சேர்ந்தவை. பெங்குவின் எண்ணிக்கை நிபுணர்கள் நினைத்ததை விட இரண்டு மடங்கு உள்ளதாம். சிட்டுக்குருவிகள் மறைந்து வரும் நிலையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான். மனித நடமாட்டமில்லாத இடம் என்பதால் பெங்குவின்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சொல்லலாம்.

எம்பரர் பெங்குவின்களை எப்படிக் கணக்கெடுத்தார்கள் - செயற்கைக்கோள் உதவியுடன் தான். இப்படி பல விஷயங்களுக்கும் செயற்கைக்கோள் கைகொடுக்கிறது. விண்வெளியிலிருந்து பார்த்தால் அண்டார்டிகா கண்டம் மொத்தமும் சலவை செய்த வெள்ளைத் துணியை விரித்தது போல இருக்கும். காடு, மரம், செடி, கொடி என எதுவும் கிடையாது.

சுற்றிலும் உறைபனியாக உள்ளதைக் கவனிக்கவும்
பெங்குவின் பறவை தான் என்றாலும் பறக்க முடியாது. எவ்வளவு பறவைகள் உள்ளன என்று கணக்கெடுப்பதற்கு இது சௌகரியமாக இருந்தது. தவிர பெங்குவின்களைப் பார்த்தால் கால் வரை வெள்ளை நிற அங்கி அணிந்து கருப்பு நிறக் கோட்டு போட்டு நிற்பது போல இருக்கும். பெங்குவின்களை அடையாளம் காண இது நன்கு உதவியது.

அண்டார்டிகா கண்டத்தில் எம்பரர் பெங்குவின் போன்ற சைஸில் வேறு விலங்குகள் கிடையாது. அதுவும் கணக்கெடுப்புக்கு உதவும் அம்சமாக இருந்தது.

பெங்குவின்கள் கூட்டம் கூட்டமாகத் தான் இருக்கும். ஒரு கூட்டத்தில் பல நூறு பெங்குவின்கள் இருக்கலாம்.முதலில் எவ்வள்வு கூட்டங்கள் உள்ளன என்று கணக்கெடுத்தனர். அடுத்து ஒரு கூட்டத்தில் எவ்வளவு என்று கணக்கிட்டனர்.

எம்பரர பென்குவின்கள் விலங்குகள்தான். ஆனால் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் சம பொறுப்பு உண்டு என்பதை அவை உலகுக்குப் பறை சாற்றுபவையாக உள்ளன.

தெருக்கோடியில் உள்ள கடையில் போய் அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு சீக்கிரம் வருகிறேன். அதுவரை குழந்தையை பாத்துக்குங்க என்று சொல்லிக் கிளம்பும் மனைவியிடம், ”இதோ பாரு,குழந்தையைப் பார்த்துகறது என் வேலையில்ல” என்று சொல்கின்ற கணவன்மார்கள் எம்பரர் பெங்குவின்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

தந்தையின் மடியில் பெங்குவின் குஞ்சுகள்
அண்டார்டிகாவில் 6 மாதம் பகல். 6 மாதம் இரவு. எப்போதுமே பெண் பெங்குவின்கள் மார்ச் மாதம் வாக்கில் - இரவுக் காலம் தொடங்கும் போது தான் - முட்டையிடும். அக்காலகட்டத்தில் அண்டார்டிகாவில் குளிர் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு இருக்கும். அக்கடும் குளிரில் முட்டை தரையில் விழுந்தால் கெட்டுவிடும். குஞ்சு பொரியாது.

ஆகவே பெண் பெங்குவின் மிக ஜாக்கிரதையாக முட்டையை மிக அருகே நிற்கின்ற ஆண் பெங்குவினின், அதாவது தனது கணவனி,ன் பாதங்களுக்கு மாற்றும். உடனே பெண் பெங்குவின் உணவு சேகரித்து வருவதற்காகக் கடலை நோக்கிக் கிளம்பிவிடும். தன் பாதங்களில் வைக்கப்பட்ட முட்டையை ஆண் பெங்குவின் தனது வயிற்றுப் பகுதியில் உள்ள தோலினால் போர்த்தும். இந்த ஏற்பாடு முட்டைக்கு நல்ல கதகதப்பை அளிக்கும். அப்போதிலிருந்து ஆண் பெங்குவின் அந்த முட்டையை அடைகாக்கத் தொடங்கும்.

பெண் பெங்குவின்களின் கடலை நோக்கிய பயணம் எளிதானது அல்ல. சுமார் 100 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். பெங்குவின்கள் எல்லாமே இரண்டு கால்களால் விசித்திரமாக நடை போடும். கடல் பகுதிக்குப் போய்ச் சேர பல வாரங்கள் பிடிக்கும்.

எல்லா பெண் பெங்குவின்களும் கூட்டமாகக் கடலை நோக்கிக் கிளம்பிய பின்னர் அந்த இருளில் கடும் குளிரில் ஆண் பெங்குவின்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்ட நிலையில் கூட்டமாக அன்ன ஆகாரம் இன்றி முட்டைகளை அடைகாத்தபடி அப்படியே நிற்கும். சுமார் ஒன்பது வார காலம் இவ்விதம் நிற்ப்தால் அவை பாதியாக இளைத்து விடும். ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி நிற்பதால் பரஸ்பர உடல் சூடு காரணமாக அனைத்துக்கும் சற்றே கதகதப்பு கிடைக்கும். கூட்டத்தின் நடுப் பகுதியில் நின்றால் நல்ல கதகதப்பு. ஆகவே நடுவே வந்து நிற்க அனைத்துக்கும் சான்ஸ் கிடைக்கும்.

கடைக்கு அரிசி வாங்கப் போகின்ற குடும்பத் தலைவி மாதிரி கடலை நோக்கிச் செல்லும் பெண் பெங்குவின்கள் அனைத்தும் கடலில் இறங்கி குழந்தைகளுக்கும் சேர்த்து வயிறு முட்ட இரை தின்னும். பின்னர் இவை அனைத்தும் திரும்பி வந்து சேரும் சமயத்தில் குஞ்சுகள் பொரிந்து விடும்.

பெங்குவின்கள் நடக்கும் விதம் மிக அலாதியானது
பெண் பென்குவின்கள் திரும்பி வருவதற்குள் குஞ்சு வெளியே வந்து விட்டால் அப்பா பெங்குவின் தனது உணவுக் குழலிலிருந்து ஜீரணமான உணவு போன்ற ஒரு பொருளை வெளியெ கொண்டு வந்து குஞ்சுக்கு ஊட்டும். தக்க நேரத்தில் தாய் பெங்குவின்கள் வந்து சேர்ந்து விட்டால் குஞ்சுகளுக்கு இரைக்குப் பஞ்சமில்லை. தாய் பெங்குவின்கள் தங்களது வயிற்றுக்குள் சேர்த்து வைத்துள்ள உணவை குஞ்சுகளுக்கு ஊட்டும்.

பெண் பெங்குவின்கள் வந்து சேர்ந்த பின்னர் அதுவரை பட்டினி கிடந்த ஆண் பெங்குவின்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள கடலை நோக்கிக் கிளம்பும். குஞ்சுகள் சற்று வளர்ந்ததும் அவையும் தாய்மார்களுடன் கடலை நோக்கிக் கிளம்பும். இதற்குள் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து 6 மாத பகல் காலம் தொடங்கி விடும்.

வெள்ளை அங்கியும் கருப்புக் கோட்டும்
அணிந்தது போல...
எம்பரர் பெங்குவின்கள் ஏன் கடலுக்கு அருகில் கூட்டம் சேர்ந்து நிற்பதற்குப் பதில் கடலிலிருந்து மிகவும் தள்ளி அமைந்த இடத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன? அண்டார்டிகாவில் குளிர் காலத்தில் கடும் காற்று வீசும். மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் போது நுண்ணிய பனிக்கட்டித் துகள்கள் உடலில் ஊசி குத்துவது போலத் தாக்கும். அண்டார்டிகாவின் உள் பகுதிகளில் முகடுகள் உண்டு. இவை காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். ஆகவே தான் பெங்குவின்கள் கடும் காற்று குறைவாக உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

எம்பரர் பெங்குவின்களை விலங்குக் காட்சிசாலைகளில் வளர்ப்பது மிகவும் கடினம். கடும் குளிர்ச்சியை உண்டாக்குவதில் பிரச்சினைகள் அதிகம். ஆனாலும் உலகில் சில விலங்குக் காட்சிசாலைகளில் பெரும்பாடு பட்டு பெங்குவின்களை வளர்க்கின்றனர்.

பெங்குவின்கள் பற்றி நிறையப் புத்தகங்கள் உள்ளன. டாகுமெண்டரி சினிமாப் படங்கள் உள்ளன. ஹாலிவுட் படங்களும் உள்ளன.

Apr 20, 2012

முதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி

Share Subscribe
இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை முதல் சோதனையிலேயே சிறந்த வெற்றி கண்டுள்ளது. வியாழன் காலையில் ஒடிசா மானிலத்திலுள்ள ஏவுகணைத் தளத்திலிருந்து கிளம்பிய இந்த ஏவுகணை 5000 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இந்துமாக் கடலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தது. இந்த ஏவுகணை பல அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது.  இப்போதைய சோதனையில் அணுகுண்டுகளுக்குப் பதில் ஒரு டன் எடை அளவுக்கு சாதாரண குண்டுகள் சுமந்து செல்லப்பட்டன.

அக்னி 5 (Agni) ஏவுகணை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவினால் சீனாவின் வட கோடியில் உள்ள நகரங்களையும் தாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவின் எந்தப் பகுதியும் இந்தியாவின் இந்த ஏவுகணையிலிருந்து தப்ப முடியாது.

அக்னி 5 ஏவுகணை உயரே செலுத்தப்படுகிறது
சீனாவைத் தாக்குவதற்காக அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது என்றாலும் நம்மால் சீனாவின் எந்தப் பகுதியையும் அணுகுண்டு வீசித் தாக்க முடியும் என்பதால் நம்மைத் தாக்க சீனா துணியாது. அந்த அளவில் இது நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

அக்னி 5 ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் உள்ள நாடுகள், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ல நாடுகள் ஆகியவை அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் வளையத்துக்குள் வரும். ஆகவே தான் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என வர்ணிக்கப்படுகிறது.

அணிவகுப்பில் அக்னி 5 ஏவுகணை மாடல்
சீனாவிடம் பல வகையான ஏவுகணைகள் உள்ளன. 5000 கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை, 10 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்க வல்ல ஏவுகணை ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த இரண்டும் அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவையே. இது வரை நாம் சீனாவை விடப் பின் தங்கியிருந்தோம். இப்போது சம நிலையை எட்டியிருக்கிறோம் எனலாம். சீனாவின் 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஏவுகணை பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. சீனா அந்த ஏவுகணையை அமெரிக்காவை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளது.

இந்தியாவும் வருகிற நாட்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு செல்லும் ஏவுகணையை உருவாக்கலாம். ஆனால் இது விஷயத்தில் நமக்கு அவசர அவசியம் எதுவுமில்லை.

இந்தியாவின் அடுத்த திட்டம் அணு ஆயுத ஏவுகணைகளுடன் கூடிய சப்மரீனை உருவாக்குவதே. இந்தியா ஏற்கெனவே அரிஹந்த் என்னும் பெயர் கொண்ட அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. இது அடுத்து பல சோதனைப் பயணங்களுக்கு உள்ளாக்கப்படும். இதில் கே-4 எனப்படும் ஏவுகணைகள் இடம் பெறும். இவை 3000 முதல் 5000 கிலோ மீட்டர் தொலைவு பறந்து செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும். இவற்றின் முகப்பிலும் பல அணுகுண்டுகளை வைத்துச் செலுத்த முடியும். இந்திய கடற்படையில் அரிஹந்த இடம் பெறக் குறைந்தது ஓராண்டு ஆகலாம்.

அரிஹ்ந்த ரகத்தில் மேலும் மூன்று சப்மரீன்கள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தியால் இயங்கும் சப்மரீன் ஒன்று கடலுக்கு வெளியே தலை நீட்டாமல் பல மாத காலம் கடலுக்குள் மூழ்கியபடி உலகின் கடல்களில் பயணித்துக் கொண்டிருக்க முடியும்.

விமானங்களில் அணுகுண்டுகளை எடுத்துச் சென்று வீசும் திறன், ஏவுகணை முகப்பில் அணுகுண்டுகளை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்க வல்ல அணுஆயுத ஏவுகணைகளை அணுசக்தி சப்மரீன்களிலிருந்து செலுத்தும் திறன் ஆகிய இந்த மூன்று திறன்களும் இருந்தால் அது அணுஆயுத முத்திறன் (Nuclear Triad) எனப்படுகிறது. இப்போது அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளிடம் மட்டுமே இத்திறன் உள்ளது. இந்தியாவின் அணுசக்தி சப்மரீன்கள் முற்றிலுமாக தயாரான பிறகு இந்தியாவும் முத்திறனைப் பெற்றதாக விளங்கும்.

Apr 16, 2012

மிதக்கும் பனி மலைகள்

Share Subscribe
உருகிய நிலையில் இருக்கும் இரும்புக் குழம்பில் ஒரு இரும்புக் கட்டியைப் போட்டால் அது மூழ்கி விடும். உருகிய நிலையில் உள்ள வெள்ளிக் குழம்பில் ஒரு வெள்ளிக் கட்டியைப் போட்டாலும் அது மூழ்கி விடும். அதாவது திரவ வடிவில் உள்ள ஒரு பொருளில் திட வடிவிலான அதே பொருளைப் போட்டால் மூழ்கி விடும். திட வடிவில் அடர்த்தி அதிகம் என்பதே அதற்குக் காரணம்.

ஐஸ் கட்டி இதற்கு விதி விலக்கு. தண்ணீரில் ஐஸ் கட்டியைப் போட்டால் ஐஸ் கட்டி மிதக்கும். திட வடிவிலான தண்ணீரின் --- ஐஸ் கட்டியின் -- அடர்த்தி குறைவு என்பது அதற்குக் காரணம். தண்ணீரின் இந்த விசேஷக் குணம் காரணமாக ஒரு பிரபல கப்பல் கடலில் மூழ்கியது. அக்கப்பலின் பெயர் டைடானிக்.

டைடானிக் கப்பல்.
கட்டி முடிக்கப்பட்டு அமெரிக்கா கிளம்புவதற்கு முன்.
டைடானிக் என்ற பெயர் பலருக்கும் நன்கு பரிச்சயமானது. டைடானிக் கப்பல் மூழ்கியதை பின்னணியாக வைத்து ஹாலிவுட் சினிமாப் படம் வெளிவந்துள்ளது. அது தமிழிலும் ட்ப் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. டைடானிக் பற்றி நிறைய புத்தகங்களும் வந்துள்ளன.

டைடானிக் கப்பல் கடலில் மூழ்கிய தேதி ஏப்ரல்14 1912. அக்கப்பல் மூழ்கி நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட்ன. இதைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று உலகில் பல இடங்க்ளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டைடானிக் கட்டி முடிக்கப்பட்ட போது அது மூழ்க வாய்ப்பில்லாத கப்பல் என வர்ணிக்கப்பட்டது. எந்த ஒரு கப்பலானாலும் உயிர் காப்புப் படகுகள் பக்கவாட்டில் இணைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும். கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்டு அது மூழ்க ஆரம்பித்தால் பயணிகளும் மாலுமிகளும் இப்படகுகளில் ஏறிக் கொண்டு உயிர் தப்புவர். மூழ்காத கப்பல் என்று கருதப்பட்டதால் டைடானிக் கப்பலில் குறைவான உயிர் காப்புப் படகுகளே எடுத்துச் செல்லப்பட்டன.

ஆர்டிக் வட்டாரத்தில் மிதக்கும் பனி மலை
டைடானிக் மூழ்கிய தினத்தன்று இரவு சுமார் 11 மணி வாக்கில் ’ஐயோ மிதக்கும் பனி மலை” என்று சில மாலுமிகள் அலறினர். மிதக்கும் பனி மலை என்பது ஒரு கப்பலுக்கு எமன் மாதிரி. மிதக்கும் பனி மலை மீது கப்பல் மோதினால் அதோகதி தான். ஆகவே கப்பலை திசை திருப்ப முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. மிதக்கும் பனி மலை (Iceberg)  கப்பலின் வலது புறத்தில் மோதி கப்பலில் பெரும் ஓட்டைகளை உண்டாக்கியது. சுமார் 700 பேர் படகுகளில் தப்பினர், 1500 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஒரு தம்ளர் தண்ணீரில் ஐஸ் கட்டித் துண்டுகளைப் போட்டால் மிதப்பதைப் போலவே பிரம்மாண்டமான பனிப்பாளங்கள் கடல் நீரில் மிதக்கக்கூடியவை. இவற்றைத் தான் மிதக்கும் பனி மலைகள் என்கிறார்கள். மிதக்கும் பனி மலை ஒன்று பல நூறு மீட்டர் நீள அகலம் கொண்டதாக பல அடுக்கு மாடிக் கட்டடம் அளவுக்கு உயரம் கொண்டதாக இருக்க முடியும்.

இப்படியான பிரம்மாண்டமான பனி மலை கடல் நீரில் மிதக்கும் போது அதன் பெரும் பகுதி நீருக்குள் அமிழ்ந்திருக்கும். சிறு பகுதி மட்டும் நீருக்கு வெளியே தெரியும். இதை வைத்துத் தான் the tip of the iceberg  என்ற சொற்றொடர் உருவாகியது.

மிதக்கும் பனி மலையின் பெரும் பகுதி
நீருக்குள் அமிழ்ந்திருப்பதைக் காண்க
தென் துருவ அண்டார்டிக் பகுதியிலும் வட துருவ ஆர்டிக் பகுதியிலும் ஏராளமான அளவுக்கு கெட்டியான உறை பனி உள்ளது. வட துருவம் அருகே உள்ள கிரீன்லாந்து கிட்டத்தட்ட உறைந்து போன பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம் இதே போல பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டமாகும். கிரீன்லாந்து அண்டார்டிகா ஆகிய இரு இடங்களிலும் ஆண்டு தோறும் மேலும் மேலும் பனிக்கட்டி சேரும் போது விளிம்புப் பகுதிகளின் அடிப்புறத்தில் உள்ள பனிக்கட்டிகள் பிதுக்கப்பட்டு கடலில் விழும்.

அண்டார்டிக் வட்டாரத்து மிதக்கும் பனி மலை
இப்படிக் கடலில் விழும் பனிக்கட்டிகள் மிதக்க ஆரம்பிக்கும். காற்று காரணமாகவும், கடல் பகுதியில் உள்ள நீரோட்டம் காரணமாகவும் இந்த மிதக்கும் பனிமலைகள் அங்கிருந்து டூர் கிளம்ப ஆரம்பிக்கும். வட துருவப் பகுதியில் தோன்றும் பனி மலைகள் தெற்கு நோக்கி மிதந்து வரும். அதே போல அண்டார்டிகாவில் தோன்றும் பனி மலைகள் வடக்கு நோக்கி பயணிக்கும். இந்த இரு பகுதிகளிலும் கடல் நீரே ஐஸ் கட்டி அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே அவை உடனே உருகி விடுவதில்லை. கிரீன்லாந்திலிருந்து தெற்கு நோக்கி வரும் மிதக்கும் பனி மலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரியனின் வெப்பம் பட்டு உருக ஆரம்பிக்கும்.

கனடாவின் கிழக்குக் கரைக்கு அப்பால், மிதக்கும் பனி மலைகளின் நடமாட்டம் நிறையவே உண்டு. அட்லாண்டிக் கடலின் இப்பகுதியானது கப்பல் போக்குவரத்து நிறைந்தது. அமெரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே செல்லும் கப்பல்கள் இந்த வழியாகத் தான் செல்கின்றன.டைடானிக் கப்பல் இங்கிலாந்திலிருந்து கிளமபி அமெரிக்கா வந்து கொண்டிருந்த போது தான் மிதக்கும் பனி மலை மீது மோதி கடலில் மூழ்கியது.

சுவர் மீது புல்டோசர் மோதினால் சுவர் இடியும். அதே புல்டோசர் ஒரு பெரிய பாறை மீது மோதினால் புல்டோசர் சேதமடையும். கப்பலும் மிதக்கும் பனி மலையும் மோதினால் கப்பல் தான் மூழ்கும். டைடானிக் மூழ்கிய சம்பவம் அப்போது உலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து பனி மலைகள் நடமாட்டம் பற்றி கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான ஏற்பாடு உருவாகியது.

டைடானிக் மூழ்கிய காலத்தில் ராடார் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைவில் மிதக்கும் பனி மலைகள் வருவதை ராடார் மூலம் கண்டுபிடித்து விட முடியும். இப்போது எல்லாக் கப்பல்களிலும் ராடார்கள் உண்டு.

இப்போது மிதக்கும் பனி மலைகள் நடமாடும் பகுதிகளை விமான மூலம் கண்காணிக்கின்றனர். செயற்கைக்கோள்கள் மூலமும் கண்காணிக்கின்றனர்.
வட அட்லாண்டிக் கடலிலும் சரி, அண்டார்டிகாவை அடுத்த கடல் பகுதியிலும் சரி, மிதக்கும் பனி மலைகளின் நடமாட்டம் இப்போது குறைந்து விடவில்லை. கப்பல்களை எச்சரிக்கின்ற ஏற்பாடு உள்ளதால் டைடானிக் கப்பலுக்கு நேர்ந்தது போன்ற விபத்து நடைபெற இப்போது வாய்ப்பு இல்லை.

இரு பனி மலைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் ஒரு கப்பல்
அப்படியும் கூட அபூர்வமாக சிறிய கப்பலகள் மீது மிதக்கும் பனி மலைகள் மோதும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. அண்டார்டிகா பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கான சுமார் 100 பயணிகளுடன் சென்ற ஒரு சுற்றுலா பயணிக் கப்பல் 2007 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவுக்குத் தெற்கே அண்டார்டிகா அருகில் மிதக்கும் பனி மலை மீது மோதியது. அக்கபபலில் இருந்த மீட்புப் படகுகளில் ஏறிக்கொண்டு அனைவரும் உயிர் தப்பினர். இது மாதிரி ஓரிரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மிதக்கும் பனி மலை என்பது உப்பு இல்லாத சுத்தமான தண்ணீராகும். எனவே அண்டார்டிகாவிலிருந்து பெரிய பெரிய மிதக்கும் பனி மலைகளை இழுந்து வர முடிந்தால் பல கோடி லிட்டர் குடி நீர் கிடைக்கும். சவூதி அரேபியா ஒரு கட்டத்தில் இது பற்றி ஆராய்ந்தது. மிதக்கும் பனி மலைகளில் அடங்கிய தண்ணீர் எளிதில் உருகி விடாமல் பார்த்துக் கொள்வதற்கான் ஏற்பாடுகளும் ஆராயப்பட்டன. ஆனால் இது நடைமுறை சாத்தியமல்ல என்று தெரிய வந்த போது இத்திட்டம் கைவிடப்பட்டது. மிதக்கும் பனி மலைகள் பூமியின் நடுக்கோட்டை (Equator) நோக்கி வருகையில் வெயில் பட்டு முற்றிலுமாக உருகிவிடும். ஆகவே தான் உலகில் கப்பல்கள் நடமாடும் பெரும்பாலான பகுதிகளில் மிதக்கும் பனி மலைகள் காணப்ப்டுவதில்லை.

ஐஸ் கட்டி ஏன் நீரில் மிதக்கிறது என்பது பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். தண்ணீரானது மேலும் மேலும் குளிர்ச்சியாகித் திட வடிவைப் பெறும் போது முதலில் சுருங்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது சுருங்குவதற்குப் பதில் விரிவடைகிறது. அப்படி விரிவடையும் போது அடர்த்தி குறைவதால் மிதக்கிறது.

Apr 15, 2012

பூகம்பங்கள் அதிகரித்து வருகிறதா?

Share Subscribe
ஏப்ரல் 11 -- சுமத்ரா தீவுக்கு மேற்கே கடும் பூகம்பம் -- ரிக்டர் 8.6
ஏப்ரல் 11 -- அதே இடத்தில் மீண்டும் பூகம்பம் -- ரிக்டர் 8.2
ஏப்ரல் 11 -- மெக்சிகோ அருகே பூகம்பம் -- ரிக்டர் 6.5

ஏப்ரல் 12 -- கலிபோர்னியா வளைகுடா பூகம்பம் -- ரிக்டர் 6.2
ஏப்ரல் 12 -- அதே கலிபோர்னியா வளைகுடா மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 6.9

ஏப்ரல் 13 -- இத்தாலியில் பூகம்பம் -- ரிக்டர் 4.7
ஏப்ரல் 13 -- ஜப்பானில் ஹான்ஷூ தீவுக்குக் கிழக்கே பூகம்பம் -- ரிக்டர் 5

ஏப்ரல் 14 -- இந்தியாவில் குஜராத்தில் பூகம்பம் ரிக்டர் -- 4.1
ஏப்ரல் 14 -- இந்தியாவில் மகாராஷ்டிர மானிலத்தில் பூகம்பம் -- ரிக்டர் 5
ஏப்ரல் 14 -- அதே மகாராஷ்டிர மானிலத்தில் மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 4

மேலே உள்ள பட்டியலைப் பார்வையிட்டால் உலகில் திடீரென பூகமபங்கள் அதிகரித்து வருவதாக எண்ணத் தோன்றும். அத்துடன் மனதில் ஓர் அச்சமும் ஏற்படும்.

மாயா காலண்டர், சாயா காலண்டர் என எதையெல்லாமோ ‘ஆதாரம்’ காட்டி 2012 டிசம்பர் கடைசியில் பூமி அழியப் போகிறது என்று உலக அளவில் பீதி கிளப்பி வரும் கும்பல்கள் வாயை மெல்ல ஆரம்பித்து விட்டனர். ’இவையெல்லாம் நாங்கள் சொன்னபடி நடக்கப் போவதைக் காட்டுகின்றன’ என்று பேச ஆரம்பித்துள்ள்னர்.

ஆனால் உண்மை நிலைமை வேறு. உலகில் பூகம்பம் அல்லது நில நடுக்கம் இல்லாத நாளே கிடையாது. சொல்லப்போனால தினமும் சராசரியாக 50 பூகம்பங்கள் நிகழ்கின்றன (ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை) .

உலகில் எங்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை அமெரிக்க புவியியல் சர்வே அமைப்பு (U.S Geological Survey) பதிவு செய்கிறது. சுருக்கமாக USGS  என்று குறிப்பிடப்படும் இந்த அமைப்பின் தகவல்களின்படி ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் பூகம்பங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை. ரிக்டர் அளவில் 4-க்கும் குறைவாக உள்ள பூகம்பங்களையும் சேர்த்தால் ஓராண்டில் 15 லட்சம் பூகம்பங்கள் நிகழ்கின்றன.

ஓரிடத்தில் ரிக்டர் அளவில் 3-க்கும் குறைவான நில் நடுக்கம் ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது தெரியாம்லேயே போகலாம். ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமான நில நடுக்கங்களே நன்கு உணரப்படும்.

ரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கு அதிக அளவில் உள்ள பூகம்பமே மிகக் கடுமையானது. அவ்விதமான கடும் பூகம்பம் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு நிகழலாம். அதிசயமாக 2007 ஆம் ஆண்டில் நான்கு கடும் பூகம்பங்கள். இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்குள்ளாக இரண்டு நிகழ்ந்துள்ளன. எனினும் பொதுவில் கூறுவதானால் பூகம்பங்கள் இப்போது திடீரென அதிகரித்துள்ளதாகக் கருத இடமில்லை.

உலகில் நிகழும் பூகம்பங்களுக்கும் சூரியனில் காணப்படும் கரும் புள்ளிகளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கொள்கை உள்ளது. அதாவது சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது. கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் போது பூமியில் பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர்.ஆனால் அவ்விதம் கருத அறிவியல் ரீதியில் ஆதாரம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்ற்னர்.

Apr 11, 2012

தமிழகத்தில் நில நடுக்கம்: மக்கள் பீதி

Share Subscribe
சென்னை உட்ப்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவிலும் பின்னர் 4 மணி அளவிலும் கடும் நில நடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். சென்னையில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் கீழே ஓடி வந்த பின்னர் திரும்ப மேலே செல்லத் தயங்கினர். பூகம்பம், அதாவது நில நடுக்கம், என்பது தமிழகத்தில் அபூர்வமானதே. ஆகவே தான் இந்த பீதி.

இந்த பூகம்பம் சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நிகழ்ந்தது. ரிக்டர் ஸ்கேல்(Richter) அளவில் 8.6 புள்ளி இருந்தது. அதாவது அது கடும் பூகம்பம். பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் தமிழகத்தையும் எட்டியதால்தான் தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தினமும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி, ஜப்பான், நியூசீலந்து போன்ற பகுதிகளில் நில நடுக்கங்கள் மிக சகஜம். பல நில அதிர்வுகள் ஓரிரு வினாடிகளே நீடிக்கும். பழகிப் போன காரணத்தால் மக்கள் அலட்டிக் கொள்ளாமல் தங்களது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பர். ஆனால் ரிக்டர் ஸ்கேல் அளவில் 8 என்பதான பூகம்பம் சராசரியாக ஓராண்டில் ஒரு முறை தான் நிகழ்வதாகும்.

அப்படியான பூகம்பத்தின் அதிர்ச்சி மிகத் தொலைவில் உள்ள பகுதிகளிலும் உணரப்படும். ஒரு லாரியிலிருந்து சிமெண்ட் மூட்டையைக் கீழே தூக்கிப் போட்டால் நிலத்தில் லேசாக அதிர்ச்சி ஏற்படும். அதே ஒரு கிரேனிலிருந்து விழுந்தால் 100 மீட்டர் தொலைவிலும் அந்த அதிர்ச்சி உணரப்படும். பூகம்ப விஷயத்திலும் இது பொருந்தும்.

ஆகவே தான் புதன்கிழமையன்று சுமத்ரா தீவுக்கு மேற்கே இரண்டு தடவை ரிக்டர் ஸ்கேலில் 8 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்ட போது அது சுமார் 2700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழகத்திலும் உணரப்பட்டது. ஆனால் சுமத்ரா அருகே அதே இடத்தில் ரிக்டர் ஸ்கேலில் 5 அளவுக்குத் தொடர்ந்து பல தடவை பூகம்பம் ஏற்பட்ட போதெல்லாம் அது சென்னையில் உணரப்படவில்லை.

இந்த ரிக்டர் ஸ்கேல் அளவில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ரிக்டர் ஸ்கேலில் 5 என்பதற்கும் 6 என்பதற்கும் வித்தியாசம் எண்ணிக்கை அளவில் ஒன்று தான் வித்தியாசம். ஆனால் ரிக்டர் ஸ்கேலில் 6 அளவிலான பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 5 அளவிலான பூகம்பத்தை விட 10 மடங்கு கடுமையானது.
ரிக்டர் ஸ்கேலில் 4 எனப்படும் பூகம்பத்தை விட ரிக்டர் 8 அளவிலான பூகம்பம் பத்தாயிரம் மடங்கு கடுமையானது. அந்த வகையில் பார்க்கும் போது 2004 டிசம்பரில் ஏற்பட்ட கடலடி பூகம்ப்ம் ( ரிக்டர் அளவில் 9.3) இப்போதைய பூகம்பத்தை விட சுமார் 10 மடங்கு கடுமையானதே.

2004 ஆம் ஆண்டில் கடலடி பூகம்பமும் சுனாமியும்
தோன்றிய இடம் (சிவப்பு வட்டம்). இப்போதைய
கடலடி பூகம்பம் இந்த இடத்துக்கு
சற்று மேற்கே நிகழ்ந்துள்ளது.
இப்போதைய கடலடி பூகம்பத்தைத் தொடர்ந்து ஒரு வேளை சுனாமி தாக்குதல் ஏற்படலாமோ என்ற அச்சத்தில் அது பற்றி தமிழகக் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் மாலையில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடலடி பூகம்பம் ஏற்படும் போதெல்லாம் சுனாமி தாக்குதல் ஏற்பட்டாக வேண்டும் என்ற அவசியமில்லை. தவிர, இப்போதைய பூகம்பமானது கடல் தரைக்கு அடியில் பிரம்மாண்ட பாளங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்டதே என்று உலக அளவில் பூகம்பங்களைக் கண்காணித்து வருகின்ற அமெரிக்க USGS  அமைப்பு விளக்கம் கூறியது.

2004 ஆம் ஆண்டில் சுனாமி பற்றி முன்கூட்டி எச்சரிப்பதற்கான ஏற்பாடு இல்லாத காரணத்தால் தமிழகக் கரையோர மாவட்டங்களில் பல ஆயிரம் பேர் உயிரிழந்தன்ர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் சென்னை நகரில் புதன் மாலையில் சுனாமி வருவதை நேரடியாகக் ஆகக் காணும் ஆசையில் ஏராளமானவர்கள் கடற்கரையில் திரண்டனர். சுனாமி அலைகளின் வேகமும் அதன் தாக்குதல் சக்தியும் யாராலும் எதிர்கொண்டு நிற்க முடியாத அளவிலானவை. மக்களின் மடமை கண்டு வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாகப் பல இடங்களில் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதாக தமிழ் டிவி சேனல்களில் தெரிவிக்க்கப்பட்டது. நல்ல வேளையாகக் கட்டடம் எதுவ்ம் இடிந்து விழுந்ததாகத் தகவல் இல்லை.

பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை. கட்டடங்கள்தான் மனிதனைக் கொல்கின்றன என்று சொல்வதுண்டு. அது உண்மையே. பூகம்ப ஆபத்து எப்போதும் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் எண்ணற்ற அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. இவையெல்லாம் பூகம்பத்தைத் தாங்கி நிற்குமாறு தகுந்த விதிமுறைகளின் படி கட்டப்பட்டவை

1989 ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோ வட்டாரத்தில் லோமா பிரிட்டா என்னுமிடத்தில் பூகம்பம் (ரிக்டர் ஸ்கேலில் 6.9) ஏற்பட்ட போது சான்பிரான்சிஸ்கோ நகரில் 30 மாடி 40 மாடிக் கட்டடங்களின் உச்சிப் பகுதிகள் இப்படியும் அப்படியுமாக ஆடின. ஆனால் இடிந்து விழவில்லை. இந்த பூகம்பத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இத்துடன் ஒப்பிட்டால் 2001 ஜனவரியில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ( ரிக்டர் அளவில் 7.7) சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலோர் கட்டடங்கள் இடிந்ததால் அவற்றின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களே.

நமது நாட்டில் கட்டடங்களைக் கட்டுவதில் விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. இனிமேலாவது இது விஷயத்தில் கண்டிப்பு காட்டப்பட வேண்டும்.

காண்க:
பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?
சில்லுகள் போர்த்திய பூமி

Apr 4, 2012

சப்மரீன்களில் இரட்டைச் சுவர்

Share Subscribe
சப்மரீன் (Submarine) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அது உடனே கடலுக்குள் மூழ்கிறது. ஒத்திகை பார்ப்பது போல அவர் சற்று நேரம் கழித்து இன்னொரு பொத்தானை அழுத்துகிறார். உடனே சப்மரீன் மேலே வந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

சப்மரீன் என்பது நன்கு மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் மாதிரி. ஒரு காலி பாட்டிலை நீரில் போட்டால் அது மிதக்கும். மூடப்பட்ட அந்த பாட்டிலுக்குள் காற்று உள்ளது என்பதே அதற்குக் காரணம். சில இரும்புத் துண்டுகளை அந்த பாட்டிலுடன் சேர்த்துக் கட்டி நீருக்குள் போட்டால் பாட்டில் மூழ்கி விடும்.

ஆனால் சப்மரீனின் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்தியதும் சப்மரீன் --எடை எதுவும் சேர்க்கப்படாமல் -- எப்படி நீருக்குள் மூழ்கியது? அவர் எடை சேர்க்கத் தான் செய்தார். அதாவது சப்மரீனின் எடையை அதிகரிக்க கடல் நீரே பயன்படுத்தப்படுகிறது.

மிதக்கும் நிலையில் சப்மரீன்
நீங்கள் ஓர் அலுவலகத்தில் கண்ணாடியால் ஆன தடுப்பின் மறுபுறம் நிற்கிறீர்கள். இப்போது அந்தத் தடுப்புக்கு சில செண்டி மீட்டர் அருகே இன்னொரு கண்ணாடித் தடுப்பை அமைக்கலாம். இரு புறங்களையும் அடைத்து விட்டு இந்த இரு தடுப்புகளுக்கும் நடுவே தண்ணீரை ஊற்றுவதாக வைத்துக் கொள்வோம். சமரீன் இவ்விதமாகத் தான் இரட்டைச் சுவர்களால் ஆனது. இந்த இரட்டைச் சுவர்களின் நடுவே கடல் நீர் புகும்படி செய்தால் சப்மரீனின் எடை கூடும். நாம் சுவர் என்று குறிப்பிட்டாலும் சப்மரீனின் இரு சுவர்களும் வலுவான உருக்குத் தகடுகளால் ஆனவை.
நீரில் மிதக்கும் நிலையில் சப்மரீன் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
1. வெளிப்புறச் சுவர் 2. உட்புற்ச் சுவர்
3. காற்று வெளியே செல்வதற்கான வால்வுகள்
4. கடல் நீர் உள்ளே செல்வதற்கான திறப்பு.
நடுவே உள்ள பகுதி யந்திரங்கள் மற்றும் மாலுமிகளுக்கானது.
சப்மரீனின் வெளிப்புறச் சுவரில் வால்வுகள் உள்ளன. கேப்டன் பொத்தானை அழுத்தியதும் வால்வுகள் திறந்து கொள்கின்றன. மேற்புறத்திலுள்ள வால்வுகளின் வழியே காற்று வெளியேறுகிறது. அதே சமயத்தில் அடிப்புற வால்வு வழியே கடல் நீர் உள்ளே செல்கிறது. இதன் விளைவாக சப்மரீனின் எடை அதிகரித்து அது நீருக்குள் இறங்கும்.

இரட்டைச் சுவர்களுக்கு நடுவே முழுவதுமாக நீரை நிரப்புவதா, அரை வாசி நிரப்புவதா, முக்கால் வாசி நிரப்புவதா என்பதற்கெல்லாம் கணக்கு உள்ளது. சப்மரீன் இறங்க வேண்டிய ஆழத்துக்கு ஏற்ப நீர் நிரப்பப்படுகிறது. வால்வுகள் மூடப்படுகின்றன.
நீரில் மூழ்கிய நிலையில் சப்மரீனில் இரண்டு சுவர்களுக்கு இடையே
கடல் நீர் உள்ளதைக் கவனிக்கவும்
சப்மரீன் எப்படி மறுபடி மேலே வருவது? சப்மரீனுக்குள் மிகுந்த அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்ட தொட்டிகள் உள்ளன. கேப்டன் அடுத்த பொத்தானை அழுத்தும் போது சக்தி மிக்க பம்புகள் செயல்படும். அதன் விளைவாகக் இக்காற்று சப்மரீனின் இரட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ள கடல் நீரை வெளியேற்றும். இரட்டைச் சுவர் பகுதி காலியானதும் வால்வுகள் மூடப்பட்டு சப்மரீன் மறுபடி மேலே வந்து விடும்.

சப்மரீன்களின் நோக்கம் கடலுக்குள் எட்டு கிலோ மீட்டர் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்குச் செல்வதல்ல. அந்த கடல் பிராந்தியத்தில் நடமாடக்கூடிய எதிரிக் கப்பல்கள், விமானங்கள் கண்ணில் படாமல் இருந்தால் போதும். ஆகவே சப்மரீன்கள் கடலுக்கு அடியில் சில நூறு மீட்டர ஆழத்துக்கு கீழே இறக்குவதில்லை. அப்படி செய்யவும் முடியாது.

நீருக்குள் மூழ்கிய நிலையில் சப்மரீன்
கடலுக்கு அடியில் சுமார் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்மூழ்கு கலங்கள் பற்றி முந்தைய பதிவில் கவனித்தோம். அவ்வகைக் கலங்களில் நீருக்குள் மூழ்க இரும்பு உருண்டைகள் அல்லது இரும்பு வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனித்தோம்.

இதற்குப் பதில் சப்மரீனில் செய்வது போல இரட்டைச் சுவர்களை அமைத்து கடல் நீரையே எடையாகப் பயன்படுத்த இயலாது. அதற்குக் காரணம் உண்டு. எட்டு கிலோ மீட்டர் அல்லது பதினோரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் பயங்கரமான அளவுக்கு இருக்கும் .உள்ளே நுழைகின்ற நீரை வெளியேற்றுகின்ற அளவுக்குத் திறன் படைத்த பம்புகளை மனிதனால் ஒருபோதும் உருவாக்க இயலாது.

சப்மரீன்களின் பின்புறத்தில் சுழலிகள் உண்டு. அந்த சுழலிகளின் உதவியால் சப்மரீன் நீருக்குள்ளாக எந்த இடத்துக்கும் செல்ல இயலும். சப்மரீனில் உள்ள சுழலிகள் உட்பட அனைத்தும் பாட்டரிகள் மூலம் இயங்குபவை. இந்த பாட்டரிகள் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். ஆகவே சப்மரீனில் டீசலினால் இயங்கும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் உண்டு. இக்காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல்--எலக்ட்ரிக் சபமரீன்கள் என வர்ணிக்கப்படுவதுண்டு.
சப்மரீனின் பின்புறத்தில் சுழலிகள் உள்ளதைக் கவனிக்கவும்
நீர்ப்பரப்பின் மேல் மிதக்கின்ற நிலையில் டீசல் ஜெனரேட்டர்கள் இயங்கும். நீருக்குள் இறங்கியதும் எல்லாமே பாட்டரிகள் மூலம் தான் இயங்கும். நீருக்குள் இருக்கின்ற நிலையில் ஒரு சப்மரீன் எவ்வித சத்தத்தையும் எழுப்பலாகாது. அப்படி சத்தம் எழுப்பினால் அது தான் இருக்கின்ற இடத்தைத் தானே காட்டிக்கொடுத்து விடுவதாக ஆகிவிடும். அதன் விளைவாக அது எதிரி சப்மரீனால் தாக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது. ஒரு சப்மரீன் இருக்கின்ற இடம் வெளியே தெரியக்கூடாது என்பது தான் சப்மரீன் இயக்கத்தின் முதல் விதியாகும்.

தவிரவும், நீருக்குள்ளாக இருக்கும் போது டீசல் எஞ்சினை இயக்குவதானால் அவை இயங்க ஆக்சிஜன் (காற்று) தேவை. டீசல் எஞ்சின்கள் வெளியிடும் புகையை நீருக்கு மேலே வெளியேற்ற ஏற்பாடு தேவை. தவிர்க்க முடியாத சமயங்களில் ஒரு சப்மரீன் சில அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்படும். அப்போது வெளிக் காற்று உள்ளே நுழைவதற்கு ஒரு குழாயும், டீசல் புகை வெளியேற ஒரு குழாயும் பொருத்தப்பட்டிருக்கும். இவை நீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்களிலும் டார்பிடோ(torpedo), ஏவுகணை முதலான ஆயுதங்கள் இருக்கும். எனினும் இவ்வகை சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல முடியாது .தவிர, அதிக ஆழத்துக்கும் செல்ல இயலாது. மிஞ்சிப் போனால சுமார் 300 அடி ஆழம் வரை செல்லும்.

சப்மரீன் ஒன்றின் உட்புறத்தில் டீசல் எஞ்சின்கள்
பாட்டரிகளை இயக்க டீசலை ஒரு அளவுக்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது. அந்த அளவில் பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் எல்லையோரக் கடல்களில் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவை.

டீசல், பாட்டரி என எதுவும் தேவையில்லாமல் அணுசக்தியால் இயங்குகின்ற சப்மரீன்கள் உள்ளன. அணுசக்தி சப்மரீன் ஒன்று மாதக் கணக்கில் நீருக்குள்ளிருந்து வெளியே தலைகாட்டாமல் உலகின் கடல்கள் அனைத்திலும் சுற்றி வரலாம். வல்லரசு நாடுகளிடம் மட்டுமே உள்ள இவை பிரும்மாஸ்திரங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன.

Apr 1, 2012

ஆழ்கடலுக்குள் இறங்குவது எப்படி?

Share Subscribe
பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் மார்ச் 26 ஆம் தேதி(2012) விசேஷ நீர்மூழ்கு கலததில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடு எனப்படும் கடலடிப் பகுதிக்குச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கு கடலின் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். உலகின் கடல்களில் அதுவே மிக ஆழமான இடம்.

மனித வரலாற்றில் இதற்கு முன்னர் 1960 ஆம் ஆண்டில் கடல் ஆராய்ச்சியாளர், ஜாக் பிக்கா, அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ஆகிய இருவரும் ட்ரீயஸ்ட்(Trieste) என்னும் நீர்மூழ்குகலம் மூலம் சேலஞ்சர் மடுவுக்குச் சென்றனர். இப்போது கேமரான் மூன்றாவது நபராகச் சென்றுள்ளார்.

ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் கடலுக்குள் இறக்கப்படுகிறது.
மேற்புறம் பெரிய வடிவில் இருப்பது பெட்ரோல் டாங்க்.
அதன் அடிப்புறத்தில் உள்ள கோளத்துக்குள் தான்
இருவர் அமர்ந்திருந்தனர்.
முன்னர் பிக்கா பயன்படுத்திய ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் வடிவில் பெரியது. அதன் நீளம் 60 அடி. ஆனால் கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேலஞ்சர் (Deepsea Challenger) எனப்படும் நீர்மூழ்கு கலத்தின் நீளம் 24 அடி. கடந்த 50 ஆண்டுக்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப முன்னேற்றத்தை இது காட்டுகிறது. ட்ரீயஸ்ட், டீப்சீ சேலஞ்சர் ஆகிய இரண்டும் கடலில் மிக ஆழத்தில் இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

கடலில் மேலும் மேலும் ஆழத்தில் இறங்கும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். சேலஞ்சர் மடுவில் கடலடித் தரையில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு இருக்கும். தகுந்தபடி வடிவமைக்கப்படாவிட்டால் அது அப்பளம் போல நொறுங்கி விடும். கடலடித் தரையில் நீரின் அழுத்தம் மிக அதிகம் என்பதால் நீர்மூழ்கு கலத்திலிருந்து  வெளியே வருவது என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத விஷயம்.

நீர்மூழ்கு கலங்கள் கடலுக்குள் இறங்குவதைப் பொருத்த வரையில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள அதே முறை தான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. கரையையொட்டி ஆழம் குறைந்த கடல் பகுதியில் முத்தெடுப்பதற்காக உள்ளே இறங்குபவர்கள் கடந்த காலத்தில் இடுப்பில் பெரிய கல்லைக் கட்டிக் கொள்வர். முத்துச் சிப்பிகளைச் சேகரித்த பின்னர் கல்லைத் தூர எறிந்து விடுவர் பின்னர் மேலே வந்து சேருவர். கல்லைக் கட்டிக்கொண்டால் கல்லின் எடை காரணமாக எளிதில் உள்ளே இறங்க முடியும்.

ஜாக் பிக்காவின் ட்ரீயெஸ்ட், கேமரானின் டீப்சீ சேலஞ்சர் கலம் ஆகிய இரண்டிலும் அடிப்படையில் இதே முறை தான் பயன்படுத்தப்பட்டது. அதாவது உள்ளே இறங்குவதற்கு அக்கலங்களில் எடை சேர்க்கப்பட்டது.

கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேல்ஞ்சர் கலம்.
இது கடலுக்குள் செங்குத்தாகத்தான் இறங்கியது
ட்ரீயெஸ்ட் எடை மிக்கது எனபதுடன் வடிவிலும் பெரியது என்பதால் அது 9 டன் அளவுக்கு உருக்கு (இரும்பு) உருண்டைகளை ஏற்றிச் சென்றது. இந்த எடை காரணமாகவே அது நீருக்குள் மிக ஆழத்துக்கு -- சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கியது. கேமரான் பயன்படுத்திய நீர்மூழ்கு கலத்தில் சுமார் 500 கிலோ எடைக்கு இரும்பு வில்லைகள் ஏற்றிச் செல்லப்பட்டன.

நீங்கள் ஒரு மரத் துண்டை தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டால் அது மிதக்கும். ஆனால் அந்த மரத்துண்டுடன் ஒரு சிறிய கல்லைக் கட்டி வாளியில் போட்டால் மரத்துண்டு அடி மட்டத்துக்குப் போய்ச் சேரும். மரத்துண்டுடன் இணைந்த கல் தனியே அகன்று விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அந்த மரத்துண்டு மேலே வந்து மிதக்க ஆரம்பித்து விடும்.

இந்த இரு நீர்மூழ்கு கலங்களிலும் கடலுக்குள் இறங்குவதற்கோ அல்லது கடலடிக்குச் சென்ற பின்னர் மேலே வருவதற்கோ எஞ்சின் எதுவும் கிடையாது. ஆகவே தான் எடை சேர்க்க வேண்டியுள்ளது. சரி, இவை கடலடியில் பணியை முடித்த பின்னர் மேலே வருவது எப்படி?

சேலஞ்சர் மடுவிலிருந்து மேலே வந்தவுடன்
கேமரான் பேட்டி அளிக்கிறார்
ட்ரீயஸ்ட் கலத்தைப் பொருத்தவரை அதன் மேற்புறத்தில் நீர் புகாத பெரிய தொட்டி இணைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் 85 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த்து. பெட்ரோல் நீரை விட லேசானது. சேலஞ்சர் மடுவுக்குச் சென்ற பின்னர் பணி முடிந்து ட்ரீயஸ்ட் மேலே வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டதும் பெட்ரோல் டாங்கின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த இரும்பு உருண்டைகள் வெளியேற்றப்பட்டன. இதனால் டிரீயஸ்டின் எடை குறைந்தது. அத்தனை இரும்பு உருண்டைகளும் வெளியேற்றப்பட்ட பின்னர் பெட்ரோல் டாங்க் காரணமாக டிரீயஸ்ட் மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

கேமரானின் டீப்சீ சேலஞ்சர் நீழ்மூழ்கு கலம் மேலே வருவது என்று முடிவு செய்யப்பட்டவுடன் அதில் இருந்த இரும்பு வில்லைகள் இதே போல வெளியேற்றப்பட்டன. அந்த நீர்மூழ்குக் கலம் கெட்டியான விசேஷ நுரைப் பொருளால் ஆனது. அது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. ஆகவே இரும்புத் வில்லைகள் வெளியேற்றப்பட்டதும் அது மரத்துண்டு போல மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

டீப்சீ சேலஞ்சர் நீர்மூழ்கு கலத்தின் இன்னொரு தோற்றம்
நீர்மூழ்கு கலத்திலிருந்து இரும்பு வில்லைகள் வெளியே தள்ளப்படுகின்ற ஏற்பாடு செயல்படாமல் போனால் அவ்வளவு தான். ஆகவே கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் மாற்று ஏற்பாடு ஒன்று இருந்தது. ஒரு வித மின் முறையில் உலோகங்களை பொடிப்படியாக உதிரவைத்து விட முடியும். இந்த முறையின் கீழ் 500 கிலோ இரும்புத் வில்லைகளையும் இப்படிப் பொடியாக வெளியேற்றி விட முடியும். ஆனால் இதற்கு 11 மணி நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் மேலே வந்து விட முடியும் என்ற உத்தரவாதம் உண்டு. வேறு வித ஏற்பாடுகளும் உள்ளன.

கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் தனி ஏற்பாடாக மின்சார மோட்டார் இருந்தது.   கடலடித் தரையை அடைந்த பின்னர் அதை சற்று முன்னே செலுத்தவும் பக்கவாட்டில் திரும்பச் செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் செயல்படுவதற்காகவே மின்சார மோட்டார். ட்ரீயஸ்ட் கலத்துடன் ஒப்பிட்டால் டீப்சீ சேலஞ்சர் மிக நவீனமானது என்பதில் ஐயமில்லை.

டைட்டானிக் உட்ப்ட பல பிரபல சினிமாப் படங்களை எடுத்தவரான ஜேம்ஸ் கேமரான் கேமராவைப் பயன்படுத்தி ஜாலவித்தை செய்ப்வர். டீப்சீ சேலஞ்சர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது . அந்த அளவில் அதன் வெளிப்புறத்தில் பல கேமராக்களும் மின்சார பாட்டரிகளால் இயங்கும் சக்திமிக்க மின் விளக்குகளும் உள்ள்ன. இவை கடலுக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவுபவை. ஒரு விமரிசகர் கூறுகையில் டீப்சீ சேலஞ்சரில் ஒரு டிவி ஸ்டுடியோவே அடங்கியுள்ளது என்றார்.

பொதுவில் நீர்மூழ்கு கலங்களால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு செல்ல முடியாது.கடலுக்குள் இறங்குவதானால் இவை ஒரு கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் குறிப்பிட்ட இடத்தில் கிரேன் மூலம்  இறக்கப்படும். அதே போல பணி முடிந்து மேலே வந்ததும் மறுபடி கப்பலில் ஏற்றப்படும். தவிர, நீர்மூழ்கு கலம் மறுபடி கடலுக்குள் இறங்குவதானால் புதிதாக இரும்பு வில்லைகள் நிரப்பப்பட வேண்டும்.

ஜேம்ஸ் கேமரான் போலவே ரிச்சர்ட் பிரான்சன் என்ற மற்றொரு கோடீஸ்வரர் ஆழ் கடலுக்குச் செல்ல நீர்மூழ்குக் கலம் ஒன்றை உருவாக்கி வருகிறார் (படம் கீழே). பிரான்சன் வசதி படைத்தவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விண்வெளி வாகனம் ஒன்றை உருவாக்கி வருபவர். ஆழ் கடல் மீதும் அவர் கண் வைத்துள்ளார. சேலஞ்சர் மடுவை எட்டிப் பிடிப்பதிலான போட்டியில் கேமரான், பிரான்சனை முந்திக் கொண்டு விட்டதாகவும் கூறலாம்.

இது கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் பயன்படுத்த
இருக்கும் நீர்மூழ்கு கலம். இதில் விமானத்துக்கு
உள்ளது போன்ற இறக்கைகள் உண்டு.
Courtesy: Virgin Oceanic
இவர்களுடைய நீர்மூழ்கு கலங்களுடன் ஒப்பிட்டால் சப்மரீன்கள், அதுவும் போர்ப் படைகளில் இடம் பெற்றுள்ள சப்மரீன்கள், நினைத்த மாத்திரத்தில் கடலுக்குள் இறங்குபவை. தேவையான போது மேலே வரக்கூடியவை. சப்மரீன்கள் கடலுக்குள் இறங்குவதற்கு இரும்புத் துண்டு அல்லது இரும்பு உருண்டைகள் தேவையில்லை. மிதக்கும் நிலையிலிருந்து நீருக்குள் இறங்கவும் மறுபடி மேலே வரவும் சப்மரீன்களில் வேறு வித உத்தி கையாளப்படுகிறது. அது பற்றி வேறு பதிவில் காண்போம்.

காண்க: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்