Thursday, January 26

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

நுனோ கோம்ஸ்
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.

ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318  மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.

ஸ்குபா அணிந்து நீச்சல்
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.

விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.

தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது.  இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.

உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.

கடல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது

1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. டிரீயஸ்டி என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.

டிரீயஸ்டி நீர் மூழ்கு கலம். அடிப்புறத்தில் அமைந்த
கோளத்தில் தான் இருவரும் இருந்தனர்
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.

சிவப்பு வட்டம் - பசிபிக் கடலில்
மரியானா அகழி அமைந்த இடம்
கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்.

7 வாசகர் கருத்துகள்.:

கார்த்தி said...

ஆச்சர்யமான தகவல்..

NAGARAJAN said...

அக்காலத்தில், கடலில் மூழ்கி முத்து எடுத்தார்களே, எப்படி?
முத்து கடலின் நீர் மட்டத்திற்கு கீழே மிதந்து கொண்டிருக்குமா?
விளக்கவும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

அக்காலத்தில் உடலுடன் எடையை(கற்களை)கட்டிக் கொண்டு கடலுக்குள் இறங்குவர்.சுவாசக் கருவி கிடையாது. தம் கட்டிக் கொண்டு அதாவது மூச்சை அடக்கிக் கொண்டு உள்ளே இறங்குவர். அந்த நாளிலேயே இப்ப்டி தம் கட்டி உள்ளே இறங்குவதில் பயிற்சி உண்டு.
கரையோரக் கடல்களில் ஆழம் குறைவு. சுமார் 400 அல்லது 500 அடி வரை இறங்கலாம்.இவ்விதம் கடலுக்குள் இறங்குகிறவர்களால் ( நல்ல பயிற்சி இருந்தால்) தாராளமாக ஒன்பது நிமிஷ்ம் வரை மூச்சை அடக்கி இருக்க முடியும். இப்போதும் சரி இவ்விதம் மூச்சை அடக்கிக் கொண்டு கடலில் -- நீரில் -- இறங்குவதில் போட்டிகள் நடததப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமன்றி அந்த நாட்களில் பல வெளி நாடுகளிலும் இவ்விதம் கடலில் இறங்கி முத்து எடுத்திருக்கிறார்கள்

ராஜரத்தினம் said...

அப்ப subsea சொல்லி crude oil எப்படி drill போடுகிறார்கள்!

என்.ராமதுரை / N.Ramadurai said...

ராஜரத்தினம்
கரையோரக் கடலில் தான் crude எண்ணெய் ஊற்றுகள் நிறைய இருக்கின்றன்.முன்பெல்லாம் க்டலில் 400 அடி அல்லது 600 அடி ஆழத்தில் கடலடித் தரையில் துளையிட்டு குழாய்களை இறக்கி எண்ணெய் எடுத்து வந்தனர். இப்போது சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்திலும் கடலடித் தரையில் துளையிடுகின்றனர்.கடலடித் த்ரையில் செயல்படுபவை எல்லாம் தானியங்கி கருவிகளும் யந்திரங்களுமே.Remotely operated vehicles (ROV)எனப்படும் ராட்சத யந்திரங்களைக் கொண்டு பல பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து இயக்கப்படுபவை.

Anonymous said...

கடலின் உங்கள் தளத்தை தினமும் படிக்கிறேன் அறிவியல் கட்டுரைகள் எளிய தமிழில் அருமையாக எழுதுகீரிர்கள் வாழ்த்துக்கள் ஆழத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தெரியும் அவற்றின் வாழ்கை முறை எப்படி காற்று,வெளிச்சம்,உணவு பற்றி தெரிவிக்கவும் நன்றி

சலாவுதீன் பஹ்ரைன்

SIV said...

உங்கள் வலைத்தளம் சிறப்பாக உள்ளது. நிறைய தகவல்களை எளிமையான தமிழில் வழங்குகிறீர்கள்

Post a Comment