Dec 25, 2012

வியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா?

Share Subscribe
பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள்  பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக  எந்த இடத்தில்   எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது.

இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும்.
டிசம்பர் 25 ஆம் தேதி அஸ்தமித்ததும் கிழக்கு வானில் வியாழனும் சந்திரனும்
இவ்விதமாகத் தெரியும்   
இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத் தோப்பில் நின்றால் எந்த மரம் அருகே உள்ளது, எது தொலைவில் உள்ளது என்று எளிதில் அறிய முடியும். விண்வெளியில் அது சாத்தியமில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. வியாழன் கிரகத்தைப் பிரும்மாண்டமான பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதன் உள்ளே 1400 பூமியைப் போட்டு அடைக்கலாம. வியாழன் அவ்வளவு பெரியது.
பூமியை விட வியாழன் மிக மிகப் பெரியது . படம் நாஸா 
வானில் நீங்கள் பார்க்கும் போது சந்திரன் பெரியதாகவும் வியாழன் சிறிய ஒளிப்புள்ளியாகவும் தெரிகிறது. சந்திரன் அன்றைய தினம் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் இருக்கும். அருகில் இருப்பதால் வடிவில் பெரிதாகத் தெரிகிற்து..ஆனாலும் பௌர்ணமியன்று தெரியக்கூடிய  அளவுக்கு இராது. .( 28 ஆம் தேதி தான் பௌர்ணமி)

அன்றையத் தேதியில் வியாழன் கிரகம் பூமியிலிருந்து 60 கோடியே 90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆகவே தான் அது பிரும்மாண்டமான கிரகமாக இருந்தாலும் வடிவில் சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது,

மேலே உள்ள படத்தில் சந்திரனுக்கு அடியில் சிறிய நட்சத்திரம் உள்ளதைக் காணலாம். அது தான் ரோகிணி ( Aldebaran ) நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது.  ரோகிணி நட்சத்திரம்  பூமியிலிருந்து சுமார் 65 ஒளியாண்டு தொலைவில் உள்ளது ( ஓர் ஒளியாண்டு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர். அதை 65 ஆல் பெருக்கினால் வருகிற தொகையே ரோகிணி நட்சத்திரம் இருக்கின்ற தூரம்.).
சந்திரன், வியாழன், ரோகிணி ஆகிய மூன்றும் அருகருகே இருப்பது போலத் தோன்றினாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன Pic. Not to Scale
 வானில் நீங்கள் வியாழன் கிரகத்தைக் காணும் போது அதற்கு மேலே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் உள்ளதைப் பார்க்கலாம்.. உற்று நோக்கினால் இது தென்படும். இந்த நட்சத்திரக் கூட்டம் பூமியிலிருந்து சுமார் 440 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.இந்த நட்சத்திரக்கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளதாகச் சொல்வார்கள். ஏழாவது நட்சத்திரத்தையும் காண முடியும்.உண்மையில்  இந்த  நட்சத்திரக் கூட்டத்தில் பல நூறு நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.

 நீங்கள்  புதன்கிழமை மாலை பார்த்தாலும் வியாழன் வானில் அதே இடத்தில் இருக்கும். ஆனால் சந்திரன் இடம் மாறி விடும். பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன.ஆகவே   வானவியலின்படி வியாழன் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும். வியாழன் இப்போது ரிஷப ராசியில் உள்ளது. அடுத்து அது வானவியலின்படி  மிதுன ராசிக்கு மாறும்.அதாவது வானில் அது இடம் மாறும். அதையே ஜோசியர்கள்   குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.. ஆனால் ரோகிணி நட்சத்திரம் இடம் மாறாது. அதே போலவே கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் இடம் பெயராது.  நட்சத்திரங்கள் இடம் மாறுவது கிடையாது. ரோகிணி என்றும் ரிஷப ராசியிலேயே இருந்து வரும்.


Dec 16, 2012

பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்

Share Subscribe
பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.

 உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை

பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை.

உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள்  வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.

ஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.

உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.

மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக  எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக  வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது.  எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும்  டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.

தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன்  தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக்  கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர்  சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது

.
ஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.

 உலகம் எப்படி அழியப் போகிறதாம்?  நிபிரு என்ற ஒரு கிரகம்  பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது  எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது
.
பூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு  நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

சூரிய மண்டலத்துக்குள்ளாகப்  பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள்  இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன

 உதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன

எந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.

ஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.

நிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி  என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு  கிரகம் இது வரை ஏன்  தட்டுப்படவில்லை? நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.

அமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை

பூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.

சூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது

இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection  (CME) எனப்படுவதாகும்.

கடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து   பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள்,  நிலத்துக்கு  அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

சூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. இப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.

 சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.

பூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999,  என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால்  எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

 இப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.

சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.

சீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.

சீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.

பூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி  நிலவலாம்.

.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என  நாஸா உட்பட யார்  சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற  டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது

(Update: ஜ்னவரி முதல் தேதி 2013--  பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.
     எனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்)

 (குறிப்பு:  இந்த வலைப் பதிவுக்கு Link  கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில்  அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)

Dec 12, 2012

இந்த வாரம் இரவு வானில் ஒளி மழை

Share Subscribe
இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி  இரவில்  வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது.

சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில்  ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம்.
வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது  வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky 
ஆண்டில் குறிப்பிட்ட  சமயத்தில் இரவு வானில்  மணிக்குப் பல நூறு துணுக்குகள் வீதம் இப்படி  நெருப்புப் பொறிகளாகக் கீழே இறங்கினால் அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மாதம் மேற்படி இரு தேதிகளில் வானில் இக்காட்சியைக் காணலாம். வானவியலார் இதற்கு ஜெமினைட் ஒளிமழை (Geminid Meteor Shower ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தத் துணுக்குகள் எங்கிருந்து வந்தன?  சாலை வழியே வலை போட்டு மூடாமல் குப்பை லாரி போனால் அந்த லாரியிலிருந்து வழி நெடுக குப்பை கீழே விழுந்தபடி செல்லும். அல்லது மணல் லாரி போனால் வழி நெடுக மணல் சிந்திக் கிடக்கும்

இந்த மாதிரியில் ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்வதறகாக வரும் போதும் சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் வெளிப்படும். ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற  பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி இருக்கும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.

பூமியானது சூரியனைச் சுற்றி  வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும். அப்போது இந்த்த் துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும். அப்போது இந்த ஒளிமழை நிகழும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளிமழை (Perseid Meteor Shower )  நிகழும். அதே போல  நவம்பரில் Leonid Meteor Shower  நிகழும். டிசம்பர் மத்தி வாக்கில் ஜெமினைட் ஒளிமழை.தோன்றும். இந்த மாத மத்தியில்  இது காணப்படும் என்றாலும் 13 ஆம் 14 ஆம் தேதிகளில் தான் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினைட் ஒளிமழைக்குக் காரணமாகக் கருதப்படும் பேயிதான் அஸ்டிராய்டின் சுற்றுப்பாதை 
ஜெமினைட் ஒளிமழை உச்சம் இந்த ஆண்டு அமாவாசை தினத்தன்று நிகழ்வதால் வானவியல் ஆர்வலர்களுக்கு மிக வசதி. ஒளிமழைக் காட்சி இரவு வானில் நன்கு தெரியும். சில ஆண்டுகளில் இது  பௌர்ணமி வாக்கில் நிகழும். அப்படி ஏற்படும் போது ஒளிமழைக் காட்சி எடுப்பாக இராது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானவர்கள் கார் வைத்திருப்பர் என்பதால் ஒளிமழைக் காட்சியைக் காண்பதற்கு ஊருக்கு வெளியே -- சுற்றுவட்டாரத்தில் விளக்கு வெளிச்சமே இல்லாத பொருத்தமான திறந்த வெளிக்குப் போய் முகாமிட அவர்களால் இயலும்.ஜெமினைட் ஒளிமழையைக் காண்பதற்கு  இரவு ஒரு மணி முதல் மூன்று வரையிலான நேரம் உகந்தது என்று சொல்லப்படுகிறது.

எங்குமே வெளிச்சமில்லாத இடத்துக்கு சென்ற பின் அந்த இருட்டுக்கு உங்கள் கண்கள் பழகிக் கொள்ள சுமார் 20 நிமிஷம் ஆகும. அதன் பின்னரே உங்களால் வானிலிருந்து கீழ் நோக்கி இறங்குகின்ற ஒளிக்கீற்றுகளை நன்கு காண இயலும் என்று  இது தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். நகரில் வசிப்பவர்கள் நள்ளிரவில் எழுந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சில ஒளிக்கீற்றுகளைத் தான் காண இயலும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒளிமழைக்கு ஜெமினைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உண்டு. வானில் மிதுன ராசிக்கு ஆங்கிலத்தில் Gemini  என்று பெயர்.  அந்த ராசி உள்ள வான் பகுதியிலிருந்து இந்த ஒளிமழை வருவது போலத் தோன்றும். ஆகவே தான் இது Geminid  என அழைக்கப்படுகிறது

பெர்சைட் ஒளிமழை, லியோனிட் ஒளிமழை ஆகியவை  வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகளால் ஆனவை என்று அறியப்பட்டுள்ளது.
வானில் மிதுன Gemini ராசி உள்ள பகுதியிலிருந்து தான் ஒளிகீற்றுகள் கீழ் நோக்கிப் பாயும். 
ஆனால் ஜெமினைட் ஒளிமழைக்கான காரணம் அதாவது அந்த ஒளிமழையைத் தோற்றுவிக்கும் துணுக்குகள் எப்படித் தோன்றின என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

பொதுவில் ஒளிமழைக்கு வால் நட்சத்திரங்களின் துணுக்குகள் காரணமாக இருந்தாலும் ஜெமினிட் ஒளிமழைக்கு 3200 பேயிதான் என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த அஸ்டிராய்ட் சூரியனை நெருங்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த் அஸ்டிராய்ட் அவவப்போது சூரியனை சுற்றிவிட்டுச் செல்கின்றது.

Dec 4, 2012

பீதி கிளப்ப பிப்ரவரியில் வருகுது ஓர் அஸ்டிராய்ட்

Share Subscribe
முதலாவதாக மாயன் கேலண்டர், நிபுரு சமாச்சாரம், இரண்டாவதாக  பூமி மூன்று நாள் இருளில் மூழ்கும் என்ற சமாச்சாரம் ஆகியவை வெறும் புருடா என்பது இந்த மாதக் கடைசியில் நிரூபணமாகி விடும். ஆனால் புருடா ஆசாமிகள் சொல்லாத சமாச்சாரம் ஒன்று உள்ளது.

அதாவது வருகிற ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஓர் அஸ்டிராய்ட் பூமியின் மீது உராயாத குறையாக பூமியை மிக அருகில் கடந்து செல்ல இருக்கிறது.பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க  இந்த அஸ்டிராய்ட் நிச்ச்யம் பூமி மீது மோதாது என்று நாஸா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எனினும் ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்து செல்வது என்பது அபூர்வமே.அந்த வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டிராய்டும் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்தது கிடையாது என்று கூறப்படுகிறது
இது 6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓர்  அஸ்டிராய்ட்.
 பிப்ரவரியில் வருவது இதை விட மிகச் சிறியது.  
அஸ்டிராய்ட் ஒன்று பூமியைக் கடந்து செல்வது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும். ஒவ்வொரு மாதமும் பல அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. நடப்பு டிசம்பர் மாதத்தில் மூன்று அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்கின்றன.

சொல்லப்போனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இரண்டு அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்ல இருக்கின்றன ஒன்றின் பெயர்  1999 YK 15 என்பதாகும். சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட  அது பூமியை 2 கோடி கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

ஆனால் அதே தேதியில் 2012 DA 14 என்னும் பெயர் கொண்ட  இன்னொரு அஸ்டிராய்டும் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. அது தான் பீதி கிளப்பக்கூடியது. அதன் நீளம் 48 மீட்டர். . அந்த அஸ்டிராய்ட் பூமியைக் கடந்து செல்லும் போது ஒரு கட்டத்தில் பூமிக்கும் அஸ்டிராய்டுக்கும் இடையிலான தூரம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். விண்வெளி அலகில் இது ‘ மிக அருகில்’ என்று சொல்லக்கூடியதாகும்.
அஸ்டிராய்ட் 2012 DA 14  பூமியைக் கடந்து செல்லும் பாதை
பூமியைச் சுற்றியுள்ள வட்டம் செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை 
பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில்இந்தியாவின் இன்சாட் செயற்கைக்கோள்கள் உட்பட  எண்ணற்ற இணைசுற்று செயற்கைக்கோள்கள் (Geostationary satellites) பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் பூமிக்கும் இடையில் அஸ்டிராய்ட் பறந்து செல்லும். அப்போது அதன் வேகம் மணிக்கு சுமார் 22 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் இருக்கும்.

ஒரு வேளை இது பூமியின் மீது மோதினால் என்ன ஆகும்? இதை மோதல் என்றே சொல்ல முடியாது. உண்மையில் இந்த அஸ்டிராய்ட்    ஒரு போயிங் விமானத்தை விடச் சிறியது. ஆகவே  இந்த அஸ்டிராய்ட் பூமியில் விழுந்தால் என்ன ஆகும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் வானில் பறக்கின்ற விமானம் கீழே விழுவதற்கும் அஸ்டிராய்ட் பூமியில் வந்து விழுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு, போயிங் விமானத்தின் எடை சில நூறு டன். ஆனால்.2012 DA 14 அஸ்டிராய்டின் எடை 1,30,000 டன்.  தவிர, அது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும்.

பூமியின் பெரும் பகுதி கடல்களே. ஆக்வே அது கடலில் விழலாம். தவறி நிலப் பகுதியில் விழுந்தால் அணுகுண்டு வீசப்பட்ட அளவுக்கு விளைவு ஏற்படும். ஒரு நகரம் அழிந்து போகலாம். அவ்வளவு தான். பூமி மொத்த்ததுக்கும் அழிகிற வாய்ப்புக்கே இடமில்லை.

அவ்வப்போது பூமி உள்ள வட்டாரத்தில் தலை காட்டுகின்ற அஸ்டிராய்டுகளை நாஸா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை 1353 அஸ்டிராய்டுகள் பற்றியும் அவை செல்லக்கூடிய பாதை பற்றியும் விரிவான த்கவலகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை நாள் தட்டுப்படாமல்  இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இந்த அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்பெயின் நாட்டில் உள்ள வான் ஆய்வுக்கூடம் இதனைக் கண்டுபிடித்த்தது.

இவ்வளவு நாள் இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு 2012 DA 14 அஸ்டிராய்ட் பூமியை ஒட்டியபடி இருந்து வந்துள்ளதே காரணம். பூமியைப் போலவே இந்த அஸ்டிராய்டும் சூரியனை சுற்றுகிறது.
பச்சை நிறத்தில் இருப்பது சூரியனை பூமி சுற்றும் பாதை
மஞ்சள் நிறத்தில் இருப்பது 2012 DA 14 அஸ்டிராய்ட் சுற்றும் பாதை 
சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365.24 நாட்களை எடுத்துக் கொள்கிறது.இந்த அஸ்டிராய்டோ 366.24 நாட்களை எடுத்துக் கொள்கிற்து.  இரண்டின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ள்ன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த அஸ்டிராய்ட் பூமியை இரண்டு தடவை  கடந்து செல்கின்றது. இந்த ஆண்டுஅதாவது பத்து மாதங்களுக்கு முன்னர்  பிப்ரவரியில் அது பூமியை கடந்து சென்ற போது பூமிக்கும் அந்த அஸ்டிராய்டுக்கும் இடையிலான தொலைவு சுமார் இரண்டரை லட்சம் கிலோ மீட்டராக இருந்தது.

பன்னெடுங்காலமாக ஆண்டுக்கு இரு த்டவை பூமியைக் கடந்து செல்கின்ற ஓர் அஸ்டிராய்ட் இத்தனை நாள் கழித்து இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது தான். ஆகவே தான் இந்த அஸ்டிராய்டினால் ஆபத்து இல்லை என்று நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வருகிற பிப்ரவரியில் இது பூமியை ‘ மிக அருகில் ‘ கட்ந்து செல்லும் நாளன்று விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் கூடி அஸ்டிராய்ட் கடந்து செல்லும் காட்சியைக் காண்பர். இந்த அஸ்டிராய்டை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சக்திமிக்க பைனாகுலர்ஸ் அல்லது டெலஸ்கோப் மூலம் காண முடியும்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்படி உருவாகாமல் போனதாகவும் கருதப்படுகிறது. அப்படி அங்கு ஒரு கிரகம் உருவாகாமல் போனதால் பல லட்சம் துண்டுகள் அந்த கிரகம் இருந்திருக்க வேண்டிய சுற்றுப்பாதையில் அமைந்தபடி சூரியனை சுற்றி வருகின்றன.. அவையே அஸ்டிராய்டுகள் ஆகும். அஸ்டிராய்டுகள் அமைந்த பாதையிலிருந்து விலகி எவ்வளவோ துண்டுகள் தனிப்பாதை அமைந்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றில் சில ஆயிரம் அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகாமையில் வந்து செல்கின்றன.(காண்க: பூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்)http://www.ariviyal.in/2011/10/blog-post_23.html

Dec 3, 2012

புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்

Share Subscribe
புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்ற மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே   ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும்.

சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் ((Mercury) தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர,  அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம்.
புதன் கிரகம்
பகலாக உள்ள பகுதியில் வெயில் 427 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தின் வானில் 11 சூரியன் பிரகாசித்தால் எப்படி? அந்த அளவு வெயில். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரி. புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை.புதன் பொசுங்கிப் போன கிரகம்.

ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில் தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில்  இருப்பதாக  ராடார் மூலம் கணட்றியப்பட்டிருந்தது என்றாலும்  பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை.ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.

பூமியில்  வட தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர் காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழுபனி (Snowfall) உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை.
புதன் கிரகத்தின் வட துருவத்துக்கு மேலாக இருந்தபடி மெசஞ்சர் எடுத்த படம். சிவப்பு நிறத்தில் உள்ளவை  பனிக்கட்டி இருக்கும் இடங்கள்
மாறாக புதன் கிரகத்தில் வட துருவப் பகுதியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை பனிக்கட்டிகள் வெளியிலிருந்து ‘இறக்குமதி’ஆனவை. அதாவது வால் நட்சத்திரங்கள் கொண்டு வந்து சேர்த்தவை.

வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம்.அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமய்ங்களிலும் வால் நட்சத்திரங்கள் கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த  வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு.
மெசஞ்சர் விண்கலம். இதில். Sunshade என்ற பகுதியைக் கவனிக்கவும். சூரியனின் வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் தடுக்கவே இந்த கூரை போன்ற பகுதி. இதை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகின
புதன் கிரகத்தின் வட பகுதியில்  உள்ள ஆழமான பள்ளங்களில் இப்போது  காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள்  பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விதம் வால் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.

புதன் கிரக பனிக்கட்டி உருண்டைகள் வெண்மையாகக் காணப்படுவதற்குப் பதில் அவற்றின் மீது பல செண்டிமீட்டர் கனத்துக்கு கரும் பொடி காணப்படுகிறது. இக்கரிய பொடி  அஸ்டிராய்ட் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வந்தவையே.
புதன் கிரகத்துக்கு மேலாக மெசஞர் விண்கலம். இது ஒரு வரை படம் 
புதன் கிரகத்தில் வட துருவ்ப் பனிக்கட்டிகள் உருகாததற்கு முக்கிய காரணம் உண்டு. பூமியானது தனது அச்சில் 23 டிகிரி சாய்ந்து உள்ளது.ஆகவே தான் வட துருவத்தில் ஆறு மாதம் பகலும் ஆறு மாத இரவும் ஏற்படுகின்றன.  தென் துருவப்  பகுதியிலும் இது போன்று  ஆறு மாதப் பகல், ஆறு மாத இரவு உண்டு..

ஆனால் புதன் கிரகம் கிட்டத்தட்ட அடென்ஷனில் அதாவது சாய்மானம் இன்றி தனது அச்சில்  செங்குத்தாக அமைந்தபடி  சுழல்கிறது.  ஆகவே வட தென் துருவப் பகுதிகளில் என்றும் வெயிலே படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு தான் இந்த பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.

அமெரிக்க நாஸா 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சா விண்கலம்  2008 ஆம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது. அதில் பல வகையான கருவிகள் உள்ளன. அவை தான் புதன் கிரகத்தின் வட பகுதியில் தண்ணீரால் ஆன பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்துள்ளன.
புதன் கிரகத்தை மெசஞ்சர்  நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதைக் காட்டும்  வரை படம். கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது புதன் கிரகம்  
புதன் கிரகத்தின் தென் துருவத்திலும் இதே போல பனிக்கட்டிகள் இருக்கலாம். புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலத்தின்  நீள் வட்ட சுற்றுப்பாதை காரணமாக அதனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியை மட்டுமே ஆராய முடிந்துள்ளது.

புதன் கிரகம் வடிவில் சிறியது.அது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.