Mar 30, 2018

சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்தது. பின்னர் அக்டோபரில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய எந்த நாடும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தப் போகிறது.

இதற்கு முன்னர் சந்திரனில் இறங்கிய பிற நாடுகளின் ஆய்வுக் கலங்கள் அனைத்தும் சந்திரனின் நடுக்கோட்டுப் பகுதியில் தான் போய் இறங்கின. ஆனால் இப்போது இந்தியா அனுப்ப இருக்கும் ஆய்வுக் கலமானது சந்திரனின் தென் துருவத்துக்கு அருகில் போய் இறங்க இருக்கிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஓர் ஆய்வுக் கலம் இறங்குவது இதுவே முதல் தடவையாகும்.

சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு இதுவரை பல விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் ஆறு தடவை சந்திரனுக்குச் சென்று கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்துள்ளனர். அவை விஞ்ஞானிகளால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனாலும் சந்திரனின் தோற்றம் உட்பட சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன.

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா 2008 ஆம் ஆண்டில் சந்திரயான் 1 என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். அந்த விண்கலம் சந்திரனின் நிலப்பரப்பை முப்பரிமாணப் படங்களாக எடுத்த்து. தவிர, சந்திரயானில் இடம் பெற்றிருந்த அமெரிக்க ஆராய்ச்சிக் கருவியானது சந்திரனில் தண்ணீர்த் திவலைகள் தோன்றி மறைகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தது என்றாலும் இது சந்திரயானின் சாதனையாகவே கருதப்படுகிறது.

சந்திரயான் 1 விண்கலத்தைத் தொடர்ந்து இப்போது சந்திரயான் 2 செலுத்தப்படுகிறது. இதில் தாய்க் கலம், இறங்குகலம், ஆய்வுக் கலம் என மூன்று பகுதிகள் இருக்கும்.

முந்தைய சந்திரயான் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட்து. இப்போது ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எனப்படும் ராட்சத ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் உயரே செலுத்தப்படும்.

உயரே சென்றதும் அது நேரடியாக சந்திரனுக்கு கிளம்பி விடாது. அது பல தடவை பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றும். ஒவ்வொரு தடவையிலும் அதன் மறு முனை அதிக தொலைவுக்குச் செல்லும். கடைசியில் ஒரு கட்டத்தில் அது சந்திரனின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இவ்விதம் சந்திரனை அடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகிவிடலாம். குறைந்த எரிபொருள் செலவில் சந்திரனை அடைவதற்காக இந்த உத்தி கையாளப்படுகிறது.

சந்திரனை எட்டிய பிறகு அது சந்திரனிலிருந்து எப்போதும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும்.

அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இறங்கு கலம் தனியே பிரிந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். சந்திரனில் இறங்குவது என்பது மிக சிக்கல் பிடித்த விஷயம். சந்திரனில் மட்டும் காற்று மண்டலம் இருந்தால் பாராசூட் மூலம் சுலபத்தில் இறங்கி விடலாம்.

ஆனால் காற்று மண்டலம் கிடையாது என்பதால் இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ராக்கெட்டுகள் கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் பலனாக இறங்கு கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அது மெல்லக் கீழே இறங்கும். இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் ராடார் கருவியும் இருக்கும். அது சந்திரனின் தரை நெருங்கி விட்டதா என்பதைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
சந்திரனில் நடமாடப் போகும்  ஆய்வுக் கலம்
சந்திரனில் வட்ட வடிப் பள்ளங்கள் நிறையவே உண்டு. எனவே இறங்கு கலம் அப்படியான பள்ளத்தில் இறங்கி விடலாகாது. மிகவும் சரிவான இட்த்திலும் இறங்கி விடக்கூடாது. இப்படியான பிரச்சினைகள் ஏற்படாமலும் ராடார் பார்த்துக் கொள்ளும். கர்நாடகத்தில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் சந்திரனில் உள்ளது போன்ற வட்ட வடிவப் பள்ளங்கள் உண்டாக்கப்பட்டு இறங்கு கலத்தின் மாடலைப் பயன்ப்டுத்தி பல தடவை ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.

சந்திரனில் தரையானது தனித் தன்மை கொண்டது. சந்திரனின் ம்ண்ணானது கண்ணாடியைப் பொடி செய்து போட்டது போல நற நற என்று இருக்கும்.

சந்திரனின் தென் துருவத்துக்கு அருகே இறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 1 முன்னர் எடுத்து அனுப்பிய படங்களை வைத்து இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஏதேனும் ஓர் இடத்தில் இறங்கு கலம் இறங்கும். இரண்டு இடங்களுமே அருகருகே உள்ளன.

இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதற்குள்ளிருந்து ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு கால்களைக் கொண்டதாகும். இது தானாகவே அங்குமிங்குமாகச் செல்லக்கூடியதாகும். அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல் படும்.

சந்திரனின் நிலப்பரப்பை ஆராய இறங்கு கலத்திலும் சரி, நடமாடக்கூடிய ஆய்வுக் கலத்திலும் சரி தகுந்த ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும். ஆய்வுக் கலத்தில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. அந்த வகையில் ஆய்வுக் கலத்தில் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சோலார் பலகை இடம் பெற்றிருக்கும்.அத்துடன் சுற்றுப்புறங்களைப் படம் எடுத்து அனுப்ப காமிராக்கள் இருக்கும்.

சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதால் பூமியைப் போல அன்றி சந்திரனில் பகல் என்பது (பூமிக் கணக்குப்படி) 14 நாட்கள் ஆகும்.. இதே போல 14 நாட்கள் இரவாக இருக்கும். எனவே நடமாடும் ஆய்வுக்கலமானது பகல் 14 நாட்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நாட்கள் வந்த பின்னர் மின்சார உற்பத்தி சாத்தியமில்லை என்பதால் ஆய்வுக் கலம் செயலற்று இருக்கும்.

ஆய்வுக் கலம் சந்திரனின் தரையில் மிக மெதுவாகவே பயணம் செய்வதாக இருக்கும். பகல் 14 நாட்களில் ஆய்வுக் கலம் சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் இறங்கு கலம் அது இறங்கிய இட்த்தில் நிலையாக இருந்தபடி சந்திரன் தொடரபான தகவல்களை சேகரிக்கும்.

இறங்கு கலம் நடமாடும் ஆய்வுக் கலம் ஆகிய இரண்டும் உயரே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2 தாய்க் கலத்துக்கு தகவல்களை அனுப்பும். தாய்க் கலம் இஸ்ரோ கட்டுப்பாட்டுக் கேந்திரத்துக்கு அத்தகவல்களை அனுப்பும்.

பூமியில் மேகங்கள், மழை, கடல், காற்று, தாவரங்கள் முதலியவை வெப்பத்தையும் குளிரையும் ஓரளவு சமன்ப்படுத்துகின்றன. சந்திரனில் இவை எதுவுமே கிடையாது.

எனவே சந்திரனில் பகலில் வெப்பம் 130 செல்சியஸ் வரை இருக்கும். இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கும். சந்திரயானின் இறங்கு கலமும் நடமாடும் ஆய்வுக் கலமும் இவ்வித கடுமையான நிலைமைகளை சமாளித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

(எனது இக்கட்டுரை தினத்தந்தி இதழில் வெளியானதாகும்)

8 comments:

Siva said...

மிக்க நன்றி ஐயா

Unknown said...

Very need this article

Siva Suryanarayanan said...

மிக மிக அருமை. மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நன்றி ஐயா.

Satheesh Kumar A said...

விரிவான முழுமையான கட்டுரை நன்றி !ஐயா

Unknown said...

அருமையான பதிவு

Unknown said...

More informative...thanks

revathi said...

nice to know this,impressive...excellent

Unknown said...

Brief information reveals fair experience with santhirayan2

Post a Comment