Jul 4, 2012

விடிவதற்குள் எழுந்தால் விண்ணில் ஒரு காட்சி

Share Subscribe
வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தையும், வியாழன் கிரகத்தையும் வானில் ஒரே சமயத்தில் அருகருகே பார்க்க ஆசையா?  சூரிய உதயத்துக்கு முன்னால் இருட்டாக இருக்கும் போதே எழுந்து கிழக்கு திசையில் நோக்கினால் இந்த இரு கிரகங்களையும் காணலாம். ஜூலை மாதம் முழுவதும் இவற்றைக் காண முடியும்.

எனினும் வருகிற 7 ஆம் தேதியன்று சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பார்ப்பது உசிதம். அன்றைய தினம் வெள்ளி,வியாழன் ஆகிய கிரகங்களை மட்டுமன்றி ரோகிணி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். இவை மூன்றும் மேலிருந்து கீழாக ஒரே நேர் கோட்டில் காணப்படும்.
சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் வெள்ளி, வியாழன், ரோகிணி நட்சத்திரம் ஆகியவை அந்த வரிசையில் மேலிருந்து கீழாக இவ்விதம் காணப்படும்.இது ஒரு வரைபடம்.
இந்த மூன்றில் வெள்ளி (Venus) மிகப் பிரகாசமாகத் தெரியும். அதற்குக் கீழே வியாழன் (Jupiter) கிரகம் பிரகாசம் குறைந்ததாகத் தென்படும். அதற்குக் கீழே ரோகிணி நட்சத்திரம் ஒளிப்புள்ளியாகத் தெரியும்.  
வியாழன் சுமார் 62 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
இவை ஒன்ற்ன் கீழ் ஒன்றாக நேர் கோட்டில் காட்சி அளித்தாலும் வெள்ளி கிரகம் பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வியாழன் கிரகமோ 62 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. ரோகிணி நட்சத்திரம் 65 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.( ஒளி ஓராண்டுக்காலத்தில் செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரமாகும்)

மேலே உள்ள படத்தில் வெள்ளி கிரகம் வட்டமாக வரையப்பட்டுள்ள போதிலும் உண்மையில் அது பிறை வடிவில் தான் தெரியும். சக்தி வாய்ந்த பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் அக்கிரகம் பிறை வடிவில் இருப்பதைக் காணலாம். 
பிறை வடிவில் வெள்ளி கிரகம் 
வெள்ளி கிரகத்தை ஒரு போதும் நம்மால் முழு நிலவு போல வட்ட வடிவில் காண இயலாது. வெள்ளி முழு வட்டமாக இருக்கின்ற சமயத்தில் அது சூரியனுக்குப் பின்னால் அமைந்திருக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கிற்குப் பின்னால் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி நம் கண்ணில் படாது என்பது போல சூரியனுக்குப் பின்னால் அமைந்த வெள்ளி நம் பார்வையில் தென்படாது.


வானத்தை நிபுணர்கள் 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். இதனபடி வெள்ளி கிரகமும், வியாழன் கிரகமும் இப்போதைக்கு ரிஷப ராசியில் உள்ளன. இப்போதைக்கு என்று சொல்வதற்குக் காரணம் உள்ளது. வெள்ளி, வியாழன் உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை ராசி மாறிக் கொண்டிருக்கும்.அதாவது வானில் இடம் மாறிக் கொண்டிருக்கும்.
கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகே ரோகிணி
ஆனால் நட்சத்திரங்கள் இடம் மாறுவதில்லை. அந்த வகையில் ரோகிணி நட்சத்திரம் எப்போதும் ரிஷப ராசியில் இருந்து வருவதாகும்.இந்த நட்சத்திரம் வானில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு (Pleiades) அருகே உள்ளது ரோகிணி நட்சத்திரத்துக்கு மேற்கத்திய வானவியலில் Aldebaran  என்று பெயர்.இது அரபுக்கள் வைத்த பெயர்.



8 comments:

அரையாய் நிறை said...

கண்டிப்பாக 7 ம் தேதி அன்று வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்களையும் ரோகினி நட்சத்திரத்தையும் அதிகாலையில் பார்க்க முயல்வேன். தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல் சார் ...வாழ்த்துக்கள் ... மிக்க நன்றி !

Unknown said...

மிகவும் நன்றி அய்யா... கண்டிப்பாக பார்ப்பேன்..
கடவுள் துகள் பற்றிய உங்கள் கட்டுரையினை மிகவும் எதிர்பார்கிரோம்..

Anonymous said...

Higgs boson (கடவுள் துகள்) பற்றி பிளீஸ்...

அரையாய் நிறை said...

ஐயா இது உங்களின் பார்வைக்கு, முகபுத்தகத்தில் பார்த்தது...தமிழர்களின் இதை போன்ற படைப்புகளால் உலகளாவிய அறிவியலில் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்று கூறுமளவிற்கு ஏதேனும் இருகிறதா ?


பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..!

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

Anonymous said...

Naduvil ulla natchathiram indru prakasamaga katchi alithadhu. Nandri.

Unknown said...

இன்று அதிகாலை வானம் மேகம் மூடி இருந்ததால் காண முடியவில்லை sir..

Unknown said...

அருமை

Post a Comment