Showing posts with label வானம். Show all posts
Showing posts with label வானம். Show all posts

Oct 18, 2012

39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .

Share Subscribe
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரியர் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் கீழே குதித்த காட்சி உலகம் முழுவதிலும் டிவியில் காட்டப்பட்டது.

அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து  கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட  அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய  சாதனை   விசேஷமாகத்  தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
உயரே கிளம்ப பலூன் ஆயத்தமாகிறது
அப்படியின்றி பலூனுக்கு அடியில் இணைக்கப்பட்ட  பெரிய பிரம்புக் கூடையில் உட்கார்ந்தபடி சென்றிருந்தால் 39 கிலோ மீட்டர் உயரத்தை எட்டுவதற்கு முன்னரே அவர்  ‘ மேல் லோகத்துக்கு ‘ போய்ச் சேர்ந்திருப்பார். அது ஏன்?

1862 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இருவரும்  ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட வாய் திறந்த பெரிய பிரம்புக் கூடைக்குள் அமர்ந்தபடி  உயரே கிளம்பினர்.அப்போதெல்லாம் உயரே செல்வதற்கு இந்த முறையே  பின்பற்றப்பட்டது. 11 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும் இருவரும் கடும் குளிரால் நடுங்கினர். அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 11 டிகிரி.

அந்த இருவருக்கும் கைகால்கள் உணர்விழந்தன. கண் இருண்டது. நினைவு தடுமாற ஆரம்பித்தது. கிளைஷர் நினைவிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக உணர்ந்த காக்ஸ்வெல் கைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க  ரெடி
உடனே பலூன் தொடர்ந்து  மேலே செல்வதற்குப் பதில் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர. அவர்கள் சென்ற உயரம் 11,887 மீட்டர்  காற்று மண்டல நிலைமைகள் பற்றி அவ்வளவாக அறியப்படாத காலத்தில் அவர்கள் இவ்வாறு உயரே சென்றனர்.

வானில் உயரே செல்லச் செல்ல காற்று அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். என்னதான் சுவாசித்தாலும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

ஒரு ஸ்பூன் மருந்தை அரைத் தம்ளர் தண்ணீருடன் சேர்த்து அருந்தினால் மருந்து உடலில் சேரும். அப்படியின்றி ஒரு ஸ்பூன் மருந்தை அண்டா தண்ணீரில் சேர்த்து அதிலிருந்து அரைத் தம்ளர் தண்ணீரை எடுத்து அருந்தினால் உடலில் மருந்து சேர வாய்ப்பே இல்லை.

அது மாதிரியில் அடர்த்தி குறைந்த காற்றை என்னதான் முழுக்க உள்ளே இழுத்து சுவாசித்தாலும் உடலுக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் மிக அற்ப அளவில் தான் இருக்கும்.  இதல்லாமல உயரே செல்லச் செல்ல பல ஆபத்துகள் உண்டு.
பலூனிலிருந்து கீழே குதிக்கிறார்
ஆகவே தான் நகரங்களுக்கு இடையில்,--- கண்டங்களுக்கு இடையில்   சுமார் 40,00 ஆயிரம் அடி (சுமார் 12 கிலோ மீட்டர் ) உயரத்தில் பறக்கின்ற பயணி விமானங்களில் பயணிகள் பிரச்சினையின்றி சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்..

தவிர, ஏதோ அவசர நிலைமை ஏற்பட்டால் பயணிகள் சுவாசிப்பதற்கென விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஆக்சிஜன் அளிக்கும் கருவி உள்ளது.  இந்த விமானங்கள் ஒரு வகையில் காற்று அடைத்த ’பலூன்களே ’ ’விமானத்தின் வெளிப்புற சுவர்களில் ஓட்டை விழுந்தால் விமானத்தில் உள்ள அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுவர்.

சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத நிலையில் சுமார் 9100 மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு நிமிஷ நேரம் இருந்தால்  நினைவு போய் விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில 15 வினாடியில் நினைவு இழப்பார்.
கீழ் நோக்கிப் பயணம்
வானில் 19.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலே சென்றால் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பிக்கும். உடலில் உள்ள ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும். உடல் பயங்கரமாக வீங்கும். மொததத்தில் மரணம் நிச்சய்ம்.

ஆகவே தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு  அடுக்குகளாக அமைந்த விண்வெளிக் காப்பு உடையை (Space suit) அணிந்திருந்தவராக உயரே சென்றார்.

 அடுக்கடுக்கான இந்த ஆடைகள் அவருக்குத் தகுந்த காற்றழுத்தத்தை அளித்தன. வெளியே நிலவிய குளிர் தாக்காமல் தடுத்தன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பு அளித்தன. இவ்விதமாக இந்த உடை அவரைப் பல வகைகளிலும் பாதுகாத்தது.

அவர் பலூன் மூலம் உயரே செல்லும் போதும்  பின்னர் கீழே குதிக்கும் போதும் அவரது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க அவரது உடலில் பல உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவரது உடையில் கம்ப்யூட்டர் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன.காமிராவும் பொருத்தப்பட்டிருந்தது.
பாராசூட் தரையைத் தொடுவதற்கு முன்
அவர் இவ்வித விசேஷ உடையை அணிந்திருந்தாலும் பலூன் உயரே சென்ற போது அவர்  பலூனின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கூட்டுக்குள் தான் இருந்தார். பலூன் உயரே கிளம்புவதற்கு முன்னர் ஒரு நிபுணர் கூறுகையில் பெலிக்ஸ் 16 வித ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்றார்.

பெலிக்ஸ் பாம்கார்ட்னர்  பலூனில் உயரே கிளம்பு முன்னர்  விசேஷ உணவை அருந்த வேண்டியிருந்தது. வயிறு, குடல் என உடலில் எங்கும் வாயுவே இருக்கக்கூடாது என்பதற்காக விசேஷ உணவு. உயரே கிளம்பும் நேரம் வரை சுமார் 2 மணி நேரம் அவர் சுத்த ஆக்சிஜனை சுவாசிக்கும்படி செய்யப்பட்டார்.

ரத்தத்தில் சிறிது கூட நைடரஜன் வாயு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ( நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் 78 சதவிகிதம் உள்ளது. ஆக்சிஜன் 21 சதவிகிதம் உள்ள்து)

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 9-30 மணிக்கு பெலிக்ஸ் பாம்கார்ட்னரை சுமந்தபடி ஹீலியம் வாயு நிரப்பப்ப்டட பலூன் உயரே கிளம்பியது.  ஹீலியம் வாயு காற்றை விட லேசானது என்பதால் அது மேலே செல்லத் தொடங்கியது.

பலூன் 1,28,000 அடி உயரத்தை ( 39 கிலோ மீட்டர் ) எட்டுவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அந்த உய்ரத்தை எட்டியதும் பெலிக்ஸ் தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கீழ் நோக்கிக் குதித்தார்.
அப்பாடி, வந்தாச்சு
மிக உயரத்திலிருந்து குதிப்பதிலும் ஆபத்துகள் உண்டு. தொடர்ந்து கரணம் அடித்தப்டி விழக்கூடாது. அப்படி ஏற்பட்டால் நினைவு போய் விடும். கண்கள், மூளை, இதயம் ஆகியவை பாதிக்கப்படும்.

 சில வினாடிகள் கரணம் அடித்தபடி விழுந்து கொண்டிருந்த பெலிக்ஸ் நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்டார். முறைப்படி அதாவது தலை கீழ் நோக்கி இருக்க, கைகள் உடலோடு ஒட்டியிருக்க -- ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற  நீச்சல் வீரர்களின்  பாணியில்--- கீழ் நோக்கி இறங்கலானார். அவர் நான்கு நிமிஷம் 20 வினாடி நேரம் வான் வழியே தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் கீழ் நோக்கி மணிக்கு 1340 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தார். இது ஒலி வேகத்தைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு வேகத்தை மனித உடல் தாங்குமா என்ற கேள்வி இருந்தது. நல்லவேளையாக பெலிக்ஸுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் இந்த அளவு வேகத்தில் ’ப்யணம்’ செய்த முதல் நபர் அவர் தான்.

தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் திட்டமிட்டபடி  விரிந்தது. பின்னர் அவர் பொத்தென்று தரையில் வந்து குதித்தார்.உயரே இருந்து கீழே வந்து சேர 10 நிமிஷங்களே ஆகின.

உலகில் வானில் மிக உயரத்திலிருந்து குதித்த சாதனை, அதி வேகமாகப் பாய்ந்த சாதனை. பலூன் மூலம் மிக உயரத்துக்குச் சென்ற சாதனை என அவர் மூன்று சாதனைகளைப் படைத்தவரானார்.

பெலிக்ஸ் 16 வயதிலேயே பாராசூட்டிலிருந்து குதிப்பதில் பயிற்சி பெற ஆரம்பித்தவர். மிக உயர்ந்த கட்டடங்கள் மிக உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றிலிருந்து குதித்து சாதனை படைத்தவர். அவருக்கு அதே வேலை.

.எனினும் மிக உயரத்திலிருந்து குதிக்க விசேஷ விண்வெளிக் காப்பு உடை அணிய வேண்டும் என்ற நிலைமை வந்த போது அதை அணிவதற்கு  பெலிக்ஸ் தயங்கினார். சிறு இடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அவரிடம் பயம் தோன்றியது. இதை Claustrophobia  என்று கூறுவர். மனோதத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவருக்கு இந்த பயம் நீங்கியது.

அதன் பிறகு தான் அவர் வானில் 21 கிலோ மீட்டர், 29 கிலோ மீட்டர்  என  மிக உய்ரத்திலிருந்து குதிப்பதில் அனுபவம் பெற்றார். அதன் முத்தாய்ப்பாகவே இப்போது 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.

 ஒருவர் ஒரு சாதனை படைத்தால் அதை மிஞ்ச மற்றவர்கள்  முனைவது உண்டு. ஆனால் பெலிக்ஸின் சாதனையை மற்றவர் பின்பற்றுவது எளிதல்ல. ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்கு ஆன செலவே இரண்டரை லட்சம் டாலர்.அவர் அணிந்திருந்த விசேஷ உடைக்கு ஆன செல்வும் மிக அதிகம். மொத்தத்தில் பல கோடி டாலர் செலவாகியிருக்கும். செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சாதித்து விட்டேன், வெற்றி, வெற்றி
பெலிக்ஸ் ப்த்திரமாக உயரே சென்று விட்டுத் திரும்புவதற்கு அவருக்கு பக்கபலமாக 100  பேர் அடங்கிய குழு செயல்பட்டது. அதில் எஞ்சினியர்கள், மருத்துவ் நிபுணர்கள் முத்லானோர் அடங்குவர்.

இது பெலிக்ஸின் தனிப்பட்ட முயற்சி அல்ல.இது உலகின் பல நாடுகளிலும்  Red Bull  எனப்படும்  எனர்ஜி பானத்தை விற்கும் பிரும்மாண்டமான ஆஸ்திரிய  நிறுவனம் தனது பானத்துக்கு விளம்பரம் செய்வதற்காகக் கையாண்ட  ஏற்பாடே.

ஆனாலும் நாஸா விஞ்ஞானிகள் இதில் அக்கறை காட்டினர். உடலியல் தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்கள் பெலிக்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

பெலிக்ஸின் அனுப்வம் எதிர்காலத்தில் தகுந்த விண்வெளி உடையை உருவாக்கவும் அவசர நிலைமைகளில் விண்வெளி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவற்கும் மேலும் சிறப்பான பலூன்களை உருவாக்கவும்  உதவும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது முற்றிலும் விளம்பர ஸ்டண்ட அல்ல.

காற்று மண்டல நிலைமைகளும் பெலிக்ஸ் போன்றோரின் அனுபவ்மும் காட்டுவது இது தான். அடிப்படையில் மனிதன் ஒரு நில வாழ் உயிரினம்.


Oct 14, 2012

இரவு வானின் நிறம் என்ன?

Share Subscribe
” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.

“ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான்
.
ஆனால் இப்படிப் பேசக்கூடிய   இருவரும்  சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை  ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம்.

சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா?  நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.
சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள்ளவை அமெரிக்க நகரங்கள். நகரங்களின் வெளிச்சத்தைக் கவனியுங்கள் படம் நாஸா
 ஒருபெரு நகரின் வானத்தின் நிறம் ஆரஞ்சு கலந்த சிவபபாக இருக்கலாம். இதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.. நீங்கள் ஒரு பெரு நகரின் புற நகர்ப் பகுதியில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்.

 நிலவற்ற நாளன்று இரவு 9 மணி வாக்கில் உங்கள் வட்டாரத்தில் நான்கு மாடிக் கட்டடம் இருந்தால் மொட்டை மாடிக்குச் சென்று பெரு நகரின் மையப் பகுதி அமைந்த இடத்தை நோக்கிப் பாருங்கள். மையப் பகுதிக்கு மேலே இருக்கின்ற வானம் சிவந்த நிறத்தில் காணப்படும்.

இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் இரவு நேர ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி அல்லது மதுரைக்குச் செல்கிறீர்கள். ரயில் அந்த நகரை நெருங்க இருக்கும் நேரத்தில் அதாவது காலை 4 அல்லது 5 மணி வாக்கில் ரயிலின் ஜன்னல் வழியே  (ரயில் பெட்டிக்குள் விளக்கு எரியக்கூடாது)  நகரம இருக்கின்ற திசையை நோக்குங்கள்
அதே விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவும் ஒளிர ஆரம்பித்துள்ளது. ப்டம் நாஸா
நகருக்கு மேலே வானம் சிவந்த நிறத்தில் தெரியும். சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானம் சிவந்திருப்பது போன்று காட்சி அளிக்கும். இரவு வானத்துக்கு நிறம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

அமெரிக்க வானவியல் நிபுணர் ஜான் இ போர்ட்டில் (John E Bortle)  நிலவற்ற இரவு வானை ஒன்பது வகைகளாகப் பிரித்திருக்கிறார். இப் பட்டியலில் கிராமப்புற வானம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரு நகர மையப் பகுதிக்கு மேலே உள்ள வானம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களும் கிராமத்துக்கு வெளியே  கும்மிருட்டாக இருக்கக்கூடிய இடங்களுக்கு மேலே இருக்கின்ற வானம் ஆகும்.இவை  வானத்து நட்சத்திரங்கள் நன்கு தெரியக்கூடிய இடங்களாகும்.

ஜான் போர்ட்டில் வானத்தின் நிற்த்தை வகை பிரித்ததுடன் நில்லாமல் எந்த வகையான வானத்தில் எவற்றையெல்லாம் காணலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய உதயமல்ல. அமெரிக்காவில் ஓர்  வான் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அருகே உள்ள நகரங்களிலிருந்து வானில் கிளம்பும் ஒளியே தான்
பெரு நகரின் மையப் பகுதியில் உள்ளவர்களுக்கு வானில் சந்திரன் தெரியலாம். கிரகங்கள் தெரியலாம்.ஒரு சில பிரகாசமான நட்சத்திரங்கள் தெரியலாம். இரவு வானின் அழகை ரசிக்கப் பெரு நகரம் லாயக்கிலை என்பது அவரது கருத்து. பெரு நகரில் வாழ்பவர்களுக்கு வான் அழகைப் பார்க்க நேரமோ ஆர்வமோ கிடையாது என்கிறீர்களா? அது சரிதான்.

வானம் ஏன் இப்படி வெளிச்சம் போடுகிறது?  பெரு நகரத்து வானம் ஏன் வண்ணத்தைப் பூசி நிற்கிற்து?  நகரங்களில் எண்ணற்ற வாகனங்கள். இவை பெரும் புழுதியைக் கிளப்புகின்றன. வாகனங்களிலிருந்து ஏராளமான அளவுக்குப் புகை. இவை தவிர,இயற்கையாகக் கிளம்புகின்ற நுண்ணிய துகள்கள். இவை எல்லாம் சேர்ந்து வானில் மிதக்கின்றன்
அமெரிக்காவில் ஒரு பெரிய நகரிலிருந்து இரவு நேரத்தில் வெளிப்படும் ஒளியால் வானமே சிவந்து காணப்படுகிறது.
இரவில் நகரங்களில் எண்ணற்ற கட்டடங்களில் பிரகாசமான விளக்குகள். விளம்பரப் பலகைகளில் மேல் நோக்கிஒளி வீசும் வகையில் பொருத்தப்பட்டுள்ள  விளக்குகள் .வாகனங்களின் விளக்குகள்.விளையாட்டு மைதானத்தில் உள்ள பிரகாசமான விளக்குகள்.

இவை அனைத்தின் ஒளி மேலே செல்கிறது. வானில் உள்ள நுண்ணிய தூசு மீது இந்த ஒளி படும் போது ஒளி சிதறடிக்கப்படுகிறது. பெரு நகரை வானத்து ஒளி இவ்விதமாகப் போர்த்துக் கொள்கிறது. இதனால்  இயற்கையான வானம் நம் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு வானம் சிவந்து விடுகிறது..

இரவு வானில் தெரியும் நட்சத்திரங்கள். பெரிய ந்கரங்களிலிருந்து இவற்றைக் காண்பது கடினமே.
இரவு வானத்தின் இயற்கை அழகை நீங்கள் காண விரும்பினால் அமாவாசை சமயத்தில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் வானில் மேகங்களே இல்லாத நாளாகப் பார்த்து  நன்கு இருட்டிய பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில்--காரில்-- ஊருக்கு வெளியே சில கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நெடுஞ்சாலை விளக்குகள் கூட இல்லாத -- குக்கிராமத்துக்குச் செல்கின்ற மண் ரோடில் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் .உங்களைச் சுற்றி எந்த விளக்கும் தெரியக்கூடாது. அந்த கும்மிருட்டில் உங்களுடன் எடுத்துச் சென்ற மடக்கு சேர்களைப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இருட்டுக்கு உங்கள் கண்கள்  நன்கு பழகிக் கொண்ட பின்னர் வானை அண்ணாந்து பார்க்க வேண்டும்.

 கரு நீல வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்கள் போல வானத்து நட்சத்திரங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கும். சற்றே வெளிறிய நிறத்தில் அகன்ற பட்டையாக ஆகாய கங்கை (Milky Way Galaxy) தெரியும். உயரே தெரிகின்ற அக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.

உங்கள் கண்ணில் படுகின்ற ஒரு நட்சத்திரம் சூரியனை விடப் ப்ல மடங்கு பெரியதாக, உங்கள் பூமியை விட பல ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். மங்கலாகத் தெரிகின்ற சிறிய திட்டுகள்  கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டமாக இருக்கலாம்.

 நீங்கள் தலைக்கு மேலே காண்பது வானம் தான். ஆனால் அதுவே விண்வெளி. அதுவே அண்டவெளி. அதுவே எல்லையற்ற பிரபஞ்ச வெளி.

திரை உலகில் ஜொலிக்கும் உங்கள் அபிமான நட்சத்திரங்களை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சினிமாத் திரையில், டிவி திரையில் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கையில் தெரியும் வானத்து நட்சத்திரங்களை --வானம் அளிக்கும் அற்புதக் காட்சியை ஒரு தடவையாவ்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு எழுதுங்கள்


Aug 15, 2012

ஆகாயத்தில் தெரிந்த அதிசய மேகம்

Share Subscribe
வானை நோக்கினால் மேகங்கள் தென்படுகின்றன. இவற்றில் பல வகைகள் உண்டு என்று சொல்லத் தேவையில்லை. பார்த்தாலே தெரிகிறது. சில வகை மேகங்கள் மிக உயரத்தில் உள்ளன அந்த வகை மேகங்களை நம்மால் அடையாளம் காண முடியும். இதற்கெல்லாம் நிபுணத்துவம் தேவையில்லை.

வானில் சுமார் 12 கிலோ மீட்டர் ( சுமார் 40,000 அடி) உயரம் சென்றுவிட்டால்  மேகங்கள் கிடையாது. அதற்கும் மேலே சென்றால் மேகங்கள் நமது  காலுக்கு அடியில் தெரிய ஆரம்பிக்கும். விமானத்தில் பயணம் செய்தவர்கள் இதை அறிவர். விமான ஜன்னல் வழியே பார்த்தால் கீழே பஞ்சு மூட்டைகளைக் கொட்டியது  போல ஒரே வெண்மையான மேகங்களாகத் தென்படும்.

மின்னல், மழைத் தொல்லை கிடையாது. தவிர, அவ்வளவு உய்ரத்தில் பறக்கும் போது எரிபொருள் செலவு குறைவு.  இப்படியான காரணங்களால் நாடுகள் இடையே, நகரங்கள் இடையே பறக்கின்ற விமானங்கள் பெரும்பாலும் சுமார் 11 கிலோ மீட்டர் உய்ரத்தில் பறக்கின்றன.
இரவு ஒளிர் மேகங்கள்.
ஆனால் 76 முதல் 85 கிலோ மீட்டர் உய்ரத்தில் அபூர்வமாக மேகங்கள் தோன்றுவது உண்டு. குறிப்பாக துருவப் பகுதிகளில் இந்த வகையான அபூர்வ மேகங்களைக் காணலாம். அண்மையில் வட துருவப் பகுதியில் இவ்வித மேகம் காட்சி அளித்தது. இந்த வகை மேகங்களுக்கு Noctilucent cloud என்று பெயர்.’ இரவு ஒளிர் மேகம்’ என்பது இதன் பொருள்.

பெயருக்கு ஏற்றபடி இந்த மேகங்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் அல்லது சூரிய உத்யத்துக்கு முன்னர் தான் தென்படும். சூரியன் அடிவானத்துக்குக் கீழே சுமார் 6 முதல்16 டிகிரியில் இருக்க வேண்டும் வானில் அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 120 டிகிரி அளவுக்கு இருக்கின்ற நிலையில் இந்த மேகங்கள் உருவாகின்றன. பொதுவில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கேயும் தெற்கேயும் 50 முதல் 60 டிகிரி வரையிலான அட்சரேகைகளில் அமைந்த இடங்களில் தான் இந்த மேகங்களைக் காண இயலும்.

இந்த வகை மேகங்களை வெப்ப நாடுகளில் காண முடியாது
இரவு ஒளிர் மேகங்கள்  நீல நிறத்தில் இருக்கும்.  மெல்லிய மேகங்களாகக் காணப்படும இவை மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகளால் ஆனவை.சூரிய ஒளி படுவதால் இவை ஒளிர்வது போலத் தோன்றுகிறது.

.பொதுவில்  மேகம்  உண்டாக மிக மிக நுண்ணிய தூசுகள் தேவை. இந்த தூசுகள் மீது நுண்ணிய நீர்த் துணுக்குகள் அல்லது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்கின்றன  பொதுவில் இத் தான் மேகம். மேகம் உருவாக உதவும் நுண்ணிய தூசு மற்றும் இதர துணுக்குகள்  அனைத்தும் பூமியின் மேற்பரப்பிலிருந்து மேலே சென்றவை தான்.
சூரிய ஒளி பட்டு இந்த மேகங்கள் ஒளிருகின்றன
ஆனால் இரவு ஒளிர் மேகங்கள் விண்வெளித் தூசு மூலம் தோன்றுபவை. பூமியை ஓயாது விண்கற்கள் தாக்கிய வண்ணம் உள்ளன.இவை காற்று மண்டலத்தில் நுழைந்ததும் சூடேறித் தீப்பற்றி பொடிப் பொடியாக உதிர்ந்து விடும். (இந்த விண்கற்கள் தீப்பற்றி ஒளிக் கீற்றாகக் கீழே இறங்குவதைத் தான் பலரும் ‘” நட்சத்திரம் விழுகிறது” என்று தவறாக வருணிக்கிறார்கள்.)

விண்கற்களால் ஏற்படும் தூசு மீது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்வதன் மூலமே இரவு ஒளிர் மேகங்கள் உண்டாகின்றன.

Aug 4, 2012

சூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்

Share Subscribe
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெள்ளியன்று நடுப்பகல் வாக்கில் வானில் அதிசயக் காட்சி ஒன்று தென்பட்டது. சூரியனைச் சுற்றி ஒரு வளையம் காணப்பட்டது. பலருக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

முதலாவதாக ஒன்றைத் தெளிவு படுத்தியாக வேண்டும். சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வளையமோ சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த பஞ்சு மேகங்களால் உண்டாவதாகும்.. ஆகவே  இது சூரியனுக்கு அருகில் ஏற்படுகின்ற வளையம் அல்ல்.

உலகில் எந்த இடமானாலும் தலைக்கு மேலே மேகங்கள் தென்படும். இந்த மேகங்கள் பலவகைப்பட்டவை.வெவ்வேறு மேகங்கள் வெவ்வேறு உயரங்களில் அமைந்திருக்கும். அதாவது எல்லா மேகங்களும் ஒரே உயரத்தில் அமைந்தவை அல்ல. அந்த வகையில் பஞ்சு(Cirrus)  மேகங்கள் வெப்ப மண்டல நாடுகளில் சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.
சூரியனைச் சுற்றி வளையம்
பஞ்சு மேகங்களிலேயே பல வகை உண்டு. இந்த பஞ்சு மேகங்களில் மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகள் இருக்கும். இந்த ஐஸ் துணுக்குகள் தூசை விடச் சிறியவை சில சமயங்களில் இந்த பஞ்சு மேகம் நம் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு மெல்லிய படலமாகவும் அமைந்திருக்கலாம்.

சதுரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டது என்று நமக்குத் தெரியும். இந்த ஐஸ் துணுக்குகள் ஆறு பக்கங்களைக் கொண்டவை. பல லட்சம் ஐஸ் துணுக்குகள் ஒவ்வொன்றும் சூரிய் ஒளிக் கற்றைகளை 22 டிகிரி அளவுக்குத் திருப்புகின்றன. இதன் விளைவாகக் கீழே இருக்கின்ற நமக்கு சூரியனைச் சுற்றி  வானில் வளையம் அமைந்துள்ளது போன்ற காட்சி தென்படுகிறது.  இது மழைத் தூறல் இருக்கும் போது வானில் சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றுவதைப் போன்றதே.

வானில் சூரியனைச் சுற்றி வளையம் தென்படுகின்ற நேரத்தில் பஞ்சு மேகங்களுக்கு மேலாகப் பறக்கின்ற ஒரு விமானத்தில் இருக்கும் பயணிகள் கீழ் நோக்கிப் பார்த்தால் அவர்களுக்கு சூரிய வளையம் எதுவும் தெரியாது. தவிர, இந்த பஞ்சு மேகங்களுக்கு மேலாக இருந்தபடி சூரியனைப் பார்த்தால் சூரியனைச் சுற்றி வளையம் எதுவும் தென்படாது.

இதல்லாமல் ஓரிடத்தில் சூரிய வளையம் தென்பட்டால்  அந்த வளையம் ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் தில்லியில், மும்பையில், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கும் தென்படாது.  குறிப்பிட்ட வட்டாரத்துக்கு மேலே இருக்கின்ற ப்ஞ்சு மேகங்களால் இந்த வளையம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆகவே அந்த வட்டாரத்தில் மட்டுமே சூரிய வளையம் தெரியும்.  இதர இடங்களில் இந்த வான் காட்சி தென்படாது.
சந்திரனைச் சுற்றி வளையம். 
சுருங்கச் சொன்னால் சூரியனைச் சுற்றி அமைந்தது போலத் தோன்றும் சூரிய வளையம் காற்று மண்டல நிலைமைகளால் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே ஏற்படுவதாகும்.உலகில் எவ்வளவோ இடங்களில் கடந்த காலங்களில அபூர்வமாக இப்படி சூரிய வளையம் தென்பட்டது உண்டு.

இரவு வேளைகளில் பௌர்ணமி நிலவைச் சுற்றியும் இப்படி வளையம் காணப்படலாம். ஒரு வித்தியாசம். சந்திரனைச் சுற்றிய வளையம் மங்கலாக இருக்கும்.

Oct 10, 2011

வான் புழுதி ஊடே சென்ற பூமி

Share Subscribe
கிராமப்புறங்களில் மண் நிறைந்த சாலையில் ஒரு லாரி வேகமாகச் சென்றால் பெரும் புழுதி கிளம்பும். லாரியின் பின்னே செல்கின்ற ஒரு ஸ்கூட்டர் அப்புழுதிப் படலம் வழியே தான் சென்றாக வேண்டும்

பூமிக்கு இப்படியான அனுபவம் கடந்த 8 ஆம் தேதி ஏற்பட்டது. வான் புழுதி வழியே பூமி சென்ற போது நுண் துகள்கள் காற்று ம்ண்டலத்தில் நுழைந்தன. அவை தீப்பிடித்து எரிய, வானிலிருந்து எண்ணற்ற ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கின. உலகில் சில இடங்களில் இரவு வானில் இது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.

 இந்த ஒளி மழை (Meteor shower) இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த 8 ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் நன்கு தெரிந்தது. மணிக்கு 660 வீதம் ஒளிக் கீற்றுகள் கீழே இறங்கின. ஒளி மழை தோன்றிய போது அமெரிக்காவில் பகல். ஆகவே அங்கு தெரியவில்லை. இந்தியாவிலும் தெரியவில்லை.
டிராகோனிட் ஒளிமழை

இந்த ஒளி மழைக்கு டிராகோனிட் ஒளி மழை   (Draconid Shower )  என்று பெயர்.  வடக்கு வானில் உள்ள சப்த ரிஷி மண்டலத்துக்கு சற்று மேலே   டிராகோ எனப்படும் ராசி மண்டலம் உள்ளது. அந்த ராசி மண்டலம் அமைந்த வான் பகுதியிலிருந்து   இந்த ஒளி மழை தோன்றியதால் அப் பெயர்.

இது போன்று பல ஒளி மழைகள் உண்டு. ஆண்டு தோறும் ஆக்ஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளி மழை தென்படும். லினோனிட் ஒளி மழை நவம்பர் 17 ஆம் தேதி வாக்கில் தெரியும். நகர்புறங்களில் வானில் இவற்றைக் காண்பது கடினம்.   கிராமப்புறங்களிலும் சரி, ஊருக்கு வெளியே விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாத இடங்க்ளில் இருந்து பார்த்தால் சிறப்பாகத் தெரியும்,

எந்த ஒளி மழை எப்போது எங்கெங்கு தெரியும் என்ற விவரத்தை நாஸா போன்ற அமைப்புகள் முன் கூட்டித் தெரிவிக்கின்றன். ஆகவே மேலை நாடுகளில் வான்வியல் ஆர்வலர்கள் இதைக் காண இரவில் வாய்ப்பான இடங்களில் கூடுகின்றனர்.

இரவு வானில் நீங்கள் அபூர்வமாக பிரகாசமான ஒளிக் கீற்று இறங்குவதைப் பார்த்திருக்கலாம். பல்ரும் இதை ‘ நட்சத்திரம் விழுகிறது ; என்று கூறி உடனே பச்சை மரத்தைப் பார்க்க முற்படுவர். தீப்பற்றி ஒளிக் கீற்றாக மாறுவது நுண்ணிய துகள்களே.

பூமியானது அவ்வப்போது அடர்ந்த வான் புழுதி வழியே செல்ல நேரிடுகிறது. இந்த வான் புழுதியை ஏற்படுத்திச் செல்பவை வால் நட்சத்திரங்களே. சூரியனை ஒரு ரவுண்டு சுற்றிச் செல்வதற்காக வால் நட்சத்திரம் ஒன்று வரும் போது அதன் தலைப்பகுதியிலிருந்து -- சாலையில் ஒரு மணல் லாரி மணலை சிந்திச் செல்வது போல --  நுண்ணிய ம்ணல் துணுக்குகள், சிறு கற்கள் ஆகியவை வெளிப்படுகின்றன.

இந்த துகள் தாரை அப்படியே விண்வெளியில் இருக்கும். சூரியனைச் சுற்றும் பூமியானது இத் துகள்கள் நிறைந்த விண் பகுதி வழியே செல்லும் போது அத் துகள்கள் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பற்றுகின்றன. இத் துகள்கள் பூமியில் வந்து விழுவதில்லை.

கடந்த 8 ஆம் தேதி தோன்றிய ஒளி மழைக்கு Comet 21 P / Giacobini-Zinner என்னும் பெயர் கொண்ட வால நட்சத்திரம் விட்டுச் சென்ற புழுதிப் படலமே காரணம். இது சுமார் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டிச் செல்கிறது.

Oct 7, 2011

நான்கு வானவில்

Share Subscribe

நான்கு வானவில்
மேலே உள்ள படத்தை உற்றுக் கவனியுங்கள். நான்கு வானவில் தெரியும். வானில் நான்கு வானவில் தெரிவது என்பது மிக அபூர்வமான காட்சியாகும். உலகில் நான்கு வானவில படமாக்கப்படுவது இதுவே முதல் தடவை. இது ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் தாய்ஸ்னர் எடுத்ததாகும். இப் படம் பயன்வ்ழி ஒளியியல் தொடர்பான அறிவியல் இதழில் வெளிவந்த பின்னர் உலகப் பிரசித்தி பெற்றதாகியது.

ஒரே சமயத்தில் வானில் மூன்று வானவில் தெரிவது என்பதே அபூர்வமானது. கடந்த 250 ஆண்டுகளில் ஐந்து தடவை மட்டுமே மூன்று வானவில் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கக் கடற்படை அகாடமியில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றும் ரேமாண்ட் லீ மூன்று வானவில் எத்தகைய சூழ்நிலைகளில் தெரியும், அதை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கான உத்தியை அண்மையில் வெளியிட்டிருந்தார். தாய்ஸ்னர் அதைப் பின்பற்றி கடந்த ஜூனில் இப் படத்தை எடுத்தார்.

இடி, மின்னல், காற்றுடன் மழை மேகங்கள் திரண்டு தூறல் ஆரம்பித்தது. மறுபுறம் வெயில் இருந்தது. இதைக் கண்டதும் தாய்ஸ்னர் காமிராவுடன் கிளம்பினார். அவருக்கு லீ கூறிய விதிமுறைகள் நினைவுக்கு வந்தன. சூரியன் இருக்கும் திசை நோக்கி கிளிக் செய்தார். தமது படத்தில் மூன்று வானவில் இருக்கலாம் என்று அவர் கருதினார். பின்னர் படத்தைப் பார்த்த போது நான்கு இருப்பது தெரிந்தது. நிபுணர்களைக் கலந்தாலோசித்தார். படத்தை மேலும் செம்மையாக்கிய போது இரு வானவில்லுடன் மேலும் இரு வானவில் மங்கலாக இருப்பது தெரிந்தது.

பொதுவில் வானவில் குறிப்பிட்ட சூழ் நிலைகளில் தான் காட்சி அளிக்கும். சூரியன் அடிவானத்துக்கு சற்று மேலே இருக்க வேண்டும். அதாவது வெயில் இருக்க வேண்டும். சூரியன் இருக்கின்ற திசைக்கு நேர் எதிர் திசையில் லேசான மழை இருக்க வேண்டும். அவ்வித நிலையில் சூரியன் இருக்கின்ற திசைக்கு எதிர் திசையில் வானவில் தெரியும்.

இரட்டை வானவில்
பல சமயங்களிலும் இந்த வானவில் வானை ஆக்கிரமித்துக் கொண்டு முழுமையாகத் தெரியும். சில சமயங்களில் இரட்டை வானவில் தெரியும்.  இரண்டாவது வானவில்லின் நிறங்கள் அவ்வளவு அழுத்தமாக இராது. பொதுவில் வானவில்லில் சிவப்பு நிறம் வெளிப்புறம் இருக்கும், இரண்டு வானவில் தெரியும் போது இரண்டாவது வானவில்லில் சிவப்பு நிறம் உட்புறம் இருக்கும்.

உகந்த சூழ்நிலைகளில் சூரியன் இருக்கின்ற திசையை நோக்கி கிளிக் செய்தால் தான் மூன்று அல்லது நான்கு வானவில்லைப் படமாக்க முடியும் என்பது லீ கூறிய விதிகளில் முக்கியமானது.